food லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
food லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கொன்றால் பாவம், தின்றால் போச்சு!

வணக்கம்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் எல்லோருக்கும், எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துக்கள்!

2024-ன் முதல் பதிவில் உணவை பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். நாம் பெரும்பாலும் அசைவ ஓட்டல்களுக்கு செல்லும் போது அங்கு 'ஹலால்' (Halal) என்று ஆங்கிலத்திலும், உருதுவிலும் எழுதி ஓட்டப்பட்டிருக்கும். நானும் பலமுறை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் அதற்கு சரியான அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. சில காலம் பின்னர் அந்த ஹலால் ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே முஸ்லீம் மக்கள் சாப்பிட வருவார்கள் என தெரிந்து கொண்டேன். சில நாட்கள் முன்பு மாமிச உணவு, ஹலால் சர்ச்சைகள் எழுந்த போது தான் ஹலால் போல மற்ற மதங்களிலும் உணவு முறைகள் இருக்கிறது என தெரிந்து கொண்டேன். இணையத்தில் அதை பற்றி படித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

Halal-koscher-jhatka-foods

உணவும் மதமும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு மதமும் அந்தந்த மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதையெல்லம் சாப்பிட கூடாது என்று சில வழிமுறைகளை வைத்துள்ளது. நம் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றாலும், சில நேரத்தில் அப்படி இருப்பதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் சைவம் (Vegeterian), அசைவம் (Non-Vegeterian), சமீபமாக வீகன் (Vegan). அவ்வுளவுதான். 


உணவு முறைகளில் என்னென்ன மத கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

  • ஹலால் (Halal)
  • கோஷர் (Koscher)
  • ஜட்கா (Jhatka) 

முதலில் ஹலால் பற்றி வருவோம். 'ஹலால்' (Halal) என்னும் அரபி சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம். இஸ்லாம் மதத்தின் போதனைப்படி எவையெல்லாம் அனுமதிக்கபட்டுள்ளதோ, எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் 'ஹலால்' என்று சொல்வார்கள். அனுமதிக்கப்படாததை 'ஹராம்' (Haraam) என சொல்வார்கள். 


இஸ்லாமிய சட்டம் எந்த உணவு உட்கொள்ளத்தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் கூடாது என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிஹாஹ் (Dabihah) எனப்படுகின்றது. இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். தபிஹாஹ் பின்பற்ற சில விதிகலும் இருக்கிறது:


*) கூரான கத்தி/இறைச்சி வெட்டும் ஆயுதம் கொண்டு கழுத்து, உணவுக் குழாய் மற்றும் கழுத்து நரம்பின் மேல்பகுதியில் கீறப்பட்டு, தண்டுவடம் பகுதியை வெட்டாமல் தலையை மட்டும் துண்டிக்க வேண்டும்.

*) இறைச்சியை வெட்டும் போது காபாவின் திசையை நோக்கி வெட்ட வேண்டும்.

*) மேலும் பிஸ்மில்லா அல்லா-ஒ-அக்பர் என்ற இஸ்லாமிய பிரார்த்தனையை சொல்லி வெட்ட வேண்டும். 

*) ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கால்நடையும் வெட்டும் போது பிரார்த்தனை சொல்லி கால்நடைகளை வெட்ட வேண்டும்.

*) இரத்தம் அல்லது இரத்தம் சார்ந்த உணவுகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் கொல்லபடாமல், அதுவாய் இறந்த விலங்காய் இருத்தல் வேண்டும்.

*) பன்றி இறைச்சி உண்ண கூடாது.

*) ஆல்கஹால் மற்றும் போதை தரும் பொருட்கள் கூடாது.

*) அதே போல சமைக்க பயன்படுத்தும் பொருட்கள், சுத்தமாகவும் இருக்க வேண்டும்; தபிஹாஹ் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவ பொருளை பயன்படுத்தவோ சேர்க்கவோ கூடாது.


விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் போது குறைந்த துன்பத்தில் உயிர் பிரிவதற்காகவும், அல்லாவின் பெயரை சொல்லி அவருக்காக பலியிடபடுகிறது என்று உறுதி செய்யவும் தான் இத்தகைய விதிகள் பின்பற்றப்படுகிறது. உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதனை விடாது கடைப்பிடித்து வருகின்றனர். இறைச்சி பொருட்கள் மட்டுமல்ல மற்ற சைவ பொருட்களான காய்கறிகள், தானியங்கள், பால், எண்ணெய் பொருட்கள், இனிப்பு/மிட்டாய் பொருட்களிலும் ஹலால் சமாச்சாரம் வியாபாரம் இருக்கிறது. உலகளாவிய ஹலால் சந்தை 2023-ல் 2500 பில்லியன் டாலர் அளவு எட்டியுள்ளது. இந்த ஹலாலை சுற்றிய சந்தை அடுத்த 10 வருடத்திற்குள் 5800 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோஷர் (Koscher) உணவு முறை என்பது யூதர்கள் பயன்படுத்தும் முறை ஆகும். யூதர்களின் புனித நூலில் இதனை காஷுருட் உணவு சட்டங்கள் மூலம் கடவுளால் சொல்லப்பட்டது என சொல்கிறார்கள். எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு சேர்த்து சமைப்பது போன்ற விதிகளை உடையது. அனைத்து யூதர்களும் கோஷர் உணவை உண்பதன் மூலம் காஷுருட் விதிகளை கடைபிடிப்பதில்லை. கோஷர் என்னும் சொல்லுக்கு Fit என்று அர்த்தம். அதாவது யூதர்கள் உணவு உண்ண ஏற்ற முறை என்று பொருள் வரும். இதிலும் சில கோஷர் உணவுவிற்கான விதிமுறைகள் இருக்கிறது.


