short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சிறுகதை - நானும் தண்டம் தான்!

வணக்கம்,

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சிறுகதை ஒன்றை முயற்சித்து உள்ளேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லவும்.

சிறுகதை - நானும் தண்டம் தான்!
*****************************************

அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும் கூட்டமாக இருக்கிறது என்றால் இன்னும் கடுப்பு தான். தன் அம்மா வள்ளியை முன்னால் எற சொல்லிவிட்டு, அவள் உள்ளே முண்டியடித்து போகும் வரை பார்த்துவிட்டு, இவனும் பின்புற வழியாக ஏறி கொண்டான். உள்ளே போக இடமில்லை. நான்கு பேரோடு ஐந்தாவது ஆளாய் கடைசி படிக்கட்டில் தொத்தி கொண்டான்.

tamil-shortstory

"ரெண்டு வடபழனி.." என பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி கொண்டான். ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் இறங்கி ஏற சிரமமாய் இருந்ததால், கொஞ்சம் உள்ளே சென்று கண்டக்டருடன் நின்று கொண்டான். அவன் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கண்டக்டரிடம் நின்று கொண்டாள். விஜய் அம்மாவை முறைத்து கொண்டே, "இதுக்கு தான் சீக்கிரம் கிளம்பனும்ன்னு சொன்னேன்.. இப்போ பாரு..இவ்வளோ கூட்டம்.."என கடிந்து கொண்டான். அவளும், "ஏண்டா... நான் துணி துவச்சிட்டு, இட்லிக்கு மாவு போட்டுட்டு தானே வரணும்..இல்லனா திங்கட்கிழமை என்ன பண்ணுவே??" என ஆதங்க பட்டுக்கொண்டாள். "நேத்தியே போலாம்ன்னு பாத்தா உனக்கு வேலை வந்துடுச்சு. போயிட்டு ஒன்பது மணிக்கு தான் வந்தே.. அப்போ இப்போ தான் போணும்.." என்றாள் அவள்.

 "ஆமா இப்போ உன் தங்கச்சி வீட்டுக்கு போகனும்னு ரொம்ப அவசியம்.." என கூறி கொண்டு முணுமுணுத்தான்.. வண்டி டிராஃபிக் காரணமாக மெதுவாக போவதால் கொஞ்ச நேரம் போனை எடுத்து பாட்டு கேட்டு கொண்டிருந்தான் விஜய். சிறிது நேரம் போனது. கிண்டியை தாண்டியவுடன், விஜய்யின் அம்மா குரல் கேட்பது போல உணரவே, நிமிர்ந்து பார்த்தான். ஆம்! அவன் அம்மா யாரோ  ஒருவனை திட்டி சண்டையிட்டு கொண்டிருந்தாள். என்ன ஏது என அவசரமாக ஹெட்செட்டை கழட்டி அருகில் போனான்.. "பொறுக்கி கம்மினாட்டி! அந்த பொண்ணு ஓரமா தானடா நிக்குது.. மேல வந்து எறுறியே.. எருமை.. அப்படி தள்ளி போடா..." என பொறுமி கொண்டிருந்தாள். "இடம் இல்லல.. பஸ் வேற கூட்டமா இருக்கு.. எங்க போவ நானு.." என்று சொல்லியபடி  தலையை தொங்கப் போட்டன் அந்த இடி மன்னன். ஜீன்ஸ் பேண்டும், ஒரு டிசன் பனியனும் போட்டிருந்தான். காதில் ஹெட்போன். பார்க்க சிறு வயசு பையன் போல தான் இருந்தான்.

"நானும் அப்போலருந்து பார்கிறேன், இவனும், அந்த பொண்ண உரசுரதுலேயே குறியா இருக்கான், காவாளி பய.." அருகில் நின்ற பெரிசு ஒன்று சவுண்ட் விட்டது." "இதுக்குனே பஸ்ல வரா இவாலெல்லம்... " என்றார் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாமி.

பலரும் முனுமுனுக்கவே அவன் தள்ளிப்போய் படிக்கட்டு அருகே நின்று கொண்டான். எல்லோரும் சேர்ந்து தர்மஅடி போடுவதற்குள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொண்டான்.

இருப்பினும் வள்ளியின் வாய் சும்மா இல்லை. அவனை கரித்து கொண்டே வந்தாள்."இதெல்லாம் எங்க உருப்பட போகுது..தெரு தெருவாக போய் பிச்சை தான் எடுக்கும்..சனியன்..சனியன்.."

"சரி விடுமா.. போகட்டும் அவன்", என்றான் பக்கத்தில் உள்ள ஒரு நடுத்தர வயது ஆண்.. அவள் சடாரென திரும்பி அவரை பார்த்து, "அதெப்படி விட முடியும்.?? சின்ன விஷயமா அவன் பண்ணான்..? இத்தனை ஆம்பளைகள் இருகீங்கன்னு தான் பேரு.. எல்லாம் தண்டமா இருக்கீங்க.. ஒருத்தராவது  தட்டி கேட்கலாம்ல..??" என்று  கேட்டாள்.. டிக்கெட் கிழித்து கொண்டிருந்த கண்டக்டர், அவரை யாரோ கிழிப்பது போல நிமிர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

பஸ்சில் இருந்த அனைவரும் சில நொடிகள் மௌனமானார்கள். விஜயும் தான். பஸ் எரியவுடனயே அவன் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்து விட்டான். ஆனாலும், பார்க்காதது முகத்தை திருப்பி கொண்டு, பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டான். அவன் மட்டுமல்ல. பலரும் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்திருப்பார்கள். தப்பு நடந்ததை பார்த்தும் பார்க்காதது போல இருப்பதாலும், வாய்பிருந்தும் தட்டி கேட்காமல் இருப்பதால் தான், இது போன்ற கொடுமைகள் நடந்து வருகிறது.  வள்ளி கூறியது உண்மை தான். வாய்ப்பிருந்தும் தப்பை தட்டி கேட்காத எல்லா ஆண்களும் தண்டம் தான். அந்த தண்டத்தின் தண்டமாக அவனும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

 நன்றி!!!
 பி.விமல் ராஜ்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

சிறுகதை - கனவு கலைந்தது

வணக்கம்,

இன்றைய நவநாகரீக உலகில், ஒரு சில திருமண கனவுகள் எப்படி கலைகின்றன என்பதை என் கற்பனையில் கண்டுள்ளேன். உங்கள் விமர்சனங்களை பகிரலாம்...

