திங்கள், 27 பிப்ரவரி, 2023

இதை மட்டும் தப்பி தவறி கூட கூகிளில் தேடிடாதீங்க!

வணக்கம், 

நமக்கு ஏதாவது சந்தேகம் அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ளவோ கூகிளின் உதவியை உடனே நாடுவோம். அவனின்றி இணையத்தில் ஓர் அசைவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கூகிளிடம் எதை பற்றி கேட்டாலும் பதில்களை பக்கம் பக்கமாக காட்டிவிடும். ஆனால் கூகிளிடம் கேட்க கூடாத கேள்விகள் நிறைய இருக்கிறது. 

ஒரு நாளைக்கு மூன்றரை பில்லியன் தேடல்கள் (Google Search) கூகுளில் தேடப்படுகின்றன. கூகிள் சர்ச் இன்ஜினில் நாம் எதை தேடுகிறோமோ அதை பற்றிய இணைய தளங்கள், படங்கள், லிங்க்ளை நமக்கு எடுத்து கொடுக்கும். அப்படி நாம் தேடுகிற, பார்க்கிற எல்லாமே எதோ ஒரு இடத்தில், சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேடலின் போது ஒரு சில 'keywords' அல்லது அது சம்பந்தமாக விஷயங்களை தேடினால், அதுவே உங்களுக்கு பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் சட்டமும் காவல்துறையும் பாய்ந்து வந்து உங்களை பிடித்து உள்ளே தள்ளிவிடவும் வாய்ப்புள்ளது. அந்த தேடலுக்கு பிறகு உங்களையே மற்றவர்கள் தேட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். அது என்னன்ன வார்த்தைகள், எதை பற்றியெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.    

Donot-use-Google-search-for-these-keywords

பாம் தயாரிப்பது பற்றி (How to make Bomb) கண்டிப்பாக தேட கூடாது. வெடிபொருட்கள் பற்றியோ வெடிகுண்டு பற்றியோ தயாரிக்கும் முறை, விளக்கம், உபயோகிக்கும் முறை பற்றியெல்லாம் தேடினால் உங்கள் கதை அன்றோடு முடிந்தது. பல வெளிநாட்டு/உள்நாட்டு அரசாங்க பாதுகாப்பு நிறுவனங்கள் உலகளாவிய சைபர் வெளியில் நோட்டமிட்டு கொண்டே இருக்கும். விளையாட்டாய் தேடினால் கூட பல விபரீத முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேச பாதுகாப்பு சட்டம் பாய்தல், உடனடி சிறைவாசம் என உங்களை குற்றமற்றவர் என நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

பல நாடுகளின் ரகசிய இடங்களான (Undisclosed Secret Locations) ராணுவ தளவாடங்கள், சிறைச்சாலைகள், அணுமின் நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள்,  பிரச்னைக்குரிய நாட்டு எல்லைகள், அரசர்/அதிபர் மாளிகைகள், அரசு கட்டிடங்கள் போன்றவை கூகுளை தளத்திலோ, கூகுளை மேப்ஸிலோ தேடக்கூடாது. ஏற்கனவே இந்த இடங்களெல்லாம் கூகிள் மேப்ஸ்களில் தெளிவாக இல்லாமல் blur-ல் இருக்கும். அதையும் மீறி தேடி பார்த்தால், அந்தந்த  நாட்டு ராணுவம் மூலம் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைச்சேதம் நிச்சயம்.        

அதேபோல தீவிரவாத இயக்கங்கள் (Terrorist Organisations) மற்றும் தடைசெய்யப்பட்ட  இயக்கங்களில் சேருவது அல்லது அதை பற்றிதேடி படித்தால், அரசாங்கத்தின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, கண்காணிப்பட்டு கடும் நடவடிக்கையும் சிறை தண்டனையும் உண்டு.   

