tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூன், 2023

குமரிக்கண்டமும் லெமூரியாவும்!

வணக்கம்,

இந்த உலகமானது உருவான காலம் முதல் பல புவியியல் மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. நம் தொன்மையை விளக்கி சொல்ல இந்தியாவில் பெரும்பாலும் 2500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில இடங்களில் புராண சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் நமக்கு வரலாற்று ஆதாரமாய் கிடைத்துள்ளன. தமிழ் மொழியும் மற்றும் தமிழ் மக்களின் நிலமும் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. அதை சுற்றி பல கருத்து மோதல்கள், முரண்பாடுகள்,  வேறுபட்ட கோட்பாடுகள் என பல இருக்கின்றன. அதில் சில காலங்களாக பெரிதும் பேசப்படுவது குமரிக்கண்டம் பற்றி சர்ச்சைகளும் கருத்தாக்கங்களும் தான். அதனை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

லெமுரியா கண்டம்:
முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம். 1864-ல் ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டெர் (Philip Sclater) என்பவர்,  லெமுர் (lemur) என்னும் ஒருவகை குரங்கின விலங்கின் படிமங்கள் மடகாஸ்கர் தீவிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் இருப்பதை அறிந்தார். அது எப்படி கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இல்லாமல் நடுவில் பெரும் கடலால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா, மடகாஸ்கர் ஆகிய இரு நிலப்பரப்பில் ஒரே இனம் (species) இருக்க/இருந்திருக்க முடியும் என்பதை ஆராய்ந்தார். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கர், இந்தியாவின் தென் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா மூன்றும் இணைக்கப்பட்டு, ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும்; பின்னாளில் துருவ மாற்றம் (polar shift), டெக்டோனிக் தகடுகளின் மாற்றம் (tectonic plates shift), கண்டப் பெயர்ச்சி  (continental drift) ஆகிய புவியியல் காரணத்தினால் இங்குள்ள நிலப்பரப்பு கடலுக்குள் முழுகியிருக்கலாம் என அனுமானித்தார். அந்த தொலைந்த/ மூழ்கிய நிலப்பரப்பை "லெமுரியா கண்டம்" என பெயரிட்டு தன் கோட்பாட்டை முன் வைத்தார்.  இக்கருத்து சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்டாலும், பலர் இது வெறும் அனுமானம் மட்டுமே; உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவந்தனர். பின்வரும் நூற்றாண்டில்,  1912-ல் Alfred Wegener என்னும் ஜேர்மன் புவியியலாளர், பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டப் பெயர்ச்சியினால் pangea என்னும் எல்லா கண்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பிரிந்தது இப்போதுள்ள உலக வரைபடம் போல ஆனது என்பதை முன்வைத்தார். அதற்கு பிறகு லெமுரியா கண்டம் பற்றி பெரிதும் பேசப்படாமல் போனது. 

பின்னர் 1930-ல் சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமிழ் பேராசிரியர் குமரி நாடு என்றும், குமரிக்கண்டம் என்றும் தமிழர் நிலப்பரப்பை சொல்கிறார். லெமூரியாவை குமரிக்கண்டம் என்று முதன்முதலில் தம் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப் படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப் பட்டுள்ளது.

"பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது."

அடியாருக்குநல்லார் என்னும் புலவர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய சிலப்பதிகார உரையில், கடலில் தொலைந்து போனதக சொன்ன நிலப்பரப்பு தற்போதைய கன்னியாகுமரிலிருந்து தென்திசையில் 700 கவட்டம் (7500மைல்) தூரத்தில் குமரியாரும்,  பஃறுளியாறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சீன பழங்கதைகளில், தங்கத்தை வெட்டி எடுக்க பாண்டிய மன்னனால் சீன அடிமைகள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் குமரியாறு, பஃறுளியாறு என இரு ஆறுகளும், மேரு மலையும் இருந்ததற்கான சான்றுகளும் அதில் உள்ளது. 

தேவநேய பாவாணர் மற்றும் பிற தமிழ் அறிஞர்களும் தமிழர்கள் முதன் முதலில் இங்கு தான் தோன்றினர் என்று கூறியுள்ளார். ஆதிமனிதன் தோன்றிய இடமாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும், பின்னாளில் கடற்கோளால் அழிந்து கடலினுள் போயிருக்க கூடும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலப்பரப்பு பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதாகவும், கபாடபுரம், தென்மதுரை போன்ற நகரங்கள் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல இலக்கியங்கள் இங்குள்ள நகரங்களில் இயற்றப்பற்றிருக்க கூடும் என்றும் அதற்கான சான்று பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு என்று சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் 'நன்னீர் பஃறுளியாறும் குமரி நாடும் கொடும்கடல் கொண்டு போனதாக' பாடல் வரிகள் உண்டு. 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்துள்ளதாக குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில், தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (கி.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மற்றுமொரு ஆராய்ச்சியின்படி இந்துமா கடலுக்கடியில் மூழ்கிய நிலப்பரப்பு ஒன்று இருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆயினும் அஃது குறைந்தது 10,000 முதல் 15,000 ஆண்டுகள் முன் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது, இக்கருத்தின்படி அது குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில கூற்றுகள் உள்ளது. மேலும் குமரிக்கண்டம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில கடல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ளது. சில இடங்களில் 2000 மீட்டருக்கு மேல் கடல் ஆழம் இருக்கிறது. 

