சனி, 27 ஜூன், 2015

இன்று நேற்று நாளை - விமர்சனம்

வணக்கம்,

தமிழ் படங்களில் சயின்ஸ் பிக்க்ஷன் ஒரு புதுக் கதைக்களம். டைம் மெஷின் என்று சொல்லப்படும் காலயந்திரம் ரொம்ப புதுசுதான். படத்தின் முதல் போஸ்டரும், ட்ரைலரும் பார்த்த போது, "அடடே ! இந்தப் படம் நல்லா இருக்கும் போலருக்கே!" என்று அனைவரையும் யோசிக்க வைத்தது. குருட்டாம் போக்கில் சினியுலகம் வைத்த ஒரு போட்டியில் கலந்து கொண்ட நான், ஒரு இலவச டிக்கெட் கிடைக்க, எஸ்கேப்பில் பார்க்க தயாரானேன்.

இதற்கு முன்னால் பாலகிருஷ்ணா நடித்த அதித்யா 369 (அபூர்வ சக்தி 369) என்ற தெலுங்கு டப்பிங் படத்தில் டைம் மெஷின் பற்றிப் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் தென்னகத்தில் இந்தப் படம்தான். சில ஹாலிவுட் படங்களில் டைம் மெஷின் பற்றிப் படம் பார்த்துள்ளேன்.

கதை இதுதான். கி.பி. 2065-ல் கண்டுப்பிடிக்கபட்ட ஒரு டைம் மெஷின், சோதனையோட்டதிற்க்காக 50 வருடங்களுக்கு முன்னால், அதாவது நடப்பு ஆண்டுக்கு (2015) வருகிறது. அது இப்போதுள்ளவர்கள் கையில் கிடைத்தால் என்னனெனச் செய்வார்கள், என்ன செய்தார்கள் என்பதே கதை.


கதாநாயகனாக விஷ்ணு நடித்துள்ளார். படத்தில் தன் நடிப்பு பணியைச் செவ்வனே செய்துள்ளார். மியா ஜார்ஜ் நாயகியாம். பதுமையாக அவ்வபோது வந்து சென்றுள்ளார். படத்தின் பலம் கருணாகரன் தான். ஹீரோ கூடவே இருந்து படம் முழுவதிலும், டைம் மெஷினுடனும் பயணப்படுகிறார். படத்தில் காமெடி ஆங்காங்கே தூவபட்டுள்ளது. படம் முழுக்கக் காமெடி இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லன் கதாபாத்திரமாக வரும்வரும் சாய் ரவியும், விஞ்ஞானியும் மெக்கானிக்குமாக நடித்திருக்கும் டி.எம் .கார்த்திக்கும் ('நண்பன்' படப் புகழ் price tag ) கதையைக் கொஞ்சம் நகர்த்த உதவி செய்துள்ளார்கள். அதுவும் சரியாகச் செய்துள்ளார்கள். கௌரவப் பாத்திரமாக ஆர்யா விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

டைம் மெஷினை வைத்துக் கொண்டு ராஜாக்கள் வாழந்த காலம் போவார்கள், 100 வருடம் முன்னோக்கி போவார்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் ரசிகர்களின் மனஓட்டத்தை மாற்றி, தங்கள் வாழ்வில் நடந்தையே மாற்றி அமைக்கக் காலயந்திரத்தில் பயணிக்கிறார்கள். இரண்டு மணி நேரம் படத்தைப் போரடிக்காமல் காட்டியுள்ளனர். அதைவிட இறந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் சரியாக லிங்க் கொடுத்திருக்கார்கள். அதுவே படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். டைம் மெஷின் கிராபிக்ஸ் நன்றாகவே வந்திருகிறது. இன்னும் கொஞ்சம் சி.ஜியில் ஜிகினா வேலை காட்டியிருக்கலாம். பாடல் வரிகளிலும், இசையிலும் அவ்வளவாக ஹிப்-ஹாப் இல்லை.

