ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

சிறுகதை - கனவு கலைந்தது

வணக்கம்,

இன்றைய நவநாகரீக உலகில், ஒரு சில திருமண கனவுகள் எப்படி கலைகின்றன என்பதை என் கற்பனையில் கண்டுள்ளேன். உங்கள் விமர்சனங்களை பகிரலாம்...

சிறுகதை - கனவு கலைந்தது
***************************************
காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின்  தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

"தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு  படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க அண்ணனும் நேர்ல போய் பேசிட்டு வந்துட்டார். பொண்ணு  வீட்ல சரின்னா அடுத்தடுத்த மாசத்திலேயே கல்யாணத்த வச்சிடலாம்." - அவன் அப்பா.

"ஹ்ம்ம்... நல்ல படியா முடிஞ்சா சரிதான்.. ", அம்மா.

அரை தூக்கத்தில் இதை கேட்டதும், விருட்டென எழுந்து உட்கார்ந்தான். புன்முறுவலோடு தலைமுடியை கோதி, எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டான். காலை வேளையில் இந்த மாதிரி ஒரு நல்ல சேதியை கேட்டால் யாராக இருந்தாலும் சந்தோஷம் பொங்கி வருவது இயல்புதானே!

ஏதும் கேட்காதவன் போல், அறையை விட்டு வெளியே வந்தான். அவனை பார்த்ததும் அம்மாவும், அப்பாவும் பேச்சை சட்டென நிறுத்திக்கொண்டனர்.

"ஹ்ம்ம்... பத்து வயசு, பதினஞ்சு வயசெல்லாம் காதல், கல்யாணத்தை பத்தி பேசுது....ஏழு கடா வயசு எனக்கு.. என் கல்யாணத்தை பத்தி, என் முன்னாடி பேச இவங்களுக்கு என்ன வெட்கமோ தெரியல..." என்று முனகியபடியே பல் துலக்கி விட்டு வெளியே வாக்கிங்க்கு போனான். வழக்கம் போல இல்லாமல், இன்று அதிகமான புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தான்.

அதே புத்துணர்ச்சியுடன் , காலை உணவிற்காக வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். "என்னம்மா.. இன்னைக்கும் இட்லியா???? ஒரு சப்பாத்தி , பூரி பண்ண கூடாதா?? " என்று நொந்து கொண்டான். அம்மா ஏதும் பேசவில்லை. தினமும் இதே கேள்வியை இவன் கேட்பதால், அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

"அஜய் , அப்பா ஏதும் சொன்னாரா??? "

"இல்லையே ... என்ன???", தெரிந்தும் தெரியாதது போல கேட்டான்.

அம்மா விஷயத்தை சொன்னாள்.

மனதிற்குள் மத்தாப்பூ பூத்தது போல இருந்தாலும் , முகத்தை சாதாரணமாகவே வைத்து கொண்டான்..

"இன்னைக்கு மதியத்துக்குள்ள பொண்ணு வீட்ல முடிவை சொல்லிடுவாங்க.. அப்புறம் கல்யாணந்தான்...  "

மீண்டும் உதட்டில் லேசான புன்னகையை மட்டும் பூத்தான்.

பிடிக்காவிட்டாலும் எட்டு , பத்து  இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினான்.


வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த வண்டியை லேசாக துடைத்து விட்டு, இரு கண்ணாடிகளில் தலையை கோதிவிட்டு, தாடியை தடவி சரி செய்துவிட்டு கிளம்பினான். ஆளில்லா ஓ .எம்.ஆர்  சாலையில்,  யமஹா R15-ஐ  காற்றில் பறக்க விட்டான்.

அலுவலகத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் சரியாய் செய்து முடித்து மேலிடத்துக்கு அனுப்பி வைத்தான். என்றும் இல்லாத அதிசயமாய், பக்கத்து சீட்டில் உள்ள கேரள பேரழகி மோனா-வின் சிரிப்பும், பார்வையும்  இன்று அவன் மேல் விழுந்தது. ஊரிலிருந்து வந்த தின்பண்டங்களை அவனுக்கு கொடுத்தாள். அஜயின் மனம் ஆனந்த பெருக்கில் ஊறி திளைத்தது.

