சனி, 31 டிசம்பர், 2016

2016-ல் நடந்தவை !

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வரப்போகும் 2017 ஆம் ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் ! இந்த வருடத்தில் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் 2016 முடிந்தேவிட்டது. என் வலைப்பூவில் கடந்த வருடத்தில் வெறும் 13 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணம். நேரமின்மையால் எழுதவில்லை என்று சொல்லிவிட முடியாது; நேரத்தை ஒதுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டாவது நிறைய, புதிய விஷயங்களை எழுத வேண்டும் என எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்!

events-in-2016

சென்ற 2016 வருடத்தில் நம் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்து இங்கு பகிர்கிறேன்.

ஜனவரி-
8 ஆம் தேதி - கடந்த மூன்று ஆண்டுகளாக விதித்த ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு நீக்கியது. ஆனால் PETA மற்றும் விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததை கொண்டு, மீண்டும் உச்சநீதி மன்றம் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

பிப்ரவரி-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா நடந்தது. 20 லட்சம் மக்கள் புனித நீராடினர்.

மார்ச்-
8 முதல் ஏப்ரல் 23 வரை ICC உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. மேற்கிந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

29 ஆம் தேதி - பின்னணி பாடகி பி.சுசிலா 17,695 பாடல்களை பாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

27 ஆம் தேதி- விசாரணை படத்துக்கு 'சிறந்த படம்', 'சிறந்த துணை நடிகர்', 'சிறந்த எடிட்டிங் ' உள்ளிட்ட மூன்று துறைகளில் தேசிய விருது வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் ரமணன் பதவி ஓய்வு பெற்றார்.

மே-
தேர்தலுக்கு இருநாள் முன்னர், 3 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 570 கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லாமல் சென்றதாக சொல்லப்பட்டது. மறுநாள் பாரத ஸ்டேட் வங்கி அது அவர்களுடைய பணம் என்று உரிமைகோரி வாங்கி சென்றனர். ஆனால் வங்கி பணமா? அரசியல்வாதிகளின் ஊழல் பணமா? என்ற மர்மம் இன்னும் தெரியவில்லை.

16 ஆம் தேதி -  தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது முடிந்தது. 232 தொகுதிகளில், மொத்தம் 74.26% வாக்குகள் பதிவாயின. கல்வியறிவு பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 85%  சதவிகிதமும், மெத்த படித்த மென்மக்கள் இருக்கும் சென்னையில் மிக குறைவான 55% வாக்குகளும் பதிவாகியிருந்தது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் (மட்டும்!) அதிகப்படியான பணம் பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

19 ஆம் தேதி - யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக 136 தொகுதிகளை வென்று, பெரும்பான்மையான வெற்றி பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுகவிற்கும் அழைப்பு போக, தளபதி ஸ்டாலினும் வருகை தந்து கடைசி வரை விழாவை பார்த்து, வாழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்.

ஜூன்-
பிரிட்டிஷ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது.

22 ஆம் தேதி- இஸ்ரோ PSLV-XL விண்கலத்தில் 20 செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

24 ஆம் தேதி- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், காலை 630க்கு இன்போசிஸில் பணிபுரியும் ஸ்வாதி என்ற 24 வயது பெண் மர்ம மனிதரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் இந்த பயங்கரம் நடந்ததால் மக்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ஜூலை -
1 ஆம் தேதி- சுவாதி கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும், மரணம் பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.

22 ஆம் தேதி- சென்னை தாம்பரம் IAF விமான நிலையத்திலிருந்து கிளம்பிய An-32 ரக விமானம் அந்தமான் செல்லும் வழியில் வங்க கடலை கடக்கும் போது தொலைந்து போனது. அதில் பயணம் செய்த 29 வீரர்களும் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மிக பெரிய தேடலுக்கு பின்னும் விமானமும், அதிலுள்ள ராணுவ வீரர்களும் என்ன ஆனார்கள் என இன்னும் தெரியவில்லை.

ஆகஸ்ட்-
3 ஆம் தேதி - GST (Goods and Services Tax) சட்டம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது.

5 ஆம் தேதி - பிரேசில் நாட்டிலுள்ள ரியோவில் 5 முதல் 21 வரை 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 11,544 வீரர்கள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 117 பேர் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. பி.வி.சிந்து பாட்மிட்டனில் வெள்ளி பதக்கத்தையும், சஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மேலும் பாரா ஒலிம்பிக் என்று சொல்லப்படும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ் நாட்டின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா தங்க பதக்கத்தை வென்றுள்ளனர்.

வழக்கம்போல இம்முறையும் போட்டியாளர்களுக்கு போதிய வசதி கொடுக்காதது, வெற்றி பெற்ற பின் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் பரிசும் தராதது போன்ற சர்ச்சைகளும் இருந்தது.

10 ஆம் தேதி- சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் பாங்கின் பணம் 5.75 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் கூரையை பெயர்த்து வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்காக அர்ப்பணிக்கபட்டது.

