புதன், 16 ஏப்ரல், 2014

ஜாக்கிரதை ! திருடர்கள் v2.014

வணக்கம், 

அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன்பெல்லாம் வீடு/கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, பாங்க் கொள்ளை, வழிப்பறி என்று நடந்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக மென்பொருள், இணையம் மூலம் கொள்ளையடிப்பது பெருகி வருகிறது.

தொழில்நுட்பம் மேலோங்கி நிற்கும் மேல் நாடுகளில் மட்டும் தான் இவை நடக்கிறது என்று எண்ணி கொண்டிருக்கின்றனர். அது தவறு. நம் நாட்டிலும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்லைன் திருட்டு, இணையம் மூலம் வங்கி கணக்கு கொள்ளை போன்ற 'டெக்னிகல் திருட்டுகளை' பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

இந்நூற்றாண்டின் ஆரம்பம் முதல், உலக மக்களின் கணினி மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில்நுட்பம் வளர்வதால், உலகம் சுருங்கி கொண்டே வருகிறது. இதன் பின்னணியில் பல குற்றங்களும், தவறுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கணினி, இணையம், மென்பொருட்கள், வன்பொருட்கள், கைபேசி,வலைத்தளம் மூலம் நடப்பவையே இணைய குற்றங்கள் (Cyber Crime) என்று சொல்லபடுகிறது. இக்குற்றங்களில் பலவகை உள்ளது.

1.) ஹாக்கிங்  (Hacking)
2.) பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement)
3.) சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking)
4.) ஐ.டி. திருட்டு (ID Theft)
5.) தீங்கிழைக்கும் மென்பொருள் பரப்புதல் (Malicious Software)

ஹாக்கிங் (Hacking): ஒரு தனிப்பட்ட நபர்/ தனியார் அமைப்பு/ அரசு அமைப்பு, அவரது தனிப்பட்ட அல்லது முக்கிய தகவல்களை அவர் அனுமதியின்றி அணுகி, இணையம் வழியாக திருட முயல்வது ஹாக்கிங் எனப்படும். இதில் குற்றவாளி அவன் இருந்த இடத்திலிருந்தே, வேறு ஒருவரின் கணினிக்குள் அனுமதில்லாமல் நுழைந்து, தகவல்களை திருடுவது வழக்கம். ஒரு இணைய தளத்தின் சர்வரை (Server) தாக்கி, ஹேக் (hack) செய்து அவற்றில் உள்ள தகவல்களை அழித்து / திருடுவது வெப்சைட் ஹாக்கிங் எனப்படும்.சமீபத்தில், ஜெயா டி.வியின் இணையதளம் ஹாக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அரசு/ தனியார் அமைப்பே தங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தி கொள்வது எத்திகல் ஹாக்கிங் (Ethical Hacking). இது கிட்டத்தட்ட  நம் பாதுகாப்பிற்காக நாமே போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையம் போல தான்.

பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement): ஒரு தனி நபர்/நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை அவர் அனுமதியின்றி உபயோகிப்பது, விற்பது, போன்றவையே பதிப்புரிமை மீறுதல் ஆகும். காப்புரிமையும் மீறுவதும் இதே போலதான். தகவல்கள், கோப்புகள், புகைப்படம், காணொளி, மென்பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் என உரிமையாளரிடம் தக்க அனுமதியின்றி பயன்படுத்துவது /விற்பது/ மாற்றுவது சட்டப்படி தண்டனைக்குரியதாகும். பொதுவாக நாம் கேள்விப்படும் திருட்டு பட டி.வி.டி, திருட்டு (activation key இல்லாத) மென்பொருட்கள், போன்றவை இவ்வகை குற்றத்தையே சாரும்.

சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking): இணையம் மூலம் மின்னஞ்சல்கள், படங்கள்/ காணொளிகள், தவறான தகவல்களை உருவாக்கி மற்றவர்களை துன்புறுத்துவது சைபர் ஸ்டாகிங் என்று சொல்வார்கள். வலைதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படம் வெளியிடுவது, ஆபாசமாய் விமர்சிப்பது, தவறான/பொய்யான  செய்திகளை பரப்புவது, சமூக தளங்களில் போலி ஐ.டி வைத்து மோசடி செய்வது போன்றவை இதன் கீழ் வரும். பெரும்பாலும் பதின்பருவ பெண்களும், ஆண்களும் தான் இதில் பலியாகிறார்கள். இது போன்ற குற்றங்களை செய்யும் வக்கிர குணம் படைத்தவர்களுக்கு அரசு கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புகைப்படமோ/காணொளியோ  எடுத்து, அவருக்கு விருப்பமில்லாமல் எஸ்.எம்.எஸ் அல்லது கால் செய்து தொந்தரவு செய்வதும் இவ்வகை சைபர் குற்றங்களின் கீழ் பதிவாகும்.