அலுவலகத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனிடமும், பள்ளிக்கூட  நண்பன் ஒருவனிடமும்  மட்டும் போன் செய்து கல்யாண விஷயத்தை சொன்னான். தற்காலிக விடுப்பு, சலுகை விடுப்பு எத்தனை நாட்கள் இருக்கிறது என்று சரி பார்த்து கொண்டான். அலுவலகத்தில் அவன் உத்தியோக பதவிக்கு எவ்வளவு பணம் கடனாய் கிடைக்கும் என்று மனிதவள மேலாளரை கேட்டு தெரிந்து கொண்டான். தேனிலவு சுற்றுலா செல்ல, செலவு எவ்வளவு  ஆகும் என்று வலைத் தளங்களில் தேடி பார்த்து கொண்டிருந்தான். மேலும் 'மேனகா'-வில் சமீபத்திய மாதிரி அட்டைகளைகளையும் வலைத்தளத்தில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான். நேரம் இனிமையாய் கடந்தது.

மதியத்துக்கு மேலாகியும் வீ ட்டிலிருந்து செய்தி எதுவும் வராததால், பொறுமையிழந்து  அவனே அம்மாவுக்கு போன் செய்தான்.

 "ஹலோ அம்மா ! "

 "ஹலோ !! சொல்லு அஜய் ...என்ன விஷயம் ? "

"ஒண்ணுமில்லை.. எ.....னக்கு கூரியர் ஏதாவது வந்துச்சா..?? "

"இல்லையே.."

"வரலையா???... ஹ்ம்ம்... அதான் கேட்டேன்...சரி... வைச்சுடுறேன்..."

"ஒரு நிமிஷம்ப்பா .. "

"ம்ம்.. என்னம்மா...??" - நாற்காலியில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"அது... பொண்ணு வீட்ல ஜாதகம் சரியில்லை சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிடாங்கப்பா.."

அவன் ஆசையில் இடி விழுந்தது போல இருந்தது...

"..........."

"அஜய்... லைன்-ல இருக்கியா??? "

"ம்... பரவாயில்லை...சரி விடும்மா....  அப்புறம் பேசுறேன்..."

அவன் கட்டிய மனக்கோட்டையேல்லாம் தூள்தூளாக உடைந்து போயிருந்தது. எரிச்சலும், சோகத்துடனும் இரவு ஒன்பது மணி வரை கடமைக்கு அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான். வண்டியின் பின் டயர் பஞ்சர். வண்டியை அரை கி.மீ  தள்ளி கொண்டு போய் பஞ்சர் போட்டுவிட்டு வீட்டுக்கு போனான். கடைசியாக வீடு வந்து சேரும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

"என்னப்பா, இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு ??  "

"கொஞ்சம் வேலை அதிகம்..."

 "சரி.. கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு .."

"இல்ல.. வயிறு சரியில்ல....சாப்பாடு வேண்டாம்... " என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான். வெளியில் பெற்றோர்கள் இருவரும் பேசுவது இவனுக்கு லேசாக கேட்டது.

" நமக்கு என்னங்க குறைச்சல்...? நம்ம என்ன நகை நட்டா கேட்டோம்?? சொந்த வீடிருக்கு...  ஒரே பையன்....நல்லா படிச்சிருக்கான்... நல்ல வேலை... மாசம் இருபத்தஞ்சாயிரம் சம்பாதிக்கிறான்...கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்ல... இன்னும் என்ன வேண்டி கிடக்கு இவள்களுக்கு....  சம்பளம் பத்தல.....ஃபாரின் போகல.... கார் இல்ல....கலர் கம்மின்னு 1008 கண்டிஷன்... ஒருத்தி கூட இவனை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்க மாட்டேன்கிறா.. ஹ்ம்ம்... எம் புள்ளைய பாத்தா பாவமா இருக்கு..."   என்றாள் அம்மா.

 "...ம்ச்ச்... ஆறு வருஷமா பொண்ணு பாக்குறோம்... முப்பத்தி இரண்டு வயாசாகியும், நம்ம சாதி சனத்தில இவனுக்கு ஒரு பொண்ணு  கூட அமையலையே...." என்றார் அப்பா வருத்ததுடன்.

இம்முறையும் தான் கண்ட கனவு கலைந்தது பற்றி எண்ணி கொண்டே துயில கண் மூடினான் அஜய்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

நச்சுன்னு சில ட்வீட்ஸ் !

