வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

சனி, 1 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் I - விமர்சனம்

வணக்கம்,

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - இந்த வரலாற்று-கற்பனை புதினத்திற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. கிட்டதட்ட 70 ஆண்டு கால சினிமா ஜாம்பவான்களின் கனவு  இது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் படமாக முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனை நாவலை படித்தவர்கள் ஒவ்வொருத்தரின் மனதிலும் அதன் கதாபாத்திரங்களும், உருவங்களும் நிழலாகவே உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் திரைபாத்திரங்களில் மூலம் ஓரளவு சரியாக தேர்ந்தெடுத்துள்ளதாகவே பட போஸ்டர்கள் மூலம் அறியலாம். 

அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத் குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யா மேனன், பெரிய வேளானாக பிரபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிரெய்லரே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தான் இருந்தது. கிராஃபிக்சில் சோழ நாடும், பழைய தஞ்சையும் கோட்டையும், இயற்கை வளங்களும், போர் கட்சிகளும் பிரமிக்க வைக்கின்ன்றன. Color tone பற்றி சிலர் குறை கூறினார்கள். எனக்கு அது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை. திருநீறு பட்டை போடாமல் திலகம் இட்டுள்ளனர் என கூறினார்கள்; அதையும் கிராபிக்சில் சிறிய பட்டையை  போட்டு சமாளித்து விட்டனர்.

ஏ.ஆர். ரகுமானின்  இசையில் எல்லா பாடலும் துள்ளலாகவே இருக்கிறது. எப்போதும் போல பாடல்களில் ஏ.ஆர். ரகுமானின் குரல் முதலில் கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர் கேட்க கேட்க அதுவே favourite லிஸ்டலில் வந்து விட்டது.  'பொன்னி நதி ' மற்றும் 'ராட்சச மாமனே' பாடல்களை திருப்பி திருப்பி கேட்டு கொண்டிருக்கிறேன்.  

ponniyin-selvan-review

நாவல் படிக்காதவருக்கும் கூட அரசல் புரசலாக கதை தெரிந்திருக்கும். கடந்த ஒரு மாத காலமாக எல்லா மீடியா களிலும் இதை பற்றிய ப்ரோமோஷன்தான் ஓடி கொண்டிருக்கிறது.  பொன்னியின் செல்வன் சிறு குறிப்பு வரைக என்று கேட்டால் கதை, கதை மாந்தர்கள், அவர்களின் வரலாறு, என எல்லாவற்றையும் 10 நிமிட விடீயோக்களில் புட்டு புட்டு வைக்கின்றனர். 

கல்கியின் கதையில் பல பாத்திர படைப்புகள் உண்டு, அவை எல்லாவற்றிற்கும் நல்ல அறிமுகமும், முன்கதையும் இருக்கும். ஆனால் இதில் பல கதாபாத்திரங்கள் திடீரென தோன்றி மறைகிறது.  பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே சில விஷயங்கள் நியாபகம் வரும். ஆடிப்பெருக்கு, வீரநாராயண ஏரி, அனுராதாபுரம், கோடியக்கரை, இன்னும் சில... இதில் ஏதுவுமே படத்தில் இல்லை. இடம் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சேர்க்க முடியாதுதான்; ஆனாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. கதை படித்ததாலயோ என்னவோ?!?! 😬  

