ஞாயிறு, 11 ஜூன், 2017

ஆதியோகியும், தியானலிங்கமும் !

வணக்கம்,

கடந்த வாரம் உறவினர் வீட்டு திருமணதிற்காக கோவை செல்ல வேண்டியிருந்தது. இவ்வளவு தூரம் போகிறோமே, ஈஷா தியான லிங்கத்தையும், ஆதியோகி சிலையையும் பார்க்கலாமே என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. எனக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தூரம், இந்தியா பர்மாவை பூமி பந்தை சுற்றி வந்து தொடும் தூரம்தான். இருப்பினும் அப்படி என்ன தான் இருக்கிறது அந்த சிலையில் என்ற ஆவலில் எனது செட்டு மக்களுடன் பயணப்பட்டேன்.

பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரித்தாலும், சென்னையை போல வெயில் அவ்வளவாக தெரியவில்லை. சீதோஷ்ணம் இதமாக தான் இருந்தது. இரவில் லேசாக குளிரவும் செய்தது. கிளம்பும் போது மணி 3. போகும் வழியெல்லாம் மலைகள்.கோவையை சுற்றிலும் மலைகளும் காடுகளும் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்க, அழகே அழகு. மேகத்தை முட்டும் மலைகளும், மலையின் உச்சியில் சூரிய ஒளியும், வழியெல்லாம் பச்சை பசேலென மரங்களும்...அப்பப்பா... பார்க்கவே அருமையாக இருந்தது. அழகை ரசித்து கொண்டே வந்தோம்.

போகும் இடம் வழி தெரியாததால் ஓர் இடத்தில வழி கேட்டோம். அவர் சொன்ன அடையாளப்படியும், கூகுளை மேப்ஸ் படியும் நாங்கள் பேரூர் ஏரியை கடந்து செல்ல வேண்டும். அந்த இடம் வந்ததும், இங்கு ஒரு ஏரி இருக்க வேண்டுமே என யோசித்தோம்... வெறும் மண் மேடும் புதர்களும்தான் இருந்தது. ஏரிக்கான அடையாளம் ஒரு சொட்டு கூட இல்லை. போகிற வழியில் இன்னொரு ஆறு (நொய்யல் ஆறு என நினைக்கிறேன்), அங்கு 10/15 லாரிக்கார்கள் அவள் மேலாடையை அழித்து, உள்ளாடையை உருவி கதற கதற கற்பழித்து கொண்டிருந்தார்கள். 'தசாவதாரம் ' படத்தில் கமல்-அசின் மணல் மாபியாவை பார்ப்பது போல, நாங்களும் லாரிகள் மணலை அள்ளி புழுதியை கிளப்பி கொண்டு பறந்துகொண்டிருந்ததை பார்த்தோம். உச்சு கொட்டிய படியே இவற்றையெல்லாம் கடந்தோம். போகும் வழியெல்லாம் ஈஷா 11 கி.மீ., காருண்யா கல்லூரிகள் 10 கி,மீ., பூண்டி 5 கீ.மீ, வெள்ளயங்கிரி 8 கி,மீ. என அறிவிப்பு பலகைகள் இருந்தன.

ஈஷா தியான ஆசிரம வளாகத்தில்தான் ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆதியோகி சிலை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம் (அனுமதி இலவசம் தான்). பூலுவம்பட்டி காடுகள். மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ, இயற்கை அன்னையின் மலைகளின் மடியில் அமைந்துள்ளது ஈஷா ஆசிரமம். நுழைவு வாயிலே கருங்கற்களினால் செய்யப்பட்டது போல, பார்க்க கலைநயத்தோடு இருந்தது. சில கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் பிளாட்∴பாரம் போடப்பட்டிருந்தது. கார் பார்க்கிங்கில் விதம் விதமான கார்கள். குறைந்தது 200 கார்கள், வேன்களாவது இருக்கும். உள்ளே வரும் வழியிலிருந்த ஆதி யோகியை பார்க்க முடிந்தது. வெட்ட வெளியில் வெகு தூரத்தில் ஒரு கரும் சிலை. நல்ல ஒரு தலைநோக்கு தொலைநோக்கு பார்வை, இந்த இடத்தை உருவாக்கி வடிவமைத்தவருக்கு!

