ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2017-ல் நடந்தவை !

வணக்கம்,

இந்த வருடம் அப்படி இப்படின்னு எப்படியோ பரபரப்பா போயிடிச்சு. எது நடக்கணுமோ அது நடக்கவே இல்லை. எது நடக்கவே கூடாது நினைச்சோமோ அது தான் நடக்குது. எப்பவுமே இப்படி தான் நடக்குது .. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான். கடந்த வருடத்தில் நம்ம நாட்டில என்னன்னே முக்கிய சம்பவங்கள் நடந்ததுன்னு ஒரு வாட்டி திரும்ப போய் பார்ப்போமா? சில முக்கிய நிகழ்வுகளையம், சமூக வலைத்தளங்களில் பெரிதும் அலசப்பட்ட விஷயங்களையும், அங்கும் இங்குமாய் தேடி பதிவு போட்டிருக்கிறேன். அப்படியே கொஞ்சம் பின் நோக்கி போங்க...

  1. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கியது. 
  2. சின்னம்மா சசிகலாவின் அரசியல் ஆசை. முதல்வராக முழு முயற்சி.
  3. அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு வீரர்கள் கைது. 
  4. சென்னை மெரினாவில் மாணவர்கள் தன்னிச்சையாக கூடி போராட்டம்.
  5.  தமிழகம்மெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் புரட்சியாய் மாறியது. மாபெரும் அறப்போராட்டமாக உருவெடுத்த மெரினா போராட்டம்; 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
  6. போராட்டத்தில் கலந்து கொண்ட பேர் தெரியாத பெண்ணின்  வீர முழக்க பாட்டு. பலர் கோஷ்டியாக பாட்டு பாடி/ ஆடி அமைதியான வழியில்  போராட்டம். 
  7. தமிழக முதல்வர்  ஓ.பன்னிர் செல்வத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் போராட்ட களத்தில் மக்கள் திட்டி தீர்ப்பு. OPS மிக்ஸர் சாப்பிடுகிறார் என கூறி கிண்டல்.
  8. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என செய்தி. போராட்டக் களத்தில்  மாணவர்கள் களைந்து செல்ல வேண்டி போலீஸ் எச்சரிக்கை.  ஆட்டோவுக்கு தீவைப்பு, தடியடி என கலவரத்தை  உண்டாக்கிய காவல்துறை.
  9. ஜல்லிக்கட்டு தடை நீக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக மற்றும் மத்திய அரசு சட்டசபையில் மாற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வந்தது.
  10. 45ஆவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு.
  11. H1B விசா முறைகளில் பல கட்டுபாடுகள் விதிவப்பு.
  12. இரான். இராக், லிபியா,சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு விசா மறுப்பு.
  13.  வெளிநாட்டில் உள்ள பல இந்தியர்கள் வேலை இழக்க வாய்ப்பு என செய்தி பரவியது.
  14. ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக பல ஊர்களில் பிரம்மாண்டமாய் நடந்தது.
  15. சென்னை எண்ணுர்  துறைமுகத்தில், இரு வெளிநாட்டு கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியது. கடல் நீரும், கடல் வாழ் உயிரினமும் சேதம்.
  16. கொட்டிய எண்ணெயை வாளி வைத்து எடுக்க வைத்தது மத்திய/மாநில அரசு. 
  17. OPS முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா. சின்னம்மாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு. கவர்னர் ராம் மோகன் ராவ் மற்ற வேலை காரணமாக மறுப்பு.
  18. OPS ஜெயலலிதா சமாதியில் தீடிரென 40 நிமிடம் தியானம். தியானத்திற்கு பின் ஜெ சாவில் மர்மம், மதுசூதன் பொது செயலாளராக ஏற்க சொல்லி ஜெ சொன்னார், சசிகலா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாய படுத்தினார் என பத்திரிக்கை கூட்டத்தில் கூறல். OPS மக்களிடையே திடீர் ஹீரோ ஆனார்.
  19. சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சொல்லி சசிகலா OPS -ஐ பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம். சின்னம்மா இரவு ஒரு மணிக்கு பத்திரிக்கைக்கு பேட்டி.
  20. இந்தியா 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை.
  21. அடுத்த ஓரிரு நாட்களில் பல எம்.எல்.ஏக்கள் OPS பக்கம் ஆதரவு.
  22. சசிகலா 129 எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூர் 'கோல்டன் பே' ரிஸார்டுக்கு அழைத்து சென்று அடைப்பு. 
  23. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா, சசிகலா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு. சசிகலாவிற்கு நான்கு ஆண்டு சிறை. பெங்களூர் பரப்பானா சிறையில் அடைப்பு.
  24. சிறை செல்வதற்கு முன் ஜெயா சமாதியில் வணங்கி, ஓங்கி அடித்து சபதம். 
  25. சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, அதிமுக பிரதிநிதிகள் ஒப்பு க்கொள்ள எடப்பாடி பழனிசாமி புதிய முதலமைச்சாராக தேர்வு. 
  26. செயல் தலைவர் ஸ்டாலின் சட்டை சட்டசபையில் கிழிந்தது.
  27. ஜெயா இறப்புக்கு பின் தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா அரசியல் நகர்வுக்கு ஆளும் பா.ஜ.கவும்,மோடியும் தான் காரணம் என பலரும் திட்டவட்டமாக எண்ணினார்கள்.
  28. அதிமுக - OPS -ன் அதிமுக (அம்மா) எனவும், EPS -ன் அதிமுக (சசிகலா அணி) எனவும் பிரிந்தது.
  29. ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெயாவின் அண்ணன் மகள் தீபா மாதவன் "எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை " என்ற கட்சியை தொடங்கினார்.
  30. கட்சி ஆரம்பித்த சில நாட்களில் தீபா கணவர் மாதவன் தனி கட்சி கட்சி ஆரம்பித்தார். அதிமுக அவரையும் அவர் மனைவியையும் பிரிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.
  31. கீழடியில் பல பண்டைய தமிழர்கள் உபயோகித்த புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு. தொல்பொருள் ஆராய்ச்சியை நிறுத்த மத்திய அரசு முடிவு. பலர் அதிருப்தி.
  32. ஜெயலலிதாவின் தொகுதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு. இரு அணிகளும் இரட்டை இலைக்கு அடித்து கொண்டன.
  33. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி  தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்தது.
  34. விஜய் மல்லையா லண்டனில் கைதாகி இரண்டு மணிநேரத்தில் விடுதலை.
  35. ஹச்.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியையும் பா.ஜ.காவை யம் எதிர்ப்பவர்கள் Anti Indian என கூறி காழ்ப்பு. 
  36. 'பாகுபலி 2' படம் ரிலீசாகி 1000 கோடியை (உலக அளவில்) எட்டியது. அதே போல ஹிந்தியில் 'டங்கல்' படம் (உலக அளவில் ) 2000 கோடியை எட்டி சாதனை படைத்தது. 
  37. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ஓத்திவைப்பு. 
  38. இரட்டை இலை சசிகலாவுக்கு கிடைக்க, தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறி புது தில்லி போலீஸ் தினகரனை கைது செய்தனர். இரு மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு.
  39. ஆளும் பா.ஜ .க உத்தரகாண்ட், உத்தர பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தல்களில் வெற்றி. பஞ்சாபில் காங்கரஸ் வெற்றி.
  40. சுச்சி லீக்ஸ் வீடியோ வெளியானது.
  41. பல அரசியல்வாதிகள் வீட்டிலும், நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை.
  42. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சொல்லியது வீண்; நாட்டிலுள்ள கருப்பு பணம் வெளிவரவே இல்லை என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து.
  43. விஜய் டி.வியின்  'நீயா நானா'-வில் ஒரு பெண் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்திறங்க வேண்டும் என ஆசை கேட்பு.
  44. வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூட அமைச்சர் செல்லூர் ராஜு முயற்சி. 
  45. ஜி.எஸ்.டி (GST) சட்டம் அமலுக்கு வந்தது. விலைவாசி கடும் ஏற்றம். நுகர்வோர் பலர் அதிருப்தி.
  46. கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் தில்லியில் போராட்டம். 
  47. 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
  48. ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசு தலைவராக தேர்வு. வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக தேர்வு.
  49. தமிழ் நாட்டின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்.
  50. OPS -EPS மனம்/பணம் ஓத்து போக, இரண்டு அணிகளுக்கு ஒன்றாகின. OPS துணை முதல்வரானார். 
  51. .ப்ளூ வேல்' (BLUE WHALE) என்ற இணைய விளையாட்டு காரணமாக உலகில் பல டீன் ஏஜ் மற்றும் சிறுவர்கள் பலி. இந்தியாவிலும் ஊடுருவியது இந்த விளையாட்டு.
  52. மத்திய அரசு ப்ளூ வேல் கேம்மிற்கு தடை விதித்தது. 
  53. ஆதார் எண்ணை பாண் கார்ட், EPF, பாங்க் கணக்கு என எல்லாவற்றிலும் இணைக்க சொல்லி மத்திய அரசு உத்தரவு.
  54. லண்டனில் நடந்த ஐ.சி.சி.போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 180 ரன்னில் வெற்றி.
  55. ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் 'காலா'; போஸ்டர் வெளியீடு.  
  56. கமலஹாசன் சில காலமாக டிவிட்டரில் அரசியல் பதிவுகளை போட்டு புரட்சி. ஏற்கனவே அரசியலில் தாம் இருப்பதாக சொல்லி, புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக நேரடி பதில்.   
  57. "மையம் விசில்" என்ற புது செயலி ஒன்றை சமூக விழிப்புணர்வுக்காக  ஆரம்பித்தார் கமலஹாசன். 
  58. ஜப்பான் கடல் பகுதியில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் பேப்பரும் சவாலாக வட கொரியா மாறியது.
  59.  ரஜினிகாந்த ரசிகர்களை சந்திப்பு. கட்சி பற்றி விரைவில் சொல்ல போவதாக கூறினார். சிஸ்டம் சரியில்லை; போருக்கு தாயாராகுங்கள் என ரசிகர்களிடம் கூறினார். பலர் இது படம் ஓட, அவர் செய்யும் வழக்கமான அரசியல் பூச்சாண்டி என்றும், அவர் வரவே மாட்டார் என்றும் கூறினார்.
  60. விஜய் டி.வியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 பிரபலங்களுடன் ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டு ஜூலி, ஓவியா, ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோருக்கு பலர் ஓட்டு போட்டனர். 4 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஜூலியையும் பலர் திட்டி தீர்த்தனர். ஓவியாவுக்கு தானாய் சேர்ந்த ரசிகர் கூட்டம். பெரும்படையான ஓவியா ஆர்மி மாறியது. கடைசியில் ஆரவ் பிக் பாஸாக தேர்வு. 
  61. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில்  ஹைட்ரொ கார்பன், மீத்தேன் எடுக்க   மத்திய அரசு முடிவு. பல இடங்களில் மக்கள் போராட்டம்.
  62. சினிமா தியேட்டர் டிக்கெட் விலை ஏற்றம். மக்கள் பலரும் அதிருப்தி. தமிழ் ராக்கர்ஸ் காட்டில் அடைமழை. 
  63. மாட்டுக்கறிக்கு மத்திய அரசு தடை. பசுக்களை காக்க வேண்டி சட்டம் கொண்டு வர முடிவு. பலர் எதிர்ப்பு. 
  64. விவேகம் படம் ரிலீசானது. யூ டியுப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தையும் அஜித்தையும் கழுவி கழுவி ஊற்ற, பலர் அதற்கு எதிர்ப்பும் இணைய சண்டைகளும் நடந்தது.
  65. வண்டி ஓட்டும் போது கண்டிப்பாக ஒரிஜினல்டி ரைவிங் லைசன்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம். 
  66. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புத்த பிட்சுக்களால் கொன்று குவிப்பு.
  67. தமிழ் நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு. பல இடங்களில் மாணவர்கள் போராட்டம்.
  68. நீட் தேர்வை தடை செய்ய கோரி மேல்முறையீடு செய்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை. 
  69. 'ஜிம்மிக்கி கம்மல்' மலையாள பாட்டு பிரபலமானது. 
  70. டெங்கு காய்ச்சலால் தமிழ் நாட்டில் பலர் பலி.
  71. கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 325 குழந்தைகள் இறப்பு.
  72. மெர்சல் படம் ரிலீசானது. படத்தில் GST பற்றிய தவறான கருது இருப்பதாக சொல்லி பா.ஜ .க எதிர்ப்பு. விஜய்யை மத ரீதியாய் விமர்சித்த பா.ஜ.காவின்  ஹச்.ராஜா. மக்கள் பலரும் கோபம்.
  73. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இயக்குனர் ஷங்கரின் '2.0 ' பட ஷூட்டிங் முடிவடைந்து, ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரம்மாண்டமாய் நடந்தது. 
  74. 'லட்சுமி' குறும்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கூட்டியது.
  75. நிர்மலா சீதாராமன் புதிய ராணுவ அமைச்சராக பதவியேற்பு.
  76. ஆளும் பா.ஜ .க குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தலில் வெற்றி.
  77. பிட்காயின் (BITCOIN) என்ற டிஜிட்டல் கரன்சி பற்றிய செய்திகள் பெரிதும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தன. பிட்காயினின் மதிப்பு திடீரென ஏறி இறங்கியது. 
  78. பல மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.  ஒரு முறை இந்திய கடற்படையினரே மீனவர்களை சுட்டு கொன்றுள்ளனர். 
  79. புது தில்லியில் காற்றின் மாசு அதிகமாகி ஊரே புகைமண்டலமாய் மாறியது.
  80. சென்னையில் ஒரிரு நாள் பெய்த மழைக்கே சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மிதந்தன.
  81. பஞ்சாபை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாய் தேர்வு.
  82. மீண்டும் ஆர்.கே.நகரில் இடைதேர்தல். தினகரன் சுயேட்சையாக நிற்க முடிவு; குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது. நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிட முடிவு. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தீபா மாதவனும் போட்டியிட விண்ணப்பித்தும், மனு நிராகரிக்கப்பட்டது
  83. ஓகி புயல் கன்னியாகுமரியை தாக்கியது. தமிழக அரசு சரியான எச்சரிக்கை தராததால் பல மீனவர்கள் கடலுக்கு சென்று இறந்தனர். 300க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. சில மீனவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து கரை திரும்பினர்கள். சிலர் கடலில் இறந்து மிதந்தனர்.
  84. இம்முறையும் ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம்   தரப்பட்டது.
  85. இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், தினகரன் அணி ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அது போலி/அனிமேஷன் மார்பிங் என பல சந்தேகங்கள் மக்களுக்கு வந்தது.
  86. ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் டி .டி .வி . தினகரன் மாபெரும் வெற்றி.
  87. பா.ஜ .க பெரும் தோல்வி. நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி.
  88. மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பு. 31 டிசம்பரில் புதிய கட்சி பற்றி சொல்ல உள்ளதாக கூறினார்.
  89. உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான முத்தலாக் சட்டத்தை தடை செய்தது.
  90. சூப்பர் ஸ்டார் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவதாக பேட்டி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க முடிவு. ரசிகர்கள் கொண்டாட்டம்.