வணக்கம்,

சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ,  நச்சுன்னு ஒரு பன்ச்சு லைன்.. இது தான் இப்போ ஃபேமஸ். இணையத்திலும், அலுவல நண்பர் ஜெகதீசனின் தொகுப்புகளிலிருந்தும், என்னை கவர்ந்த சில "நச் பன்ச்சுகளை" இங்கு பகிர்கிறேன்.


  • அவசரமாக ஒரு வெற்றி தேவை. ஒரு பத்து பேருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி சின்ன வெற்றியாக இருந்தாலும் பரவாயில்லை!
  • திங்கள் - ள்கங்தி - ங்கள்தி - திள்கங் - ங்திள்க - கள்திங் - திள்ங்த்...
    லிஸ்ட்டுல இதையும் சேத்துக்கனும்! #கருட புராணம்
  • காபி மெஷின்ல நிஜமாவே காபி தான் வருதா??  இல்ல காபி மெஷின கழுவுன தண்ணி வருதா??
  • இட்டு அவி....இட்டவி...இட்டலி...இட்லி..?!
  • மிகச்சிறிய 'மா'வட்டம் தோசைதான்!
  • உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...!
  • பையனா ? பொண்ணா ? எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா? சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் !
  • முன்னாடி மொபைல் இருந்தா ஆச்சரியப்பட்டாங்க.. அப்புறம் ஃபேஸ்புக்ல அக்கௌண்ட்டான்னு ஆச்சரியப்பட்டாங்க..
    இப்ப மொபைல் இல்லையான்னு ஆச்சரியப்படறாங்க.. இனிமே ஃபேஸ்புக்குல அக்கௌண்ட் இல்லையான்னு ஆச்சரியப்படுவாங்க...
    #முக்கோண வாழ்க்கை 
  • பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி வந்த மாதிரி, நாம ஃபேஸ்புக், ட்விட்டரை சுத்தி வந்தாலே உலகத்தைப் புரிஞ்சிக்கலாம் போல!
  • இக்கரைக்கு அக்கரை பச்சை இல்ல.. வெறும் கான்கிரீட்!
  • எத்தனை சிரமப்பட்டோம் என்பதை வெற்றி பெற்ற பின் சொன்னால் தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
  • அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்
  • எதிர் எதிரே கடந்து செல்லும் போது சிறு ஹாரனில் பரிமாறி கொள்ளும் டிரைவர்களின் நட்பும் அழகானதே. கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் வரம் தான்!
  • கல்ல தூக்குறது, காளைய அடக்குறது , இந்த வரிசைல தட்கல் டிக்கெட் போடுறதையும் சேத்திடலாம்.. #சர்வர் டௌன் 
  • தாத்தாவுக்கு செல்போன் தெரியாது, பேரனுக்கு சிட்டு குருவி தெரியாது. ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை விலையாய் பெறுவதுதான் காலத்தின் கடமை.
  • 'பொதிகை' மட்டுமே இருந்தப்போ ரிமோட்டுக்கு அவசியம் இல்ல, 'ரிமோட்' வந்த பிறகு பொதிகைக்கு வேலையே இல்ல...
  • பேருந்து காதல் கதைகளில், ஹீரோக்கள் ஃபுட்போர்டிலும், ஹீரோயின்கள் ஜன்னல் ஓரத்திலும் உருவாகிறார்கள்! 
  • பையனையோ, பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும்; அவனுங்களே பாட்டு, டான்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க..  
  • ஐஸ்கட்டில சட்டை இல்லாம கேப்டன படுக்க வச்சிருப்பானுக, அடுத்தது என்ன நெருப்பான்னு கேப்பாரு பாரு அப்போ துபாய் போனவன் தான் தாவுத்.#நரசிம்மா 
  • ஒரு காலத்துல 'அடை மழை' ன்னு இருந்தது, அப்புறம் 'அட மழை' ன்னு ஆச்சு, இப்போ 'அடடே மழை' ன்னு ஆகிடும் போல!!!
  • பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்.
  • காம்பளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட், எனர்ஜியான் குடிக்கலானா கூட குழந்தைகள் வளர்ந்துவிடும். ஆனா குழந்தைகள் குடிக்கலானா இந்த கம்பெனிகள் தான் வளர முடியாது...
  • பெங்களூர்ல நான் பாத்ததுலேயே இதான் பெஸ்ட் பிகருங்குற நினைப்பு, ஒவ்வொரு அரைமணிநேரத்துக்கும் மாறுவதுதான் பெங்களூரின் சுவாரஸ்யம். #புதுசாய் குடிபோன ஐ.டி. வாசி. 
  • நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது.
  • நனைந்து போகும் சிறுமியிடம், "குடைக்குள் வருகிறாயா?" என்றேன். "மழைக்குள் வருகிறீர்களா?", என்றாள்.
  • ஐபோன விட அதிக டெக்னாலஜி டேபிள் மேட்-ல தான்!! டொக்..டொக்..  ஐந்து வித உயரங்கள் , ஆறு வித ஏங்கிள்கள்...அப்பாப்பா....
  • இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..
  • சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது...
  • உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி #பள்ளி குழந்தைகள்
  • அடுக்கிவைத்த ஹோம்வொர்க்  நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை...  #பள்ளிக்கூடம்
  • ஆட்டோகாரங்களுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தூரம் கூட பக்கம் தான். #பிஸ்னஸ்
  • டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடைல பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..
  • இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'! #தமிழ் மொழி 
  • ஒரு மந்தையில் தொலைந்த இரண்டு ஆடுகள், நேருக்குநேர் சந்திக்கும் போது பேச முடியவில்லையே!! # மட்டன் பிரியாணி
  • வாழ்த்தலும், பாராட்டும் ஒரு வகை ENERGY TRANSFER தான் !
  • எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி.
    எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி.
    எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா
  • ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டுகொண்டிருந்தேன்.
  • சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்? #வலைபதிவர்கள் #நான்
  • சிக்னலில் தன் தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
  • ஒரு பஸ். ஒவ்வொரு சீட்டிலும் ஸ்டீரிங் இருக்கும்.  ஒவ்வொரு பாசஞ்சரும் தங்கள் விருப்பம் போல வண்டியை ஓட்டலாம். இப்படி இருந்தால் வண்டி எப்படி நல்லா ஓடும்???  #பார்லிமென்ட் 
  • "யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.
  • ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை #தமிழ்
  • குழந்தையா இருந்தப்ப தட்டி தட்டி தூங்கவெக்க ரொம்ப கஷ்டப்படறோம்...வளர்ந்தப்புறம் தட்டி தட்டி இவங்கள எழுப்பறதுக்குள்ள...உஸ்ஸ்...அப்பாடா....முடியல !!!#அம்மா-அப்பா 
  • அம்மா! நான் பிறந்தப்புறம் அது நான்தான்னு எப்படி கண்டுபிடிச்ச...?? #குட்டி பையன்  
  • (நேற்று) குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்:  என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! மழையிலே நம்மளை யாரோ போட்டோ எடுக்குறாங்கடா !!!