சிறார் ஆபாச படங்கள்/காட்சிகள் (Child Pornography) பற்றிய இணையதளங்கள், விடீயோக்கள், புகைப்படங்களை பற்றி தேட கூடாது. ஆபாச வெப்சைட்களும், ஆபாச விடீயோக்களும் கோடிக்கணக்கில் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதுவே தவறு என்று இருக்கும் போது சிறு குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் வெப்சைட்கள் தேடுபவர்களை உடனடியாக பாரபட்சமின்றி  கைது செய்யப்படுவார்கள். பல நாடுகளில் இந்த சட்டம் உண்டு. இந்தியாவிலும் இக்குற்றத்திற்கு POSCO சட்டம் பாய்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். 

கருக்கலைப்பு (Abortion) மற்றும் அதை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடுதல் பெரும் குற்றமாகும். கருவுற்ற பெண்கள் மீதான குற்றம், குழந்தை இறப்பு விகிதம் குறைக்கவும் ஆகிய குற்றங்களை குறைக்கவே கருக்கலைப்பு பற்றி தேடினாலும் தக்க நடவடிக்கையும் தண்டனையும் எடுக்க வாய்ப்புண்டு. 

பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்ட (Sharing Victim Photo/Identity) அல்லது முயற்சிக்கப்பட்ட அல்லது அதனால் பாதிக்கப்பட்டவரின் படத்தையோ, விடீயோவைவோ கூகிளிலோ அல்லது வேறு வடிவிலான இணையத்தில் உலவ விடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படம், வீடியோ அல்லது அந்தரங்க செய்திகளை இணையத்தில் பரவ விடுதல் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

திரைப்படங்களையும், புத்தகங்களையும் (Piracy) உரிமையாளர் அனுமதியின்றி இணையத்தில் பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

உடலில் ஏற்படும் உள்ள பிரச்சனைக்கு அல்லது கோளாறுக்கு தயவு செய்து கூகுளில் காரணம் தேட வேண்டாம். ஒரு வாரமாய் தீராத ஒற்றை தலைவலி.. என்ன காரணம் என கூகுளில் தேடினால், ஏதோ ஒரு லிங்கில் உங்களுக்கு brain tumor அல்லது வேறு ஏதாவது தீரா வியாதியாய் இருக்கலாம்; அதற்கான மருத்துவ வழிகள் அல்லது மருத்துவரை அணுகுங்கள் என காண்பித்து நம்மை குழப்பி, பயமுறுத்தி விடுவார்கள். முடிந்தவரை அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.   

வங்கிகளில் இணைய வழி சேவையை (Online Banking) பயன்படுத்தும் போதும், வங்கி இணையதளங்கள் போகும் போது நேரடியாக பிரௌசரில் https://www.bankname.com என டைப்  செய்து, உள்ளே சென்று லாகின் செய்யவும். கூகுளில் தேடினால் சில சமயம் போலியான வங்கி தளங்கள் (fake bank websites) முன்னிறுத்தப்பட்டு, அதில் லாகின் செய்யும் பட்சத்தில், உங்கள் பணம் பறிபோக வாய்ப்பிருக்கிறது. அதே போல ஏதேனும் ஒரு சேவை மைய நம்பரை தெரிந்து கொள்ள கூகிளின் உதவியை நாடுவோம். சில நேரத்தில் போலி தளங்களில் உள்ள fake customer care எண்களே காட்டப்பட்டிருக்கும். அதில் டயல் செய்து பேசினால், உங்கள் தகவல்கள் திருடப்பட்டு பின்னர் பணதிற்காகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் குற்றம் நடக்கவோ வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

Fake-websites-in-google-search

மேலும் மொபைல் ஆப்ஸ் மற்றும் மற்ற desktop softwareகளை பதிவிறக்கம் செய்யும் போது கூகுள்  ப்பிளே அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (Google Play /Apple Store) செயலியை பயன்படுத்தவும். மற்ற தளங்களில் பதிவிறக்கம் செய்யும் போது வைரஸால் பாதிக்கப்படலாம்; அல்லது தகவல்கள் திருடப்படலாம்.