இதுக்கு அப்புறம் அடுத்த வருடம் இன்னும் என்னென்னெ நடக்குமோ என தெரியவில்லை. வரும் 2018 ஆம் வருடமாவது எல்லோருக்கும்  நல்ல முன்னேற்றத்தையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

திங்கள், 23 அக்டோபர், 2017

பண்டிகைகளில் ஏன் இந்த வேறுபாடு?

வணக்கம்,

தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது. தீபாவளியும், அதன் கொண்டாட்டங்களும் பற்றிய பதிவு இது. போன வாரமே பதிவிட்டிருக்க வேண்டும். பணி காரணமாக மறந்துவிட்டேன். ஆதலால் இன்று பதிவிடுகிறேன்.

இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு வகையான பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அதில்  தீபாவளியும் ஒன்று. ஒவ்வொருவரும் அவரவர் சம்பிரதாய நம்பிக்கைக்கு தகுந்தவாறு வேறு வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

சீக்கிய மதத்தில் பந்தி சோர் திவாஸ் (Bandi Chhor Divas) என்ற பெயரில், சீக்கியரின் குருவான குரு ஹர்கோபிந்த் சிங்கும், அவருடன் 52 இந்து அரசர்களும்  சிறையிலிருந்து முகலாய மன்னரால் விடுவிக்கப்பட்ட நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சமண மதத்தில் வர்த்தமனா மஹாவீரர் முக்தியடைந்த நாளாக தீபாவாளி கொண்டாப்படுகிறது. புத்தமதத்தில் சில பிரிவினர், லட்சுமி மற்றும் விஷ்ணு கடவுள்களை வணங்குவதன் மூலம் தீபாவாளி கொண்டாடுகின்றனர்.

இதெல்லாம் கூட பரவாயில்லை, மற்ற மதங்கள் என கொள்ளலாம். இந்து மதத்தில், ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மாநில மக்களும், அவர்தம் நம்பிக்கைக்கேற்ப கொண்டாடி வருகின்றனர்.

வடஇந்தியாவில் ராமர் ராவணனை வதம் செய்து சீதையுடன் அயோத்தி திரும்பும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அவர்களின் வருகையை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் தீபமெற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். சிலர் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் கழித்து வருகின்ற நாளை தீபாவளி என சொல்கின்றனர்.

சிலர் இந்து கடவுளின் செல்வத்தின் அதிபதியான திருமகளை (லட்சுமி தேவியை) வணங்குகின்றனர். பாற்கடலை கடைந்தன் மூலம் லட்சுமி பிறந்து, தீபாவளி நாளன்று விஷ்ணுவை மணக்கிறார் என்று சொல்கின்றனர்.

deepavali-festival-india

தீபாவளியன்று அசாம், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் லட்சமிக்கு பதிலாய் காளியை (காளி பூஜை) வழிபடுவார்கள். உத்தர பிரதேசத்தில் பிரிஜ் பகுதியில் தீபாவளியை கிருஷ்ணனுக்கு கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.

மார்வாரிகளின் புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.  தீபாவளிக்கு அடுத்த நாள் குஜராத்திகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்று தான் அவர்கள் புது கணக்கு ஆரம்பிப்பார்கள்.

ஆந்திராவில் தீபாவளி இரு நாட்களாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நரக சதுர்த்தசி என்றும், மறுநாள் தீபாவளி அமாவாசை எனவும் கொண்டாடப்படுகிறது. அதே போல கர்நாடகாவிலும் ஐந்து நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் இருநாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் சிலர் காரடையார் நோன்பு எடுப்பார்கள். தென்னிந்தியா முழுவதும் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி இரு நாட்களாகவும், சில இடங்களில் 5 நாட்களுக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டிகையின் பெயர் ஒன்றுதான். வழிபடும்/கொண்டாடும் முறை வேறுபட்டிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படும் காரணங்களே எப்படி வேறுபடும் என புரியவில்லை. அதுவும் ஒரே தேசத்தில், ஒரே மதத்தில் ?!?!

அடுத்து தமிழர் பண்டிகைக்கு வருவோம். கார்த்திகை தீபம். தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாளில் (பெரிய கார்த்திகை என சொல்வார்கள்) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் நாளில் தமிழகமெங்கும் மக்கள் வீடுகளில் தீபமேற்றி கொண்டாடுவர்.  அன்று முதல் மூன்று நாட்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆனால் வைணவ பிராமண பிரிவினர், அதற்கு அடுத்த நாள் தான் தீபம் ஏற்றுவார்கள். அது எப்படி பொதுவான பண்டிகை கூட ஓவ்வொரு சமூகத்திற்கும், அதன் உட்பிரிவுக்கும் மாறுகிறது என தெரியவில்லை.