*) பாலும், இறைச்சியும் சேர்த்து சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது.

*) பழைய உணவை உண்ண கூடாது. சில நேரத்தில் மீன் உணவு மட்டும் விதிவிலக்கு 

*) வைன் குடித்தல் யூதர்களின் உணவில் முக்கிய ஒன்று. அந்த வைனும் கோஷர் விதிப்படி செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட முறையில் இருக்க வேண்டும்.

*) ஷோகேட் (shochet ) என்பவர் யூத சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் கால்நடைகள் கொல்வதற்கு தகுதியானவர் என்று அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட நபர். அவர் மட்டுமே இறைச்சியை குறிப்பிட்ட முறையில் வெட்ட வேண்டும்.

*) மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, வான்கோழி, வாத்து, மான் இறைச்சி போன்ற கோஷர் கோஷர் உணவில் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

*) இறைச்சி உண்ணும் பறவைகள், வவ்வால் போன்றவற்றை உன்ன கூடாது. முயல், ஒட்டகம், பன்றி மற்றும் ஹைராக்ஸ் ஆகிய 4 விலங்குகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் இறந்த விலங்கை  உண்ண கூடாது.

*) கடல் சிப்பிகள், இறால் போன்றவற்றை உண்ண கூடாது.

*)  இந்த வழிகாட்டுதளின்படி, இறைச்சிக்காக வெட்டும் போது விலங்குகள் தொண்டையின் குறுக்கே துல்லியமான ஆழத்தில் வெட்டப்பட்டு, கழுத்து நரம்புகள், வேகஸ் நரம்புகள், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் ஆகிய இரண்டையும் துண்டித்து வெட்ட வேண்டும். இப்படி வெட்டும் போது, இரத்தம் கசியாமல் இறப்பதன் மூலம் அதிக துன்பம் இல்லாமல் விலங்கு உடனடியாக இறந்துவிடுவதை இது உறுதி செய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த முறையை ஷேச்சித்தா (Shechita) என்று சொல்வார்கள். ஒரே முறை பிரார்த்தனை செய்து பல கால்நடைகளை வெட்டலாம்.

*) சில அனுமதிக்கப்பட்ட விலங்குகளின் முன்பகுதியை மட்டுமே மக்கள் உண்ண முடியும்.

*) இரத்தத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதற்கு  சாப்பிடுவதற்கு முன் இறைச்சியை ஊறவைக்க வேண்டும்.


பழமைவாத மரபுவழி (ஆச்சாரமான) மத கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் யூதர்கள் மற்ற சைவ உணவுகளையும், டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளையும் கோஷர் குறியீடுயில்லாமல் வாங்குவதில்லை. 2023-ல் கோஷர் உணவு சந்தையின் உலகளாவிய சந்தை மதிப்பு 42 பில்லியன் டாலர்களாம். இன்னும் பத்து ஆண்டுகளில் 72 பில்லியன் டாலர்களாக மாறும் என ஆய்வுகள் சொல்கிறது. 


ஜட்கா (Jhatka) என்பது சீக்கிய மதத்தினரும், இந்து மதத்தினரும் பின்பற்றப்படும் உணவு முறை ஆகும். ஜட்கா என்னும் சொல் சமஸ்கிருத சொல்லான ஜதிதி (Jhatiti) என்னும் சொல்லிலிருந்து வந்துள்ளது. அதற்கு 'உடனடியாக, விரைவாக' என்று பொருள் வரும்.


கால்நடையை இறைச்சிக்காக வெட்ட, கூரான வாள்/கத்தி/கோடாரி கொண்டு ஒரே வெட்டில் தலையை துண்டாக்க செய்ய வேண்டும். இதன் மூலம் உடனடியாக அதிக துன்பமில்லாமல் கால்நடையின் உயிர் பிரியும் என்பதான நம்பிக்கை. மேலும் வெட்டும் முன் விலங்கு வெட்டப்பட போகிறோம் என விலங்கு பயப்படாமல் இருத்தல் வேண்டும். சீக்கிய மதபாரம்பரியத்தின் படி, ஆயுதத்தால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்குகளிடமிருந்து பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது என குரு கோவிந்த் சிங் கூறியுள்ளார். இந்து மதத்திலும் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.


இதே போல கிருஸ்துவ மதத்திலும் புதிய ஏற்பாட்டில் உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன: சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்தை நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.


இந்தியாவில் இஸ்லாமிருடைய இறைச்சி கடையில் ஹலால் முத்திரையுடன் இருக்கும். மற்ற மதத்தினர் நடத்தும் கடையில் அவர்கள் என்ன முறை கடைபிடிக்கிறார்கள் என பெரும்பாலும் தெரியாது. நாடு முழுவதும் எல்லா அசைவ ஓட்டல்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், Thalapakatti, KFC, McD போன்ற பெரும் வணிக உணகத்திலும் ஹலால் உணவே கிடைக்கிறது. அதன் stickerகளை எங்கும் பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன், இந்து அமைப்புகள் எங்களுக்கும் ஏன் அல்லாவின் பெயரை சொல்லி வெட்டப்படும் ஹலால் உணவு திணிக்க படுகிறது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து சர்ச்சையாக்கினர். பெரும்பாலான இடங்களில் ஹலால் மட்டுமே கிடைத்த போதிலும் இப்போது ஜட்கா மற்றும் கோஷர் மாமிசங்களும் ஆங்காங்கே கிடைக்கின்றன. இந்த மத கோட்பாடுகள் எல்லாம் உணவில் திணிக்கப்படுவது வியாபாரத்திற்கு தான் ஒழிய வேறேதும் இல்லை.


