history of india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
history of india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 


சனி, 31 அக்டோபர், 2020

தமிழக ஊர்களின் பெயர் காரணம்

வணக்கம்,

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. அதை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. நான் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.

name reason for tamil cities

சென்னை-    
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள். 

கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது என்றும்,  போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra)  என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது என்றும், மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டணம் என் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

(சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை வேறொரு பதிவில் பகிர்கிறேன்.)

செங்கல்பட்டு-
செங்கழுநீர் பட்டு என்ற பெயர் தான் இப்போது செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி- 
இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது.

தூத்துக்குடி - 
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளயது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் Tuticorin என்று ஆங்கிலத்தில் பதிவானது.
  
ஆற்காடு- 
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம்- 
மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 

கோயம்புத்தூர்-
சங்க காலத்தில் கோசர் இனத்தை சேர்ந்த சிற்றரசர்கள் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். அவர்கள் பெயராலேயே கோசர்புத்தூர் என்றும் கோசம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கோயம்புத்தூர் என்றானது.

கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது.

இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது.

உதகமண்டலம் -
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பல படுகர், இடும்பர், தோடா என மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மொழியில் ஒத்தை கல் மந்தை /ஒத்தை கல் மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயர் ஆங்கிலேயரின் வாயில் நுழையாததால் Ootacamund என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசு உதகமண்டலம் என்று மாற்றியது .

ஏற்காடு- 
ஏரியும் காடும் இருக்கும் பகுதி. ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்றானது.
    
திருச்சிராப்பள்ளி -
முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்பள்ளி என்று அழைக்கபட்டுள்ளதது.  சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையை குறிக்கிறது. திருசிராய்பள்ளி  என்ற பெயர் தான் திருச்சிராப்பள்ளி என மருவியுள்ளது.

மேலும் திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டு பயனடைந்ததாக  சொல்லப்படுகின்றது.அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.

சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனாலும் இது சிராப்பள்ளி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

தஞ்சாவூர்-
எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.
 
சிதம்பரம் -
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர். அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது. மேலும் இவ்விடத்தில் தில்லை மரங்கள் சிறந்த காடடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சிபுரம்-
மிக பழமையான நகரங்களில் ஒன்று. காஞ்சி மலர்கள் அதிகம் இருப்பதால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் தலைநகரமாகி பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு, இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

மதுரை-
குமரிக்கண்டம் காலம் தொட்டு, சங்க காலம், இடைக்காலம் என எல்லா காலங்களிலும் பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்துள்ளது. வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது.  
 
பெரு மதில்களும், அதற்குள்  குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை  என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் மதுரை என்றானது. 

ஈரோடு - 
பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

திருநெல்வேலி-
இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது. மூங்கில்/ நெல் நிறைந்த பகுதி நெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது.       
 
கன்னியாகுமரி-
முன்னபொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.

புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில்  சிவனை வழிபட்டு வந்தடைந்தாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னி பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர்அழைக்கப்பட்டுள்ளதது. 

கும்பகோணம்- 
சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளதது. புராண கதையின் படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மாறியுள்ளது.

தருமபுரி-
சங்ககாலத்தில் இவ்வூர் தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தகடு என்பதற்கு இரும்பு என்று பொருள். தாது பொருட்கள் இருக்கும் இடம் என்பதால் தகடூர் என்றானது. பின்னாளில் 15/16ஆம் நூற்றாண்டில் தருமபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது போல தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர்கள் மருவியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்  

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்!

வணக்கம்,

நம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகாரர்கள் நாட்டை விட்டு போகும் போது, இந்தியா ஏழ்மையான நாடாக மாறிவிட்டது.

சங்க காலத்தில் நாம் கல்வி, செல்வம், அறிவியல், வணிகம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் வளமாக வாழ்ந்தோம் என்பதை சொல்ல சங்க காலம் வரை பின்னோக்கி செல்ல வேண்டாம்; வெறும் 500 ஆண்டுகள் பின்னால் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.

15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை :

தமிழ்நாடு -

அன்றைய தமிழகத்தை விஜயநகர பேரரசுகளும், மதுரை, தஞ்சை நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் மதுரை நாயக்கர் மகால், சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலிசுவரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விஜய நகர அரசால் விரிவாக கட்டப்பட்டது. வேலூர் கோட்டை விஜய நகர அரசாலும், திண்டுக்கல் மலை கோட்டை மதுரை நாயக்கர்களாலும் கட்டப்பட்டது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருமலை நாயக்கரால் புதிப்பிக்கபட்டு விரிவாக்கப்பட்டது. இதையெல்லாம் விட காரைக்குடி செட்டிநாடு (பங்களா) வீடுகளை பார்த்தாலே நம் வளத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

india-in-16-to-19-century

மேலும் வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்ன மலை, வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்ததும் இக்காலகட்டதில் தான்.

