ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஃபேஸ்புக் அபத்தங்கள் !

வணக்கம், 

நம்மை சிறு வயது முதல், நல்ல விஷயங்களை, சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் மனதார பகிர்கிரோமோ இல்லையோ, சமூக வலைதளங்களில் தான் நிறையவே பகிர்கிறோம்.

சமூக வலைதளங்கள் (ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ) எல்லாமே ஒரு பொழுது போக்குக்காகவும், நமக்கு தெரிந்ததை பகிரவும் தான் உபயோகப்படுத்தபடுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கால்வாசி செய்திகள், போலியான அல்லது தேவையில்லாத அபத்த செய்திகளாக தான் இருக்கிறது.

சில ஆர்வகோளாறு மக்கள், தங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்-ல் அவர்களுக்கு என்ன போஸ்ட் வந்தாலும் அதை அப்படியே forward செய்து விடுகிறார்கள். அது உண்மையா ? பொய்யா? என்று விசாரிக்க வேண்டாம். சரி, யோசிக்கவாவது வேண்டாம். நல்லது செய்கிறேன் பேர்வழி என கண்டதை பகிர்கிறார்கள். ஏற்கனவே பதிவர் ராம்குமார் இதை பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதி விட்டார். நானும் பேஸ்புக்கில் பார்த்து வெறுப்பான சிலவற்றை பற்றி இங்கே உங்களுக்கு பகிர்கிறேன்.

1.)  ஏழு நிமிடத்தில் லைக்/ ஷேர் செய்தால் நல்லது நடக்கும்.

இது அடிக்கடி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக்  பதிவு. மத வேறுபாடில்லாமல் விநாயகர், சாய்பாபா, திருப்பதி பாலாஜி, ஏசு கிறிஸ்து, மேரி மாதா, நபிகள் நாயகம் என பலரும் பகிர்ந்து பக்தியை வெளிப்படுத்துவர். ஃபேஸ்புக்கில் லைக் செய்து ஷேர் செய்தால், எப்படி கடவுள் அருள் பாலிப்பார்? எப்படி நமக்கு நல்லது நடக்கும்? மதம்/கடவுள் என எல்லாமே நம் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்றாலும், இது போன்ற மூட பழக்கத்திற்கு துணை போக யார் சொல்லி கொடுத்தது? இப்பதிவையும் ஆயிரம் முட்டாள்கள் லைக் செய்வார்கள், நூற்று கணக்காணோர் ஷேர் செய்திருப்பார்கள்.


2.)  லைக் / ஷேர் செய்தால் பணம் நன்கொடையாக கிடைக்கும்.

சின்ன பையனுக்கு அல்லது பொண்ணுக்கு உடல் நலமில்லை, தாய் தந்தையருக்கு உயிர்கொல்லி நோய். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் -அப்பும் கலந்து பேசி, ஒரு லைக், ஷேருக்கு 50 பைசா தருவதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே இதை ஷேர் செய்து லைக் செய்யுங்கள் என்று மன்றாடி பதிவை போடுவார்கள். எந்த ஒரு காலத்திலும், இது போன்ற செயல்களுக்கு எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியோ அல்லது தொண்டு நிறுவனமோ பணம் நன்கொடையாக  தருவதில்லை,         

3.) குழந்தையை காணவில்லை-கண்டுபிடிக்க உதவுங்கள் !

குழந்தையை காணவில்லை- கண்டுபிடிக்க உதவுங்கள். பெயர்: ரஹீம். வயது:8. ஊர்: பெங்களூரு, மசூதி தெரு, தகப்பனார் பெயர்: அப்துல்லா. இச்சிறுவன் சென்னை சென்ட்ரல் C 2 காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கிறான். தயவு செய்து அதிக ஷேர் செய்து அவன் தாய் தந்தையரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுங்கள்.  இது போன்ற அபத்தமான  பதிவை பலரும் பார்த்திருக்ககூடும். சிறுவனே காவல் நிலையத்தில் தான் இருக்கிறான். அவர்களே 15 நிமிடத்தில் பெங்களூரு போலீசிடம் பேசி அனுப்பி வைத்து விடுவார்கள். அதை ஏன் நாம் ஷேர் செய்ய வேண்டும்? அதாவது அவர்கள் கூற்று படி ஐநூறு/ஆயிரம் பேர் ஷேர் செய்வதன் மூலம், ஃபேஸ்புக் வழியாக அப்பதிவு அச்சிறுவனின் தாய் தந்தையரிடம் போய் சேரலாம் என்று எண்ணுகின்றனர். #வாட் எ டிசைன்

4.) ஷேர் செய்து அரிய பரிசை பெறுங்கள்.