ஒவ்வொரு மதத்திலும் இது போன்ற உணவு பழக்க வழக்கங்கள் கட்டாயமாக பின்பற்ற சொல்லப்பட்டுள்ளன. அதை பின்பற்றாதோர் பாவம் செய்தவர்களாக மதம் சொல்கிறது. எம்மதமாயினும் யார்யாருக்கு என்ன விருப்பமோ அதை அவர்கள் அதை உட்கொள்ளலாம்; என்னை பொறுத்தவரையில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு. அவ்ளோதான்.! அப்புறம் என்னங்க... வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்? சிக்கனா?? மட்டனா?? மீனா?? Beaf ஆ?? பின்னோட்டதில் சொல்லுங்க...



நன்றி!!!

பி. விமல் ராஜ்

திங்கள், 31 ஜூலை, 2023

பரோட்டா ஸ்பெஷல்!

வணக்கம்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு  உணவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. பல உணவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றாலும் அவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களிடம் "உங்களுக்கு பிடித்த உணவு எது?" என்று கேட்டால் அது பெரும்பாலனவர்கள் பிரியாணியும் பரோட்டாவும் என்று தான் சொல்வார்கள். இவற்றின் பிறப்பும், வருகையும் பற்றி தான் இங்கு சுவைக்க போகிறோம்.

பிரியாணி (Biriyani) என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள். பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு. பிரியாணி பற்றி என் முந்தைய பதிவுகளில் பிரியாணி பிறந்த கதை என எழுதியுள்ளேன். அதனால் இதில் பிரியாணியின் தம்பி பரோட்டாவை பற்றி ருசிக்கலாம்.

பரோட்டா (Parotta) என்றாலே நம்மில் பலருக்குப் பிடித்த உணவு என்பது போல என்றாகிவிட்டது. சின்ன தள்ளுவண்டிக் கடைகளிருந்து பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் பரோட்டாவிற்குத் தனி மவுசு உண்டு. கடையில் பரோட்டா போடுவதைப் பார்த்தாலே நமக்கு பசிக்க ஆரம்பித்து விடும். டீ, தோசை, பரோட்டா செய்பவர்களை மட்டும் தான் மாஸ்டர் என சொல்கிறார்கள். ஓட்டல் கிச்சனுக்கோ அல்லது ரோட்டோர ஸ்டாலிலோ பார்த்தால், சொன்ன பேச்சு கேட்காத பிள்ளையை அம்மா அப்பா அடிப்பது போல; கணவனை மனைவி அடிப்பது போல மாஸ்டர் பரோட்டாவை அடித்து துவைத்து கொண்டிருப்பார். மைதா மாவையும் தண்ணீரையும் விட்டுப் பிசைந்து, சாப்ட் ஆகும் வரை செம்மையாய் அடிஅடியென அடித்து, எண்ணெய் ஊற்றி, கொழுக் மொழுக் உருண்டையாக உருட்டி, வட்ட வட்டமாகத் தட்டி அடுக்கி விடுவார்கள். அடுத்து மாவை வட்டம் பெரிசாகும் வரை வீசியடிப்பது. பரோட்டா மாவை வீசியடித்தல் என்பதே ஒரு தனி கலை; அது கடைக்குக் கடை, மாஸ்டருக்கு மாஸ்டர் வேறுபடும். வீசி பறக்கவிட்ட பின்னர் மீண்டும் சுருள் சுருளாய் வைத்து, தலையில் ஒரே போடாய் போட்டு அதற்குரிய பெரிய இரும்பு கடாயில் வரிசையாய் அடுக்கி, எண்ணெய்யில் குளிப்பாட்டி வருத்து, பொரித்து எடுத்து,  வெந்தபின் பரோட்டாக்களில் நாளை தனியாய் அடுக்கி, கைதட்டுவது போல எல்லா பக்கமும் தட்டுதட்டி நம்ம தட்டுல வைக்கும் போது பாருங்க... ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா.. அதன் சுவையோ சுவை தான் போங்க..  

Parotta-special

பரோட்டாவின் சுவை கூடுவது அதன் குருமா அல்லது சால்னாவில் தான். சிக்கனோ, மட்டனோ, பீஃப்போ வெறும் சால்னாவோ... பரோட்டாவை பிச்சி போட்டு, காரசாரமான குழம்பு போல எண்ணெய் மிதக்கும் சால்னாவை சிலபல கரண்டிகளை ஊற்றி ஊறவைத்து ருசிக்க ருசிக்க சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் ஒரு புடி பிடித்து விடுவோம்.