ஐ.டி. திருட்டு (ID Theft):  இணையம் மூலமாக பணம்/பங்குகளை மோசடி செய்வது அல்லது திருடுவது ஐ.டி திருட்டு ஆகும். தனி நபர் /  நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் அனுமதி இன்றி இன்னொரு கணக்கிற்கு மாற்றுவது / திருடுவது; போலியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தயார் செய்து கொள்ளையடிப்பது; போலியான இ-மெயில் அனுப்பி உங்களுக்கு $500,000,000,000 பரிசாக விழுந்துள்ளது என்று கூறி பணம் பெற முயற்சிப்பது போன்றவை ஐ.டி. திருட்டு என்று கூறுவார்கள். இது போன்று இ-மெயில்/எஸ்.எம்.எஸ் மூலம் திருடுவது  பிஷிங் (phishing)  என்றும்  சொல்வார்கள்.

பெரும்பாலும் வங்கி கணக்குகளை ஹாக் செய்து , அவருடைய வங்கி , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நம்பர்கள் போன்றவற்றை  பாஸ்வோர்ட், பின் நம்பருடன் திருடி தவறாக பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. ஏ.டி எம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வணிக இடங்களில் (swipe) தேய்க்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். ஸ்கிம்மர் (Skimmer ) என்று சொல்லப்படும் ஓர் இயந்திரத்தின் உதவியுடன் நம் கார்டுகளின் தகவல்களை பிரதி எடுத்து கொண்டு, பின்னர் உபயோகிக்க முடியும். நாம் செய்யாத செலவுக்கு பின்னால் பணம் கட்ட வேண்டி வரும்.  இதுவும் ஓர் வகை நூதன சைபர் வகை திருட்டு தான்.

வைரஸ் பரப்புதல் (Malicious Software): இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு கணினிக்கோ / கணினி குழுமதிற்கோ தீங்கு செய்யும் வைரஸ்களை/ மென்பொருளை அனுப்பி அவர்களின் மொத்த தகவல்களையும் அழிப்பதே இதன் வேலை. வைரஸ்களை ட்ரோஜன், வோர்ம் என்று பலவாறு பிரித்து சொல்வார்கள்.   

இது போன்ற குற்றங்களை தடுக்க நாம் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இதோ எனக்கு தெரிந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பகிர்ந்துள்ளேன்.

1.) சமூக வலைதளங்களிலும், சாட் (Chat room ) ரூம்களிலும் முன்பின் தெரியாதவரிடம் நட்பு பரிமாறி கொள்வதோ அல்லது சொந்த விஷயங்களை பரிமாறி கொள்வதோ கூடாது.

2.) வங்கி கணக்கின் தகவல்களை (பாஸ்வோர்ட், பின் நம்பர் ) கண்டிப்பாக வெளி நபருடன் பகிர கூடாது.

3.) கிரெடிட்/ டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களை அந்த அட்டையிலேயே எழுத கூடாது.

4.) இ-மெயிலில் வங்கி கணக்கின் முக்கிய தகவகல்ளை (பாஸ்வோர்ட், பின் நம்பர், செக்குரிட்டி கேள்வி ) தர கூடாது.

5.) உங்களுக்கு 50 ஆயிரம் கோடி பரிசு என்று மெயில் வந்தால் உடனே பல்லிலித்து கொண்டு, வங்கி கணக்குகளை தகவல்களை தர கூடாது.

6.) ஆன்லைன் பாங்கிங் போது , பண பரிவர்த்தனை முடிந்தவுடன் உடனே லாக் அவுட் செய்து விட வேண்டும்.

7.) பாங்கிங் பாஸ்வோர்ட்/ பின் நம்பர் முதலியவற்றை எல்லோரும் ஊகிக்கும் படியாக வைத்தல் கூடாது (0000,1111,1234, password123, asdf123...) .

இவ்வகை குற்றங்களை எளிதில் அழிக்க முடியாது. பெருகி வரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், மக்களின் தேவை போன்றவற்றின் காரணமாக சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. மேற்கண்டவை எல்லாம் வெறும் முன்னெச்சரிக்கை மட்டுமே. எப்போதும் கவனமாக இருத்தல் நமக்கு பலமே.

மேலும் தகவலுக்கு http://cybercrimeindia.org


சைபர் கிரைம் தொலைப்பேசி எண்கள் :

Address: (Chennai )
Asst. Commissioner of Police,
Cyber Crime Cell,
Vepery,
Chennai-600 007.
Phone: 04423452348 / 04423452350
E-mail id: cybercrimechn@yahoo.com

Address: (For Rest of Tamil Nadu)
A-Wing, III rd Floor,
Rajaji Bhawan, Besant Nagar,
Chennai-600090
Phone: 044-24461959/ 24468889 /24463888
E-mail id: hobeochn@cbi.gov.in



நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய
தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி ரமணி ஐயா அவர்களே!!!

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

தனிமரம் சொன்னது…

மிகவும் அருமையான பயனுள்ள பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

வலைச்சர தள இணைப்பு : டெலிபோன் தொல்லை!!!!!!!!