ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆ... விமர்சனம்

வணக்கம்,

ஆ.... அம்புலி இயக்குனரின் அடுத்த படைப்பு. படத்தின் முதல் மோஷன் போஸ்டர் பார்த்தவுடன், இந்த படத்தை பார்த்ததே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று திரையரங்கில் ஐம்பதுக்கும் குறைவான கூட்டத்தில் பார்க்க வேண்டிய நிலை. பெரிய நடிகர்கள் யாரும் இல்லாததால் படம் மக்களிடம் போய் சேரவில்லை என நினைக்கிறேன்.

தமிழின் முதல் ஹாரர் அந்தாலஜி (Horror Anthology) படம் இது. அந்தாலஜி என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளின் தொகுப்பு என்று பொருளாம். அது போல ஐந்து வேறு வேறு கதைகளை படத்தில் நமக்கு தொகுத்து சொல்லியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும் போது வரும் பாடலை பார்த்தால், இது திகில் படம்தானா  என்று நமக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதைக்குள் வந்து விடுகின்றனர். பேயை தேடி நண்பர்கள் மூவர் (கோகுல், மேக்னா, பால சரவணன் ) அலைவது தான் கதை. வங்காள விரிகுடாவில் நடுவில் ஒரு இடம், ஜப்பானில் ஒரு மருத்துவமனை அறை,  துபாய் பாலைவனத்தில் ஒரு பெரிய மாளிகை, தமிழ்நாட்டில் ஊருக்கு வெளியே ஒரு ஏ.டி.எம். செண்டர் மற்றும் ஒரு நெடுஞ்சாலை பாதை என பேய் இருப்பதை கண்டுபிடிக்க பேயாய் அலைகின்றனர்.


ஐந்து பேய் கதைகளையும் திகிலுடன் கொடுக்க முயன்றிருக்கின்றனர் படகுழுவினர். கடலுக்கு நடுவிலும், மருத்துவமனையிலும் நடப்பதை திகிலுடன் சொல்லும் போது, நம்மை சில நிமிடம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். மற்றபடி, படத்தின் முதல் பாதி லேசான திகிலுடன்தான் இருகிறது. ஆனால் பிற்பாதியில் அவ்வளவாக பயமுறுத்த மறந்து விட்டார்கள்.

நாயகன் கோகுல் நன்றாக மைமிங் மற்றும் டான்ஸ் ஆடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். படத்தில் அவருக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம். உடன் வரும் மேக்னா படம் முழுக்க வந்து போகிறார். பால சரவணனின் வசன உச்சரிப்பு, நடிப்பை பார்க்கும் போது, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு உண்டு என தோன்றுகிறது. பாபி சிம்ஹா இதிலும் கொஞ்சம் வித்தியாசமான பாத்திரத்திலேயே நடித்துள்ளார். அடுத்து இசை. படத்தின் இசை பெரிதாக இல்லை என்றாலும், திகில் படங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நல்லது.

தமிழ் படங்களில் பேயை தேடி போவது, அதுவும் நாடு நாடாய் போவார்களா என்றெல்லாம் யோசிக்க/கேட்க கூடாது. ஹாலிவுட்டில் இப்படி படம் எடுத்தால், வாயை ஆ.. என்று பிளந்து கொண்டு பார்ப்பார்கள். 'பீட்சா' படம் வந்த பின்னர், நாம் எல்லா திகில் படங்களையும் அதனுடையே ஓப்பிட்டு பார்க்கிறோம். "ச்சே..பீட்சா மாதிரி இல்லப்பா.." என்று சொல்லி கொள்கிறோம். ஆனால் எல்லா படமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தமிழில், அதுவும் திகில் படங்களில், இது போல மற்றுமொரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ள இயக்குனர் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் அவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள்.

'ஆ'  நம்மை மிரட்டி, அலறவைக்கவில்லை, இருப்பினும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 24 நவம்பர், 2014

பிரியாணி பிறந்த கதை

வணக்கம், 

நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள். அது அப்படி பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு தேசிய உணவாகவே மாறி போனது என்று தான் விளங்கவில்லை. அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவிற்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பெயர் காரணம்: பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை.பிரியாணி என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள்.

ஹைதிராபாதி பிரியாணி

ஆரம்பகாலத்தில் பிரியாணிக்கு, நெய்யில் அரிசியை (கழுவாமல்) வறுத்து எடுப்பார்கள். இதன் மூலம், அரிசி நன்றாக வறுக்கப்பட்டு , மசாலா கலவையெல்லாம் சரியாக கலந்து, கறிவகைகளை அரிசிக்கு இடையில் வைத்து வெந்தவுடன், ஓர் நல்ல சுவையை தரும். இதை தான் தம் பிரியாணி என்று சொல்கின்றனர்.

மேலும், 1593-1631 -ல் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக  சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட  உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு.

வடக்கில், அவாத்தை (இன்றைய லக்னோ) முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் தில்லியிலிருந்து முகல் பிரியாணி என்றும் பரவியது.

பின்னர் 1856-ல் கல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில், மைசூர் திப்பி சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம் , வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பினார்கள்.

அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள்  மூலம் ஹைதிராபாதி பிரியாணி  என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் (வாணியம்பாடி/ஆம்பூர்)  ஆற்காடு பிரியாணி  என இந்தியா முழுவதும் பரவவிட்டனர்.

கேரளத்தில், கோழிகோடு தலச்சேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள், அந்த பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி என ஊரெங்கும் என்று பரப்பினர்.

