ஞாயிறு, 30 ஜூன், 2013

இன்றைய சமூகத்தில் ஊடகங்களின் பங்கு

வணக்கம்,

தமிழில் '..பேனை பெருமாளாக மாற்றுபவன்.. ' என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரியதாக்கி ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுபவர்களை தான் அப்படி சொல்லுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய ஊடகங்களுக்கு மிக சரியாக பொருந்தும். எந்த செய்தியை ஒளிப்பரப்ப வேண்டுமோ, அதை செய்யாமல் தேவையில்லாததை எல்லாம் ஒளிப்பரப்புகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தொலைக்காட்சி பற்றிய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.

இப்போதெல்லாம் யாருக்காவது சரியான தீர்ப்போ, நீதியோ கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய சாதியை வைத்து கொண்டு அரசியலாக்குவதும், ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும் தான் சமீபத்திய பேஷன். அதுவே தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால், அவ்வளவுதான்.  தாழ்த்தப்பட்டவருக்கு அநீதி நடந்துவிட்டது!  நியாயம் தவறிவிட்டது! என கூறி ஒரு வாரத்திற்கு  ஊடகங்களில் செய்திகளை  போட்டு கிழித்து விடுவார்கள். இதன் மூலம் சில பல வன்முறைகளும் நடைபெறும். உதரணத்திற்கு, சமீபத்திய தர்மபுரி சம்பவம். அந்த பெண்ணிற்கு எதுவும் சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக, அது தாழ்த்தபட்டவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று ஊடகங்கள் செய்திகளை ஒளிப்பரப்பின. அநீதி மேல்தட்டு மக்களுக்கு நடந்தால் அவர்களுக்கு பரவாயில்லை. அப்போது அது ஒரு பெரிய செய்தியாக வெளிவராது. சட்டமும், நியாயமும் எல்லாருக்கும் சமம். ஒரு நடுநிலையான செய்தியைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை.

இதேபோல் சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவில், ஒரு நடுத்தர வயது பெண்ணை நடு தெருவில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதை Youtube போன்ற சமூக வலைதளங்கள்  மூலமாகவும், தொலைக்காட்சி  மூலமாகவும், அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஒளிபரப்பி செய்திகளை வழங்கினர் .இதனால்  குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. ஆனால் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் தான் சரியில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டதை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக, அது தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் என அதற்கு சாதி சாயம் பூசி மேலும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை  ஊற்றுவது போல செய்கிறார்கள்.



என்னை பொறுத்த வரையில் எந்த ஒரு குற்றத்திற்கும் சாதி  சாயம் பூசாமல், வெறும் குற்றத்தின் பின்னணியும், அதில் பாதிக்கபட்டவருக்கு நியாயமும் கிடைக்க செய்தாலே போதும்.

என்னால் என்னொரு உதாரணமும்  சொல்ல முடியும். சமீபத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால், பல மாநிலத்து மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு  தவித்தனர் . ஒவ்வொரு மாநில முதலமைச்சரும், அவர்தம் மாநில மக்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தனர். நரேந்திர மோடியும் (குஜராத்) தம் மாநில மக்களை காப்பாற்றினார். ஆனால், செய்தி ஊடகங்கள் அவர் பிரதமர் வேட்பாளர் என்பதால், அவருடைய செயலை பெரியதாக காட்ட, நரேந்திர மோடியும் தம் மாநில மக்களை காப்பாற்ற 800 இன்னோவா கார்கள், 25 சொகுசு பேருந்துகள் என படையோடு சென்று படையை அனுப்பி 15,000 குஜராத் மக்களை 5 மணி நேரத்தில் காப்பாற்றினார் என செய்தி ஒளிபரப்பின. ஒளிபரப்பியதொடு இல்லாமல் அவர் இயற்கை பேரிழப்பை அரசியலாக்குகிறார் என் அவர் மீதே பழி போடுகின்றனர். அவர் செய்தது சரியா? தவறா? என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், அவர் கட்சியினரே விளம்பரப்படுத்த சொன்னாலும்,  இவர்களை (ஊடகங்கள்) யார் இப்படி விளம்பர படுத்த சொன்னது ??? வெறும் அவர்களுடைய விளம்பரத்திற்காகவும், (T.R.P rating) டி .ஆர். பி ரேடிங் -காகவும் வடக்கில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களும், மோடியை  புகழ்ந்து தள்ளி விட்டு, பின்னர் அவர் அரசியல் ஆதாயம் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  என்ன நியாயமடா இது ?

அரசியலில்  மட்டுமல்ல, திரைப்பட உலகில் உச்சபட்ச கதாநாயகன்  ஒரு சிறு விஷயம் செய்தாலே அது ஒரு இமாலய செயல் போல முதல் பக்கத்தில் போடுவார்கள். ஒரு நாயகன்/ நாயகியின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சித்தும், அதை ஒரு கவர் ஸ்டோரி யாக போட்டும், விளம்பரம் தேடி கொள்கின்றனர்.
 
மக்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளோ, அல்லது அந்த நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது, அதனுடைய தரம்  தான். அந்த தரமும் மக்களிடம் போய் சேர்ப்பதும் ஊடகங்களின் விளம்பரம் தான். எந்த ஒரு அரசியல் கட்சியாகட்டும், தேசிய/ மாநில தலைவர்களாகட்டும், விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் , கலை மற்றும் கலைஞர்கள் , திரைப்படம்,  நடிகர் , நடிகை உட்பட அனைத்துமே  ஊடகங்கள்  மூலமாக தான் மக்களுக்கு சென்றடையும். அப்படி சென்றடையும் போது, சரியான விளம்பரங்களை, செய்திகளை  நடுநிலையோடு தர வேண்டும் என்பது எனது வாதம். இந்த சமூதாயத்தில் ஊடகங்களின் பங்கு மிக பெரியது. அதை அவர்கள் செம்மையாக செய்தாலே நாட்டில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.  
   


நன்றி !!!

-பி .விமல் ராஜ்