அவ்வப்போது தமிழக கர்நாடகாவிற்கிடையே வரும் காவிரி நீர்பங்கிடுதல்
பிரச்சனை இந்த ஆண்டும் தலைவிரித்து ஆடியது. இரு பக்கமும் எதிர்ப்பு கொஞ்சம் பலமாக இருந்தது. கர்நாடகாவில் 40 கே.பி.என். சொகுசு பஸ்கள் எரிப்பு, தமிழர்களை தாக்குதல், கடையை உடைத்தல், அப்பாவிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இரு மாநிலத்திலும் எதிர்ப்பும், வேலைநிறுத்தமும் நடந்தது. தமிழகத்தில் வன்முறை சம்பவம் ஏதும் நடக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

22 ஆம் தேதி- உலக நாயகன் கமலஹாசனுக்கு 'செவாலியே' பட்டம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- தமிழக ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.

செப்டம்பர்-
1 ஆம் தேதி - ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கினார்  முகேஷ் அம்பானி. இலவச ஜியோ சிம், அதில் அளவில்லாத போன் கால்கள், இன்டர்நெட் என சலுகைகளை வாரி வழங்கியது. பொது மக்கள் பலரும் ஜியோ சிம்முக்காக நெடும் வரிசையில் நின்று வாங்கினார்கள்.

2 ஆம் தேதி-  அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் 15 கோடி மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் இது ஒரு மாபெரும் வேலை நிறுத்தமாக பேசப்பட்டது.

4 ஆம் தேதி- ரிசர்வ் பாங்க் கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உர்ஜித் படேல் புதிய கவர்னராக பதியேற்றார்.

18 ஆம் தேதி- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் சிறையில் சுவிட்ச்-போர்ட் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலையுடன் சுவாதி கொலை மரணமும் மறைந்து போனது.

22 ஆம் தேதி- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

29 ஆம் தேதி- முதன் முதலாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர் (Surgical strike India). வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது.

அக்டோபர்-
5 ஆம் தேதி - ஐ.நாவின் பொது செயலாளர் பான்கி  மூன் ஓய்வு பெற்றார். ஐ.நாவின் புதிய செயலாளராக அன்டோனியா கட்டாரஸ் தேர்வானார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பலத்த போட்டி இருந்து வந்தது. இம்முறை அமெரிக்காவின் பெரும் செந்வந்தரான டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் அதிபரின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பெண்களை தவறாக பேசியது, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது என பல புகார்கள் அவர் மீது இருந்தது. பலரும் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் சென்று நினைத்தனர்.

நவம்பர்-
8 ஆம் தேதி- யாரும் எதிர்பாராவிதமாக தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 45 -ஆவது அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

மேலும் அதிர்ச்சியாக நம் பாரத பிரதமர் 8ஆம் தேதி இரவு 8:30க்கு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் தான் இந்த அறிவிப்பு என்று பிரதமர் அறிவித்தார்.

ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது, வாரத்திற்கு 20,000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டது. அதன் பிறகு பல ஆணைகளும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டு இன்று வரை இழுபறி நிலையில் தான் உள்ளது.

மேலும் மோடி அவர்களால், மக்கள் வீட்டில் தங்கம் வைத்து கொள்வதிலும் அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். முதலில் பாராட்டிய பலரும் பின்னாளில் அதிருப்தியை காட்டியும் வருகின்றனர்.

20 ஆம் தேதி- இண்டோர் - பாட்னா விரைவு வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

டிசம்பர்- 
4 ஆம் தேதி - மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தகவல் பரவியது.

5 ஆம் தேதி - முதல்வர் உடல்நல குறைவால் இரவு 11:30க்கு மரணமடைந்ததார் என அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிடமிருந்து வந்தது. அன்றே ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி மறந்த முதல்வரின் பூதவுடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியருகே அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் அவர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போயினர்.

7 ஆம் தேதி- பழம் பெயரம் நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், ஜெயலலிதாவின் நண்பருமான சோ ராமசாமி உடல்நல குறைவால் இறந்தார்.

12 ஆம் தேதி- வர்தா புயல் சென்னையை மையமாக கொண்டு, மணிக்கு 120-160 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. சென்னை மற்றும் பிற வட மாநில மாவட்டங்கள் இந்த வரலாறு காணாத புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 38 பேர் இறந்துள்ளனர். 1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஐந்து நாட்கள் வரை மின்சாரம், செல்போன், இன்டர்நெட் என ஏதுவுமே இயங்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகம் இருக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. சசிகலா அதிமுகவின் அடுத்த பொது செயலாளராக வரவிருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கு மக்கள் பலரும் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், மந்திரிகளின் மனமாற்றம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் போக்கு, இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இவர்களுக்கு பின்னால் பா.ஜ.கவும், மோடியும் இருக்கலாம் என பலரும் சொல்லி வந்தனர்.

15 ஆம் தேதி- உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சொல்லி உத்தரவு.

கருணாநிதி உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமாகி வீடு திரும்பினார். இம்முறையும் கருணாநிதி இறந்தது விட்டார் என புரளியை சிலர் கிளப்பி விட்டிருக்கின்றனர்.

21 ஆம் தேதி- தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும், தலைமை செயலகம் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது.

