வியாழன், 22 டிசம்பர், 2022

பயோமிமிக்கிரி - காப்பியடித்த இன்ஜினியர்கள் !

வணக்கம், 

பள்ளி தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து மாட்டி கொண்டதை பற்றி அறிந்திருப்போம்; கல்லூரி பரீட்சையில் காப்பியடித்து பெயிலாய் போனவர்களை பற்றியும் நாம் கேட்டிருப்போம்; பெரிய நிறுவனங்களில் உள்ள இன்ஜினியர்கள் அவர்களுடைய போட்டி நிறுவனங்களில் உள்ள தயாரிப்பை காப்பியடித்து, சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியிடுவார்கள். அவர்களை பற்றியெல்லாம் இந்த பதிவு இல்லை. இயற்கையை காப்பியடித்த இன்ஜினியர்கள் பலர் இருக்கின்றனர். அந்த இயற்கையையும், காப்பியடிக்கப்பட்ட விஷயத்தையும் பற்றி தான் பார்க்க போகிறோம்.

இயற்கையே அறிவியலின் பிறப்பிடம் என்பதை யாரும் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. பல விஞ்ஞான மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் புதிதுபுதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலானவை இயற்கையை சார்ந்தோ அல்லது அதன் உதவியை கொண்டு தான் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னும் ஒரு இயற்கையின் ஊன்றுகோல் உண்டு. அதை காப்பியடித்து தான் பல ஆராய்ச்சிகளும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் நடக்கின்றன. காப்பியடித்தல் பல சொல்லிவிட முடியாது; இயற்கையை அடிப்படையை கொண்டு கண்டுபிடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சிக்கலான மனிதப் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக தீர்க்க உயிரினங்கள் மற்றும் இயற்கையின் மாதிரிகள், அதன் செயல்பாடுகள் மற்றும் பரிணாம வளர்ச்சிகளை கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றார் போல் சரி செய்து தீர்வு காண்பது Biomimicry (உயிரினையாக்கம்) என சொல்லப்படுகிறது.

இயற்கை அதிசயத்தை எடுத்துக்காட்டாய் கொண்டு, பயோமிமிக்கிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.  

Biomimicry examples
Biomimicry examples - click to zoom

ஜார்ஜ் மெஸ்ட்ரால் என்னும் சுவிஸர்லாந்து இன்ஜினியர் ஒருவர், தன் நாயின் மேல் ஒட்டியுள்ள burr என்னும் ஒரு வித பழத்தை (சிறய கொட்டை போல இருக்கும்) மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்து பார்த்து, அதன் மேல்பகுதியில் சிறு சிறு கொக்கி போல இருப்பதை கண்டார். அதுதான் அவருடைய நாயின் தோலில் ஒட்டி கொண்டிருந்தை உத்வேகமாய் கொண்டு வெல்க்ரோ (velcro) என்னும் சாதனைத்தை கண்டுபிடித்தார். அதை வைத்து தான் இப்போது நாம் கட்டிக்கோ, ஒட்டிக்கோ வேஷ்டியும், செருப்பில் வெல்க்ரோ வைத்தும் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

கீய்க்கோ(Geeko) என்னும் ஒரு வகை பல்லிகள் சுவரிலோ, மரத்திலோ எப்படி கீழே விழாமல் ஏறுகிறது என்பதை ஆராய்ந்தவர்கள், அதன் கால் பாதங்களில் ஒருவகை ரசாயன பிசின் இருப்பதை கண்டு, சுவற்றில்/ பார்சலில் ஒட்டும் டேப்க்கள், காயத்திற்கு ஓட்டும் பாண்ட் எய்ட்கள், கண்ணாடி கட்டிடங்களில் ஏறும் சாதனங்கள் என பலவற்றை கண்டுபிடித்துள்ளனர்.  

உலகின் வேகமான ரயில் என்று சொல்லப்படும் ஜப்பானின் ஷின்காசன் புல்லெட் ரயில் குகைப்பாதைக்குள்ளே சென்று வெளியே வரும்போது பலத்த ப்பூபூ...பூம் என்ற சத்தத்துடன் வருவது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதை சரி செய்ய மரம்கொத்தி பறவையை (பறவையின் அலகு) எடுத்துக்காட்டாய் கொண்டு கூரான இன்ஜின் முகப்புடன் மாற்றியமைக்கப்பட்டது புல்லட் ரயில். சிறிய மரம்கொத்தி பறவை எப்படி காற்றை கிழித்து கொண்டு போகிறதோ, அதே போல காற்றை கிழித்து கொண்டு குறைந்த அளவில் மின்சார பயன்பாட்டோடும், குகைபாதையிலிருந்து பெரும் சப்தமில்லாமலும் புல்லட் ரயில் சென்றது. இதனால் அந்த சிக்கலும் தீர்ந்தது.

