superstar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
superstar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் - விமர்சனம்

வணக்கம்,

போன வருடம் ஜெயிலரில் மெகா ஹிட் வெற்றி கொடுத்த சூப்பர் ஸ்டார், இந்த வருடம் வேட்டையன் படத்துக்காக களம் இறங்கியுள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா, மஞ்சு வாரியர் என பெரிய லிஸ்ட் இருக்கிறது.  பான் இந்தியா படமாக்க முயற்சி செய்து, எல்லா மொழி நடிகர்களையும் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் கதைக்கு  அவ்வளவு அவசியமா? என்பது தான் பெரும் கேள்வி.

ஃபர்ஸ்ட் சிங்கிள் "மனசிலாயோ" பாடலை நம்மால் மனப்பாடம் செய்து பாட முடியவில்லையே தவிர செம்ம vibe.. செம்ம ஹிட்.. சமூக வலைதளங்களில் இன்றும் அந்த இசையும், ஸ்டெப்பும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ட்ரைலர் சுமாராக இருப்பது போல தான் எனக்கு தெரிந்தது. சூப்பர் போலீஸ் - என்கவுன்டர் - ஆக்சன் - பழிவாங்கல் என்பது போல தான் காட்டியிருந்தர்கள்.

Vettaiyan review

எது எப்படி இருந்தாலும் இயக்குநர் TJ ஞானவேல் படத்தில் ஏதாவது surprise element ஒளித்து வைத்திருப்பார் என நம்பி கொண்டு படம் செல்ல தயாரானேன். படம் பார்ப்பதற்குள் எந்த ஒரு விமர்சனமோ, முதல் பாதி விறுவிறு, இரண்டாம் பாதி சறுக்கல், படத்தின் முக்கிய சீன் ஸ்கிரீன் ஷாட் போன்ற எவ்வித spoiler கர்மதையும் பார்த்து தொலைக்க கூடாது என்று கவனமாய் scroll செய்து தள்ளி கொண்டிருந்தேன்.

கதை இது தான். கன்னியாகுமரியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன் ரவுடிகளை விரட்டி வேட்டையாடுகிறார். சென்னையில் உள்ள பள்ளிகூட ஆசிரியை துஷாரா ஒரு பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனம் செய்த ஊழல்களை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர முயல்கிறார்; அதனால் கொலையும் செய்யப்படுகிறார். போலீஸ் கொலையாளி (அசல் கோலார்) என ஒருவரை உருவகப்படுத்தி என்கவுன்டர் செய்ய முயல, அவர் தப்பிகிறார். அதை கண்டுபிடிக்க சூப்பர் ஸ்டார் வந்து, 48 மணி நேரத்தில்  சோலியை முடிக்கிறார். பின்னர் தான் அது தப்பான என்கவுன்டர் என்று தெரிகிறது. மனம் வருந்தி மீண்டும் சரியான  வில்லனை கண்டுபிடித்து, போலீசில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருகிறார்.

கடந்த சில படங்களாக மாஸ் கமர்சியல் மசாலாவாக மட்டுமே இருந்த ரஜினி படம், இம்முறை விறுவிறுப்பான ஆக்சனுடன் கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது, போலி என்கவுண்டர், எல்லோருக்கும் சமனான சட்டம், மனித உரிமை மீறல், சில பல சமூக கருத்துகளை கொண்ட படமாகவும் வந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் எப்பவுமே மாஸ் தான். ஸ்கிரீன் பிரசென்ஸ், ஸ்டைல் லுக், clipon கூலிங் கிளாஸ், அந்த சிரிப்பு என எல்லாமே அட்டகாசம் தான். 😎 ஆனால் தலைவர் கெட்டப் தான் லேசாக ஜெயிலர் படத்தில் இருப்பது போலவே தெரிவது எனக்கு மட்டும் தானா என புரியவில்லை..🧐

சூப்பர் ஸ்டோர் கூடவே வரும் போலீஸ் கேரக்டர்களாக கிஷோர், ரித்திகா சிங் வந்து சிறப்பாக நடித்துள்ளனர். துஷாரா கொஞ்சமாகவே வந்தாலும் படம் முழுக்க பேசப்படுகிறார். 

அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் வேட்டையனுக்கு எதிராய் பேசி, பின்பாதியில் நண்பனாக மாறுகிறார். 

பாகத் பாசில் சூப்பர் ஸ்டார் கூடவே வந்து அங்கங்கே காமெடிகள், சின்ன சின்ன முகபவனைகள் காட்டி கவர்கிறார். அவர் சுடப்பட்டு இறக்கும் போது, 'அடடா ' என நம்மை தவிப்புக்குள்ளக்கிறார்.

அதியன் மனைவியாக மஞ்சு வாரியர் 
வருகிறார். அவ்வளவுதான்! மாஸா சீன் வைக்கணுமென்னு அவருக்கென ஒரு சீன் வைத்துள்ளார். மற்றபடி அவருக்கு பெருசாய் நடிக்க வாய்ப்பில்லை. 