பரோட்டாவின் பிறப்பிடம் கேரளாதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரோட்டா பிறந்து வட இலங்கையில். ஆங்கிலேயர் காலத்தில், இலங்கையிலிருந்து தமிழ் நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வேலைக்காக பலர் வந்து சென்று கொண்டிருந்தனர். சீக்கிரம் கெட்டு போகாத உணவாகவும், கம்மியான செலவில் செய்து சாப்பிடவும் தான் ஆரம்பத்தில் பரோட்டா தயார் படுத்தபட்டது. வட இலங்கையில் தமிழர்கள் உருவாக்கிய உணவான பரோட்டா, தூத்துக்குடி வழியாக இந்தியா வந்தது. பிற்காலத்தில் 1970, 80களில் கேரளாவில் ஆரம்பிக்கபட்ட சில கடைகள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக பரோட்டா மலையாள தேசத்தில் விருப்பமான உணவாகவும், தவிர்க்க முடியாத உணவாகவும் மாறிப் போனது. பின்னர் பர்மா, மலேசியாவிற்கு போன தமிழர்கள் வாயிலாக மீண்டும் தமிழகம் வந்து வெவ்வேறு வடிவில், சுவையில் வந்து நம் மனதை கொள்ளை கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான பரோட்டாக்கள் உண்டு. அதன் சுவையும் வகையாய் இருப்பதுண்டு. தென் பகுதியில்
ப்ரோட்டா (brotta) என்றும் சொல்லப்படுவதுண்டு. சில இடங்களில் பரோட்டா (parotta) என்றும், ரோட்டா (barotta) என்றும் சொல்வார்கள்.

  • விருதுநகர் பரோட்டா
  • தென்காசி பரோட்டா
  • குற்றாலம் பரோட்டா
  • மதுரை பன் பரோட்டா
  • தூத்துக்குடி பரோட்டா
  • கன்னியாகுமரி பரோட்டா
  • மலபார் பரோட்டா
  • கோழிக்கோடு பரோட்டா
  • சிலோன் பரோட்டா
  • காரைக்கால் லாப்பா பரோட்டா
  • காயின் பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • செட் பரோட்டா

இது போக கிழி பரோட்டா, பொட்டலம் பரோட்டா, பரோட்டா பிரியாணி என புதுசு புதுசாய் என்னென்னமோ பரோட்டாவெல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
சில பரோட்டாகளில் உள்ளே stuff (முட்டை /சிக்கன்/மட்டன்/பீஃப்) வைத்து கொடுப்பார்கள். சிலது கைக்கு அடக்கமாக சிறியதாக இருக்கும்; சில பரோட்டாகள் பெரிதாக இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையிலும், திருநெல்வேலியிலும் தான் பரோட்டா தரமானதாக இருக்கும் என நம்பிக்கை பரவலாக உண்டு.

கடையில் முந்தின நாள் மீந்த பரோட்டாவை மறுநாள் சுட வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி போட்டு அகண்ட கடாயில் டங்.. டடங்..டங்க்.. டங்க்.. டடங்... என ஒலிஎழுப்பி தாளம் போட்டு, கொத்து பரோட்டா என புதிய ஐட்டதை கண்டுபிடித்த பெருமையும் மதுரையையே சாரும்.

வடநாட்டில் பராத்தா (Paratha) என்ற உணவும் இங்கு பிரசித்தம். பராத்தா கோதுமை மாவில் செய்யப்படுவது. பெரும்பாலும் அப்படியே சுட்டு, வட்ட மண் குடுவையில் சுட்டு வைத்து சாப்பிடும் ஒரு உணவு பதார்த்தம். இதிலும் உருளை, பன்னீர் ,கோபி, நான்-வெஜ் என stuff செய்து தரப்படுகிறது. இந்த பராத்தாக்கள் அரபு தேசத்திலிருந்தும், முகலாய படையெடுப்பின் போதும் நம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என சொல்கிறார்கள். வடநாட்டு பராத்தாவும், நம்ம ஊர் பரோட்டாவும் ஒன்றல்ல. பராத்தா சாப்பிட நன்றாகவே இருந்தாலும், நம்ம பரோட்டாவின் சுவையே வேறு ரகம். 

Parotta-comedy-tamil

என்னங்க.. படித்தவுடன் உங்களுக்கும் பரோட்டா சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா? அப்புறம் என்ன.. தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய் பரோட்டா சாப்பிட்டுடலாம் வாங்க.! பரோட்டா சாப்பிட்டால் உடம்புக்கு கேடு, வயிறு வீணாய் போகும் என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். சில நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வயிறு கடாமுடா, கலகலவென சத்தம் போடும் தான். அதற்கு காரணம் மைதாவா அல்லது குழைத்து அடித்த சால்னாவா என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹ்ம்ம்... இதையெல்லாம் பார்த்தால் நம்மால் எந்த ஒரு சாப்பாட்டையும் ருசிக்க முடியாது! அவுங்க கிடக்குறாங்க; நீங்க கோட்டை அழிச்சிட்டு முதலிருந்து சாப்பிட ஆரம்பிங்க !!!   

ஒரு செட்டு பரோட்ட்டா பார்சல்ல்ல் !


நன்றி!!!
பி. விமல் ராஜ்

வியாழன், 30 மார்ச், 2023

நீரும் சோறும் - தமிழர் பண்பாடு

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் முந்தையது. மனித வாழ்வியலில் அதுவும் குறிப்பாக தமிழர் வாழ்வியலில் நீருக்கும் சோறுக்கும் முக்கிய இடம் உண்டு. அதனை பற்றிய சற்றே பெரிய பதிவு இது.