அதே போல விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வைணவ பிரிவினரில் சிலர் விநாயகர் சதுர்த்தியை பெரிதாக கொண்டாட/வழிபடுவதில்லை. சைவ பிரிவினர் சிவராத்திரி கொண்டாடுவது போல வைணவர்கள் கொண்டாடுவதில்லை. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதேசி கொண்டாடுகின்றனர்.

பிராமணர் (சைவம்/வைணவம்) அல்லாதோர் பெரும்பாலும் நவராத்திரி (கொலு வைத்தல்) கொண்டாடுவதில்லை. கிருஷ்ண ஜெயந்தியும் எல்லா இந்து சமூக மக்களும் கொண்டாடுவதில்லை. ஏன் இந்த பாகுபாடு? எல்லா இந்துக்களும், எல்லா கடவுள்களையும் வணங்குகின்றனர். யார் இந்த கோட்பாடுகளை இயற்றியது? ராமானுஜர் காலம் தொட்டே வைணவ-சைவ கலாச்சார வேற்றுமை இருந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் பண்டிகைகளுக்குள் ஏன் இந்த சம்பிரதாய வேறுபாடு? எந்த காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது? இல்லையெனில் என் புரிதல் தவறானதா? யாராவது புரிய வையுங்களேன்!

தகவல்: கோரா, விக்கிபீடியா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஸ்பைடர் - விமர்சனம்

வணக்கம்,

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக நடித்து, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் SPYDER. டீசரில் சும்மா ஹைப்புக்காக ஒரு எலக்ட்ரானிக் சிலந்தியை காட்டியுள்ளார்கள்; டிரைலரில் சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படம் போல காட்டினார்கள். மேலும் இப்படம்  ஒரு ஸ்பை திரில்லர் (SPY THRILLER) என சொல்லப்பட்டதால், இப்படத்தின் எதிப்பார்ப்பு கூடியது. அது மட்டுமல்லாமல், டெக்னாலஜி, ஆக்ஷன், ஸ்பை திரில்லர், மாஸ் ஹீரோ என இவற்றோடு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கம் என்பதால் படம் பார்க்க ஆவலுடன் கிளம்பினேன்.

spyder-movie-review

உளவுத்துறையில் பொது மக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் பணியில் இருக்கிறார் மகேஷ் பாபு. ஒட்டு கேட்டு, அவர்களுக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அப்படி ஒரு நாள் ஒட்டு கேட்கும் போன் காலில், ஒரு முகம் தெரியாத பெண்ணுக்கு உதவ போய், அந்த பெண்ணும், மகேஷ் பாபுவின் தோழியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி இந்த கொலை மட்டுமில்லாமல், பல தொடர் கொலைகளை செய்து வருகிறான் என விசாரணையில் தெரிகிறது.  நாயகன் அந்த சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்தாரா, அவன் ஏன் கொலை செய்கிறான், டெக்னாலஜி கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

டோலிவுட்  பிரின்சுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். மகேஷ் பாபு தெலுங்கில் பேசி நடித்தாலே அவர் முகத்தில் பெரியதாய் ரியாக்ஷன் எதுவும் இருக்காது. தமிழில் கேட்கவே வேண்டாம்... திரைக்கு வந்து வசனம் பேசி சென்றிருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார். பெரிதாய் நடிப்பு இல்லையென்றாலும் படம் முழுவதும் தெரிகிறார். நாயகி ரகுல் பிரீத் சிங், மற்ற கமர்ஷியல் படங்களில் ஹீரோயினி வருவது போல இரண்டு பாட்டு, நாலு சீனுக்கு வந்து சென்றுள்ளார். அவர் கதாபாத்திரம் பெரிதாய் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.

ஹீரோவின் அப்பா, அம்மா, நண்பனாக RJ  பாலாஜி, போலீஸ் மேலதிகாரி என பலர் படத்தில் பேருக்கு வந்து சென்றுள்ளனர். இன்னும் எத்தனை படத்தில் தான் போலீஸ் மேலதிகாரிகளை காமெடியாக காட்டுவார்களோ தெரியவில்லை. பிளாஷ்பாக்கில் வரும் சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்த சிறுவன்,  நடிப்பில் மிரட்டி இருக்கிறான். அவன் ஏன் அப்படி சைக்கோ கொலையாளியானான் என்று சொல்லப்படும் கதையையும் ஓரளவு ஒத்து கொள்வதாய் இருக்கிறது. பரத் சிறு வில்லன் பாத்திரதில் நடித்து சென்றிருக்கிறார்.

இந்த படத்துக்கு பாடல்களே தேவையில்லை. வரிகளில் தெலுங்கு வாடை வருவதால், பாடல்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்பைடர் தீம் மீசிக் மட்டும் த்ரில்லர் படத்திற்கு ஏற்றது போல நன்றாக இருக்கிறது.

படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். இறைவியில் நடித்ததை விட நன்றாகவே  நடித்துள்ளார். மகேஷ் பாபு இண்ட்ரோக்கு கிடைத்த கைத்தட்டலைகளை விட இவருக்கு கிடைத்தது அதிகம். ஒருவேளை நான் தமிழில் பார்த்ததானால் என்னவோ, எனக்கு அப்படி தோன்றியுள்ளது. அவ்வப்போது எஸ்.ஜே. சூரியாவின் நக்கல் பேச்சும், குரூர முகபாவனையும் நம்மை அசத்துகிறது. படத்தின் முழு பலமே இவர் நடிப்பு தான்.

முதல் பாதி படு வேகமாய் முடிகிறது. இரண்டாம் பாதி இன்னும் மாஸாக இருக்கும் என நினைத்து கொண்டிருந்தால் ஓவர் மசாலா, லேடிஸ் சென்டிமன்ட் என  தலையை சொரிய வைக்கிறார்கள். வில்லனை சாதாரண வீட்டு பெண்களை கொண்டு பிடிப்பது என்பது அவ்வளவு ஈஸியாக எடுத்து கொள்ள முடியவில்லை. இந்த சீன் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்க்கும் போது "அட அக்கருமமே!" என சிரிக்க தான் தோன்றுகிறது. அதே போல டெக்னாலஜி கொண்டு வில்லனை கண்டுபிடிப்பது  எல்லாம் நன்றாக தான் இருக்கிறது... ஆனால் கொஞ்சமாவது லாஜிக் பார்த்திருக்கலாம். ஹ்ம்ம்.. சரி விடுங்க.. எதோ ஒண்ணு .. படத்தின் ஓட்டத்தில் டெக்னாலஜி ஓட்டைகளை மறந்திடலாம். கிளைமாக்சில் பேருக்கு ஒரு சமூக கருத்தை வலுக்கட்டாயமாய் திணித்துத்துள்ளார்கள். முருகதாஸ் தமிழ் படங்களுக்கு ஒரு மாறியும், தெலுங்கு படத்துக்கு ஒரு மாறியும் கதை பண்ணுவார் என நினைக்கிறேன். இயக்குனர் திரைக்கதையை என்னும் வலையை மட்டும் இன்னும் கொஞ்சம் சீராக பின்னியிருந்தால் SPYDER உண்மையிலேயே செம மாஸ் கமர்ஷியல் த்ரில்லராக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை... ஒரு முறை பார்க்கலாம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

∴பேஸ்புக்கில் ஏன் பகிர்கிறார்கள்?

வணக்கம்,

நம் பெற்றோர்கள் நமது சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் நெருக்கமான நபர்களிடம் பகிர்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றையும் ∴பேஸ்புக்கில் கட்டாயம் பகிர்ந்து விடுகிறோம் .

இந்த பழக்கம் பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் உண்டு,  என்னையும் சேர்த்து தான்... பொதுவாக எந்த மாதிரியான ஆட்களெல்லாம் ∴பேஸ்புக்கில் இருக்கிறார்கள் ? அவர்கள் எதையெல்லாம் பகிர்கிறார்கள் ? ∴பேஸ்புக்கில் ஷேர் செய்வோரில் பல டைப் மக்கள் உண்டு.

facebook-likes-and-shares

Type1: தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நாட்டுநடப்பு, உலக நடப்பு, அரசியல் நடப்பு, வீட்டு நடப்பு, அவர் சொந்த கடுப்பு, வெறுப்பு, மலரும் நினைவுகள் என போட்டு கொண்டே இருப்பார்கள். சிலர் ஓரிரு வரிகளில் போடுவார்கள்; சிலர் பத்தி பத்தியாய் போடுவார்கள். இவர்கள் போஸ்ட் போட்டவுடன் லைக்ஸ் போட நண்பர்கள் கியூவில் நிற்பார்கள்.

Type2: ஒரு சிலர் நாட்டின்/மக்களின் பிரச்னைகளை புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்.  இவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை.? ஏன் அப்படி செய்தார்கள்? ஒருவேளை இப்படி இருந்தால்... என போஸ்ட் போட்டு பகிர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Type3: அடுத்தது பொதுவான மக்கள். ஜோக்ஸ், விடியோக்கள், மீம்ஸ், சினிமா செய்திகள், பொன்மொழிகள், கிச்சன் டிப்ஸ், விழிப்புணர்வு, ஓட்டலில் சாப்பிட போனது, ஊருக்கு போனது, ஊர் சுற்றியது என பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை பேஸ்புக் வந்து லைக்களையும், ஷேர்களையும் போட்டு தள்ளி விடுவார்கள். நம் ∴பேஸ்புக் பேஜை திறந்தால், அதில் இருக்கும் 25 notification-ல் 23 அவர்களுடையதாய் இருக்கும்.

Type4: சிலர் தங்களுக்கு பிடித்தமான போட்டோ, விடீயோக்கள் என சிலவற்றை மட்டும் ஷேர் செய்வார்கள்.

Type5: இவர்களில் சிலர் எப்போது எங்கு சென்றாலும் உடனே ∴பேஸ்புக்கில் location checkin பண்ணிவிடுவார்கள். Feeling happy, Feeling sad, Feeling exited, Feeling கடுப்பு என அவர்களின் மூட்-ஐ ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள்.


