வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது !

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இது எதை பற்றிய பதிவு என தெரிந்திருக்கும். ஆம்! இது ஒலிம்பிக் சீசன். அதான் இப்படி ஒரு பதிவு. 

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது; பளு தூக்குதலில் சதிஷ் சிவலிங்கம்; ஜிம்னாஸ்டிக்ஸில் 58 வருடங்களுக்கு பின் தேர்வான திபா கர்மாக்கர்; பாட்மிட்டனில் சாய்னா நெய்வால்; துப்பாக்கி சுடுதலில் முன்னாள் தங்கமகன் அபினவ் பிந்திரா; மொத்தத்தில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக 120 வீரர்கள், 15 போட்டிகளில் விளையாட உள்ளனர் என்ற செய்தியை கேட்ட இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள்.


இம்முறையாவது தங்கப் பதக்க பட்டியலில் நாம் வருவோமா? என பலரும் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கடந்த 2012 ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை  
( 2 வெள்ளி, 4 வெண்கலம் ) வென்றது இந்தியா. அதையே நாம் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை (அதிக போட்டிகளில்) கடந்த முறை தான் பெற்றிருப்போம் என நினைக்கிறேன்.

இம்முறையும் இப்படி நடக்க வாய்ப்புண்டா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, எல்லா போட்டிகளிலும் நம் வீரர்/வீராங்கனைகள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி நம்மை அடையும் போது மனம் சற்று ஏமாற்றமடைகிறது. அவர்கள் என்னதான் பயிற்சியும், விடா முயற்சியும் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேவை ஊக்கமும் ஆதரவும் தான். அதை அரசாங்கமும், இந்திய விளையாட்டு துறையும், இந்திய ஒலிம்பிக் தேர்வு துறையும் தான் தர வேண்டும்.

இப்போதைக்கு ஆரம்பித்த பன்னிரெண்டு நாட்களில், ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவின் பெயரை பதக்கப் பட்டியலில் சேர்த்துள்ளார். பாட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி, மேலும் ஒரு பதக்கத்துக்கு (குறைந்தது வெள்ளி) அடி போட்டுள்ளார்.

டுட்டி சந்த் என்ற இந்திய தடகள வீராங்கனை, "போட்டி வீரர்களை 'எக்கனாமி கிளாசில்' பயணம் செய்யவிட்டு விட்டு, இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் மற்ற மேலாளர்களும் 'பிசினஸ் கிளாசில்' பயணம் செய்கிறார்கள். 36 மணி நேர பயணத்தில் ஓய்வில்லாமல், சரியான தூக்கமில்லாமல் இப்படி நடத்தினால், எப்படி வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் ??" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இணைப்பு - http://goo.gl/yXdqrN

இதை தவிர சில நாட்களாக கின்னஸ் சாதனை புரிந்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் இப்போது என்ன செய்கிறார் என்ற பதிவு சமூக தளங்களை சுற்றி வருகிறது. இணைப்பு - http://goo.gl/sdOA2Z

indian-olympics

நம் நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனரோ இல்லையோ, எல்லா ஆசிரியரும், பெற்றோரும் தம் பிள்ளைகளை இன்ஜினீயராக்க, டாக்டராக்க தான் விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எவ்வளவோ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு தர வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்கு பெரியது. இட ஒதுக்கீடு, லஞ்சம், ஊழல் இருக்கும் விளையாட்டு துறையில் எப்படி தரமான வீரர்கள் இருப்பார்கள்? எப்படி பதக்கம் வெல்வார்கள்?


இந்த வீடியோவில் 01:09 - 02:10 வரை பாருங்க... சினிமா வசனமானாலும் இது தான் உண்மை.

இதையெல்லாம் பார்க்கும் போதும், இப்படியெல்லாம் நடக்கும் போதும், இந்தியாவிற்கு எப்படி பதக்கம் கிடைக்கும் என்ற எண்ணமே எல்லார் மனதிலும் தோன்றுகிறது.


இந்தியாவிற்காக விளையாடிய / விளையாட போகும் எல்லா வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துக்களும் !!! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்