ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம்,

There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth.

இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே.

இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும், அது தான் உண்மை. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே உச்சபட்ச நடிகர். இவரை பல்வேறு பாத்திரங்களில், பல்வேறு நடிப்பில், பல்வேறு கோணங்களில் பார்த்துள்ளோம். கருப்பு-வெள்ளை, ஈஸ்ட் மென் கலர், 3D என திரையில் பல வடிவங்களில் ரசித்துள்ளோம். இப்போது மோஷன் கேப்சர் (motion capture) என்னும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அடுத்த படிக்கு கொண்டு போக, முதல் அடி எடுத்து  வைத்து நம்மை ஆள வருகிறார் கோச்சடையான்.     

படத்தின் ட்ரெயிலர் வந்த நாள் முதல், படத்தில் அனிமேஷன் சரியில்லை; கார்ட்டூன் படம் போல இருக்கிறது ; கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல ஆட்கள் இருக்கிறார்கள் என்று குறை கூறப்பட்டது . சொல்லப்போனால் உண்மையும் அது தான். டிரைலரில் ரஜினியின் தாண்டவம், நடந்து வருவது, எல்லாம் பார்த்து ஒரு கார்ட்டூன் படம் என்றே கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.  சூப்பர் ஸ்டார் ஒரு சீனில் நடித்தாலும் படம் ஓடிவிடும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள், இந்த படம் ஓடாது என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்; "கோச்சடையான்  பிளாப் ஆக 10 காரணங்கள் " என்று சில இணைய தள ஊடகங்கள் செய்திகளை பரப்பவும் ஆரம்பித்தன.

இதையேல்லாம் பார்த்து கொஞ்சம் யோசித்த தலைவர், கோச்சடையான் படம் வருவதற்கு முன் "லிங்கா"-வை ஆரம்பித்து விட்டார். பொதுவாக ரஜினியின் படம் வந்து சில நாட்களுக்கு பிறகு தான் அடுத்த படத்தின் பேச்சு அடிப்படும். லிங்காவின் இந்த அவசர ஆரம்பத்திற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த கேலிகூத்தை அடித்து, துவைத்து தன் வழக்கமான பாணியில் ரசிகர்களையும் , மக்களையும் கவர்ந்திழுத்து விட்டார் ரஜினி.
இப்படம் ஆஹா !! ஓஹோ!!!,  இந்தியா சினிமாவில் இது போன்ற கதையே வரவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே கருப்பு வெள்ளை படங்களில் பார்த்த  ஒரு சாதாரண கதை தான். அதைதான்  தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் நம்மை உட்காரவைத்து, போரடிக்காமல் காட்டுகின்றனர். இரண்டு மணி நேர படத்தில், 6 பாடல்கள்  தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்க்கும் ஓர் நல்ல பொழுது போக்கிற்கான படம் என்று சொல்லலாம்.


படத்தின் background animation நன்றாக உள்ளது. 3டி -யில் பார்பதற்கும், 2டி யில் பார்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முக அமைப்புதான் சற்று தடுமாற வைக்கிறது... "இவரா அவர் ???? "; "அந்த பெண்ணா அது??? " என்று நம்மையே குழப்பம் அடைய செய்கிறார்கள். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிகிறது. சற்றே பழைய ராஜா காலத்து பழி வாங்கும் கதை என்றாலும், அனிமேஷனுக்காக குழந்தைகளும், ரஜினிக்காக ரசிகர்களும் , பொழுது போக்கிற்காக மற்றவரும் இந்த படத்தை ஒரு முறை தாராளம் பார்க்கலாம்.! 

அவதார், டின்-டின் போன்ற ஆங்கில படங்களோடு ஒப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஹாலிவுட் திரைப்படங்களெல்லாம் 2000 கோடி/ 4000 கோடியில், 5 அல்லது 6 ஆண்டுகளில் தயாரகிறது. இந்தியாவில் 200 கோடியில் அதே அளவில் ரிசல்ட்டை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவதார், டின்-டின் போன்ற படங்களை எடுத்த அதே தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுக்கிறது என்று பட இயக்குனர் சொல்லியிருக்கலாம்.

இந்த 100 வருட இந்திய திரைப்பட வரலாற்றில்,


ராஜா ஹரிசந்திரா (1913) -இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

கீசக வதம் (1918) - தென் இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

ஆலம் ஆரா (1931)  - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்.
 