Type6: இன்னும் சிலர் வெறும் போட்டோக்களையும், விடீயோக்களையும் பார்த்து ஸ்ரோல் செய்து கொண்டே செல்வார்கள். மற்றபடி, லைக், ஷேர் எதுவும் செய்யமாட்டார்கள்.

Type7: இன்னொரு சாரார் எப்போதாவது ஏதாவது பொன்மொழியோ, போட்டோவோ, சாமி படமோ ஷேர் பண்ணுவார்கள்.

Type8: வெறும் க்யூட்டான குழந்தைகள் போட்டோ, பூக்களின் போட்டோ மட்டும் இருந்தால் அது பெண்களின் ப்ரோஃபைலாக தான் இருக்கும். பல சமயங்களில் அது ∴பேக் ஐ.டி யாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Type9: சிலர் தொழிலுக்காகவும், அரசியல் பரப்புரைக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களது வெற்றியே எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட் வருகிறது என்பதை கொண்டே தெரியும். ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார மார்க்கெட்டிங் நோக்கிற்காக செய்யப்படுபவை.

இவர்களெல்லாம் ஷேர் பண்ணுவது ஏதற்கு? எல்லாம் ஒரு லைக்குக்கு தான். Like, Love, Ha Ha, Wow, Sad, Angry என அதாவது ஒன்றை யாரவது அவர்கள் போட்டோவுக்கோ, போஸ்டுக்கோ ரியாக்ட் செய்திருக்க வேண்டும்; கமெண்ட் செய்திருக்க வேண்டும். இதற்காகவே பலர் தவம் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு சின்ன லைக் மற்றும் கமெண்ட்டுக்காக தான் இப்படி அலைகிறார்கள்.

ஒரு போட்டோவோ, போஸ்ட்டோ ∴பேஸ்புக்கில் போட்டுவிட்டு எத்தனையோ பேர் லைக்ஸ், கமண்ட் வருகிறது என ∴போனையே பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100 லைக்ஸ்க்கு மேல் வந்து விட்டால் மகிழ்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ∴போனில் "மச்சி என் போட்டோவுக்கு லைக் போடுடா... இன்னும் 3 லைக்ஸ் இருந்தா செஞ்சூரி போட்டுருவேன்" என சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தார். 100 லைக்ஸ் வாங்கிய பின் என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. லைக்குகள் வாங்கி குவிப்பது ஏன்? ஒரு சிறு உதாரணம்: ஒரு நாய் தெருவில் போகும் வண்டிகளையெல்லாம் பார்த்து குரைத்து கொண்டே பின்னால் ஓடும். விரட்டி பிடித்து வண்டி நின்ற பின் என்ன செய்ய வேண்டும் என அதுக்கு தெரியாது. வண்டி நின்றபின் மீண்டும் இருமுறை குரைத்து விட்டு போய்விடும். அது போல தான் லைக்ஸ் வாங்கி குவிப்பவரின் நிலையும். 100, 500 அல்லது 1000 லைக்ஸ்க்கு பின் என்ன செய்வார்கள் என அவர்களுக்கும் தெரியாது. இதேல்லாம் ஒரு சின்ன அல்ப சந்தோஷதிற்கு தான்.

பலரும் அவர்களது சொந்த விஷயங்களை கூட ∴பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கு போகிறோம்? எப்போது வருவோம்?.. உடம்பு சரியில்லை.. நாய் செத்து போச்சு.. பாட்டி மண்டைய போட்டுட்டாங்க.. என எல்லா கருமத்தையும் பகிர்ந்து விடுகிறார்கள். ஏதற்காக இப்படி எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? எதற்கு இப்படி லைக் வாங்க துடிக்கிறார்கள் என யோசிக்கும் போது, இதற்கெல்லாம் ஒரு வித மனவியாதியே காரணம் என்கின்றனர் மனநல ஆர்வலர்கள். அவர்களுடைய மூளையில் ஒரு விதமான செரோடினின் (Serotinin) என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதை Happy Serotinin என்றே மருத்துவ உலகில் சொல்லுகின்றனர். அது சுரக்க சுரக்க மகிழ்ச்சி பெருகும். சாப்பாடு, தூக்கம், சினிமா, பணம், சரக்கு, விளையாட்டு, உடலுறவு, ஊர் சுற்றுதல், சமூக தொண்டு, பாராட்டு என எதை செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து இருக்குமோ, அதுபோல சிலருக்கு இது போன்ற ∴பேஸ்புக் லைக் மற்றும் பகிர்தல் மூலம் அவ்வகை ஹார்மோன்கள் சுரக்கிறது. அவை ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், ஒரு வித போதை உணர்வையும் தரக்கூடியவை என உளவியல் ஆர்வலர்கள் சிலர் சொல்கின்றனர்.

அதனால் தான் சிலர் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அடிக்கடி செல்பி எடுப்பதும், இந்த வியாதியினால் தான். இதற்கு தீர்வு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாம் மனக்கட்டுப்பாட்டோடு இருக்க பழகி கொள்ள வேண்டும். அது தான் முடியலையே என்கிறீர்களா?  முயற்சி செய்து பாருங்களேன்! நானும் முயற்சி செய்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விவேகம் - தோசை சுடும் கதை!

வணக்கம்,

கடந்த இரு நாட்களாக இணையத்தில் நடக்கும் காரசாரமான விமர்சன கச்சேரியின் புனைவு பதிவு இது.

-- AK தோசை கடை --

என்ன சார் ... தோசை எப்படி இருக்கு ? செமையா இருக்குல்ல..

ஹ்ம்க்கும்... நல்லாவேயில்லை .. எனக்கு சுத்தமா புடிக்கல..

என்ன சார்..இப்படி சொல்றீங்க ??

ஆமா! புடிக்கலைனா.. புடிக்கலைன்னு தான் சொல்வாங்க...

மாவாட்டுன மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டு மெனக்கெட்டிருக்கார் சார்..

தோசை நல்லா இல்லலைன்னா, நல்லா இல்லைன்னு தான் சொல்லுவாங்க.. அதுக்காக மாவாட்டுனவர் பாவம்.... ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி செஞ்சார்..  தோசை சுட்டவர் தங்கமான மனுசன்.. பொசுக்குன்னு நல்லாயில்லைன் னு சொல்ல கூடாதுன்னா எப்படி???... வாட் இஸ் திஸ் ???

ஆமான்டா ! நீ அவுங்க சுட்ட தோசையை மட்டும் நல்லா இருக்குனு சொல்லுவடா ... ..

நல்லா இருந்தா சூப்பர்ன்னு சொல்ல போறேன்... இல்லன்னா இதே பதில் தான்... இதுக்கு முன்னாடி சுட்ட தோசையெல்லாம் மட்டும் என்ன அமிர்தம் மாறியா இருந்துச்சு.. எதோ கொடுத்த காசுக்கு மசால் தோசை, ரவா தோசை, ஸ்பெஷல் தோசை அப்படீன்னு சாப்பிட்டு வரோம்...  அரைச்ச மாவிலேயே அரைச்சு தோசை சுட்டாலோ, தோசை மாவு புளிக்கவில்லை என்றாலோ, கல்லில் ரொம்ப  கருக விட்டாலோ, பிச்சி பிச்சு தோசை இருந்தாலோ, வேகாம இருந்தாலோ, தொட்டுக்க சப்புன்னு இருந்தாலோ யாருக்கும் சாப்பிடவே புடிக்காது...

போடங்கு இவனே... பெருசா சொல்ல வந்துட்ட நீ ... தோசை சுடுவது எப்படின்னு உனக்கு தெரியுமா? நீ முதல்ல ஒழுங்கா சுட்டு காட்டு பாப்போம்.. 

அட லூசு பயலே.... எனக்கு தோசையெல்லாம் சுட தெரியாது...கொடுத்த காசுக்கு தோசை சாப்பிட்டுவிட்டு  நல்லா இருக்குதான்னு  இல்லையான்னு  சொல்வேன்... நல்லா இல்லைனா அடுத்த வாட்டி நல்லா சுடு...சுட்டு காட்டு.. அப்புறம் பேசு...

இது மாணிக்க விநாயகம் சுட்ட தோசைக்கு மட்டுமல்ல..  கில்லி வேலுக்கும், விருமாண்டிக்கும்.. அவ்வளவு ஏன் ??? ஆளானப்பட்ட ராஜா லிங்கேஸ்வரனுக்கும் கூட பொருந்தும்.. தோசை மோசமா இருந்தா மோசம்ன்னு தான் சொல்லுவாங்க...

சரி தான்டா.. அதுக்குன்னு கொஞ்சம் கூடவா பிடிக்கலை.. வெள்ளைக்காரன் ஸ்டைல தோசை சுட்டிருக்கோம் தெரியுமா? 

டேய்...  ஸ்டைல் ஓகேடா.. டேஸ்ட் ???? தட்டுல காட்டும் போது பீட்ஸா மாறிதான் இருத்துச்சு... சாப்பிட்டா தானே தெரியுது, அது வெறும் டெக்கரேட் பண்ண கலர்புல் பெசரட்டு-ன்னு..

கடைசியா என்ன தான் சொல்லுற நீ???

தோசை நல்லாவே இல்லைன்னு சொல்லல... கொஞ்சம் நல்லா வந்திருக்க வேண்டிய தோசை தான்.... ஓகே!  ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம் ! போதுமா???

அதுதுதுதுதுதுது !!!!!!!

