சனி, 11 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வடக்கர்கள்!

வணக்கம், 

சமூக வலைத்தளங்களில் வடக்கன்ஸ் பற்றிய மீம்ஸ் என்றால் மிகவும் பிரபலம். அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும் இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் உலவி கொண்டிருக்கின்றன. அவர்களும் அதற்கு ஏற்றார் போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பான்பராக் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, ரயிலில் தகுந்த டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, ஒரு சிலர் திருட்டு/கொள்ளை என ஈடுபடுவது என வடக்கர்களுக்கும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் நம்மில் பலருக்கு எரிச்சலை தான் தருகிறது. 

கடந்த சில வருடங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கட்டிட வேலை, சாலை செப்பனிடும் வேலை, தச்சு வேலை, பிளம்பர், லோடு மென் என தினக்கூலிகளாகவே பலர் வருகின்றனர். அவர்களுடைய மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பும், தொழில் செய்வதற்கான கட்டமைப்பும் இல்லாததே இதற்கு பெரும் காரணமாகும். மேலும் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. ஆனால் நம் மாநிலத்தில் வேலைக்கு தகுந்த கூலியும், தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு என அதற்கான வசதிவாய்ப்புகள் சுலபமாகவே கிடைப்பதால் பலர் இங்கு வேலைக்கு வந்து விடுகின்றனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு (வேலையாட்களுக்கு) கொடுக்கப்படும் சம்பளத்தை/கூலியை விட குறைவாக வடக்கர்கள் பெறுவதால் பெரும்பாலும் முதலாளிகள் கூட வடமாநிலத்தவரையே வேலைக்கு வைக்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என பலரும் குறை சொல்லி வருகின்றனர். 

north-indian-labourers-tamilnadu

என்னை பொறுத்தவரை இது பெரிய தவறு போல தெரியவில்லை. எல்லா இடங்களிலும் வழக்கமாக நடப்பது தான். (மா) நிலம் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவானது. அது இவர்கள் மட்டுமே தான் வேலை செய்ய வேண்டும்; இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என்ற சட்டமெல்லாம் இதுவரை மாநிலங்களுக்கிடையே கிடையாது. 1950, 60களில் நம் தமிழ் நாட்டிலிருந்து பலர் கூலி வேலைக்காகவும், பிழைப்பை தேடியும் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு சென்று குடியமர்ந்தனர். அப்போதும் அங்குள்ள மாநிலத்தவர் சிலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சில இடங்களில் கலவரம், தமிழர்கள் மீது தாக்குதல் போன்றவை இதே வாழ்வாதாரம் காரணத்திற்காக நடத்ததேறியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. அப்போது நாம் கொதித்து எழுந்தோம்; இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்கு உரிமை உண்டு என முழங்கியுள்ளோம். இப்போது அதே தவறை நாமும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறோம். இன்னும் அவர்களை போல அடித்து விரட்டவில்லை; ஆனால் இது போன்ற வெறுப்பு பதிவுகள்/செய்திகள் தொடருமாயின் விரைவில் நடக்க வாய்ப்புண்டு என்பதில் வியப்பில்லை. அஃது நடக்காமல் இருப்பதே நலம். அதுவே என் எண்ணமும் கூட!

