புதன், 31 மே, 2023

சட்டம் என் கையில் !

வணக்கம்,

நம் நாட்டில் உள்ள சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானது, சமமானது என சொல்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு அடிப்படை சட்டத்தின் அடிப்படை கூட தெரியாது. அன்றாட வாழ்வில் அது தேவை படவில்லை என எண்ணி, அதை பற்றி நாம் பெரிதும் கவலை பட்டதில்லை. நான் படித்து அறிந்து கொண்ட சில சட்டங்களையும், விதிகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுதந்திரம் அடைந்த பின்னும் ஆங்கிலேயர் இயற்றி பின்பற்றி வந்த சட்டங்களை நம் நாடும் பின்பற்றி வந்தது. பின்னர் 1950-ல்  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution Of India) இயற்றப்பட்டது. நமது நவீன இந்தியாவில் பல்வேறு வகையான சட்ட அமைப்புக்கள் உள்ளது. இந்தியா ஒரு கலப்பின சட்ட அமைப்பைக் கொண்டது. அதிலுள்ள சட்டங்கள் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெற்ற சட்ட கட்டமைப்பிற்குள்ளும், ஆங்கிலேயர்களால் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சட்டங்களும் இருக்கின்றன. 450 கட்டுரைகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள் மற்றும் 117,369 சொற்கள் கொண்ட இந்திய அரசியலமைப்பு ஒரு நூற்றாண்டில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். ஒட்டு மொத்தமாக 1248 சட்டங்கள் உள்ளது.

இந்திய சட்டங்களின் அமைப்பு மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • பொது சட்டம் (Common Law)
  • குற்றவியல்  சட்டம் (Criminal Law)
  • சிவில் சட்டம்  (Civil Law)
பொது சட்டம் (Common Law)
சட்டமன்றம் அல்லது அதிகாரபூர்வ சட்டங்களின் மூலம் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்களுக்கு மாறாக, நீதித்துறை முன்மாதிரிகளாலும், நீதிபதிகளாலும் விசாரிக்கப்பட்டு வழக்குகளின் முடிவிற்குப் பிறகு நீதிபதிகளால் நிறுவப்பட்ட சட்ட விதிமுறைகளின் தொகுப்பாக இருப்பது  பொது சட்டம்  என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய சட்டமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது பொதுவான சட்ட அதிகார வரம்புகள் அல்லது அமைப்புகளில் வாழ்கின்றனர்.

குற்றவியல் சட்டம் (Criminal Law)
சமூகத்தில் உள்ள குற்றங்களை குறைக்க குற்றவியல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை, கொலை, கடத்தல், கற்பழிப்பு, மற்றும் பல உள்ளிட்ட சில குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுகின்றது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC-Indian Penal Code), இந்திய சாட்சியச் சட்டம் (IEC-Indian Evidence Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) ஆகியவை குற்றவியல் சட்டங்களாக இருக்கின்றன.

சிவில் சட்டம்  (Civil Law)
குற்றமாகாத நடத்தையை அல்லது விஷயங்களை சீராக்கவும், சிவில் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சிவில் நடைமுறைச் சட்டம் (CPC-Civil Procedure Code ) நிர்வகிக்கிறது. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளையும், சொத்து, மதம், குடும்ப சண்டைகள் அல்லது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப சட்டம் (Family Law), ஒப்பந்த சட்டம் (Contract Law), நிர்வாக சட்டம் (Administration Law), நிறுவன சட்டம் (Corporate Law), சட்டப்பூர்வ சட்டம் (Statutory Law) என உட்பிரிவுகள் இதில் இருக்கின்றது.

Indian laws and Constitution

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில சட்டங்கள் சிலவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்: 
Article 1- ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும்
(i) இந்தியா எனப்படும் பாரதம்  மாநிலங்களின் (யூனியன்) ஒருங்கிணைப்பு ஆகும்.

Article 5- அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை
இந்த சாசனம் துவக்கப்பட்ட நாளில் இந்தியாவில் தொடர்ந்து வாழும் ஒருவர்,
(அ) இந்திய நிலப்பகுதியில் பிறந்தார், அல்லது
(ஆ) அவருடைய பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருப்பின்,
(இ) இந்த சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிமகன் ஆவார்.

