வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

புதன், 14 பிப்ரவரி, 2024

உலக அதிசயம் தாஜ் மஹால் !

வணக்கம்,

உலக அதிசயமான தாஜ் மஹால் காதல் சின்னமாகவும், இந்தியாவின் கலை மற்றும் புராதான சின்னமாகவும் விளங்குகிறது. அது உண்மையிலேயே அந்த அளவுக்கு மதிப்பானதா, இல்லை வெறும் கட்டமைக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எனக்குள் ரொம்ப நாளாய் இருந்தது.


அதை நிவர்த்தி செய்து கொள்ள இம்முறை விடுமுறைக்கு புது தில்லி - ஆக்ரா செல்ல கடந்த ஜனவரியில் திட்டமிட்டிருந்தோம். எனக்கு தில்லி ஏற்கனவே சென்றிருந்த அனுபவம் இருந்திருந்த போதிலும் ஆர்வம் என்னவோ குறையவில்லை. ஏற்கனவே டெல்லி போன கதை பற்றி பழைய பேப்பரில் எழுதியுள்ளேன். போனமுறை கனவான தாஜ் மஹால் பயணம், இம்முறை எனது மும்தாஜூடன் சேர்ந்து சென்று நினைவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்😁.


Taj Mahal Visit

தாஜ்மஹால் ஷாஜஹானின் ஆசை மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்டது; முழுக்க முழுக்க பளிங்கு கற்களால், ஆக்ராவில் யமுனை நதி கரையில் கட்டப்பட்டுள்ளது. 1632ல் ஆரம்பிக்கப்பட்டு முழுமையாய் 1658ல் கட்டி முடிக்கப்பட்டது என எல்லாமே நமக்கு தெரிந்த கதை தான். அதை பற்றியெல்லாம் இங்கு விவரிக்க போவதில்லை.

 

தில்லி/புது தில்லி முழுவதும் சுற்றி பார்க்க, மார்க்கெட் ஷாப்பிங் என மூன்று நாட்கள் போதுமானது. பொதுவாய் வட இந்திய பயணத்திற்கு நவம்பர் - மார்ச் காலங்களில் செல்வது சாலச்சிறந்தது. நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தின் பீக்; கடும் குளிர் கொண்டு எல்லாம் விரைத்து போகும். ஜனவரி முதல் பிப்ரவரி பாதிவரை குளிர் (08-20℃) இருக்கும்; பகல், இரவு என இரு வேளையிலும் குளிர் அள்ளும்; காலை பத்து மணிக்கு சூரியன் மேகத்திலிருந்து எட்டிப்பார்க்காவிட்டால் வெறும் பனிமூட்டமாக தான் இருக்கும். பிப்ரவரி - மார்ச் நேரங்களில் லேசாக வியர்வை பூக்கும்; பகல் நேரத்தில் ஃபேன் கண்டிப்பாக போட வேண்டி வரும். ஏப்ரல்-மே மாதமெல்லாம் வெயில் (45-50℃ வரை) மண்டையை பிளக்கும். நம்ம ஊரை விட இரு மடங்கு ஜாஸ்தி!


தாஜ் மஹாலை பார்க்க ஒரு வாரம் முன்னலேயே ஆன்-லைனில் டிக்கெட் போட்டுவிட முடியும். தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள எல்லா புராதான நினைவு சின்னங்களுக்கும் ஒரே இணையதளத்தில் (https://asi.payumoney.com/) டிக்கெட் எடுத்து விட முடியும். நாம் அங்கு போய் சேரும் நேரம் சரியாய் தெரியாலிருக்கும் பட்சத்தில், சில நேரத்தில் ஆன்-லைனில் டிக்கெட் எடுப்பதை விட நேரில் சென்று எடுப்பது உத்தமம்.


தில்லியிலிருந்து ஆக்ரா சாலை வழி பயணம் சுமார் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் தான். ஆனால் காலை வேளையில் பனி மூட்டத்தில் செல்ல நான்கரை முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகும். அதிகாலை ஆறரை மணிக்கு கிளம்பினாலும் 11/12 மணிக்கு தான் ஆக்ரா போய் சேர முடியும். யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயில் வண்டி 60-70 தாண்ட முடியாது. டிராபிக், பனி என பொறுமையாய் தான் போகமுடியும். ஹைவே எங்கும் பார்க்கிங் லைட்டில் கண் சிமிட்டியபடி எல்லா வண்டிகளும் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த எட்டு வழி சாலை வெண்ணெய் போல அருமையாக இருப்பதால் பயணத்தில் பெரிய கஷ்டம் தெரியவில்லை, ஆக்ராவினுள் நுழையும் வரை! ஆக்ரா நகருக்குள் சாலைகள் சற்று சுமாராகவும், கட்டிடங்கள் ஓரளவுக்கு தான் இருந்தது. Typical tier 3 வடஇந்திய நகரம் என பார்த்தவுடனே தெரிந்துவிடும்.    