கரையான் புற்றுகள் இயற்கை பேரதிசியம் என்று தான் சொல்ல வேண்டும். வெளியே என்ன வெப்பநிலை/ சீதோஷ்ணமாக இருந்தலும் கரையான் புற்றுக்குள் எப்பொதும் ஒரே அளவு சமமான வெப்ப நிலையியே  இருக்கும். இதை ஆராய்ந்து அறிந்த விஞ்ஞானிகள், அதன் புகைபோக்கி  போலுள்ள நீளமான மண்கூடு தான் இதற்கு கரணம் என அறிந்தார்கள். அதை அடிப்படையாய் கொண்டு மிக் பியர்ஸ் என்னும் கட்டுமான பொறியாளர், ஜிம்பாபே நாட்டில் ஹராரே என்னும் நகரில் Eastgate Centre என்னும் மிக பெரிய கட்டிடத்தை கரையான் புற்றுகள் கட்டியுள்ள அதே தொழில்நுட்பத்தை கொண்டு கட்டினார். அந்த கட்டிடத்தில் இயற்கையாகவே காற்றோட்டமும், வெளிச்சமும் இருப்பதால் மற்ற கட்டிடங்களை காட்டிலும் குறைவான மின்சாரமும், குளிரூட்டலும் தேவைப்பட்டது. 

Humpback Whale என்று சொல்லப்படும் ஒருவகை திமிங்கலத்தின் வளைந்து நெளிந்த துடுப்பும், வாலும் தான் அதனை வேகமாக கடலிலும், அலைகளுக்கு நடுவிலும் நீந்தி செல்ல உதவுகிறது. அதை அடிப்படையாய் கொண்டு தான் windmill bladeகள் தயாரிக்கபடுகிறது. அவ்வளவு உயரத்திலும், வேகமாய் அடிக்கும் காற்றை கிழித்து கொண்டு சுழலும் காற்றாலை தகடுகள் திமிங்கலத்தின் பயோமிமிக்கிரி தான்.   

பறவைகள் பறக்கும் போது இறக்கைகளை மேல்நோக்கி தூக்கி, பின் அழுத்தம் கொடுத்து எம்பி மேலே பறக்கும். அதை அடிப்படையாய் கொண்டு தான் இன்றைய விமானத்தின் இறக்கைகள் உருவாக்கப்பட்டன. புறாக்களின் பறக்கும் திறனை ஆராய்ந்து அதனை அடிப்படையாய் கொண்டு தான் விமானம் உருவாக்கப்பட்டதாக ரைட் சகோதரர்கள் கூறியுள்ளனர். மேலும் 1500களில் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinc) கிளைடர் விமானத்தின் மாதிரியை வரையும் முன், பறவைகளின் இறக்கை, பறக்கும் திறன், ஆகியவற்றை நன்கு படித்து ஆராய்ந்த பின் செயல்படுத்தினார்.  

இது மட்டுமல்ல.. ஆக்டோபஸ் தோலினை அடிப்படையாய் கொண்டு கேமபிளாக் (Camaflogue) உடை தயாரித்தது; சுறா மீனின் செதில்களை அடிப்படையாய் கொண்டு நீச்சல் உடை கண்டுபிடித்தது; தாமரை இலையில் நீர் ஏப்படி ஓட்டுவதில்லையோ, அதை கொண்டு வாட்டர் ப்ரூப் பெயிண்ட் கண்டுபிடித்தது என இன்னும் நிறைய இருக்கிறது. இதை தவிர நம் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு பல செயல்பாடுகளை/ வடிவங்களை இயற்கை மறைத்து வைத்துள்ளது. அதை நாம் தான் தேடி எடுத்து வெளிக்கொணர வேண்டும்.


நன்றி!!
பி.விமல் ராஜ்  

புதன், 7 டிசம்பர், 2022

பூமர்களின் வாரிசுகள் யார்?

வணக்கம்,  

சில நாட்களாய் சமூக வலைத்தளங்களில் பூம்.. பூம்.. பூமர்... பூமர் அங்கிள் என பலரை பரிகாசம் செய்வதை பார்த்திருப்போம். பொதுவாய் இன்றைய தலைமுறையினருக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்தாலோ அல்லது நாங்கெல்லாம் அப்படி இருந்தோம்... இப்படி இருந்தோம் என கதையடிக்க ஆரம்பித்தாலோ அவர்களை பூமர் அங்கிள்/ஆன்ட்டி என சொல்லி விடுவார்கள். இந்த பூமர் என்ற வார்த்தையை நாமும் பல இடங்களில் உபயோகப்படுத்தியிருப்போம். எங்கிருந்து இந்த வார்த்தை வந்தது? இதன் அர்த்தம் என்ன என்பதை சற்று விரிவாக பகிர்கிறேன். 

