ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதிய பாரதத்தின் ஆரம்பம் !

வணக்கம், 

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம். ஒரு வழியாக பழைய பேப்பர் ஆரம்பித்து 25-ஆவது பதிவை போட்டாகிவிட்டது. ஏதோ, எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வந்து, நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டுமென்பது என் ஆசை.

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம். எப்போதும் என் வலைப்பூவில் சமூகம் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என நொட்டாரம் சொல்லியே எழுதி வைப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் நல்ல படியாக பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம். இன்றைய முக்கிய செய்தியை படிக்க கொஞ்சம் சந்தோஷமாகதான்  இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் புதுதில்லியின் முதல்வராகிறார்!

திரைப்படங்களில் வருவது போல போன ஆண்டின் இறுதியில் 'அம் ஆத்மி' கட்சி ஆரம்பித்து, இந்த ஆண்டில் இறுதியில் முதல்வராகிவிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, மக்கள் மனதிலேயே போராட்டம் நடத்தி, அவர்களின் நன்மதிப்பையும் பெற்று விட்டார். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், தேர்தலில் நின்று ஜெயிப்பது புதிதல்ல; பெரிதுமல்ல.

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரும் ,பக்கத்து தெலுங்கு தேசத்தில் என்.டி.ஆரும் இப்படிதான் கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே ஆட்சியை பிடித்தனர். ஆனால், சினிமாவில் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேல் கொ(கோ)டி கட்டி பறந்துவிட்டு, அந்த செல்வாக்கை வைத்தே கோட்டையை கைப்பற்றினார்கள்.

கேஜ்ரிவால் அப்படியல்ல. ஐ.ஐ.டி- யில் பொறியியல் படித்துவிட்டு, இந்திய வருவாய் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் நாட்டின் உயரிய விருதில் ஒன்றான "ராமன் மகசேசே" விருது,  ஏழை மக்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கொண்டு போய் சேர்த்தர்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியை துறந்த பின், விருதையும், பரிசு பணத்தையும் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்திற்கு கொடுத்துதவியவர். ஜன் லோக்பால் சட்டத்தின் அமலுக்காக போராட்டம் நடத்தியவரில் ஒருவர். 2011 அன்னா ஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். முதல்வர் பதவிக்கு இதை விட என்ன தகுதி தேவை ?

ஆனால் இன்றைய நாட்டு நடப்பில், பண பலம், அரசியல் பலம், சினிமா பலம் என எதுவும் இல்லாமல், மக்களின் மக்களாக இருந்த வேட்பாளர்களையே தேர்ந்தேடுத்து, தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டார். நேற்று (28-12-2013) தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவி பிரமாணம் ஏற்க வரும் போது மெட்ரோ ரயிலில் வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். "கவுன்சிலரே 'கான்டசா'-வில் பறக்கும் போது, சி.எம். ஆட்டோவில் வர்றார்.. இந்தியா முன்னேறிடிச்சு போலருக்கே..!!! "  - என்ற முதல்வன் வசனம்  நினைவில் வருகிறது.


முதல்வரான பிறகு பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணையே, அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்; மீறினால் வேலை பறிக்கப்படும் என்பதுதான். பாராட்டுதலுக்குரிய ஆணை தான். மேலும் இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பு போன்ற ஆணைகள் விரைவில் பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார். ஆணை போடப்பட்ட வேகத்தில் செயல்படுத்தினால் தேவலை என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ, இது ஒரு புதிய பாரதத்தின் விடியலுக்கான ஆரம்பமாகதான் தெரிகிறது!

ஒரு சின்ன வருத்தம், இது போன்ற நல்லதொரு  மாற்றம் நம்ம தமிழகத்தில் வரவில்லையே என்று தான். புது தில்லி மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சி நடத்திய விதத்தை கண்டு தாங்காமல் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். கேஜ்ரிவாலாவது கடைசி வரை மற்றவர்களை போல மாறாமல் இருந்தால் சரி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல !

வணக்கம்,

இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஒருவர் எதாவது தவறு செய்தாலோ அல்லது முறையில்லாமல் நமக்கு எதிராய் செய்தாலோ அவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, உறவையோ, சாதியையோ வைத்து கெட்ட வார்த்தையில் திட்டுவது ஒரு சிலரிடம் பழக்கமாகி விட்டது.

நம்முடைய கோபம் உச்சம் அடையும் போது, அதை வெளிக்காட்டி கொள்ள வருபவைதான் இந்த கெட்ட வார்த்தைகள். சிலரின் கோபம்  சாதாரண வார்த்தைகளில் அறிவுகெட்ட நாயே, பேயே, முண்டம், பொறுக்கி என திட்டி விட்டு அடங்கி விடும். ஆனால் சிலரின் கோபம், கொச்சை கொச்சையாய் எதிராளியை திட்டி தீர்த்தால் தான் அடங்கும்.