( பதிவின் கரு மட்டும், ஏதோ ஒரு பேஸ்புக் போராளியின் பதிவிலிருந்து சுட்டது.. )

vivegam-review

எனது பார்வையில் -

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து படம் சொதப்பியதால், படத்தை பலரும் வசை மொழிகின்றனர். விவேகம் என பெயர் வைத்து விட்டு படுவேகமாய் ஓடுகிறது. அதன் வேகத்தில் நாமும் ஓடாவிட்டால் காட்சிகள் புரிய வாய்ப்பில்லை. ஹேக்கிங் , ஹாலோகிராம், ட்ராக்கிங் என டெக்னாலஜிகள் கதையில் புகுத்தியிருப்பது பலம். இருந்தாலும் அதை பற்றி விரிவாக சொல்லியிருக்க வேண்டியது இயக்குனரின் கடமை. உதாரணத்திற்கு இதே தல படமான ஆரம்பம் படத்தில் uplink, downlink, server hacking, thumb impression (கை நாட்டு) போன்ற டெக்னாலஜி சார்ந்த விஷயங்களை ஆடியன்ஸுக்கு புரிய வைக்க சில காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருப்பார்கள். அது போல விவேகத்திலும் வைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

கமெர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்ற எழுதப்படாத விதியிருந்தாலும், அதை ஓரளவு தான் ஒத்து கொள்ள முடியும். இன்ட்ரோ சீனில் டேமிலிருந்து குதிப்பது, கிளைமாக்ஸில் (காஜல்) பாடலுடன் வில்லனிடம் சண்டை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கடுப்படிக்கிறது. 'யார்?'  படத்தில் சோமயாஜீலு பாட, நளினி  சாமி வந்தது போல ஆடுவார். சேம் பிளட் இங்கேயும் வருது.

தல அஜித் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். உண்மை தான்... ஆனால் அதை சிறுத்தை சிவா அதை வீணடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தல -க்காக ஒருமுறை பார்க்க.......லாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா??

வணக்கம்,

" இன்ஜினியரிங் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம். " இது கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக, பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய (மூட) நம்பிக்கை. பெண்ணோ/பையனோ பத்தாவது முடித்தது முதல், பிளஸ் 1 -ல் பஃர்ஸ்ட் அல்லது செகண்ட் குரூப் எடுத்து, பின்னர் பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மார்க் வாங்கி ஜெயித்து, Maths Physics Chemistry -ல் குறைந்தபட்சம் கட்டாப்ஃ 150 மேல் எடுத்து, முட்டி மோதி கவுன்சிலிங் மூலமாகவோ, கோட்டா மூலமாகவோ எப்படியாவது இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடித்து தம் பிள்ளைகளை வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவு...ஆசை... எல்லாம்.

அவர்கள் காலத்தில் இன்ஜினியர்களுக்கு நல்ல மதிப்பும், சம்பளமும் இருந்தது. இப்போது தெருவுக்கு 100 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். மேலும் 2000-த்தின் ஆரம்பத்தில் உலக மயமாக்கல், கணினி மயமாக்கல் என மென்பொருள் கம்பெனிகள் அடியெடுத்து வைத்த போது பி.எஸ்.சி /பி.ஈ. படித்தவர்கள் மற்ற துறையில் இருந்தவர்களை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இரண்டாண்டில் வெளிநாட்டு பயணம், கை  நிறைய சம்பளம் என எண்ணங்களும் ஆசைகளும் வானளவு உயர்ந்தன. இது போல கம்ப்யூட்டர் படித்து பொறியாளரான பெரியாளான பல ஜாவா சுந்தரேசன்களை பார்த்து, நம்ம புள்ளையும் இப்படி சம்பாதிக்கும் என எண்ணி எல்லா பெற்றோரும் தங்களது மனதிலும், தமது பிள்ளைகளின் மனதிலும் இன்ஜினியரிங் கனவை விதைத்தனர்.

engineering-graduates-unemployment

"நான் தான் சரியா படிக்கல.. குமாஸ்தாவாகவே இருந்திட்டேன்.. என் புள்ளையாவது நல்லா படிச்சு, இன்ஜினியரா வந்து, நல்ல சம்பாதிக்கட்டுமே",  என்ற எண்ணம் தான்.  மேலும் +2 படிக்கும் மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்புக்கு நல்ல ஸ்கோப்.. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒருத்தருக்கும் இன்ஜினியரிங் படித்து அறிவை பெருகி கொள்ள வேண்டும்; நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; புதிதாய் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அறிவுக்காக பொறியியல் படிப்பை எடுக்கும் பஞ்சவன் பாரிவேந்தனை போல மக்கள் மிக மிக குறைவே!

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும், மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது. ஏற்கனவே இதை பற்றி பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???  என்ற பதிவில் எழுதியுள்ளேன்.     

இப்போது பலரின் கேள்வியும் இதுதான்.. ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஏன் இன்ஜினியரிங் படித்த பலருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை? இன்றைய உண்மை நிலை என்ன என்பதை பல பேருக்கு தெரிவதில்லை.

ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?  காரணம் வேறென்ன??? அவர்கள் தேவைக்கு அதிக அளவில் இருப்பதால் தான்.

இந்தியாவில் கிட்டத்தட்ட  10 லட்சம் டாக்டர்களும், 12 லட்சம் வக்கீல்களும், 2 லட்சம் ஆடிட்டர்களும்  இருக்கின்றனர். இன்ஜினியர்கள் எண்ணிக்கை மட்டும் கோடிக்கும் மேல்! 120 கோடி ஜனத்தொகைக்கு மேல் இருக்கும் பாரத தேசத்தில் வெறும் 8 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அதனால் டாக்டர்கள் சொற்பமாய் இருந்து, வியாதிகளும், நோய்களும் அதிகமாகி போனதால் மருத்துவர்களுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது. இது போல பணம் உள்ளவர்கள், அதை என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யவேண்டும்? என சொல்ல சி.எ  (CA) படித்தவர்கள் தேவை. ஆகவே அவர்களுக்கும் அதிக சம்பளம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3345 பொறியியல் கல்லூரிகள்  (2015-16) இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இதன்படி கடந்த 15 ஆண்டில் எத்தனை பேர் படித்து முடித்திருப்பார்கள் என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் சுற்றுலாத்துறை, ஹோட்டல் நிர்வாகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, நிதி நிர்வாகம், வர்த்தகம் மற்றும் வணிகம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கல்வித்துறை (மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களை தவிர), நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என எதிலுமே இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைபடுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ??? வருடந்தோறும் பல வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் பல ரகுவரன் பி.டெக்-களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

Core கம்பெனிகள் என்று சொல்லப்படும் தயாரிப்பு தொழில்துறை ( manufacturing companies ) நிறுவனங்கள் முன்னாளில் நிறைய இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் இத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) 17%  மட்டுமே! அதனால் அவர்கள் ஆட்சேர்ப்பையும் குறைத்து விட்டனர்.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் அமெரிக்காவை உதாரணமாக சொல்வார்கள். நானும் அதையே எடுத்து கொள்கிறேன். அமெரிக்காவில் அவர்களுடைய பதினெட்டு டிரில்லியன் டாலர்கள் ($ 18 trillion ) பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 1 லட்சம் இன்ஜினியர்கள் தான் உருவாக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் வெறும் இரண்டு டிரில்லியன் டாலர்கள் ($ 2 trillion ) மட்டுமே! 15 லட்சம் இன்ஜினியர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விளக்கை சுற்றும் புற்றீசல்களாக, மக்கள் இன்ஜினியரிங் சேர முக்கிய காரணம்: வாய்ப்பையும் பணத்தையும் அள்ளி கொட்டும் ஐ.டி கம்பெனிகள். நாட்டின் பொருளாதாரத்தில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ கம்பெனிகளின் பங்கு வெறும் 9% மட்டுமே! அதனால் தான் இங்கு இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் திரும்பும் பக்கமெல்லாம் கல்லூரிகளை திறந்து வைத்து, படித்தவுடன் வேலை, கை நிறைய சம்பளம் என கூவி கூவி அழைக்கின்றனர். பல கல்லூரிகளில் போதிய வசதிகளும், சரியான ஆசிரியர்களும் இல்லாததால் நல்லதொரு பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.  அடுத்து பாடத்திட்டம். நம் பொறியியல் பாடத்திட்டங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே இருக்கிறது. செய்முறை மூலம் படிப்பது/சொல்ல தருவது மிக குறைவு. இப்படி இருந்தால் பெயரளவில் தான் நாம் பொறியாளர் என்று சொல்லி கொள்ள முடியும். நம் மீதும் தவறு இருக்கிறது. ஒரு காலத்தில் யாரை பார்த்தாலும் பி.எ. படிக்கிறேன் என்று சொன்னார்கள்; பின்னர் டிப்ளோமோ (பெரும்பாலும் டி.எம்.இ ) படிப்பை எல்லோரும் படித்தார்கள்; பின்னர் பி.காம் பிடித்தார்கள்; அதன் பின் தான் இன்ஜினியரிங் வலையில் விழுந்தார்கள். அடுத்தவர்கள் படிக்கிறார்கள், நாமும் படிப்போம்/பிடிக்க வைப்போம் என்று எண்ணாமல் மாணவரின் திறன் பார்த்து, ஈடுபாடு அறிந்து கல்லூரி படிப்பில் சேர்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களும், இன்றைய போட்டியான உலகில் முறையாக முயற்சி செய்து, உழைத்து, இன்ஜினியரிங் படிக்கும் போதே அவர்களுடைய  திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பலர் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்த பின்னரும், சமூக திறன்களையும், மென் திறன்களையும் வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றனர். படித்து முடித்த இன்ஜினியர்கள் பலருக்கு வேலை கிடைக்காமல் போக இதுவும் ஒரு மிக பெரிய காரணம் என்று பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கின்றனர். சரியாய் படிக்காமல், திறன்களை வளர்த்து கொள்ளாமல் இன்ஜினியரிங் படித்த பலரும் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்மதம் இல்லாத இடத்தில வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ இன்ஜினியரிங் படித்து ஒருவருக்கு கூட சரியான வேலை கிடைக்கவில்லையா ? யாரும் வீடு வாசல் கார், ஃபாரின் என செட்டில் ஆகவில்லையா?? என கேட்பது புரிகிறது. செட்டில் ஆகிறார்கள்.. நூற்றில் 40 பேர்தான். படித்து முடித்த உடனேவோ, சில காலம் கழித்தோ நல்ல வேளையில் செட்டில் ஆகி விடுகின்றனர். மீதம் உள்ள 60% சரியான வேலை இல்லாமல், சம்பந்தமில்லாத வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர்.

தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை தடுத்தல்; பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்; மாணவரின் ஈடுபாடு அறிந்து கல்லூரியில் சேர்த்தால் போன்ற பிரச்சனைகள் சரி செய்தாலே போதும், நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை தவிர வேறு ஏதாவது உங்களுக்கு கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம்.

தகவல் - Quora, Google 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 27 ஜூலை, 2017

மூட நம்பிக்கைகள் சில!

வணக்கம்,

நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்?  எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.


1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?
பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும்.  நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும்  பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான்  நாம்  பல படங்களிலும் பார்த்துள்ளோம்.

உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.

2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.

உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு.  அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.

3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ? 
மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது  நடக்கும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.

4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?
சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.

உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக  இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.

5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?
வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.

உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.

6.) தும்மினால் கெட்ட சகுனம்- 
நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.

உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.  (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).

7.)  புரட்டாசி மாதம் ஏன் மாமிசம்  சாப்பிட கூடாது ?
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக)  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!

8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?
இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள்  கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?
ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.

உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)

10.)  உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்
வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.

உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

11.) இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கும்!
கடந்த பதினைந்து அல்லது இருபது  வருடங்களாக பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய நம்பிக்கை. இதற்கு விளக்கம் தர கொஞ்சம் நிறைய எழுத வேண்டும். அதனால் இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஆதியோகியும், தியானலிங்கமும் !

வணக்கம்,

கடந்த வாரம் உறவினர் வீட்டு திருமணதிற்காக கோவை செல்ல வேண்டியிருந்தது. இவ்வளவு தூரம் போகிறோமே, ஈஷா தியான லிங்கத்தையும், ஆதியோகி சிலையையும் பார்க்கலாமே என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. எனக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தூரம், இந்தியா பர்மாவை பூமி பந்தை சுற்றி வந்து தொடும் தூரம்தான். இருப்பினும் அப்படி என்ன தான் இருக்கிறது அந்த சிலையில் என்ற ஆவலில் எனது செட்டு மக்களுடன் பயணப்பட்டேன்.

பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரித்தாலும், சென்னையை போல வெயில் அவ்வளவாக தெரியவில்லை. சீதோஷ்ணம் இதமாக தான் இருந்தது. இரவில் லேசாக குளிரவும் செய்தது. கிளம்பும் போது மணி 3. போகும் வழியெல்லாம் மலைகள்.கோவையை சுற்றிலும் மலைகளும் காடுகளும் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்க, அழகே அழகு. மேகத்தை முட்டும் மலைகளும், மலையின் உச்சியில் சூரிய ஒளியும், வழியெல்லாம் பச்சை பசேலென மரங்களும்...அப்பப்பா... பார்க்கவே அருமையாக இருந்தது. அழகை ரசித்து கொண்டே வந்தோம்.

போகும் இடம் வழி தெரியாததால் ஓர் இடத்தில வழி கேட்டோம். அவர் சொன்ன அடையாளப்படியும், கூகுளை மேப்ஸ் படியும் நாங்கள் பேரூர் ஏரியை கடந்து செல்ல வேண்டும். அந்த இடம் வந்ததும், இங்கு ஒரு ஏரி இருக்க வேண்டுமே என யோசித்தோம்... வெறும் மண் மேடும் புதர்களும்தான் இருந்தது. ஏரிக்கான அடையாளம் ஒரு சொட்டு கூட இல்லை. போகிற வழியில் இன்னொரு ஆறு (நொய்யல் ஆறு என நினைக்கிறேன்), அங்கு 10/15 லாரிக்கார்கள் அவள் மேலாடையை அழித்து, உள்ளாடையை உருவி கதற கதற கற்பழித்து கொண்டிருந்தார்கள். 'தசாவதாரம் ' படத்தில் கமல்-அசின் மணல் மாபியாவை பார்ப்பது போல, நாங்களும் லாரிகள் மணலை அள்ளி புழுதியை கிளப்பி கொண்டு பறந்துகொண்டிருந்ததை பார்த்தோம். உச்சு கொட்டிய படியே இவற்றையெல்லாம் கடந்தோம். போகும் வழியெல்லாம் ஈஷா 11 கி.மீ., காருண்யா கல்லூரிகள் 10 கி,மீ., பூண்டி 5 கீ.மீ, வெள்ளயங்கிரி 8 கி,மீ. என அறிவிப்பு பலகைகள் இருந்தன.

ஈஷா தியான ஆசிரம வளாகத்தில்தான் ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆதியோகி சிலை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம் (அனுமதி இலவசம் தான்). பூலுவம்பட்டி காடுகள். மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ, இயற்கை அன்னையின் மலைகளின் மடியில் அமைந்துள்ளது ஈஷா ஆசிரமம். நுழைவு வாயிலே கருங்கற்களினால் செய்யப்பட்டது போல, பார்க்க கலைநயத்தோடு இருந்தது. சில கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் பிளாட்∴பாரம் போடப்பட்டிருந்தது. கார் பார்க்கிங்கில் விதம் விதமான கார்கள். குறைந்தது 200 கார்கள், வேன்களாவது இருக்கும். உள்ளே வரும் வழியிலிருந்த ஆதி யோகியை பார்க்க முடிந்தது. வெட்ட வெளியில் வெகு தூரத்தில் ஒரு கரும் சிலை. நல்ல ஒரு தலைநோக்கு தொலைநோக்கு பார்வை, இந்த இடத்தை உருவாக்கி வடிவமைத்தவருக்கு!

காரை விட்டு இறங்கி உள்ளே சென்றோம். சத்குரு பற்றியும், இந்த இடத்தை பற்றியும் தவறாக ஏதும் பேச வேண்டாம்; மீறி பேசினால் நம்மையும் Anti-Indian என முத்திரை குத்தி விடுவார்கள் என எள்ளி நகைத்தபடியே நடந்து சென்றோம். சுற்றிலும் மலைகள், கண்ணுக்கு எட்டியவரை காடுகள், ஒட்டடை குச்சி போல ஒரே உயரத்தில் வளர்ந்து நிற்கும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள், ஆளையே தூக்கி செல்லும் அளவுக்கு சில்லென காற்று, கல்யாண வீட்டிற்கு வந்தவர்களை ஆதி யோகியே "வாங்க! வாங்க!" என வரவேற்பதுபோல, எங்கோ மலைத்தொடரில் பெய்யும் மழை சாரல் காற்றில் பறந்து வந்து எங்கள் மேல் தெளித்தது. பார்க்கவும், உணரவும் மிகவும் ரம்மியமாக இருந்தது.

அருகில் செல்ல செல்ல ஆதி யோகியின் உயரம் தெரிய ஆரம்பித்தது. 112 அடி உயரம். அம்மாடியோவ்!!! பெரிய்ய்ய்ய சிலை தான்.  யோகாவில் சொல்லப்படும் மோட்சத்திற்கான 112 வழிகளை குறிக்கும் பொருட்டும், மனித உடலில் உள்ள 112 சக்ரங்களை குறிக்கவும் 112 அடி சிலையாம். 2 வருடங்களாக சிலையை வடிவமைத்து, எட்டு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதாம். சிலைக்கு கீழிருந்து பார்த்தால், லேசாக கண் திறந்திருப்பது போல இருக்கிறது. காதில் வளையம்; வெள்ளை துணி கொண்டு கட்டியிருந்தார்கள். அதுவே அந்தரத்தில், காற்றில் ஆடி கொண்டிருந்தது. கழுத்தில் பாம்பு தலையின் உருவம் மட்டும். நாங்கள் பார்க்கும் போது வெற்று கழுத்து (போட்டோவில் மாலைகளுடன் பார்த்ததாக நியாபகம்). பரந்து விரிந்த மார்பு. (56"...?!!? ஹம்ம்கூம்.... இல்லை.. அதை விட பெரிசு...) கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள சிலை (#WorldLargestBust). உலகளவில் அதிக மார்பளவு கொண்ட சிலை என பெயர் பெற்றுள்ளது. சிலையை சுற்றி அரையடி இடைவெளியில் வளைந்து நெளிந்த சூலங்களை வேலியாக வைத்துள்ளனர். முதலில் இது கற்சிலையாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் வேலியை தாண்டி சிலையை தட்டி பார்த்தால், இரும்பால் செய்யப்பட்டது போல "டொங்..டொங்.. " என சத்தம் கேட்கிறது. உள்ளே வெற்று இடமாக (hollow) காலியாக இருக்கிறது. இராம நாராயணன் படத்தில் வருவது போல, இரும்பில் ஒரு மெகா சைஸ் பிரம்மாண்ட செட் போட்டு வைத்துள்ளனர். மேலும் சிலையின் ஒரு பக்கத்தில் கதவு போல ஒரு வழி இருந்தது. சிலைக்கு உள்ளே போகவும், மேலே செல்லவும் படிக்கட்டுகள் இருக்கிறதா என தெரியவில்லை. மேலும் உள்ளே ..... (எல்லாமே என் யூகம் தான்!)

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

சிலையின் அருகே சிறு மண்டபம்.  அங்குள்ள சிறு லிங்கதை சுற்றி வந்து, கங்கை நீரை வாங்கி ஊற்றுகின்றனர். அவ்வளவு தான் ஆதியோகி !

என்னதான் நாம் உருகி உருகி ரசித்தாலும், இவ்வளவு பெரிய காட்டை அழித்து, இயற்கையை அழித்து, இந்த ஆதியோகி சிலையை நிறுவியுள்ளார்கள் என நினைக்கும் போது வயிற்றெரிச்சல் தான் வருகிறது. மேலும் இந்த இடமானது யானைகள் கடக்கும் இடம் என சொல்கின்றனர். இது கிட்டத்தட்ட மரத்தை வெட்டிவிட்டு மரச்சாமாண்கள் செய்து அழகு பார்ப்பது போல தான்.