Generation Gap என்ற வார்த்தையிலிருந்து வருவோம். இந்த வார்த்தையையும் பல இடங்களில் இதை சொல்லியிருப்போம். நமது முந்தைய/பிந்தைய தலைமுறைகளில் யாரேனும் நம்முடைய கருத்து, பழக்கவழக்கம், இசை, ரசனை, கலாச்சாரம் ஆகியவற்றில் முரண்பாடு இருப்பதையே தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். போன தலைமுறையும், இந்த தலைமுறையிலும் நிறைய வேறுபாடுகள்/இடைவெளி உண்டு. உறவு முறைகளில் பெரிய முரண்கள் எப்போதும் உண்டு. உலகமெங்கும் 19ஆம் நூற்றாண்டு வரை தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதே கருத்தை அப்படியே பெரும்பாலும் ஏற்று கொண்டார்கள். பெரிய மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் 19 நூற்றாண்டு முதல் உலகம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு தலைமுறைகளுக்கிடையே பல தர்க்கமான கருத்துக்களை கொண்டுள்ளது. 1960களில் மேற்கத்திய ஆய்வாளர்கள் மக்களை/ தலைமுறைகளை பிரித்து வகைப்படுத்தி (categorization) காட்ட நினைத்தார்கள். 

generations

The Lost Generation - 1880 முதல் 1900க்குள் பிறந்தவர்கள். முதலாம் உலகப்போரில் (1914-1918) தங்களுடைய ஆரம்ப முதிர்வயது (adulthood)-ல் இருந்தவர்களை குறிப்பிடுவார்கள். 

The Greatest Generation - 1901 முதல் 1925க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போரின் (1939-1945) போது வாலிப பருவத்தில் இருந்து போரிட்டவர்கள். பல துயரங்கள், பேரிடர்களை சந்தித்தவர்கள்.

The Silent Generation - 1926லிருந்து 1945க்குள் பிறந்தவர்கள். 

Baby Boomers - 1945லிருந்து 1964க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிறந்தவர்கள். எப்படி 2020-ல் கொரோனா முழுஅடைப்பில் உலகின் பிறப்பு விகிதம் அதிகமானதோ, அதே போல இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டு, போர் முடிந்த பின் வீடு திரும்பிய வீரர்களுக்கு பிறந்த குழந்தைகள்தான் இந்த பேபி பூமர்ஸ். இவர்களை தான் நாம் பூமர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.

Generation X (Gen X) - 1965 முதல் 1980வரை பிறந்தவர்கள். இவர்களுடைய காலத்தில் பல கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகள், அறிவியல் முன்னேற்றங்கள் நடந்துள்ளது.

Generation Y (Gen Y/ Millennials) - 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள். இவர்களுடைய வாலிப பிராயத்தில் நூற்றாண்டின் மாற்றத்தை பார்த்தவர்கள் என்பதால் இவர்களை Millennials என்றும் கூறுவார்கள். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் 80's Kids & 90's Kids(இவர்கள் தான் பூமர்களின் வாரிசுகள் 😁)

Generation Z  (Gen Z / Zoomers) - 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள். பெரும்பாலானோர் பிறக்கும் போதே கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல், யுடியூப் என எல்லாவற்றையும் பார்த்து கொண்டே பிறந்தவர்கள். 2K Kids!

Generation Alpha (Gen Alpha) - 2012 முதல் 2025 வரை பிறந்தவர்கள் அல்லது பிறப்பவர்கள். 

நான் Millennials - 90ஸ் கிட்ஸ்... நீங்க??? 😉

இந்த வகைப்பாடுகள் ஒவ்வொரு நாடுகளிலும் சிறியளவு மாற்றங்களோடு இருக்கும். இந்தியாவில் 1920 முதல் 1940கள் வரை பிறந்தவர்கள் பெரும்பாலும் தேசியவாதிகளாகவும், பாரம்பரிய வழியில் நடப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். 1945 முதல் 1965 வரை பிறந்தவர்கள் இந்தியன் பூமர்கள் என சிலர் அழைக்கின்றனர். இவர்கள் காலத்தில் தான் இந்தியா சுதந்திரத்திற்கு பின் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. கடும் பஞ்சம், பசுமை புரட்சி, தொழில் புரட்சி, 1977 அவசர நிலை, அணுசக்தி/மின்னணு வளர்ச்சி என பல சம்பவங்களை கண்டுள்ளனர்.

பெரும்பாலும் பெரு நிறுவனங்கள், அரசு துறைகள் தங்களுடைய வாடிக்கையாளர்களையம், நுகர்வோர்களையும் (audience/ consumers/ customers) கண்டறியவே இத்தகைய தலைமுறைகளின் வகைப்பாடுககளை உபயோகப்படுத்துகிறது.

இந்த generationsகளை தமிழில் தலைமுறைகள் என சொல்வார்கள். பல தலைமுறைகள் ஒரு பரம்பரையாக பார்க்கப்படுகிறது. நாங்க பரம்பரை பரம்பரையாய் இதை செய்து வருகிறோம்; பாரம்பரியமிக்க பரம்பரை நாங்கள் என சொல்லி கேட்டிருப்பீர்கள். அந்த பரம்பரை எண்ணற்ற சொல்லுக்கு அர்த்தம். அது நம்முடைய ஏழாம் தலைமுறையை குறிக்கிறது. 

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!


நன்றி!!!
பி. விமல் ராஜ்