சனி, 26 அக்டோபர், 2013

சமூக குற்றவாளிகள் !!!

வணக்கம்,

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு துயர் செய்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவர் தலைமை ஆசிரியரை வெட்டி கொன்றதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள்தான், செய்தித்தாள்களையும் மற்ற செய்தி ஊடகங்களையும் அலங்கரிக்கின்றன.

சமீப காலமாக நம் நாட்டில் சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள் அதிகமாகியுள்ளார்கள். இது போன்ற குற்றங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று அலசினால், அனைத்து  குற்றங்களுக்கும் சமூகமே முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலோட்டமாக பார்த்தால் தவறு மாணவர்களின் / பிள்ளைகளின் மீது தான் இருக்க கூடும்  என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் நடக்கிற / நடக்கின்ற குற்றங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் சமூக பிரச்சனை ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகமே ஒரு குற்றவாளியாக இருப்பது நமக்கு விளங்கும். சமூதாயம் என்பது வேறு யாரோ அல்ல. நான், நீங்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள்தான். நான் பார்த்து , படித்து தெரிந்து கொண்ட சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் / கல்லூரி மாணவர்கள் ஆசிரியரை குத்தி கொல்வது, படிக்கிற வயதில் மது அருந்துதல், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடுதல் என தினமும் நாம் செய்திகளில் படித்து கொண்டு தான் இருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில், ஒரு தனியார் பள்ளியில், பெண் ஆசிரியையை பள்ளி வளாகத்தில், பாத்ரூமில் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார். ஆசிரியை போடப்பட்ட நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் காரணம் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியையிடம் நகைகளை பிடுங்கும் போது அந்த மாணவி சொன்னது,"எங்க அக்கா நகை இல்லாமல் வாழாவெட்டியா இருக்கா? உனக்கு ஏதுக்குடி நகை? "என அடித்து பிடுங்கி இருக்கிறாள்.

இந்த செய்தி மாநகர் முழுவது பரவி, செய்தி ஊடகங்களுக்கு நல்ல விருந்தானது. ஒன்பதாம் வகுப்பு மாணவி கொள்ளைக்காரியாக மாறியது மாற்றியது, அவளது அக்காவை வாழாவெட்டியாக அனுப்பியவர்கள் தான்.


ஒரு பத்து வயது பள்ளி மாணவனை, ஒரு ஆசிரியர்  " நீ மட்டும் இந்த தடவை பாஸ் ஆகலைனா, உன் தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன்.. ஒரு நாள் முழுக்க கிரௌண்ட் -ல முட்டி போடணும்... " இப்படி மிரட்டினால், கண்டிப்பாக அந்த மாணவன், பயத்தினால் பரீட்சை பேப்பர் கொடுக்கும் நாளன்று வீட்டை விட்டு ஓடி தான் போவான். ஏனென்றால் அந்த பத்து வயது பையனுக்கு வீட்டை விட்டு ஓடுவது என்றால் என்ன என்று தெரியாது. அதன் பிறகு நாம் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் தப்பு வாத்தியாருடையதே! 

இது போன்ற ஒரு காரணமாகதான் தூத்துக்குடி கொலையும் இருக்கும் (என் அனுமானம் தான் .) அதனால் மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான செயல்தான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனாலும் அந்த கொலைக்கு தூண்டுதலாக, பின்னணியில்  மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு சமூக பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் / புகைபிடிகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தப்பு தான். தெருவுக்கு தெரு மது கடைகளும், பெட்டி கடையில் புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளும்  இருக்கும் போது, அதுவும் மதுக்கடையை அரசே ஏற்று நடத்தும் போது அவர்கள் எப்படி குடிக்காமல், புகைக்காமல் இருப்பார்கள் ? பார்க்கும் முக்கால்வாசி திரைப்படங்களில் குடியையும், புகையையும் காட்டும் போது பதின்பருவ வயது கெட்டு போகதான் சொல்லும்.

வசதி படைத்த பெற்றோர் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிகம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளட்டும் என்று படிக்கிற பசங்களுக்கு சில நூறு ரூபாய்களை  கொடுப்பது, பிள்ளைகள் வாழ்க்கையை பெற்றோர்களே கெடுப்பது போல தான்.

அதே போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எதற்கு செல்போன்? அதுவும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தில்.. காசு இருக்கிறதே என பிள்ளைகளுக்கு செலவு செய்வது தவறில்லை. ஆனால் படிக்கிற வயதில் இது தேவையா?? என்று  தான் நாம் பார்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி இருந்தால், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தவறான வழிக்குதான் போவார்கள்.

இன்னொரு கூத்து இது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் கசக்கி, பிழிந்து அவர்களை தேர்வில் அதிக மதிப்பெண் பெற பாடாய் படுத்துகிறார்கள். அவர்களும் படித்துவிட்டு நல்ல மதிப்பெண் வரவில்லை என்றாலோ, தேர்வில் தோல்வி அடைந்தாலோ தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை   என்ற பதிவில் எழுதியிருந்தேன்.

இவர்கள் மட்டுமல்ல. இவர்களை போல வளரும் பதின்பருவ வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல நட்பும், தன்னம்பிக்கை வளர்த்தல், கலந்தாய்வு தான் அவசியம் தேவை.

கலந்தாய்வுக்கு மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்றில்லை. பெற்றோரோ அல்லது ஆசிரியரோ அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்களை போல நடத்த வேண்டும். அந்த வயதில் கிடைக்க வேண்டிய நட்பு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி கிடைக்காவிடில் அவர்கள் தவறான பாதையில் தான் தள்ளபடுவார்கள். 

பெற்றவரும், மற்றவரும் பதின்பருவ மாணவர்களுக்கு அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். அதெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. குழந்தை பருவத்தில், அவர்கள் ஏன் அழுகிறார்கள், ஏன் அடம் பிடிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த இரண்டும்கெட்டான் வயது பிள்ளைகளிடம் ஏற்படும்  மாற்றங்களை அவர்கள் சொன்னாலோழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பதினொன்று முதல் பத்தொன்பது வயது வரை பதின்பருவ வயதில் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமே போதித்தல் போதாது. அவர்களை திட்டியோ, மிரட்டியோ,அல்லது அடித்து  பணிய வைப்பது அவர்கள மேலும் காயப்படுத்தும். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"; "அடிபடாத மாடு படியாது"; "பிள்ளைகளை அடித்து வளர்த்தல் தான் நல்வழி படுத்த முடியும்" என்று பழமொழிகள் இருந்தாலும், அதை நானும் ஒத்து கொள்கிறேன். பிள்ளைகளை திருத்த கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். கண்டிப்பு ஓரளவு தான் இருக்க வேண்டும். மீறினால் ஆபத்து தான். அவர்களை நல்வழிபடுத்த அவ்வபோது உளவியல் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஒரு நல்ல கலந்தாய்வும், பெற்றோர்-பிள்ளைகளின் ஆரோக்கியமான உரையாடல்களும், பிள்ளைகளை மனதளவில் புரிதல் மட்டுமே ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

ராஜி சொன்னது…

நல்லதொரு அலசல். குழந்தைகளின் மன அழுத்தத்துக்கு பெற்றோராகிய நாம்தான் காரணம். அதன் விளவிதான் இதுப்போன்ற செயல்கள்

Unknown சொன்னது…

ok. but something missing
sethu

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி ராஜி அவர்களே !!! தொடர்ந்து வருகை தரவும்..

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சேது...
எது குறைகிறது என தெளிவாக சொல்லவும் !
முடிந்தால் திருத்தி கொள்வேன்..

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

நல்லதொரு அலசல்..ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்தான்..