காரை விட்டு இறங்கி உள்ளே சென்றோம். சத்குரு பற்றியும், இந்த இடத்தை பற்றியும் தவறாக ஏதும் பேச வேண்டாம்; மீறி பேசினால் நம்மையும் Anti-Indian என முத்திரை குத்தி விடுவார்கள் என எள்ளி நகைத்தபடியே நடந்து சென்றோம். சுற்றிலும் மலைகள், கண்ணுக்கு எட்டியவரை காடுகள், ஒட்டடை குச்சி போல ஒரே உயரத்தில் வளர்ந்து நிற்கும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள், ஆளையே தூக்கி செல்லும் அளவுக்கு சில்லென காற்று, கல்யாண வீட்டிற்கு வந்தவர்களை ஆதி யோகியே "வாங்க! வாங்க!" என வரவேற்பதுபோல, எங்கோ மலைத்தொடரில் பெய்யும் மழை சாரல் காற்றில் பறந்து வந்து எங்கள் மேல் தெளித்தது. பார்க்கவும், உணரவும் மிகவும் ரம்மியமாக இருந்தது.

அருகில் செல்ல செல்ல ஆதி யோகியின் உயரம் தெரிய ஆரம்பித்தது. 112 அடி உயரம். அம்மாடியோவ்!!! பெரிய்ய்ய்ய சிலை தான்.  யோகாவில் சொல்லப்படும் மோட்சத்திற்கான 112 வழிகளை குறிக்கும் பொருட்டும், மனித உடலில் உள்ள 112 சக்ரங்களை குறிக்கவும் 112 அடி சிலையாம். 2 வருடங்களாக சிலையை வடிவமைத்து, எட்டு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதாம். சிலைக்கு கீழிருந்து பார்த்தால், லேசாக கண் திறந்திருப்பது போல இருக்கிறது. காதில் வளையம்; வெள்ளை துணி கொண்டு கட்டியிருந்தார்கள். அதுவே அந்தரத்தில், காற்றில் ஆடி கொண்டிருந்தது. கழுத்தில் பாம்பு தலையின் உருவம் மட்டும். நாங்கள் பார்க்கும் போது வெற்று கழுத்து (போட்டோவில் மாலைகளுடன் பார்த்ததாக நியாபகம்). பரந்து விரிந்த மார்பு. (56"...?!!? ஹம்ம்கூம்.... இல்லை.. அதை விட பெரிசு...) கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள சிலை (#WorldLargestBust). உலகளவில் அதிக மார்பளவு கொண்ட சிலை என பெயர் பெற்றுள்ளது. சிலையை சுற்றி அரையடி இடைவெளியில் வளைந்து நெளிந்த சூலங்களை வேலியாக வைத்துள்ளனர். முதலில் இது கற்சிலையாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் வேலியை தாண்டி சிலையை தட்டி பார்த்தால், இரும்பால் செய்யப்பட்டது போல "டொங்..டொங்.. " என சத்தம் கேட்கிறது. உள்ளே வெற்று இடமாக (hollow) காலியாக இருக்கிறது. இராம நாராயணன் படத்தில் வருவது போல, இரும்பில் ஒரு மெகா சைஸ் பிரம்மாண்ட செட் போட்டு வைத்துள்ளனர். மேலும் சிலையின் ஒரு பக்கத்தில் கதவு போல ஒரு வழி இருந்தது. சிலைக்கு உள்ளே போகவும், மேலே செல்லவும் படிக்கட்டுகள் இருக்கிறதா என தெரியவில்லை. மேலும் உள்ளே ..... (எல்லாமே என் யூகம் தான்!)

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

சிலையின் அருகே சிறு மண்டபம்.  அங்குள்ள சிறு லிங்கதை சுற்றி வந்து, கங்கை நீரை வாங்கி ஊற்றுகின்றனர். அவ்வளவு தான் ஆதியோகி !

என்னதான் நாம் உருகி உருகி ரசித்தாலும், இவ்வளவு பெரிய காட்டை அழித்து, இயற்கையை அழித்து, இந்த ஆதியோகி சிலையை நிறுவியுள்ளார்கள் என நினைக்கும் போது வயிற்றெரிச்சல் தான் வருகிறது. மேலும் இந்த இடமானது யானைகள் கடக்கும் இடம் என சொல்கின்றனர். இது கிட்டத்தட்ட மரத்தை வெட்டிவிட்டு மரச்சாமாண்கள் செய்து அழகு பார்ப்பது போல தான்.

அடுத்து ஈஷா தியான லிங்கம். ஆதியோகி சிலையிலிருந்து 10 நிமிட நடைப்பயணத்தில் இருக்கிறது ஈஷா தியான மண்டபம். தலைக்கு 10 ரூபாயில் மாட்டு வண்டி பயணமும் உண்டு. இயற்கையை ரசித்தபடி நடந்தே சென்றோம். இன்னும் முழுமையாக கமர்ஷியலுக்கு வரவில்லை ஆதியோகி. அதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறு சிறு ஸ்டால்கள் சொல்கிறது.