    (இன்று)  குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்: என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! கூகிள் எர்த், கூகிள் மேப்ஸ் -க்கு போட்டோ புடிக்கிறாங்க போல !!!
  • சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியானதாய் இருக்கும்!
  • குழந்தை (வெகுளித்தனமாக) : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்லுவியா ?
    அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்பவில்லை.
    குழந்தை : அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டுட்டு  போற???!!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இந்தியாவின் பணக்கார கடவுள்கள் !

வணக்கம்,

பணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல.

இந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை பற்றி இங்கு பார்க்க போகிறீர்கள். கோவில்களுக்கு வரும் நன்கொடை, சேமிப்பு, நகைகள்/ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து கோவில்களின் வளம் கணக்கிடப்படுகிறது. நான் இணையத்தில் தேடி பிடித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

பத்மநாபசாமி கோவில், திருவனந்தபுரம், கேரளா

16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில்.400/500 ஆண்டுகளாக திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ரசசியமாய் இருந்த இக்கோவிலின் பொக்கிஷம், கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ளது. கோவிலிலுள்ளே ஆறு பெட்டகத்தில், நான்கு அவ்வபோது திறக்கப்பட்டு, உபயோக படுத்தப்பட்டு வந்தது. திறக்க படாத இரண்டு பெட்டகத்தில் ஒன்று, உச்சநீதி மன்ற ஆணையின் கீழ் திறக்கப்பட்ட போது, அதில்  பல கோடி மதிப்புள்ள தங்க, வைர பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது.