Article 14- சட்டத்தின் முன்னர் சமன்மை
அரசு, இந்திய ஆட்சி நிலவரைக்குள் சட்டத்தின் முன்னர் சமன்மையையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுக்க கூடாது. 

Article 15-  மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல்
(i) அரசு எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம்  அல்லது வேறு காரணத்தின் பேரிலும் வேறுபடுத்தி பார்க்க கூடாது,
(ii) குடிமகன் எவரையும்,
(அ)  எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை காரணம் காட்டி,
(ஆ) கடைகள், உணவு விடுதிகள், தாங்கும் விடுதிகள் கேளிக்கைக்கான பொது இடங்கள் இவற்றுக்குள் செல்வதையோ, அல்லது
(இ)கிணறு, குளம், பொது குளியலறைகள், ஆலைகள் இவற்றை பயன்படுத்துவதையோ கூடாது என்று குறைபாடு, கடப்பாடு அல்லது நிபந்தனை விதிக்க கூடாது.  

Article 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அதன் நடைமுறை வழக்கம் எந்த வகையிலும் இல்லாதபடிக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமையின் விளைவாய் செயலாக்கப்படுகிற எந்த குறைபாடும் சட்டப்படி தண்டிக்க தக்கதாகும்.

Article 19- சுதந்திரமாய் செயல்படுவதற்கான உரிமை
(i) இந்தியா குடிமக்கள் அனைவருக்கும் -
(அ) சுதந்திரமாய் பேசவும் (எண்ணங்களை உணர்வுகளை) பேசவும், வெளிப்படுத்தவும்
(ஆ) ஆயுதமில்லாமல் அமைதியாய் கூடுவதற்கும்
(இ) சங்கங்கள் அமைப்புகள் இவற்றை உருவாக்குவதற்கும்
(ஈ) இந்தியாவிற்குள் தடையின்றி இங்கும் சென்று வரவும்
(உ) இந்திய நிலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில  வாசிப்பதற்கும்
(ஊ) சொத்துக்களை தேடி கொள்ளவும், வைத்திருக்கவும் விற்கவும்
(எ) எந்த ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் எந்த ஒரு தொழில் அல்லது வர்த்தகம் செய்யவும் உரிமை உண்டு.

Article 22 - கைது செய்தல், காவல் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு
(i)  ஒருவர் எந்த காரணத்திற்காக கைது செய்ய படுகிறார் என்ற காரணத்தை தெரிவிக்கும் அவரை காவலில் வைக்க கூடாது. அவர் தாமுக்குடைய சட்ட ஆலோசகரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவும் அவருக்குள்ள உரிமை மறுக்கப்பட கூடாது.
(ii) கைது செய்து காவலில் வாய்த்த ஒரு நபரை அவர் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகிலுள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலை படுத்த வேண்டும்.

Article 23 - மனிதரை வணிக பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல்
(i) மனிதரை வணிகமாக வைக்கும் தொழிலும் (human trafficking) , பிச்சையெடுக்க வைப்பதும், வற்புறுத்தி வேலை வாங்குவதும் தண்டிக்கத்தக்க குற்றமாகும்.

Article 24- தொழிற்சாலையில் சிறார்களை பணியமர்த்த தடை
பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தல்களை தொழிற்சாலையிலோ அல்லாது சுரங்கத்திலோ அல்லது வேறு அபாயகரமான வேலையில் பணியமர்த்த கூடாது,

Article 25- வழிபாட்டு சுதந்திரம்
பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை மற்றும் உடல் மனநலம் ஆகியவற்றிற்கும் உடன்பட்டு தம் மனசாட்சியின் படி செயல்பட அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு மதத்தை கொண்டாடவும், கடைபிடிக்கவும், பரப்பவும் அவர்கள் உரிமை உடையவராவார்.