மண்டபம் உள்ளே போகும்முன் செருப்பு, கைப்பை, கைபேசி போன்றவற்றை ஒரு இடத்தில் டோக்கன் போட்டு வைத்துவிட சொல்கின்றனர். ஈஷா மண்டபம் - ஒரு கோவில் போல பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே சூரிய குண்டம், சந்திர குண்டம் என புனித நீராடும் இடங்கள் இருக்கிறது. சூரிய குண்டம் என்பது செயற்கை அருவி போல ஒன்றை செய்து, 30அடி ஆழத்தில் உள்ள குளத்தில் புனித நீர் விழுகிறது. குளத்தின் நடுவில் லிங்கம் இருக்கிறது. உள்ளே சென்று லிங்கத்தை தொட்டு வணங்கலாம். அதில் ஆண்கள் மட்டும் புனித நீராடலாம். சந்திர குண்டம் என்பது பெண்களுக்கானது. அதில் பெண்கள் மட்டுமே போக/நீராட முடியும். ஆங்காங்கே ஈஷா யோகா பற்றியும், தியான லிங்கம் பற்றியும் LED டி.விக்களில் ஆவணபடங்கள் ஓடுகிறது. இதை தாண்டி உள்ளே சென்றால், தியான லிங்கத்தை நோக்கி சுமார் 15 அடி உயரமுள்ள நந்தி நம்மை வரவேற்று நிற்கிறது.

தியான மண்டபதிற்கு உள்ளே செல்லும் போதே அமைதி காக்க சொல்கின்றனர். பெண்கள் காலிலுள்ள கொலுசைகூட கழட்ட சொல்கின்றனர். அதாவது அமைதியை அவர்களே உருவாக்குகின்றனர். அங்கு வேலை சேவகம் செய்பவர்கள் எல்லோருமே வெள்ளை நிற சீருடை அணிந்துள்ளனர். எல்லோருமே நுனி நாக்கு ஆங்கிலமும், இந்தியும் பேசுகின்றனர். புதிதாய் வருபவர்களை, அப்படியே கோழியை அமுக்குவது போல 'லபக்கென' அமுக்க தயாராய் இருக்கிறார்கள். நாங்கள் கொஞ்சம் உஷாராய் நகர்ந்து கொண்டோம்.
dhyanalingam entrancee


dhyanalingam

தியான மண்டபம் உள்ளே பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே கருப்பு நிற கிரானைட் கல்லில் லிங்க பைரவி திருவுருவ சிலையும், பதாஞ்சலி சித்தர் சிலையும் இருந்தது. பதாஞ்சலி சித்தர் சிலையருகே,  ஒரு பெண் வெள்ளை சீருடையில் தலைவிரி கோலமாய் கீழே தரையில் அமர்ந்து, தலைகுனிந்து தியானத்தில் அமர்ந்திருந்தாள். அமைதியான ஒரு இடத்தில திடீரென ஒரு உருவத்தை, ஒரு பெண்ணை அங்கு பார்த்ததும் உடன் வந்திருந்தவர்கள் பயந்தே போயினர். உள்ளே சென்றோம். தூரத்தில் புகைமட்டத்தில் கருவறை போன்ற தியான மண்டபத்தில், தியான லிங்கம் தெரிந்தது. பக்கவாட்டில் உள்ள பிரகாரம் போன்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில், மக்கள் சிலர் உட்கார்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அதில் சில வெளிநாட்டு மக்களும்  இருந்தனர். எங்களையும் உட்கார சொன்னார்கள். நேரமின்மை மற்றும் சீக்கிரம் போக வேண்டும் என்கிற காரணத்தால் திரும்பி விட்டோம். தியான மண்டபத்திலுள்ளே 18 அடி உயரமுள்ள தியானலிங்கமும், அந்த இடத்தின் அமைதியும் மனதை உலுக்கி எடுக்கும் என இதற்கு முன் போனவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை... சரி லிங்கத்தை தூரத்திலிருந்து பார்த்து விட்டோம் என்ற நிறைவுடன் வீடு திருப்பினோம்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

6 கருத்துகள்:

  1. இங்கு நான் சென்றதில்லை. கண்களால் கண்டனவற்றை வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. @ Asokan Kuppusamy & 'பசி'பரமசிவம் :
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!!!

    பதிலளிநீக்கு
  3. ஆகா உள்ளே பூந்து இப்படி ஒரு ரகளையா

    பதிலளிநீக்கு
  4. ஒருமுறை சென்று பார்த்து ரசிக்க வேண்டிய இடம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.- இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.