கிசான் கன்யா (1937) - இந்திய சினிமாவின் முதல் கலர் படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) - இந்திய சினிமாவின் முதல் கேவா கலர் படம்.

பானியன் டீர்  (1957) - இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம்.

ராஜாராஜ சோழன் (1973) - தென் இந்திய சினிமாவின் முதல் சினிமா ஸ்கோப் படம்.

மை டியர் குட்டி சாத்தான் (1984) - இந்திய சினிமாவின் முதல் 3டி படம்.

ராஜா சின்ன ரோஜா (1989) - இந்திய சினிமாவில் முதல் முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் நடித்த படம்.

கோச்சடையான் (2014) - இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் படம்.

அந்த வரிசையில் இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படம் கோச்சடையான் என்று  பெருமையாக சொல்லி கொள்ளாமல் இருக்க முடியாது.

இது ஒரு டை-ஹர்ட் ரஜினி ரசிகனின் விமர்சனம் என்று ஏளனம் செய்தாலும் சரி , அல்லது பொதுவாக ஓர் சினிமா ரசிகனின் பார்வை என்று நினைத்தாலும் சரி. என்னை பொருத்தவரை, கோச்சடையான் - இந்திய சினிமாவின் ஓர் மைல்கல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

வெள்ளி, 23 மே, 2014

எவன் அப்பன் வீட்டு சொத்து ?

வணக்கம் ,

நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும் வரிப்பணம் அரசாங்க ஊழியருக்குச் சம்பளமாக, நாட்டு முன்னேற்றதிற்காக, நல திட்டங்களுக்காக, கல்வி/தொழில் வளர்சிக்காகச் செலவு செய்யபட வேண்டும். பெரும்பாலான மக்களின் வரிப்பணம் எங்கெங்கோ, எப்படியெல்லாமோ வீணாகி கொண்டிருக்கறது.

அரசியல் கடலில் போட்ட பெருங்காயம்-

அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவும், கட்சி பணிக்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரும், பிரதமர் வேட்பாளரும் பிரசாரம் செய்யத் தனி விமானம் தேவையா ? இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா? அல்லது மக்களின் வரிப்பணமா என்று புரியாத புதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் சிலர், அரசியல் லாபத்திற்காகப் பத்திரிக்கையிலும், ஊடகங்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் தருகின்றனர். மேலும் பாராட்டு விழாக்கள், கட்சி பெருவிழாக்கள் மற்றும் அனாவசிய ஆடம்பரங்கள் எல்லாமே நம்முடைய வரிப்பணத்தில் தான் செலவு செய்யபடுகிறது. நமக்குத் தரவேண்டிய இலவச/மானிய மின்சாரத்தையும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்படுகிறது.

இவை மட்டுமா??

 நாம் ஏதாவது ஒரு பொதுத் துறை வங்கியில் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் விட்டால், நம்மைச் சும்மா விட மாட்டார்கள். கடனாளியிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், ஃபைன் , ஜப்தி, சிறை என அலைகழிப்பார்கள். வங்கியிலிருந்து (அடி)ஆள் அனுப்பி வைத்து கடனாளியை அசிங்க படுத்துவார்கள். இந்த மாதிரி சட்டமெல்லாம் எல்லோருக்கும் பொது என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. நாடு முழுக்கப் பொதுத் துறை வங்கிகளிடம் கோடான கோடி பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, ஏமாற்றும் பெரும் செல்வந்தர்களும், அரசியல் புள்ளிகளும் இருக்கதான் செய்கின்றனர்.


நாடு முழுக்க 24 பொதுத் துறை வங்கிகளில் 3 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பித் தராமல் பட்டை நாமம் போட்ட பெரிய நிறுவனங்கள் , தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவின் பெயர் மட்டும் வெளியே வந்திருகிறது. இது போன்ற இந்தியாவிலுள்ள பல பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அவ்வளவு ஏன் ? பெயரே பிரபலமாகத் தெரியாத 10 நிறுவனங்கள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மற்று 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்க பட்டு, இதுவரை ஒரு தவணை கூடத் திருப்பிக் கட்ட வில்லையாம். இது கிட்டத்தட்ட வங்கி புகுந்து கொள்ளை அடிப்பது போலதான் இருக்கறது.

