சனி, 31 டிசம்பர், 2016

2016-ல் நடந்தவை !

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வரப்போகும் 2017 ஆம் ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் ! இந்த வருடத்தில் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் 2016 முடிந்தேவிட்டது. என் வலைப்பூவில் கடந்த வருடத்தில் வெறும் 13 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணம். நேரமின்மையால் எழுதவில்லை என்று சொல்லிவிட முடியாது; நேரத்தை ஒதுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டாவது நிறைய, புதிய விஷயங்களை எழுத வேண்டும் என எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்!

events-in-2016

சென்ற 2016 வருடத்தில் நம் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்து இங்கு பகிர்கிறேன்.

ஜனவரி-
8 ஆம் தேதி - கடந்த மூன்று ஆண்டுகளாக விதித்த ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு நீக்கியது. ஆனால் PETA மற்றும் விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததை கொண்டு, மீண்டும் உச்சநீதி மன்றம் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

பிப்ரவரி-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா நடந்தது. 20 லட்சம் மக்கள் புனித நீராடினர்.

மார்ச்-
8 முதல் ஏப்ரல் 23 வரை ICC உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. மேற்கிந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

29 ஆம் தேதி - பின்னணி பாடகி பி.சுசிலா 17,695 பாடல்களை பாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

27 ஆம் தேதி- விசாரணை படத்துக்கு 'சிறந்த படம்', 'சிறந்த துணை நடிகர்', 'சிறந்த எடிட்டிங் ' உள்ளிட்ட மூன்று துறைகளில் தேசிய விருது வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் ரமணன் பதவி ஓய்வு பெற்றார்.

மே-
தேர்தலுக்கு இருநாள் முன்னர், 3 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 570 கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லாமல் சென்றதாக சொல்லப்பட்டது. மறுநாள் பாரத ஸ்டேட் வங்கி அது அவர்களுடைய பணம் என்று உரிமைகோரி வாங்கி சென்றனர். ஆனால் வங்கி பணமா? அரசியல்வாதிகளின் ஊழல் பணமா? என்ற மர்மம் இன்னும் தெரியவில்லை.

16 ஆம் தேதி -  தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது முடிந்தது. 232 தொகுதிகளில், மொத்தம் 74.26% வாக்குகள் பதிவாயின. கல்வியறிவு பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 85%  சதவிகிதமும், மெத்த படித்த மென்மக்கள் இருக்கும் சென்னையில் மிக குறைவான 55% வாக்குகளும் பதிவாகியிருந்தது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் (மட்டும்!) அதிகப்படியான பணம் பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

19 ஆம் தேதி - யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக 136 தொகுதிகளை வென்று, பெரும்பான்மையான வெற்றி பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுகவிற்கும் அழைப்பு போக, தளபதி ஸ்டாலினும் வருகை தந்து கடைசி வரை விழாவை பார்த்து, வாழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்.

ஜூன்-
பிரிட்டிஷ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது.

22 ஆம் தேதி- இஸ்ரோ PSLV-XL விண்கலத்தில் 20 செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

24 ஆம் தேதி- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், காலை 630க்கு இன்போசிஸில் பணிபுரியும் ஸ்வாதி என்ற 24 வயது பெண் மர்ம மனிதரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் இந்த பயங்கரம் நடந்ததால் மக்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ஜூலை -
1 ஆம் தேதி- சுவாதி கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும், மரணம் பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.

22 ஆம் தேதி- சென்னை தாம்பரம் IAF விமான நிலையத்திலிருந்து கிளம்பிய An-32 ரக விமானம் அந்தமான் செல்லும் வழியில் வங்க கடலை கடக்கும் போது தொலைந்து போனது. அதில் பயணம் செய்த 29 வீரர்களும் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மிக பெரிய தேடலுக்கு பின்னும் விமானமும், அதிலுள்ள ராணுவ வீரர்களும் என்ன ஆனார்கள் என இன்னும் தெரியவில்லை.

ஆகஸ்ட்-
3 ஆம் தேதி - GST (Goods and Services Tax) சட்டம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது.

5 ஆம் தேதி - பிரேசில் நாட்டிலுள்ள ரியோவில் 5 முதல் 21 வரை 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 11,544 வீரர்கள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 117 பேர் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. பி.வி.சிந்து பாட்மிட்டனில் வெள்ளி பதக்கத்தையும், சஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மேலும் பாரா ஒலிம்பிக் என்று சொல்லப்படும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ் நாட்டின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா தங்க பதக்கத்தை வென்றுள்ளனர்.

வழக்கம்போல இம்முறையும் போட்டியாளர்களுக்கு போதிய வசதி கொடுக்காதது, வெற்றி பெற்ற பின் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் பரிசும் தராதது போன்ற சர்ச்சைகளும் இருந்தது.

10 ஆம் தேதி- சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் பாங்கின் பணம் 5.75 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் கூரையை பெயர்த்து வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்காக அர்ப்பணிக்கபட்டது.

அவ்வப்போது தமிழக கர்நாடகாவிற்கிடையே வரும் காவிரி நீர்பங்கிடுதல்
பிரச்சனை இந்த ஆண்டும் தலைவிரித்து ஆடியது. இரு பக்கமும் எதிர்ப்பு கொஞ்சம் பலமாக இருந்தது. கர்நாடகாவில் 40 கே.பி.என். சொகுசு பஸ்கள் எரிப்பு, தமிழர்களை தாக்குதல், கடையை உடைத்தல், அப்பாவிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இரு மாநிலத்திலும் எதிர்ப்பும், வேலைநிறுத்தமும் நடந்தது. தமிழகத்தில் வன்முறை சம்பவம் ஏதும் நடக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

22 ஆம் தேதி- உலக நாயகன் கமலஹாசனுக்கு 'செவாலியே' பட்டம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- தமிழக ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.

செப்டம்பர்-
1 ஆம் தேதி - ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கினார்  முகேஷ் அம்பானி. இலவச ஜியோ சிம், அதில் அளவில்லாத போன் கால்கள், இன்டர்நெட் என சலுகைகளை வாரி வழங்கியது. பொது மக்கள் பலரும் ஜியோ சிம்முக்காக நெடும் வரிசையில் நின்று வாங்கினார்கள்.

2 ஆம் தேதி-  அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் 15 கோடி மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் இது ஒரு மாபெரும் வேலை நிறுத்தமாக பேசப்பட்டது.

4 ஆம் தேதி- ரிசர்வ் பாங்க் கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உர்ஜித் படேல் புதிய கவர்னராக பதியேற்றார்.

18 ஆம் தேதி- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் சிறையில் சுவிட்ச்-போர்ட் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலையுடன் சுவாதி கொலை மரணமும் மறைந்து போனது.

