திங்கள், 23 ஜூன், 2014

தமிழ் திணிப்பு செய்வோம்!

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று கண்டனம் தெரிவிக்காமல், தொடந்து படிக்கவும்.

"தற்போது சமூக வலைதளங்களில் அரசு தகவல்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அல்லது  இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இரு மொழிகளைப் பயன்படுத்தும்போது முதலில்  இந்தியையும் அதன் பிறகே ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும்",  என்று சமீபத்தில் மத்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், ஆங்கிலத்தை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம் என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்தத் திடீர் ஆணையால் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருகின்றனர்.

முதன் முதலில் 1937-ல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் ஆணை பிறப்பிக்கபட்ட போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், தந்தை பெரியாரால் ஆரம்பிக்கபட்டது. பல்வேறு எதிர்ப்பால் 1940-ல் அச்சட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1965-ல் மத்திய அரசு ஒரு சில காரணங்களுக்காக இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்க முனைந்தது. மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை காட்டினர்.

இப்போது புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஓர் மாதத்திற்குள், மீண்டும் இது போன்ற ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும், பல தொடர் கண்டனத்தால் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இச்சட்டம் கிடையாது என்று மத்தியில் கூறியுள்ளனர்.

தமிழை முன்னிலை படுத்தவும், நம் தாய்மொழியைக் காக்கவும் பலர் போராடி வருகின்றனர். இவர்கள் முதலில் சொல்வது மொழி வாரியான, பிராந்திய மாநிலங்களில் இந்தி திணிப்புக் கூடாது என்பது தான். அப்படி நடந்தால் நம் தாய்மொழி அழியும் காலம் வெகு விரைவில் வரும் என்று எண்ணுகின்றனர்.

 

இவர்கள் இப்படி மற்ற மொழியை எதிர்ப்பதாலும், தொடர் கண்டனங்கள், போராட்டங்களாலும் மட்டுமே தமிழ் மொழி வளராது. வளர்க்கவும் முடியாது. தமிழை வளர்க்க ஆதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது, பள்ளி கூடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழ் நாட்டில் பள்ளி பயிலும் எல்லா மாணவ/மாணவியரும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும். மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ என எல்லாப் பள்ளி பிள்ளைகளும், குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தமிழைச் சொல்லி தர முடியாது அல்லது தமிழைக் கற்க சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்தால், இன்று தமிழ் எந்த நிலையில் இருக்கிறதோ, அதை விட மோசமாக இன்னும் 50/60 வருடங்களுக்குப் பிறகு இருக்கும்.

இன்று சென்னை மாநகரில் உள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஒரு சில பள்ளியில் தமழ் வகுப்பையே ஆங்கிலத்தில் தான் எடுக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

(உதாரணம்)

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. "

தமிழில் விளக்கம் கொடுக்கப் பட வேண்டிய இந்தக் குறளுக்கு,
கீழ்கண்டவாறு பள்ளியில் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world .

தமிழில் விளக்கம்-
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மேலும் தமிழில் தப்பும் தவறுமாக எழுதினால் (துணைக்கால் போடுவது, ஒற்றைக் கொம்பு, இரண்டு சுழி... ), அதைப் பெரிதாகக் கவனிக்காமல் (tick ) டிக் போட்டுவிடுவார்களாம். ஆங்கிலப் புலமை தான் அவர்களுக்குப் பெரிதாம். அதுதான் முக்கியமாம். சும்மா பேருக்கு எழுதவில்லை... இதைச் சொன்னது, அப்பள்ளியில் படித்த ஓர் முன்னாள் மாணவி தான்.

பல மேல்நிலை பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் தண்டனை என்று விதியெல்லாம் உண்டு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்றுள்ள பல கான்வென்ட் பிள்ளைகளுக்குத் தமிழில் பேச எழுத தெரிவதில்லை.இப்படி இருந்தால் எப்படித் தமிழ் வளரும்? வெறும் சமச்சீர் கல்வியும், பிரம்மாண்டமான தமிழ் மாநாடும் தமிழை வளர்க்காது.

இது போன்ற பள்ளிகளில் முதலில் தமிழைத் திணிப்போம்; பிறகு நாட்டில் இந்தி திணிப்பை எதிர்போம் !

இன்று நம் மக்களுக்கு, பணி காரணமாக ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமான மொழியாக மாறிவிட்டது. கற்றுகொள்ளத் தான் வேண்டும். மேலும், இந்தி படித்தால், வட இந்தியாவில் வேலை கிடைத்தாலும் போய்ச் சமாளிக்கலாம். மேற்கண்ட இக்காரணத்திற்காக தமிழை மறக்க / ஒதுக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

vicky சொன்னது…

தமிழ் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Unknown சொன்னது…

நல்ல பதிவு. நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தமுள்ளது நண்பரே!
தமிழை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை நாமே அதைச் செய்து விடுவோம் என்பதுதான் கொடுமை
தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதைத் தரக்குறைவென நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுற்ற தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது அதனிலும் கொடுமை.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

மேலை மொழி மோகத்தினால் தமிழை நாம் தான் சாகடிக்கிறோம்...
அதில் உள்நாட்டு மொழி திணிப்பு இருந்தால் தமிழ் என்பது வரலாறு பாடத்தில் மட்டுமே வரும்..