ஆந்திரா பிரதேசம் -

தற்போதைய ஆந்திராவில், விஜய நகர பேரரசுகள் தான் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு மொழி இலக்கியத்தில் புலமை பெற்றதாக விளங்க ஆரம்பித்தது. மேலும் பல புலவர்கள், சான்றோர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலும், காலஹஸ்தி சிவன் கோவிலும் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது. இப்போதுள்ள நகைகள் பலவும் கிருஷ்ண தேவராயரால் திருப்பதி கோவிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகல் படையெடுப்பின் தாக்கத்தால், பாமினி மற்றும் குதுப் ஷா ஆட்சியின் கீழ் தெலுங்கு தேசம் சில காலம் இருந்தது. சார்மினார் மசூதி, கோல்கொண்டா கோட்டை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த நிஜாம் அரசு 200 ஆண்டுகள் வரை ஐதராபத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, செல்வ செழிப்புடன் நாட்டை மாற்றியது. ஆந்திராவில் இன்றுள்ள பல கோட்டைகள், மாட மாளிகைகள், அரண்மனைகள், மசூதிகள் எல்லாம் நிஜாம் ஆட்சியில் கட்டபட்டவை ஆகும். 1930-ல் உலகின் மிக பெரிய செல்வந்தர் (மதிப்பு சுமார் $200 கோடி) என்ற பட்டதை பெற்றவர் நிஜாம் உஸ்மான் அலி கான். தனக்கென தனி நாடு, தனி அரசாங்கம், நாணயம், போர் படை, ராணுவம், என எல்லாவற்றுளும் தனித்து முதன்மையாக விளங்கியுள்ளது நிஜாம் அரசு. உலகிலேயே இந்தியாவில்தான் வைர சுரங்கம் இருந்து வந்தது. அதில் ஒன்று கொல்லூர் (குண்டூர் மாவட்டம்) வைர சுரங்கம்.  உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. இங்கு தான் தரமான வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

கர்நாடகம் -

இப்போதுள்ள கர்நாடகம், முதலில் பாமினி, கேளடி நாயக்கர்கள்  மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்தில் கன்னட மொழியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பல நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டது. ஹம்பி (பெல்லாரி  மாவட்டம்) விருபாக்ஷா சிவன் கோவில் உலக பிரசத்தி பெற்றது. இன்றும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.  மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது.

பின்னர் மைசூர் வாடியார்களால் 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. சில காலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தனால் ஆளப்பட்டது. திப்பு சுல்தானின் போர் படை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் பீரங்கி மற்றும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உபயோக படுத்தியது திப்பு சுல்தான் ஆட்சியில் தான். அதே போல வீரத்திற்கும் பெயர் போனவன் திப்பு சுல்தான். இக்காலகட்டத்தில் தான் பல அரண்மனைகளும், மசூதிகளும் இங்கு கட்டப்பட்டது. திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் காலத்தில் தான் மைசூர் பட்டு பிரசித்தி பெற ஆரம்பித்தது.

மேலும் மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, லலிதா மஹால், ஜெயலக்ஷ்மி விலாஸ், காரஞ்ஜி  விலாஸ் மற்றும் ராஜேந்திர விலாஸ் ஆகிய அனைத்தும் வாடியர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் எல்லாமே இந்திய - இஸ்லாமிய கட்டடக்கலையையும், மேற்கத்திய கட்டடகலையும் இணைத்து கட்டப்பட்டதாகும்.

வாடியர்களின் மகாராணி அணிந்திருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் வாடியர்களின் சொத்து மதிப்பு மைசூர், பெங்களூர் அரண்மனைகளை சேர்க்காமல், 1500 கோடிகளுக்கு மேல் இருக்கிறது என்று கணிக்கிடப்பட்டுள்ளது.

கேரளம்  -

இடைகால கேரளா தேசத்தை சேர மன்னர்களும், இந்து நாயர் அரசர்களும் ஆண்டு வந்தனர். பின்னர் திருவிதாங்கூர் அரசரின் கீழ் மலையாள தேசம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கேரளா கட்டடக்கலையின் அழகையும், நுட்பத்தையும் இதை வைத்தே சொல்லிவிடலாம். இலக்கியத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பத்மநாப சாமி கோவிலுக்கு பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கோவிலின் ரகசிய அறையில், ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள், நகைகள், விக்ரகங்கள், மூட்டை மூட்டையாய் நாணயங்கள் என கணக்கிலடங்கா சொத்துக்கள் கோவிலுக்கு கொடுக்கபட்டுள்ளது. கொடையாக கொடுக்கப்பட்டதே இவ்வளவு என்றால், அசல் சொத்து மதிப்பு போல லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லபடுகிறது. டச்சுக்கரர்கள் போர் தொடுத்த போது, அவர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர்கள் திருவிதாங்கூர் அரசர்கள். மேலும் தற்காப்பு கலையான களரி வித்தைக்கு பெயர் போனவர்கள் அன்றைய மலையாள மன்னர்கள்.