யாரும் அவர்தம் பெற்றோர் மூலமாகவோ, பள்ளிகூட பாடம் மூலமாகவோ கெட்ட வார்த்தைகளை கற்று கொள்வதில்லை. பதின்பருவ வயது ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் தன் உடன் படிக்கும் சிறார்களோடு/ சிறுமிகளோடு சேர்ந்து கற்று கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு வேறு யாரோ சொல்லி தந்து விடுகின்றனர். பள்ளி செல்லாச் சிறார்களும் அவர்கள் வயதுடையவரிடமிருந்து கற்று கொள்கின்றனர். சுற்றத்தாரும், உடன் இருப்பவரும், ஊடகங்களும் வார்த்தைகளை எப்படி உபயோகிகின்றனர் என்பதை வைத்தே இளைய சமுதாயம் வளர்கிறது.

கல்லூரி மாணவர்கள் என்றால் பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்றும், வார்த்தைக்கு வார்த்தை ..த்தா .. ங்கொம்மா.. என்று முற்சேர்க்கையிட்டு (Prefix) பேசுவார்கள் என்று தான் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்துவிட்டு வரும் நம்மவர்களும், பெரும்பாலும் அப்படி தான் பேசுகின்றனர்.  

திரைப்படங்களில் வரும் வெகுஜன கதாநாயகர்கள் தகாத வார்த்தைகளை திரையில் உபயோகிக்கின்றனர். திரையில் வெளியிடப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு தொலைகாட்சியில் காட்டும் போது அந்த வசனத்தை மட்டும் வாயசைக்க வைத்து விடுகின்றனர். ஒரு சில சினிமா வசன உதாரணகள்...

திஸ் இஸ் மை ஃபக்கிங் கேம் ! - THIS IS MY FUCKING GAME !

ஏய் பாடு ! கம்மினாட்டி! அவனை ஏன்டா அடிச்ச  ?

..த்தா ! ...போடறா அவன....

நீங்கல்லாம் லவ் பண்ணி ,கல்யாணம் செஞ்சு மயிறையா புடுங்க போறீங்க? 

.த்தா .. தேவிடியா பசங்களா.. இதுக்கு தாண்டா நான் சட்டை போடறது... வேலையை பாருங்கடா ...

ஒம்மாள ! உனக்கு எப்படிடா தெரியும் ? 

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் வெற்றிகரமாக வெள்ளி திரையில் வந்தவை. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக இது மாதிரி வசனங்களை திரையில் உலவ விடபடுகின்றன. பத்து / பதினைந்து  வருடங்களுக்கு முன்னால், படங்களில் இது போன்ற வசனங்கள் அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று, இரண்டு என மூன்றாம் தர படங்களில் மட்டுமே வரும்.

இந்த பதிவு வேறு யாரையோ பற்றி சொல்வது போல இருந்தாலும், நம்மில் பலருக்கு இந்த கெட்டப்பழக்கம் உண்டு. கொஞ்சம் வெட்கி தலைகுனியும் செயலாக இருந்தாலும்; மறுக்க முடியாத ஒன்று. 

பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போலவும், மனித உடல் பாகத்தினை குறிக்கும்படி தான் இருக்கிறது. அவன் தாயை, தமக்கையை, மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்க்கபடுகிறது.

தகாத வார்த்தைகளை உபயோகிப்பவன், திட்டு வாங்குபவர் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  நாட்டில் உலவும் பாலியல் வறட்சியின் காரணமாக தான் இது போன்ற கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழுகின்றது என ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

நம் பாரத தாய் திருநாடு பெண்களின் பெருமை பேசும் ஒரு தேசம். நாம் பெண்களின் பெருமையையும், அடிப்படை மனித மரியாதையையும் போற்றி பாதுகாக்காவிட்டலும் பரவில்லை; குறைந்தது மதிக்கவாவது கற்று கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு: இப்பதிவு நண்பர் ராஜ்மோகனின்  "ரேடியோ மோகன்"  வலைப்பூவில் ஏச்சு வார்த்தைகள்   பதிவை  தழுவி எழுதப்பட்டது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே !!!

வணக்கம்,

இன்றைய யுவன்/ யுவதிகளுக்கு இந்நவீன தொழில்நுட்ப உலகத்தில் கணினி, கைப்பேசி, இணையமும் (Computer, Mobile & Internet) இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்ற நிலை வந்துவிட்டது. திருவிளையாடல் படத்தில் " நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! " என்று பாடிவிட்டு நடிகர் திலகம் ஒரு கணம் திரையில் அசையாமல் இருப்பார். அந்த கணம் உலகமே நின்றுவிடுவது போல காண்பிக்கப்படும். அதுபோல தான், இவை மூன்றும் இல்லாவிடில் நம் மக்கள் உலகமே நின்று விடுவது போல உணர்வார்கள்.