அரைத்த மாவையே அரைக்கும் படங்களுக்கு மத்தியில், புதுசாய் ஒரு கதைக்கருவை நமக்கு அளித்த இயக்குனர் ரவிகுமாருக்கு எனது  பாராட்டுக்கள். ஆக மொத்தத்தில், கண்டிப்பாகத் திரையில் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இது.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 17 ஜூன், 2015

காப்பியடிக்கப்பட்ட கதை !

வணக்கம்,

தமிழ் திரையுலகில் பெரும் பிரச்சனையாக பேசப்படுவதில் ஒன்று, கதை திருட்டு. இதை பற்றி அடிக்கடி நாம் வலையுலகத்திலும், செய்திகளிலும் கேள்விப்பட்டு வருகிறோம். சமீபமாக மட்டுமல்ல, பல வருடங்களாக இந்த பிரச்சனை ஓயாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

படம் எடுக்கும் போதோ அல்லது முடியும் தருவாயிலோ, "இது என்னுடைய கதை", என்று சிலர் ஆர்பாட்டம் செய்து வெளிவரும் படத்தை தடுத்து நிறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள். சிலர் தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கவும், இந்த உத்தியை பயன்படுத்துகின்றனர் என்று சொல்லுகின்றனர்.  ஊடகங்களும், சமூக வலைதளங்களும், இவையெல்லாம் பெரும்பாலும் படத்தை ஓட்ட படக்குழுவினரின் விளம்பர உத்தியே என்று சாடுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படம் வெளிவந்து முதல் நாள் முதல் காட்சி முடிவதுக்குள்ளேயே, இப்படம் "சின்கியா மின்கியா " என்ற கொரிய படத்தின் தழுவல் அல்லது அப்பட்ட காப்பி என்று சொல்லி இயக்குனரின் முகச்சாயலை டர்ரென்று கிழித்து விடுகின்றனர் நமது வலை மன்னர்கள்.

சில படங்கள் வெளியிடுவதற்கு முன்பே, இது ஒரு ரீமேக் என்று சொல்லிவிடுவார்கள். மீதம் உள்ள படங்கள் பெரும்பாலும் மற்ற மொழி படங்களின் தழுவல் தான். படத்தின் முதல் போஸ்டர் லுக், ட்ரைலர் வெளியிட்ட சில மணி நேரங்களில் இது எந்த மொழி படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லிவிடுகின்றனர்.


ஒரு கதை காப்பியடிக்க படுவதுக்கும், தழுவலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாவலையோ அல்லது வேறு மொழி படத்தையோ அப்படியே காட்சிக்கு காட்சி அதிலிருந்து திருடி, திரைக்கதை மாறாமல் அப்படியே எடுப்பது தான் காப்பி. இதுவே மற்ற மொழி படங்களிருந்து ஒரு சில காட்சிகளையோ அல்லது கதையின் கருவை மட்டுமே ஒரு தூண்டுகோலாக வைத்து கொண்டு, ரசிகர்களுக்கு ஏற்றவாறு படம் கொடுப்பது தழுவல்.

ஒரிரு காட்சியை வேறு ஒரு மொழி படத்திலிருந்து சுடுவதினால், யாருக்கும் எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட போவதில்லை.  ஒரு கொரிய அல்லது ஆங்கில மொழி படத்திலிருந்து ஒரு வங்கி கொள்ளை காட்சியோ, சண்டை காட்சியோ எடுத்து  நம் தமிழ் படங்களில் சேர்க்கபடுவதினால், அந்த வேற்று மொழி பட தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வந்து சண்டை போட போவதும் இல்லை. நம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி, திரையில் விருந்து படைக்கும் போது ஏன் பலரும் இது காப்பியடிக்கபட்டது என்று சொல்கிறனர் என்று புரியவில்லை.

கஜினி, அவ்வை சண்முகி, அருணாச்சலம், வெற்றி விழா போன்ற படங்கள் ஆங்கில படங்களின் கதை கருவை மட்டுமே கொண்டு தமிழில் வெற்றி நடைபோட்டவை. ஆனால் இது போன்ற படங்களை  'காப்பியடிக்கபட்ட படங்கள் ' என்று சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.