யாரும் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்து மாட்டிக்கொள்ள மாட்டார்கள். தேடி படிக்கச் வேண்டும் என்ற ஆவலில், எல்லாவற்றையும் கூகுளில் தேட, பார்க்க கூடாது. ஒரு சில விஷயங்களை இணையத்தில் தேடும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  

நன்றி !!!
பி. விமல் ராஜ் 
 

சனி, 11 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வடக்கர்கள்!

வணக்கம், 

சமூக வலைத்தளங்களில் வடக்கன்ஸ் பற்றிய மீம்ஸ் என்றால் மிகவும் பிரபலம். அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும் இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் உலவி கொண்டிருக்கின்றன. அவர்களும் அதற்கு ஏற்றார் போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பான்பராக் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, ரயிலில் தகுந்த டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, ஒரு சிலர் திருட்டு/கொள்ளை என ஈடுபடுவது என வடக்கர்களுக்கும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் நம்மில் பலருக்கு எரிச்சலை தான் தருகிறது. 

கடந்த சில வருடங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கட்டிட வேலை, சாலை செப்பனிடும் வேலை, தச்சு வேலை, பிளம்பர், லோடு மென் என தினக்கூலிகளாகவே பலர் வருகின்றனர். அவர்களுடைய மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பும், தொழில் செய்வதற்கான கட்டமைப்பும் இல்லாததே இதற்கு பெரும் காரணமாகும். மேலும் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. ஆனால் நம் மாநிலத்தில் வேலைக்கு தகுந்த கூலியும், தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு என அதற்கான வசதிவாய்ப்புகள் சுலபமாகவே கிடைப்பதால் பலர் இங்கு வேலைக்கு வந்து விடுகின்றனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு (வேலையாட்களுக்கு) கொடுக்கப்படும் சம்பளத்தை/கூலியை விட குறைவாக வடக்கர்கள் பெறுவதால் பெரும்பாலும் முதலாளிகள் கூட வடமாநிலத்தவரையே வேலைக்கு வைக்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என பலரும் குறை சொல்லி வருகின்றனர். 

north-indian-labourers-tamilnadu

என்னை பொறுத்தவரை இது பெரிய தவறு போல தெரியவில்லை. எல்லா இடங்களிலும் வழக்கமாக நடப்பது தான். (மா) நிலம் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவானது. அது இவர்கள் மட்டுமே தான் வேலை செய்ய வேண்டும்; இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என்ற சட்டமெல்லாம் இதுவரை மாநிலங்களுக்கிடையே கிடையாது. 1950, 60களில் நம் தமிழ் நாட்டிலிருந்து பலர் கூலி வேலைக்காகவும், பிழைப்பை தேடியும் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு சென்று குடியமர்ந்தனர். அப்போதும் அங்குள்ள மாநிலத்தவர் சிலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சில இடங்களில் கலவரம், தமிழர்கள் மீது தாக்குதல் போன்றவை இதே வாழ்வாதாரம் காரணத்திற்காக நடத்ததேறியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. அப்போது நாம் கொதித்து எழுந்தோம்; இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்கு உரிமை உண்டு என முழங்கியுள்ளோம். இப்போது அதே தவறை நாமும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறோம். இன்னும் அவர்களை போல அடித்து விரட்டவில்லை; ஆனால் இது போன்ற வெறுப்பு பதிவுகள்/செய்திகள் தொடருமாயின் விரைவில் நடக்க வாய்ப்புண்டு என்பதில் வியப்பில்லை. அஃது நடக்காமல் இருப்பதே நலம். அதுவே என் எண்ணமும் கூட!

