செவ்வாய், 12 மே, 2015

அப்புறம் எதை தான் தின்றது ?

வணக்கம்,

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலரும் மருந்தையே உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், நாம் தினமும் உண்ணும் உணவே !

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்/வார இதழ்களிலும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று பயமுறுத்துகின்றனர். அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா???

*) நாம் தினமும் உண்ணும் அரிசியில் அதிக விளைச்சலுக்காக பூச்சி மருந்து கலந்த ரசாயன உரம் போடப்படுகிறதாம். அதை நாம் சாப்பிடும் போது, கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது என்று கூறுகிறார்கள் வேளாண்  விஞ்ஞானிகள்.

*) நம் சாப்பாட்டில் சேர்க்கும் காய்கறிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. காய்கறிகள் பெரியதாக வளர ஆக்சிடாக்சின் (Oxytoxin) என்ற ஒரு வகையான வேதிபொருள் தெளிக்கபடுகிறது. விளைச்சலுக்கு பிறகு, சந்தையில் விற்கும் வரை ப்ரெஷான காய்கறியாக இருப்பதற்காகவும்,  தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் சுவை கூடவும், சீக்கிரம் பழுக்கவும் எத்திரோசின்- பி (Ethyrosin -B) என்ற ரசாயன வேதிபொருள் ஊசி மூலம் ஏற்றபடுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் பிரஷ்ஷாக இருக்க மெழுகு தடவி வைக்கப்படுகிறது. பெங்களூர் பி.டி. கத்திரிக்காய் பற்றி நீங்களே கேள்விபட்டிருப்பீர்கள். அதுவும் பூச்சி மருந்து கலந்த காய்கறிதான். இவை தான் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்கெட்களில் பெரும்பாலும் அடுக்கி வைக்கப்படுகிறது. இதை உண்பதாலும் கேன்சர், வயிற்று உபாதைகள் வரும் என்று சொல்கின்றனர்.


*) வடக்கில் பெரும்பாலும் உண்ணக்கூடிய கோதுமை வகை உணவிலும் வேதி பொருட்கள் அதிகமாக கலக்கப்படுகிறது. கோதுமையிலுள்ள ஆல்டிரின் (Aldrin) என்ற நச்சு வேதிபொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 21,890 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது. மேலும் இவற்றை உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

*) சரி, மேற்கத்திய உணவு வகைகளையாவது உண்ணலாம் என்று பார்த்தால், அது இதை விட மோசமாக இருக்கிறது. நாம் விருப்பி உண்ணும் பீட்சாவிலும், பர்கரிலும் E-361 என்னும்  கொழுப்பு சத்து சேர்க்கபடுகிறதாம். பீட்சாவின் அட்டை டப்பியில் polyfluoroalkyl/ perfluoroalkyl-  PFC என்னும் நச்சு பொருள் கொண்டு செய்யபடுவதால், அதனாலும், உடற்கேடு வர வாய்ப்புள்ளது. குழந்தைகள் அதிகம் உண்ணும் நூடுல்ஸ் வகையான உணவுகளில், சுவைக்காக மெழுகு சேர்க்கப்படுகிறது. அதை தின்பதால் அல்சர், கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது. நாம் சுவைத்து உண்ணும் KFC சிக்கனில், பல நச்சு பொருட்கள் கலக்கபடுவதால், குழந்தைகளுக்கு முளை காய்ச்சால் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவ நிறுவனம் கூறியுள்ளது.


*) குழந்தைகள் அடிக்கடி கொறிக்கும் சாக்லேட், பிஸ்கட்கள், சிப்ஸ் வகையறாக்களில் ஒரு வகையான போதை தரும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதால், அதனாலும், மன நோய் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் வேதி/நச்சு பொருட்கள் இருந்தால் நாம் எதை தான் தின்பது என்று தெரியவில்லை. இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் கொடுப்பதில்லை என்பதாலும், மக்கள் பல தர பட்ட உணவுகளை உண்கிறார்கள் என்பதாலும் இவ்வாறு கலப்படம் செய்யபடுகிறது. இது கிட்ட தட்ட விஷத்தை நாமே உட்கொள்வது போல தான் இருக்கிறது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வேறு வழியில்லை...!

ப.கந்தசாமி சொன்னது…

பழைய பேப்பர்தான் எந்த கெடுதலும் விளைவிக்காது என்று கேள்விப்பட்டேன்.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கந்தசாமி ஐயா !
பழைய பேப்பரா? பழைய சாதமா???
எதை சொல்கிறீர்கள்???