நீர்:
இப்போது போலவே பன்நெடுங்காலம் முதல் தமிழ்நாடு வெப்ப மண்டலத்தை சேர்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. எனவே நீரின் தேவையும், நீர் குறித்த நம்பிக்கையும், அதனை ஒட்டிய பண்பாடும் தமிழர் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

"இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என 10ஆம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழி இனிமையானது என்றும், (நீர்மை) தன்மையானது, இயல்பானது என்றும் பொருள் தரும். தமிழை நீருடன் ஒப்பிட்டு உயர்வாக சொல்கின்றனர். குளிர்ச்சியுடையது, தன்மையுடையது என்பதால் நீரை 'தண்ணீர்' என தமிழர்கள் சொல்கிறார்கள். நீரினால் உடலை குளிர்விப்பதால் குளி(ர்)த்தல் என சொல்கிறார்கள்.

திருக்குறளில் வானத்திலிருந்து நீர் (மழையாய்) வருவதால் அதனை அமிழ்தம் என்றும், நீரின்றி இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு"


சங்ககாலம் முதல் தமிழர்கள் நீர்நிலைகளை பல பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று ஆகிய நீர்நிலைகள் தானே நிலத்திலும் மலையிலும் ஊறி வரும் தன்மை உடையது. மழை நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் 'குட்டை' என அழைக்கப்படும். குளிப்பதற்கு பயன்படும் நீர் என்பதால் 'குளம்' என்றும், ஆற்றிலிருந்த்து பிரிந்து ஓடிக்கொண்டே இருப்பது 'ஓடை' என்றும், உண்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுவதால் 'ஊருணி' என்றும், ஏர் (உழவு) தொழிலுக்கு பயன்படும் நீர் 'ஏரி' என்றும், மற்ற நீரை சேர்த்து ஏந்தி வைக்கும் இடம் 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்து வந்தனர். இப்படி தமிழ் மொழியில் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களாகவே இருப்பது வியப்பு!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை.1800 ஆண்டுகளுக்கு முன் காவேரி கரையில் கட்டிய கல்லணை அதற்கு மிக சிறந்த சான்றாகும். மேலும் 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மிகப்பெரிய வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி), மதுராந்தகம் ஏரி என பல நீர்நிலைகளை கட்டி வீணாய் கடலில் கலக்கும் நீரை உழவுக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு செய்துள்ளனர்.

ஆற்று நீர் எப்படி ஒரு இடத்திலிருந்து மறுஇடம் போகிறதோ, அது போல தெய்வங்களும் இடம் பெயர்ந்து போகும் என்பது தமிழர் நம்பிக்கை. தெய்வ வழிபாட்டின் போது கரகம் குடங்களில் மஞ்சள் நீரை ஏந்தி வருவார்கள். மஞ்சள் நீர் கலந்த குடத்தை சாமியாடிகளின் தலையில் ஊற்றி குளிர்விப்பார்கள். அப்படி செய்தால் தெய்வம் குளிர்விக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

தமிழகம் வறண்ட பகுதி என்பதால், நெடுஞ்சாலைகளில் கோடைகாலத்தில் நீர்ப்பந்தல் வைப்பது அக்காலம் முதல் அறமாக பார்க்கப்பட்டது. வீடுகளிலும் செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி பூசை வேளையில் வைப்பார்கள். செம்பு குவளையிலும் நீரில் பூவையும், பூ இதழ்களையும் போட்டு வைப்பார்கள். இன்றளவும் (மஞ்சள்) நீராடுவதை ஒரு சடங்காகவே வைத்திருப்பவர்கள் நம் தமிழர்கள்.

நீரடித்து நீர் விலகாது.
தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
தாயையும் தண்ணீரயும் பழிக்கலாமா?

இது போன்ற பல பழமொழிகளும், மரபு தொடர்களும் நீரை வைத்து இயன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நம் வாழ்விலும், பண்பாட்டிலும் நீர் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறியலாம்.

Neerum soorum

சோறு:
நீரை போலவே தமிழர் பண்பாட்டோடு சோறு (உணவு) எப்படி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை படித்து ருசிகர புசிக்கலாம்.

ஆதி மனிதன் முதல் இன்று வரை அனைவரும் ஓடி திரிந்து வேலை செய்தது உணவுக்காக தான். காற்றையும் வெளிச்சத்தையும் உண்டு உயிர்வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தமிழர்கள் நிலங்களை ஐவகை திணையாய் பிரித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் விளைப்பொருட்கள், உற்பத்தி முறை, சமுக பொருளாதார படிநிலைகள் ஆகியவற்றை கொண்டு உணவு பழக்கவழக்கங்கள் அமையும். அத்தகைய சிறந்த வழக்கத்தையே தமிழர்கள் கொண்டிருந்தனர்.

குறிஞ்சித் திணை -  மலைநெல், மூங்கில் அரிசி, தினை

முல்லைத் திணை -  தினை, சாமை, நெய், பால்
மருதத் திணை -  செந்நெல், வெண்நெல், அரிசி
நெய்தல் திணை - மீன், உப்பு விற்று வரும் உணவுப் பொருள்
பாலைத் திணை - வழிப்பறியினால் வரும் பொருள்

இன்று போலவே அன்றும் தமிழர்கள் புலால் உணவான மீன், ஆடு, கோழி, மாடு, பன்றி ஆகிய  இறைச்சி வகைகளை சமைத்து உண்டு கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'சமைத்தல்' என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். அடுப்பில் வைத்து சமைப்பதால் அடுதல் என்றும் பொருள் தரும். சமையல் செய்யும் இடம் காட்டில் அல்லது அடுக்களை என்று அழைக்கப்பட்டது. வீட்டுக்கு கடைசியில் இருப்பதால் அடுப்பாங்கிடை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி அடுப்பங்கரை என ஆனது.  நீரிட்டு அவித்தல், வேக வைத்தால், வறுத்து வைத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிட்டு பொரித்தல், ஊறவிட்டு வேகவைத்தல் ஆகியவை சமையலின் முறைகளாகும். 