22 ஆம் தேதி- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

29 ஆம் தேதி- முதன் முதலாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர் (Surgical strike India). வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது.

அக்டோபர்-
5 ஆம் தேதி - ஐ.நாவின் பொது செயலாளர் பான்கி  மூன் ஓய்வு பெற்றார். ஐ.நாவின் புதிய செயலாளராக அன்டோனியா கட்டாரஸ் தேர்வானார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பலத்த போட்டி இருந்து வந்தது. இம்முறை அமெரிக்காவின் பெரும் செந்வந்தரான டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் அதிபரின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பெண்களை தவறாக பேசியது, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது என பல புகார்கள் அவர் மீது இருந்தது. பலரும் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் சென்று நினைத்தனர்.

நவம்பர்-
8 ஆம் தேதி- யாரும் எதிர்பாராவிதமாக தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 45 -ஆவது அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

மேலும் அதிர்ச்சியாக நம் பாரத பிரதமர் 8ஆம் தேதி இரவு 8:30க்கு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் தான் இந்த அறிவிப்பு என்று பிரதமர் அறிவித்தார்.

ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது, வாரத்திற்கு 20,000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டது. அதன் பிறகு பல ஆணைகளும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டு இன்று வரை இழுபறி நிலையில் தான் உள்ளது.

மேலும் மோடி அவர்களால், மக்கள் வீட்டில் தங்கம் வைத்து கொள்வதிலும் அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். முதலில் பாராட்டிய பலரும் பின்னாளில் அதிருப்தியை காட்டியும் வருகின்றனர்.

20 ஆம் தேதி- இண்டோர் - பாட்னா விரைவு வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

டிசம்பர்- 
4 ஆம் தேதி - மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தகவல் பரவியது.

5 ஆம் தேதி - முதல்வர் உடல்நல குறைவால் இரவு 11:30க்கு மரணமடைந்ததார் என அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிடமிருந்து வந்தது. அன்றே ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி மறந்த முதல்வரின் பூதவுடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியருகே அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் அவர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போயினர்.

7 ஆம் தேதி- பழம் பெயரம் நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், ஜெயலலிதாவின் நண்பருமான சோ ராமசாமி உடல்நல குறைவால் இறந்தார்.

12 ஆம் தேதி- வர்தா புயல் சென்னையை மையமாக கொண்டு, மணிக்கு 120-160 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. சென்னை மற்றும் பிற வட மாநில மாவட்டங்கள் இந்த வரலாறு காணாத புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 38 பேர் இறந்துள்ளனர். 1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஐந்து நாட்கள் வரை மின்சாரம், செல்போன், இன்டர்நெட் என ஏதுவுமே இயங்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகம் இருக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. சசிகலா அதிமுகவின் அடுத்த பொது செயலாளராக வரவிருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கு மக்கள் பலரும் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், மந்திரிகளின் மனமாற்றம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் போக்கு, இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இவர்களுக்கு பின்னால் பா.ஜ.கவும், மோடியும் இருக்கலாம் என பலரும் சொல்லி வந்தனர்.

15 ஆம் தேதி- உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சொல்லி உத்தரவு.

கருணாநிதி உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமாகி வீடு திரும்பினார். இம்முறையும் கருணாநிதி இறந்தது விட்டார் என புரளியை சிலர் கிளப்பி விட்டிருக்கின்றனர்.

21 ஆம் தேதி- தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும், தலைமை செயலகம் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது.

22 ஆம் தேதி- ராம்மோகன் ராவ் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

31 ஆம் தேதி- கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து, சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்றார்.

இவ்வளவுதாங்க 2016... இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2016-ல் என்ன நடக்கும் என்று யூகித்து பதிவு எழுதியிருந்தேன். அதில் சில நடந்துள்ளது; பல நிகழ்வுகள் யாரும் எதிர்பாராதவாறு நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ வரும் 2017 எல்லோருக்கும் நல்லபடியாகவே அமைந்தால் நல்லதே!

happy-new-year-2017

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 21 டிசம்பர், 2016

இறைவி வேசியானது எப்படி?

வணக்கம்,

நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.

பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.

devaradiyaar-temple dancers
கோப்பு படம்
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கோவில்களில் நடனமாடும் பெண்களை தேவதாசி குறிப்பிடுவது வழக்கம். இப்பெண்கள் நடனமாடி (பெரும்பாலும் பரதம், குச்சிப்புடி) விபச்சாரம் செய்பவர்களாகவும், சிலர் பரம்பரை பரம்பரையாய் தேவதாசிகளாக இருப்பதையும் கேட்டிருப்போம். இக்குல பெண்கள் இழி பெண்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.

உண்மையில் தேவதாசி என்பது இழிகுல வம்சமோ அல்லது பாலியல் தொழில் செய்பவர்களோ அல்ல.

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சங்ககால பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். விஜயநகர பேரரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள் 

சோழர்  காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை சொல்லவா வேண்டும்!

ஆனால் காலப்போக்கில் நிலைமை தலைகீழ் ஆனது! பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், பெண்கள்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றன. வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தேவரடியாரான மதிப்புமிக்க பெண்கள் கோவில்களுக்குள் சென்று சேவை/ பூசை செய்ய தடை செய்யப்படுகிறது. பெண்களுக்கு இவ்வளவு அதிகாரம் ஏன் என்ற கேள்வி சில ஆதிக்க சாதி மக்களிடம் எழ, உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்படுகிறது. கோவில்களில் நடனமாடும் தேவரடியாரை சில சிற்றரசுகளும், செல்வந்தர்களும் அவர்களுக்காக தனியே ஆட அழைக்க, அவர்கள் ராஜதாசி ஆனார்கள். பின்னர் கோவிலில் நடனமாடும் பெண்களை எல்லோரும் தேவதாசிகளாக்கபட்டு, நாடு முழுவது மெல்ல மெல்ல தேவரடியார் இனம் தேவதாசிகளாக மா(ற்)றப்பட்டது.

devadasi-in-south-india-wiki

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் திராவிடரின் கூற்றுப்படி பொதுமகளிர்.

தேவதாசிகள்  கோயிலுக்கு 'நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்' ஆனார்கள். இவர்கள் கோயிலின் பேரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். 'தாசி' எனும் சொல், 'அடிமை' என்ற பொருள் கொண்டது. 'அடியார்' என்பதோ, 'ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்' என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது. 

