சனி, 26 அக்டோபர், 2013

சமூக குற்றவாளிகள் !!!

வணக்கம்,

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு துயர் செய்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவர் தலைமை ஆசிரியரை வெட்டி கொன்றதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள்தான், செய்தித்தாள்களையும் மற்ற செய்தி ஊடகங்களையும் அலங்கரிக்கின்றன.

சமீப காலமாக நம் நாட்டில் சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள் அதிகமாகியுள்ளார்கள். இது போன்ற குற்றங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று அலசினால், அனைத்து  குற்றங்களுக்கும் சமூகமே முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலோட்டமாக பார்த்தால் தவறு மாணவர்களின் / பிள்ளைகளின் மீது தான் இருக்க கூடும்  என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் நடக்கிற / நடக்கின்ற குற்றங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் சமூக பிரச்சனை ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகமே ஒரு குற்றவாளியாக இருப்பது நமக்கு விளங்கும். சமூதாயம் என்பது வேறு யாரோ அல்ல. நான், நீங்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள்தான். நான் பார்த்து , படித்து தெரிந்து கொண்ட சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் / கல்லூரி மாணவர்கள் ஆசிரியரை குத்தி கொல்வது, படிக்கிற வயதில் மது அருந்துதல், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடுதல் என தினமும் நாம் செய்திகளில் படித்து கொண்டு தான் இருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில், ஒரு தனியார் பள்ளியில், பெண் ஆசிரியையை பள்ளி வளாகத்தில், பாத்ரூமில் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார். ஆசிரியை போடப்பட்ட நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் காரணம் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியையிடம் நகைகளை பிடுங்கும் போது அந்த மாணவி சொன்னது,"எங்க அக்கா நகை இல்லாமல் வாழாவெட்டியா இருக்கா? உனக்கு ஏதுக்குடி நகை? "என அடித்து பிடுங்கி இருக்கிறாள்.

இந்த செய்தி மாநகர் முழுவது பரவி, செய்தி ஊடகங்களுக்கு நல்ல விருந்தானது. ஒன்பதாம் வகுப்பு மாணவி கொள்ளைக்காரியாக மாறியது மாற்றியது, அவளது அக்காவை வாழாவெட்டியாக அனுப்பியவர்கள் தான்.


ஒரு பத்து வயது பள்ளி மாணவனை, ஒரு ஆசிரியர்  " நீ மட்டும் இந்த தடவை பாஸ் ஆகலைனா, உன் தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன்.. ஒரு நாள் முழுக்க கிரௌண்ட் -ல முட்டி போடணும்... " இப்படி மிரட்டினால், கண்டிப்பாக அந்த மாணவன், பயத்தினால் பரீட்சை பேப்பர் கொடுக்கும் நாளன்று வீட்டை விட்டு ஓடி தான் போவான். ஏனென்றால் அந்த பத்து வயது பையனுக்கு வீட்டை விட்டு ஓடுவது என்றால் என்ன என்று தெரியாது. அதன் பிறகு நாம் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் தப்பு வாத்தியாருடையதே! 

இது போன்ற ஒரு காரணமாகதான் தூத்துக்குடி கொலையும் இருக்கும் (என் அனுமானம் தான் .) அதனால் மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான செயல்தான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனாலும் அந்த கொலைக்கு தூண்டுதலாக, பின்னணியில்  மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு சமூக பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் / புகைபிடிகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தப்பு தான். தெருவுக்கு தெரு மது கடைகளும், பெட்டி கடையில் புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளும்  இருக்கும் போது, அதுவும் மதுக்கடையை அரசே ஏற்று நடத்தும் போது அவர்கள் எப்படி குடிக்காமல், புகைக்காமல் இருப்பார்கள் ? பார்க்கும் முக்கால்வாசி திரைப்படங்களில் குடியையும், புகையையும் காட்டும் போது பதின்பருவ வயது கெட்டு போகதான் சொல்லும்.

வசதி படைத்த பெற்றோர் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிகம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளட்டும் என்று படிக்கிற பசங்களுக்கு சில நூறு ரூபாய்களை  கொடுப்பது, பிள்ளைகள் வாழ்க்கையை பெற்றோர்களே கெடுப்பது போல தான்.

அதே போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எதற்கு செல்போன்? அதுவும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தில்.. காசு இருக்கிறதே என பிள்ளைகளுக்கு செலவு செய்வது தவறில்லை. ஆனால் படிக்கிற வயதில் இது தேவையா?? என்று  தான் நாம் பார்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி இருந்தால், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தவறான வழிக்குதான் போவார்கள்.