Article 46-
அரசு பிற்படுத்தபட்ட மக்களிடையே குறிப்பாக பட்டியல் சாதியினர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) இவர்களின் கல்வி சார்ந்த பொருளாதார நாளங்களில் அக்கறை காட்டி உயர்த்துவதோடு அவர்களை சமூக அநீதியிலிருந்தும் அணைத்தது வகை சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

Police Act 1861-
ஒரு காவல் அதிகாரியானவர் எப்போதும் தன் கடமை உணர்வுடன் இருக்க வேண்டும். அவர் பொறுப்பில் இருக்கும்வரை எப்போதும் கடமையிலிருந்து ஓய்வு ( off duty) என்பதே இல்லை.

Maternity Benefit Act 1961, Section 4 -
வேலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணை எப்போதும் பணி நீக்க முடியாது. ஒரு கர்ப்பிணி பெண் தன் கர்ப காலத்தில் பணிக்கு வர முடியாத காரணத்தை வைத்து, எந்த நிறுவனமும் / மேலாளரும்/முதலாளியும் அவர்களை வேலையை விட்டு அனுப்ப கூடாது.

Section 4(1) - எந்த ஒரு நிறுவனம் எந்த கர்ப்பிணி பெண்ணையும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை வேலையில் பணியமர்த்த கூடாது.

Section 4(2) - எந்த ஒரு  கர்ப்பிணி பெண்ணும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை எந்த வேலைக்கும் போகவோ/சேர கூடாது.

Section 4(3)-  Section (6) க்கு எந்த ஒரு பாரபட்சமின்றி  எந்த ஒரு  கர்ப்பிணி பெண்ணுக்கும் அவள் கேட்டு கொண்டதாலும், கட்டாயத்தாலும்  Section 4 -ல் உள்ள காலத்தில் கடினமான வேலைகளையோ (நீண்ட நேரம் நிற்க வைத்தால் உட்பட்டு)  செய்ய வைக்க கூடாது.

Gas Cylinder Rules, 2004, and Explosives Act, 1884.
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்களுக்கு 40 லட்சம் வரை நுகர்வோர்களால் (பாதிக்கப்பட்டோர்கள்) சமையல் எரிவாயு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற முடியும்.

தண்டனை சட்டங்கள் :
IPC 109-
குற்றத்திற்கு உடந்தை; குற்றவாளிக்கு உடந்தை யாக இருத்தல்
தண்டனை:குற்றத்திற்கேற்றவாறு சிறை அல்லது அபராதம்.

IPC 110-
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை க்குரிய குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்
தண்டனை:ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

IPC 140-
தரைப்படை, வான்படை, கடற்படை வீரரால் பயன்படுத்தப்படும் உடை அல்லது பதக்கம் முதலியவை அணிந்து கொண்டு தாமும் அத்தகைய படையை சேர்ந்தவர் என நம்பிக்கை ஏற்படுத்துதால்
தண்டனை: மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

IPC 143-
சட்டவிரோதமான கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 144-
சட்டவிரோதமான ஆயுதங்களை கைக்கொண்டிருக்கும் கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 153(அ)-
வழிபடும் இடத்தில் வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்.
தண்டனை: 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும். 

IPC 163-
பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்
தண்டனை: ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும். 

IPC 171-
பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர் ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 212 -
மரண தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்.
தண்டனை: 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்

IPC 231/232/233/234-
போலி நாணயத்தை உண்டாகுதல்; இந்திய நாணயங்களை போலியாக செய்தல்; போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை செய்தல் அல்லது விற்பனை செய்தல்; போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை செய்தல்
தண்டனை: 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

IPC 274/275 -
மருந்துப் பொருட்களில் கலப்படம்; கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்
தண்டனை: 6 மாதம் சிறை மற்றும் அபராதம்.

IPC 292/293-
இருபது வயத்துக்கு குறைவாக உள்ளவரிடம் ஆபாசமான பொருளை (புத்தகம், புகைப்படம், எழுத்து, துண்டுப்பிரசுரம்,  படம் வரைதல் மற்றும் ஓவியம்) விற்றல் / வாடகைக்கு கொடுத்தல்/விநியோகிப்பதல்/காட்சிப்படுத்துதல் 
தண்டனை:  3 மாதங்கள் வரை சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

IPC 294(B)-
பொது இடத்தில் எந்த ஒரு ஆபாசச் செயலைப் புரிதல்/ ஆபாசமாக பேசுதல்/பாடுதல்/ஆபாச வாசகத்தை உச்சரித்தல்
தண்டனை:  3 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

IPC 302-
கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
தண்டனை: மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை

IPC 306-
ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல்.
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.