தத்தம் மாநிலங்களில்/மண்ணில் அவரர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமான ஒன்று தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வேற்று மாநிலத்தவரை யாரையும் பணிசெய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது எவ்வகையான மனநிலை எனபது தெரியவில்லை. குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக எந்த மாநிலமாயினும் (தமிழ்நாடாயினும்), அவர்கள் விருப்பத்திற்கேற்ப எங்கு சென்றும் சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த மாநில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிசெய்ய முடியும். யாராலும் தடுத்து விட முடியாது. இதை ஒரேடியாக நிறுத்தவும் முடியாது. வேண்டுமானால் மாநில அரசு சில விதிமுறைகளை போட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டு கட்டிட வேலைக்கு ஆள் தேவை. நன்கு தெரிந்த நபர் மூலம் தமிழர் ஒருவரும் மற்றும் வடமாநில நபர் ஒருவரும் வேலைக்கு வருகிறார்கள். இருவருமே நல்ல திறமையான, நம்பிக்கையான ஆட்கள். தமிழருக்கு 5000 ரூபாய் சம்பளம் தரவேண்டும்; வடமாநிலத்தவருக்கு 3000 ரூபாய் தந்தால் போதும். நீங்கள் யாருக்கு வேலை போட்டு கொடுப்பீர்கள்? 2000 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை என தமிழருக்கு கொடுப்பீர்களா? அல்லது வடமாநிலத்தவருக்கா? இதைத்தான் ஓட்டல் முதலாளிகளும், பட்டறை முதலாளிகளும், கட்டிட மேஸ்திரிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கூட ஒரு குற்றசாட்டு உண்டு. தமிழ் வேலையாட்கள் திறமைனவர்கள் தான்; நல்ல உழைப்பாளிகள் தான். ஆனால் சில சமயத்தில் வேலைக்கு சரியாக வருவதில்லை; வந்தாலும் அதிக நேர இடைவேளை விடுதல், திருவிழா, குடும்ப விசேஷம், பண்டிகை என 10 நாட்களாவது விடுப்பு எடுத்து விடுகின்றனர். வடமாநிலத்தவரோ விடுப்பு இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்து தந்து விடுகிறார்கள். விடுப்பு இல்லாமல், எந்த விசேஷத்துக்கும் போகாமல், குறைந்த சம்பளத்துக்கே எல்லோரும் (நானும், நீங்களும் உட்பட) வேலை செய்ய முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் முதலாளிகளின் (லாப) பார்வையில் வடமாநிலத்தவரையே தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. ஏன் எல்லா அமெரிக்க அதிபர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது Say No to India / Say No to Banglore என்று சொல்கின்றனர்? நாளுக்கு நாள் ஆன்சைட் போகும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகிறது? அங்குள்ள ஜார்ஜ், பெஞ்சமின், ஆபிரகாம், மேரி போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வேலை நம்மவூர் ரமேஷ், சுரேஷ், அஜய், விஜய், படேல், சிங் போன்றோருக்கு ஏன் கிடைக்கிறது? இந்தியர்களால் பல அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்கர்களுக்கு சம்பளம், விடுப்பு, மற்ற சலுகைகள் என எல்லாம் முழுமையாக தர வேண்டும்; ஆனால் நம்மாட்களுக்கோ கொடுத்ததை வாங்கி கொண்டு திவ்யமாக வேலைசெய்து வெள்ளை முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள்! கிட்டத்தட்ட இது தான் இங்கும் நடந்து வருகிறது. நம் மக்கள் வெளி மாநிலத்திலோ/வெளி நாட்டிற்கோ சென்று வேலை செய்து சம்பாரிப்பது போல, அவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்போது இதுபோல வரும் சில புகைச்சலைகளை உடனே மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் அது அரசியல் மற்றும் ஊடக வியாதிகளால் ஊதி ஊதி நெருப்பாக மாறி, பெரும் இழப்பை தரும்.      


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

5 Comments:

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களது அலசல் மறுப்பதற்கில்லை.
- கில்லர்ஜி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

true tamilian சொன்னது…

சரியான அடையாள அட்டை இல்லாதவதர்களை உள்ளே விட கூடாது
அமெரிக்காக்காரன் அடையாளம் இல்லாதவர்களை விடுவதில்லை
அடையாள அட்டை இல்லாதவர்கள் குற்றம் செய்ய வாய்ப்பு அதிகம் . குற்றம் செய்த பின் அவர்களை பிடிப்பது கடினம் . வடகர்களுக்கு குற்ற பின்ணணி மிக அதிகம் .
தைரியம் இருந்தால் பீஹாரிலோ மத்யப்ரதேசத்திலோ போய் இருந்து பார்க்கவும் . அவர்களுக்கு ட்ரைனில் டிக்கெட் வாங்கியே பழக்கம் இல்லை

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கு நன்றி!!