சிறுகதை - கனவு கலைந்தது
***************************************
காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின்  தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

"தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு  படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க அண்ணனும் நேர்ல போய் பேசிட்டு வந்துட்டார். பொண்ணு  வீட்ல சரின்னா அடுத்தடுத்த மாசத்திலேயே கல்யாணத்த வச்சிடலாம்." - அவன் அப்பா.

"ஹ்ம்ம்... நல்ல படியா முடிஞ்சா சரிதான்.. ", அம்மா.

அரை தூக்கத்தில் இதை கேட்டதும், விருட்டென எழுந்து உட்கார்ந்தான். புன்முறுவலோடு தலைமுடியை கோதி, எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டான். காலை வேளையில் இந்த மாதிரி ஒரு நல்ல சேதியை கேட்டால் யாராக இருந்தாலும் சந்தோஷம் பொங்கி வருவது இயல்புதானே!

ஏதும் கேட்காதவன் போல், அறையை விட்டு வெளியே வந்தான். அவனை பார்த்ததும் அம்மாவும், அப்பாவும் பேச்சை சட்டென நிறுத்திக்கொண்டனர்.

"ஹ்ம்ம்... பத்து வயசு, பதினஞ்சு வயசெல்லாம் காதல், கல்யாணத்தை பத்தி பேசுது....ஏழு கடா வயசு எனக்கு.. என் கல்யாணத்தை பத்தி, என் முன்னாடி பேச இவங்களுக்கு என்ன வெட்கமோ தெரியல..." என்று முனகியபடியே பல் துலக்கி விட்டு வெளியே வாக்கிங்க்கு போனான். வழக்கம் போல இல்லாமல், இன்று அதிகமான புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தான்.

அதே புத்துணர்ச்சியுடன் , காலை உணவிற்காக வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். "என்னம்மா.. இன்னைக்கும் இட்லியா???? ஒரு சப்பாத்தி , பூரி பண்ண கூடாதா?? " என்று நொந்து கொண்டான். அம்மா ஏதும் பேசவில்லை. தினமும் இதே கேள்வியை இவன் கேட்பதால், அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

"அஜய் , அப்பா ஏதும் சொன்னாரா??? "

"இல்லையே ... என்ன???", தெரிந்தும் தெரியாதது போல கேட்டான்.

அம்மா விஷயத்தை சொன்னாள்.

மனதிற்குள் மத்தாப்பூ பூத்தது போல இருந்தாலும் , முகத்தை சாதாரணமாகவே வைத்து கொண்டான்..

"இன்னைக்கு மதியத்துக்குள்ள பொண்ணு வீட்ல முடிவை சொல்லிடுவாங்க.. அப்புறம் கல்யாணந்தான்...  "

மீண்டும் உதட்டில் லேசான புன்னகையை மட்டும் பூத்தான்.

பிடிக்காவிட்டாலும் எட்டு , பத்து  இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினான்.


வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த வண்டியை லேசாக துடைத்து விட்டு, இரு கண்ணாடிகளில் தலையை கோதிவிட்டு, தாடியை தடவி சரி செய்துவிட்டு கிளம்பினான். ஆளில்லா ஓ .எம்.ஆர்  சாலையில்,  யமஹா R15-ஐ  காற்றில் பறக்க விட்டான்.

அலுவலகத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் சரியாய் செய்து முடித்து மேலிடத்துக்கு அனுப்பி வைத்தான். என்றும் இல்லாத அதிசயமாய், பக்கத்து சீட்டில் உள்ள கேரள பேரழகி மோனா-வின் சிரிப்பும், பார்வையும்  இன்று அவன் மேல் விழுந்தது. ஊரிலிருந்து வந்த தின்பண்டங்களை அவனுக்கு கொடுத்தாள். அஜயின் மனம் ஆனந்த பெருக்கில் ஊறி திளைத்தது.

அலுவலகத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனிடமும், பள்ளிக்கூட  நண்பன் ஒருவனிடமும்  மட்டும் போன் செய்து கல்யாண விஷயத்தை சொன்னான். தற்காலிக விடுப்பு, சலுகை விடுப்பு எத்தனை நாட்கள் இருக்கிறது என்று சரி பார்த்து கொண்டான். அலுவலகத்தில் அவன் உத்தியோக பதவிக்கு எவ்வளவு பணம் கடனாய் கிடைக்கும் என்று மனிதவள மேலாளரை கேட்டு தெரிந்து கொண்டான். தேனிலவு சுற்றுலா செல்ல, செலவு எவ்வளவு  ஆகும் என்று வலைத் தளங்களில் தேடி பார்த்து கொண்டிருந்தான். மேலும் 'மேனகா'-வில் சமீபத்திய மாதிரி அட்டைகளைகளையும் வலைத்தளத்தில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான். நேரம் இனிமையாய் கடந்தது.

மதியத்துக்கு மேலாகியும் வீ ட்டிலிருந்து செய்தி எதுவும் வராததால், பொறுமையிழந்து  அவனே அம்மாவுக்கு போன் செய்தான்.

 "ஹலோ அம்மா ! "

 "ஹலோ !! சொல்லு அஜய் ...என்ன விஷயம் ? "

"ஒண்ணுமில்லை.. எ.....னக்கு கூரியர் ஏதாவது வந்துச்சா..?? "

"இல்லையே.."

"வரலையா???... ஹ்ம்ம்... அதான் கேட்டேன்...சரி... வைச்சுடுறேன்..."

"ஒரு நிமிஷம்ப்பா .. "

"ம்ம்.. என்னம்மா...??" - நாற்காலியில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"அது... பொண்ணு வீட்ல ஜாதகம் சரியில்லை சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிடாங்கப்பா.."