தத்தம் மாநிலங்களில்/மண்ணில் அவரர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமான ஒன்று தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வேற்று மாநிலத்தவரை யாரையும் பணிசெய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது எவ்வகையான மனநிலை எனபது தெரியவில்லை. குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக எந்த மாநிலமாயினும் (தமிழ்நாடாயினும்), அவர்கள் விருப்பத்திற்கேற்ப எங்கு சென்றும் சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த மாநில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிசெய்ய முடியும். யாராலும் தடுத்து விட முடியாது. இதை ஒரேடியாக நிறுத்தவும் முடியாது. வேண்டுமானால் மாநில அரசு சில விதிமுறைகளை போட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டு கட்டிட வேலைக்கு ஆள் தேவை. நன்கு தெரிந்த நபர் மூலம் தமிழர் ஒருவரும் மற்றும் வடமாநில நபர் ஒருவரும் வேலைக்கு வருகிறார்கள். இருவருமே நல்ல திறமையான, நம்பிக்கையான ஆட்கள். தமிழருக்கு 5000 ரூபாய் சம்பளம் தரவேண்டும்; வடமாநிலத்தவருக்கு 3000 ரூபாய் தந்தால் போதும். நீங்கள் யாருக்கு வேலை போட்டு கொடுப்பீர்கள்? 2000 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை என தமிழருக்கு கொடுப்பீர்களா? அல்லது வடமாநிலத்தவருக்கா? இதைத்தான் ஓட்டல் முதலாளிகளும், பட்டறை முதலாளிகளும், கட்டிட மேஸ்திரிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கூட ஒரு குற்றசாட்டு உண்டு. தமிழ் வேலையாட்கள் திறமைனவர்கள் தான்; நல்ல உழைப்பாளிகள் தான். ஆனால் சில சமயத்தில் வேலைக்கு சரியாக வருவதில்லை; வந்தாலும் அதிக நேர இடைவேளை விடுதல், திருவிழா, குடும்ப விசேஷம், பண்டிகை என 10 நாட்களாவது விடுப்பு எடுத்து விடுகின்றனர். வடமாநிலத்தவரோ விடுப்பு இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்து தந்து விடுகிறார்கள். விடுப்பு இல்லாமல், எந்த விசேஷத்துக்கும் போகாமல், குறைந்த சம்பளத்துக்கே எல்லோரும் (நானும், நீங்களும் உட்பட) வேலை செய்ய முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் முதலாளிகளின் (லாப) பார்வையில் வடமாநிலத்தவரையே தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. ஏன் எல்லா அமெரிக்க அதிபர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது Say No to India / Say No to Banglore என்று சொல்கின்றனர்? நாளுக்கு நாள் ஆன்சைட் போகும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகிறது? அங்குள்ள ஜார்ஜ், பெஞ்சமின், ஆபிரகாம், மேரி போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வேலை நம்மவூர் ரமேஷ், சுரேஷ், அஜய், விஜய், படேல், சிங் போன்றோருக்கு ஏன் கிடைக்கிறது? இந்தியர்களால் பல அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்கர்களுக்கு சம்பளம், விடுப்பு, மற்ற சலுகைகள் என எல்லாம் முழுமையாக தர வேண்டும்; ஆனால் நம்மாட்களுக்கோ கொடுத்ததை வாங்கி கொண்டு திவ்யமாக வேலைசெய்து வெள்ளை முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள்! கிட்டத்தட்ட இது தான் இங்கும் நடந்து வருகிறது. நம் மக்கள் வெளி மாநிலத்திலோ/வெளி நாட்டிற்கோ சென்று வேலை செய்து சம்பாரிப்பது போல, அவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்போது இதுபோல வரும் சில புகைச்சலைகளை உடனே மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் அது அரசியல் மற்றும் ஊடக வியாதிகளால் ஊதி ஊதி நெருப்பாக மாறி, பெரும் இழப்பை தரும்.      


நன்றி!!!
பி. விமல் ராஜ்