social awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
social awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2023

இதை மட்டும் தப்பி தவறி கூட கூகிளில் தேடிடாதீங்க!

வணக்கம், 

நமக்கு ஏதாவது சந்தேகம் அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ளவோ கூகிளின் உதவியை உடனே நாடுவோம். அவனின்றி இணையத்தில் ஓர் அசைவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கூகிளிடம் எதை பற்றி கேட்டாலும் பதில்களை பக்கம் பக்கமாக காட்டிவிடும். ஆனால் கூகிளிடம் கேட்க கூடாத கேள்விகள் நிறைய இருக்கிறது. 

ஒரு நாளைக்கு மூன்றரை பில்லியன் தேடல்கள் (Google Search) கூகுளில் தேடப்படுகின்றன. கூகிள் சர்ச் இன்ஜினில் நாம் எதை தேடுகிறோமோ அதை பற்றிய இணைய தளங்கள், படங்கள், லிங்க்ளை நமக்கு எடுத்து கொடுக்கும். அப்படி நாம் தேடுகிற, பார்க்கிற எல்லாமே எதோ ஒரு இடத்தில், சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேடலின் போது ஒரு சில 'keywords' அல்லது அது சம்பந்தமாக விஷயங்களை தேடினால், அதுவே உங்களுக்கு பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் சட்டமும் காவல்துறையும் பாய்ந்து வந்து உங்களை பிடித்து உள்ளே தள்ளிவிடவும் வாய்ப்புள்ளது. அந்த தேடலுக்கு பிறகு உங்களையே மற்றவர்கள் தேட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். அது என்னன்ன வார்த்தைகள், எதை பற்றியெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.    

Donot-use-Google-search-for-these-keywords

பாம் தயாரிப்பது பற்றி (How to make Bomb) கண்டிப்பாக தேட கூடாது. வெடிபொருட்கள் பற்றியோ வெடிகுண்டு பற்றியோ தயாரிக்கும் முறை, விளக்கம், உபயோகிக்கும் முறை பற்றியெல்லாம் தேடினால் உங்கள் கதை அன்றோடு முடிந்தது. பல வெளிநாட்டு/உள்நாட்டு அரசாங்க பாதுகாப்பு நிறுவனங்கள் உலகளாவிய சைபர் வெளியில் நோட்டமிட்டு கொண்டே இருக்கும். விளையாட்டாய் தேடினால் கூட பல விபரீத முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேச பாதுகாப்பு சட்டம் பாய்தல், உடனடி சிறைவாசம் என உங்களை குற்றமற்றவர் என நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

பல நாடுகளின் ரகசிய இடங்களான (Undisclosed Secret Locations) ராணுவ தளவாடங்கள், சிறைச்சாலைகள், அணுமின் நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள்,  பிரச்னைக்குரிய நாட்டு எல்லைகள், அரசர்/அதிபர் மாளிகைகள், அரசு கட்டிடங்கள் போன்றவை கூகுளை தளத்திலோ, கூகுளை மேப்ஸிலோ தேடக்கூடாது. ஏற்கனவே இந்த இடங்களெல்லாம் கூகிள் மேப்ஸ்களில் தெளிவாக இல்லாமல் blur-ல் இருக்கும். அதையும் மீறி தேடி பார்த்தால், அந்தந்த  நாட்டு ராணுவம் மூலம் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைச்சேதம் நிச்சயம்.        

அதேபோல தீவிரவாத இயக்கங்கள் (Terrorist Organisations) மற்றும் தடைசெய்யப்பட்ட  இயக்கங்களில் சேருவது அல்லது அதை பற்றிதேடி படித்தால், அரசாங்கத்தின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, கண்காணிப்பட்டு கடும் நடவடிக்கையும் சிறை தண்டனையும் உண்டு.   

சிறார் ஆபாச படங்கள்/காட்சிகள் (Child Pornography) பற்றிய இணையதளங்கள், விடீயோக்கள், புகைப்படங்களை பற்றி தேட கூடாது. ஆபாச வெப்சைட்களும், ஆபாச விடீயோக்களும் கோடிக்கணக்கில் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதுவே தவறு என்று இருக்கும் போது சிறு குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் வெப்சைட்கள் தேடுபவர்களை உடனடியாக பாரபட்சமின்றி  கைது செய்யப்படுவார்கள். பல நாடுகளில் இந்த சட்டம் உண்டு. இந்தியாவிலும் இக்குற்றத்திற்கு POSCO சட்டம் பாய்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். 

கருக்கலைப்பு (Abortion) மற்றும் அதை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடுதல் பெரும் குற்றமாகும். கருவுற்ற பெண்கள் மீதான குற்றம், குழந்தை இறப்பு விகிதம் குறைக்கவும் ஆகிய குற்றங்களை குறைக்கவே கருக்கலைப்பு பற்றி தேடினாலும் தக்க நடவடிக்கையும் தண்டனையும் எடுக்க வாய்ப்புண்டு. 

பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்ட (Sharing Victim Photo/Identity) அல்லது முயற்சிக்கப்பட்ட அல்லது அதனால் பாதிக்கப்பட்டவரின் படத்தையோ, விடீயோவைவோ கூகிளிலோ அல்லது வேறு வடிவிலான இணையத்தில் உலவ விடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படம், வீடியோ அல்லது அந்தரங்க செய்திகளை இணையத்தில் பரவ விடுதல் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

திரைப்படங்களையும், புத்தகங்களையும் (Piracy) உரிமையாளர் அனுமதியின்றி இணையத்தில் பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

உடலில் ஏற்படும் உள்ள பிரச்சனைக்கு அல்லது கோளாறுக்கு தயவு செய்து கூகுளில் காரணம் தேட வேண்டாம். ஒரு வாரமாய் தீராத ஒற்றை தலைவலி.. என்ன காரணம் என கூகுளில் தேடினால், ஏதோ ஒரு லிங்கில் உங்களுக்கு brain tumor அல்லது வேறு ஏதாவது தீரா வியாதியாய் இருக்கலாம்; அதற்கான மருத்துவ வழிகள் அல்லது மருத்துவரை அணுகுங்கள் என காண்பித்து நம்மை குழப்பி, பயமுறுத்தி விடுவார்கள். முடிந்தவரை அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.   

வங்கிகளில் இணைய வழி சேவையை (Online Banking) பயன்படுத்தும் போதும், வங்கி இணையதளங்கள் போகும் போது நேரடியாக பிரௌசரில் https://www.bankname.com என டைப்  செய்து, உள்ளே சென்று லாகின் செய்யவும். கூகுளில் தேடினால் சில சமயம் போலியான வங்கி தளங்கள் (fake bank websites) முன்னிறுத்தப்பட்டு, அதில் லாகின் செய்யும் பட்சத்தில், உங்கள் பணம் பறிபோக வாய்ப்பிருக்கிறது. அதே போல ஏதேனும் ஒரு சேவை மைய நம்பரை தெரிந்து கொள்ள கூகிளின் உதவியை நாடுவோம். சில நேரத்தில் போலி தளங்களில் உள்ள fake customer care எண்களே காட்டப்பட்டிருக்கும். அதில் டயல் செய்து பேசினால், உங்கள் தகவல்கள் திருடப்பட்டு பின்னர் பணதிற்காகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் குற்றம் நடக்கவோ வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

Fake-websites-in-google-search

மேலும் மொபைல் ஆப்ஸ் மற்றும் மற்ற desktop softwareகளை பதிவிறக்கம் செய்யும் போது கூகுள்  ப்பிளே அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (Google Play /Apple Store) செயலியை பயன்படுத்தவும். மற்ற தளங்களில் பதிவிறக்கம் செய்யும் போது வைரஸால் பாதிக்கப்படலாம்; அல்லது தகவல்கள் திருடப்படலாம்.