அவன் ஆசையில் இடி விழுந்தது போல இருந்தது...

"..........."

"அஜய்... லைன்-ல இருக்கியா??? "

"ம்... பரவாயில்லை...சரி விடும்மா....  அப்புறம் பேசுறேன்..."

அவன் கட்டிய மனக்கோட்டையேல்லாம் தூள்தூளாக உடைந்து போயிருந்தது. எரிச்சலும், சோகத்துடனும் இரவு ஒன்பது மணி வரை கடமைக்கு அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான். வண்டியின் பின் டயர் பஞ்சர். வண்டியை அரை கி.மீ  தள்ளி கொண்டு போய் பஞ்சர் போட்டுவிட்டு வீட்டுக்கு போனான். கடைசியாக வீடு வந்து சேரும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

"என்னப்பா, இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு ??  "

"கொஞ்சம் வேலை அதிகம்..."

 "சரி.. கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு .."

"இல்ல.. வயிறு சரியில்ல....சாப்பாடு வேண்டாம்... " என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான். வெளியில் பெற்றோர்கள் இருவரும் பேசுவது இவனுக்கு லேசாக கேட்டது.

" நமக்கு என்னங்க குறைச்சல்...? நம்ம என்ன நகை நட்டா கேட்டோம்?? சொந்த வீடிருக்கு...  ஒரே பையன்....நல்லா படிச்சிருக்கான்... நல்ல வேலை... மாசம் இருபத்தஞ்சாயிரம் சம்பாதிக்கிறான்...கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்ல... இன்னும் என்ன வேண்டி கிடக்கு இவள்களுக்கு....  சம்பளம் பத்தல.....ஃபாரின் போகல.... கார் இல்ல....கலர் கம்மின்னு 1008 கண்டிஷன்... ஒருத்தி கூட இவனை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்க மாட்டேன்கிறா.. ஹ்ம்ம்... எம் புள்ளைய பாத்தா பாவமா இருக்கு..."   என்றாள் அம்மா.

 "...ம்ச்ச்... ஆறு வருஷமா பொண்ணு பாக்குறோம்... முப்பத்தி இரண்டு வயாசாகியும், நம்ம சாதி சனத்தில இவனுக்கு ஒரு பொண்ணு  கூட அமையலையே...." என்றார் அப்பா வருத்ததுடன்.

இம்முறையும் தான் கண்ட கனவு கலைந்தது பற்றி எண்ணி கொண்டே துயில கண் மூடினான் அஜய்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 ஜூன், 2014

சிறுகதை - கடற்கரை கோவில்

வணக்கம்,

நாளை இப்படியும் நடக்கலாம் என்பதை வைத்து தான் இந்த சிறுகதை
எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.

சிறுகதை - கடற்கரை கோவில்
*******************************************
"பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?" என்று கேட்டார் தாத்தா.

"நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. "

"வாங்க போகலாம்.. "

"ரவி, ராஜு... ரெண்டு பேரும் இங்க பாருங்க.. தாத்தா கிட்ட சாப்பிட அது வேணும் , இது வேணும்னு அடம் பிடிக்கக் கூடாது.. இங்கே வீட்ல நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு... சமத்தா போயிட்டு, சமத்தா வரணும்.. சரியா ??"- அம்மா.

"ஒ.கே. மம்மி !! ...."

"சரிப்பா..போயிட்டு இருட்டுறதுகுள்ள சீக்கிரம் வந்துடுங்க "

"சரிம்மா.. நான் பத்திரமா பாத்துகிறேன்..." என்று கூறிவிட்டுக் கைகடிகாரத்தைப் பார்த்தார். அதுவரை கரும் திரையாக இருந்த கடிகாரம், அவர் பார்த்தவுடன், "TIME : 04:35 PM ; DATE: 14TH MAY ; WEATHER: 49 °C;...." என்று ரேடியத்தில் மாறி மாறி காட்டியது. மூவரும் பொடி நடையாக மெயின் ரோட்டுக்கு நடந்தனர்.

கோடை விடுமுறையோட்டி, அன்று காலைதான் ரவியும், ராஜுயும் அவர்கள் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர் . தாத்தாவுடன் வெளியில் செல்வது என்றால் அவர்களுக்கு அலாதி பிரியம்.

"தாத்தா! இப்போ நம்ம எங்க போறோம்? " என்று ஆவலுடன் வினவினான் ராஜூ.

"கடற்கரை கோவிலுக்கு.. "

"கடற்கரை கோவிலா?? அது எங்க இருக்கு? " - ரவி.

"இங்க தான்..கொஞ்ச தூரத்திலே.... ஆட்டோல போகணும் . "

மெயின் ரோடு வந்ததும், ஆட்டோவில் ஏறி கடற்கரைக்குச் சென்றனர். ஒரு பத்து நிமிடம் இருக்கும்; கடற்கரை வந்தாயிற்று. வரும் வழியில், ஒரு கீ.மீ தொலைவிலிருந்தே அலை ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது. பிள்ளைகளுக்குக் கடலை பார்த்ததும் ஆனந்தம் தாங்க வில்லை. ரவியும், ராஜுவும் கடல் நீரை நோக்கி ஓடினர்.

"பாத்து..பாத்து.. ஓடாதீங்க.. " எனப் பதறினார் தாத்தா.

கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது ஒரு பெரிய பழமையான பெருமாள் கோவில். கடல் காற்றால் சுவரெல்லாம் உப்பு படிந்து கிடந்தது. மேலும் கடல் நீர் அரிக்காமல் இருக்கப் பெரிய கற்கள் கடற்கரையில் போடப்படிருந்தது.

அன்று மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே, இருவர் கையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தாத்தா கோவிலுக்குள் சென்றார்.

"இது தான் இங்க இருக்கிற கடற்கரை கோவில் .. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கட்டினது.. "

"எந்த வருஷம் ??"

"ம்ம்ம்... 8-ஆம் நூற்றாண்டில்.. "

"ஏன் இப்படிப் பாதிக்கு மேல இடிஞ்சி போயிருக்கு ?"

