செவ்வாய், 24 மே, 2016

அரசியல் மாற்றம் இது தானோ!

வணக்கம்,

என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!

கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.

2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.

அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!

*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)

*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.

*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.

*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.

*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!

healthy-politics-tamilnadu
click to enlarge
*) அதற்கு பதிலாக கலைஞர் தமது அறிக்கையில், "பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத் குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது", எனக் கூறியுள்ளார்.

*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி  சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.


கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்