யாரும் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்து மாட்டிக்கொள்ள மாட்டார்கள். தேடி படிக்கச் வேண்டும் என்ற ஆவலில், எல்லாவற்றையும் கூகுளில் தேட, பார்க்க கூடாது. ஒரு சில விஷயங்களை இணையத்தில் தேடும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  

நன்றி !!!
பி. விமல் ராஜ் 
 

செவ்வாய், 28 ஜூன், 2022

யாருக்கான பெருமை இது ? : June Pride

வணக்கம்,

பொதுவாக நம் எல்லோருக்கும் இரு பாலினங்கள் இருக்கிறது என தெரியும். ஒன்று ஆண், இன்னொன்று பெண். சினிமா மூலமாகவும், ஏதாவது ஃபாரம் எழுதும் போதும் ஆண், பெண், திருநங்கை என மூன்றாம் பாலித்னதை பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மூன்று பாலினத்தையும் தவிர 76 வகையான பாலின வகைகள் இருக்கிறது. அதற்கான மக்களும், அவர்களுக்கான ஆதரவும் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த ஜூன் மாதத்தை Pride June என்று சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 1969 களில் மேற்கத்திய நாடுகளில் மாற்று பாலின மக்களுக்கும், அதே பாலினத்தின் மீது விருப்பு கொண்டவருக்கும்சில போராட்டங்களுக்கு பின்னர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இந்த ஜூன் மாதத்தில் LGBTQ/ LGBTQIA (Lesbian, Gay, Bisexual,Transgender, Queer, Intersex & Asexual) என்று சொல்லப்படும் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரின சேர்க்கையாளர்கள், ஈரின சேர்க்கையாளர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஊர்வலம் போகிறார்கள். வானவில் நிறங்களில் கொடியேந்தி, முகத்தில் வண்ணம் பூசி ஊர்வலவாக சென்று கொண்டாடுகிறார்கள். 

LGBTQ flag-June pride

கடந்த 10/20 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கேளிக்கை கொண்டாட்டங்கள், பாலின சேர்க்கை பற்றிய திரைப்படங்களும், விவாதங்களும், அதற்கான ஆதரவுகளும் வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் நாட்டிலும் இதற்கான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னை, கோவை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி, மும்பை என நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்ட ஊர்வலங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன் நம்மூரு மக்களுக்கு இந்த சமாச்சாரம் பற்றி பெரிதாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடஇந்தியாவில் சில பாலிவுட் படங்கள் மூலமாகவும் (Dostana, Girlfriend, Fire, Monsoon Wedding..), செய்திகளில் சில lesbian மற்றும் gay சம்பவங்களாலும் நமக்கு அறிமுகமாயின. தமிழிலும் ஆங்காங்கே சில படங்களில் இது போன்ற ஓரின சேர்க்கை பற்றி தொட்டும் தொடாமலும் வந்து சென்றது (பொம்மலாட்டம், கோவா, வேட்டையாடு விளையாடு...). மற்ற மொழிகளிலும் இந்த கதையமைப்பை கொண்ட படங்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால் இப்போதைய OTT காலத்தில், வெப் சீரிஸ்களிலும், படங்களிலும் நேரடியாக ஓரின சேர்க்கையை ஆதரித்தும், அந்த வாழ்க்கை சரியன்றும் சொல்லி படம் எடுத்துள்ளனர். அப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போனதும், பெரிதாய் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், இது போன்ற படங்கள் எதை ஊக்குவிக்கின்றன என தெரியவில்லை. இதை பார்த்து வருங்காலம் கெட்டுவிடும் என்றோ, கலாசாரம் சீர்கெட்டு போகும் என்பதோ என் வாதம் அல்ல. இதை இப்போது இங்கு ஏன் திணிக்க அல்லது மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் புரியாமல் ஓடிக்கொண்டிருகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு கொடிய நோயல்ல; ஓர் மன ரீதியான கோளாறு மட்டுமே என்று சொல்வதை போலவும், கொடும் தொற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒதுக்கி வைக்க பட வேண்டியவர்கள் இல்லை என்று சொல்வதை போலவும், இது போன்ற ஓரின சேர்க்கை, மூன்றாம் பாலினம் போன்ற பிரச்சனைகள் ஒருவகையான ஹார்மோன் கோளாறு மட்டுமே என்றும், இவர்களை ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி விழிப்புணர்வு செய்ய வேண்டிய சில தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் இதை ஒரு வேறு வடிவில் மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் தான் ஏன் என புரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என சொல்கிறார்கள்; பெண்கள் படித்தால் நாளைய சமூகம் நன்றாக முன்னேறும் என சொல்கிறார்கள். அது போல இந்த LGBTQ ஊர்வலங்கள் எதை குறிக்க ஊர்வலம் செல்கின்றது என இதை பெரிதாய் ஊக்குவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் இந்த மீடியாக்கள் ஆதரித்து ப்ரோமோஷன் செய்யலாம் என்ற எண்ணம் ஏன்? எப்படி? வந்தது என தெரியவில்லை.    

இது போல எண்ணம் கொண்டவர்கள் அல்லது மக்கள் யாவும் நம்மை போலவே சாதாரண மக்கள் தான். யாரும் தம் குடும்பத்தில் திருநங்கையோ, திருநம்பியோ அல்லது இன்ன பிறபாலினங்களோவோ இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோ, ஆசைப்படுவதோ இல்லை. உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் காரணமாக இந்த எண்ணங்கள் வருகிறது என சொல்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் ஆதரவு அளித்து அவர்கள் போக்கில் வாழ விட்டு விடவேண்டும். அதை விடுத்து இது போன்ற கேளிக்கை கொண்டாட்டங்கள் அவர்களுடைய நடைமுறையை ஊக்குவிவைப்பது போலவும், இதை பற்றி தெரியாத மற்றவர்களுக்கு நாமே டமாரம் அடித்து இப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தப்பில்லை என இயற்கைக்கு மாறான ஒன்றை நாமே சொல்லி கொடுப்பது போல தான் இருக்கிறது.  

இரு நாட்களாய் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வரும் வீடியோக்களை பார்த்த பின் தோன்றியதையே இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

செயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்

வணக்கம்,

இந்த உலகம் தோன்றிய காலம் முதல், பல கண்டுபிடிப்புகள், தத்துவ விதிகள், விஞ்ஞான வளர்ச்சிகள் என மாறி கொண்டே இருக்கிறது. புதுப்புது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நம் உலகமானது இயந்திரமயமாக்களிலும், கணினி துறையிலும், செயற்கை நுண்ணறிவிலும் (AI - 
Artificial Intelligence) நம் கற்பனைக்கடங்கா எல்லையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தொழில்நுட்பத்தை பற்றிய கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையான படிக்கவும்.

யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)இஸ்ரேலிய வரலாற்றாய்வாளர், தத்துவவாதி மற்றும் புத்தக எழுத்தாளர். அவர் எழுதிய 21 Lessons for 21st Century  என்னும் புத்தகத்தில் வருங்காலதில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல எல்லா தொழில்நுட்பங்களும் ஒரு நாள் மனிதனை மீறி செயல்பட ஆரம்பிக்கும் அதுவே நாம் வாழும் பூவுலகின் அழிவுகாலத்தின் ஆரம்பம் என சொல்லியிருப்பார்கள். அதை நாமும் கைகொட்டி ரசித்து விட்டு மறந்து விடுவோம். ஆனால் இது நூறு சதவிகிதம் உண்மையில்லை என்று வைத்து கொண்டாலும், 80% நடப்பதற்கு  வாய்ப்புண்டு என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த AI யினாலும், டெக்னாலஜியாலும் நம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பறிபோக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.



artificial-intelligence-future-jobs-lost-in-2050

அதெப்படி இருக்கிற வேலை போகும்? பின்னர் அந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு சில பதில்கள். 20 வருடங்களுக்கு முன் இருந்த உலகளவில் இருந்த பல தொழில்களும், வேலைகளும்/வேலைவாய்ப்புக்களும் இப்போது இல்லை. உதாரணமாக, 

1.) STD - PCO  கடைகள்
2.) இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்கள்.
3.) போட்டோ பிலிம்களை கழுவி, பிரிண்ட் போடும்  ஸ்டூடியோக்கள்.
4.) சுற்றுலா தளத்தில் போட்டோ எடுப்பவர்கள்.
5.) வீடியோ- ஆடியோ காஸட் / சி.டி -  டி.வி.டி கடைகள்.
6.) வாழ்த்து அட்டை துயாரிப்பவர்கள்.
7.) ரேடியோ/டேப் ரெக்கார்டர் ரிப்பர் செய்பவர்கள்.
8.) தட்டச்சு அலுவலர்கள் / தட்டச்சு மையங்கள்.

9.) டெலிபோன் ஆப்ரேட்டர்கள்.
இதுபோல இன்னும் பல தொழில்கள் இருக்கிறது. 

உலகில் நடக்கவுள்ள அல்லது கண்டுபிடிக்க உள்ள தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பது மிக மிக கடினம். ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கணித்திருக்கவே மாட்டார்கள்.  

இன்னும் சொல்ல போனால் 2040-2050 ஆண்டுகளில் மக்கள் வேலை செய்யப்போகும் / உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பதே உண்மை.

இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுனர் ஜான் மேநார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்பவர் அவரது ஆராய்ச்சி பதிவு ஒன்றில் 2030-ல் மக்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 15-20 மணிநேரம் தான் உழைப்பார்கள். அவர்களுக்கு விரக்தியும், மனசோர்வும் தான் மேலோங்கி நிற்கும். அதிலிருந்து விடுபட கேளிக்கைகளிலும், அவர்களது கலாச்சரத்திலும்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது செய்யும் பல தனித்துவ வேலைகளை, எதிர்காலத்தில் இயந்திரங்களும், ரோபோக்களுமே செய்து விடும். இதனால் எதிர்காலத்தில்  
சமூக உறுதியற்ற தன்மையும்  (Social instability), படைப்பாற்றல் (Creativity) மிகுந்த வேலைகளும் அதிக அளவில் இருக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றங்களும், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். அகால மரங்களும், தற்கொலைகளும், சட்டவிரோத செயல்களான கொள்ளை, போதை போன்ற செயல்களும் பெருமளவில் அரங்கேறும்.ஜான் மட்டுமல்ல, பல ஆராய்ச்சியாளர்கள் இதைதான் கூறுகின்றனர். 

" ஒரு புத்தகம் மக்களுக்கு உணவையோ, உடையையோ கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு தெளிவான அறிவை கொடுக்கும். அது போல, இந்த புத்தகம்  மனிதத்தின் எதிர்காலம் பற்றி விவாதிக்க தெளிவான அறிவையும், அதிகாரத்தையும் கொடுக்குமேயானால், இஃது ஓர் சிறந்த படைப்பாகும்." 
யுவால் நோவா ஹராரி

வருங்காலத்தில் நடக்க கூடியவை என யுவால் என பல துறைகளையும் பற்றி கூறியுள்ளார். அவற்றுள் சில.

தகவல் - Data 
தகவல் (information / data) வருங்காலத்தில் உலகின் மிக பெரிய அதிகாரத்தின் ஆதாரமாக விளங்கப்போகிறது. யாரிடம் தகவல்கள் கொட்டி கிடைக்கிறதோ, அவரே சர்வ வல்லமை படைத்தவராகி உலகையே ஆளக்கூடிய வல்லரசாக இருப்பார். ஏனெனில் தகவல்கள் எதிர்காலத்தின் ஆகச்சிறந்த பலமுள்ள ஆயுதமாக உருவெடுக்கும் என கூறுகின்றனர். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை ' படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்துகிறேன். 'Information is Wealth' இந்த டேட்டாக்கள் என் கையில் இருந்தால் இந்த உலகையே ஆளும் டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னனாக இருப்பேன் என்று அர்ஜுன் சொல்வார். ஆதிகாலம் முதல் இப்போது வரை அதிக நிலங்கள் (land/real estate) வைத்திருப்போரை அதிகாரம் உள்ளவர் என்று சொல்வார்கள்.அரசாங்கங்கள் அவர்களை கட்டுபடுத்த முயற்சி செய்யும். ஆனால் வருக்காலத்தில் யாரிடம் நிறைய டேட்டாக்கள் இருக்கிறதோ அவரே அதிகாரம் உள்ளவர் ஆகப் போகிறார்கள்.

மனித எண்ணங்களை திருடுதல் - Human Hacking 
கணினியும், இயந்திரத்தையும் hacking செய்வதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்படி hack செய்து திருடுபவர்கள், வருங்காலத்தில் மனிதனின் மூளையை குறிவைத்து hack செய்ய போகிறார்கள். நம்பமுடியவில்லை தானே !?! நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்! நம்முடைய சிஸ்டம், மொபைல், வங்கி கணக்குகள், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமல்லாமல், நம் மூளையும், நம் எண்ணங்களையும் hack செய்வதற்கான ஆராய்ச்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்கள்.

நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, நம் அடையாள தொழில்நுட்பத்தையும் (biometric) hack செய்து மக்களையும் ஆட்கொள்ள முடிவு செய்து விட்டனர். அப்படி செய்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன நினைக்கிறோம், எதை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இது முழுமையாக  கொண்டுவர முடியாவிட்டாலும், 50% சதவிகிதம் வெற்றிபெற்று விட்டால் கூட மனித இனத்தின் அழிவு யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கல்வி - Education 
2040-50-ல் பல வேலைகள்/வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகும். இப்போதுள்ள பிள்ளைகளும் பள்ளி/கல்லூரிகளில் சொல்லி கொடுக்கும் பாடங்கள் /பாடத்திட்டங்கள் எல்லாம் பயனற்று போக வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுநாள் வரை மனிதனின் முதல் 25-30 ஆண்டுகள் கற்றலுக்காக செலவிட்டு, மீதம் உள்ள ஆண்டுகள் கற்றதை பயன்படுத்தி உலகில் வாழ தயார்படுத்தி கொள்வதே வழக்கமாய் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் படித்து முடித்து வேலைக்கு போகும் நேரத்தில், படித்தது பலவும் காலாவதியான தகவல்/படிப்பு/ விஷயங்களாக இருக்கும் என்று சொல்கின்றனர்.இவற்றிற்கு ஒரே வழி வாழ்நாளில் கடைசி வரை நம்மை சீர்படுத்தி கொள்ள இந்த போட்டிமயமான உலகில் வெல்ல தொடர்ந்து வாழ நாம் கற்றலை நிறுத்தவே கூடாது. 50 வயதிலும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இப்போதே இந்த நிலைதான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் போட்டிமயமானதாக இருக்கும்.

மக்களுடைய உணர்வுசார் நுண்ணறிவையும் (emotional intelligence), மனதையும் சமநிலை படுத்தி (mind balance) கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அரசியல் - Politics 
உலக வல்லரசு நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி இன்றளவிலும் பழமைவாதையும், தேசியத்தையும், மத கொள்கைகளையும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறது. எந்த ஒரு உலக அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, எப்படி மக்களை முன்னேற்றுவது என்றெல்லாம் பேசுவதோ இல்லை. உலகம் வெப்ப மயமாதல், வருங்காலத்தில் இயந்திரத்தாலும், தொழில்நுட்பத்தாலும் பறிபோகும் வேலைவாய்ப்புக்கள், எதிர்கால சந்ததிகளுக்கு கல்விமுறை என நீண்ட கால முடிவெடுத்தலை இதுவரை முன்வைக்க வரவில்லை.   

புதிய பிரிவு- Useless Class 
உலக மக்களில் upper class, upper middle class, middle class, lower class என்று பிரிப்பார்கள். அதில் புதிதாக Useless class என்னும் புதிய பிரிவு வருங்காலத்தில் வரும். தொழில்நுட்பத்தால் வேலைப்பறிபோன கூட்டம் பெருமளவில் நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்களை தான் useless class என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, மானியம் வழங்க வேண்டும்; அல்லது மக்களே அவர்களது துறையில் மேலும் கற்று, தொடர்ந்து முன்னேற வாழ பழகி கொள்ள வேண்டும். அல்லது பெரும்பாலானோர் சமூக கேடான விஷயங்களில் ஈடுபட்டு நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருப்பார்கள்.

பறிபோகும் வேலைகள் - Job Lost
அசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியினால், எதிர்காலத்தில் பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இன்று உலகெங்கும் லட்சக்கணக்கானோர் வாடகை வண்டிகளை (Taxi) ஓட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் தானியங்கி டாக்ஸிகளும்,கார்களும் நம் சாலையெங்கும் ஓடி கொண்டிருக்கும். அதற்கான ஆயுத்த வேலைகளில் Tesla, Google போன்ற தொழில்நுட்ப முதலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டனர், 

மேலும் டெலிகாலர்கள், கஸ்டமர் சேவை அதிகாரிகள், வங்கி கேஷியர்கள், பேங்க் லோன் அதிகாரிகள், ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவர்கள், போஸ்டல்/கூரியர் வேலைகள், வீடு மற்றும் அலுவலகம் தூய்மை  செய்பவர்கள் என பல வேலைவாய்ப்புக்கள் உலகளவில் பறிபோக இருக்கிறது.

புதிய வேலைகள் - Future Jobs 
நோயாளிகளுக்கு தானாகவே ஆபரேஷன் செய்யும் மெஷின்கள், மருந்து கடைக்காரர் பதிலாக தானாய் மருந்து, மாத்திரையை எடுத்து கொடுக்கும் தானியங்கி  மெஷின்கள் என பலவும் மாறி வர போகிறது.