IPC 307-
கொலை முயற்சி செய்தல்
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மேலும் அபராதம் விதிக்கப்படலாம்;

IPC 341-
தவறான திசை, இடம், போக்கில் வழி நடத்துதல்
தண்டனை: ஒரு மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம்.

IPC 376-
பாலியல் வன்புணர்வு / கற்பழிப்புக்கான தண்டனை சட்டம்.
தண்டனை:  ஏழு ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுட்கால சிறை மற்றும் அபராதம். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் ஈடுபட்டவரின் மனைவியோ/அல்லது 12 வயதுக்கு கீழ் இல்லமல் இருந்தால் இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம்.

IPC 420-
ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து விநியோகத்தை தூண்டுதல்.
தண்டனை: 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.

IPC 454 -
வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத் தண்டனை
தண்டனை: 3 ஆண்டு  சிறை அல்லது அபராதம்.

புத்தகத்திலும் இணையத்திலும் படித்ததை வைத்து, மிக சில சட்டங்களை பற்றி மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். மேலும் விரிவான தகவல்களுக்கு:

  1. இந்திய தண்டனை சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்ற படிவங்கள் - சோ.சேசசலம்
  2. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - சி.எஸ். தேவ்நாத்

நன்றி!!!
பி. விமல் ராஜ்

புதன், 3 மே, 2023

வர்கலா என்னும் கடல் சொர்க்கபுரி!

வணக்கம்,

வெயில் சுட்டெரிக்கிறது. சித்திரை வெயிலும் அலுவலக வேலைகளும் மண்டையை பிளக்க, கோடை  விடுமுறைக்கு எங்காவது செல்லலாம் என யோசித்தோம். இம்முறை கடற்கரை நகருக்கு செல்லலாம் என எண்ணி, நீண்ட நாள் செக்-லிஸ்டில் உள்ள வர்கலாவை டிக் செய்தோம். வர்கலா பற்றியும், நான் கண்டு ரசித்ததையும் இங்கு பகிர்கிறேன்; படித்து மகிழுங்கள்.

வரலாறு-
வர்கலாவின் பெயர் புராண கதைகளின்படி காரணம் சொல்லப்படுகிறது. அது இப்போது நமக்கு தேவையில்லை. வர்கலாவில் கடற்கரைக்கு அருகில் இயற்கையாகவே அமைக்க பெற்றுள்ள செந்நிற பாறைகளும், மலைக்குன்றுகளும் (cliffs) தான், இவ்விடத்திற்கு தனித்தன்மையையம் பெருமையும் சேர்க்கிறது. 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வண்டல் செம்மண் பாறைகளால் ஆன இக்குன்றுகளை 'Varkala Formation' என்று புவியியல் அறிஞர்கள் சொல்கின்றனர். இது அரபிக்கடலில் அமைந்துள்ள cliff beachகளில் முக்கியமானதும் அழகானதும் ஆகும். குதூகல நகரமான கோவாவிலும் இது போன்ற cliff beachகள் இருக்கிறது. வர்கலாவை 'மினி கோவா' என்றும் 'தென்னிந்தியாவின் கோவா' என்றும் 'அரபிக்கடலின் முத்து' என்றும் பெருமையாய் சொல்வதுண்டு. 2005-ல் ஸ்ரீ நாராயண குரு (கேரளாவின் ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி) அவர்களின் மறைவுக்கு  பின், இங்குள்ள ரயில் நிலையம் வர்கலா சிவகிரி என்று அழைக்கப்படுகிறது. 2015-ல் இந்திய புவியியல் ஆய்வு மையம் (Gelogical Survey of India), வர்கலாவை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக (National Geological Monument) அறிவித்தது.