"கடல் தண்ணி வந்து அடிச்சி இப்படி ஆயிடிச்சு.."

"............"

எல்லோரும் உள்ளே சென்று பெருமாளை சேவித்தனர். பிரகாரம் சுற்றி வந்தனர்.

"இந்தப் பெரிய மண்டபம் எதுக்குத் தாத்தா ? " என்று ராஜு கேட்டான்.

"வெள்ளைக்காரன் காலத்தில இங்க தான் அரிசி மூட்டையெல்லாம் சேமிச்சு வெச்சாங்களாம்.. அப்புறம் இங்கே தான் சாமிக்கு அலங்காரம், திருகல்யாணமெல்லாம் நடக்கும்... "

"ஓஹோ!! அப்படியா!! "

மேலும் அந்தக் கோவிலின் சிறப்பை பற்றிச் சொல்லி கொண்டிருந்தார் தாத்தா.

சிறிது நேரம் கலை நயம் மிக்க அந்தக் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு வெளியே கடலுக்கு வந்தனர். நடுகடலில் ஆறடி அலையாக ஆரம்பித்த அலைகள், கரையைத் தொடும் போது ரவி, ராஜுவின் காலடிகளை மட்டும் கழுவி விட்டுச் சென்றது.

"என்ன தாத்தா, கடலையே பாத்துகிட்டு இருக்கீங்க? "

"ஹ்ம்ம்.. ஒண்ணும் இல்ல..ரவி, அங்க பாரு.. "

"எங்க ???"

"இரண்டு பறவை நடுக் கடல்ல பறக்குறது தெரியுதா ?? "

"ஆமா.. தெரியுது.."- ரவி

"ஆமா ..எனக்கும் தெரியுது.."என்றான் ராஜு

"அங்க தான் நன் சின்ன வயசில விளையாடிகிட்டு இருந்தேன். "

"கடல்லையா ??? பொய் !!! பொய் !!! பொய் சொல்றீங்க!" என்று கூறி சிரித்தான் ரவி.

"உண்மைதான் ரவி... அப்போ அதுதான் கடற்கரையா இருந்துச்சு.. "

"நிஜமா தாத்தா??? " என்று புருவம் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராஜு.

"ம்ம்.. அது தான் மெரினா கடற்கரை... நான், என் பிரண்ட்ஸ் எல்லாம் அங்க தான் விளையாடுவோம்... இந்தப் பக்கம் பாரு.. தூரத்துல ஒரு போட் தெரியுதா??"

"ஆங்.. தெரியுது .."

"அதையும் தாண்டி, அங்க ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்துச்சு.. "

"இப்போ பல்லாவரம் மாமா வீட்டுகிட்ட இருக்குல்ல ..அதை விடவா..."

"இல்ல..இல்லை..அது 10 வருஷம் முன்னாடி தான் கட்டினது.. இது அதை விடப் பெரிசு.. "

"வேற என்னலெல்லாம் இருந்துச்சு தாத்தா?? "

"பீச்சோரமா தலைவர்கள் சிலை , சமாதிகள் , ஒரு நீச்சல் குளம், இரண்டு பெரிய காலேஜ், ஒரு யுனிவர்சிடி, மீன் பிடிக்கிற ஜனங்க வாழ்ற கிராமம் .... இன்னும் நிறைய.."

"இப்போ அதெல்லாம் எங்க தாத்தா??? "

"கடல் ஆக்கிரமிச்சிடிச்சி..."

"எப்போ ..??"

"ஹ்ம்ம்...எல்லாம் 40 வருஷதுக்கு முன்னால சுனாமி வந்து அடிச்சிகிட்டு போச்சு.. கடல் ஆக்கிரமிச்ச இடமெல்லாம், எல்லாக் கட்டிடங்களும் இடிஞ்சி தரமட்டமாச்சி.. நிறையப் பேர் செத்து போய்டாங்க.."

"ஏன் கடல் ஊருக்குள்ள வந்துச்சு தாத்தா ??? "

" இந்தப் பூமி சூடாகும் போது கடல் தண்ணி இப்படி ஊருக்குள்ள வருமுன்னு சொல்வாங்க "..

"அப்போ  மறுபடியும் கடல் ஊருக்குள்ள வருமா தாத்தா?? " என்று பயத்துடன் கேட்டான் ரவி.

"வரலாம்... ஆனா அதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும்.." என்று சமாதனப்படுத்தினார் தாத்தா.

தாத்தா சொன்னது முழுவதும் புரியவில்லை என்றாலும், புரிந்தது போல ரவியும், ராஜுவும் தலையாட்டினர்கள் .

வானம் இருட்ட ஆரம்பித்தது. மூவரும் கடற்கரையை விட்டு, வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். தூரத்தில் சீறி வரும் ஆட்டோவை கைகாட்டி மறித்தார் தாத்தா.

"எங்க சார் போகணும்.?"

" அப்துல்லா தெரு, கான்வென்ட் ஸ்கூல் .. "

"போலாம் சார்.. "

"கேஷ் தான்... TRANSCARD-ல பணம் இல்ல. டாப் அப் பண்ணனும்... "

"அப்ப ஐநூறு ரூபா ஆகும்..."

"ஐநூறு ரூபாயா??? TRANSCARD யூஸ் பண்ணாலே 300 ரூபா தான் வரும்.. நீ 500 ரூபா கேக்குறியே???? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிருந்து எக்மோர் கான்வென்ட் போக ஐநூறு ரூபாயா ?? நல்ல கதையா இருக்கே... "

"என்ன சார் பண்றது... பெட்ரோலே ஒரு லிட்டர் எண்ணூற்றி அம்பது ரூபாய்க்கு விக்குது, குவாட்டரே  தொள்ளாயிரத்தி  ... "

"சரி ..சரி.. விடு ...போலாம்.... ரவி, ராஜூ ரெண்டு பெரும் ஏறுங்க.."

ஆட்டோ எக்மோர் அப்துல்லா தெருவை நோக்கி சென்றது.


-----

குறிப்பு :

தற்போது, சென்னை மெரினா கடற்கரையிலிருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. கதையின் படி, கடல் ஒரு கி.மீ தூரம் கரையை ஆக்கிரமித்துள்ளது.