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர். கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள். 

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.

உப்பு
உணவில் சுவைக்காக சேர்த்து கொள்ளப்படுவது உப்பு. அந்த உப்பு நம் உணவிலும் வாழ்விலும் மனித குல வரலாற்றிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல் உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிதான். 

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள்.  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்கு பயன்படுத்தப்படும். உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர் பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும். 

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்கு மொழி. 'உப்பிட்டவரை உள்ளவும் நினை'; 'உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்',  போன்ற பழமொழிகள் மக்களின் வாழ்க்கை முறை உப்போடு கலந்துள்ளதை அறியலாம்.

பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர்’ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழிக் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

சோறு விற்றல் 
பண்டை காலத்தில் சோறு நீரும் என்றுமே விற்பனைக்கு இருந்ததில்லை. ஏனெனில் பசிக்கும் தாகத்துக்கும் வந்தவரிடம் காசு வாங்குவது பாவம் என்று என்னும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள். நெடுந்தூரம் பயணிப்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என பொதுமக்கள் தங்கவும் இளைப்பாறவும் சத்திரங்களும், சாவடிகளும் இருந்துள்ளன. போன நூற்றாண்டின் இடைப்பகுதி வரை பல உணவு/ அன்னதான சத்திரங்கள் நடைமுறையில் இருந்துள்ளதை அறியலாம். கோவில்களில் வழங்கப்படும் உணவு அடியார்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் மடப்பள்ளியில் சமைத்து கொடுக்கப்பட்டது. இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின. ஆங்கிலேயர் காலத்தில் தான் சாவடிகளும், சத்திரங்களும் உணவு விற்கும் சிறு கடைகளாக, ஓட்டல்களாக ஆரம்பிக்கப்பட்டன.

இது போல தமிழ் சமூகம் மற்றும் பண்பாடு சேர்ந்த பல விஷயங்களை நம் பண்டைய உணவு வழக்கங்கள் சொல்கின்றன. இன்று நாம் உணவில் உட்கொள்ளும் பல பதார்த்தங்களும் இத்யாதிகளும் கடந்த சில நூற்றாணடுகளில் சேர்க்கப்பட்டதாகும்.   

மானுடவியல் ஆராய்ச்சியாளர் தொ.ப. அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' மற்றும் தயாளன், ஏ.சண்முகநாதன் அவர்களின் 'மானுட வாசிப்பு-தொ.ப வின் தெறிப்புகள்' ஆகிய நூல்களை படித்து, அதன் மூலம் நான் தெரிந்து கொண்ட தமிழரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு தொன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதை போலவே பண்பாட்டில் மாறிய/மாற்றப்பட்ட மாற்றங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்


நன்றி!!!
பி. விமல் ராஜ்

செவ்வாய், 12 மே, 2015

அப்புறம் எதை தான் தின்றது ?

வணக்கம்,

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலரும் மருந்தையே உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், நாம் தினமும் உண்ணும் உணவே !

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்/வார இதழ்களிலும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று பயமுறுத்துகின்றனர். அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா???

*) நாம் தினமும் உண்ணும் அரிசியில் அதிக விளைச்சலுக்காக பூச்சி மருந்து கலந்த ரசாயன உரம் போடப்படுகிறதாம். அதை நாம் சாப்பிடும் போது, கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது என்று கூறுகிறார்கள் வேளாண்  விஞ்ஞானிகள்.

*) நம் சாப்பாட்டில் சேர்க்கும் காய்கறிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. காய்கறிகள் பெரியதாக வளர ஆக்சிடாக்சின் (Oxytoxin) என்ற ஒரு வகையான வேதிபொருள் தெளிக்கபடுகிறது. விளைச்சலுக்கு பிறகு, சந்தையில் விற்கும் வரை ப்ரெஷான காய்கறியாக இருப்பதற்காகவும்,  தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் சுவை கூடவும், சீக்கிரம் பழுக்கவும் எத்திரோசின்- பி (Ethyrosin -B) என்ற ரசாயன வேதிபொருள் ஊசி மூலம் ஏற்றபடுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் பிரஷ்ஷாக இருக்க மெழுகு தடவி வைக்கப்படுகிறது. பெங்களூர் பி.டி. கத்திரிக்காய் பற்றி நீங்களே கேள்விபட்டிருப்பீர்கள். அதுவும் பூச்சி மருந்து கலந்த காய்கறிதான். இவை தான் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்கெட்களில் பெரும்பாலும் அடுக்கி வைக்கப்படுகிறது. இதை உண்பதாலும் கேன்சர், வயிற்று உபாதைகள் வரும் என்று சொல்கின்றனர்.