வர்கலா - கேரளா மாநிலத்தில் திருவானந்தபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஓர் அழகிய கடற்கரை நகரம். திருவானந்தபுரத்திலிருந்தும் கொல்லம் நகரிலிருந்தும் வர்கலாவிற்கு பஸ்ஸிலோ/ காரிலோ ஒன்றரை மணி நேரத்தில் செல்லலாம்.  சென்னையிலிருந்தும் மற்ற மாவட்டங்களிலிருந்தும் ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. வர்கலா டவுன் மற்ற எல்லா ஊரையும் போல எந்த ஒரு சலசலப்பும் இன்றி அமைதியாய் இருக்கின்றது. இங்கு எல்லா முக்கிய கடைகளும், அலுவலகங்களும், வீடுகளும், குடியிருப்புகளும் டவுனில் தான் இருக்கிறது. ATM சென்று பணம் எடுக்க வேண்டுமானாலும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் வர்கலா டவுனுக்கு தான் வரவேண்டும். மேலும் 2000 ஆண்டு பழமையான ஜனார்த்தன சுவாமி கோவிலும், 17ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய அன்ஜெங்கோ கோட்டையும் இங்குள்ளது.

வர்கலா டவுனிலிருந்து 3 கி.மீ தூரத்தில் மலைக்குன்றுகளும் கடற்கரையும் இருக்கின்றது. மற்ற கடற்கரை நகரை போலவே இங்கும் பல கடற்கரைகள் இருக்கிறது. Kappil beach, Black sand beach, Papanasam beach, Odayam  beach என பல இருக்கிறது. அனைத்துமே ஒரே வரிசையில் ஒன்றாய் இருக்கின்றது. கடற்கரையை ஒட்டிய மலைகுன்றுகள் (cliffs) வளைவான தோற்றத்தை கொண்டுள்ளது. அதாவது ஒரு முகட்டில் பார்த்தல் முழு மலைத்தொடரும் 'நெக்லெஸ்' போல வளைந்து இருக்கும். 

Varkala-beach

குன்றுகளின் உச்சியை ஒட்டி ஒரு கடைசியிலிருந்து மறுகடைசி வரை கடைகளும், தங்குமிடங்களும் (resort), உணவு விடுதிகளும் (restaurant) வரிசைகட்டி இருக்கின்றது. எல்லா ரிசார்ட்களும் மலைக்குன்றின் cliff முகட்டில் தான் இருக்கிறது. அதனால் பெரும்பாலான ரிசார்ட்களில் அறையிலிருந்தோ அல்லது வெளியே பால்கனி வழியே பார்த்தாலே கடல் காட்சியளிக்கிறது. அதுவும் முதல்/இரண்டாம் மாடி என்றால், பரந்து விரிந்த கடலின் காட்சி அகல கோணத்தில் தெளிவாய் தெரிகிறது. நாங்கள் தங்கியிருத்த அறையின் வெளியே உள்ள திண்ணையின் அருகே வந்து பார்த்தாலே கடல் தெரிந்தது. கண்ணை மூடி கடலின் அலையோசையை கேட்பது தியானத்தை  விட பெரிது. மேலும் காலை எழுந்தவுடன் அலைக்கடலின் ஓசையோடு கடலையும், காபியையும் ரசிப்பது அலாதியான இன்பம்! கூகிள் மற்றும் பிற வலைத்தளங்களில் தங்குமிடங்களை பற்றி தீர தேடி அலசிய பின் அறையை பதிவு செய்வது உசிதமானது.   

Varkala-seashore

கடைகளில் பெரும்பாலும் வெளிநாட்டினரையே குறிவைப்பது போல இந்தயாவின் கலை பொருட்களை மைய வியாபாரமாக வைத்துள்ளனர். காஷ்மீரி புடவை/ ஷால்/ கம்பளிகள், திபெத்திய துணிகள்/பாத்திரங்கள், சின்ன சின்ன வெண்கல சிலைகள்/ பொம்மைகள், மரத்திலான கலைப்பொருட்கள், தோல் பைகள், காதி பொருட்கள் என அனைத்தும் விற்கப்படுகின்றன. மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் அணிகலன்கள் (வெள்ளி, கிரிஸ்டல், நவரத்தினம், சிலிகா மற்றும் ஆடம்பர அழகு கற்கள் போன்றவற்றால் செய்யப்பட்டவை) ஆகியவையும் விற்கப்படுகின்றன. இவையனைத்துக்கும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். ஆரம்ப விலையே 2000க்கு மேல் தான். இதை தவிர காட்டன், லினனில் செய்த ஆண் பெண் துணிமணிகள், ஜூட் பைகள், சிறிய அலங்கார பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கழுத்தில் போடும் மணிகள் என சாமான்யர் வாங்கும் விலையிலும் பொருட்கள் இருக்கிறது. பெரும்பாலான கடைகளை திபெத்திய மக்களும், வடகிழக்கு மக்களும், வடஇந்திய மக்களுமே வைத்து நடத்துகின்றனர். வெகுசில கடைகளில் தான் சேட்டனின் மலையாளம் வருகிறது. மற்றவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். மலையாளமோ/தமிழோ அங்குள்ள பலரும் புரிந்து கொள்வது சற்றே சிறப்பு.    