ஆதி முதல் அந்தம் வரை காசு, பணம், துட்டு, மனி என்பது போல, இவை அனைத்துக்கும் நாம் அன்றாட வாழ்வில் கணினியும், இணையமும் ஒன்றாகி விட்டது. கிட்ட தட்ட நம்முடைய எல்லா வேலைக்கும் இணையத்தின் (internet) உதவியை நாம் உபயோகபடுத்துகிறோம்.

முன்பெல்லாம் குழந்தை பிறந்ததும், என்ன பெயர் வைக்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தை தான் பார்ப்பார்கள். இப்போதோ, பிறந்த தேதியும், நட்சத்திரமும் வலைதளங்களில் கொடுத்து, இன்டர்நெட்டில் பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள். அலுவலககளில் சில பழைய முக்கிய தகவல்களை இணையத்தில் சேமித்து வைத்து கொண்டு ஒரு நொடி பொழுதில் மீட்டெடுத்து விடுகின்றனர்.

" பிறப்பு / இறப்பு சான்று பெற ,
அரசு அடையாள அட்டை எடுக்க,
பள்ளிகூட /கல்லூரி சேர்க்கைக்கு,
கல்லூரி கட்டணம் செலுத்த,
உறவினர்/ நண்பர்களுடன் அரட்டை அடிக்க,
தகவல் / செய்திகளை பரிமாறிக்கொள்ள,
பிறந்த நாள்/ விசேஷ நாளில் வாழ்த்து அட்டை அனுப்ப,
மின்னஞ்சல் பெற/அனுப்ப,
கைபேசியில் / கணினியில் மென்பொருள் பதிவிறக்கம் செய்து பதிய, 
வெளியூர் செல்ல பயண சீட்டு முன்பதிவு செய்ய,
திரைப்பட சீட்டு முன்பதிவு , 
திரைப்படங்கள்/ பாடல்கள்  பதிவிறக்கம் செய்ய,
விளையாடி களிக்க, 
செய்திகள்/கட்டுரைகள் படிக்க/வெளியட,
சமையல் குறிப்பு/ கதைகள் படிக்க,
சமூக வலைமனைகளில் தகவல் பகிர,
வேலை தேட,
பணி சம்பந்தமான சந்தேககளுக்கு உதவ,
வியாபாரத்தை/ பொருளை விளம்பரம் செய்ய,
பெண் தேட -பேசி/பழக மற்றும் திருமணத்திற்கு,
விடு/மனை/வாகனம் - வாங்க,விற்க,
வீட்டு பொருட்கள் /மற்றவை வாங்க அல்லது  விலை விசாரிக்க,
நல்ல நேரம் பார்க்க,
குழந்தைக்கு/ செல்ல பிராணிக்கு பெயர் வைக்க,
வானிலை அறிக்கை அறிந்து கொள்ள,
புதிதாக செல்லும் இடங்களுக்கு வழி சொல்ல,
புதிய இடம் பற்றி தெரிந்து கொள்ள ,
தெரியாத விஷயங்களை அறிய,
உங்கள் கருத்தை வெளிப்படையாய் பொது இடத்தில் சொல்ல... "
 
இன்னும் பல பல தகவல்களுக்காக நாம் இணையத்தை
உபயோகப்படுத்துகிறோம். சில சமயங்களில், இது தவறான வழியிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது தான் வருத்தமான விஷயம். பெண்களை தவறாக புகைப்படம் / காணொளி எடுத்து இணையத்தில் விடுவது, சமூக வலைதளங்களில் பெண்களின் பெயரில் போலி சுயவிவரம் கொண்டு ஏமாற்றுவது, மற்றவர் வங்கி கணக்குகளை ஏமாற்றி பணம் திருட,
திரைப்படங்களை  சட்டவிரோதமாக வலைதளங்களில் வெளியிட, உணர்ச்சிமிக்க சில வதந்திகளை பரப்ப என இந்த பட்டியலும் நீண்டு கொண்டு தான் போகிறது...

உலகம் முழுக்க நாம் பலரும் இணையத்தில் பயன்படுத்தும் ஒரு தேடல் தளம் கூகிள் (Google). யாகூ (Yahoo), பிங் (Bing)  போன்ற தேடல் தளங்கள் (Search Engine) பல இருந்தாலும், கூகிள் தான் முன்னணியில் நிற்கிறது. கூகிள் ஒரு நாள் வெளிநிறுத்தம் செய்தாலோ, அல்லது முக்கிய கணினி வலை சேவையகம் (Network Server) பழுதடைந்து போனாலோ, அவ்வளவு தான்! பல வணிக/ பெருநிறுவன அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது!!!

