சனி, 31 அக்டோபர், 2020

தமிழக ஊர்களின் பெயர் காரணம்

வணக்கம்,

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. அதை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. நான் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.

name reason for tamil cities

சென்னை-    
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள். 

கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது என்றும்,  போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra)  என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது என்றும், மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டணம் என் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

(சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை வேறொரு பதிவில் பகிர்கிறேன்.)

செங்கல்பட்டு-
செங்கழுநீர் பட்டு என்ற பெயர் தான் இப்போது செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி- 
இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது.

தூத்துக்குடி - 
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளயது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் Tuticorin என்று ஆங்கிலத்தில் பதிவானது.
  
ஆற்காடு- 
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம்- 
மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 

கோயம்புத்தூர்-
சங்க காலத்தில் கோசர் இனத்தை சேர்ந்த சிற்றரசர்கள் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். அவர்கள் பெயராலேயே கோசர்புத்தூர் என்றும் கோசம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கோயம்புத்தூர் என்றானது.

கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது.

இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது.

உதகமண்டலம் -
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பல படுகர், இடும்பர், தோடா என மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மொழியில் ஒத்தை கல் மந்தை /ஒத்தை கல் மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயர் ஆங்கிலேயரின் வாயில் நுழையாததால் Ootacamund என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசு உதகமண்டலம் என்று மாற்றியது .

ஏற்காடு- 
ஏரியும் காடும் இருக்கும் பகுதி. ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்றானது.
    
திருச்சிராப்பள்ளி -
முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்பள்ளி என்று அழைக்கபட்டுள்ளதது.  சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையை குறிக்கிறது. திருசிராய்பள்ளி  என்ற பெயர் தான் திருச்சிராப்பள்ளி என மருவியுள்ளது.

மேலும் திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டு பயனடைந்ததாக  சொல்லப்படுகின்றது.அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.

சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனாலும் இது சிராப்பள்ளி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

தஞ்சாவூர்-
எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.
 
சிதம்பரம் -
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர். அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது. மேலும் இவ்விடத்தில் தில்லை மரங்கள் சிறந்த காடடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சிபுரம்-
மிக பழமையான நகரங்களில் ஒன்று. காஞ்சி மலர்கள் அதிகம் இருப்பதால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் தலைநகரமாகி பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு, இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

மதுரை-
குமரிக்கண்டம் காலம் தொட்டு, சங்க காலம், இடைக்காலம் என எல்லா காலங்களிலும் பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்துள்ளது. வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது.  
 
பெரு மதில்களும், அதற்குள்  குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை  என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் மதுரை என்றானது. 

ஈரோடு - 
பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

திருநெல்வேலி-
இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது. மூங்கில்/ நெல் நிறைந்த பகுதி நெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது.       
 
கன்னியாகுமரி-
முன்னபொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.

புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில்  சிவனை வழிபட்டு வந்தடைந்தாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னி பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர்அழைக்கப்பட்டுள்ளதது. 

கும்பகோணம்- 
சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளதது. புராண கதையின் படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மாறியுள்ளது.

தருமபுரி-
சங்ககாலத்தில் இவ்வூர் தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தகடு என்பதற்கு இரும்பு என்று பொருள். தாது பொருட்கள் இருக்கும் இடம் என்பதால் தகடூர் என்றானது. பின்னாளில் 15/16ஆம் நூற்றாண்டில் தருமபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது போல தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர்கள் மருவியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கள் ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’

இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அருமை! சுவாரசியமான தகவல்கள்

விமல் ராஜ் சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

விமல் ராஜ் சொன்னது…

@தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வருகைக்கு மிக்க நன்றி!

Unknown சொன்னது…

பாரம்பரிய ஊர் பெயர்களை விளக்கத்தோடு பதிவிட்டமைக்கு கரம் தாழ்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

சிவலிங்கம் சிவகுமாரன் சொன்னது…

பாடா குறிச்சி அல்லது பானடா குறிச்சி என்ற பெயரில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள் எதுவும் உள்ளதா?