மூன்றரை அடி நீளத்தில், ரத்தினம், வைடூரியம் பதிக்கப்பட்ட, தங்கத்தாலான மகாவிஷ்ணு சிலை, 18-ஆம் நூற்றாண்டு பொற்காசு குவியல்கள், ஒன்பது அடி நீளமும், இரண்டரை கிலோ அளவுள்ள தங்க அட்டிகை,  ஒரு டன் எடையுள்ள அரிசி ஆபரணங்கள், மூட்டை மூட்டையாய் தங்க/வைர பொருட்கள் என மொத்த பொக்கிஷத்தின் மதிப்பு ($22 பில்லியன்) ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் திறக்க படாமலுள்ள ஒரு பெட்டகத்தில், இதை விட மதிப்புள்ள பொக்கிஷம் இருப்பதாக சொல்லபடுகிறது. இந்த தங்க புதையலின் கண்டுபிடிப்பின் மூலம், பத்மநாபசாமி கோவில் உலகின் மிக பணக்கார கோவில்களின் வரிசையில் முதலில் இருக்கிறது.



திருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பதி, ஆந்திரா  

திருமலை திருக்கோவில் 10-ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது. நாள் ஒன்றுக்கு 60,000 முதல் லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் புனித ஸ்தலமாக  விளங்குகிறது.
    

பத்மநாபசாமி கோவிலுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாம் பணக்கார கடவுளாக திருப்பதி பாலாஜி திகழ்கிறார். விக்ரகங்களுக்கு அணிவிக்கும் தங்க, வைர,வைடூரிய ஆபரணங்களின் மதிப்பே ரூ. 2000 -5000 கோடிகள்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டு அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு 70-150 கிலோ அளவுள்ள அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது. கோவிலின் உள்ள விமானம் சொக்க தங்கத்தால் ஆனது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கோடி பணம்/ பொருள் உண்டியலில் காணிக்கையாகிறது . கோவிலின் மொத்த சொத்தும் கிட்டதட்ட ரூ. 33,000 கோடிக்கு சமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

சாய் பாபா திருக்கோவில் , சீ ரடி, மகாராஷ்டிரா


சாய்பாபா கோவில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம்  நூற்றாண்டின்ஆரம்பத்திலும் வாழ்ந்த மகானின் சமாதிதான் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்கள் வரை வருகின்றனர். விசேஷ நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள் என்று சொல்லபடுகிறது. தங்க /வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.32 கோடி இருக்கும். ஓர் ஆண்டுக்கு ரூ.160 கோடிகள் வரை வருமானம் வருகிறதாம். மொத்த மதிப்பு ரூ. 3000-5000 கோடிகள் என்று சொல்லபடுகிறது.

சித்தி விநாயகர் திருக்கோவில், மும்பை, மகாராஷ்டிரா  

 
லக்ஷ்மன் வித்து மற்றும் தேவ்பாய் படேல் ஆகியோரால் நவம்பர் 19, 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோவிலிலுள்ள மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. வருடத்திற்கு 12-15 கோடிகள் வரை வருமானம் வருகிறது. மேலும் 144 கோடிகள் வங்கி கணக்கில் இருப்பதாகவும்,  110 கிலோ எடையுள்ள தங்கம்/வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி என சொல்லபடுகிறது.

ஹர்மந்திர் பொற்கோவில், அமிர்தசரசு, பஞ்சாப்


சீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தடாகத்தின் நடுவே உள்ள இந்த பொற்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. கோவிலுள்ளே உள்ள  'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலையுயாரந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. மொத்த மதிப்பு ரூ. 1000 கோடிகளுக்கு மேல் என்று சொல்லபடுகிறது. 

வைஷ்ணவோ தேவி ஆலயம் , திரிகூட மலை, ஜம்மு & காஷ்மீர் 

108 திவதேசங்களில் ஒன்றான வைஷ்ணவோ தேவி கோவில் வட மாநிலங்களில் மிகவும் பிரச்சியத்தம். நாள் ஒன்றுக்கு 50,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். திருவிழா காலங்களில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வருவதாக சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய் வருமானமும், வருடத்திற்கு ரூ.500 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லபடுகிறது.
 