அடுத்து ஈஷா தியான லிங்கம். ஆதியோகி சிலையிலிருந்து 10 நிமிட நடைப்பயணத்தில் இருக்கிறது ஈஷா தியான மண்டபம். தலைக்கு 10 ரூபாயில் மாட்டு வண்டி பயணமும் உண்டு. இயற்கையை ரசித்தபடி நடந்தே சென்றோம். இன்னும் முழுமையாக கமர்ஷியலுக்கு வரவில்லை ஆதியோகி. அதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறு சிறு ஸ்டால்கள் சொல்கிறது.

மண்டபம் உள்ளே போகும்முன் செருப்பு, கைப்பை, கைபேசி போன்றவற்றை ஒரு இடத்தில் டோக்கன் போட்டு வைத்துவிட சொல்கின்றனர். ஈஷா மண்டபம் - ஒரு கோவில் போல பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே சூரிய குண்டம், சந்திர குண்டம் என புனித நீராடும் இடங்கள் இருக்கிறது. சூரிய குண்டம் என்பது செயற்கை அருவி போல ஒன்றை செய்து, 30அடி ஆழத்தில் உள்ள குளத்தில் புனித நீர் விழுகிறது. குளத்தின் நடுவில் லிங்கம் இருக்கிறது. உள்ளே சென்று லிங்கத்தை தொட்டு வணங்கலாம். அதில் ஆண்கள் மட்டும் புனித நீராடலாம். சந்திர குண்டம் என்பது பெண்களுக்கானது. அதில் பெண்கள் மட்டுமே போக/நீராட முடியும். ஆங்காங்கே ஈஷா யோகா பற்றியும், தியான லிங்கம் பற்றியும் LED டி.விக்களில் ஆவணபடங்கள் ஓடுகிறது. இதை தாண்டி உள்ளே சென்றால், தியான லிங்கத்தை நோக்கி சுமார் 15 அடி உயரமுள்ள நந்தி நம்மை வரவேற்று நிற்கிறது.

தியான மண்டபதிற்கு உள்ளே செல்லும் போதே அமைதி காக்க சொல்கின்றனர். பெண்கள் காலிலுள்ள கொலுசைகூட கழட்ட சொல்கின்றனர். அதாவது அமைதியை அவர்களே உருவாக்குகின்றனர். அங்கு வேலை சேவகம் செய்பவர்கள் எல்லோருமே வெள்ளை நிற சீருடை அணிந்துள்ளனர். எல்லோருமே நுனி நாக்கு ஆங்கிலமும், இந்தியும் பேசுகின்றனர். புதிதாய் வருபவர்களை, அப்படியே கோழியை அமுக்குவது போல 'லபக்கென' அமுக்க தயாராய் இருக்கிறார்கள். நாங்கள் கொஞ்சம் உஷாராய் நகர்ந்து கொண்டோம்.
dhyanalingam entrancee


dhyanalingam

தியான மண்டபம் உள்ளே பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே கருப்பு நிற கிரானைட் கல்லில் லிங்க பைரவி திருவுருவ சிலையும், பதாஞ்சலி சித்தர் சிலையும் இருந்தது. பதாஞ்சலி சித்தர் சிலையருகே,  ஒரு பெண் வெள்ளை சீருடையில் தலைவிரி கோலமாய் கீழே தரையில் அமர்ந்து, தலைகுனிந்து தியானத்தில் அமர்ந்திருந்தாள். அமைதியான ஒரு இடத்தில திடீரென ஒரு உருவத்தை, ஒரு பெண்ணை அங்கு பார்த்ததும் உடன் வந்திருந்தவர்கள் பயந்தே போயினர். உள்ளே சென்றோம். தூரத்தில் புகைமட்டத்தில் கருவறை போன்ற தியான மண்டபத்தில், தியான லிங்கம் தெரிந்தது. பக்கவாட்டில் உள்ள பிரகாரம் போன்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில், மக்கள் சிலர் உட்கார்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அதில் சில வெளிநாட்டு மக்களும்  இருந்தனர். எங்களையும் உட்கார சொன்னார்கள். நேரமின்மை மற்றும் சீக்கிரம் போக வேண்டும் என்கிற காரணத்தால் திரும்பி விட்டோம். தியான மண்டபத்திலுள்ளே 18 அடி உயரமுள்ள தியானலிங்கமும், அந்த இடத்தின் அமைதியும் மனதை உலுக்கி எடுக்கும் என இதற்கு முன் போனவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை... சரி லிங்கத்தை தூரத்திலிருந்து பார்த்து விட்டோம் என்ற நிறைவுடன் வீடு திருப்பினோம்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 21 மே, 2017

இந்திக்காரனும் மதராசியும்!

வணக்கம்,

பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா?

பணி நிமித்தமாக அல்லது படிப்பிற்காக தமிழ் நாட்டிற்கு பலதரப்பட்ட வயதினரும் வருகிறார்கள். இதில் பலர் இங்கயே தங்கி விடுகிறார்கள். அப்படி புதிதாய் சென்னை அல்லது தமிழகம் வருவோரிடம், தமிழ்நாடும் தமிழர்களையும் பற்றி கேட்டதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட இந்தியர்களிடம் தமிழை பற்றியும், தமிழ்நாடு பற்றியும் கேட்டதற்கு:
  1. தமிழ் நாட்டில் வெயில் அதிகம். அதுவும் சென்னையில் ரொம்ப அதிகம்.
  2. உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. எல்லா ஓட்டல்களிலும் இட்லி, சாம்பார் வடை மட்டுமே பிரதானமாய் கிடைக்கும். வட இந்திய உணவு வகைகள் கிடைப்பது அரிது.
  3. தமிழர்கள் கருப்பாக, அழுக்காக தான் இருப்பார்கள்.   
  4. தமிழர்கள் எல்லோரும் மூன்று வேளையும் வாழையிலை போட்டு தான் சாப்பிடுவார்கள். 
  5. பெரும்பாலும் லுங்கி அல்லது வேஷ்டி தான் கட்டுவார்கள். 
  6. தமிழ் மக்கள் பெரும்பாலானோர் பிராமணர்கள். பலரும் நெற்றியில் (சிவலிங்கம் நெற்றியில் இருப்பது போல) திருநீறு வைத்திருப்பார்கள். 
  7. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி பேச தெரியாது. இந்தியை மொழியை எதிர்த்தவர்கள்; இன்றும் எதிர்ப்பவர்கள். எல்லோருமே தமிழ் மட்டும்தான் பேசுவார்கள்.
  8. தமிழ் மொழி பேச/கற்க மிகவும் கஷ்டமானது.
  9. அனைவரும் ரஜினிகாந்த், கமலஹாசன் ரசிகர்களாகவே இருப்பார்கள்.  
  10. தென் மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லோருமே மதராசிகள் தான்.
  11. மலையாளமும், தமிழும் கிட்டத்தட்ட ஒன்று.
  12. பிறமொழி பேசும் மக்களுக்கு தமிழர்கள் உதவ மாட்டார்கள். 
  13. ஆட்டோக்காரர்கள் வழிப்பறியாக பணம் வசூலிப்பார்கள்.
  14. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக  பிரச்சனை நடக்கிறது. அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள்.
  15. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம்.
அதே போல நாமும் வடநாட்டினரை பற்றி என்னன்ன நினைத்துள்ளோம் என்பதை ஒரு சிலரிடம் கேட்ட போது, இந்த பதில்களெல்லாம் வந்து விழுந்தது.
  1. வடஇந்தியாவில் எல்லா மாநிலத்தவரும் இந்தி மட்டுமே  பேசுவார்கள். இந்திக்காரர்கள் எல்லோருமே வட்டிக்கடை 'சேட்'.
  2. எல்லோருமே வெள்ளைவெள்ளேறென்று மைதாமாவு போல இருப்பார்கள். 
  3. இளைஞர்கள் பலர் மேற்கத்திய கலாச்சராத்தைதான் பின்பற்றுவார்கள். 
  4. மூன்று வேலையும் சப்பாத்தியையம், ரொட்டியையும்  மட்டுமே சாப்பிடுவார்கள். 
  5. அவர்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலப்படம் செய்து பேசுவார்கள். 
  6. திருமணத்திகாக பெரும் தொகையை செலவு செய்வார்கள்.
  7. எல்லோருமே பான் பீடா/ குட்கா போடுவார்கள்; பீடாவை வாயில் போட்டு குதப்பி, கண்ட இடங்களில் துப்பி கொள்வார்கள். 
  8. பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள்.
  9. பீஹார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர்   படிப்பில் பின்தங்கியவர்கள். 
south-indian-vs-north-indian

இது போல இன்னும் நிறைய இருக்கிறது. இதில் நாம் நினைப்பதும் சரி, மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பதும் சரி, அனைத்துமே உண்மை கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒத்து போகலாம்.

இது பொதுவாக எல்லா வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ் மக்களை பற்றி நினைக்கும் விஷயங்கள்தான். இவை எல்லாமே நம் சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுபவை. இன்னும் சில, மக்களின் மேம்போக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இவை.

தமிழ் படங்களில் மலையாளிகளை டீக்கடை சேட்டன்களாகவும், அவர்கள் வீட்டு பெண்களை இன்றும் முண்டு கட்டி, துண்டு போர்த்திய பெண்களாய் காட்டுவதும், தெலுங்கர்களை பின் குடுமி வைத்து நெற்றியில் பெரிய நாமம் போட்டவர்களாகவும், பெண் துப்புரவு தொழிலாளர்களளை தெலுங்கு பேசுபவர்களாகவே காட்டுவதும், படித்த இந்தி பேசுபவர்களை உயர் தட்டு மக்களாகவும், படிக்காத இந்தி மக்களை அடியாட்கள் போல காட்டுவதும் உண்டு. இன்னும் ஒரே மாதிரியாக (stereotypical) மற்ற மாநில மக்களை காட்டுவது மக்களின் ஒருவித தவறான கண்ணோட்டதையே குறிக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமானால், இப்போதுள்ள தலைமுறைக்கு தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டி மிகைப்படுத்தி வைத்துள்ளது போல, இவர்கள் (வேற்று மாநிலத்தவர்கள்) இப்படித்தான் என்று நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள்.