தாஜ் மஹால் அருகே தனியார் மற்றும் வாடகை கார்கள் (பெட்ரோல்/டீசல்) செல்ல தடை. குறிப்பிட்ட தூரத்திற்கு பின் பேட்டரி ஆட்டோவில் (1 கி .மீ) தான் செல்ல வேண்டும். பாறை கற்களினால் போடப்பட்ட சாலை; மேடுபள்ளத்தில் குலுங்கி குலுங்கி போக வேண்டி வரும். பக்கவாட்டில் உள்ள எலும்புக்கூடான செங்கல் கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், குடிசை வீடுகள், இடிந்த பழைய கட்டிடங்கள், தெருவோரம் ஓடும் சாக்கடைகள், புளிச்..புளிச்.. என துப்பிய பான் கரைகள், என போகும் பாதையே படாவதியாய் இருக்கும். ஆட்டோ டிரைவர் நம்மை நாம் தாஜ் மஹாலுக்கு தான் கூட்டி போகிறாரா?  இல்லை வேறு எங்காவதா போகிறாரா என சந்தேகம் வருமளவுக்கு இருந்தது. அடப்பாவிகளா!! எவ்வளவு பெரிய புராதன, பிரபலமான சுற்றுலா தளம் இது... ஊரையும், போகும் வழியையும் இப்படியா பராமரிப்பது..?? எதிர்கட்சிகாரன் வெள்ளைக்காரன் பார்த்தா நம்மை பத்தி என்ன நினைப்பான்.. ?? 🙄🙄 ஹம்மம்.. இப்பல்ல.. 40/50 வருஷமாகவே இப்படி தான் இருக்கிறது போலும்!


குலுங்கி, குலுக்கி கொண்டே போய் தாஜ் மஹால் நுழைவு வாசல் வரை கூடி கொண்டு போய் விட்டுவிட்டார் ஆட்டோவாலா. அங்குள்ள கடைகளில் (ஆன்-லைன்) டிக்கெட் எடுத்துக்கொண்டோ, அல்லது கவுண்டரில் வரிசையில் நின்று 50 ரூபாய்க்கு என்ட்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டோ கிழக்கு வாசல் (east gate) வழியாய் உள்ளே செல்லலாம். அதே போல மேற்கு வாசல் (west gate) வழியாகவும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைய முடியும். பெரும்பாலும் இரு வாசலிலும் பாட்டரி வண்டிகள், ஆட்டோக்கள், Golf cart வண்டிகள் என வரிசைகட்டி நிற்கும். இங்கு நாம் பார்க்கும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் தான். அனைவரிடமும் ஒரு DSLR காமிராவும், tripodம் கண்டிப்பாக இருக்கும். நம்மூர் மக்களும் கணிசமாக தான் இருந்தனர்.


பின்னர் அங்கிருந்து Darwaza என்று அழைக்கப்படும் மெயின் நுழைவு வாயிலை அடையலாம். செந்நிற சலவை கல்லை கொண்டு கட்டப்பட்டுள்ள வாயிலின் மேலே 22 சிறு சிறு குவிமாடங்கள் (dome) கொண்டுள்ளது அஃது தாஜ்மஹாலை கட்டிமுடிக்க 22 ஆண்டுகளை ஆனதை குறிக்கின்றனது என்று கைடு ஒருவர் சொன்னார்.   


மெயின் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக தாஜ் மஹாலின் அழகை பார்க்க முடிகிறது. வாயிலை அடுத்து உள்ளே வரும் போது முழு பளிங்கு மாளிகையின் பிரமாண்டமும் நம் கண்ணில் ஒளிர்விடுகிறது. வாயில் முதல் தாஜ் மஹால் வரை வானிற குளம் அமைக்கப்பட்டுள்ளது; அதில் பவுண்டைனும் (fountain) அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு புறமும், முன்பும் பின்பும் பெரிய புற்கள், மரங்கள் நடப்பட்டு, பெர்சிய முறைப்படி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார் பாக் (Char Bagh) என்று சொல்லுவார்கள்.


Click play for Taj Mahal photos

தாஜ் மஹாலின் ஒரு பக்கத்தில் மசூதியும், மறுபக்கம் கெஸ்ட் அவுஸ்ம் (assembly hall என்றும் சொல்கின்றனர்) கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியில் ஒவ்வொரு வெள்ளியும் உள்ளூர் பொதுமக்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்; அதனால் வெள்ளியன்று மட்டும் சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலுக்கு செல்ல அனுமதி இல்லை.


