வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பெரியாரும் பார்ப்பனரும் !

வணக்கம்,

பெரியார் என்று சொல்லும் போதே பலர் மனதில் தோன்றுவது கடவுள் மறுப்பு கொள்கையும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் தான். ஆனால் அவர் செய்த பல சமூக மாற்றங்களை நாம் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் பெரியார் அரசியல் கூட்ட பேனரில் மட்டுமே தேவைப்படுகிறார். அவ்வபோது அவரது கொள்கைகளை சிலர் பேச்சளவில் மட்டும் உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

பெரியார் தோற்றுவித்தது கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்ல. தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் சுதந்திரம், சாதி வேற்றுமை ஒழிப்பு, சுயமரியாதை கொள்கை என பல சமூக தொண்றாற்றியுள்ளார். 1930-ல் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்து வந்தது. மேல் சாதியினர் என்று சொல்லப்படும் பார்ப்பன (ஐயர்/ஐயங்கார்) சமூகத்தினருக்கு மட்டுமே கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளிக்கபட்டன. சமூகத்தில் அவர்களுக்கு மட்டுமே மரியாதையும், கௌரவமும் தரப்பட்டது. கீழ் சாதியினர் என்று சொல்லப்படும் மக்களுக்கு எந்தவித முன்னுரிமையோ, வாய்போ தரபடவில்லை. இதை கண்டு பொங்கிய பெரியார், ஐயர்/ ஐயங்கார் இல்லாத தலீத் மற்றும் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கவும், சாதி வேற்றுமை ஒழியவும் போராடினார்.

இதன் காரணமாக பெரியார் பார்ப்பன சமூகத்தினரை எதிர்த்து குரல் கொடுக்கலானார். ஒவ்வொரு பொதுகூட்ட மேடையிலும் பார்ப்பனர்களை திட்டி தீர்த்தார். சுதந்திரத்திற்கு பிறகு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் ஏற்றப்பட்டது. இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கே முதலுரிமை வழங்கபடுகிறது.


ஆனால் இன்றும் மேடைக்கு மேடை தி.க. இயக்கத்தை சேர்ந்தவர்கள், பார்ப்பன சமூகத்தை கிழி கிழியென கிழிக்கிறார்கள். அதன் காரணம், பார்ப்பனர்கள் தான் சாதியை /மூட நம்பிக்கையை வளர்க்கிறார்களாம். அவர்களை ஒழித்து விட்டால், நாடு சுத்தமாகி வீடு விட்டு விளங்கிவிடுமாம்.

நீங்கள் ஏதாவது ஒரு சீர்திருத்த திருமணத்திற்கு சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும். நான் பார்த்த திருமணங்களில் நடந்தது இதுதான். திருமண விழாவிற்கு முன் மேடையில், தலைமை தாங்க வந்திருக்கும் ஒரு திராவிட கழக பிரமுகர், பிராமணர்களை பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ, அவ்வளவு தூரம் பேசுகிறார் தூற்றுகிறார். பின்னர் கடவுள் இல்லை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவன்றை பேசிவிட்டு, திருக்குறள் படித்து முடித்து , பிறகு தான் மணமக்களுக்கு நல்வார்த்தை கூறிவிட்டு (தாலியில்லாமல்) மாலை மாற்றி கொள்ள சொல்கிறார். கூட்டத்தில் யாராவது ஆத்திகரோ, பிராமணரோ இருந்தால் இதயம் எரிமலை போல கொப்பளித்து கொண்டிருக்கும். சீர்திருத்த திருமணம் என்றால் மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு "நல்ல இருங்கப்பா " என்று கூறி "மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! " என்று வாழ்த்திவிட்டு போகவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பிராமணரை பற்றி இழுத்து, ஏன் கேவலபடுத்த வேண்டும். எனக்கு புரியவில்லை. நான் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றாலும், என்னால் அதை ஒப்பு கொள்ள முடியவில்லை.

மூட நம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை போன்றவற்றிக்காக எதிராக குரல் கொடுக்கும் தி.க விற்க்காக நானும் குடைபிடிபவன் தான்.  பெரியார் பிராமணர்களை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களும் ஏசுவது என்ன நியாயம் என தெரியவில்லை.

"கீழ் சாதி என்று சொல்லப்படும் பிற்படுத்தபட்டோர்/தலீத் இன மக்கள் தான் இப்போது கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூக எல்லா உரிமைகளையும் முதன்மையாக பெற்று முன்னேறி வருகின்றனரே! இன்னுமும் ஏன் பார்ப்பனரை எதிர்கிறீர்கள்? " என ஓர் தீவிர தி.க. நண்பரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில். "இப்போது அவர்கள் பெற்றுருப்பது பொருளாதார முன்னேற்றம் தான்; ஆனால் இன்னும் அவர்கள் சமூக முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். பிராமணர்கள் இருக்கும் வரை அது நடக்காது. சமூக அந்தஸ்து கிடைக்கும் வரை இப்படி தான் எதிர்ப்பு இருக்கும்" என்று கூறினார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்