இன்னொரு கூத்து இது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் கசக்கி, பிழிந்து அவர்களை தேர்வில் அதிக மதிப்பெண் பெற பாடாய் படுத்துகிறார்கள். அவர்களும் படித்துவிட்டு நல்ல மதிப்பெண் வரவில்லை என்றாலோ, தேர்வில் தோல்வி அடைந்தாலோ தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை   என்ற பதிவில் எழுதியிருந்தேன்.

இவர்கள் மட்டுமல்ல. இவர்களை போல வளரும் பதின்பருவ வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல நட்பும், தன்னம்பிக்கை வளர்த்தல், கலந்தாய்வு தான் அவசியம் தேவை.

கலந்தாய்வுக்கு மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்றில்லை. பெற்றோரோ அல்லது ஆசிரியரோ அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்களை போல நடத்த வேண்டும். அந்த வயதில் கிடைக்க வேண்டிய நட்பு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி கிடைக்காவிடில் அவர்கள் தவறான பாதையில் தான் தள்ளபடுவார்கள். 

பெற்றவரும், மற்றவரும் பதின்பருவ மாணவர்களுக்கு அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். அதெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. குழந்தை பருவத்தில், அவர்கள் ஏன் அழுகிறார்கள், ஏன் அடம் பிடிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த இரண்டும்கெட்டான் வயது பிள்ளைகளிடம் ஏற்படும்  மாற்றங்களை அவர்கள் சொன்னாலோழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பதினொன்று முதல் பத்தொன்பது வயது வரை பதின்பருவ வயதில் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமே போதித்தல் போதாது. அவர்களை திட்டியோ, மிரட்டியோ,அல்லது அடித்து  பணிய வைப்பது அவர்கள மேலும் காயப்படுத்தும். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"; "அடிபடாத மாடு படியாது"; "பிள்ளைகளை அடித்து வளர்த்தல் தான் நல்வழி படுத்த முடியும்" என்று பழமொழிகள் இருந்தாலும், அதை நானும் ஒத்து கொள்கிறேன். பிள்ளைகளை திருத்த கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். கண்டிப்பு ஓரளவு தான் இருக்க வேண்டும். மீறினால் ஆபத்து தான். அவர்களை நல்வழிபடுத்த அவ்வபோது உளவியல் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஒரு நல்ல கலந்தாய்வும், பெற்றோர்-பிள்ளைகளின் ஆரோக்கியமான உரையாடல்களும், பிள்ளைகளை மனதளவில் புரிதல் மட்டுமே ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தவறவிட்ட தருணங்கள் !!!

வணக்கம்,

முதல் வேலை. முதல் சம்பாத்தியம். அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்று. எனக்கும் தான். என்னதான் இப்போது நல்ல வேலையில் இருந்தாலும், நமக்கு கிடைத்த முதல் வேலையை யாராலும் மறக்க முடியாது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'ராஜா ராணி ' படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அதில் வந்த கால் சென்டர் (Call Center)  சம்பந்தப்பட்ட காட்சிகளை  பார்க்கும் போது நான் டாடா டோகோமோ கஸ்டமர் கேரில் (TATA DOCOMO Customer Care) வேலை செய்தது நினைவில் வந்தது. பணியின் போது நடந்த சில சுவாரசியமான சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவாகவே இருப்பதால், பொறுமையாக படிக்கவும்.

ஏற்கனவே 2009-2010-லேயே பிலாசபி பிரபாகரன் கால் சென்டர் அனுபவம் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டுவிட்டார். நானும் பிரபாவும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளதால், அவர் அரைத்த மாவையே நானும் அரைக்க வேண்டாம் என எண்ணி, அவர் தவற விட்ட தருணங்களின் தொகுப்பை உங்களிடம் பதியவிருக்கிறேன்.

சரி, இப்போது கால் சென்டருக்குள் வருவோம்...

என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து விட்டு, Allsec Technologies-ல்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக (Customer  Care Executive) வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் நாட்டில் டாடா டோகோமோ வாடிக்கையாளர்கள் 121 (டோல் ப்ரீ-விட்டு விட்டால்  FE ) எண்ணை டோகோமோ சேவைக்காக அழைத்தால், நாங்கள் தான் எடுப்போம். என்னை போலவே ஏறக்குறைய 250 முதல் 400 ஆபிசர்கள் சேவை அழைப்பில் வேலை செய்வார்கள்.