தாஜ் மஹால் இந்திய பொருட்களை மட்டுமல்லாமல் ஆசியாவில் பல்வேறு நாட்டிலிருந்து பொருட்களை கொண்டும் கட்டியுள்ளனர். ஆயிரம் யானைகள், 22,000 கட்டிட தொழிலாளர்கள், எம்பிராய்டரி வல்லுநர்கள், என பலர் வேலை செய்துள்ளனர். தாஜ் மஹால் கட்டடத்தின் வெளியே பெர்சிய மொழியில் குரான் எழுத்துக்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஒளி ஊடுருவக்கூடிய அந்த வெள்ளை பளிங்கு ராஜஸ்தானின் மக்ரானா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் பகுதியிலிருந்து (japser) ஜாஸ்பர், சீனாவிலிருந்து ஜேட் மற்றும் கிரிஸ்டல் (jade & crystal), டர்க்கைஸ் (turquoise) திபெத்திலிருந்தும், லேபிஸ் லாசுலி (labis lazulli) ஆப்கானிஸ்தானிலிருந்தும், நீலக்கல் (sapphire) இலங்கையிலிருந்தும், கார்னிலியன் அரேபியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் வெள்ளை பளிங்கு சுவற்றிலும் உள்பகுதியிலும் பதிக்கப்பட்டுள்ளன.🔷💎💠


வெளிப்புற சுவற்றில் பூச்செடிகள் போலவும், பல வண்ண நிறங்களில் அலங்கார மலர் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. 240 அடி உயரமுள்ள தாஜ் மஹாலின் உச்சியில் வெங்காய வடிய குவிமாடத்தில் மேல் முகலாயர்களின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிய மசூதிகளில் உள்ள மினார்கள் (தூண்கள்) போலவே இங்கும் தாஜ் மஹாலை சுற்றி நான்கு மினார்கள் (தூண்கள்) கட்டப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் 180 அடி அளவு உயரம் இருக்கும். இந்த 4 மினார்களும் சற்று சாய்வாகவே கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுமாயின், இந்த மினார்கள் தாஜ் மஹாலின் மேல் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


தாஜ் மஹாலின் mausoleum (அடக்கம் செய்யப்பட்டுள்ள மசூதி) உள்ளே செல்ல இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ள  செல்லலாம். முன்கூட்டியே ஆன்-லைனில் கூட எடுத்து கொண்டும் செல்லலாம். உள்ளே அழுக்காகாமல் 👣இருக்க, நம் செருப்பு/ஷூ மேல் கவர் அணிந்து கொண்டுதான் போக வேண்டும். அதுவும் அங்கேயே தரப்படுகிறது. முசோலியம் உள்ளேயும் முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுவரெங்கும் அழகிய வேலைப்பாடுகளும், உள் குவிமாடத்தில் பிரமாண்ட வண்ணமயமான பூ மற்றும் அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஷாஜகானின் சமாதி சற்று பெரியதாகவும் மற்றும் மும்தாஜின் சமாதி சிறியதாகவும் முசோலியம் நடுவே வீற்றிருக்கிறது. ஆனால் அது போலியான சமாதி என்றும், அவர்களின் உண்மையான சமாதி முசோலியம் கீழே பாதாளத்தில் புதைக்கபட்டுள்ளது. அதற்குள் செல்ல படிக்கட்டுகள் இருக்கிறது; பாதாள அறைக்கு செல்லும் பாதை இரும்பு கேட் போட்டு மறைக்கப்பட்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. 


அப்படியே இரு சமாதிகளை ஒரு முறை சுற்றி வந்து பின்பக்கமாக மசூதியின் பின்பக்கம் வந்து விடலாம். தாஜ் மஹாலின் இரு பக்கவாட்டிலும் சற்றே காலியாய் இருப்பதால் பலர் அங்கு இன்று போட்டோவும் செல்பியும் எடுத்து கொண்டிருந்தனர். தாஜ் மஹாலின் பின்பக்கத்திலிருந்து யமுனை நதியின் அழகை கண்டு ரசிக்கலாம்; ஆனால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. நதி அசுத்தமாகவும் சற்றே வறண்டுபோய் ஆங்காகே மணற்திட்டுகளாய் இருந்தது. நதிக்கரைக்கு அந்த பக்கம் மேதாப் பாக் Mehtab bagh என்னும் ஒரு முகலாய தோட்டம் இருக்கிறது. மேலும் அங்கு இடிந்த, தரைமட்டமான நிலையில் ஒரு கட்டிடதின் அடையளவும் இருக்கிறது. அது ஷாஜஹான் தனக்காக கட்டிக்கொண்ட சமாதி என்றும், அஃது கருமை நிற சலவை கற்களால் கட்ட திட்டமிட்டு, பின்னர் ஷாஜகானின் மகன் அவ்ரங்கசீப் அவர் தந்தையை கைது செய்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது என சொல்கின்றனர். 