ஜகன்நாதர் திருக்கோவில், பூரி, ஒடிசா

10-ஆம் நூற்றாண்டில், அனங்க பீம தேவா என்னும் ஒரிய அரசனால் சிவ பெருமானுக்கு கட்டப்பட்டது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்ச கணக்கானோர் வந்து செல்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் மனைகள் மட்டுமே 57,000 ஏக்கர்கள் இருக்கிறதாம். இதன் மூலம் கோவிலுக்கு ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஆண்டுக்கு வருமானம் வருகிறது. நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி வரை வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.


குருவாயூரப்பன் ஸ்ரீ  கிருஷ்ணா திருக்கோவில் , குருவாயூர், கேரளா

குருவாயூரப்பன் கோவில் கி.மு.3000 ஆண்டில் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. நாள் ஒன்றுக்கு 50,000 - 1,00,000 பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான 600 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கி கணக்கில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் 500 கிலோ தங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. சேமிப்பு கணக்கில் 600 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், ஆண்டுக்கு 200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது. கோவிலின் மொத்த மதிப்பு  ரூ. 3000 கோடிகள் இருக்கும் என சொல்கின்றனர்.


 ஐயப்பன் திருக்கோவில், சபரிமலை, கேரளா 

17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் தென்னிந்தியாவில் மிக பிரபலம். 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கியில் சேமித்து வைக்கபடுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது.


மேலும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காஷ்மீர் அமர்நாத் கோவில் என இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடையும், வருடாந்திர சேமிப்பும் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.


இந்தியாவின் பணக்கார கோவில்கள் / கடவுள்கள் என்று இணையத்தில் தேடி பார்த்ததில், இந்த சில (இந்து) கோவில்கள் மட்டுமே கிடைத்தது. ஏனோ கிறுஸ்துவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் தேடலில் இடம் பெறவில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இது போன்ற கணக்கிலடங்கா சொத்துக்கள் பல உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.  

பாரத ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி, இந்தியாவில் கோவில்களுக்கு சொந்தமான தங்கதின் சேமிப்பு அளவு மட்டும் 30,000 டன்! இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், கோபுரங்கள், கலசங்கள், மேற்கூரைகள் என பெரும்பாலும், சொக்கத்தங்கத்தால் ஆனவை. கடவுள் சிலைகளுக்கு போடப்படும் நகைகளும், பட்டு பீதாம்பரமும், நவரத்தினங்களால் பதிக்கப்பட்டவை.  

இவையெல்லாம் யாருக்காக? டன் டன்னாக தங்கமும், கோடி கோடியாக பணமும் யாருக்காக சேர்த்து வைக்கிறார்கள் என புரியவில்லை. கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு உதவுகின்றனர் அல்லது பணத்தை செலவு செய்கின்றனர் என்றே வைத்து கொண்டாலும், மீதம் உள்ள பல ஆயிரம் கோடிகள் எல்லாம் கடவுளின் பெயரில் 'கோவில் சொத்து ' என்றும் பொக்கிஷம் என்றும் சேமித்துதான் வைக்கப்படுகிறது.

இந்த கோவில் சொத்துகளெல்லாம், சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் போலதான். ஒரே ஒரு வித்தியாசம். சுவிஸ் வங்கிகளில் சேர்க்கப்பட்டதுக்கு கணக்கு கிடையாது; இதற்கு உண்டு. இரண்டும் நம் நாட்டுக்கு செலவு செய்ய வேண்டியவை தான். ஆனால் செலவு செய்ய முடியாது!

இந்த பணத்தை/ பொக்கிஷங்களை நல்வழியில் நாட்டு மக்களுக்கும் / சமூக வளர்ச்சிக்கும் உபயோகபடுத்தினால் நாடு வளம் பெரும். நம்மூர் அரசியல்வாதிகள் நல்லதொரு திட்டம் தீட்டி, இந்த பொக்கிஷங்களை உபயோகப்படுத்தினாலே போதும், பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள பற்றாகுறைகளெல்லாம் இதன் மூலம் பறந்து விடும். இவையெல்லாம் எப்போது நம் அரசுக்கும், கோவில் தேவஸ்தானங்களுக்கும் உணர்ந்து செயல்படுமோ, அன்று தான் நம் பாரதத்தின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்