புதன், 30 செப்டம்பர், 2020

சிவப்பு விளக்கு பகுதி

வணக்கம்,

காமாத்திபுரா - மும்பையில் விபச்சாரம் நடக்கும் ஒரு பகுதி. ஆம் திரைப்படங்களிலும், செய்திகளிலும் பார்க்கும் அதே சிவப்பு விளக்கு பகுதி தான். சோனாகாச்சி - இந்த பகுதியும் அதே வகையறா தான். கொல்கத்தாவில் இருக்கிறது.

நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள்/ கேள்விப்படாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா  மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ?  இதற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிக்கிறதா? இப்போதைக்கு ஆசியாவில் மிக பெரிய விபச்சார விடுதி /தொழில் நடக்கும் இடம் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தான் இருக்கிறது.


காமாத்திபுரா வரலாறு-
1795 - பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் அப்போதைய பம்பாய் மாகாணத்தில் சில பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம். ஏழு தீவுகளை (இப்போது மும்பை) ஒருங்கிணைக்க பாலம் கட்ட பல தொழிலாளர்களை அழைத்து வந்தனர். ஆந்திரா பகுதியிலிருந்து சில தெலுங்கு பேசும் 'காமாத்திஸ்' என்னும் கூலி வேலை செய்யும் மக்களை அழைத்து வந்து லால் பஜாரில் குடிவைக்கபட்டனர். அந்த இடமே பின்னாளில் காமாத்திபுரம்/காமாத்திபுரா ஆனது. பாலம் கட்டும் வேலை முடிந்ததும், சரியான வருமானம் இல்லாததாழும், ஏழ்மை நிலையாலும் அந்த ஊரில் உள்ள சில பெண்கள் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் எண்ணிக்கை கம்மியாக தான் இருந்தது; பின்னர் மராட்டிய மண்ணில் பல ஊரிலிருந்து ஏழை பெண்கள்களும், குடும்ப பெண்களும் கடத்தி வரப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டனர். இக்காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளும், ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களுடைய இச்சைக்காக காமாத்திபுரம் வந்து போக, இது பாலியல் தொழிலுக்கான இடமாக மாறியது. ஆங்கிலேய அரசுக்கும் இதன் காப்பாளர்கள் மூலம் வரியும் வந்து கொண்டிருந்தது.

பின்னர் நேபாளம் , சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்களும், மற்ற வெளிநாட்டு பெண்களும் ஒவ்வொரு தெருக்களில் குடியமர்த்தப்பட்டு பல மன்னர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்கும் பெண்கள் விருந்தாக்கபட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவெங்கும் எல்லா வீடுகளிலும் தொழிலில் இருந்ததால், இதை முறைசெய்ய பாலியல் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து, உரிமம் வழங்கப்பட்டது. பெண்களை தேடி வருவோர்கள், எந்தெந்த வீடுகளில் உரிமம் எண்ணும், சிகப்பு விளக்கும் எரிகிறதோ, அது தான் வேசிகளின் வீடு/விடுதி. அந்த பகுதியில் பல வீடுகளில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதால், அப்பகுதி சிவப்பு விளக்கு பகுதி என பெயர் பெற்றது. இவர்களுடைய காம இச்சைக்காகவும், பேராசைக்காகவும் பல பெண்கள்  நாசமாக்கப்பட்டு, இக்கொடுமை இன்று வரை தெடர்ந்து வருகிறது. சிறு வயது பெண்கள் முதல் பருவ வயது பெண்கள் வரை பலர் இங்கு வலுக்கட்டாயமாகவும், தெரியாமல் கடத்தி கொண்டு இங்கு விடப்படுகிறார்கள். இங்கு பிறக்கும் (பெண்) குழந்தைகள் பருவமடைந்ததும் இதே தொழிலில் ஈடுபடுத்த பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும், ஆங்கிலேய அரசிடமிருந்து அங்குள்ள பாலியல்  தரகுகளிடமும், தாதாகளிடமும் இவ்விடம் கைமாறியது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாவிடில், தொழில் கனச்சிதமாக நடந்து கொண்டிருந்தது. ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பாலியல் நகரமாக இருந்த காமாத்திபுரா,  1990 களின் ஆரம்பத்தில்  சில சமூக நல ஆர்வலர்களின் முயற்சியுடன், வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள் சிலர் மீட்கப்பட்டு மறுவாழ்வு தரப்பட்டது. மேலும் அக்காலத்தில் எய்ட்ஸ் நோயால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கபட்டதால், ஆணுறை பற்றிய விழிப்புணர்வும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இந்த தொழிலிருந்து மீட்கப்பட்டனர்.    

சமீபத்திய கணக்கீட்டின்படி பல பெண்கள், பாலியல் தொழிலை விட்டு சாதாரண வாழ்க்கையில் வாழ ஆரம்பித்துவிட்டனர். இப்போது சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இன்றும் இது போன்ற ஜல்சா காரியங்களுக்கு இவ்விடம் பெயர் பெற்று தான் விளங்குகிறது.

சோனாகாச்சி வரலாறு-
சோனா-தங்கம் ; காச்சி- மரம். சோனாகாச்சி என்பதற்கு பொன்னாலான மரம் என்று பொருள். வங்காளத்தில் முன்பொரு காலத்தில் ஒரு தாய் தன்னுடைய மகன் இறக்கும் வேளையில் 'நான் இறந்தும் மரமாக இருப்பேன்' என்று கூறியதை கொண்டு ஒரு மரம் நட்டு, மசூதியும் கட்டினாள். பின்னர் அந்த இடம் தான் சோனாகாச்சி என்று அழைக்கப்பட்டது.

மும்பை காமாத்திபுரம் போல இவ்விடம் பாலியல் நகரமாக எப்படி மாறியது என்பதற்கு சரியான தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆசியாவில் மிக பெரிய பாலியல் நகரத்தில் சோனாகாச்சி முதல் இடத்தில் உள்ளது. 90-களின் ஆரம்பத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பின்னாளில் பலரின் உதவியுடன் பல பெண்கள் மீட்டெடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

ஏற்கனவே சொன்னது போல மும்பை, கொல்கத்தா மட்டுமல்லாமல், புதுடெல்லி, நாக்பூர், வாரணாசி,ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களில் பாலியல் நகரங்கள் இன்றும் இருக்கிறது. பாலியல் தொழில் (Prostitution) செய்வது இந்தியாவில் சட்டபூர்வமான தொழில் என்பது பலருக்கு தெரியாது. ஆனால், விடுதி அமைத்து தொழில் நடத்துவது, (பெண்) தரகு வேலை பார்ப்பது போன்றவை தான் சட்டத்துக்கு எதிரானவை.

இக்கொடுமைகளை எந்த அரசும் களையவோ, பாலியல் நகரங்களை தடை செய்யவோ முற்படவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
 

நன்றி!!!
பி.விமல் ராஜ்  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

1 Comments:

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மைதான் எந்த அரசுமே இவைகளை ஒழித்து விட முயலவே இல்லைதான்.