ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான நடு நிலையான பதிவு
திருடப்பட்டதை சொல்லாது எப்படி
திருட்டைத் தடுப்பது..திருடர்களை
பயமுறுத்தியாவது வைப்பது

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

சரியான சமயத்தில் சரியான பதிவு..பெண்பிள்ளைகளை பயந்துதான் வளர்க்க வேண்டியிருக்கு

விமல் ராஜ் சொன்னது…

தேவையில்லாததை விட்டுவிடுவது தானே சரி..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

iramuthusamy@gmail.com சொன்னது…

நடுநிலையான கருத்துகள் கொண்ட பதிவு.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!!