இரண்டு கடைகளுக்கு ஒரு கடை காபி கடையும் (கஃபே), ஓட்டல்களும் இருக்கின்றது. பெரும்பாலும் சைனீஸ் உணவுகள், பராத்தா, நான், ரொட்டி, பர்கர், பீட்சா, மோமோ, சிக்கன், மீன், ஆகியவை கிடைக்கிறது. வெஜ் பிரியர்களுக்கு மிகவும் சொற்பமாக தான் உள்ளது. நம்மவூர் இட்லி, தோசை, சாதா மீல்ஸ் எல்லாம் ஏதாவது ஓரிரு கடையில் கிடைத்தால் பெரிதினும் பெரிது. இரவு நேரத்தில் எல்லா ஓட்டல்களிலும் வாசலில் சுட சுட கடலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை காட்சிப்படுத்தி, உணவுக்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மினி கோவா என்றதும் எல்லா கடைகளிலும் சரக்கு இருக்கும் நினைத்து கொண்டு வருவோர்க்கு ஏமாற்றம் நிச்சயம். ஒரு சில ரிசார்ட்களிலும், ஓட்டல்களிலும் மட்டுமே விற்கப்படுகிறது. பல இடங்களில் காலி பாட்டில்களை நம்மால் காண முடிகிறது. இரவில் எல்லா கடைகளும் விளக்கொளியில் பளபளவென கலர்கலராய் மின்னிகொண்டிருக்க, எதிரே கரும் இருட்டில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சிறு சிறு வெளிச்ச புள்ளிகளாய் கடலில் படகுகள் தெரிந்து கொண்டிருந்தன. 

Varkala-shopping

குன்றின் விளிம்பில் சிறிய இரண்டடி கல் சுவர்/மரப்பலகை தடுப்புகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அங்கங்கே கடலையும், கடற்கரையையும் பார்த்து ரசிக்க வியூ பாயிண்ட்களும், செல்பி பாயிண்ட்களும் உண்டு. மலையின் எந்த பக்கம் இருந்தாலும் கடலும் கடற்கரையும் தெரியும். எப்போதும் கடல் சீற்றத்தில் அலறி கொண்டே இருக்கிறது. சாதாரணமாக கரையிலிருந்து கடலை பார்த்தாலே நம் கண்பார்வையில் கிட்டத்தட்ட 4.5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும் (நேரம், வெளிச்சம் மற்றும் சீதோஷ்ணம் பொறுத்தது). ஆனால் 80 அடி உயரமுள்ள வர்கலா மலை குன்றுகளின் மேல் நின்று அரபி கடலை கிட்டத்தட்ட 15 கி.மீ வரை பார்க்கலாம் (என் அனுமானம் தான்!). தூரத்தில் போகும் பெரிய சிறிய கப்பல்கள், அங்கங்கே மிதக்கும் மீன் பிடி படகுகள், வானில் நமக்கு அருகில் பறக்கும் கழுகுகள் என ரம்மியமான காட்சிகளை பார்க்க முடியும். அதுவும் காலையிலோ/மாலையிலோ வெயில் தாழ இருக்கும் போது நாமும் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விடுவோம். உச்சி வேளையின் போது  சூரியன் கடலில் பட்டு, கடல் தங்க நிறத்தில் தகதகவென ஜொலித்து கொண்டிருக்கும். நங்கள் சென்ற போது வெயில் கடுமையாக இல்லாமல் அவ்வப்போது நல்ல (கன) மழை பெய்து நம்மை குளி(ர்)வித்தது. 