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்களை தேவதாசிகளாக மாற்றி பொருளுக்காக விபசாரம் செய்ய வைத்தனர். அதன் பின்னும் தேவரடியாரான பெண்கள் சிலர் கோவில்களில் நடனமாடி (பரதம்) பிழைத்து வந்தனர். பரதநாட்டியத்திற்கு தேவிடியா கச்சேரி என்ற பெயரும் உண்டு என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்கால ஆரம்பத்தில் கோவில்களில் கலைகள் அவ்வளவாக வளரவில்லை; வளரவும் விடவில்லை. அதனால் தேவரடியாரை அப்போதிருந்த ஜமீன்தார்கள் மற்றும் சிற்றரசுகள் முழு நேர தேவதாசிகளாக்கினர். பெண்கள் பருவம் அடைந்ததும் பொட்டுகட்டி விட்டு, 'நித்திய சுமங்கலியாக' மாற்றி, அவர்களை தேவதாசிகளாகவே மாற்றிவிட்டனர். அதை ஒரு சடங்காகவே மாற்றி அவர்கள் பரம்பரையே வேசிகளாக மாற்றிவிட்டனர்.

இப்படி தான் தேவரடியாள் என்ற பெயர் பின்னாளில் தேவிடியாள் என்ற வசைமொழி பெயரானது போலும்! 

தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தேவதாசிகள் இருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என் பல பெண்கள் இவ்வம்சத்தில் இருந்தனர்.  இவர்கள் அனைவருமே கோவிலில் பணிபுரியும் குலத்தை சேர்ந்தவர்கள்தான். நாளடைவில் இவர்களை தாசிகளாகியது நமது சமூகம். பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய பெண்கள் மேம்பாட்டு ஆணையமும், சமூக புரட்சியாளர்களான ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், தந்தை பெரியார் போன்றோர் எதிர்த்து போராடி, இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்துவிட்டது. இன்று இந்தியா முழுவதும்  தேவதாசிகளே இல்லை என சொல்லப்படுகிறது,

கடந்த கால வரலாற்றில் இப்படிதான் பெண்கள் போற்றப்பட்டும், தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இனியாவது பெண்மையை மதிப்போம்;
பெண்ணினத்தை காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 9 நவம்பர், 2016

செல்லாத ரூபாய்கள்!

வணக்கம்,

நேற்று (08-11-2016) இரவு எட்டு மணி வாக்கில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு அளித்து கொண்டிருந்த உரையில், "இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..", என்றுஅறிவித்து கொண்டிருந்தார். மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திடீர் அறிவிப்பு என்று கூறியுள்ளார். இன்று ஒரு நாள் வங்கிகளும், இன்றும் நாளையும் (09/11 & 10/11) ATM மெஷின்கள் இயங்காது. இதனால் பொது மக்களின் சிரமத்திற்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார்.

ban-1000rs-500rs-currency

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்று மோடியை பாராட்டி வருகின்றனர்.

அரசின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்து கொண்டு வங்கிகளில் தானியங்கி மெஷின் மூலம் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் இரு நாட்களுக்கு ATM  மற்றும் வங்கிகள் செயல்படாததால் , எல்லோரும் பணத்தை ATM-லிருந்து 400 ரூபாய்களாக பல முறை போட்டு எடுத்தனர். எல்லா வங்கி வாசலிலும் கூட்டம்... ஒவ்வொன்றிலும் குறைந்தது 20 பேராவது நின்றனர். பல ATM-கள் செயலிழந்து போயின. மெஷினில் பணம் தீர்ந்து போனது... மக்கள் யாரை பார்த்தாலும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஊரே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது. முக்கியமாக இந்த மூன்று நாட்களில் திருமணம் அல்லது சுபகாரியம் வைத்தவர்கள், வெளியூர் சென்றவர்களின்  நிலை படு திண்டாட்டம் தான்.

இது பெரும் பணக்காரர்களையோ, அரசியல் புள்ளிகளையோ ஒன்றும் பாதிக்காது. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் credit அல்லது debit கார்டு வைத்து சமாளித்து கொள்வார்கள். அன்றாட தேவைகளுக்கு கடைக்கும், கூலிக்கும் அல்லல்படுகிறவர்கள் தான் பெரிதும் கஷ்டபடுவார்கள். இன்று வேலை செய்தால்தான் காசு, சாப்பாடு என்று பிழைப்பு நடத்துவோர்க்கு, மிகவும் கஷ்டம். ஆட்டோ/டாக்சி ஓட்டுபவர், சிறு வியாபாரம் செய்யும் முதலாளி, தினசரி கூலி தொழிலாளி என பாடுபடுவது இவர்கள் தான்.

new-currency-notes-details

எல்லா டி.வி சானல்களிலும் இரவு விவாத மேடை நிகழ்ச்சிக்காக "ஹிலாரி - டிரம்ப் "-ன் தலைப்பே இருந்திருக்கும். ஆனால் பிரதமரின் இந்த உத்தரவால், எல்லோரும் போட்டி போட்டு கொண்டு இதை பற்றியே பேசி பேசி மக்களை பெரிதும் பாடுபடுத்தினர். பொது ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரின் கேள்வி இதுதான். இந்த திடீர் உத்தரவால் பொது மக்களின் பாதிப்பு தவிர என்னென நன்மைகள் ??? இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் ?, என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

தீவிரவாதிகளும், சில சமூக விரோதிகளும் கள்ள நோட்டுக்களை நாட்டில் அவ்வப்போது பரப்பி விடுகின்றனர். பழைய 500/1000 ரூபாய் செல்லாது என அறிவித்தால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் எல்லாம் செல்லாமல் போய்விடும். மேலும் இந்த புது நோட்டுக்கள் கள்ளதனமாக அச்சடிக்க முடியாதவாறு தயாரிக்க பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதன் மூலம் அடுத்த வாரம்... ஏன்?? இன்று முதலே யாரிடமும்  500/1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருக்காது. மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முதல் மகுடம் இது.

சாதாரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்திர மக்கள் பலரும் வருமான வரி கட்டி விடுகின்றனர். அவரவர் அலுவலகங்களில் வருமான வரி பிடித்து செய்யபடுகிறது.  சிறு /பெரு கடை முதலாளிகள், சின்ன சின்ன தொழிலதிபர்கள், வட்டிக்குவிட்டு வாங்குபவர்கள், சினிமாகாரர்கள், அதிக லஞ்சம் வாங்கி பணம் சேர்ந்தவர்கள், ஊர் பணத்தில் காசு பார்த்தவர்கள் என கணக்கில் காட்டாமல்,  பணத்தை  மூட்டை மூட்டையாய் வைத்துள்ளவர்களுகெல்லாம் இந்த சேதி பெரிய இடியாக விழுந்து இருக்கும். இந்த பணத்தை இவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அரசிடம் கணக்கு காட்டி, பாதி போக மீதியை  வெள்ளையாக்கி எடுத்து செல்லலாம்; இல்லையெனில் ஒட்டு மொத்தமாக குப்பையிலோ, நெருப்பிலோ போட்டு விடலாம். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தின் புழக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

பெரும் பணம் படைத்த செல்வந்தர்கள், சீமான்கள், கோடிகளில் புரள்பவர்கள் எல்லாம் தங்கள் கணக்கில் வரா பணத்தை நகை, ஆபரணம், விலை மதிப்பில்லா கற்கள், பச்சை பாண்டு பேப்பர்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய மால்கள், பினாமி, விவசாய நிலம், ரியல் எஸ்டேட், கம்பெனி ஷேர்கள், வெளிநாட்டு பணம், வெளிநாட்டு வங்கியில் பணம், என சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை என்ன செய்ய போகிறது் என அரசும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவர்களிடமிருந்து கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர வேறு ஏதாவது புது தடாலடி சட்டம் போடுவார்கள் என நம்புவோமாக!!!! இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ! நாடு வளமாக இருப்பின் மகிழ்ச்சி! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது !

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இது எதை பற்றிய பதிவு என தெரிந்திருக்கும். ஆம்! இது ஒலிம்பிக் சீசன். அதான் இப்படி ஒரு பதிவு. 

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது; பளு தூக்குதலில் சதிஷ் சிவலிங்கம்; ஜிம்னாஸ்டிக்ஸில் 58 வருடங்களுக்கு பின் தேர்வான திபா கர்மாக்கர்; பாட்மிட்டனில் சாய்னா நெய்வால்; துப்பாக்கி சுடுதலில் முன்னாள் தங்கமகன் அபினவ் பிந்திரா; மொத்தத்தில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக 120 வீரர்கள், 15 போட்டிகளில் விளையாட உள்ளனர் என்ற செய்தியை கேட்ட இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள்.


இம்முறையாவது தங்கப் பதக்க பட்டியலில் நாம் வருவோமா? என பலரும் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கடந்த 2012 ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை  
( 2 வெள்ளி, 4 வெண்கலம் ) வென்றது இந்தியா. அதையே நாம் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை (அதிக போட்டிகளில்) கடந்த முறை தான் பெற்றிருப்போம் என நினைக்கிறேன்.

இம்முறையும் இப்படி நடக்க வாய்ப்புண்டா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, எல்லா போட்டிகளிலும் நம் வீரர்/வீராங்கனைகள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி நம்மை அடையும் போது மனம் சற்று ஏமாற்றமடைகிறது. அவர்கள் என்னதான் பயிற்சியும், விடா முயற்சியும் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேவை ஊக்கமும் ஆதரவும் தான். அதை அரசாங்கமும், இந்திய விளையாட்டு துறையும், இந்திய ஒலிம்பிக் தேர்வு துறையும் தான் தர வேண்டும்.

இப்போதைக்கு ஆரம்பித்த பன்னிரெண்டு நாட்களில், ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவின் பெயரை பதக்கப் பட்டியலில் சேர்த்துள்ளார். பாட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி, மேலும் ஒரு பதக்கத்துக்கு (குறைந்தது வெள்ளி) அடி போட்டுள்ளார்.

டுட்டி சந்த் என்ற இந்திய தடகள வீராங்கனை, "போட்டி வீரர்களை 'எக்கனாமி கிளாசில்' பயணம் செய்யவிட்டு விட்டு, இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் மற்ற மேலாளர்களும் 'பிசினஸ் கிளாசில்' பயணம் செய்கிறார்கள். 36 மணி நேர பயணத்தில் ஓய்வில்லாமல், சரியான தூக்கமில்லாமல் இப்படி நடத்தினால், எப்படி வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் ??" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இணைப்பு - http://goo.gl/yXdqrN

இதை தவிர சில நாட்களாக கின்னஸ் சாதனை புரிந்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் இப்போது என்ன செய்கிறார் என்ற பதிவு சமூக தளங்களை சுற்றி வருகிறது. இணைப்பு - http://goo.gl/sdOA2Z

indian-olympics

நம் நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனரோ இல்லையோ, எல்லா ஆசிரியரும், பெற்றோரும் தம் பிள்ளைகளை இன்ஜினீயராக்க, டாக்டராக்க தான் விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எவ்வளவோ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு தர வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்கு பெரியது. இட ஒதுக்கீடு, லஞ்சம், ஊழல் இருக்கும் விளையாட்டு துறையில் எப்படி தரமான வீரர்கள் இருப்பார்கள்? எப்படி பதக்கம் வெல்வார்கள்?


இந்த வீடியோவில் 01:09 - 02:10 வரை பாருங்க... சினிமா வசனமானாலும் இது தான் உண்மை.

இதையெல்லாம் பார்க்கும் போதும், இப்படியெல்லாம் நடக்கும் போதும், இந்தியாவிற்கு எப்படி பதக்கம் கிடைக்கும் என்ற எண்ணமே எல்லார் மனதிலும் தோன்றுகிறது.


இந்தியாவிற்காக விளையாடிய / விளையாட போகும் எல்லா வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துக்களும் !!! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

பழைய மகாபலிபுரம் சாலையில்!

வணக்கம்,

ஓ.எம்.ஆர் சாலையில் தினசரி காணும் சில நிகழ்வுகளை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். 

சென்னை சாலைகளில் பயணிப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. மற்ற ஊரை சேர்ந்தவர்கள், "சென்னை ரோட்ல எப்படி வண்டி ஓட்டுறீங்க?" என பலரும் கேட்பதை பார்த்திருக்கலாம். இங்கு சாலைகளில் வண்டி ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான ஒன்று தான். அதிலும் நான் தினமும் பயணம் செய்யும் ஓ.எம்.ஆர் சாலையை பற்றி சொல்லவே வேண்டாம்.  ஓ.எம்.ஆரை பற்றி ஏதாவது பதியலாம் என எண்ணி, இப்பதிவை எழுதுகிறேன். இச்சாலை அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என பார்ப்பவர்கள், வியப்பில் உச்சிக்கு சென்று விடுவார்கள்.

சென்னை மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்று ஓ.எம்.ஆர் (Old Mahabalipuram Road). அடையாறு மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை அது ஓ.எம்.ஆர் சாலை தான். இதற்கு ஐ.டி காரிடார் (IT Corridor) என்ற பெயரும் உண்டு. சென்னையிலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக பாண்டிச்சேரி வரை போக, புறவழி சாலை, ஈ.சி.ஆர் சாலை, ஓ.எம்.ஆர் என இன்று பல சாலைகள் இருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த (பழைய) மகாபலிபுரம் சாலை மட்டும் தான்.


ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் செம்மண் சாலையாகத்தான் இருக்கும். இரு புறமும் சவுக்கு தோப்பும், பனைமரங்களும் தான் நிற்கும்; இரவில் தெருவிளக்கில்லாமல் அதுவும் பயமுறுத்தும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ் வசதி. அதுவும் வந்ததால் தான் உண்டு. சென்னை சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு சிறுசிறு குக்கிராமங்கள் தான் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் போன்றவையெல்லாம். இன்று பெரிய ஐ .டி கம்பெனிகளின் உறைவிடமாக இருக்கும் நாவலூர் மற்றும் சிறுசேரி, 20 ஆண்டுகளுக்கு முன் வெறும் சவுக்கு தோப்புகளாக தான் இருந்தனவாம். 1970-களில் அங்கே பிளாட் (வீடு) ஆயிரம் ரூபாய் என வாங்கியவர்கள், இன்று சில கோடிகளுக்கு அதிபதிகள். பழைய படங்களில் ஊருக்கு வெளியே பனங்காடு, செம்மண் ரோடு, மணல் மேடு, சவுக்கு தோப்பு என்று வருவதெல்லாம்  இந்த இடங்கள் தான் போலும்! கடல் அருகே இருப்பதால் விவாசாயம் நடந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி இருந்த இடம் எப்படி மாறிவிட்டது இப்போது?


கூவம் நதி போல வளைந்து நெளிந்த நீளமான டிராஃபிக், அதில் நீந்தி கொண்டு செல்லும் வாகனங்கள், அதை முந்தி கொண்டு வேகமாக செல்லும் கம்பெனி பேருந்துகள், சீறி கொண்டு போகும் ரேஸர் பைக்குகள், வேதாளத்தை முதுகில் சுமந்து கொண்டு போகும் விக்ரமாதித்யனை போல பைக்கில் போகும் இளம் ஜோடிகள், சைடு ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே போகும் ஓவர்லோடான அரசு பேருந்துகள், இஷ்டத்துக்கு நின்று நின்று செல்லும் ஷேர் ஆட்டோக்கள்/வேன்கள், 'என் பாட்டன் போட்ட ரோடு இது' என குறுக்கே கடக்கும் சில ஐந்து அறிவு/பல ஆறறிவு ஜந்துக்கள், இக்கால வழிப்பறி கொள்ளையான டோல் கேட்கள், அசம்பாவி்தமாய் சில பெரிய, சிறிய விபத்துக்கள், டிசைன் டிசைனாக கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள ஐ.டி கம்பெனிகள் என சொல்லி கொண்டே போகலாம்...

சில நேரங்களில் ஓ.எம்.ஆர் டிராஃபிக்கில் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும். அதுவும் வெள்ளிகிழமை மாலை என்றால் சொல்லவே தேவையில்லை. காலை நேரங்களில் அலுவலகம் செல்வோர் பலரும் அக்கம் பக்கம் பாராமல் வண்டியை விருட்டென ஓட்டி கொண்டு செல்வார்கள். சிக்னல் என ஒன்று இருந்தலும், போலீஸ் இல்லாவிடில் யாரும் அதை மதிப்பதில்லை. ரேஸர் பைக் வைத்திருக்கும் கனவான்கள் வீலிங் செய்து கொண்டே சீறி பாய்வதை பல நேரங்களில் பார்க்கலாம். சிக்னல் போட்டபின் கியர் போடுவதற்குள் நம்மை ஓவர்டேக் செய்து கண் இமைக்கும் நேரத்தில் கண் காணா தூரத்தில் போய்விடுவார்கள். இந்த அதி வேக பயணம் பல நேரங்களில் அவர்களுக்கோ அல்லது மற்ற ஓட்டுனர்களுக்கோ வினையாய் வந்து முடியும். இம்மாதிரி சீறி வரும் காளைகளை 'போறான் பாரு பொறம்போக்கு' என்று பலரும் பட்டம் கொடுத்துவிட்டு போவார்கள்.


இப்போதுள்ள லேட்டஸ்ட் மாடல் பைக்குகளில் பின் சீட் ஒய்யாரமாக தூக்கி கொண்டு இருக்கிறது. அதில் பின்னல் உட்கார்ந்து பயணம் செய்யும் பலரும் உப்புமூட்டை தூக்கி கொண்டு போவது போலத்தான் இருக்கும். சிலர் நவீன ஜோடிகள் இவ்வாறு பயணம் செய்யும் போது எல்லார் கண்ணும் அவர்கள் மேல்தான் விழும். சில சமயங்களில் சில பல 'ஃபிரீ ஷோ' க்களையும் நாம் பார்க்க முடியும்.

அடுத்து அரசு பேருந்து. சொல்லவே வேண்டாம். நடிகர் விவேக் படத்தில் சொல்லியது போல, பீக் ஹவரில் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், ஸ்டாப்பிலிருந்து பத்து அடி தள்ளி தான் நிற்கும். காலை மாலை இருவேளையும் நிரம்பி வழியும். நாலு ஸ்டாப் ஏறி இறக்குவதற்குள் கசக்கி பிழிந்து விடுவார்கள். நமக்கே கடுப்பாக இருக்கும் போது இதில் பெண்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான். காசுள்ளர்வர்களுக்கு ஏ.சி.பஸ் உண்டு. ஷேர் ஆட்டோவும், வேன்களும் இவர்களுக்கு ஓ .எம்.ஆர் பயணங்களை ஈசியாக்குகின்றன.

ரோட்டில் குறுக்கே வரும் கால்நடைகளை நாம் திட்ட முடியாது. திட்டியும் பயனில்லை. அதை அங்கே மேயவிட்டு எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருக்கும் அந்த மாட்டுக்காரர்களை தான் உதைக்க வேண்டும்.
இதையெல்லாம் விட சில மக்களும், மாக்களை போல ரோட்டை கடக்க அங்கும் இங்கும் ஓடுவார்கள். 60 கி.மீ. வேகத்தில் வரும் வண்டி, இவர்கள் குறுக்கே பாய்வதை பார்த்து, சடன் பிரேக் அடித்து தட்டு தடுமாறி சறுக்கி விபத்துக்குள்ளாகும் இடங்கள் பல. இது போன்ற பல விபத்துக்கான காரணங்களை நாம் தினமும் ஓ.எம்.ஆரில் பார்க்கலாம்.        

இதை தவிர வேறு சில விஷயங்களும் ஓ .எம்.ஆரில் இருக்கிறது. பல ஐ.டி. கம்பெனிகள் இருப்பதால் பலதரப்பட்ட மக்களை அங்கே நாம் தினமும் பார்க்க முடியும். சோழிங்கநல்லூர் தாண்டியது முதல் கேளம்பாக்கம் வரை பல ஹாஸ்டல்களும், பேயிங் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு. அவரர் வசதிக்கேற்ப பேச்சுலர் வீடுகளும், மேன்ஷன்கள் இருக்கிறது.  இவர்கள் எல்லாம் சாப்பிட ஓட்டல் இருக்கிறதா? என கேட்காதீர்கள். ஓ .எம்.ஆரில் தடுக்கி விழுந்தால் ஓட்டல், மெஸ், ரெஸ்ட்டாரண்ட் தான். தமிழ் நாடு, ஆந்திரா, வட இந்தியா, சைனீஸ் என பல வகையான உணவுகளும், உணவகங்களும் இங்கு உண்டு. அதை பற்றி விரிவாக வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

இதற்கு மேல் என்ன சொல்ல என்ன தெரியவில்லை. இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் பகிரலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 25 ஜூலை, 2016

கபாலி - விமர்சனம்

வணக்கம்,

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.

kabali-movie-first-lookposter

பின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ்,  24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று  உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்!' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம்  பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி

படத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி! விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.

kabali-review

மலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.

உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.

படத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ! கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா?…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.

நாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.

மேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல்,  தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி  இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி!

படத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும்,  #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்!

சூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

கபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 13 ஜூன், 2016

பனியும் பனி சார்ந்த இடமும் !

வணக்கம்,

கடந்த ஓரிரு மாதங்களாய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்!

விஜிபி ஸ்நோ கிங்டம்:
சென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.

vgp-snow-kingdom

ஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா !!!  -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ்! வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல்! பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.


உள்ளே பலரும் செல்ஃபி எடுத்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்!). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.

அவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.

சிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.

மேலும் தகவல்களுக்கு vgpsnowkingdom.com

3-டி ஆர்ட் மியுசியம் : 
ஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.

clickartmuseum

புகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும்,  ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.

click to enlarge
மேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.

மேலும் தகவல்களுக்கு http://www.clickartmuseum.com/


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 5 ஜூன், 2016

யாருக்காக ? இந்த ப்ராஜெக்ட் யாருக்காக ?

வணக்கம்,

விடுமுறை முடிஞ்சாச்சு. பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கபட உள்ளன. இப்போதுள்ள மாணவ மாணவிகளை பரீட்சைக்கு பிறகு பெரிதும் கிலியூட்டும் ஒரு வார்த்தை ப்ராஜெக்ட் (Project). முன்பெல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை மட்டுமே ப்ராஜெக்ட் என்ற ஒன்றை கட்டாயம் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இன்றோ, பள்ளிகளிலும் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கதிற்கு வந்து கொண்டிருகிறது.

நான் பள்ளிகளில் படித்த காலத்தில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் Holiday Homework க்காக பரீட்சையின் வினாத்தாள்களை எழுதி வர சொல்லுவார்கள். நாங்களும் விழுந்து விழுந்து கடைசி நாள் வரை எழுதிவிட்டு, பள்ளி ஆரம்பித்ததும் போய்க் கொடுப்போம். ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் என்று ஒன்றை செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகின்றனர். அதற்கும் மதிப்பெண் வேறு உண்டு என்று சொல்லிவிடுகின்றனர்.

school projects

ப்ராஜெக்ட் என்பது நல்ல விஷயம் தானே.. பிள்ளைகளின் அறிவு கூடும் என்று யோசிக்க வேண்டாம். அது நல்லது தான் என்றாலும், ப்ராஜெக்ட்  செய்ய ஒரு வயது வரம்பு வேண்டாமா ?? மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
பிள்ளைகளுக்கு வெவ்வேறு தலைப்புகளில் ப்ராஜெக்ட்  வொர்க்கை கொடுத்து விடுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

ப்ராஜெக்ட் வொர்க் என்றால் படங்கள் வாங்கி சார்ட்டில் ஒட்டுவது, பொது அறிவு விஷயங்களை அட்டையில் எழுதி வருவது என்று கொடுத்தால் மாணாக்கருக்கு உதவியாக இருக்கும். விடுமுறையிலும் அவர்கள் எதோ ஒன்றை படித்து தெரிந்து கொள்வது போல இருக்கும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா??

சில பள்ளிகளுக்கு என்னன்ன தலைப்பை ப்ராஜெக்டாக பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. தேசிய நினைவுச்சின்னங்களை மாதிரி வடிவமைப்பாக தெர்மகொலில்/அட்டையில் செய்து கொண்டு வாருங்கள், உலக உருண்டையின் மாதிரியை சுற்றுவது போல செய்யுங்கள் என்று ஆறாம், எட்டாம் வகுப்பு மாணவரிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் ? சூரிய குடும்பத்தின் மாதிரியை கிரகங்கள் சுழல்வது போல செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். பெரும்பாலும் இந்த ப்ராஜெக்ட்டை ஸ்டெப்பர் மோட்டார் (stepper motor ), பாட்டரி (battery) உதவியுடன் செய்து அசைய/ சுழல வைக்க வைக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு வேறு.  இக்கால பிள்ளைகள் நம்மை விட 10 மடங்கு புத்திசாலிகளாகவும், நல்ல திறமைமிக்கவர்களாகவும் இருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இது போன்ற பாட திட்டங்களெல்லாம் மிகவும் அதிகம். எல்லா பெற்றோரும் இதெல்லாம் தெரிந்தவராக இருக்க முடியுமா?? இல்லை எல்லாராலும் இதை செய்ய தான் முடியுமா?? என்ன அடிப்படையில் இது போல செய்ய சொல்கிறார்கள் என்ன தெரியவில்லை. இதையும் சில அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செய்து கொடுக்கின்றனர் என்பதை ஒப்பு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

பள்ளி பிள்ளைகளின் விடுமுறை நேரத்தை சரியான முறையில் செலவழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இது போன்று பள்ளி பிள்ளைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதி மீறிய விடுமுறை வீட்டுப்பாடத்தை ப்ராஜெக்ட் என்ற பெயரில் செய்ய சொல்லலாமா? இது எந்த வகையில் நியாயம் என எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் யாரேனும் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 24 மே, 2016

அரசியல் மாற்றம் இது தானோ!

வணக்கம்,

என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!

கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.

2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.

அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!

*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)

*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.

*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.

*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.

*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!

healthy-politics-tamilnadu
click to enlarge
*) அதற்கு பதிலாக கலைஞர் தமது அறிக்கையில், "பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத் குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது", எனக் கூறியுள்ளார்.

*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி  சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.


கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வலிமைமிகு இந்திய ராணுவம் !

வணக்கம், 

வளரும் நாடான நமது இந்தியா, எவ்வளவு சக்தி வாய்ந்தது என நம்மில் பலருக்கு தெரியவில்லை. இந்திய ராணுவத்தின் பலம் பற்றி இணையத்தில் படித்ததை இங்கு பகிர்ந்துள்ளேன்.

1.) உலகில் மூன்றாம் பெரிய ராணுவம், இந்திய ராணுவம் தான் (அமெரிக்கா, சீனாவை அடுத்து).