22 ஆம் தேதி- ராம்மோகன் ராவ் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

31 ஆம் தேதி- கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து, சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்றார்.

இவ்வளவுதாங்க 2016... இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2016-ல் என்ன நடக்கும் என்று யூகித்து பதிவு எழுதியிருந்தேன். அதில் சில நடந்துள்ளது; பல நிகழ்வுகள் யாரும் எதிர்பாராதவாறு நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ வரும் 2017 எல்லோருக்கும் நல்லபடியாகவே அமைந்தால் நல்லதே!

happy-new-year-2017

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 21 டிசம்பர், 2016

இறைவி வேசியானது எப்படி?

வணக்கம்,

நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.

பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.

devaradiyaar-temple dancers
கோப்பு படம்
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கோவில்களில் நடனமாடும் பெண்களை தேவதாசி குறிப்பிடுவது வழக்கம். இப்பெண்கள் நடனமாடி (பெரும்பாலும் பரதம், குச்சிப்புடி) விபச்சாரம் செய்பவர்களாகவும், சிலர் பரம்பரை பரம்பரையாய் தேவதாசிகளாக இருப்பதையும் கேட்டிருப்போம். இக்குல பெண்கள் இழி பெண்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.

உண்மையில் தேவதாசி என்பது இழிகுல வம்சமோ அல்லது பாலியல் தொழில் செய்பவர்களோ அல்ல.

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சங்ககால பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். விஜயநகர பேரரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள் 

சோழர்  காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை சொல்லவா வேண்டும்!

ஆனால் காலப்போக்கில் நிலைமை தலைகீழ் ஆனது! பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், பெண்கள்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றன. வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தேவரடியாரான மதிப்புமிக்க பெண்கள் கோவில்களுக்குள் சென்று சேவை/ பூசை செய்ய தடை செய்யப்படுகிறது. பெண்களுக்கு இவ்வளவு அதிகாரம் ஏன் என்ற கேள்வி சில ஆதிக்க சாதி மக்களிடம் எழ, உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்படுகிறது. கோவில்களில் நடனமாடும் தேவரடியாரை சில சிற்றரசுகளும், செல்வந்தர்களும் அவர்களுக்காக தனியே ஆட அழைக்க, அவர்கள் ராஜதாசி ஆனார்கள். பின்னர் கோவிலில் நடனமாடும் பெண்களை எல்லோரும் தேவதாசிகளாக்கபட்டு, நாடு முழுவது மெல்ல மெல்ல தேவரடியார் இனம் தேவதாசிகளாக மா(ற்)றப்பட்டது.

devadasi-in-south-india-wiki

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் திராவிடரின் கூற்றுப்படி பொதுமகளிர்.

தேவதாசிகள்  கோயிலுக்கு 'நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்' ஆனார்கள். இவர்கள் கோயிலின் பேரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். 'தாசி' எனும் சொல், 'அடிமை' என்ற பொருள் கொண்டது. 'அடியார்' என்பதோ, 'ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்' என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது. 

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்களை தேவதாசிகளாக மாற்றி பொருளுக்காக விபசாரம் செய்ய வைத்தனர். அதன் பின்னும் தேவரடியாரான பெண்கள் சிலர் கோவில்களில் நடனமாடி (பரதம்) பிழைத்து வந்தனர். பரதநாட்டியத்திற்கு தேவிடியா கச்சேரி என்ற பெயரும் உண்டு என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்கால ஆரம்பத்தில் கோவில்களில் கலைகள் அவ்வளவாக வளரவில்லை; வளரவும் விடவில்லை. அதனால் தேவரடியாரை அப்போதிருந்த ஜமீன்தார்கள் மற்றும் சிற்றரசுகள் முழு நேர தேவதாசிகளாக்கினர். பெண்கள் பருவம் அடைந்ததும் பொட்டுகட்டி விட்டு, 'நித்திய சுமங்கலியாக' மாற்றி, அவர்களை தேவதாசிகளாகவே மாற்றிவிட்டனர். அதை ஒரு சடங்காகவே மாற்றி அவர்கள் பரம்பரையே வேசிகளாக மாற்றிவிட்டனர்.

இப்படி தான் தேவரடியாள் என்ற பெயர் பின்னாளில் தேவிடியாள் என்ற வசைமொழி பெயரானது போலும்! 

தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தேவதாசிகள் இருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என் பல பெண்கள் இவ்வம்சத்தில் இருந்தனர்.  இவர்கள் அனைவருமே கோவிலில் பணிபுரியும் குலத்தை சேர்ந்தவர்கள்தான். நாளடைவில் இவர்களை தாசிகளாகியது நமது சமூகம். பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய பெண்கள் மேம்பாட்டு ஆணையமும், சமூக புரட்சியாளர்களான ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், தந்தை பெரியார் போன்றோர் எதிர்த்து போராடி, இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்துவிட்டது. இன்று இந்தியா முழுவதும்  தேவதாசிகளே இல்லை என சொல்லப்படுகிறது,

கடந்த கால வரலாற்றில் இப்படிதான் பெண்கள் போற்றப்பட்டும், தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இனியாவது பெண்மையை மதிப்போம்;
பெண்ணினத்தை காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்