Varkala beach

மலை முகட்டிலிருந்து கீழே கடற்கரைக்கு வர சில இடங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றது. மலைகுன்றுகளின் அடிபாகத்தை கடல் நீர் அரிக்காமல் இருக்க படிக்கட்டுகளின் முடிவில் (குன்றின் அடிப்பகுதியில்) பாறைக்கற்கள் போடப்பட்டுள்ளன. அதிலிருந்து சில அடிதூரத்திலேயே கடல் அலைகள் நம்மை வரவேற்கிறது. சில சமயத்தில் அலைகள் இப்பாறைகள் வரை வந்து முட்டி மோதி, சுற்றுலா பயணிகள் போட்டு வைத்திருந்த செருப்புகளை கவர்ந்து செல்கின்றன. மற்ற கடற்கரை காட்டிலும் இங்கு அலைகள் சற்றே ஆக்ரோஷமானதாய் இருப்பதை போல எனக்கு தெரிந்தது. அந்த நீண்ட கடற்கரை முழுவதும், ஆங்காங்கே மக்கள் கரையிலிருந்தும், சற்றே தள்ளி கடலிலும் சென்று குதித்து அலையோடு விளையாடி, குளித்து, களித்து கொண்டிருந்தனர். சில ஆபத்தான இடங்களில் முக்கோண சிகப்பு கொடி நடப்பட்டிருந்தது; அதை தாண்டி செல்வது அவரவர் பொறுப்பும் விருப்பும். ஓர் குறிப்பிட்ட உயரமான இடத்தில், அவசர உதவி மீட்பு குழுவை சேர்ந்த நபர் (Emergency Rescue Person) கலர் குடையின் கீழ் அமர்ந்து கொண்டு தூரத்தில் (ஆழ்) கடலில் நீந்த செல்பவர்களை விசில் போட்டு தடுத்து கொண்டிருந்தார். மற்றபடி வேறு எந்த முதலுதவி சாதனமோ, மற்ற பொருட்களான structure, மிதக்கும் மிதவைகள், safe jacketகள், speed boat போன்றவை இருந்த மாறி தெரியவில்லை. 

கரையில் ஒரு ஓரத்தில் sea surfing என சொல்லப்படும் கடலில் மிதக்கும் விளையாட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பயிற்சியாளர் மூலம் பயிற்சி தரப்பட்டு கொண்டிருந்தது. கடல் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த விளையாட்டிற்கு செல்வது நல்லது. காயக்கிங் (kayaking) போன்ற படகு விளையாட்டும் உண்டு என சொன்னார்கள். அனால் எங்கே நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்த பாரா கிளைடிங் (Para Gliding) தற்போது சீசன் இல்லாதால் போக முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான்.

ஏற்கனவே சொன்னது போல முழு நீள கடற்கரையையும் நாம் நடந்தே கடக்கலாம். அப்படி நடந்து செல்லும் போது மீனவர்கள் (வேலைசெய்யும்) வலைபோடும் இடமும், அதையும் தாண்டி சென்றால் கருப்பு நிற கடற்கரை மண்ணையும் காணலாம். ஒர் இடத்தில சிகப்பு கொடியை தாண்டி சென்றாலோ அல்லது மலைக்குன்றின் மறுபக்கத்தில் உள்ள படிக்கட்டுகளின் மூலமாகவோ மறுபக்க கடற்கரைக்கும் செல்லலாம். 

வர்கலாவில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே பீக் சீசன் என சொல்கிறார்கள். இப்போது ஏப்ரலில் நாங்கள் சென்றது off-season என்றாலும், மிதமான கூட்டமும், இதமான வானிலையும் இருந்ததால் நிம்மதியாய் சென்று வர முடிந்தது. கடலையும் கடற்கரையையும் ஆறு முதல் அறுபது வயது வரை எல்லோருக்கும் பிடிக்கும். அவ்வளவாக பிடிக்காதவர்கள் கூட இங்கே வந்தால் சில மணிநேரத்தில் சொக்கி போய் குதூகலிப்பார்கள். மொத்தத்தில் கடலும் கடல் சார்ந்த இடமும் பிடித்தவர்களுக்கு வர்கலா ஓர் அருமையான சொர்கபுரியாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். 


நன்றி!!!
பி. விமல் ராஜ்