Call Center- கோப்பு படம்
பெரும்பாலும் கால் சென்டரில் வேலை செய்பவரென்றால் 20 முதல் 30 ஆயிரங்களில் சம்பளம் வாங்குவார் என்றும், காதில் ஹெட் போன் 
(head phone) வைத்து கொண்டு வெள்ளைக்கார வாடிக்கையாளரிடம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு, விடுமுறை நாட்களில் பப், பார், என கூத்தாடுபவர்கள் என்றும், இரவு நேர வேலை மட்டுமே பார்பவர்கள் என்றும்   நினைக்கும் சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம்.

மேற்கண்டவை எல்லாம் சில சர்வதேச அழைப்பை
(International Calls) எடுக்கும்/ பேசும்
சேவை மைய அதிகாரிக்கு தான் பொருந்தும். உள்ளூர் அழைப்பில் (Domestic Calls) பேசும் அதிகாரிக்கு சுத்தமாக சேராது.

மேலும் என்னை போன்ற டொமெஸ்டிக் கஸ்டமர் கேரில் வேலை செய்யும்/ செய்த
சேவை மைய அதிகாரிகள், முதல் மாத சம்பளமே ரூ. 6000/ தான் வாங்குவார்கள். முக்கால்வாசி பேர் வெளியூரில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். இங்கு பணிபுரியும் மார்டன் பெண்கள் சிலர் கார்மென்ட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களை போல புடவையும்/ சுடிதாரும் மட்டுமே அணிந்து வருவார்கள்.

கம்பெனியில் சேர்ந்தவுடன் ட்ரைனிங்-ல் (Training) முதலில் சொல்லி தருவது, "இங்கு யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம்; பெயர் சொல்லி அழைத்தாலே போதும்" என்பதுதான். 20 நாள் ட்ரைனிங் நன்றாக முடிந்து, எங்களது சேவை பணியை ஆரம்பித்தோம். நானும் சராசரியாக 16 மாதங்களில் 1 லட்சம் கால்களுக்கு மேல் எடுத்துருப்பேன். "இவனுங்களுக்கு எங்கேருந்து தான் வருமோ இந்த மாதிரி சந்தேகமெல்லாம்???? " என்றும் என்னும் அளவுக்கு கடுப்பகிவிடும். சில நேரங்களில் கஸ்டமர் தெரிந்து பேசுகிறானா? இல்லை புரியாமல் உளறுகிறானா? அல்லது நாம் தான் தப்பாக  சொல்கிறோமா? என்று கூட  நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


அதில் சில விஷமிகள் வேண்டுமென்றே போன் செய்து கலாய்த்து விட்டு போவார்கள். இன்னும் சிலர் அவர்கள் குறை தீராததால் புரிந்தும்
புரியாமலும் கன்னா- பின்னா என  கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போவர்கள். கஸ்டமர் கேர் வரும் கால்களில் 30% கால்கள் இது போன்ற கால்கள் மட்டுமே!

அதுவும் குறிப்பாக சனி,ஞாயிறுகளிலும், டிசம்பர் 31 இரவிலும், முழு நாள் மின் வெட்டின் போதும், பண்டிகை தேதிகளிலும், கால்கள் எக்கச்சக்கமாக வரும். டிசம்பர் 31-ல் முழு இரவும் விடிய விடிய வாடிக்கையாளரிடம் பேசி சந்தேகத்தை தீர்த்து வைத்ததுண்டு.


"என் அக்கௌன்ட்-ல் (account) 0.55 பைசாவை பிடித்து விட்டர்கள் ! இப்போதே கொடுக்க வேண்டும்" என்று முக்கால் மணிநேரமாக திட்டி அடம் பிடித்து, பின்னர் ஹோல்ட்-லேயே (Hold) வைக்கப்பட்டு காணாமல் போன வாடிக்கையாளர்களும் உண்டு. (முடிந்தால் கொடுக்க மாட்டோமா??) 


புதிதாக வேலை செய்பவர்களுக்கு இந்த ஹோல்ட் மற்றும் ஆக்ஸ் (Aux  - Stopping calls)  இல்லையென்றால் அவ்வளவு தான்.. வாடிக்கையாளரின் கேட்கும் கேள்விகள், அருகில் இருபவரிடம் சந்தேகங்களை  நிவர்த்தி செய்தல், சற்று நேரம் ஆசுவாச படுத்தி கொள்ளுதல் என பல வசதிகள் உண்டு.  