2.)  உலகின் மிக உயரமான போர்க்களமான (Siachen) சியாச்சின் (கடல் மட்டத்திலிருந்து  5000 மீட்டர் மேல் ) இமாலய பகுதியில், இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

3.) உலகின் மிக பெரிய தன்னார்வ ராணுவ காலாட்படை இந்தியாவில் உள்ளது.

4.) இந்திய ராணுவம் உயரமான மலைப்பகுதிகளிலும், பனிபிரதேசங்களிலும் போர்புரிந்து மிக சிறந்த போர் வீரர்களாக திகழ்கின்றனர்.

5.) இந்திய ராணுவம் 1970 களிலும், 1997 களிலும் அணு ஆயுத சோதனையை உலக நாடுகளுக்கு தெரியாமல் சாமர்த்தியமாக செய்துள்ளது. அமெரிக்க சி.ஐ.எ க்கு தெரியாமல் சோதனை நடத்தியது அவர்களுக்கு பெரும் இழுக்கு.

6.) இந்திய அரசின் மற்ற நிறுவனங்கள், அரசு துறைகளை போல இந்திய ராணுவத்தில் சாதி/மத/மற்ற இட ஒதுக்கீடுகள் எதுவும் கிடையாது.

7.) 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த லோங்வாலா போரில் (Battle of Longewala), வெறும் இரு ராணுவ வீரர்கள் மட்டுமே வீரமரணம் அடைந்தனர். ஒரே ஒரு டாங்கர் மட்டுமே வீழ்த்தபட்டது.

8.) ஆசியாவிலேயே மிக பெரிய கடற்படை கேரளாவில் உள்ள எழிமலா கடற்படை.

9.) உலகின்  மிக பெரிய குதிரை படை இந்திய ராணுவத்தில் உள்ளது.

10.) இந்தியாவை தவிர தஜகஸ்தானிலும், பூட்டானிலும் இந்திய ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது.


indian-army-facts

11.) 1982-ல் இந்திய ராணுவம் உலகின் உயரமான இடத்தில உள்ள பெய்லி பாலத்தை (Bailey bridge), இமாலயத்தில் டிரஸ் மற்றும் சுரு நதிகளுக்கிடையே கட்டியுள்ளனர்.

12.) 1971-ல்  பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 93,000 வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரணடைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

13.) 2013-ல் நடந்த ஆபரேஷன் ரகாத் Operation Rahat (உத்தர்கண்ட் வெள்ளம்), உலகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பொதுமக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 1,000,000 மக்கள் 12 நாட்களில் வெளியேற்றப்பட்டனர்

14.) 1990-ல் ஈராக் (சதாம் ஹுசேன் ) குவைத்தை ஆக்கிரமித்த போது, இந்திய வான் படை 1,70,000 இந்தியர்களை வெளியேற்றி கொண்டு வந்தது.

15.) இந்தியா-ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட பிரம்மோஸ் (Brahmos) ஏவுகணை உலகின் அதி சக்தி வாய்ந்த, வேகமான ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

16.) அக்னி-V (Agni-V ) மற்றும் பிரித்வி (Prithivi)அதி துல்லியமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைளாக இருக்கிறது.

17.) ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா, இது வரை 21 முறை மட்டுமே வழங்கபட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் இறந்த பின்னர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

18.) நாடு முழுவதும் 53 கண்டோன்மெண்டுகளும்,  9 இராணுவத் தளங்களையும் நமது இந்திய ராணுவம் கொண்டுள்ளது.

தகவல்: scoopwhoop, quora, mensxp



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 16 ஏப்ரல், 2016

படித்த முட்டாள்கள்!

வணக்கம்,

சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு.

நாம் அன்றாட (காலைக்) கடனை முடித்துவிட்டு, துடைத்து கொள்ளும் பழக்கம் இந்தியன் ஸ்டைல் கக்கூஸ் டாய்லெட்டில் இல்லை தான் என்றாலும், இப்போதைய நவீன வாழ்வில் இயல்பான ஒன்றாய் மாறி கொண்டிருக்கிறது.

மதிய வேளையில் ரெஸ்ட் ரூமில் இருந்த urinal யாவும் ரிப்பேர் / கிளீனிங்கில் இருக்கவே, உள்ளே சென்றேன். உள்ள இருந்த பேசினில் டாய்லெட் பேப்பர்கள் கசக்கி போடப்பட்டு ∴ப்ளஷ் செய்த தண்ணீர் வெளியேற முடியாமல் அந்த பேசினை அடைத்து கொண்டிருந்தன. அன்று மட்டுமல்ல. கடந்த இரு வாரங்களில் இதை  நான்காம் முறை பார்க்கிறேன். போன முறை ஹவுஸ் கீப்பிங் அலுவலர் ஒருவர் ஒரு கை கொள்ளாத அளவு டாய்லெட் பேப்பர்களை எடுத்து சென்றார். நான் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டு, "தினமும் இப்படி தான் சார் எடுத்து போடறேன்.." என்று வலியுடன் சொன்னார்.

கழிவறை சுத்தம் செய்வது அவர்கள் வேலை தான். ஆனால், பேசினில் கைவிட்டு நாம் துடைத்து கசக்கி எறிந்த பேப்பர்களை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்தா அவர்களுக்கு? பின்னர் அதே கைகளில் தான் அவர்கள் சாப்பாடும் சாப்பிட வேண்டும்.. ச்சே... என்ன ஒரு கொடுமை..

dont garbage toilet basins

இது ஏதோ படிப்பறிவில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி பணியாளர்கள் 'இருக்கும்' கார்ப்பரேட் அலுவலகம். நீங்கள் யாராவது கழுவும் கையில் சாப்பிடுவீர்களா? யோசியுங்கள். பிறகு ஏன் சிலர் ரெஸ்ட் ரூமில் உள்ள டாய்லெட் பேசினில், துடைத்து எறிந்த பேப்பர்களை உள்ளே போடுகின்றனர் எனத் தெரியவில்லை. துடைத்து விட்டு அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் (அலுப்பு போல !), உட்கார்ந்திருக்கும் பேசினில் போடும் அறிவிலிகளுக்கு என்ன வார்த்தை சொல்லித் திட்ட ?

அலுவலகத்தில் சேரும் போது, நிர்வாக மேலாளர் இதை பற்றி சொன்னார். நானும், "என்னடா இது பாத்ரூம் போனா தண்ணி ஊத்துன்னு.. குப்பையில போடுன்னு .." சொல்கிறார்களே என நினைத்தேன். ஆனால் இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது தான் அவர்கள் சொல்வது சரிதான் என தோன்றுகிறது.

இது கார்ப்பரேட் கம்பெனிகளில் மட்டுமல்ல. சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய ஓட்டல்கள் என பல பொது இடங்களில் இது போன்ற கேவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சா இருந்துட்டு தண்ணி ஊத்து.. கழுவிட்டு பேப்பரை குப்பை தொட்டியில் போடு என சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்... இந்த படித்த முட்டாள்களுக்கு !?!?!!?