வால் நட்சத்திரம் தோன்றலில் உலகநாயகனின் வாயிஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது சோழ சாம்ராஜ்யத்தின்  கதை. எல்லா அரச கதைகளில் வருவது போலவே இதிலும் வீரம், வஞ்சனை, துரோகம், பாசம், நட்பு, விசுவாசம், காதல் என எல்லாம் இருக்கிறது. நாவலில் இருக்கும் கதையை சற்றே மாற்ற வேண்டிய இடங்களில் மாற்றி மெருகூட்டி எடுக்க முயற்சி செய்துள்ளனர். படம் முழுக்க வந்தியதேவன் முழுக்க வலம் வந்து கார்த்தி நன்றாகவே நடித்துள்ளார். கூடவே வரும் ஆழ்வார்க்கடியான் வந்து நம்மை அவ்வப்போது சிரிக்க செய்துவிட்டு போகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரம் எப்போது வீரதாபத்தோடும், கோபத்தோடும் நடிப்பை வெளிப்படியிருக்கிறார். ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் பாத்திரத்துக்கு அழகும், தேஜஸும் உடைய வீரமான இளவரசராகவே தெரிகிறார். அழகு பதுமைகளாக திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் படம் நெடுக ஆக்கிரமித்து செல்கின்றனர். வஞ்சமும், கோபமும் கண்ணிலேயே காட்டி கவர்கிறார் பழுவூர் ராணி. அப்பப்பா!!! எனக்கு என்னவோ பழூவூர் ராணியை விட இளைய பிராட்டி தான் அழகாக கவர்ந்து ஜொலிப்பதாக தெரிகிறார். சரத்குமாரும், பார்த்திபனும் பழுவேட்டரையர்கள் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதம். மற்ற பாத்திரங்கள் எல்லாம் செம்மையாக அவர்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளனர். கல்கியின் கதை தெரியாமல் பார்ப்பவர்களுக்கும் கூட புரியும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இறுதியில் அருள்மொழிவர்மன் கடல் கொண்டு போவதில் முடிகிறது முதல் பாகம். வேறு ஏதாவது இடத்தில முடித்திருக்கலாம் என தோன்றுகிறது. End credit ஆக ஊமை பெண்மணி யார் என காட்டி முடிக்கிறார்கள்!🙏

பொன்னியின் செல்வன் தீம் மியூசிக் ஏற்கனவே நன்கு அறிந்த/கேட்ட இசை போல எனக்கு இருந்தது. என்னவென தெரியவில்லை.  கிராஃபிக்ஸ் காட்சிகளில் நதிக்கரையும், தஞ்சை கோட்டையும், சுழக்காற்றில் கடலும் அலையும் கப்பல் சண்டைகளும் பார்ப்பதற்கு அருமையாக இருத்தது. இலங்கை தீவை மட்டும் வேற இடத்தில காட்டியிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் அது புக்கெட் தீவு என்று! 😉  

கதை தெரிந்தவரும், தெரியாதவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்களுக்கும், மனதுக்கும், விருந்தாகவும், நிறைவாகவும் இருப்பார் நமது பொன்னியின் செல்வன்.! 👌 

இக்காவேரி மைந்தனின் கதை, பல்லவ, பாண்டிய, சோழ நாடுகளை தவிர மற்ற நாடுகளான சேர நாடு, இராட்ஷக்கூடம், பாதாமி, வேங்கிநாடு, மராத்தியம் ஆகியவற்றில் தங்கு தடையின்றி ஓடி, பேசப்படுவது சற்றே சிரமம் என நினைக்கிறேன். என்னதான் இந்திய வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தி என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், அவர்களுடைய ஊரில் எடுபடும் என தோன்றவில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது கதையில் வரும் பெயர்கள், கதை நடக்கும் ஊர்கள் மற்றும் கலாச்சாரம். நாம் பெருமையாக பேசி கொள்ளலாம், அவர்களுக்கு புரியுமா/பிடிக்குமா என தெரியவில்லை. உதாரணம் சாயிரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி, கௌதமி புத்ர சத்தகர்னி, பழசி ராஜா, மரைக்காயர், ஜோதா அக்பர் போன்ற படங்கள் அந்த அந்த மொழிகளில் நன்றாக ஓடியது அல்லது மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது; மற்ற மொழிகளில் பெரிதாக பேச படவில்லை. நம் பொன்னியின் செல்வன் விதி விலக்காக இருக்கிறாரா என இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும். பாகம் II வெளிவந்த பின் அருள்மொழிவர்மனின் பட்டாபிஷேகத்தை பார்த்து, பொன்னியின் செல்வனை முழுமையாய் உளமார கண்டு சிலாகித்து களிப்படைவோம்.  வெற்றிவேல்! வீரவேல் !! 😀      


நன்றி!!!

பி. விமல் ராஜ்