TRANSCARD என்பது மல்டி யுசபில் (multi usable) ஸ்மார்ட் கார்டு தான். பணம் டாப் அப் செய்து கொண்டு, ஆட்டோ, டாக்ஸி, புறநகர் ரயில்/பேருந்துகளில் பயணப் படும்போது கிரெடிட் கார்டு போல swipe செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 28 ஏப்ரல், 2014

சிறுகதை - தண்ணீர் சிறுவன்

வணக்கம்,

ஒரு சாதாரண மாணவனின், கண்ணில் பட்ட நிகழ்வையே இங்கு சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்து விட்டு விமர்சனங்களை பகிரலாம்.

சிறுகதை - தண்ணீர் சிறுவன்
****************************************
அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது. மேடையின் வலது ஒரத்தில் ஒரு மைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் வோல்டாஸ் ஏசி ஆள் இல்லாமல் வெறுமனே ஓடி கொண்டிருந்தது.  மேடையில் நாற்காலிகளின் பின்புறம் "WELCOME TO JSD ENGINEERING COLLEGE - NATIONAL LEVEL SYMPOSIUM - DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY " என சிகப்பு துணியில், தங்க நிறத் தெர்மகோலில் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது.

மேடைக்கு கீழே மாணவர்களும், ஆசிரியர்களும் வரிசையாக நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்த செம்மண் பூமியில், லேசாக வந்த உப்பு காத்து எல்லோரையும் சுகமாக குளிரூட்டியது. லேசான சுரத்தில் ரேடியோவில் மேற்கத்திய இசை பாடிக்கொண்டிருந்தது. ராஜும், அருணும் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அன்று தான் அந்த கல்லூரிக்கு முதன் முறையாக வருகிறார்கள். காலையில் நடந்த போட்டிகளில், "பிக் டேட்டா அனாலிசிஸ் " தலைப்பில் பேப்பர் பிரசென்டேஷனில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசையும், மதியம் நடந்த பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் பிடித்திருந்தனர். மாலையில் கல்லூரி தலைவர் கையால் பரிசளிக்கும் விழா நடைபெறும் என்று சொல்லப்பட்டதால், இருவரும் காத்திருந்தார்கள்.

"என்னடா இது!!! நாலரை மணிக்கு மேல ஆயிடிச்சு.. சேர்மன் இன்னும் வரவேயில்லை.. நாம கிளம்பலாம் வா...  "

"கொஞ்சம் வெயிட் பண்ணு அருண்..சர்ட்டிபிகேட் வாங்கினதும் நாம போய்டலாம்... சரியா !!! ", என்றான் ராஜ்.

"ஹ்ம்ம்..இங்கே வந்திருக்கவே கூடாது.... பேசாம வண்டலூர்ல மகரிஷி காலேஜுக்கு போயிருக்கனும்... வட பாயசத்தோட சப்பாடாம்.. சதீஷ் சொன்னான்."

"டேய்.. இங்கயும் வந்து மதியம் மீனு, கருவாடு, கறிக்குழம்புனு  நல்லா கொட்டிகிட்ட தானே ???" 

"பின்ன..அதுக்கு தானே வந்தேன்.."

"சாப்டாச்சுல.. எல்லாம் முடிஞ்சிடிச்சுல... கொஞ்சம் பொறு..."

"....ஹ்ம்ம் ................"

கூட்டத்தில் மாணவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கிடையே சலசலவென பேசி கொண்டே இருந்தனர். "Our Chairman is about to reach our campus. Students are requested to maintain silence and discipline" என்று ஒரு பீட்டர் விடும் பெண் குரல் அவ்வபோது மைக்கில் அறிவித்து கொண்டிருந்தது.

நன்றியுராற்றிவிட்டு பரிசளிக்க வேண்டிய ஜே.எஸ்.டி கல்லூரியின் தலைவர் இன்னும் வரவில்லை. அவருக்காகதான் அனைவரும் காத்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில், தீடீரென எல்லோரும் எழுந்து நின்று நுழைவு வாயிலைப் பார்க்க ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஹாரன் சத்தத்தில் நான்கு இன்னோவா கார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தது. இன்னோவா கார்களின் இடையில் ஒரு உயர் ரக, வெண் நிற, ஃபான்சி நம்பருடன் கூடிய ஆடி கார் ஒன்று, மைதானத்தின் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கத்தில் மேடையருகே வந்து நின்றது. இன்னோவா காரிலிருந்து சில டிப்டொப் ஆசாமிகள் வேகமாக இறங்கி வந்து, ஆடி காரின் கதவுகளை திறந்தனர். உள்ளிருந்து  எழுபது வயதுமிக்க ஒரு பெரியவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் புன்முறுவலோடு இறங்கி அனைவருக்கும் வணக்கம் வைத்தார். காரின் மறுபுறம், அவரது மனைவியும் இறங்கினார். பின் வந்த கருப்பு டொயோடா காரில் இரண்டு கல்லூரி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

நிர்வாகிகளும், கல்லூரி தலைவர், மற்றும் அவரது மனைவியும் மேடையில் உள்ள நாற்காலிகளில் போய் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கல்லூரி நிர்வாகிகள்,  கல்லூரியின் பெருமைகளையும், கல்லூரி தலைவரின் கல்வித்தொண்டு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். "நமது கல்லூரி சேர்மன் திரு.ஜே.சிவதாஸ் அவர்கள் மிகவும் நல்லவர், பொது நலவாதியும் கூட.  ஏழை குடும்பத்தில் பிறந்து, உழைத்து முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார். தான் படிக்காவிட்டாலும் ஊரில் உள்ள எல்லா ஏழை பிள்ளைகளும் படிக்க வேண்டுமென எண்ணி பள்ளிகூடங்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, இன்று பல பிள்ளைகளை இலவசமாக படிக்க வைத்து கொண்டிருகிறார். இவர் சேவையை பாராட்டி, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தலைவருக்கு 'கல்வி தந்தை ' என்ற பட்டதை கொடுத்துள்ளது. மற்ற கல்வி நிறுவனங்களை போல கல்வியை விற்காமல், ஓர் சமுதாய பணியாகவே செய்து வருகிறார். ஆயிரம் கோவில்களை கட்டுவதும், ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பதும் ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத மனிதர் நம் கல்லூரி தலைவர்."

