ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ???

வணக்கம்,

நேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், படிப்பவர்களும், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவரை ஒருவர் போன் செய்து நிலைமையை விசாரித்து கொண்டனர். சிலர் வீட்டுக்கு கூட போகமுடியாமல், அருகில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்போது  நிலைமை மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இதே போல் முன்னொரு முறையும் நடந்துள்ளது. அப்போது இதை விட பயங்கரமான கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் நடந்துள்ளது. பல சமயங்களில் இவ்வாறு பொது சொத்துகள் எரிந்து எலும்பு கூடாய் ஆனதை,  நாமும் கண் கூடாய் பார்த்துள்ளோம். அரசியல் பெரும் புள்ளிகள் கைதின் போது, இம்மாதிரி கடையடைப்பு, பொது சொத்து சேதம் செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பது நமக்கு சாதாரணமான செய்தி தான்.


சில வருடங்களுக்கு முன், ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகளும், கிலோ கணக்கில் தங்க வைரமும்,  ஆயிரக்கணக்காண ஏக்கரில் நிலமும்  ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். மலைகளை வளைத்து போட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களில் குற்றமற்றவர் என்று வெளியே வந்தார். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாய்பளித்து  இருமுறை அவர்களையே ஆட்சியை பிடிக்க வைத்துள்ளோம்.

இன்னொரு பக்கம், லட்சம் கோடிகளில் ஊழலும், பல நூறு கோடி கணக்கில் நில கொள்ளையும், மொத்த குடும்பத்துக்கும் அரசியலில் பதவி, அதிகாரம், வன்முறை என பல விஷயங்களை ஊடகம் மூலம் கேள்விபட்டிருந்தாலும், அவர்களையும் நாம் ஐந்து முறை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே போல அரசியல் புள்ளிகள் பலரும் செய்யாத தப்புக்கு சிறை சென்று வந்து அரியணையில் ஏறியுள்ளனர்.

"ஒவ்வொரு முறையும் யாரும் நம்மை ஏமாற்றவில்லை; நாம் தான் ஏமாளியாக இருந்து வருகிறோம். இங்கு இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைக்கிறது " என சிலர் புரட்சியாக பேசுவதுண்டு. உண்மையை சொல்லுங்கள் இந்த இரண்டு கட்சிகளை விட்டால் நாம் என்ன தெலுங்கு தேசத்திற்கா ஓட்டை போட முடியும் ???

மற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. அரியணையில் ஏறாததால், அவர்களின் சாயம் இன்னும் வெளுக்கவில்லை. சாதி / மத போர்வையில் உள்ள கட்சிகளை பற்றி பேசவே தேவையில்லை.
 
தேர்தல் நேரத்தில் யார் நல்ல (நமக்கு தேவையானவற்றை ) வாக்குறுதிகளை தருகிறார்களோ, அவர்களை தான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோம். கண்டிப்பாக சொல்கிறேன். நேற்று நடந்த (அற) போராட்டங்கள் எல்லாவற்றையும் நாம் மறந்து போய்,  தீர்ப்புகள் திருத்தி  எழுதப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் இவர்களையே நாம் தேர்ந்தெடுப்போம். அது தான் நம் நாட்டின் விதி !

இந்த விதியினை மற்ற யாரவது வருவார்களா என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

கல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்

வணக்கம்,

இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே  இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா வாரம் போல இந்த சனியும் சாதாரணமாக தான் போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சென்றது.

போகவே வேண்டாம் என்று எண்ணியிருந்த 'அலுவலக தின' விழாவிற்கு போயே ஆக வேண்டும் என்ற நிலை. விழாவோ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. வர்த்தக மையம் போகும் வழியில் தான் போர் கல்லறைகளும், புகழ் பெற்ற புனித தோமையர் (பரங்கிமலை) தேவாலயமும் இருக்கிறது. விழாவை முடித்து விட்டு வரும் போது பார்க்கலாம் என்ற நினைத்து கொண்டேன். ஏற்கனவே இருமுறை கல்லூரி காலத்தில் போய் வந்த ஞாபகம். மீண்டும் ஒரு முறை போக எண்ணம். காலை பத்து மணிக்கு சென்று, விழாவின் பாதியிலிருந்து கலந்து கொண்டு வருகையை பதிவு செய்தேன். பதினொரு  மணிக்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் தப்பிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல், 2 மணி வரை இருந்து பார்த்துவிட்டு , ஓசியில் போடும் மதிய உணவை வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் நடையை  கட்டினேன்.