கதையை அப்படியே வரிக்கு வரி காப்பியடித்து படத்தில் காட்டுவது தான் தவறு. இது போன்ற அறிவு (கதை) திருட்டுக்கள் தான் திரையுலகில் நடந்தேறி வருகிறது. இன்னொரு புறம் யோசிக்கும் போது, இது போன்ற காப்பியடிக்கப்படும் படங்களில், ஒரிஜினல் கதாசிரியர் பெயரை போட்டு நன்றி தெரிவித்து கொண்டால், அதில் பெரும் தவறு இருப்பதில்லை. ஆனால் அப்படி செய்ய யாரும் உடன்படுவதில்லை.

திரை செய்திகளை தரும் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் படம் வெளிவருவதற்குள், இந்த காட்சி இப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று போட்டோவுடன்  போட்டு காட்டி விடுவார்கள். மேலும் அந்த இயக்குநரை 'காப்பி மன்னன்' என்று திட்டியும் தீர்ப்பார்கள். இவர்களெல்லாம் ஒரிஜினல் கதையம்சம் கொண்ட படம் வந்தால், அதை வெள்ளி திரையில் மட்டுமே கண்டு ஓட வைப்பது போல, இது போன்ற தழுவல் திரைபடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சினிமா என்பது மக்கள் பார்த்து ரசிக்க மட்டுமே. ஒரிஜினல் கதையோ, காப்பியடிக்கப்பட்ட கதையோ எதுவாயினும் நம்மை இரண்டு மணி நேரம் ரசிக்க வைத்தாலே போதும். அதன் ரிஷி மூலம், நதி மூலம் ஆராய தேவையில்லை; அதற்கு அவசியமும் இல்லை என்பது என் கருத்து. உங்கள் எண்ணங்களை தாராளமாக பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 9 ஜூன், 2015

எங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...

வணக்கம்,

"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்துட்டாங்க. இப்பெல்லாம் ஆ..உ.. ன்னா எல்லாரும் சென்னையை பத்தி குறை சொல்ல கிளம்பிடுராங்க. வேற மாவட்டங்களிருந்து சென்னைக்கு வந்தவங்க பல பேரு, சென்னையிலே ஒண்ணும் இல்ல... எங்க ஊரு சொர்க்கம், அங்க அது இருக்கு, இது இருக்கு, புல்லுக்கட்டு, புண்ணாக்கு, வெளக்கமாறுன்னு, பிகிலேடுத்து ஊத ஆரம்பிச்சுடராங்க... கேக்கவே செம காண்டா இருக்கு.

எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.


தமிழ்நாட்டை பொறுத்தவரை பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர் என்ற நிலைமையில் தான் பலரும் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து படிப்பவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா ???

சென்னை வாழ்க்கை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, சென்னை வாழ்க்கை மெஷின் வாழ்க்கைன்னும் சொல்றாங்க. அடப்பாவிகளா! நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க? உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும்? ரொம்ப ஓவரா இருக்கே!

வெளியூர்களில் நல்ல வேலையாக  இருந்தாலும், கூலி வேலையாக இருந்தாலும், சென்னையில் கிடைப்பதை விட அங்கு ஊதியம் கம்மியாய்தான் கிடைக்கிறது. நல்ல படிப்பு, மருத்துவம், வேலை, கை நிறைய சம்பளம் என சகலமும் இங்கு உண்டு. அதுக்கு தானே எல்லாரும் பாடுபடுறோம்.

நம்ம நாட்ல எங்கிருந்தெல்லாமோ படிக்கவும், வேலை தேடியும் சென்னைக்கு வராங்க. வந்து படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இங்கயே செட்டில் ஆயிடுராங்க. அப்புறம் ஜனத்தொகை எப்படி அதிகமாகாமல் இருக்கும். இருபது வருஷத்திற்கு முன், 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மெட்ராசை, இப்போ 420 சதுர கி.மீ ஆக்கிடாங்க. இன்னும் 50 வருஷத்தில 1000 சதுர கி.மீ ஆனாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை. இப்போதைய சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 லட்சம்! அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் ? இவங்களே வருவாங்கலாம்; சென்னை ரொம்ப பேஜாருனு சொல்வாங்களாம். தோடா..யாருகிட்ட..