மேலும் தலைவரை பற்றி பேசி கொண்டே இருந்தனர். அதன் பின் பேசிய கல்லூரி முதல்வர் நேஷனல் லெவல் சிம்போசியம் பற்றி விரிவாக பேசினார். கடைசியாக கல்லூரி தலைவர் சிவதாஸ் மாணவர்களின் ஒழுக்கம் பற்றியும், கல்லூரியின் தேர்ச்சி விகிதம் பற்றியும் பேசிவிட்டு, நேஷனல் லெவல் சிம்போசியம்  பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்; பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பாராட்டுரையும், நன்றியுரையும் முடியவே ஆறரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. ராஜும் , அருணும் அக்கல்லூரி பேருந்திலேயே ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். போகும் வழியில் ராஜ், கல்லூரி சேர்மன் பற்றி நிர்வாகிகள் பேசியதை நினைத்து கொண்டிருந்தான். எல்லா கல்லூரியிலும் இப்படி தான் போல என்று எண்ணி கொண்டான். ஒவ்வொரு முறையும் கல்லூரி தலைவரை 'கல்வி தந்தை' என்று குறிப்பிடும் போது, அன்று மதியம் கேன்டீனில் நடந்த சம்பவம் நிழலாய் நினைவில் வந்து போனது.

  ----

 மதியம் கேன்டீனில் சாப்பிடும் போது -

"அருண் ! கருவாடு  நல்லா இருக்குல.!!! "

"ஆமா ..நல்லாயிருக்கு... ராஜ்.. அந்த வறுவலை  கொஞ்சம் கொ... "

"கிளிங் ! கிளாங் ! கிளிங் !.."

திடீரெனெ பாத்திரம் உருளும் சத்தத்துடன்,  பளார்!!!  பளார்!!! என அரை விழும் சத்தமும் கேட்டது. சத்தம் வரும் திசையில் பார்த்த போது....

" அறிவுகெட்ட எரும மாடு.. வேலை செய்யும் போது, புத்தி எங்கடா போவுது.. "

"இல்லண்ணே ..  தெரியாம தண்ணி ஜக்கை ரொம்ப சாய்ச்சிடென்.. அதன் கீழே கொட்டிடுச்... "

பளார்!!!  .... மீண்டும் ஒரு அரை.

"ஒழுங்கா வேலை செய்யலேனா , ஊர பாக்க போக வேண்டியதுதான்... தெரியும்ல என் சேதி... தோலை ஊறிச்சுருவேன். ஜாக்கிரதை.. !"

 "மம்ம்....சரிண்ணே..."

ஒற்றை கையால் கன்னத்தை பிடித்த படியே மீண்டும் கூலரிலிருந்து தண்ணீர் பிடித்து, பந்தியில் காலியான டம்ளர்களை நிரப்ப ஆரம்பித்தான் அந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 22 மார்ச், 2014

சிறுகதை - நட்சத்திரம்

வணக்கம்,

இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...

சிறுகதை - நட்சத்திரம்
*******************************

"ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி... உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க..."

"நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. " என்றாள் பார்வதி.

"ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? "

"ரோகிணி நட்சத்திரம்... பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்.."

"... ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே !..  "

"ஆம்மா...அந்த கூத்த ஏன் கேக்குற?  பிள்ளை பொறந்தவுடன், துணி சுத்தி, அப்புறம் எண்ணெயிலே என் இரண்டு புள்ளைங்க  ராமனையும், கிருஷ்ணனையும் முழிக்க வச்சு.. "

"சரி தான்.... "

"வேற வழி இல்ல.."

"உங்க கடைசி பொண்ணு லட்சுமி எப்படி படிக்கிறா?? "

"ம்ம்..நல்ல படிக்கிறா.. இந்த வருஷம் பிளஸ் 2.."

அப்ப சரி, நான் போய்ட்டு வரேன்... மறக்காம புள்ளைக்கு சுத்தி போடுங்க.. "

"சரி சாந்தி ... "

வள்ளிக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. அந்த ரயில்வே காலனியில், சாந்தி உட்பட பலரும் வந்து வள்ளியையும் அவள் குழந்தையையும் பார்த்து சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் லட்சுமி வாசல் தெளிக்க வரும் போது, வீட்டு வாசலில் கற்கள் சிதறியிருப்பதை கண்டாள். "இதை யாரு இங்க வந்து போட்டது?" என யோசித்து கொண்டே கோலம் போட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் கேட்டாள்.

"ஆமாண்டி, நானும் நேத்து காலையில கோலம் போடும் போது பார்த்தேன். சுத்தம் செஞ்சிட்டு போனேன். ஆனா, சாயங்காலம் மறுபடியும் ஒரே கல்லா கிடக்கு....அதுவும் நம்ம வீட்டுலையும், பக்கத்தில கோமதி வீட்டிலும் மட்டுந்தான்..."  என்றாள் பார்வதி.

பார்வதியும், லட்சுமியும் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. கற்கள் யார் மீதும் விழுவதில்லை.  'தொம்' -ன்று கீழே விழுந்து சிதறுகிறது. இது இப்படியே கொஞ்ச நாட்களாய் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து, கொல்லையில் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு இருந்தாள் வள்ளி. திடீரென எங்கிருந்தோ வேகமாக ஒரு கல் பறந்து வந்து வள்ளியின் பக்கத்தில் விழுந்து சிதறியது. 'வீல்' என அலறியபடி குழந்தையை தூக்கி கொண்டு ஓடினாள் வள்ளி.

சத்தம் கேட்டு ஓடி வந்த பார்வதி, "என்னம்மா ? என்னாச்சு ?? எங்கிருந்தும்மா கல்லு வந்துச்சு ?? "என்றாள் பதறியபடி.

"தெரியலம்மா..திடீருன்னு பக்கத்துல வந்து விழுந்துடுச்சி .."