'வராக்கடன்' என்று வங்கி குறிப்பிடும் இந்தக் கடன்கள் எல்லாம் திரும்பி வராது என்று தெரிந்தே வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் உயர் அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும், அரசியல் நிர்பந்ததிற்காகவும் போதுமான ஜாமீன் இல்லாமல் பணத்தை அள்ளி கொடுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறு வராக்கடன்கள் தள்ளுபடி செய்தது மட்டும் 2 லட்சத்து 4,000 கோடி!

சில ஆட்சியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக விவசாயக் கடனை, கூட்டுறவு கடனை வட்டியின்றி அறவே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதில் 60% ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும் , மீதம் 40%, விவசாயக் கடன் என்ற பெயரில் மற்ற தொழிலில் பணம் போட்ட பண்ணையார்களும், வசதி படைத்தவர்களும் அதிகம் பலன் பெறுகிறார்கள்.

இதெல்லாம் எவன் அப்பன் வீட்டுப் பணம் ? எல்லாமே நம்முடைய வரிப்பணம் தான். வங்கிகள் நாட்டுடைமையாக்கியது மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வங்கிகளால் பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான் நலனை சொகுசாய் அனுபவித்துக் கொண்டிருகின்றனர். வராக்கடன்களைத் திருப்பி வாங்குவதைப் பற்றி அரசு ஓர் நல்ல முடிவு எடுக்காத பட்சத்தில், நம் பொதுத் துறை வங்கிகள் திவாலாகி போக வாய்ப்புகள் உண்டு. வங்கியில் நாம் சேர்த்து வைத்த பணமும் சேர்ந்து திவாலாகி போகவும் வாய்ப்பு உண்டு என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் தான் நம்மூர் பணக்காரர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் சில பொதுத் துறை வங்கிகளே இப்படிச் சுவிஸ் வங்கி போலச் செயல்படுவது எங்குப் போய் முடியும் என்று தான் புரியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி நிறுவனமும் தான் இந்த வராக்கடன்கள் பற்றியும், உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பது பற்றியும் நல்ல முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் !

வங்கிகள் பற்றிய தகவல் - குமுதம் ரிப்போர்ட்டர் -18.5.2014


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 மே, 2014

அழகற்ற குரூபி ஆகிறாள் !

வணக்கம்,

பிள்ளைகளுக்கு பரீட்சை முடிஞ்சாச்சு. வெயிலுக்கும், கோடை விடுமுறைக்கும் சேர்த்து நம்மவர்கள் எதாவது மலை பிரதேசமாக போகலாம் என்று எண்ணினால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். இப்பதிவில் பார்க்க இருப்பதும் மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலை பற்றிதான்.

இயற்கை அன்னை நமக்கு பல செல்வங்களை அள்ளிதந்து கொண்டிருக்கிறாள். கனிம வளங்களாக, நீராக, வன உயிரினங்களாக, மரம், செடி கொடிகள் என பல விலைமதிப்பில்லா செல்வங்களை அளித்து கொண்டிருகிறாள். நம் மக்களோ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக அந்த செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறார்கள்.

கோடை காலத்தில் மக்கள் விரும்பி போகும் சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கோடை வெயிலுக்கு இதமாக கானல் (குளிர்ந்த வனமும், வனம் சார்ந்த இடமும்) இருப்பதால், மக்கள் கோடை விடுமுறைக்கு இங்கு வந்து விடுகின்றனர்.

பெயருக்கு ஏற்றார் போல பார்க்கும் இடமெல்லாம் மலைகளும், பச்சை பசெலன மரங்களும், காடுகளும், நீருற்றுகளும் இருக்கின்றது. மலைக்கு இடையில் போகும் போது, ஆங்கிலேயர் காலத்தில் விதைத்து வைக்கபட்டு, 100 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் நம்மை வரவேற்று நிற்கின்றது.