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

2016-ல் என்ன நடக்கும்?

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் கிடைத்து வாழட்டும்.

இப்பதிவில் 2016 ஆம் ஆண்டில் என்னன்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும், எதை பற்றியெல்லாம் மக்கள் பெரிதாக பேசுவார்கள் என்பதை தான் எழுதியுள்ளேன். கொஞ்சம் இணையத்தில் படித்தது, சிலது என் யூகங்கள் என கலந்து எழுதியுள்ளேன்.

2016 events india

அரசியல்-
2016-ல் தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு, மாநில சட்டமன்ற தேர்தல். கடந்த ஆண்டின் இறுதி முதலே, பல கூட்டணி பற்றிய செய்திகளும், பிரச்சாரங்களும் ஆரம்பித்த வண்ணம் இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, இம்முறை என்னன்ன இலவசம் தந்து ஏமாற்ற போகிறார்கள்? என்ன அறிக்கைகள் தர போகிறார்கள் என தெரியும்.

திராவிட கட்சிகளே வேண்டாம்; இந்த இரு கட்சிகளை தவிர வேறு புதிய அணி தான் தேவை என்ற எண்ணம் தான், மக்களின் மனதில் உள்ளது. நம் தமிழகம் இனிமேல் நல்ல முன்னேற்ற பாதையில் போகதான் எல்லோர்க்கும் விருப்பம். என்ன விருப்பப்பட்டு என்ன?? அதெல்லாம் நடக்கவா போகிறது?? பார்ப்போம் தேர்தல் 2016 வரை !

TN Election 2016

கடந்த வருட கடைசியில் பெய்த கனமழை, தள்ளி போன அரையாண்டு பரீட்சை என வந்து நிற்க, வரும் மே மாதத்துக்குள் எல்லா பரீட்சைகளையும் முடித்து, தேர்தலை நடத்த பார்ப்பார்கள். பாவம் பள்ளி பிள்ளைகளும், ஆசிரியர்களும்!

#India wants to know!
அரசியல் பேட்டிகள், தேர்தல் பிரச்சாரம், அரசியல் எழுச்சி நடைபயணம், வாக்கு சேகரிப்பு, தொகுதி பணம் பட்டுவாடா என சில பல காமெடிகளும், போட்டோ, வீடியோ மீம்ஸ்களும் தான் அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு நம் சமூக வலைத்தளங்களை நிரப்ப போகின்றன. #அவதானிப்பு 

சினிமா-
இந்த ஆண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவர வரிசையாக நிற்கிறது. லிஸ்டில் முதலில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, உலக நாயகனின் விஸ்வரூபம் II, இளைய தளபதியின் தெறி, தல நடிக்கும் பெயரிடபடாத படம், தனுஷ் நடிக்கும், வடசென்னை, வெடி, ரயில், சூர்யாவின் 24, சிங்கம் 3 (S3)... இன்னும் பல.

இதை தவிர தெலுங்கில் பாகுபலி 2, ஹிந்தியில் ஷாருக் கானின் ஃபேன், ஹாலிவுட்டில் Captain America-A Civil War, Batman Vs Superman, X-Men Apocalypse, Popeye The Sailor, Alice in Wonderland, The Jungle Book, Kung Fu Panda 3, Finding Dory என 2016-ல் பார்க்க வேண்டிய படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

#Behind the scenes
எப்போதும் போல எதிர்பார்ப்புள்ள பெரிய பட்ஜெட் படங்கள் மக்களிடம் எடுபடாமல், சில சின்ன பட்ஜெட் படங்கள் வந்து திடீர் வெற்றியை தரும். வழக்கம் போல இந்த ஆண்டும் ஹாரர் + மொக்கை காமெடி தான் தமிழ் சினிமாவின் டிரெண்ட் என விமர்சகர்கள் பேசுவார்கள். #கடுப்பு

விளையாட்டு-
இந்த ஆண்டு மார்ச்சில் ICC World Cup Twenty-20 நடக்க இருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இல்லாததால் நம் கிரிகெட் ரசிகர்கள் கொஞ்சம் சோர்ந்து போயிருப்பார்கள். அதனால் Twenty-20யில் மக்களின் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் எல்லா மேட்ச்சிலும் பெட்டிங், சூது என எல்லாமே இருக்கும்.

cricket gambling

ஆகஸ்ட்-செப்டம்பரில் பிரேசிலில் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவிருக்கிறது. போன முறை 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று, 55 ஆவது இடத்தில் நாம் இருந்தோம். ஒரு தங்க பதக்கம் கூட பெறவில்லை. இம்முறையாவது இந்தியா தங்கம் வெல்லுமா? என்ற ஆர்வம் எல்லார் மனதிலும் இருக்கும்.

#Fourth Umpire
ஒலிம்பிக்கில் வென்ற (ஒரு வேலை தங்கம் வென்றால்!) புது வீரரை, எதாவது ஒரு கார்ப்பரெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளும்.  எனக்கு ஏற்கனவே sports-ல் ஆர்வம் கிடையாது. இதில் லீ, ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா, பூலோகம் போன்ற படங்களை பார்க்கும் போது சுத்தமாக விளையாட்டை பார்க்க பிடிக்கவில்லை. காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..!

ஆன்மிகம்-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் கும்பமேளா பெருவிழா , 2016 பிப்ரவரியில் நடக்க இருக்கிறது. அத்தனூண்டு ஊரே அல்லோல பட போகிறது.

#Special Darshan 
பக்தாக்கள் அனைவரும் பத்திரமாய் முழுக்கு போட்டுவிட்டு வீடு போனால் சரி.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவுக்கு எதாவது நல்லது செய்வார்; நல்லதொரு முன்னேற்றத்தை கொண்டு வருவார் என இந்த ஆண்டும் நம்புவோமாக. இன்னும் இதை தவிர அமெரிக்க அதிபர் தேர்தல், இங்கிலாந்து பிரதமர் தேர்தல்களும் இந்த ஆண்டில் வரும். நம்ம மக்களும், ஏதோ அமெரிக்க ஐரோப்பிய குடிகள் பல, புது அதிபர்களுக்கு வாழ்த்து செய்தி போடுவாங்க.

ஹ்ம்ம்...வேற என்ன... மத்தபடி எல்லாம் வழக்கம் போல நடப்பது தான் நடக்கும். எல்லா கூத்தையும் பார்க்க தானே போகிறோம்.

கடைசி வரி - எல்லாவற்றையும் விட எல்லாருடைய வாழ்த்துகளுடனும் ஆசியுடனும், இந்த 2016 ஆண்டின் ஆரம்பத்தில் அடியேன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க போகிறேன். #மகிழ்ச்சி 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்