வயதானவர்களை பார்த்து கொள்ளும் caretaker -கள், உளவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மையங்கள்,  நியூட்ரிஷன் /டயட்டிங் நிபுணர்கள், பல்வேறு துறையிலுள்ள creative designerக்கள், ரோபோடிக்/பாட்  என்ஜினீயர்கள், Virtual Currency Organizer, தானியங்கி வாகனங்களை பாதுகாக்கும்/ மேற்பார்வை பார்க்கும் ஆய்வாளர்கள், AR/ VR  என்ஜினீயர்கள் என வருங்காலத்தில் இந்த வேலைகலெல்லாம் கொட்டி கிடக்க போகிறது.

கண்டிப்பாக இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலா பயணம் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படும். விண்வெளியி துறையில் பயிற்சி பெற்றவர்கள் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள். 

The Matrix படத்தில் வருவது போல ஒரு செயற்கையான உலகத்தை உருவாக்கி அதில் நம்மை உலவ விட போகிறார்கள். ஏற்கனவே அது போல Virtual Reality விளையாட்டுகள் வந்து விட்டாலும், அதை விட பலமடங்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து virtual உலகத்தில் நம்மை மூழ்கடிக்க செய்ய போகிறார்கள். Virtual Tour என்ற கனவுலகத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடுவார்கள் .

இதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. இதெல்லாம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லவில்லை. முன்பே சொன்னது  போல, எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் 100% நேர்த்தியாக கணிப்பது சாத்தியமல்ல. மேலே சொன்னதில் 60% சதவிகிதம் நடந்தாலே போதும். வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார ஏற்ற இறக்கமும் வந்து சேரும். இதில் தப்பிக்க ஒரே வழி, தொடர்ந்து கற்றல் தான். அப்படி இல்லாவிடில் useless class என்னும் தொழில்நுட்பத்தால் வேலை பறிபோன கூட்டம் பெருமளவு நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்த விஞ்ஞான மற்றும் அறிவியல் மாற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கற்றலே ஆகும். தொடர்ந்து கற்று, மற்றவர்க்கும் கற்பித்து அவரவர் தம் வாழ்வியலை சிறப்பிப்போம்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்   

ஞாயிறு, 17 நவம்பர், 2019

டார்க் நெட் என்னும் இருள் இணையம்!

வணக்கம்,

இந்த 2k கிட்ஸ் காலத்தில், ஸ்மார்ட் ∴போன் வந்த பிறகு இன்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை. எது வேண்டுமானாலும் படிக்க, தேட, வாங்க, ஆராய, பார்க்க, கேட்க  என இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஒரு இருண்ட பக்கம் இருப்பது போல இன்டர்நெட்டுக்கும் இருக்கிறது. அதுதான் டார்க் நெட் (Dark Net) என்னும் இருள் இணையம்.

டார்க் நெட் என்பது இன்டர்நெட்டில் ஒரு சிறு பகுதி. பொதுவான பார்வையில் இல்லாமல், தேடலில் கிடைக்காத வலைத்தளங்கள். பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான, மறைக்கப்பட்ட வலைத்தளங்கள் தான் டார்க்நெட்டில் இருக்கிறது.

ஒரு பெருங்கடலில் மேற்பகுதியில் தெரியும் பனிப்பாறை அளவுதான் நம்மால் சாதாரணமாக பார்க்க/தேட முடிந்த வலைத்தளங்கள் (கீழுள்ள படத்தை பார்க்கவும் ). இதனை சர்∴பெஸ் வெப் (Surface Web) என சொல்வார்கள். நம் கண்ணில் தெரியாமல், கடலுக்கடியிலும், ஆழ்கடலிலும்  இன்னும் பல இணையதளங்கள் முழுகியுள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இதனை டார்க் வெப் (Dark Web) அல்லது டார்க் நெட் (Dark Net) என சொல்வார்கள்.

Deep Web & Dark Net
Deep Web & Dark Net - click to enlarge 
(Surface Web) சர்∴பெஸ் வெப் அல்லது கிளியர் வெப் (Clear web) என்பது சாதாரண பொதுமக்களால் எளிதில் (search engine) சர்ச் என்ஜின்கள் மூலம் தேட கூடிய, பார்க்க கூடிய பக்கங்களை கொண்டது. இதற்கு Clear net , indexable web என்ற பெயருமுண்டு. WWW இல் ஒரு பகுதி. எல்லோருக்கும் தெரிந்த சர்ச் என்ஜின்கள் கூகிள், யாஹூ மற்றும் பிங் ஆகியன ஆகும். இதில் கூகிள் மூலம் தேடப்படுபவை 30 ட்ரில்லியன் வெப் பக்கங்கள் மட்டுமே ஆகும். இது இன்டர்நெட்டில் வெறும் 4% மட்டுமே ஆகும்.

இன்னும் புரிய வேண்டுமானால், நாம் தினசரி இன்டர்நெட்டில் உபயோகப் படுத்தும் கூகிள், யாஹூ, யூ ட்யூப், அமேசான், ∴பிளிப்கார்ட், டிவிட்டர், ∴பேஸ்புக், விக்கிப்பீடியா, பிளாக்ஸ்.. இன்னும் பல வெப் சைட்டுகள் சர்பெஸ் வெப்பில் இருப்பவை தான்.

(Deep Web) டீப்  வெப் என்பது சாதாரண தேடலில் மறைக்கப்பட்ட பக்கங்கள் தான். ரகசிய தகவல்களை கொண்ட வலைத்தளங்கள், அரசாங்க குறிப்புகள்/ தரவுகள் (databases), பல்கலைக்கழக தகவல்கள்/தரவுகள், வங்கியின் பணபரிமாற்ற தகவல்கள், தனியார் வலைத்தளங்கள் (web portals), பணம் கட்டி பயன்படுத்தும் சேவைகள் போன்ற வலைத்தளங்கள் டீப் வெப்பில் இருக்கிறது. உதாரணத்திற்கு நாம் சந்தா பணம் கட்டி பயன்படுத்தும் நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற செயலிகளின் தகவல்கள் டீப் வெப்பில் தான் இருக்கிறது. அதுபோல சில அரசாங்க குறிப்புக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய web portalகள் நாம் நேரடியாக கூகிளில் தேடி ஆராய/கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இவற்றுக்கென தனி IP address மூலம் நாம் நேரடியாக அன்றாடம் பயன்படுத்தும் பிரௌசர்கள் மூலம் அதற்கென உள்ள username, password மூலம் பயன்படுத்தலாம்.   

(Dark Net) டார்க் நெட் என்பது சாதாரண மற்ற வலைத்தளங்கள் போல பார்க்க பயன்படுத்த முடியாதது. Deep Web -ல் ஒரு சிறு பங்கு தான் டார்க்நெட். இதில் பெரும்பாலும் எல்லா வலைத்தளங்களும் மறைக்கப்பட்ட வலை தளங்களாக தான் இருக்கும்.

இந்த டார்க் நெட்டை உபயோகபடுத்த, நாம் தினசரி பயன்படுத்தும் பிரவுசர்கள் மூலம் உலவ முடியாது. எல்லா வலைத்தளங்களும்  encrypted செய்யப்பட்டிருக்கும். டார்க் நெட்டில் உலவ உதவும் சில பிரத்யோக encrypted பிரவுசர்கள் இருக்கிறது. அவை:
  • Tor browser
  • Subgraph OS
  • Firefox
  • Opera
  • Waterfox
  • I2P
  • Tails
  • Whonix
TOR browser

இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது டார் பிரவுசர் (Tor browser). நாம் எப்படி Chrome, Safari, IE, Firefox போன்ற பிரவுசர்களை பயன்படுத்தி நெட்டில் உலவுகிரோமோ அது போல, டார் பிரவுசர் மூலம் டார்க் நெட்டில் உலவுகிறார்கள். டார் பிரௌசரை Onion router என்று சொல்கிறார்கள். டார்க் நெட்டில் உள்ள வலைத்தளங்களின் டொமைன்கள் பெரும்பாலும்  .onion என்று இருக்கும். இது போன்ற வலைத்தளங்களை டார் மூலம் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட்டுக்கு நாம் பயன்படுத்தும் பிரௌசர்களின் மூலம் நாம் என்னென்ன தளங்களை பார்க்கிறோம் என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் டார் மூலம்  டார்க் நெட்டில் உலவும் போது எதையும் கண்காணிக்க முடியாது.