உடன் வேலை செய்யும் நண்பர் மதன் யேசுராஜயையும் தேவாலயம் போக (துணைக்கு) அழைத்து கொண்டேன். 'மதன்ஜி 'யுடன் எனக்கு சில நாட்களாக தான் பழக்கம். இருப்பினும், நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மதியம் மூன்று மணி வாக்கில், நாங்கள் இருவரும் போர்  கல்லறையை அடைந்தோம். உச்சி வேளையில் சுள்ளென வெயில் சுட்டு கொண்டிருந்தது. வெளியே ரோட்டிலிருந்து பார்த்தாலே கல்லறைகள் தெரியும். சுற்றியும் பச்சை பசேலென உள்ள புற்களுக்கு நடுவே கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலக போரின் போது, இந்தியா முழுவதும் உள்நாட்டு கலவரங்களிலும், இராணுவ முகாம்களிலும் இறந்த வீரர்களுக்காக இந்த போர் கல்லறை சின்னம் 1952-ல் எழுப்பப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு முன்னால் ஒரு பெரிய கல்வெட்டில் "THEIR NAME LIVETH FOR EVERMORE " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்தின் மூலையில், சில பூஞ்செடிகளும், மலர்கொடிகளும் கம்பதில் படர்ந்து ரம்மியமாக இருந்தது. அங்கு யாரோ இரண்டு ஜோடிகள் போட்டோ ஷூட்டில் இருந்ததால், அதனருகே செல்லாமல் விட்டுவிட்டோம்.

madras-war-cemmetry
சென்னை போர் கல்லறை
அடுத்து வண்டியை புனித தோமையர் தேவாலயத்துக்கு விட்டோம். டூ-வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, படிவழியாக மேலே ஏறினோம். 300 அடி உயரமுள்ள மலையில் 135 படிகள் இருக்கிறதாம். எண்ணிக்கை தெரிந்தவுடன் தான் கால் ரொம்ப வலிக்கிறது. வயிறு புடைக்க தின்றுவிட்டு, உச்சி வெயிலில் மலை படியேறி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. காலையில் மேகத்தில் இருந்த கருமை, மதியம் மலையேறும் போது எங்கள் முகத்திலும் வந்துவிட்டது (மதன்'ஸ் பன்ச்!).  படியேறும் வழியில் ஏசுநாதர் சிலுவை சுமந்து வருவது போலவும், காயங்களை குணமாக்குவது போலவும் சிலைகள் வடிக்க பட்டிருந்தன. பாதி மலையிலிருந்து பார்க்கும் போது, தென் சென்னையின் தோற்றத்தை கானல் நீரில் கண்டோம்.

மதன் ஏற்கனவே பல முறை இங்கு வந்துள்ளதால் தேவாலய வழிபாட்டை பற்றி சொல்லி கொண்டு வந்தார். ஏசுநாதரின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையர் (Saint Thomas), கி.பி.52 -ல் கேரளம் வழியாக இந்தியா வந்து மத போதகம் செய்துள்ளார். வங்க கரையோரம் மூன்று இடங்களில் (சின்ன மலை, புனித தோமையர் மலை மற்றும் & மைலாப்பூர் ) தங்கி மத போதகம் செய்துள்ளார். கடைசியாக கி.பி.72-ல் இங்கு (இன்றைய பரங்கிமலை) உயிர் நீத்தாக சொல்லபடுகிறது. அவர் இறந்தவுடன் பூதவுடல்  மைலாப்பூருக்கு (சாந்தோம்) கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1547-ல் காஸ்பர் கோல்ஹோ என்ற பாதிரியார் பரங்கிமலையில் இப்போதுள்ள தேவாலயத்தை கட்டியுள்ளார்.


மலையில் உள்ள பெரிய சிலுவை
தென்-சென்னையின் தோற்றம்-சென்னை ஏர்போர்ட்

தோமையரின் ரத்த கரையுள்ள சிலுவை

தோமையரின் RELIC


கி.பி.50-ல் வரையபட்ட ஓவியம்
 இத்தேவாலயத்தின் சிறப்பம்சமாக மலை மீது பெரிய Calvary (ஆணி கொண்டு அறையப்பட்ட இயேசுவின் உருவம் நடுவிலும் திருடர்கள் உடல் பக்கவாட்டிலும் கொண்ட சிலுவை) அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மலையின் மேல் மேரி மாதாவின் தேவாலயம் உள்ளது. அதில் முக்கியமாக, புனிதர் தோமையரின் இரத்த கரையுள்ள சிலுவை இருக்கிறது. இச்சிலுவை  இறக்கும் முன் அவரே செய்ததாம். ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகவே இரத்தம் கசியும் என்று சொல்கிறார்கள். சிலுவை அருகே கி.பி. 50-ல் புனிதர் லூக் -ஆல் (Saint Luke ) வரையப்பட்ட குழந்தை ஏசு மற்றும் மேரி மாதாவின் படமும் உள்ளது. ஏசு கிறுஸ்துவின்  பழங்கால ஓவியங்கள் தேவாலய சுவர்களை அலங்கரிகின்றன. தேவாலயம் அருகே ஒரு சிறிய தியான மண்டபமும் இருக்கிறது. அதில் புனிதர் தோமையாரின் RELIC-ல் (எலும்பு துண்டின் ஒரு சிறு பகுதி ) செய்யப்பட்ட சிலுவையும் உள்ளது.

இந்த திருகோவிலின் விசேஷங்களை எனக்கு விவரித்து கொண்டே இருந்தார் மதன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், கூகிளாண்டவர் இருப்பதால் தலையை மட்டும் ஆட்டி கொண்டேன்.

எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். தேவாலயத்துக்கு சென்றதில் மன திருப்தி கிடைத்ததோ இல்லையோ, ஓரு  நல்ல வரலாற்று பொக்கிஷமான இடத்தை பற்றி தெரிந்து கொண்ட சந்தோஷம் எனக்குள் இருந்தது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்