Google Search

கூகிள் - இணைய உலகின் ராஜா. இல்லை...இல்லை.... உலக மகா சக்ரவர்த்தி என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கூகுளில் தேடுவது எதுவாயினும், நம்முன் வரிசை படுத்தி காட்டிவிடும்; சில சமயங்களில் தேவையில்லாததையும் சேர்த்து. நேற்று பேஸ்புக்கில்  கூகிள் தேடல் பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். அதை பார்த்த பின்பு தான் இந்த பதிவு எழுத வேண்டும் என தோன்றியது. சொல்ல போனால், அது  கூகுளின் விளம்பரத்திற்காக அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நாம் எவ்வளவு தூரம் உபயோகப்படுத்துகிறோம் என்று இதை பார்த்தாலே புரியும். பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் தாத்தாவின் பால்ய சிநேகிதனை, பேத்தி  கூகிள் மூலம் தேடி அழைத்து வருகிறாள் என்பதே இந்த காணொளி.


இதிலேருந்து நமக்கு தெரிவது என்ன ? இணையம் போல எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் நாம் பயன்படுத்துவதில்தான் உள்ளது. நல்லதையே நினைத்து; நல்லதையே செய்வோம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் ?

வணக்கம்,

நமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.
இன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.

முதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம்  வகுப்பில் 'விடுப்பு கடிதம்' எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில்  இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் "As I'm suffering from fever, I'm unable to attend.. " என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.


தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுகமானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் இருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள்  என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.

முன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன்   கூடிய டிஜிட்டல்  டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது,  ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. "உங்க அப்பா மொபைல் நம்பர்  என்ன?"   என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.

பண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது !

சரி ! அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே "ஓடி விளையாடு பாப்பா " என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே  கலைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

சில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்சி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.

இந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன  சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 26 அக்டோபர், 2013

சமூக குற்றவாளிகள் !!!

வணக்கம்,

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு துயர் செய்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவர் தலைமை ஆசிரியரை வெட்டி கொன்றதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள்தான், செய்தித்தாள்களையும் மற்ற செய்தி ஊடகங்களையும் அலங்கரிக்கின்றன.

சமீப காலமாக நம் நாட்டில் சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள் அதிகமாகியுள்ளார்கள். இது போன்ற குற்றங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று அலசினால், அனைத்து  குற்றங்களுக்கும் சமூகமே முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலோட்டமாக பார்த்தால் தவறு மாணவர்களின் / பிள்ளைகளின் மீது தான் இருக்க கூடும்  என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் நடக்கிற / நடக்கின்ற குற்றங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் சமூக பிரச்சனை ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகமே ஒரு குற்றவாளியாக இருப்பது நமக்கு விளங்கும். சமூதாயம் என்பது வேறு யாரோ அல்ல. நான், நீங்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள்தான். நான் பார்த்து , படித்து தெரிந்து கொண்ட சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் / கல்லூரி மாணவர்கள் ஆசிரியரை குத்தி கொல்வது, படிக்கிற வயதில் மது அருந்துதல், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடுதல் என தினமும் நாம் செய்திகளில் படித்து கொண்டு தான் இருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில், ஒரு தனியார் பள்ளியில், பெண் ஆசிரியையை பள்ளி வளாகத்தில், பாத்ரூமில் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார். ஆசிரியை போடப்பட்ட நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் காரணம் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியையிடம் நகைகளை பிடுங்கும் போது அந்த மாணவி சொன்னது,"எங்க அக்கா நகை இல்லாமல் வாழாவெட்டியா இருக்கா? உனக்கு ஏதுக்குடி நகை? "என அடித்து பிடுங்கி இருக்கிறாள்.

இந்த செய்தி மாநகர் முழுவது பரவி, செய்தி ஊடகங்களுக்கு நல்ல விருந்தானது. ஒன்பதாம் வகுப்பு மாணவி கொள்ளைக்காரியாக மாறியது மாற்றியது, அவளது அக்காவை வாழாவெட்டியாக அனுப்பியவர்கள் தான்.


ஒரு பத்து வயது பள்ளி மாணவனை, ஒரு ஆசிரியர்  " நீ மட்டும் இந்த தடவை பாஸ் ஆகலைனா, உன் தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன்.. ஒரு நாள் முழுக்க கிரௌண்ட் -ல முட்டி போடணும்... " இப்படி மிரட்டினால், கண்டிப்பாக அந்த மாணவன், பயத்தினால் பரீட்சை பேப்பர் கொடுக்கும் நாளன்று வீட்டை விட்டு ஓடி தான் போவான். ஏனென்றால் அந்த பத்து வயது பையனுக்கு வீட்டை விட்டு ஓடுவது என்றால் என்ன என்று தெரியாது. அதன் பிறகு நாம் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் தப்பு வாத்தியாருடையதே! 