*) வடக்கில் பெரும்பாலும் உண்ணக்கூடிய கோதுமை வகை உணவிலும் வேதி பொருட்கள் அதிகமாக கலக்கப்படுகிறது. கோதுமையிலுள்ள ஆல்டிரின் (Aldrin) என்ற நச்சு வேதிபொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 21,890 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது. மேலும் இவற்றை உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

*) சரி, மேற்கத்திய உணவு வகைகளையாவது உண்ணலாம் என்று பார்த்தால், அது இதை விட மோசமாக இருக்கிறது. நாம் விருப்பி உண்ணும் பீட்சாவிலும், பர்கரிலும் E-361 என்னும்  கொழுப்பு சத்து சேர்க்கபடுகிறதாம். பீட்சாவின் அட்டை டப்பியில் polyfluoroalkyl/ perfluoroalkyl-  PFC என்னும் நச்சு பொருள் கொண்டு செய்யபடுவதால், அதனாலும், உடற்கேடு வர வாய்ப்புள்ளது. குழந்தைகள் அதிகம் உண்ணும் நூடுல்ஸ் வகையான உணவுகளில், சுவைக்காக மெழுகு சேர்க்கப்படுகிறது. அதை தின்பதால் அல்சர், கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது. நாம் சுவைத்து உண்ணும் KFC சிக்கனில், பல நச்சு பொருட்கள் கலக்கபடுவதால், குழந்தைகளுக்கு முளை காய்ச்சால் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவ நிறுவனம் கூறியுள்ளது.


*) குழந்தைகள் அடிக்கடி கொறிக்கும் சாக்லேட், பிஸ்கட்கள், சிப்ஸ் வகையறாக்களில் ஒரு வகையான போதை தரும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதால், அதனாலும், மன நோய் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் வேதி/நச்சு பொருட்கள் இருந்தால் நாம் எதை தான் தின்பது என்று தெரியவில்லை. இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் கொடுப்பதில்லை என்பதாலும், மக்கள் பல தர பட்ட உணவுகளை உண்கிறார்கள் என்பதாலும் இவ்வாறு கலப்படம் செய்யபடுகிறது. இது கிட்ட தட்ட விஷத்தை நாமே உட்கொள்வது போல தான் இருக்கிறது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 24 நவம்பர், 2014

பிரியாணி பிறந்த கதை

வணக்கம், 

நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள். அது அப்படி பிரியாணி எல்லோருக்கும் பிடித்த ஒரு தேசிய உணவாகவே மாறி போனது என்று தான் விளங்கவில்லை. அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவிற்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பெயர் காரணம்: பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை.பிரியாணி என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள்.

ஹைதிராபாதி பிரியாணி

ஆரம்பகாலத்தில் பிரியாணிக்கு, நெய்யில் அரிசியை (கழுவாமல்) வறுத்து எடுப்பார்கள். இதன் மூலம், அரிசி நன்றாக வறுக்கப்பட்டு , மசாலா கலவையெல்லாம் சரியாக கலந்து, கறிவகைகளை அரிசிக்கு இடையில் வைத்து வெந்தவுடன், ஓர் நல்ல சுவையை தரும். இதை தான் தம் பிரியாணி என்று சொல்கின்றனர்.

மேலும், 1593-1631 -ல் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக  சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட  உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு.

வடக்கில், அவாத்தை (இன்றைய லக்னோ) முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் தில்லியிலிருந்து முகல் பிரியாணி என்றும் பரவியது.

பின்னர் 1856-ல் கல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில், மைசூர் திப்பி சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம் , வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பினார்கள்.

அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள்  மூலம் ஹைதிராபாதி பிரியாணி  என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் (வாணியம்பாடி/ஆம்பூர்)  ஆற்காடு பிரியாணி  என இந்தியா முழுவதும் பரவவிட்டனர்.

கேரளத்தில், கோழிகோடு தலச்சேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள், அந்த பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி என ஊரெங்கும் என்று பரப்பினர்.

இன்னும் இதை தவிர கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி,   மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி,  தமிழ் நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகையாறாக்கள் இந்தியா முழுவது பறந்து விரிந்து பரவியுள்ளது.

இந்தியா தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி , மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை. 

இப்படிதான் இந்தியா முழுவது பிரியாணி பரவி நம் அனைவரின் மனதை கொள்ளையடித்தது. இதுவரை நான் பிரியாணி என்றாலே ஹைதிராபாதி அல்லது ஆம்பூர் பிரியாணி தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை ஊரில் இத்தனை வகைகளா என நினைக்கும் போது நாக்கில் நீர் ஊறுகிறது.

இணையத்தில் நான் பார்த்த, படித்த பிரியாணி வகைகளை உங்களிடம் இங்கு பரிமாறியுள்ளேன். இதில் உங்களுக்கு தெரிந்த ஏதேனும் பிரியாணி வகை விடுபட்டிருந்தால் எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தகவல்கள்  - கூகிள் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 1 பிப்ரவரி, 2014

இது ஹாலிவுட் கடலை மிட்டாய் !

வணக்கம்,

கிரானோலா பார்-னா (Granola Bar) என்னனு உங்களுக்குத் தெரியுமா ??? அதை தான் ஹாலிவுட் கடலை மிட்டாய் என்று சொன்னேன். நீங்க கேள்விப்பட்டதே இல்லையா ??? அப்படியென்றல் முதலில் இதை படிக்கவும்...

இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, பஜ்ஜி, போண்டா, சாம்பார், ரசம், வடை, பாயாசம், மோர் என சப்பு கொட்டி சாப்பிட்டு வந்த நம் மக்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னால் மற்ற மாநிலத்துச் சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை வந்தது. அதிலிருந்து வர ஆரம்பித்தது தான் மற்ற உணவு முறைகள் எல்லாம். அதன்பின் தான் முகலாயர் வழி வந்த பிரியாணி, பரோட்டா, வடக்கில் பிரபலமான பேல் பூரி, பானி பூரி, ஃபப், சமோசா போன்ற சாட் அயிட்டங்கள் தென்னகத்தில் பல ஓட்டல்களிலும், வீதியோர சிற்றுண்டி விடுதியிலும் வலம் வந்தன.

பிறகு நம்ம தெருக்களில் ஆந்திரா மெஸ் ஆதிக்கத்தில், காரமான சாப்பாடும், பெசரட்டும், கோங்குரா சட்னியும் கலைகட்டியது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பரிமாறப்படும் வடஇந்திய தாலிகளும் ஹைவே தாபாக்களில் கிடைக்க ஆரம்பித்தது.

பின்னர் ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், பாஸ்தா எனச் சீன தேசத்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு சமாச்சாரங்கள் நம்ம மக்களின் பிடித்தமான உணவாக மாறியது. அதன்பின், சென்னை போன்ற பெருநகரங்களில் ஐ.டி கலாச்சாரம் ஆரம்பித்த போது, வெள்ளைக்காரன் வெண்ணெயையும், பன்னீரையும் வெறும் மைதாமாவில் தடவி, கொஞ்சம் தக்காளி நறுக்கி போட்டு, ருசி சேர்த்து பீட்சாவையும், பர்கரையும் ஊரெங்கும் நிறுவி நம் நாக்கை வசப்படுத்தினான்.

மேற்கண்ட சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எப்படி,என்னனு உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த வரிசையில் வரும் மேற்கத்திய நாட்டின் இன்னமொரு (சிற்றுண்டி பண்டம்) சிற்றிடை உணவு தான் கிரானோலா பார் (Granola Bar).
 

கிரானோலா என்பது அமெரிக்க நகரங்களில் சாப்பிட்டப்படும் காலை நேர சிற்றுண்டி உணவு. ஓட்ஸ், பருப்புகள், அவல், தேன் ஆகியனவை நன்றாக வேக வைத்து, மொருமொருவென முறுவலாக்கி தின்னப்படும் ஒரு சத்தான உணவு பொருள். சில சமயத்தில் உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் சேர்ப்பதுண்டு.

நாம் வெளியில் செல்லும் போது இட்லி, பூரி, பிரட்-ஜாம், கட்டுச் சாதம் -ன்னு எப்படி எடுத்துக்கொண்டு போகிறோமோ, அதுபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் தொலைதூர வெளியூர் பயணம் செய்பவர்கள், நீண்ட நடைபயணம் அல்லது முகாம் செல்பவர்கள், இதை எடுத்துக் கொண்டு செல்வார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலை பளு காரணமாகக் காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடை துறப்பவர்கள், துறக்க நினைப்பவர்கள் கிரானோலாவை விரும்பி உண்பார்கள். பெரும்பாலும் இது பட்டி (bar) வடிவிலே வருகிறது. இதைப் பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கடலை மிட்டாய் போலத் தான் இருக்கும். மேலும் ஒரு பட்டியில் (bar -ல்) 90 முதல் 100 கலோரிகளே இருப்பதால், இரண்டு அல்லது மூன்று பட்டிகளைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் போலும். கலோரி பார்த்து ஓட்ஸ், கேலாக்கஸ் (Kellogg’s) சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


கிரானோலா பெரும்பாலும் தயிர், தேன், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பால், அவுரி நெல்லிகள் (blue berries) மற்றப் பொருட்களுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது கேக் அல்லது இனிப்புகள் செய்ய உபயோகப்படுகிறதாம். கிரானோலா பாரில் சேர்க்கப்படும் (flax seeds) ஆளி விதை உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் தகவலுக்கு விக்கிபீடியா.

Nature Valley என்ற அமெரிக்கத் தின்பண்ட தயாரிப்பு நிறுவனம் கிரானோலா பாரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புதுத் தில்லி ஆகிய நகரங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தகக் கடைகளில் விற்க முடிவு செய்துள்ளது. கூடிய விரைவில், வேலை ரொம்ப அதிகம், சாப்பிட நேரமில்லை போன்று காரணம் சொல்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்று வந்து விட்டது எனச் சொல்லலாம். 180 கிராம் கிரானோலா பாரின் விலை 30 முதல் 60 ரூபாய்கள் வரை இருக்கிறதாம். போகப் போகக் விலை இன்னும் குறையலாம். பதப்படுத்தாத சத்துள்ள பொருள்கள் இதில் சேர்க்கபட்டுள்ளதால், இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம் என்று சொல்லபடுகிறது. கிரானோலா பாரில் சோடியம், தேன் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துள்ளதால், நீரிழிவு நோய் (சுகர்) உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டுச் சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

எப்போதும் சமூகம், வரலாறு, அரசியல் போன்ற தலைப்புகளில் பதிவு எழுதி வருபவன், இன்று ஒரு அமெரிக்கத் தின்பண்டத்திற்கு மார்கெட்டிங் பண்ணுகிறானே என்று எண்ணிவிட வேண்டாம். கடந்த வாரத்தில், அலுவலகத்தில் நண்பர் ஒருவர் கிரானோலா பார் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு பிடித்துப் போகவே, அதைப் பற்றி என்ன, ஏதுன்னு இணையத்தில் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். பதிவை ருசித்துவிட்டு எப்படி இருந்தது பின்னூட்டத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்