கால் சென்டரில் வேலை செய்த போது (எங்களுக்கும்) எனக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நடந்த சில நகைச்சுவை உரையாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


****************************உரையாடல் 1*************************************

வாடிக்கையாளர்: சார்! நான் மதுரை மாவட்டம், தல்லாகுளத்திலிருந்து பேசுறேன்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன தகவல் வேணும்?


வாடிக்கையாளர்: பஸ் ஸ்டாப்லிருந்து வீட்டுக்கு சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது, டயர் பன்சர் ஆயிடிச்சி..நீங்க பன்சர்  போடா இங்க ஆள் அனுப்ப முடியுமா?????  

  
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்.. அது  மாதிரி எல்லம் எங்களால செய்ய முடியாது..  டாடா டோகோமோ பற்றி கேளுங்க சார்.


வாடிக்கையாளர்: அதெல்லாம்  வேண்டாம்...பன்சர் போட ஆள் அனுப்பு. இல்லாட்டி நீ வந்து பன்சர் போடு...


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???!?!? 

**********************************உரையாடல் 2*******************************

வாடிக்கையாளர்:சார்.. நான் மலர்விழி பேசுறேன். என் நம்பருக்கு PIN (PUK) நம்பர் வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே மேடம். கண்டிப்பாக சொல்றேன். உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..

வாடிக்கையாளர்: 9600...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: உங்களுக்கு எந்த நம்பருக்கு (PUK) நம்பர்  வேணுமோ அந்த நம்பரை  சொல்லுங்க மேடம்..


வாடிக்கையாளர்: இந்த நம்பர் தான்.. 9600453..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இது டோகோமோ நம்பர் இல்லையே..

வாடிக்கையாளர்: ஆமாம்..என் Airtel  நம்பருக்கு தான் (PUK) நம்பர் வேணும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: அதுக்கு ஏன் எங்களுக்கு கால் பண்ணீங்க  மேடம் ???

வாடிக்கையாளர்: என் Airtel நம்பருக்கு தான் PUK நம்பர் வேண்டும்.. அது தான் லாக் ஆயிடிச்சி.. அதுனாலதான் டோகோமோ  நம்பரிலிருந்து 121 கால் பண்ணேன்..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????    


**********************************உரையாடல் 3*******************************

வாடிக்கையாளர்: சார் .. உங்க டோகோமோ SIM ல டைம் கரெக்டா காட்ட மாட்டேன்கிது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே சார் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்... உங்க பிரச்சனை என்னனு சொல்லுங்க சார்..

வாடிக்கையாளர்: உங்க டோகோமோ சிம்மை என் செல்போனில் போட்டால் மொபைலில் டைம் தப்பா காட்டுது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்..அது மாதிரியெல்லாம் இருக்காது...உங்க மொபைல் ப்ரோப்ளமாக இருக்கலாம்...

வாடிக்கையாளர்: யோவ்...எனக்கு தெரியாதா... உங்க சிம் போட்டால் தான் பிரச்சனை...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????


**********************************உரையாடல் 4*******************************
 
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: வணக்கம் உங்கள் சேவைக்காக விமல்!!!

வாடிக்கையாளர்: சார்.. மேரா நாம் சஞ்ஜெய் பிஸ்வாஸ்.. மேரா மொபைல் மே காலர் ட்யூன் கேள்...     

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சாரி சார்..எனக்கு ஹிந்தி தெரியாது...முஜே ஹிந்தி நெய் மாலும்.. ஆப் 121 மே கால் கரோ; அவுர்  3 தபாயா ;  அவுர்  2 தபாயா ; Thank You சார்..

(தடம் மாறி வந்த ஹிந்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யோகமாக உபயோகபடுத்தும்  உரை(script) )

வாடிக்கையாளர்: நெய் சார்..என்னக்கு தமில் தெரியும்..  நீங்கோ பேசுஙொ சாப்..  

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???.. (கடுப்பாகி ) சாரி சார்.. உங்க side la proper response இல்லாததால் இந்த கால் disconnect செய்யபடுகிறது.. டாடா  டோகோமோ அழைத்ததற்கு நன்றி..


வாடிக்கையாளர்: சார்.. சார்.. சார்.. 

**********************************உரையாடல் 5*******************************
  
வாடிக்கையாளர்: சார் !! என் account-ல amount குறைஞ்சு போச்சு...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்...கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...  நான் செக் பண்ணி சொல்றேன்... ...நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட்-ல browsing பண்ணியிருக்கீங்க.. அதான் இருபது ரூபாய் எடுத்துட்டாங்க..