இது போன்ற ஒரு காரணமாகதான் தூத்துக்குடி கொலையும் இருக்கும் (என் அனுமானம் தான் .) அதனால் மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான செயல்தான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனாலும் அந்த கொலைக்கு தூண்டுதலாக, பின்னணியில்  மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு சமூக பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் / புகைபிடிகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தப்பு தான். தெருவுக்கு தெரு மது கடைகளும், பெட்டி கடையில் புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளும்  இருக்கும் போது, அதுவும் மதுக்கடையை அரசே ஏற்று நடத்தும் போது அவர்கள் எப்படி குடிக்காமல், புகைக்காமல் இருப்பார்கள் ? பார்க்கும் முக்கால்வாசி திரைப்படங்களில் குடியையும், புகையையும் காட்டும் போது பதின்பருவ வயது கெட்டு போகதான் சொல்லும்.

வசதி படைத்த பெற்றோர் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிகம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளட்டும் என்று படிக்கிற பசங்களுக்கு சில நூறு ரூபாய்களை  கொடுப்பது, பிள்ளைகள் வாழ்க்கையை பெற்றோர்களே கெடுப்பது போல தான்.

அதே போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எதற்கு செல்போன்? அதுவும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தில்.. காசு இருக்கிறதே என பிள்ளைகளுக்கு செலவு செய்வது தவறில்லை. ஆனால் படிக்கிற வயதில் இது தேவையா?? என்று  தான் நாம் பார்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி இருந்தால், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தவறான வழிக்குதான் போவார்கள்.

இன்னொரு கூத்து இது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் கசக்கி, பிழிந்து அவர்களை தேர்வில் அதிக மதிப்பெண் பெற பாடாய் படுத்துகிறார்கள். அவர்களும் படித்துவிட்டு நல்ல மதிப்பெண் வரவில்லை என்றாலோ, தேர்வில் தோல்வி அடைந்தாலோ தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை   என்ற பதிவில் எழுதியிருந்தேன்.

இவர்கள் மட்டுமல்ல. இவர்களை போல வளரும் பதின்பருவ வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல நட்பும், தன்னம்பிக்கை வளர்த்தல், கலந்தாய்வு தான் அவசியம் தேவை.

கலந்தாய்வுக்கு மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்றில்லை. பெற்றோரோ அல்லது ஆசிரியரோ அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்களை போல நடத்த வேண்டும். அந்த வயதில் கிடைக்க வேண்டிய நட்பு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி கிடைக்காவிடில் அவர்கள் தவறான பாதையில் தான் தள்ளபடுவார்கள். 

பெற்றவரும், மற்றவரும் பதின்பருவ மாணவர்களுக்கு அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். அதெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. குழந்தை பருவத்தில், அவர்கள் ஏன் அழுகிறார்கள், ஏன் அடம் பிடிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த இரண்டும்கெட்டான் வயது பிள்ளைகளிடம் ஏற்படும்  மாற்றங்களை அவர்கள் சொன்னாலோழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பதினொன்று முதல் பத்தொன்பது வயது வரை பதின்பருவ வயதில் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமே போதித்தல் போதாது. அவர்களை திட்டியோ, மிரட்டியோ,அல்லது அடித்து  பணிய வைப்பது அவர்கள மேலும் காயப்படுத்தும். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"; "அடிபடாத மாடு படியாது"; "பிள்ளைகளை அடித்து வளர்த்தல் தான் நல்வழி படுத்த முடியும்" என்று பழமொழிகள் இருந்தாலும், அதை நானும் ஒத்து கொள்கிறேன். பிள்ளைகளை திருத்த கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். கண்டிப்பு ஓரளவு தான் இருக்க வேண்டும். மீறினால் ஆபத்து தான். அவர்களை நல்வழிபடுத்த அவ்வபோது உளவியல் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஒரு நல்ல கலந்தாய்வும், பெற்றோர்-பிள்ளைகளின் ஆரோக்கியமான உரையாடல்களும், பிள்ளைகளை மனதளவில் புரிதல் மட்டுமே ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தவறவிட்ட தருணங்கள் !!!

வணக்கம்,

முதல் வேலை. முதல் சம்பாத்தியம். அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்று. எனக்கும் தான். என்னதான் இப்போது நல்ல வேலையில் இருந்தாலும், நமக்கு கிடைத்த முதல் வேலையை யாராலும் மறக்க முடியாது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'ராஜா ராணி ' படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அதில் வந்த கால் சென்டர் (Call Center)  சம்பந்தப்பட்ட காட்சிகளை  பார்க்கும் போது நான் டாடா டோகோமோ கஸ்டமர் கேரில் (TATA DOCOMO Customer Care) வேலை செய்தது நினைவில் வந்தது. பணியின் போது நடந்த சில சுவாரசியமான சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்கிறேன். கொஞ்சம் பெரிய பதிவாகவே இருப்பதால், பொறுமையாக படிக்கவும்.

