சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!