வெள்ளி, 23 மே, 2014

எவன் அப்பன் வீட்டு சொத்து ?

வணக்கம் ,

நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும் வரிப்பணம் அரசாங்க ஊழியருக்குச் சம்பளமாக, நாட்டு முன்னேற்றதிற்காக, நல திட்டங்களுக்காக, கல்வி/தொழில் வளர்சிக்காகச் செலவு செய்யபட வேண்டும். பெரும்பாலான மக்களின் வரிப்பணம் எங்கெங்கோ, எப்படியெல்லாமோ வீணாகி கொண்டிருக்கறது.

அரசியல் கடலில் போட்ட பெருங்காயம்-

அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவும், கட்சி பணிக்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரும், பிரதமர் வேட்பாளரும் பிரசாரம் செய்யத் தனி விமானம் தேவையா ? இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா? அல்லது மக்களின் வரிப்பணமா என்று புரியாத புதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் சிலர், அரசியல் லாபத்திற்காகப் பத்திரிக்கையிலும், ஊடகங்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் தருகின்றனர். மேலும் பாராட்டு விழாக்கள், கட்சி பெருவிழாக்கள் மற்றும் அனாவசிய ஆடம்பரங்கள் எல்லாமே நம்முடைய வரிப்பணத்தில் தான் செலவு செய்யபடுகிறது. நமக்குத் தரவேண்டிய இலவச/மானிய மின்சாரத்தையும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்படுகிறது.

இவை மட்டுமா??

 நாம் ஏதாவது ஒரு பொதுத் துறை வங்கியில் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் விட்டால், நம்மைச் சும்மா விட மாட்டார்கள். கடனாளியிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், ஃபைன் , ஜப்தி, சிறை என அலைகழிப்பார்கள். வங்கியிலிருந்து (அடி)ஆள் அனுப்பி வைத்து கடனாளியை அசிங்க படுத்துவார்கள். இந்த மாதிரி சட்டமெல்லாம் எல்லோருக்கும் பொது என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. நாடு முழுக்கப் பொதுத் துறை வங்கிகளிடம் கோடான கோடி பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, ஏமாற்றும் பெரும் செல்வந்தர்களும், அரசியல் புள்ளிகளும் இருக்கதான் செய்கின்றனர்.


நாடு முழுக்க 24 பொதுத் துறை வங்கிகளில் 3 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பித் தராமல் பட்டை நாமம் போட்ட பெரிய நிறுவனங்கள் , தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவின் பெயர் மட்டும் வெளியே வந்திருகிறது. இது போன்ற இந்தியாவிலுள்ள பல பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அவ்வளவு ஏன் ? பெயரே பிரபலமாகத் தெரியாத 10 நிறுவனங்கள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மற்று 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்க பட்டு, இதுவரை ஒரு தவணை கூடத் திருப்பிக் கட்ட வில்லையாம். இது கிட்டத்தட்ட வங்கி புகுந்து கொள்ளை அடிப்பது போலதான் இருக்கறது.

'வராக்கடன்' என்று வங்கி குறிப்பிடும் இந்தக் கடன்கள் எல்லாம் திரும்பி வராது என்று தெரிந்தே வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் உயர் அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும், அரசியல் நிர்பந்ததிற்காகவும் போதுமான ஜாமீன் இல்லாமல் பணத்தை அள்ளி கொடுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறு வராக்கடன்கள் தள்ளுபடி செய்தது மட்டும் 2 லட்சத்து 4,000 கோடி!

சில ஆட்சியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக விவசாயக் கடனை, கூட்டுறவு கடனை வட்டியின்றி அறவே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதில் 60% ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும் , மீதம் 40%, விவசாயக் கடன் என்ற பெயரில் மற்ற தொழிலில் பணம் போட்ட பண்ணையார்களும், வசதி படைத்தவர்களும் அதிகம் பலன் பெறுகிறார்கள்.

இதெல்லாம் எவன் அப்பன் வீட்டுப் பணம் ? எல்லாமே நம்முடைய வரிப்பணம் தான். வங்கிகள் நாட்டுடைமையாக்கியது மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வங்கிகளால் பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான் நலனை சொகுசாய் அனுபவித்துக் கொண்டிருகின்றனர். வராக்கடன்களைத் திருப்பி வாங்குவதைப் பற்றி அரசு ஓர் நல்ல முடிவு எடுக்காத பட்சத்தில், நம் பொதுத் துறை வங்கிகள் திவாலாகி போக வாய்ப்புகள் உண்டு. வங்கியில் நாம் சேர்த்து வைத்த பணமும் சேர்ந்து திவாலாகி போகவும் வாய்ப்பு உண்டு என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் தான் நம்மூர் பணக்காரர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் சில பொதுத் துறை வங்கிகளே இப்படிச் சுவிஸ் வங்கி போலச் செயல்படுவது எங்குப் போய் முடியும் என்று தான் புரியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி நிறுவனமும் தான் இந்த வராக்கடன்கள் பற்றியும், உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பது பற்றியும் நல்ல முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் !

வங்கிகள் பற்றிய தகவல் - குமுதம் ரிப்போர்ட்டர் -18.5.2014


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

நல்ல கேள்வியை கேட்டீங்கள்.. எல்லோரும் விளங்கிகொள்வார்கள் என்றால் சரிதான் பதிவை படித்த போது விக்ரம் நடித்த (கந்தசாமி) படத்தின் நினைவு வந்தது... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

நல்ல பதிவு ,இன்று என் தளத்திலும் இதை சிபாரிசு செய்து உள்ளேன் !

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி ரூபன் ! நானும், நீங்களும் கேட்டால் ஒன்றும் நடக்க போவதில்லை..

விமல் ராஜ் சொன்னது…


வருகைக்கு நன்றி ஜோக்காளி அவர்களே !!! உங்கள் பதிவையும் பார்த்தேன் ..நன்றி!!