"நல்லவேளை! புள்ள மேல விழல.. நெல்லுகடை மாரியம்மா! காப்பாத்திட்ட..  பூவாடைக்காரி ஆத்தா ! ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலையே... எம் புள்ளைங்களை நீதான்ப்பா காப்பாத்தணும் பெருமாளே!!

"இனிமே குழந்தைய கொல்லையிலே வச்சி குளிப்பாட்டாத வள்ளி .."

"ம்ம்..சரிம்மா..."

இருவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அடுத்தஅடுத்த நாட்களிலும் இப்படியே நடந்தது. எங்கிருந்தோ கற்கள் பறந்து வந்து அவர்கள் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் விழுவதும், அவர்கள் பயத்துடன் இருப்பதுமாகவே இருந்தது.

வள்ளியின் அண்ணன்-தம்பிகள் கிருஷ்ணனும், ராமனும் அவர்களுடைய இளவட்ட நண்பன் முருகனுடன் சேர்ந்து  அவர்கள் வீட்டை சுற்றியுள்ள மாமரங்களிலும், அக்கம்பக்கத்து  கூரையிலும் ஏறி யார் கல்லெறிவது என்று உளவு வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் பார்த்ததை அவர்களாலையே நம்ப முடியவில்லை. தெரு முனையிலிருக்கும் குப்பைத்தொட்டி பக்கத்தில் குவிந்து கிடந்த ரப்பீஸ் கற்கள் சடாரென்று தானே எழும்பி, கன நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் விழுந்து சிதறியது. ஒன்றல்ல..இரண்டல்ல.. குறிப்பிட்ட நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி தாமாகவே பறந்து வந்து விழுவதை கண்டார்கள். இதை பற்றி சொன்னவுடன் வீட்டில் எல்லோர்க்கும் பயம் அதிகமானது.

இரவு பொழுதெல்லாம் கூரையின் மீது கற்கள் விழும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் தெருநாய்கள் அவர்கள் வீட்டையே நோக்கி குரைப்பது போல எண்ணினார்கள்.

குழந்தை விஜய் இராகு காலத்தில் பிறந்துள்ளதால், அது வேறு எல்லோருக்கும் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது . இது எதாவது பேய் பிசாசு வேலையா, அல்லது பிள்ளை பிறந்த நேரம் சரியில்லையா, என்னவென்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வீட்டின் பின்புறத்தில் ஆந்தை அலறும் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டருகே உள்ள பள்ளிகூட திடலில் நடக்கும் சுவிசேஷ கூட்டத்தில் பார்வதி கலந்து கொண்டு, பாதிரியார் ஆசிர்வதித்த நீரை கொண்டு வந்து வீட்டில் தெளித்தாள். ரெங்கநாதருக்கு துளசிமாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டாள். 
 
அந்த பொன்மலைபட்டி ரயில்வே குவாட்டர்ஸ் முழுவதும், கல் விழும் சேதி காட்டுத் தீயன பரவியது. அந்த ஏரியா போஸ்ட் மேன் வந்து, "என்னக்கா, உங்க வீட்ல கல்லு விழுதாமே, அப்படியா????" என்று கேட்கும் அளவுக்கு பிரபலம் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் எல்லோருக்கும் பயம் அதிகமாகி கொண்டிருந்தது. பார்வதிக்கு இருப்பு கொள்ளவில்லை. இது இப்படியே போனால் சரிவராது என முடிவு செய்து, வள்ளிக்கும், குழந்தைக்கும் பக்கத்தில் இருக்கும் நதிர்-ஷா தர்காவில் மந்திரித்து பாத்தியா ஓதிவிட்டு, அப்படியே வீட்டில் எல்லோருக்கும் மந்திரித்த தாயத்து வாங்கி வந்து கட்டிக்க சொன்னாள். எந்த சாமியானாலும் பரவாயில்லை, பிரச்னை சரியானால் தேவலை என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

கல் விழுந்த கோமதி வீட்டிலும் தர்காவில் மந்திரித்த தாயத்து வாங்கி கட்டி கொண்டதாக கேள்விப்பட்டனர். 

இரண்டு மூன்று வாரங்கள் சென்றது. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. கற்கள் விழுவது படிப்படியாக குறைவது போல தெரிந்தது. பார்வதி வீட்டில் பயம் லேசாக நீங்க தொடங்கியது.

ஓரிரு நாட்கள் கழித்து, கடைத்தெருவுக்கு போய் வரும் போது, பக்கத்துக்கு வீடு காலியாக இருப்பதை கண்டாள். கோமதி வீட்டில் இரவோடு இரவாக காலி செய்து விட்டு போய் விட்டனர்.

வரும் வழியில் சாந்தியை பார்த்தாள் பார்வதி . சாந்திக்கு கோமதியின் வீட்டில் நல்ல பழக்கம். சாந்தியிடம் விசாரித்ததில், "கோமதியின் கணவருக்கு, அவர் தம்பியே சூன்யம் வச்சிட்டார் போல....அதான் கல் விழுந்திருக்கிறது. கோமதியின் கணவர் கிருத்திகை நட்சத்திரமாம். அந்த நட்சத்திரத்திற்கு பக்கத்து  நட்சத்திரத்தில் உள்ளவர்களையும் அது பாதிக்குமாம்..  உங்க பேரன் தான் ரோகிணி நட்சத்திரமாச்சே....  அதான்  உங்க வீட்லயும் கல் விழுந்திருக்கு... அவங்க கோவில்ல, தர்காவில போய் ஏதோ பூஜை, மந்திரம்மெல்லாம் பண்ணிட்டு இப்போ ஊரை விட்டே போய்ட்டாங்க..."  என்று கூறி முடித்தாள்.

மனதிலே பாரம் சற்று இறங்கியவளாய் நெல்லுகடையாளையும், மற்ற தெய்வங்களையும் வேண்டிவிட்டு,  நிம்மதியுடன் வீட்டுக்கு சென்றாள் பார்வதி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சிறுகதை - ரிஜிஸ்டர் நம்பர்


வணக்கம்,

வலைப்பதிவில் இது என்னுடைய முதல் முயற்சி... முதல் சிறுகதை...
படித்து விட்டு, உங்கள் மேலான விமர்சனங்களை பகிரவும் !!!