ஏற்கனவே 2009-2010-லேயே பிலாசபி பிரபாகரன் கால் சென்டர் அனுபவம் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டுவிட்டார். நானும் பிரபாவும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளதால், அவர் அரைத்த மாவையே நானும் அரைக்க வேண்டாம் என எண்ணி, அவர் தவற விட்ட தருணங்களின் தொகுப்பை உங்களிடம் பதியவிருக்கிறேன்.

சரி, இப்போது கால் சென்டருக்குள் வருவோம்...

என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து விட்டு, Allsec Technologies-ல்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக (Customer  Care Executive) வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் நாட்டில் டாடா டோகோமோ வாடிக்கையாளர்கள் 121 (டோல் ப்ரீ-விட்டு விட்டால்  FE ) எண்ணை டோகோமோ சேவைக்காக அழைத்தால், நாங்கள் தான் எடுப்போம். என்னை போலவே ஏறக்குறைய 250 முதல் 400 ஆபிசர்கள் சேவை அழைப்பில் வேலை செய்வார்கள்.


Call Center- கோப்பு படம்
பெரும்பாலும் கால் சென்டரில் வேலை செய்பவரென்றால் 20 முதல் 30 ஆயிரங்களில் சம்பளம் வாங்குவார் என்றும், காதில் ஹெட் போன் 
(head phone) வைத்து கொண்டு வெள்ளைக்கார வாடிக்கையாளரிடம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு, விடுமுறை நாட்களில் பப், பார், என கூத்தாடுபவர்கள் என்றும், இரவு நேர வேலை மட்டுமே பார்பவர்கள் என்றும்   நினைக்கும் சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம்.

மேற்கண்டவை எல்லாம் சில சர்வதேச அழைப்பை
(International Calls) எடுக்கும்/ பேசும்
சேவை மைய அதிகாரிக்கு தான் பொருந்தும். உள்ளூர் அழைப்பில் (Domestic Calls) பேசும் அதிகாரிக்கு சுத்தமாக சேராது.

மேலும் என்னை போன்ற டொமெஸ்டிக் கஸ்டமர் கேரில் வேலை செய்யும்/ செய்த
சேவை மைய அதிகாரிகள், முதல் மாத சம்பளமே ரூ. 6000/ தான் வாங்குவார்கள். முக்கால்வாசி பேர் வெளியூரில் இருந்து வந்து வேலை செய்பவர்கள். இங்கு பணிபுரியும் மார்டன் பெண்கள் சிலர் கார்மென்ட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்களை போல புடவையும்/ சுடிதாரும் மட்டுமே அணிந்து வருவார்கள்.

கம்பெனியில் சேர்ந்தவுடன் ட்ரைனிங்-ல் (Training) முதலில் சொல்லி தருவது, "இங்கு யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம்; பெயர் சொல்லி அழைத்தாலே போதும்" என்பதுதான். 20 நாள் ட்ரைனிங் நன்றாக முடிந்து, எங்களது சேவை பணியை ஆரம்பித்தோம். நானும் சராசரியாக 16 மாதங்களில் 1 லட்சம் கால்களுக்கு மேல் எடுத்துருப்பேன். "இவனுங்களுக்கு எங்கேருந்து தான் வருமோ இந்த மாதிரி சந்தேகமெல்லாம்???? " என்றும் என்னும் அளவுக்கு கடுப்பகிவிடும். சில நேரங்களில் கஸ்டமர் தெரிந்து பேசுகிறானா? இல்லை புரியாமல் உளறுகிறானா? அல்லது நாம் தான் தப்பாக  சொல்கிறோமா? என்று கூட  நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


அதில் சில விஷமிகள் வேண்டுமென்றே போன் செய்து கலாய்த்து விட்டு போவார்கள். இன்னும் சிலர் அவர்கள் குறை தீராததால் புரிந்தும்
புரியாமலும் கன்னா- பின்னா என  கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போவர்கள். கஸ்டமர் கேர் வரும் கால்களில் 30% கால்கள் இது போன்ற கால்கள் மட்டுமே!

அதுவும் குறிப்பாக சனி,ஞாயிறுகளிலும், டிசம்பர் 31 இரவிலும், முழு நாள் மின் வெட்டின் போதும், பண்டிகை தேதிகளிலும், கால்கள் எக்கச்சக்கமாக வரும். டிசம்பர் 31-ல் முழு இரவும் விடிய விடிய வாடிக்கையாளரிடம் பேசி சந்தேகத்தை தீர்த்து வைத்ததுண்டு.