டார்க் நெட்டில் என்னென்ன செய்கிறார்கள் ? எந்த விதமான வலைத்தளங்கள் இருக்கிறது ?? சட்டவிரோதமான, சமூக விரோதமான, மனித தன்மையற்ற இருட்டில் நடக்கும் பல செயல்பாடுகள் இங்கு தான் நடக்கிறது. போதை மருந்து, ஆயுத கடத்தல், மனித கடத்தல்கள், சிறு குழந்தைகளின் ஆபாச படங்கள், கூலிப்படைகள், திருட்டு வீடியோ /ஆடியோ (புரியும்படியாக தமிழ் ராக்கர்ஸ்) , கணினி மென்பொருள் திருட்டுகள், பேங்க் திருட்டு மற்றும் மோசடிகள், கணினி மற்றும் இணையம் மூலம் கடக்கும் திருட்டுகள் என எல்லாமே டார்க் நெட்டில் தான்நடக்கிறது. இவ்வகை சைபர் திருடர்கள் டார்க் நெட்டில்  விற்க அல்லது  வியாபாரம் செய்ய பிட் காயின் (Bitcoin) போன்ற virtual currency மூலம் பணபரிமாற்றங்களை செய்து கொள்கின்றனர். அதனாலும் இவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்திய/ இன்டர்போல் சைபர் கிரைம் மற்றும் உளவுத்துறை  அதிகாரிகள் சேர்ந்து பல தொழில் நுட்ப உதவியுடன் இவ்வகை குற்றங்களையும், குற்றம் செய்பவரையும் பிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். சிலரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஆனால் பலரை இன்னும் எந்த இடத்திலிருந்து (நாட்டிலிருந்து) குற்றங்களை செய்கிறார்கள் என்றே அறிந்து கொள்ள முடியவில்லை.

எல்லா தொழில்நுட்பத்திலும் வரமும் சாபமும் இருப்பது போல, இதிலும் ஒரு சாபக்கேடு இருக்கிறது. எங்கு சென்றாலும் இன்டர்நெட்டை பயன்படுத்தும்  நாம் தான் எச்சரிக்கையுடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

∴பேஸ்புக்கில் ஏன் பகிர்கிறார்கள்?

வணக்கம்,

நம் பெற்றோர்கள் நமது சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் நெருக்கமான நபர்களிடம் பகிர்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றையும் ∴பேஸ்புக்கில் கட்டாயம் பகிர்ந்து விடுகிறோம் .

இந்த பழக்கம் பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் உண்டு,  என்னையும் சேர்த்து தான்... பொதுவாக எந்த மாதிரியான ஆட்களெல்லாம் ∴பேஸ்புக்கில் இருக்கிறார்கள் ? அவர்கள் எதையெல்லாம் பகிர்கிறார்கள் ? ∴பேஸ்புக்கில் ஷேர் செய்வோரில் பல டைப் மக்கள் உண்டு.

facebook-likes-and-shares

Type1: தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நாட்டுநடப்பு, உலக நடப்பு, அரசியல் நடப்பு, வீட்டு நடப்பு, அவர் சொந்த கடுப்பு, வெறுப்பு, மலரும் நினைவுகள் என போட்டு கொண்டே இருப்பார்கள். சிலர் ஓரிரு வரிகளில் போடுவார்கள்; சிலர் பத்தி பத்தியாய் போடுவார்கள். இவர்கள் போஸ்ட் போட்டவுடன் லைக்ஸ் போட நண்பர்கள் கியூவில் நிற்பார்கள்.

Type2: ஒரு சிலர் நாட்டின்/மக்களின் பிரச்னைகளை புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்.  இவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை.? ஏன் அப்படி செய்தார்கள்? ஒருவேளை இப்படி இருந்தால்... என போஸ்ட் போட்டு பகிர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Type3: அடுத்தது பொதுவான மக்கள். ஜோக்ஸ், விடியோக்கள், மீம்ஸ், சினிமா செய்திகள், பொன்மொழிகள், கிச்சன் டிப்ஸ், விழிப்புணர்வு, ஓட்டலில் சாப்பிட போனது, ஊருக்கு போனது, ஊர் சுற்றியது என பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை பேஸ்புக் வந்து லைக்களையும், ஷேர்களையும் போட்டு தள்ளி விடுவார்கள். நம் ∴பேஸ்புக் பேஜை திறந்தால், அதில் இருக்கும் 25 notification-ல் 23 அவர்களுடையதாய் இருக்கும்.

Type4: சிலர் தங்களுக்கு பிடித்தமான போட்டோ, விடீயோக்கள் என சிலவற்றை மட்டும் ஷேர் செய்வார்கள்.

Type5: இவர்களில் சிலர் எப்போது எங்கு சென்றாலும் உடனே ∴பேஸ்புக்கில் location checkin பண்ணிவிடுவார்கள். Feeling happy, Feeling sad, Feeling exited, Feeling கடுப்பு என அவர்களின் மூட்-ஐ ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள்.


Type6: இன்னும் சிலர் வெறும் போட்டோக்களையும், விடீயோக்களையும் பார்த்து ஸ்ரோல் செய்து கொண்டே செல்வார்கள். மற்றபடி, லைக், ஷேர் எதுவும் செய்யமாட்டார்கள்.

Type7: இன்னொரு சாரார் எப்போதாவது ஏதாவது பொன்மொழியோ, போட்டோவோ, சாமி படமோ ஷேர் பண்ணுவார்கள்.

Type8: வெறும் க்யூட்டான குழந்தைகள் போட்டோ, பூக்களின் போட்டோ மட்டும் இருந்தால் அது பெண்களின் ப்ரோஃபைலாக தான் இருக்கும். பல சமயங்களில் அது ∴பேக் ஐ.டி யாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Type9: சிலர் தொழிலுக்காகவும், அரசியல் பரப்புரைக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களது வெற்றியே எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட் வருகிறது என்பதை கொண்டே தெரியும். ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார மார்க்கெட்டிங் நோக்கிற்காக செய்யப்படுபவை.

இவர்களெல்லாம் ஷேர் பண்ணுவது ஏதற்கு? எல்லாம் ஒரு லைக்குக்கு தான். Like, Love, Ha Ha, Wow, Sad, Angry என அதாவது ஒன்றை யாரவது அவர்கள் போட்டோவுக்கோ, போஸ்டுக்கோ ரியாக்ட் செய்திருக்க வேண்டும்; கமெண்ட் செய்திருக்க வேண்டும். இதற்காகவே பலர் தவம் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு சின்ன லைக் மற்றும் கமெண்ட்டுக்காக தான் இப்படி அலைகிறார்கள்.

ஒரு போட்டோவோ, போஸ்ட்டோ ∴பேஸ்புக்கில் போட்டுவிட்டு எத்தனையோ பேர் லைக்ஸ், கமண்ட் வருகிறது என ∴போனையே பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100 லைக்ஸ்க்கு மேல் வந்து விட்டால் மகிழ்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ∴போனில் "மச்சி என் போட்டோவுக்கு லைக் போடுடா... இன்னும் 3 லைக்ஸ் இருந்தா செஞ்சூரி போட்டுருவேன்" என சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தார். 100 லைக்ஸ் வாங்கிய பின் என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. லைக்குகள் வாங்கி குவிப்பது ஏன்? ஒரு சிறு உதாரணம்: ஒரு நாய் தெருவில் போகும் வண்டிகளையெல்லாம் பார்த்து குரைத்து கொண்டே பின்னால் ஓடும். விரட்டி பிடித்து வண்டி நின்ற பின் என்ன செய்ய வேண்டும் என அதுக்கு தெரியாது. வண்டி நின்றபின் மீண்டும் இருமுறை குரைத்து விட்டு போய்விடும். அது போல தான் லைக்ஸ் வாங்கி குவிப்பவரின் நிலையும். 100, 500 அல்லது 1000 லைக்ஸ்க்கு பின் என்ன செய்வார்கள் என அவர்களுக்கும் தெரியாது. இதேல்லாம் ஒரு சின்ன அல்ப சந்தோஷதிற்கு தான்.

பலரும் அவர்களது சொந்த விஷயங்களை கூட ∴பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கு போகிறோம்? எப்போது வருவோம்?.. உடம்பு சரியில்லை.. நாய் செத்து போச்சு.. பாட்டி மண்டைய போட்டுட்டாங்க.. என எல்லா கருமத்தையும் பகிர்ந்து விடுகிறார்கள். ஏதற்காக இப்படி எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? எதற்கு இப்படி லைக் வாங்க துடிக்கிறார்கள் என யோசிக்கும் போது, இதற்கெல்லாம் ஒரு வித மனவியாதியே காரணம் என்கின்றனர் மனநல ஆர்வலர்கள். அவர்களுடைய மூளையில் ஒரு விதமான செரோடினின் (Serotinin) என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதை Happy Serotinin என்றே மருத்துவ உலகில் சொல்லுகின்றனர். அது சுரக்க சுரக்க மகிழ்ச்சி பெருகும். சாப்பாடு, தூக்கம், சினிமா, பணம், சரக்கு, விளையாட்டு, உடலுறவு, ஊர் சுற்றுதல், சமூக தொண்டு, பாராட்டு என எதை செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து இருக்குமோ, அதுபோல சிலருக்கு இது போன்ற ∴பேஸ்புக் லைக் மற்றும் பகிர்தல் மூலம் அவ்வகை ஹார்மோன்கள் சுரக்கிறது. அவை ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், ஒரு வித போதை உணர்வையும் தரக்கூடியவை என உளவியல் ஆர்வலர்கள் சிலர் சொல்கின்றனர்.