 ரிஜிஸ்டர்  நம்பர்
***************************

"நான் போயிட்டு வரேன் மா..." எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய்.

"ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு  எல்லாம் எடுத்துகிட்டியா ???" - அவன் அம்மா.

"ஆங்... "

" சரி... பத்திரமா போயிட்டு வா.."

கிளம்பும் முன் பாண்ட் உள்-பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து 'சுட்ட' நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான்.

மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

"ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு மணிக்கு ஷோ.. அம்பதும், முப்பதும் ஒரு எண்பது.. அது ஒரு தொண்ணூறு, நூத்திஇருபது ... ஹ்ம்ம்.... இது போதும்", என மனதில் கணக்கு போட்டப்படியே சென்றுகொண்டிருந்தான்.

சைக்கிளை மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள 'கல்யாண் சைக்கிள் ஸ்டாண்டில்'  போட்டு விட்டு, ஸ்டேஷன் உள்ள சென்று ரயில் ஏறினான்.

மீனம்பாக்கத்தில் ரயிலேறி தாம்பரத்தில் இறங்கி, 'ரோஜா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' எதிரே அவனுடைய கல்லூரி பேருந்தில் தினசரி எட்டு மணிக்கு ஏறி கல்லூரி செல்வது அவன் வழக்கம்.

ஆனால் இன்று,  தினசரி அட்டவணையிலிருந்து சிறு மாற்றம். இன்று  காலேஜுக்கு போக அவனுக்கு மனசில்லை. 'கட்' அடித்துவிட்டு, தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் "விருமாண்டி" படம்  பார்த்து விட்டு, மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே பன்னோ, பப்ஃபோ எதோ ஒன்று தின்றுவிட்டு, அப்படியே ரயில் ஏறி தாம்பரம்- மவுண்ட் வரை மாறி மாறி போயிட்டு வந்து டயம் பாஸ் செய்துவிட்டு, வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடலாம் என திட்டம் திட்டி இருந்தான். இது அவனுக்கு புதுசு தான். இருந்தாலும், ஒரு சேஞ்சுக்கு முதல் தடவையாக காலேஜ் கட் அடித்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.

ரயில்  பல்லாவரத்தை அடைந்த போது, எதோ யோசித்தவனாய், திடீரென  பிளாட் பாரத்தில் இறங்கி ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

"மணி ஏழே முக்கால் தான் ஆகுது.. இன்னும் நெறைய டைம் இருக்கு. கொஞ்சம் கழிச்சி போகலாம் ." என எண்ணி கொஞ்ச நேரம் ரயில்வே பெஞ்சை தேய்த்தான்.

"இனிமே யாரவது லீவு போடணும்னா, முன்னாடியே ஆபிஸ் ரூம்ல பாலு சாருக்கு போன் பண்ணி சொல்லிடனும். இல்லேன்னா முப்பது ரூபாய் பைன். கம்பல்சரி!" - போன வாரம் வகுப்பில் வந்த சர்குலர் அவனுக்கு தீடீரென ஞாபகம் வந்தது.

முக்கால் மணி நேரம் கழித்து எதோ யோசித்தவனாய், ரயிலேறி தாம்பரதிற்கு கிளம்பி  சென்றான். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பி.சி.ஓ -வில், ஐ.டி கார்டு பார்த்து காலேஜ் அட்மினுக்கு டயல் செய்ததான்.

" ஹலோ! பாலு சாரா ! என்னோடைய பையன் பேரு விஜய் ஆனந்த். அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னக்கி காலேஜ் வர மட்டான் சார்."

"நீங்க யார் பேசுறது???"

"நான் விஜயோட பாஃதர் பேசுறேன்  சார்."

"ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த டிபார்ட்மெண்ட் ? "

"ஐ.டி. செகண்ட் இயர் சார்."

"எந்த செக்க்ஷன்? "

"..அஅஅ...து  தெரியலையே.."

"ஏங்க ! உங்க பையன் எந்த செக்க்ஷன்கூடவா தெரியாம இருப்பீங்க ??? "

"வந்து.. அ..அவன்.. ஐ.டி. 'பி' செக்க்ஷன் சார்.."

"ம்ம்ம்.. உங்க பையன் ரிஜிஸ்டர்  நம்பர் சொல்லுங்க.."

"4...1...9...0...3...2...0...5...0...7..4.. "

"5...0.... ????? "

"....5074 சார்."

"ம்க்கும்...  எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் இவ்வளவு மனப்பாடமாக தெரியும்..?"

"என்னது சார்.?!?!? "

"ம்ம்ம்....சொல்லுங்க..."

" ........................................  "

"நீங்க யார் பேசுறதுனு சொன்னீங்க ??? "

"விஜய்....... பாஃதர் சார்....."

"சொல்லுங்க சார் ... எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் மனப்பாடமாக தெரியும் ?"

"ஆங்... போன் பண்ணா, என் ரிஜிஸ்டர்  நம்பர் கேப்பாங்கனு என் பையன் சொன்னான் சார்..."

"பொய் சொல்லாதீங்க.. நீங்க ஸ்டுடெண்ட் தான் பேசுறீங்கன்னு நல்லா தெரியுது."

"இல்ல சார்.. அது வந்து......"

"ஒண்ணும் சொல்ல வேணாம். நீங்க நாளைக்கு காலேஜ் வாங்க. பார்த்துக்குறேன்... "

போன் துண்டிக்கப்பட்டது. யாரோ அவனை பளார்... பளார்... என செவிட்டில் அறைவது போல இருந்தது.

தலையில் அடித்து கொண்டு, செய்வதறியாது ஒரு பத்து  நிமிஷம் பி.சி.ஓ வாசலிலே நின்றான். இப்போதுஅவனுக்கு சினிமாவுக்கு போவதில் எண்ணம் செல்லவில்லை. வேறு வழியின்றி வீட்டுக்கு போக முடிவு எடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

*****