"என் அக்கௌன்ட்-ல் (account) 0.55 பைசாவை பிடித்து விட்டர்கள் ! இப்போதே கொடுக்க வேண்டும்" என்று முக்கால் மணிநேரமாக திட்டி அடம் பிடித்து, பின்னர் ஹோல்ட்-லேயே (Hold) வைக்கப்பட்டு காணாமல் போன வாடிக்கையாளர்களும் உண்டு. (முடிந்தால் கொடுக்க மாட்டோமா??) 


புதிதாக வேலை செய்பவர்களுக்கு இந்த ஹோல்ட் மற்றும் ஆக்ஸ் (Aux  - Stopping calls)  இல்லையென்றால் அவ்வளவு தான்.. வாடிக்கையாளரின் கேட்கும் கேள்விகள், அருகில் இருபவரிடம் சந்தேகங்களை  நிவர்த்தி செய்தல், சற்று நேரம் ஆசுவாச படுத்தி கொள்ளுதல் என பல வசதிகள் உண்டு.  

கால் சென்டரில் வேலை செய்த போது (எங்களுக்கும்) எனக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நடந்த சில நகைச்சுவை உரையாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


****************************உரையாடல் 1*************************************

வாடிக்கையாளர்: சார்! நான் மதுரை மாவட்டம், தல்லாகுளத்திலிருந்து பேசுறேன்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன தகவல் வேணும்?


வாடிக்கையாளர்: பஸ் ஸ்டாப்லிருந்து வீட்டுக்கு சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது, டயர் பன்சர் ஆயிடிச்சி..நீங்க பன்சர்  போடா இங்க ஆள் அனுப்ப முடியுமா?????  

  
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்.. அது  மாதிரி எல்லம் எங்களால செய்ய முடியாது..  டாடா டோகோமோ பற்றி கேளுங்க சார்.


வாடிக்கையாளர்: அதெல்லாம்  வேண்டாம்...பன்சர் போட ஆள் அனுப்பு. இல்லாட்டி நீ வந்து பன்சர் போடு...


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???!?!? 

**********************************உரையாடல் 2*******************************

வாடிக்கையாளர்:சார்.. நான் மலர்விழி பேசுறேன். என் நம்பருக்கு PIN (PUK) நம்பர் வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே மேடம். கண்டிப்பாக சொல்றேன். உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..

வாடிக்கையாளர்: 9600...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: உங்களுக்கு எந்த நம்பருக்கு (PUK) நம்பர்  வேணுமோ அந்த நம்பரை  சொல்லுங்க மேடம்..


வாடிக்கையாளர்: இந்த நம்பர் தான்.. 9600453..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இது டோகோமோ நம்பர் இல்லையே..

வாடிக்கையாளர்: ஆமாம்..என் Airtel  நம்பருக்கு தான் (PUK) நம்பர் வேணும்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: அதுக்கு ஏன் எங்களுக்கு கால் பண்ணீங்க  மேடம் ???

வாடிக்கையாளர்: என் Airtel நம்பருக்கு தான் PUK நம்பர் வேண்டும்.. அது தான் லாக் ஆயிடிச்சி.. அதுனாலதான் டோகோமோ  நம்பரிலிருந்து 121 கால் பண்ணேன்..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????    


**********************************உரையாடல் 3*******************************

வாடிக்கையாளர்: சார் .. உங்க டோகோமோ SIM ல டைம் கரெக்டா காட்ட மாட்டேன்கிது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ஓகே சார் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்... உங்க பிரச்சனை என்னனு சொல்லுங்க சார்..

வாடிக்கையாளர்: உங்க டோகோமோ சிம்மை என் செல்போனில் போட்டால் மொபைலில் டைம் தப்பா காட்டுது..

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்..அது மாதிரியெல்லாம் இருக்காது...உங்க மொபைல் ப்ரோப்ளமாக இருக்கலாம்...

வாடிக்கையாளர்: யோவ்...எனக்கு தெரியாதா... உங்க சிம் போட்டால் தான் பிரச்சனை...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ?????


**********************************உரையாடல் 4*******************************
 
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: வணக்கம் உங்கள் சேவைக்காக விமல்!!!

வாடிக்கையாளர்: சார்.. மேரா நாம் சஞ்ஜெய் பிஸ்வாஸ்.. மேரா மொபைல் மே காலர் ட்யூன் கேள்...     

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சாரி சார்..எனக்கு ஹிந்தி தெரியாது...முஜே ஹிந்தி நெய் மாலும்.. ஆப் 121 மே கால் கரோ; அவுர்  3 தபாயா ;  அவுர்  2 தபாயா ; Thank You சார்..

(தடம் மாறி வந்த ஹிந்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யோகமாக உபயோகபடுத்தும்  உரை(script) )

வாடிக்கையாளர்: நெய் சார்..என்னக்கு தமில் தெரியும்..  நீங்கோ பேசுஙொ சாப்..  