பிறகு இன்னொரு விஷயம். தாஜ் மஹால் பார்க்கிங்கில் இறங்கியது முதல் முசோலியம் உள்ளே செல்லும் வரை கைடுகளும் போட்டோஃகிராப்பர்களும் நம்மை மொய்த்து கொண்டே இருப்பார்கள். கைடுகள் சொல்வதில் எது உண்மை, எது சும்மாச்சிக்கும் அடித்து விடுகிறார்கள் என தெரியாமல் நம்மையே தலை சொரிய வைக்கிறார்கள். வெளிநாட்டினருக்கும், விவரம் தெரியாத சில நம்மூர் மக்களுக்கும் கைடுகள் சொல்வது தான் வரலாறு. எங்களுக்கும் ஒரு கைடு வந்து ஆத்து ஆத்து என ஆற்றிகொண்டிருந்தார். நாமே தனியே சென்று தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. போட்டோஃகிராபர்கள் வகைதொகை இல்லாமல் நிமிடம் பேரம் பேசி கொண்டடே பின் தொடர்வார்கள். ஒருவரிடம் வேண்டாம் என்று சொன்னாலும், அடுத்து இன்னொருவர், அதற்கடுத்து இன்னொருவர் என ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் நமக்கு சற்று நச்சரிப்பாக இருந்தது. மேலும் இவ்விடத்தில் அவர்களுக்கு மட்டுமே சில இடங்கள் (viewpointகள்) தெரியும். அங்கிருந்து போட்டோ எடுத்தால் (அவ்வளவாக) கூட்டம் இல்லாமல் நம்மை மட்டுமே வைத்து போட்டோ எடுத்து கொடுப்பார்கள். தாஜ் மஹாலின் முன் புறத்தில் நீச்சல் குளத்துக்கு முன் சிறு மார்பில் பலகை போடப்பட்டிருக்கும் (போட்டோக்காக தான் !) அதற்கென பெரும் போட்டியும் வரிசையும் இருக்கும். அவையெல்லாம் வேண்டாம் என எங்களை நாங்களே எடுத்து கொள்கிறோம் என எடுத்து கொண்டாலும் சரி. (ஸ்மைல் ப்ளீஸ் 📸)

  

தாஜ் மஹாலை முழுக்க சுற்றி பார்த்து, ரசித்து, சிலாகித்து, போட்டோ எடுத்து முடித்து திரும்ப கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாவது தேவைப்படும். அதுவும் கூட்டத்தை பொறுத்தது. கூட்டத்தை தவிர்க்க காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் சென்றுவிடுவது நல்லது என அரசு தொல்லியல் துறை இணையதளத்திலும் மற்றவர்களும் சொல்கின்றனர். ஆனால் 8 மணிக்கு போக வேண்டுமாயின், அதிகாலை நான்கு/ஐந்து மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பியாக வேண்டும். உங்கள் பயணத்தையும் சௌரியதையும் கொண்டு முடிவு செய்யுங்கள்.


தாஜ் மஹாலுக்கு பின் ஆக்ரா கோட்டை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் mehtab bagh சென்று அங்கிருந்து தாஜ் மஹாலின் அழகை panoramic viewவில் கண்டு ரசிக்கலாம். அது மேலே சொன்னதை விட பேரழகான ரம்மியமான காட்சியாக இருக்கும். தோட்டத்தில் பூக்கள் பூத்துள்ள காலத்தில் சென்றிருந்தால், நம் கண்ணுக்குத் மனதுகும் இன்னும் போனஸாக இருக்கும். இரவு அறைக்கு வந்த பின்னும் தாஜ் மஹால் என் கண்களை விட்டு மறையவே இல்லை.  உண்மையிலேயே தாஜ் மஹால் நம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையெனும் பார்த்துவிட வேண்டிய ஒரு இடம் தான். காதல் மாளிகை, காதல் அடையாளம், காதலின் புனிதம் என்பதற்காகெல்லம் இல்லை; அப்படி ஒரு அற்புதமான கலைநய பேரழகை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்பதற்காக தான். நீங்களும் ஒரு உங்கள் மும்தாஜுடன் தாஜ் மஹாலுக்கு சென்று மகிழுங்கள்! 😉🤩



நன்றி!!!

பி. விமல் ராஜ்