இன்னும் இதை தவிர கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி,   மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி,  தமிழ் நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகையாறாக்கள் இந்தியா முழுவது பறந்து விரிந்து பரவியுள்ளது.

இந்தியா தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி , மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை. 

இப்படிதான் இந்தியா முழுவது பிரியாணி பரவி நம் அனைவரின் மனதை கொள்ளையடித்தது. இதுவரை நான் பிரியாணி என்றாலே ஹைதிராபாதி அல்லது ஆம்பூர் பிரியாணி தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை ஊரில் இத்தனை வகைகளா என நினைக்கும் போது நாக்கில் நீர் ஊறுகிறது.

இணையத்தில் நான் பார்த்த, படித்த பிரியாணி வகைகளை உங்களிடம் இங்கு பரிமாறியுள்ளேன். இதில் உங்களுக்கு தெரிந்த ஏதேனும் பிரியாணி வகை விடுபட்டிருந்தால் எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தகவல்கள்  - கூகிள் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 10 நவம்பர், 2014

மூக்கை மூடிட்டு படிங்க !

வணக்கம்,

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. கடந்த ஒன்றரை வருடங்களில், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என் வலைப்பூவிற்கு வருகை தந்து, பின்னூட்டம் எழுதி, என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல!

50th-article

சரி... பதிவுக்குள்ளே வருவோம். நீங்க எல்லோரும் காலையில் எழுந்தவுடன், பல் துலக்கிவிட்டு என்ன செய்வீங்க? அடச்சீசீசீய்ய்ய் !!! இவன் என்ன விவஸ்தை இல்லாம கேள்வி கேக்குறானேன்னு தப்பா நினைக்காதிங்க. இந்த பதிவும் அதை பற்றியது தான். நீங்க ரொம்ப சுத்த பத்தம்-ன்னா கொஞ்சம் மூக்கை மூடிட்டு படிங்க.

இது ஒரு சாதாரண விஷயம் தானே. இதில் என்ன புதுசாய் சொல்ல போகிறான் என்று யோசிக்கிறீர்களா ? சொல்கிறேன் படியுங்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக கழிவறை தினம் (World Toilet Day) என்று ஒன்றை புதிதாய் கடந்த வருடம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 3 மில்லியன் மக்களுக்கு சுகாதாரமான கழிவறைகளை கட்டி தந்துள்ளது. மற்ற பணக்கார நாடுகளுக்கெல்லாம் உலக கழிவறை தினம் என்பது ஒரு கேலி கூத்தான செய்தி. ஆனால் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும், அங்குள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இது சாதாரண செய்தியாக இருப்பது இல்லை.


சில நாட்களுக்கு முன், ஓர் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை  படித்து அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.

1.)  உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான தனி கழிப்பறை கிடையாது.

2.)  சுமார் 500,000 குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் மற்றும் மோசமான
சுகாதாரமில்லாத கழிவறையால் வயிற்றுப்போக்கு, தொற்று வியாதி ஏற்பட்டு இறக்கின்றனர்.

3.)  உலகில் கழிப்பறைகளை விட மக்களிடையே செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் விஷயங்களெல்லாம் பெரும்பாலும் நம் நாட்டிலும் நடக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 13% மக்கள் திறந்த வெளியில்தான் மலம் /சிறுநீர் கழிக்கிறார்கள். புறநகர் மற்றும் கிராம புறங்களில் உள்ள பல கழிவறைகள், சுத்தமில்லாததாகவும், வேலை செய்யாமல் செயலிழந்தும் இருப்பது வேதனைக்குரியது.  

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization ) கூற்றுபடி, இந்தியாவில் 636 மில்லியன் மக்கள் கழிப்பீடமின்றி வாழ்கிறார்கள். பெண்களுக்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால், சராசரியாக  13 மணிநேரம் தங்கள் இயற்கையின் உந்துதலை (அவசரத்தை) அடக்கி வைக்கின்றனர். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் தொற்று வியாதி என அவதிபடுகிறார்கள்.

இந்த கழிப்பீட வசதிகள் பெருநகரங்களிலும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை கவலைக்கிடமாக தான் இருக்கிறது. அவரசத்திற்காக ஆண்கள் "திறந்தவெளி புல்வெளி கழகத்தில்" முடித்து கொள்கிறார்கள். பெண்கள் ??? 

சரியான கழிப்பீடங்கள் வீட்டில் இருந்திருந்தால், கடந்த ஓர் ஆண்டில் 11,000 பெண்கள் பலாத்காரத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் என பி.பி.சியின் ஒரு கருத்தாய்வு கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சுகாதாரமில்லாத , அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்கள் இருக்கும் நம் நாட்டில் தான் "மங்கல்யான் " வெற்றியையும், மற்ற தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றியும் பெருமை பேசி கொண்டிருக்கிறோம்.

தூய்மை இந்தியா திட்டம் (Clean India) மூலம் நம் தேசத்தை சுத்தமாக்குவோம் என்று நம் பாரத பிரதமர் சொல்லி கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தின் கீழ், தெருவுக்கு இரண்டு கழிப்பறைகளாவது கட்டி தந்தால் நாம் அனைவரும் சுகாதார காற்றை சுவாசிக்கலாம். நம் எதிர்கால தலைமுறைக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் சொல்லி கொடுப்போம்.

தகவல்கள்  - கூகிள் , World Toilet Day


நன்றி !!!

-பி .விமல் ராஜ்