அதனால் தான் சிலர் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அடிக்கடி செல்பி எடுப்பதும், இந்த வியாதியினால் தான். இதற்கு தீர்வு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாம் மனக்கட்டுப்பாட்டோடு இருக்க பழகி கொள்ள வேண்டும். அது தான் முடியலையே என்கிறீர்களா?  முயற்சி செய்து பாருங்களேன்! நானும் முயற்சி செய்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 27 ஜூலை, 2017

மூட நம்பிக்கைகள் சில!

வணக்கம்,

நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்?  எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.


1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?
பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும்.  நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும்  பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான்  நாம்  பல படங்களிலும் பார்த்துள்ளோம்.

உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.

2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.

உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு.  அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.

3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ? 
மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது  நடக்கும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.

4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?
சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.

உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக  இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.

5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?
வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.

உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.

6.) தும்மினால் கெட்ட சகுனம்- 
நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.

உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.  (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).

7.)  புரட்டாசி மாதம் ஏன் மாமிசம்  சாப்பிட கூடாது ?
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக)  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!

8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?
இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள்  கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?
ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.

உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)

10.)  உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்
வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.

உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

11.) இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கும்!
கடந்த பதினைந்து அல்லது இருபது  வருடங்களாக பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய நம்பிக்கை. இதற்கு விளக்கம் தர கொஞ்சம் நிறைய எழுத வேண்டும். அதனால் இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 9 செப்டம்பர், 2015

தண்ணீர் ! தண்ணீர் !

வணக்கம்,

உலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் கடலுக்கு அடியில் போக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகின்றனர். இதை தவிர, இன்னும் சில ஆண்டுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காமல் போகலாம் என்று நம்மை பயமுறுத்துகின்றனர் சிலர். சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் இந்த பசுமையான வளத்தை கொண்ட பூமி, வறண்ட பூமியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுகின்றனர்.

ஆப்பிரிக்கா போன்ற சில வறண்ட நாடுகள், Dry day is coming என்ற பிரச்சாரத்தை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அதிகமாக தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், அனாவசியமாக தண்ணீர் செலவு செய்யாதிருக்கவும், வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை பற்றியும் எடுத்து சொல்கின்றனர். அவ்வாறு நடக்காமலிருக்க, தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை முக்கிய விஷயமாக சொல்கின்றனர்.


ஏற்கனவே  கென்யாவில் உள்ள  நைரோபி நகரில், Water ATM எனப்படும் குடிநீருக்கான ஏ.டி.எம்-ஐ அந்த அரசு நிறுவியுள்ளது. கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த விலையில் இதுபோல ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது கென்யா அரசு.


ஐ.நா சபையின் கூற்றுப்படி தண்ணீர் தட்டுப்பாடு உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று சொல்கிறது. 700 கோடி மக்கள் தொகையை கொண்ட பூமியில், 43 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வரும் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க சஹாரா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இதெல்லாம் எங்கோ, வேறு எதோ நாடுகளுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணி விட வேண்டாம்.  Water ATM கென்யாவில் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறது. இப்போதே நிலத்தடி நீர் இந்தியாவில் வறண்டு போய்விட்டது என்று புவுயியல் ஆராய்ச்சி துறை சொல்கிறது. ஒரு சர்வதேச ஆய்வறிக்கையின் படி,
  1. உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், இந்தியாவின் பங்கு  16%. அதில் 4% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் இருக்கிறது.
  2. புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய  நகரங்கள் உலகின் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த நகரங்களாக மாறபோகிறது.
  3. 2040-ல் இந்தியாவில் குடிக்க தண்ணீரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வர காரணங்களாக இருப்பவை:
  1. காடுகளை அழிப்பதால், மழை பொய்த்து விடுகிறது.
  2. சட்ட விரோத மணல் கொள்ளையினால், ஆற்று தண்ணீர் ஊருவதில்லை. 
  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆழ்த்துளாய் கிணறுக்காக 300,400 அடிகள் வரை தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை. 
  4. தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறு, எரிகளில் கலந்து விடுகின்றனர். நீர்நிலை மாசுபடுவதால், குடிநீர் வீணாகி போகிறது.
இதை தவிர்க்க நாமும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. கீழுள்ள படங்கள் யாவும் ஃபேஸ்புக்கில் 'Logical Indian' பக்கத்தில் பகிரப்பட்டது.











இதை பற்றி  மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவோம். நீரின் அவசியத்தை சொல்வோம். தண்ணீரை சேமிப்போம்! உலகின் வளம் காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 15 ஜூலை, 2015

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா?

வணக்கம்,

இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஷாப்பிங் தான் இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் டிரெண்ட். எலக்ட்ரானிக் பொருட்கள், துணிமணிகள் முதல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உப்பு, புளி, மிளகாய் வரை எல்லாமே இப்போது இணைய வியாபாரிகளிடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

முதலில் சற்று வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்லைனில் வாங்கி கொண்டிருந்தனர். பின்னர் சாமான்ய மக்களும் கணினி மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கணினி மூலம் வாங்குவதை விட, மொபைலில் ஆன்லைன் வர்த்தகம் செய்வது அல்லது பொருட்கள் வாங்குவது மக்களிடம் வாடிக்கையாகிவிட்டது.

இந்த ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களுக்கு, இவ்வளவு குறைந்த விலையில் கொடுத்தாலும் எப்படி கட்டுப்படி ஆகிறது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஷோரூம் வைத்து பொருட்களை கடைவிரித்து, பொதுமக்களிடம் விளக்கி விற்பதை விட, ஆன்லைனில் விற்பது சுலபம் . சுலபத்தை காட்டிலும் லாபம் அதிகம். கடையின் வாடகை, கரண்ட் பில், வேலை செய்பவர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவு என நேரில் விற்பதுக்கு செலவு அதிகம். ஆனால் ஷாப்பிங் வெப்சைட்காரர்கள், வெறும் குடோனில் சரக்குகளை சேமித்து கொண்டு, நுகர்வோர்/வாடிக்கையாளர்களுக்கு கேட்டவாறு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.


ஆன்லைன் ஷாப்பிங்க்கு ஏன் இவ்வளவு மவுசு?

1) 2005-ல் பிராட்பேண்ட் இணைய சேவை வந்த போது மெல்ல மெல்ல ஆரம்பித்தது ஆன்லைன் ஷாப்பிங் மோகம். போக்குவரத்து சிக்கலில் மாட்டாமல், கடைவீதியின் கூட்ட நெரிசலில் சிக்காமல், கடை கடையாய் ஏறி இறங்காமல், வீட்டில் இருந்தபடியே கணினி முன் அமர்ந்து வாங்குவது சுலபம்.

2) நேரில் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதால், மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

3) பொதுமக்களின் தேவையை அறிந்து கொண்டு, இணைய வியாபாரிகளிடையே போட்டி அதிகமாகி விட்டது. ஆளாளுக்கு பொருட்களை 'போத்திஸ் ஆடி தள்ளுபடி ஆஃபர்' போல கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

4) Credit Card, Debit Card மற்றும் Debit Card  மூலம் பண பரிவர்த்தனை செய்யபடுவதால், வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் வாங்குவது மிகவும் சுலபமாக இருக்கிறது.

5) மேலும் Cash On Delivery  மற்றும் Free Home Delivery வசதியும் பல இணைய வியாபாரிகள் கொடுப்பதால், 'கையில காசு வாயில தோசை' என்று நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். வீட்டிலேயே பொருள் வந்து ஓசியிலேயே இறங்கி விடுவதால், வாடிக்கையாளருக்கு கஷ்டமே இல்லை.