பெரும்பாலும் பெரிய வணிக நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை கொடுப்பதில்லை. சீல் சரியாக வைக்கபடாத 200 ஐ-பேட் களை, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு இலவசமாக தருகிறது ஆப்பிள் நிறுவனம் என்று புரளி பரப்புகின்றனர். நிஜத்தில் அப்படி சீல் வைக்க படாத பெட்டிகளுக்கு மீண்டும் சீல் வைத்து மார்கெட்டுக்கு அனுப்பு வைத்து விடுவார்களே தவிர, இப்படி இலவச சலுகைகளை தர மாட்டார்கள்.

5.) UNESCO விருதை வென்ற "ஜன ஜன மன .."

நம் தேசிய கீதமான "ஜன ஜன மன" UNESCO வின்  உலகில் சிறந்த தேசிய கீதம்  விருதை பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதனால் பெருமை படுவோம் என்று ஷேர் செய்திருப்பார்கள். நாமும் நம் நாட்டு பற்றை விட்டுகொடுக்காமல் லைக் போட்டு போயிருப்போம் (நானும் பண்ணி தொலைச்சேன்). ஆனால் அதுவும் பெரும் பொய்யே! நாங்கள் எந்த ஒரு விருதையும் யாருக்கும் அறிவிக்கவில்லை என்று சொல்கிறது UNESCO.


6.) பெண்களே உஷார் - எச்சரிக்கை !

சில பெண்கள் நலம் விரும்பிகள், பெண்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்று கண்டதையும் ஷேர் செய்வார்கள். உங்கள் பேஸ்புக் ப்ரோபைல் போட்டோ சில சமூக காமுகர்களால் காப்பி செய்யப்பட்டு அதை தவறான இணையதளங்களிலும், போலி பேஸ்புக் அக்கௌன்ட்களிலும் உபயோகப்படுத்துகின்றனர். உஷார் ! ஆகவே உங்கள் படங்களை யாரும் சமூக இணைய தளங்களில் போடாதீர்கள் என்று எச்சரிக்கை
செய்து மிரட்டுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இணையத்தில் ஒன்றிரண்டு நடந்திருப்பதை மறுக்க முடியாது என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன். பெண்களை உன் பேஸ்புக் பக்கத்தில்/ டைம் லைனில் கண்டவர்களின் friends request-ஐ ஏற்று கொள்ள கூடாது; தாங்கள் பகிர்வதை இன்னார் மட்டுமே பார்க்க வேண்டும் என்று settings-ஐ  மாற்றி கொள்ள வேண்டும என்று சொல்வதை  விட்டுவிட்டு அவர்கள் சுதந்திரத்திற்கு இடையில் நிற்பது அபத்தமே.

7.) மகாத்மாவின் நடவடிக்கை

இது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு தேசபிதாவை அந்த நாட்டினரே அவமதிப்பது மகா கேவலம். மகாத்மா காந்தி எப்பொதும் பெண்களுடன்தான் இருப்பார். அதுவும் சிறு வயது பெண்களுடன். உதவிக்கு ஆண்களை வைத்து கொள்ளாமல்; சிறு பெண்களை வைத்து கொண்டு கூத்தடித்தார் என்று புகைப்படத்துடன் போடுவர்கள். இதை எந்த மூடன் ஆரம்பித்தான் என்று தெரியாவிட்டாலும், இது போன்ற ஆதாரமில்லா செய்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பி கொண்டு தான் இருக்கிறது.

8.) டூத் பேஸ்டில் உள்ள கலர் சதுர குறியீடு

நான் சொல்ல வேண்டாம். படத்தை பார்த்தாலே உங்களுக்கே புரிந்திருக்கும். டூத் பேஸ்ட் ட்யுபில்  உள்ள கலர் சதுர குறியீடு அதன் செயல் கலவை  தன்மையை குறிக்கும் என்று பரப்பினார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அது வெறும் கம்பெனியின் பேக்கிங் வசதிக்காக வைக்கப்பட்ட சீல் என்று விளக்கம் வந்துள்ளது.