சில இடங்களில் மக்களின் சுவடே தெரியாத வண்ணம் இருந்த கொடைக்கானல் மலை காடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாசு படிய ஆரம்பித்திருகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படும் பிளாஸ்டிக்  பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள்/ பைகள் சுற்று சூழலை மாசுபடுத்தி வருகிறது. இந்த குப்பைகள் மக்கி மண்ணில் புதையும் போது, நிலத்தடி நீர் வளம் குறைகிறது. நீர்நிலை வறண்டு போகிறது. மழையும் பொய்க்கிறது. விவசாயம் பாதிப்படைகின்றது. மரங்களுக்கு தண்ணீர் இல்லாததால் காட்டில் சில நூற்றாண்டை கடந்த மரங்கள், கோடையில் சில மாதங்களை  கூட கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், காட்டில் மலையேற்ற நடைபயணம் செய்பவர்களும், சுற்றுலா வருபவர்களும், குப்பைகளையும், பிளாஸ்டிக் குடுவைகளையும் வனத்தில் வீசி விடுகின்றனர். ஒவ்வொரு தெருமுனையிலும் "பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர் ! வனத்தின் தூய்மை காப்பீர் !" என்ற அறிவிப்பு பலகைகள் இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. குப்பைகளை  உட்கொள்ளும் வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் அடர்ந்த வனத்தில் கட்டப்படும் தங்கும் மாற்றும் உணவு விடுதிகளாலும், வன மிருகங்கள் சுதந்திரமாய் வாழ இடையூறாக இருக்கிறது.  கொடை நகராட்சியும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைவிட என்னொமொரு கண்ணனுக்கு தெரியாத பேராபத்தையும் கொடைக்கானல் நகரமும்,காடுகளும் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. கொடைக்கானல் காடுகள், பாதரச நச்சு பொருட்களால் மாசுபட்டு கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் நம்முடைய உடம்பின் வெப்பத்தை கூறும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சு மிகுந்த பாதரசத்தால் சுற்றுசூழலும், வனமும் அழியும் நிலை ஆரம்பித்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில், உடைந்து போன அல்லது உபயோகமில்லாத தெர்மாமீட்டரை சரியான சுத்திகரிப்பு முறையில் இவர்கள் அகற்றுவதில்லை. பாதரசமிகுந்த தெர்மா மீட்டர் கண்ணாடிகளை குப்பை கூளத்திலோ, அல்லது காட்டிலுள்ள கிடங்கிளோ போட்டுவிடுகின்றனர். இதன் மூலம் பாதரசம் காற்றில் பரவி, காடுகளை மாசிபடுத்தி விடுகிறது. இதில் வேலை செய்பவர்களும், நோய் வாய்ப்பட்டு போவதாகவும், இறப்பதாகவும் சொல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் போராட்டத்தின் பெயரில் 2001-ஆண்டு அரசு இந்நிறுவனத்தை மூட உத்திரவிட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, மலைகளின் இராணி என்று சொல்லப்படும் ஊட்டியும் இது போன்ற சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சொல்ல போனால், கொடைக்கானலை விட  ஊட்டி மிகவும் மாசுபட்டுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். வண்டியிலிருந்து வெளிப்படும் CO2 வாயு, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் நச்சு காற்று ,கழிவு நீர் போன்றவை ஊட்டியை மேலும் மாசுபடுத்துகிறது. இங்கும், பிளாஸ்டிக்கும், குடுவைகளும் இயற்கை மாசடைய பெரும்பங்கு வகிக்கிறது. இதன் மூலம், ஊட்டி ஏரி மாசடைந்து காணப்படுகிறது. மீன்களும், பிற உயிரினங்களும் அழியும் நிலையில் உள்ளது. உலக புகழ் ரோஜா தோட்டமும் ஊட்டியில் தான் இருக்கிறது. நிலம்,காற்று மாசடைவதால் தாவரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.

இது ஊட்டி ,கொடைக்கானலில் மட்டுமல்ல.. நம் நாடெங்கும் இது போன்ற சுற்றுசூழல் கேடுகள் இருக்கிறது. அவைகளை வளரவிட்டால், நம் நாடு பல செல்வங்களை இழக்க வேண்டி வரும்.
 
வருடந்தோறும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் பலர் வருகின்றனர். அரசுக்கு வருமானமும் பெருகுகிறது. அதை வைத்தது கொண்டு நம் சுற்று சூழலையும், இயற்கையின் பேரழகையும் காப்பது நம் அரசின் கடமையாகும். அரசின் கடமை மட்டுமல்ல;  ஒவ்வொரு மக்களின் கடமையும் தான். இதை இப்படியே விட்டுவிட்டால், வரும் காலங்களில் நம் இயற்கை அன்னை அழகற்ற குரூபி ஆனாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்