வட இந்தியா -

வடக்கில் பல அரசர்கள் நம் பாரதத்தை ஆண்டு சென்றுள்ளனர். அதில் முகல் சாம்ராஜ்யம் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது. பேரரசர் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது தான் ஆக்ரா பக்திபூர் சிக்ரி கோட்டை. பேரரசர் ஷாஜகான் கட்டிய தாஜ் மகால் இன்றும் உலக அதிசியமாக கருதப்படுகிறது. வடக்கில் கட்டிய பல கோட்டைகள் இன்று இவர்களின் கலை வளத்திற்கு சான்றாக இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரானா ரஞ்சித் சிங்கின் வைர சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தது தான் கோஹினூர் வைரம்.  அமிர்தசரசு பொற்கோவிலும் 16 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது.

டச்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் வியாபார பரிவர்த்தனைக்கு தங்கம் மற்றும்  வெள்ளி நாணயங்கள் தான் வழக்கத்தில் இருந்தனவாம். இப்படி எல்லா வகையிலும், எல்லா கலைகளிலும், வளத்திலும், எல்லா பிராந்தியத்திலும் சிறந்து விளங்கிய நாம் இன்று எப்படி இருக்கிறோம்? எல்லா மாநிலத்திலும் கடன்,  ஊழல், வறுமை கோட்டிற்கு கீழ் 20 கோடி மக்கள் என எங்கு காணினும் பஞ்ச பாட்டு தான். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக மாறி, ஆளுக்கு ஆள் நாட்டை சுரண்டவும், கூரு  போட்டு விற்கவும் தான் செய்துள்ளார்கள். நாட்டின் இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. மக்களாகிய நம்மிடையும் சில பொறுப்புக்கள் இருக்கிறது.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் தராமல் போயிருந்தால், நாம் இன்னும் இங்கிலாந்திற்கு அடிமையாக தான் இருந்திருப்போம். சில பல போராட்டங்களுடன், இந்தியர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்திருப்போம். இப்போதுள்ள சாதி/மத இடஒதுக்கீடுக்கு பதிலாக ஆங்கிலேயர்-இந்தியர் வேற்றுமையில் இருந்திருப்போம். இப்போது பெருமையாக பேசிகொண்டிருக்கும் சில விஞ்ஞான சரித்திரங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் செய்து முடித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், ஊரெங்கும் நல்ல தார் சாலை, தரமிக்க பள்ளி கல்லூரி கல்வி, தொழில்முனை நகரங்கள், விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னேறி இருப்போம். ஆனால், எதிலும் நமக்கு முழு பங்கு இருந்திருக்காது; ஏற்றத்தாழ்வு நிறைய இருந்திருக்கும்.

vijayanagara kings

ஆங்கிலேயர்களோ, ஐரோப்பியர்களோ நம் நாட்டை படையெடுக்காமல், ஆட்சி செய்யாமலேயே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா என்ற ஒன்றிணைந்தே நாடே இருந்திருக்காது. பிராந்திய மொழிகளில் தனித்தனி சமஸ்தானமாக தான் இருந்திருக்கும். தமிழகம் இந்துயிசம் மட்டும் பின்பற்றப்படும் நாடாக இருந்திருக்கும். இன்றளவிலும் நாம் துபாய், குவைத், எகிப்து போன்ற நாடுகளை போல பிற கலாசாரங்கள் கலக்காத மன்னராட்சியில் உள்ள பணக்கார நாடாக இருந்திருப்போம். ஆனால் என்ன... சுயமரியாதை, பெண்கள் சுதந்திரம், தொழிலாளர் உரிமை, ஜனநாயகம், மக்கள் உரிமை, போன்ற எந்த ஒரு கண்டாராவியும் இருந்திருக்காது. எல்லாமே அரசின் ஆணை கீழ்படி தான் இருக்கும். ம்ச்ச்.... இப்போது மட்டும் என்ன வாழுதாம் ???

பேசாமல், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றே நடந்திருக்கலாம் என்று தான் எண்ண தோன்றுகிறது. நாடும், நாட்டின் வளமும் சூரையாட படாமளாவது இருந்திருக்கும். ஹ்ம்ம்.. வாழ்க பாரதம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்