தமிழ் தேசியவாதிகளும், தமிழ் இன ஆதரவாளர்களும் இலக்கியத்தின் ஆதாரங்களை கொண்டு, குமரிக்கண்டம் இருந்ததாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியின்படி குமரிக்கண்டம் நிரூபணம் ஆகாத ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்திய அரசாங்கம் இது போன்று கடலில் மூழ்கிய நகரங்களின் (பூம்புகார், கொற்கை..) பெருமையும், அதன் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகளிடைய நம் தொன்மையும் பெருமையும் பறைசாற்ற வேண்டும். நிலையான அதிகாரபூர்வ தொல்பொருள் ஆதாரம் வரும் வரையில், இது போன்ற சர்ச்சைகளும் கருத்துக்களும் குமரிக்கண்டத்தை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

வெள்ளி, 24 மே, 2019

தாமரை ஏன் மலரவில்லை?

வணக்கம்,

நேற்று முதல் எல்லா இடங்களிலும் இது தான் பேச்சு. தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர எல்லா இடங்களிலும் காவிக்கொடி. கேரளாவை விட்டு விடுங்கள்; கம்யூனிசம், காங்கிரஸ் என வேறு வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏன் தாமரை வளர முளைக்க முடியவில்லை??
  • தாமரையை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.?
  • தமிழ் நாட்டில் ஏன் மோடியை பலருக்கு பிடிக்கவில்லை? 
  • ஏன் பாஜகவை/ஆர்.எஸ். எஸை பிடிக்கவில்லை.?
  • இந்துக்களே இந்துத்துவாவை எதிர்க்க காரணம் என்ன?
ஏன்? ஏன்?? ஏன்??? வாஜ்பாய் இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் காரணங்களா???
  • ஊழல் செய்கிறார்கள்.
  • மோடி உலகம் சுற்றுகிறார்.
  • ஜி.எஸ்.டி.
  • மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது.
  • தென் மாநிலங்களுக்கு வரிசலுகைகள் தரவில்லை.
  • பேரிடர்களுக்கு தக்க உதவி செய்யாமை. 
  • கார்ப்பரேட் அதிபர்களுக்கு சகாயம் செய்தல்.
இதெல்லாம் கூட எனக்கு பெரிய காரணமாக தெரியவில்லை. இதெல்லாம் காரணமாக  இருந்திருந்தால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்கவே முடியாது.

இவர்களை பிடிக்காமல் போக காரணம், இவர்கள் பேசும் இந்துத்துவம் என்னும் இந்து தீவிரவாதம். என்னதான் தமிழகம் முன்னாளில் இந்துகளின் பூமியாக இருந்தாலும், சைவ வைணவ மதங்களின் உறைவிடமாக இருந்த போதிலும், நம் மக்களின் மனதில் கருப்பு சட்டையின் தாக்கம் இன்னமும் ஆட்கொண்டிருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பெரியாரிச கொள்கைகள் தான் முக்கிய காரணம்.
பெரியாரின் பகுத்தறிவு பேச்சுகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விஷயங்கள் நம் மக்களின் மனதோடு ஒன்றாக ஒன்றி, இன்றும் அதை தாண்டி நம்மால் யோசிக்க முடியவில்லை. சாதி/மத பேதங்கள் முழுவதும் ஒழிந்து விட்டது, சாதியே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதும் நம்மிடம் சாதியின் பெயரை கேட்பவர்களை ஒரு அசிங்க பொருள் போல ஏற இறங்க பார்க்கும் மனநிலை தான் இருக்கிறது.


மற்ற மாநிலங்களில் இது போன்ற தலைவர் இருந்தாரா, அல்லது கொள்கைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது போன்ற உயரிய சமூக கொள்கைகளை கொண்ட தலைவர் இல்லை என்று தான் நாம் எண்ணி கொள்ள வேண்டும். இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் போல மற்ற மாநிலங்களும் இது போன்ற சாதிய மத சிந்தனைகளில் வேறுபட்டிருக்கும்.

தமிழ் நாட்டில் வந்து இங்கு இந்துத்வாதான் நம் கொள்கை, நம் லட்சியம், என்று கூறுவது, மற்ற மதத்தினரை ஏசுவது/பழிப்பது போன்ற செய்கையெல்லம் தான் நம்மை இன்னும் பாஜகவை எதிர்க்க செய்கிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு விதமான கொள்கையும், நம் மாநிலத்தில் வேறு விதமான கொள்கையும் கொண்டு ஒப்பேற்றி வருகின்றனர். அதே இவர்களும் தொடர்ந்தால், ஒரு வேளை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்  மலர வாய்ப்புண்டு.. ஆனால் அவர்கள் மாற போவதும் இல்லை.. இங்கே மலர போவதும் இல்லை.

மற்றபடி படித்தவர்கள் மோடிக்கு ஓட்டு போட வில்லை என்பதெல்லாம் அபத்தம். "அடேய்! நீங்க தாண்ட திமுக/அதிமுகவை மாறி மாறி அரியணை ஏத்துறீங்க.." 


மேலே இருப்பது பழைய பேப்பரில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன் எழுதியது. நம்பினோம்.ஆனால் ?!!?

வேறு வழியில்லை. அவர்தான் பிரதமர். நாம் முடிவெடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டன. மீண்டும் வந்து என்னன்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

தாமரை சேற்றில் தான் மலரும். தமிழ்நாடு தெளிந்த அழகிய நீரோடை ஆகிவிட்டதோ? என எண்ணி நம்மை சமாதான படுத்தி கொள்ளலாம்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்