வாடிக்கையாளர்: நான் use பண்றது நோக்கியா 1200. அதில எப்படி சார்
browsing???

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இல்லை சார். நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட் -ல browsing பண்ணியிருக்கீங்க -ன்னு தான் காட்டுது..

வாடிக்கையாளர்: நோக்கியா 1200-ல் எப்படி சார் முடியும்????


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சிம் வேற போன்-ல கூட போட்டு browse பண்ணலாம் சார்..

வாடிக்கையாளர்: என் கிட்ட வேற போன் கிடையாது  சார்...போன்- சுத்தி டேப் ஒட்டி இருக்கு.. இதுல போய் எப்படிங்க  முடியம்..

(20 நிமிட உரையாடலுக்கு பின் )


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சார் நான் செக் பண்ணி பார்த்ததுல நீங்க SAMSUNG GT-S3850-ல browse  பண்ணதா காட்டுது...

வாடிக்கையாளர்: சரி..SAMSUNG CORBY ல
browse பண்ணேன்னு சொல்றீங்களா??? ஓகே... (கால் கட்டாகி விட்டது ).....

*****************************************************************
 
 
இந்த மாதிரி கஸ்டமர்கள் இருந்தால் எல்லா அதிகாரிகளும் "ராஜா ராணி" படத்தில் வரும் ஜெய் போல அழ வேண்டியது தான்... படிக்கும் போது சில உரையாடல்கள் மொக்கையாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிரிப்பும், எரிச்சலும் தான் நமக்கு வரும்.


உடன் வேலை செய்பவர்கள் / நண்பர்கள் - ஆறு மாதத்தில் பல தர பட்ட மனிதர்களை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஹிந்தி பேசும் வாடிக்கையாளர்களிடம் பேசும்  ஹிந்தி அதிகாரிகள், மாறுப்பட்ட டீம் லீடர்கள்/ முறுக்கி கொள்ளும் மேனேஜர்கள், எல்லாம் தெரிந்தது போல காட்டி கொள்ளும் சில சீனியர் அதிகாரிகள் என பலதரப்பட்ட மக்கள்  உண்டு. அவ்வப்போது குவாலிட்டி அனலிஸ்ட்களின் (QA) அலும்பல்கள் வேறு. 

ஆனால் இந்த மாதம் நமக்கு அருகில் உட்கார்ந்து அழைப்பு எடுத்தவன் (வேலை செய்தவன்), அடுத்த மாதம் இருக்க மாட்டான். சம்பளம் வாங்கியவுடன் சொல்லாமல் ஓடிவிடும் பழக்கம் சில கால் சென்டர்களில் இன்னும் உள்ளது.

அல்செக்-ல் பல நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்த போதும், சரியான தொடர்பு வைத்து கொள்ளாததால் ஒரு சிலர் தவிர யாரும் இப்போது தொடர்பில் இல்லை. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது முகநூலில் நண்பர்களாக  இருக்கின்றனர்.    

இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்யும் போது, உங்களிடம் பேசும் கஸ்டமர் கேர் ஆபீசர்களிடம், உங்கள் வீண் ,வெட்டி ஜம்பத்தை காட்ட வேண்டாம். உங்கள் அக்கௌன்ட்-ல் பணம் குறைவது, புது சர்வீஸ்கள் ஆக்டிவேட் செய்வது, இவை பற்றியெல்லாம் சத்தியமாக அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இருப்பதை பார்த்து, படித்து சொல்பவர்தான் தான் அவர்கள். உங்கள் பணம் / சேவை வேண்டும்/ வேண்டாம் என்றாலோ நீங்கள் அவர்களிடம் கடிந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக பேசியோ/ மின்னஞ்சல் செய்தோ சரி செய்து கொள்ளலாம் .  

இப்போதும் கூட இதற்கு முன்னால் அல்செக்-ல் நான் இப்படி இருந்தேன்; அப்படி இருந்தேன்; என கூறி சக நண்பர்களிடம் பெருமைபடுவதும் உண்டு. சம்பளம் குறைவாக இருந்தாலும், நல்ல சுற்றுவட்டாரமும், நண்பர்களும் இருந்தால் யாரும் வேலையை விட மாட்டார்கள். சூழ்நிலை காரணமாக, அந்த வேலையைவிட்டு விட்டு, தற்போதுள்ள வேலைக்கு தாவி விட்டேன். மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்றும் அந்த கால் சென்டர் வேலை, தவறவிட்ட தருணங்களாகவே என் மனதில் இருக்கின்றன.   



நன்றி !!!

-பி .விமல் ராஜ்