6) எல்லாவற்றக்கும் மேலாக, வாங்கிய பொருள் சேதபட்டிருந்தாலோ,  சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ,  30 நாட்களில் உங்கள் முழு பணமும் வாபஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து விட்டன.

online-shopping
click to enlarge image 

ஆன்லைன் ஷாப்பிங் தில்லு முல்லு:

மேலோட்டமாக பார்த்தால், இது ஒரு சுலபமான வர்த்தகமாக தான் தெரியும். ஆனால் இதிலுள்ளும் பல தில்லு முல்லுக்கள் நடப்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. அவற்றுள் சில:

1) ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வர வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு,
  •  XL அளவு சட்டை கேட்டால், M அளவு சைஸ் சட்டை வரலாம். 
  • அதே போல, ஆர்டர் செய்த நீல நிற டி-ஷர்ட்டுக்கு பதிலாக அதே பிராண்டில் பச்சை நிற டி-ஷர்ட் வரலாம்.  
பேஸ்புக்கில் பகிரபடுவது போல, மொபைல் போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பாவோ,  ஐ-போட் பதிலாக செங்கலொ, வேறு பொருளுக்கு பதிலாக வெறும் காலி டப்பாவோ வர வாய்ப்பே இல்லை. அதெல்லாம் இணைய வியாபாரிகளின் எதிரி நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியே ஆகும். 

2) ஆர்டர் செய்த பொருள் தாமதமாக வரலாம். 10 நாட்களில் வரவேண்டியது,  25 நாட்களில் வந்தடையும் போது வாடிக்கையாளருக்கு எரிச்சல்தான் வரும். ஆர்டர் செய்த பொருள் வராமல் கூட போகலாம். உங்கள் ஊரில் எளிதில் கிடைக்கும் தன்மை இல்லாததால், பொருள் தாமதமாகவோ அல்லது கிடைக்காமலே இருக்க கூட வாயுப்புண்டு.

3) சில இணைய வியாபாரிகள், போலியான ஆஃபர்களை காட்டி மக்களை எமாற்றிவிடுகின்றனர். 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை வெறும் 2000 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளுங்கள். குறுகிய கால ஆஃபர் மட்டுமே! முந்துபவர்களுக்கே முன்னுரிமை! என்று  கவர்ச்சி வார்த்தைகளில் வலை விரிக்கின்றனர். சில ஏமாளிகளும் வசமாக வலையில் சிக்கி கொள்கின்றனர். பொதுவாக இத்தகைய ஆஃபர்களை பயன்படுத்தும் போது, அவை தரமான, நம்பிக்கையான இணையதளம்தானா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்.

4) சில இணைய தளங்களில், போலியான பொருட்களை வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர், உதாரணத்திற்கு, சோனி (SONY) கம்பெனியின் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தால், சோனி (SONYY) என்ற போலியின் பொருளை அனுப்பி விடுகின்றன்ர்,

4) மிக முக்கயமானது இது. வாங்கும் சில பிராண்டட் பொருட்களுக்கு வாரண்டி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். சில இணைய வியாபாரிகள் வாரண்டி இல்லாமலேயே பொருட்களை விற்று விடுகின்றனர். ஆஃபர்களை பெரிதாக காட்டிவிட்டு வாரண்டி இல்லை என்பதை சிறு எழுத்துகளில் வலைபக்கத்தின் கடைசியில் எழுதி வைக்கின்றனர்,

5) இன்னும் சில முன்னணி நிறுவனங்கள், இந்த இணைய வியாபாரிகள் எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இல்லை என்று அறிவித்து விடுகின்றனர்.

Flipkart, Snapdeal and Amazon not our authorized resellers - Lenovo 
http://goo.gl/7wA0yw

6) அசல் விலையை விட கூடுதலாக விலை போட்டு, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.  சில நாட்களுக்கு முன், ப்ஃளிப்கார்ட்டில் 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை 399 ரூபாய் என்று கூறி விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்த படத்தை ஜூம் செய்து பார்க்கும் போது, அந்த செருப்பிலேயே அதன் விலை 399 ரூபாய் தான் என்று போடப்பட்டுள்ளது. இதை விட பள்ளி சிறுவர்கள் எடுத்து செல்லும் ஒயர் கூடை 1,250 ரூபாய் என்று விற்கப்பட்டுள்ளது. இது போல பல பொருட்களின் விலையை மாற்றி போட்டு ஏமாற்றி விடுகின்றனர் ஆன்லைன் வர்த்தகர்கள்.

click to enlarge flipkart frauds
click to enlarge image 

8) மேலும், ஆன்லைனில் பழைய பொருட்களை வாங்கி விற்பவரும் ஏமாற்ற படுகின்றனர். பொருளை பார்க்காமல், சோதிக்காமல் பண பரிவர்த்தனை செய்து  ஏமாந்து விடுகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர வளர நம்மை சோம்பேறிகளாகவும், ஏமாளிகளாகவும் மாற்றி கொண்டிருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் இது போல பல கோல்மால்கள் இணையத்தில் நடக்க வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர், கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 28 மார்ச், 2015

அறியப்படாத உரிமைகள் !

வணக்கம்,

நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங்களை புகட்டியிருக்க வேண்டும். ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 

இரு நாட்களுக்கு சமூக வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய செய்தியை படிக்க நேரிட்டது. எல்.பி.ஜி (L.P.G) என்று சொல்லப்படும் சமையல் எரிவாயுவை உபயோகபடுத்தும் நுகர்வோர் அனைவருக்கும் 40 லட்சம் வரை காப்பீடு இருப்பதாக அந்த பதிவில் உள்ளது. இது சமூக தளங்களில் வருவது போல எதாவது ஒரு வதந்தியாக இருக்குமோ என்று முதலில் நினைத்து, கூகிளை துணைக்கு அழைத்தேன். அட! அந்த செய்தி உண்மைதான்!

தீர ஆராய்ந்ததில், நாம் எல்.பி.ஜி இணைப்பு வாங்கும் போதே அந்தந்த கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள், நுகர்வோர் கணக்கில் 40 லட்சம் வரை காப்பீடு செய்வதாக சொல்கின்றனர்.


சமையல் எரிவாயுவின் செயற்பிழையால் கேஸ் வெடிப்பது, உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டால், உடனடியாக கேஸ் ஏஜன்சியிடம் தெரிவிக்க வேண்டும். உடனே அவர்கள் ஒரு குழுவை அனுப்பி, சரிபார்த்து விட்டு அதற்கான காப்பீட்டு தொகையை நுகர்வோரிடம் கொடுபார்கள். அக்குழு நுகர்வோர் பயன்படுத்தும் எரிவாயு சாதனங்களான, கேஸ் ட்யூப், லைட்டர், கேஸ் கட் போன்றவை ஐ.எஸ்.ஐ. (ISI) சான்றிதழ் பெற்ற பொருள்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

lpg-gas-insurance

சில போலி விபத்து முறைகேட்டை தடுக்கவும் குழுக்கள் உள்ளதாம். கடந்த 25 ஆண்டுகளில் யாருமே இந்த காப்பீட்டு உரிமையை கோரவில்லை என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

எல்லோருமே கேஸ் வெடித்தவுடன், பதறி போய் மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். யார் ஏஜன்சியிடம் போவார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது. காப்பீடு தொகை வேண்டுமென்றால் அவர்கள் தொடர்பு கொண்டு தான் ஆக வேண்டும்.  

நம் நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் வருடத்திற்கு நூற்றுகணக்கான கேஸ் வெடிப்புக்கள் நடந்தேறி வருகிறது. இந்த சட்டத்தை/உரிமையை  பற்றி மக்களுக்கு தெரியபடுத்தி அறிவுறுத்த வேண்டிய மத்திய/மாநிலஅரசுகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் முன் வருவதில்லை.

சுதந்திர இந்தியாவில் இது போல ஒரு அடிப்படை காப்பீட்டு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்னும் எத்தனை உரிமைகள், சட்டங்கள்  நமக்கு தெரியாமல் இருக்கிறதோ எனத் தெரியவில்லை.

தகவல்: businesstoday 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 16 ஏப்ரல், 2014

ஜாக்கிரதை ! திருடர்கள் v2.014

வணக்கம், 

அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன்பெல்லாம் வீடு/கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, பாங்க் கொள்ளை, வழிப்பறி என்று நடந்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக மென்பொருள், இணையம் மூலம் கொள்ளையடிப்பது பெருகி வருகிறது.

தொழில்நுட்பம் மேலோங்கி நிற்கும் மேல் நாடுகளில் மட்டும் தான் இவை நடக்கிறது என்று எண்ணி கொண்டிருக்கின்றனர். அது தவறு. நம் நாட்டிலும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்லைன் திருட்டு, இணையம் மூலம் வங்கி கணக்கு கொள்ளை போன்ற 'டெக்னிகல் திருட்டுகளை' பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

இந்நூற்றாண்டின் ஆரம்பம் முதல், உலக மக்களின் கணினி மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில்நுட்பம் வளர்வதால், உலகம் சுருங்கி கொண்டே வருகிறது. இதன் பின்னணியில் பல குற்றங்களும், தவறுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கணினி, இணையம், மென்பொருட்கள், வன்பொருட்கள், கைபேசி,வலைத்தளம் மூலம் நடப்பவையே இணைய குற்றங்கள் (Cyber Crime) என்று சொல்லபடுகிறது. இக்குற்றங்களில் பலவகை உள்ளது.