விஜய் டிவி ரக்ஷனும், அபிராமியும் இந்த படத்தில் எதற்கென தெரியவில்லை.

மெயின் வில்லனாக ராணா. வாட்டசாட்டமான பணக்கார கல்வி வியாபாரியாக, கோபத்துடன் மிரட்டி செல்கிறார். 

அனிருத் இசை இம்முறை ரொம்ப இரைச்சலாக இல்லை.. ஆனால் ஏதோ ஒண்ணு குறைச்சல் தான். 'மனசிலயோ' பாட்டை தவிர வேறு எதுவும் மனசில் ஒட்டவே வில்லை. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் பில்டப் பாட்டு ஒன்று ராப்-பில் பாடி கோரசில் கோவிந்தா போட்டுள்ளனர். "அடேய்..போதும் டா.. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்; எல்லா படத்திலேயும் சொல்லிட்டே இருக்க வேணாம்ன்னு" தான் சொல்ல தோன்றுகிறது. அடுத்த படத்திலும் இப்படி ஒரு பாட்டு கண்டிப்பா வச்சு தொலைப்பங்க.. ஹம்ம்..🤦

போன இரண்டு மூன்று படத்தில் கதையென பெரிதாய் என்னை ஏதும் கவர வில்லை. ஜெயிலர் கூட ஓகே ரகம் தான் என புலம்பி இருந்தேன். ஆனால் வேட்டையன் நன்றாக இருந்தது,  பிடித்திருந்தது என்பதை விட போரடிக்காமல் திருப்தியாகவே இருந்தது.

இம்முறை வச்ச குறி தப்பவில்லை!🦅


நன்றி!!!
பி. விமல் ராஜ்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் - விமர்சனம்

வணக்கம்,

படத்தின் பெயர் வெளியிட்ட நாள் முதல் எல்லோரையும் போலவே நானும் ஜெயிலர் படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். First look ப்ரோமோவில் தலைவரின் மாஸ் லுக்கை வெளியிட்டனர். நீல சட்டையும், காக்கி பேண்ட்டும், மூக்கு கண்ணாடியும் உண்மையிலேயே தலைவருக்கு நன்றாகதான் இருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்து வெளியே வந்து கத்தி, துப்பாக்கி எடுப்பதையெல்லாம் பார்க்கும் போது, இன்னொரு தர்பார் போல ஆகிவிட கூடாதுடா சாமி என வேண்டிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இம்முறை நெல்சன் பெரிய தரமான சம்பவம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஏற்கனேவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடியோ லாஞ்சில் தலைவர் சொன்ன 'காக்கா பருந்து' கதை வேறு மீடியாக்களுக்கு தூபம் போட்டது போல ஆகிவிட்டது. எங்கும் இந்த அலப்பறை தான்.

சூப்பர் ஸ்டாருக்கு முந்தைய இரு படமும் சரியாக போகவில்லை. இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் செமயாய் அடி வாங்கிட்டார். அதனால் இருவருக்குமே ஜெயிலர் ஒரு முக்கியமான படமாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் அவரது மாஸை, கெத்தை விட்டுக் கொடுக்காமலிருக்க, அவர் கொடி மீண்டும் பறக்க இந்த படம் ஜெயித்தே ஆக வேண்டும். அதேபோல வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ளவும், தன்னை மீண்டும் நிரூபிக்கவும் நெல்சனுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். எப்படியாவது ஓடி விடவேண்டும் என்பதற்காகவா இல்லை கதைக்காகவா என தெரியவில்லை. படம் முழுக்க மெகா நட்சத்திரங்கள் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதற்கு பதிலாய் கொஞ்சம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Jailer-movie-review

படத்தின் கதை இதுதான். போலீஸ் அதிகாரி அர்ஜுன் (வசந்த் ரவி) சிலை கடத்தல் கும்பலை தேடி போகையில் கொலை ஆவதாய் சொல்கிறார்கள். மகனை கொன்றவர்களை பழி வாங்கும் ரிடயர்ட் ஜெயிலர் அப்பாவான முத்துவேல் பாண்டியனின் கொலை மாஸான பழி வாங்கலே படத்தின் கதை. கடைசியில் மகன் சாகவில்லை; அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து மகனையே போட்டு தள்ளும் பாசமான 'தங்கப்ப தக்கம்' பார்முலா கிளைமேக்ஸ்.

சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்வது? தல முதல் அடிவரை தலைவரு அலப்பர தான்! அதே ஸ்டைல், மிடுக்கு, வேகம், பவர் டெலிவரி என நம்மை படம் முழுக்க கவர்கிறார்.🤩 வில்லன்களை கொலை செய்யும் போது, அந்த லேசான சிரிப்பு உண்மையிலேயே சைக்கோ போல தான் இருக்கிறது. ஆனால் தலைவரிடம் இது போன்ற வழக்கமான மாஸ் கமர்ஷியல் படமாய் இல்லாமல் வேற லெவலில் எதிர்பார்க்கிறோம் என யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...🙏

ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்களின் ஸ்டைல் மேனரிசம் காட்டி ரசிகர்களின் goosebumps momentகளை ஏற்றியுள்ளார். படத்தில் ஒரு சண்டை கூட இல்லை. எல்லோரையும் சதக்..சதக்... இல்லன்னா.. பட்.. பட்..பட்.. என ஸ்நைபர் ஷாட்டில் போட்டு தள்ளி விடுகின்றனர். ஒரு முன்னாள் போலீஸ் ஜெயிலர் ஆல் இந்தியா லெவல்ல தாதாகள் பிராண்டாக இருப்பது தான் எப்படி என தெரியவில்லை.

படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் மனைவியாக வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகனாக வசந்த் ரவி முகத்தில் ரியாக்ஷன் காட்டாமல் சும்மா வந்து போயுள்ளார். பேரனாக மாஸ்டர் ரித்து இருக்கிறார். யோகி பாபு காமெடி ஓரிரெண்டு இடத்தில தான் இருக்கிறது. அதுவும் சுமாராக தான் இருக்கிறது. மலையாள நடிகர் விநாயகனின் வில்லன் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ரத்த நிற கண்ணில் எதிரிகளை அடித்தே கொல்கிறார். ரஜினிக்காக சரியான வில்லன் தேர்வு!👍மற்ற எல்லா பெரிய நடிகர்களும் திரையில் வந்து போயுள்ளனர். பிளாக் காமெடி 'டாக்டர்' அளவு ஒர்கவுட் ஆகவில்லை. ஏன் வைத்தார்கள் என தெரியவில்லை. மலையாள தேசத்திலிருந்து மோகன்லால், கன்னட தேசத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என எல்லா வுட்டிலிலும் ஆட்கள் இறக்கியுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 10 நிமிஷத்துக்கு மேல் திரையில் வரவில்லை. இவர்கள் எல்லாரையும் வில்லனாக காட்டியிருந்தால் கூட இன்னும் அடிப்பொலியாக இருந்திருக்கும்.  

பாடல்கள் எல்லாமே எனோ எனக்கு சுமார் ரகம் போல தான் இருந்தது. அனிருத்தின் BGM மாஸு பீசு... தமன்னாக்கு ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து ஆடி செல்கிறார். 'காவலா' பாட்டு ரீல்ஸில் பட்டி தொட்டியெங்கும் பரபரக்க, ஏனோ பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை. வேணும்ன்னா தமன்னாக்காக ஒருமுறை பார்க்கலாம். 'ரத்தமாரே' பாட்டு எதுக்குனே தெரியவில்லை. 'டைகர் கா ஹுக்கும்' பாடலில் ஒரு சில வரிகள் மாஸாய் இருந்தது; பாட்டாய் கேட்டால் ஒரே இரைச்சல் தான். ஆனால் தலைவரையே தம்மை பற்றி சுய தம்பட்டம் அடிப்பது போல, வரிகள் வைப்பது என்பது எல்லா படத்திலும் (பேட்ட - மாஸு மரணம், தர்பார் - சும்மா கிழி...), எல்லா பாட்டிலும் ரசிக்க முடியவில்லை. 

நேற்று முதல் படம் பார்த்த எல்லாரும் இன்ஸ்டாவிலும் , வாட்ஸாப் ஸ்டேடசிலும் படம் தாறுமாறு, second half வேற லெவல்... அப்படி இப்படின்னு போட்டுருக்காங்க.. ஆனா எனக்கு என்னமோ அப்படி தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. தர்பார், அண்ணாத்தே-க்கு இது எவ்வளவோ தேவலை..

மொத்தத்தில் படம் ரஜினி ரகிகர்களுக்கானது. மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம் ! Tiger ka Hukum.. அவ்வளவு பெரிசா கம்பீரமான கட்டளை இல்லை. அர்த்தமாயிந்தா ராஜா !😉


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பேட்ட பராக் !

வணக்கம்,

ஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.

petta-movie-review

பல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும்  அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.

பாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. "மரண மாஸ் " மற்றும் "உல்லால.. உல்லால .." பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. "பேட்ட பராக்.." தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.

படம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும்,  விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் !

சினிமா ரசிகனின் பார்வை-

இன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள். 

இரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.

ஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .

ஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல,  வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !


நன்றி!!!
பி.விமல் ராஜ்.

திங்கள், 25 ஜூலை, 2016

கபாலி - விமர்சனம்

வணக்கம்,

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.

kabali-movie-first-lookposter

பின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ்,  24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று  உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்!' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம்  பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி

படத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி! விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.

kabali-review

மலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.

உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.

படத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ! கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா?…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.

நாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.

மேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல்,  தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி  இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி!

படத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும்,  #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்!

சூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

கபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்