இங்க வந்து செட்டிலான மக்கள் எல்லோரும் டூ-வீலர், கார்ன்னு வாங்குறாங்க. அவங்களோட போக்குவரத்து எல்லாம் சேர்த்து இன்னும் சென்னையை தூசியும், புகையுமா மாறிடுச்சி. வெள்ளி, சனிகளில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் கூட்டத்தை பாருங்க. எவ்வளவு வண்டி, எவ்வளவு புகை.. அப்புறம் என் சென்னை போக்குவரத்து மிகுந்த, கலீஜான ஊராக மாறாது?


அப்புறம் விலைவாசி. கொஞ்சம் அதிகம் தான். ஒத்துகிறேன். அதுக்கு சென்னை என்ன செய்யும்? அரசு எல்லோருக்கும் ஒரே விலையை தான் நிர்ணயம் செய்கிறது. மற்ற மாவட்டங்களில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் 'சென்னை', 'சென்னைபட்டினமாக' இருந்த காலம் முதல் இங்கு பெரிதாக விவசாயம் செய்வதில்லை. காய்கறி/ பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து தான் விற்கபடுகிறது. அதனால் தான் இங்கு பண்டங்களின் விலை கொஞ்சம் அதிகம். வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். முக்கிய சாலையை விட்டு கொஞ்சம் தள்ளி வீடு பார்தீர்களேன்றால் குறைந்த வாடகையில் வீடு கிடைக்கும். சிட்டி சென்டரில் வீடு, பக்கத்திலேயே பள்ளி, கடைவீதி, பஸ் ஸ்டான்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்றால் வாடகை அதிகமாக தான் இருக்கும். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.

ரொம்ப வெயில், மழை-  ஹ்ம்ம்.. இதெல்லாம் சென்னையின் சீதோஷ்ண நிலை. அதையெல்லாம் யாராலும் மாத்தமுடியாது. வெயில் காலத்தில் வெயில் அடிப்பதும், மழை காலத்தில் மழை கொட்டுவதும், குளிர்காலத்தில் குளிருவதும் எல்லா ஊரிலும் நடப்பது தானே. இதையெல்லாம் ஒரு குறையாக சொல்லலாமா? ரொம்ப போங்கா இருக்கே!

உங்க ஊரில் என்னன்ன இருக்கிறதோ, அது எல்லாமே எங்க ஊரிலும் இருக்கிறது. என்ன இங்கே வயல்வெளி, சோலைகள் கிடையாது. எல்லாம் கான்கிரீட் மயம். கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னையின் மத்தியில் ஓடி கொண்டிருகிறது. மக்களின் அறியாமை, அரசின் மெத்தனத்தால் ஆறு சாக்ககடையாகி விட்டது. ஆனால் சென்னைக்கு தண்ணீர் தர ஏரிகளும், லாரிகளும் இருக்கிறது.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

சில நாட்களாக இணையத்தில் வலம் வரும், சென்னை பற்றிய ஒரு ஆடியோ செய்தி.  http://goo.gl/KE1MPh

இந்த பதிவின் மூலம் வெளியூர் மக்கள் யாரும் சென்னைக்கு வர கூடாது என்றோ, உங்களால் மட்டுமே சென்னை கெட்டுவிட்டது என்றோ சொல்லவில்லை. "மெட்ராஸ் ரொம்ப போர்பா.. சிம்ப்லி வேஸ்ட்! " ன்னு சொல்ற டூபாகூர் டகால்டிகளுக்கு தான் இது. சென்னை பலருக்கு வேலையும், நல்ல வாழ்க்கையும் கொடுத்து கொண்டிருக்கிறது. தேவையில்லாம சென்னையின் பெயரை கெடுக்காதிங்க. உங்க ஊரு உங்களுக்கு சொர்க்கம்னா, எங்க சென்னை எங்களுக்கு சொர்க்கம்தான். இங்கேயும் சில மனுச பசங்க இருக்கோம்ன்னு தயவு செஞ்சு தெரிஞ்சுகொங்கபா...


நன்றி !!!

-பி .விமல் ராஜ்