1.) ஹாக்கிங்  (Hacking)
2.) பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement)
3.) சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking)
4.) ஐ.டி. திருட்டு (ID Theft)
5.) தீங்கிழைக்கும் மென்பொருள் பரப்புதல் (Malicious Software)

ஹாக்கிங் (Hacking): ஒரு தனிப்பட்ட நபர்/ தனியார் அமைப்பு/ அரசு அமைப்பு, அவரது தனிப்பட்ட அல்லது முக்கிய தகவல்களை அவர் அனுமதியின்றி அணுகி, இணையம் வழியாக திருட முயல்வது ஹாக்கிங் எனப்படும். இதில் குற்றவாளி அவன் இருந்த இடத்திலிருந்தே, வேறு ஒருவரின் கணினிக்குள் அனுமதில்லாமல் நுழைந்து, தகவல்களை திருடுவது வழக்கம். ஒரு இணைய தளத்தின் சர்வரை (Server) தாக்கி, ஹேக் (hack) செய்து அவற்றில் உள்ள தகவல்களை அழித்து / திருடுவது வெப்சைட் ஹாக்கிங் எனப்படும்.சமீபத்தில், ஜெயா டி.வியின் இணையதளம் ஹாக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அரசு/ தனியார் அமைப்பே தங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தி கொள்வது எத்திகல் ஹாக்கிங் (Ethical Hacking). இது கிட்டத்தட்ட  நம் பாதுகாப்பிற்காக நாமே போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையம் போல தான்.

பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement): ஒரு தனி நபர்/நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை அவர் அனுமதியின்றி உபயோகிப்பது, விற்பது, போன்றவையே பதிப்புரிமை மீறுதல் ஆகும். காப்புரிமையும் மீறுவதும் இதே போலதான். தகவல்கள், கோப்புகள், புகைப்படம், காணொளி, மென்பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் என உரிமையாளரிடம் தக்க அனுமதியின்றி பயன்படுத்துவது /விற்பது/ மாற்றுவது சட்டப்படி தண்டனைக்குரியதாகும். பொதுவாக நாம் கேள்விப்படும் திருட்டு பட டி.வி.டி, திருட்டு (activation key இல்லாத) மென்பொருட்கள், போன்றவை இவ்வகை குற்றத்தையே சாரும்.

சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking): இணையம் மூலம் மின்னஞ்சல்கள், படங்கள்/ காணொளிகள், தவறான தகவல்களை உருவாக்கி மற்றவர்களை துன்புறுத்துவது சைபர் ஸ்டாகிங் என்று சொல்வார்கள். வலைதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படம் வெளியிடுவது, ஆபாசமாய் விமர்சிப்பது, தவறான/பொய்யான  செய்திகளை பரப்புவது, சமூக தளங்களில் போலி ஐ.டி வைத்து மோசடி செய்வது போன்றவை இதன் கீழ் வரும். பெரும்பாலும் பதின்பருவ பெண்களும், ஆண்களும் தான் இதில் பலியாகிறார்கள். இது போன்ற குற்றங்களை செய்யும் வக்கிர குணம் படைத்தவர்களுக்கு அரசு கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புகைப்படமோ/காணொளியோ  எடுத்து, அவருக்கு விருப்பமில்லாமல் எஸ்.எம்.எஸ் அல்லது கால் செய்து தொந்தரவு செய்வதும் இவ்வகை சைபர் குற்றங்களின் கீழ் பதிவாகும்.

ஐ.டி. திருட்டு (ID Theft):  இணையம் மூலமாக பணம்/பங்குகளை மோசடி செய்வது அல்லது திருடுவது ஐ.டி திருட்டு ஆகும். தனி நபர் /  நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் அனுமதி இன்றி இன்னொரு கணக்கிற்கு மாற்றுவது / திருடுவது; போலியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தயார் செய்து கொள்ளையடிப்பது; போலியான இ-மெயில் அனுப்பி உங்களுக்கு $500,000,000,000 பரிசாக விழுந்துள்ளது என்று கூறி பணம் பெற முயற்சிப்பது போன்றவை ஐ.டி. திருட்டு என்று கூறுவார்கள். இது போன்று இ-மெயில்/எஸ்.எம்.எஸ் மூலம் திருடுவது  பிஷிங் (phishing)  என்றும்  சொல்வார்கள்.

பெரும்பாலும் வங்கி கணக்குகளை ஹாக் செய்து , அவருடைய வங்கி , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நம்பர்கள் போன்றவற்றை  பாஸ்வோர்ட், பின் நம்பருடன் திருடி தவறாக பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. ஏ.டி எம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வணிக இடங்களில் (swipe) தேய்க்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். ஸ்கிம்மர் (Skimmer ) என்று சொல்லப்படும் ஓர் இயந்திரத்தின் உதவியுடன் நம் கார்டுகளின் தகவல்களை பிரதி எடுத்து கொண்டு, பின்னர் உபயோகிக்க முடியும். நாம் செய்யாத செலவுக்கு பின்னால் பணம் கட்ட வேண்டி வரும்.  இதுவும் ஓர் வகை நூதன சைபர் வகை திருட்டு தான்.

வைரஸ் பரப்புதல் (Malicious Software): இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு கணினிக்கோ / கணினி குழுமதிற்கோ தீங்கு செய்யும் வைரஸ்களை/ மென்பொருளை அனுப்பி அவர்களின் மொத்த தகவல்களையும் அழிப்பதே இதன் வேலை. வைரஸ்களை ட்ரோஜன், வோர்ம் என்று பலவாறு பிரித்து சொல்வார்கள்.   

இது போன்ற குற்றங்களை தடுக்க நாம் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இதோ எனக்கு தெரிந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பகிர்ந்துள்ளேன்.

1.) சமூக வலைதளங்களிலும், சாட் (Chat room ) ரூம்களிலும் முன்பின் தெரியாதவரிடம் நட்பு பரிமாறி கொள்வதோ அல்லது சொந்த விஷயங்களை பரிமாறி கொள்வதோ கூடாது.

2.) வங்கி கணக்கின் தகவல்களை (பாஸ்வோர்ட், பின் நம்பர் ) கண்டிப்பாக வெளி நபருடன் பகிர கூடாது.

3.) கிரெடிட்/ டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களை அந்த அட்டையிலேயே எழுத கூடாது.

4.) இ-மெயிலில் வங்கி கணக்கின் முக்கிய தகவகல்ளை (பாஸ்வோர்ட், பின் நம்பர், செக்குரிட்டி கேள்வி ) தர கூடாது.

5.) உங்களுக்கு 50 ஆயிரம் கோடி பரிசு என்று மெயில் வந்தால் உடனே பல்லிலித்து கொண்டு, வங்கி கணக்குகளை தகவல்களை தர கூடாது.

6.) ஆன்லைன் பாங்கிங் போது , பண பரிவர்த்தனை முடிந்தவுடன் உடனே லாக் அவுட் செய்து விட வேண்டும்.

7.) பாங்கிங் பாஸ்வோர்ட்/ பின் நம்பர் முதலியவற்றை எல்லோரும் ஊகிக்கும் படியாக வைத்தல் கூடாது (0000,1111,1234, password123, asdf123...) .

இவ்வகை குற்றங்களை எளிதில் அழிக்க முடியாது. பெருகி வரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், மக்களின் தேவை போன்றவற்றின் காரணமாக சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. மேற்கண்டவை எல்லாம் வெறும் முன்னெச்சரிக்கை மட்டுமே. எப்போதும் கவனமாக இருத்தல் நமக்கு பலமே.

மேலும் தகவலுக்கு http://cybercrimeindia.org


சைபர் கிரைம் தொலைப்பேசி எண்கள் :

Address: (Chennai )
Asst. Commissioner of Police,
Cyber Crime Cell,
Vepery,
Chennai-600 007.
Phone: 04423452348 / 04423452350
E-mail id: cybercrimechn@yahoo.com

Address: (For Rest of Tamil Nadu)
A-Wing, III rd Floor,
Rajaji Bhawan, Besant Nagar,
Chennai-600090
Phone: 044-24461959/ 24468889 /24463888
E-mail id: hobeochn@cbi.gov.in



நன்றி !!!

-பி .விமல் ராஜ்