இந்தியில் பாலிவுட் பாதுஷாவின் படத்தில், தமிழ் மக்கள் எப்படியெல்லாம் இருக்கமாட்டார்களோ அப்படி தான் காட்டுவார். நூடுல்ஸில் தயிர் ஊற்றி சாப்பிடுவது, இளநீரில் லசி கலந்து சாப்பிடுவது, தமிழ்நாடு ஆண்கள் பட்டையான தங்க பர்டாரில் வெள்ளை வேட்டியணிந்து (கேரளா ஸ்டைலில்) அங்கவஸ்த்திரம் போட்டிருப்பார்கள், சிலோனுக்கு பெட்ரோல் கடத்துவதால் கடலில் சுட்டு கொள்ளப்படுகிறார்கள் என காட்டியுள்ளார். இன்னும் சில படங்களில் ஆங்கிலத்தை தப்பாகதான் பேசுவார்கள், யாருக்குமே இந்தியில் பேச/பதில் சொல்ல தெரியாது என பல செயற்கையான விஷயங்களை நம் செய்வது போல சொல்லியிருப்பார்கள். 

சினிமாக்கள் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களையும், மற்ற கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கிறோம். அதை சொல்லும் போதும், காட்சிப்படுத்தும் போதும் எதார்த்தத்தை காட்டினாலே போதும். அதை தமிழ் சமூகமும், மற்ற சமூகமும் திரையில் சரியாக செய்தாலே, நமக்குள் வடக்கு தெற்கு என்ற கலாச்சார இடைவெளி இல்லமல் போகும். இதை தவிர உங்களுக்கு வேறு ஏதாவது கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதியலாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 19 மார்ச், 2017

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !

வணக்கம்,

நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ஒரு சில செய்கையை குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர்.

பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும்.

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அவ்வாறு சொல்லப்படும் சில பழமொழிகளின் சரியான விளக்கங்களை இணையத்தில் பல பதிவுகளை தேடி படித்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

tamil-proverbs-meanings

பழமொழிகள் :

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்: 
மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்: 
ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்: 
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்: 
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்: 
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்று கொண்டு,  மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!
பொருள்:
சேலை கட்டும் பெண்களை நம்பாதே!
உண்மையான பொருள்:
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!
சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம். 
பொருள்: 
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்: 
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

10.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
பொருள்: 
மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்:
வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

11.) ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!
பொருள்: 
நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது.
உண்மையான பொருள்:
நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

12.) பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!
பொருள்:
பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்;இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது, போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள்:
பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது

13.)  வீட்டுக்கு வீடு வாசப்படி  !!
பொருள்:
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓவ்வொரு பிரச்னை இருக்கும்.
உண்மையான பொருள்:
மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

14.) கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!
பொருள்:
நாயை பார்க்கும் போதெல்லாம் அதை அடிக்க கல் அகப்படுவதில்லை; அதுபோல கல்லை காணும் போதும் அடிவாங்க நாய் சிக்குவதில்லை.
உண்மையான பொருள்:
கோவிலில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய்  தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.

15.) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பொருள்:
மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
உண்மையான பொருள்:
புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனது புண்பட்டிருக்கும் போது,  தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

16.) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
பொருள்:
விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.
உண்மையான பொருள்:
ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு  மருந்து உண்ண வேண்டும்.

17.) போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. 
பொருள்:
என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.
உண்மையான பொருள்:
மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

18.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
பொருள்:
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

19.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.
பொருள்:
ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.
உண்மையான பொருள்:
மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும்,  போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

20.) மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,
உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

இன்னும் நம் வழக்கில் உபயோகப்படுத்தும் பழமொழிகள் நிறையவே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

வாடிவாசல் திறக்கட்டும்!

வணக்கம்,

ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனது, ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், ச்ச்சீ...ன்னம்மாவின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. உச்சநீதிமன்ற தடையால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்போட்டி நடைபெறவில்லை. ஓவ்வொரு முறையும் மாநில அரசும், மத்திய அரசும் தடையை அகற்றுவோம் என சொல்லி சொல்லி ஓட்டு வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. இந்த தடைக்கு பெரும் பங்கு பீட்டா (peTA), விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India - AWBI) போன்ற அமைப்புகள் தான் காரணம். இவை தான் மிருக வதை, காட்டுமிராண்டித்தனம் எனக்கூறி ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.

jallikattu

இதற்கு தமிழக மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த வருடம் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் விழிப்புணர்பு ஏற்பட்டதே காரணம். அதில் பெரும்பங்கு சமூக வலைத்தளங்களையே சேரும். கடந்த வருடத்தில் இசையமைப்பாளரான 'ஹிப்-ஆப்' ஆதி  எழுதி, பாடி, நடித்த ஒரு 'டக்கரு டக்கரு' பாடல் யூ-ட்யூபில் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு வித விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தியது. அந்த தீப்பொறியிலிருந்து கிளம்பிய புகை தான் இன்று போகி வரை கொழுந்து விட்டு எரிகிறது.

பின்னர் பலரும் சமூக வலைத்தளங்களிமும், ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டின் பெருமை, நமது கலாச்சாரம் பற்றியும், பாரம்பரியம் பற்றியும் எழுதி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராடி வந்தனர். கடந்த வாரம் ஜனவரி 8-ஆம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் பகிர்ந்தை கொண்டு சென்னை மெரினாவில் 20,000 பேருக்கு மேல் (பெரும்பாலும் இளைஞர்கள்) ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தடை நீங்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடந்த வேண்டும் என்ற போராட்டம் மாறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று கர்ஜித்து வருகின்றனர். #WeDoJallikattu

WeDoJallikattu

ஜல்லிக்கட்டை தடை செய்து நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என சொல்கிறார்கள். தொன்மையான நமது கலாச்சாரத்தை அவர்கள் அழித்து ஒன்றும் செய்ய போவதில்லை; அவ்வளவு சுலபத்தில் செய்யவும் முடியாது. இதன் பின்னால் பெரிய அரசியலே இருக்கிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

ஜல்லிக்கட்டை தடை செய்தால், காளைகள் உழவுக்கும், அடிமாட்டுக்கும் போகும். பின்னர், நாட்டு மாடுகள் பற்றாக்குறையால், இனப்பெருக்கத்திற்கு காளைகளே இல்லாமல் போகும். வெளிநாட்டிலிலிருந்து காளைகளை இறக்க நினைப்பார்கள் (நாட்டு கோழியை விடுத்து பிராய்லர் கோழியை இறக்கியது போல). இல்லாவிடில் காளைகள் இல்லாமல் இனப்பெருக்கம் பெரிதும் குறையும்; பால் தட்டுப்பாடு வரும். செயற்கை முறையில் கருவூட்டல் (Artificial Insemination - AI ) மூலம் தான் கன்று ஈன முடியும் என்ற நிலை வரும். இந்த AI -ன் காப்புரிமைகள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இருக்கிறது. இது கிட்டத்தட்ட நம் இன மாடுகளை அழித்து, வியாபாரிகளின் சந்தையாக்க முடிவு செய்யப்பட்டு, பல வெளிநாட்டு  நிறுவனங்கள் இந்தியாவில் பீட்டா போன்ற அமைப்புகளை தூண்டிவிட்டு, நம்மையும் நம் கலாச்சாரத்தையும் நசுக்கப் பார்கின்றனர்.

இதெல்லாம் உண்மை என்று சொல்லும் விதமாக ஜல்லிக்கட்டு ஆர்வலரும், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான சிவசேனாபதியும், அவரது வழக்கறிஞரும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. "ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இந்தியாவில் ஒரே குடும்பம் தான்... சின்னி கிருஷ்ணா மற்றும் நந்தினி கிருஷ்ணா ஆகியோர் தான். இவர்கள் தான் இந்தியாவின் மொத்த விலங்குகள் நல அமைப்பையும் கையில் வைத்து கொண்டு, வெளிநாட்டு NGO களுக்கு கைக்கூலியாக உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்திய விலங்குகள் நல வாரியதில் (AWBI) துணை தலைவராக (Vice Chairman) சின்னி கிருஷ்ணா பதவி வகிக்கிறார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவரும் (Chairman) இவர்தான். அது மட்டுமல்லாமல் இந்திய விலங்குகள் நல வாரியதில் ஒரு வெளிநாட்டு பெண் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஒரு வெளிநாட்டு பெண் எப்படி இந்தியாவிலுள்ள சட்டரீதியான ஆலோசனை வழங்கும் அமைப்பில் உறுப்பினராக முடியும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்."



மேலும் சின்னி கிருஷ்ணா அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய அரசின் முடிவை கேட்க மாட்டோம் என்றும், இம்முறையும் ஜல்லிக்கட்டு நடக்காது என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார்ன்.


இந்த வீடியோக்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு ஊடகமும் பெரும்செய்திகளாய் ஒளிபரப்பவில்லை. இப்போது தான் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்திய அரசு கார்ப்பரேட் சாதகமாக செயல்படுகிறது. மாநில அரசு தடையை மீறி நடத்தவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், தமிழக மக்களுக்கு அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு வாயடைத்து நிற்கிறது. மாநில மற்றும் தேசிய ஊடகங்களும், இதை பெரிதாக்க விரும்பவில்லை. இதனை வெறும் பரபரப்பான செய்திகளாகதான் பார்க்கின்றனர்.

யார் தடுத்தாலும் சரி, தடை நீக்காவிட்டாலும், ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறி வருகின்றனர். இம்முறையாவது வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் திமிறி எழுகிறதா என பார்க்கலாம்! நம் தமிழ் மண்ணின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வீரமும் காப்பாற்றப்படட்டும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்