9.) ஷாப்பிங் மாலில் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா

ஷாப்பிங் மாலில் பெண்கள் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை அவர்கள் இணையதளங்களில் விற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பினார்கள். மேலும் அந்த கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால், நீங்கள் நிற்பது மறுபக்கத்தில் தெரியும் என்றும் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்ளே நீங்கள் நிற்கும் போது உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து போகவில்லை என்றால், அங்கு ஓர் ரகசிய காமிரா உள்ளது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்... உண்மையில் காமிரா இருந்தால், கால் போகாது என்பது ஒரு அறிவியல் பூர்வமான பொய்யான தகவல். மேலும் இரு பக்க கண்ணாடியை கண்டுபிடிக்க உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து சோதிக்க சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு கேவலமான பொய்யே !


10.) வாட்ஸ்-அப் ஃபார்வோர்ட்கள் -

சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி, கூடவே ஒரு ஆடியோ பைலையும் சேர்த்து பரப்பியுள்ளனர். அதில் அந்த பெண் ஒரு ஜெகஜால திருடி என்றும், ஆண்கள் இல்லாத நேரத்தில், வீடு வீடாக சென்று கேஸ் கனெக்ஷன் சரி பார்க்க வந்துள்ளதாக சொல்லி நகை மற்றும் பணத்தை திருடி விடுவாள், உஷாராக இருக்கவும் மக்களே என்று ஒரு மேதாவி பேசியுள்ளார். அந்த பெண்ணின் போட்டாவில்  அழகாக ஐ.டி. கார்டு டேக் போட்டு கொண்டு சோபாவில் உட்கார்ந்து போஸ் கொடுக்க பட்டிருக்கும். திருடி என்றால் இப்படியா போஸ் கொடுத்து போயிருப்பாள். அதை கூட யோசிக்காமல், பல ஆர்வ கோளாறுகள் ஷேர்/ forward  செய்துவிட்டனர். இதை ஒரு தினசரி நாளிதழ், உண்மையா? பொய்யா? என்று கூட விசாரிக்காமல் தங்கள் பத்திரிகையில் போட்டு விட்டனர். பின்னர் அது பொய் என்று ஒரிரு வாரம் கழித்து தான் தெரிந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு forward மெசேஜ். சென்னையின் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் மாரியா, பெண்களின் பாதுகாப்புகாக ஒரு புது திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது  பெண்கள் டாக்ஸி/ஆட்டோ ஏறும் முன் அந்த வண்டியின் என்னை 9969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அதை அவர்கள் ஜி.பி.எஸ் மூலம் டிராக் செய்து கொள்வார்களாம். உங்கள் அக்கா/தங்கை/நண்பிகளுக்காக ஷேர் செய்யுங்கள் என்று வந்தது. அடப்பாவிகளா !!! ராஜேஷ் மாரியா மும்பையின் போலீஸ் கமிஷனர். இந்த திட்டமும் மும்பையில்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இப்போது சென்னையின் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிலர் பகிர்கின்றனர்.



ஏ.டி.எம்-ல் பின்-நம்பரை தலைகீழாய் போடுவது, டெலிகிராம் ஆப் ஓர் இந்திய தயாரிப்பு நிறுவனம், ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்,  இவை எல்லாம் போலியான செய்திகளே! இன்னும் இது போன்ற அபத்தங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. கூகுளில் சென்று social media hoax என்று தேடி பாருங்கள். இன்னும் பல கதைகளை காணலாம். நான் இங்கே பகிர்வதும்  இணையத்தில் தேடி படித்தது தான். இணையத்திலும், சமூக வலைமனைகளிலும் பகிரப்படுவது பெரும்பாலும் போலியான அல்லது அபத்தமான செய்தி பதிவுகளே ! இதனால் பெரும் பாதிப்புகள் வராது என்று வைத்து கொண்டாலும், முடிந்த வரை சரியான தகவல்களை பகிருவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நன்றி !!!

-பி .விமல் ராஜ்