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: ???.. (கடுப்பாகி ) சாரி சார்.. உங்க side la proper response இல்லாததால் இந்த கால் disconnect செய்யபடுகிறது.. டாடா  டோகோமோ அழைத்ததற்கு நன்றி..


வாடிக்கையாளர்: சார்.. சார்.. சார்.. 

**********************************உரையாடல் 5*******************************
  
வாடிக்கையாளர்: சார் !! என் account-ல amount குறைஞ்சு போச்சு...

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: மன்னிக்கணும் சார்...கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...  நான் செக் பண்ணி சொல்றேன்... ...நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட்-ல browsing பண்ணியிருக்கீங்க.. அதான் இருபது ரூபாய் எடுத்துட்டாங்க..

வாடிக்கையாளர்: நான் use பண்றது நோக்கியா 1200. அதில எப்படி சார்
browsing???

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: இல்லை சார். நான் செக் பண்ணதுல நீங்க இன்டர்நெட் -ல browsing பண்ணியிருக்கீங்க -ன்னு தான் காட்டுது..

வாடிக்கையாளர்: நோக்கியா 1200-ல் எப்படி சார் முடியும்????


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சிம் வேற போன்-ல கூட போட்டு browse பண்ணலாம் சார்..

வாடிக்கையாளர்: என் கிட்ட வேற போன் கிடையாது  சார்...போன்- சுத்தி டேப் ஒட்டி இருக்கு.. இதுல போய் எப்படிங்க  முடியம்..

(20 நிமிட உரையாடலுக்கு பின் )


வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி: சார் நான் செக் பண்ணி பார்த்ததுல நீங்க SAMSUNG GT-S3850-ல browse  பண்ணதா காட்டுது...

வாடிக்கையாளர்: சரி..SAMSUNG CORBY ல
browse பண்ணேன்னு சொல்றீங்களா??? ஓகே... (கால் கட்டாகி விட்டது ).....

*****************************************************************
 
 
இந்த மாதிரி கஸ்டமர்கள் இருந்தால் எல்லா அதிகாரிகளும் "ராஜா ராணி" படத்தில் வரும் ஜெய் போல அழ வேண்டியது தான்... படிக்கும் போது சில உரையாடல்கள் மொக்கையாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிரிப்பும், எரிச்சலும் தான் நமக்கு வரும்.


உடன் வேலை செய்பவர்கள் / நண்பர்கள் - ஆறு மாதத்தில் பல தர பட்ட மனிதர்களை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஹிந்தி பேசும் வாடிக்கையாளர்களிடம் பேசும்  ஹிந்தி அதிகாரிகள், மாறுப்பட்ட டீம் லீடர்கள்/ முறுக்கி கொள்ளும் மேனேஜர்கள், எல்லாம் தெரிந்தது போல காட்டி கொள்ளும் சில சீனியர் அதிகாரிகள் என பலதரப்பட்ட மக்கள்  உண்டு. அவ்வப்போது குவாலிட்டி அனலிஸ்ட்களின் (QA) அலும்பல்கள் வேறு. 

ஆனால் இந்த மாதம் நமக்கு அருகில் உட்கார்ந்து அழைப்பு எடுத்தவன் (வேலை செய்தவன்), அடுத்த மாதம் இருக்க மாட்டான். சம்பளம் வாங்கியவுடன் சொல்லாமல் ஓடிவிடும் பழக்கம் சில கால் சென்டர்களில் இன்னும் உள்ளது.

அல்செக்-ல் பல நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்த போதும், சரியான தொடர்பு வைத்து கொள்ளாததால் ஒரு சிலர் தவிர யாரும் இப்போது தொடர்பில் இல்லை. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது முகநூலில் நண்பர்களாக  இருக்கின்றனர்.    

இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்யும் போது, உங்களிடம் பேசும் கஸ்டமர் கேர் ஆபீசர்களிடம், உங்கள் வீண் ,வெட்டி ஜம்பத்தை காட்ட வேண்டாம். உங்கள் அக்கௌன்ட்-ல் பணம் குறைவது, புது சர்வீஸ்கள் ஆக்டிவேட் செய்வது, இவை பற்றியெல்லாம் சத்தியமாக அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இருப்பதை பார்த்து, படித்து சொல்பவர்தான் தான் அவர்கள். உங்கள் பணம் / சேவை வேண்டும்/ வேண்டாம் என்றாலோ நீங்கள் அவர்களிடம் கடிந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக பேசியோ/ மின்னஞ்சல் செய்தோ சரி செய்து கொள்ளலாம் .  

இப்போதும் கூட இதற்கு முன்னால் அல்செக்-ல் நான் இப்படி இருந்தேன்; அப்படி இருந்தேன்; என கூறி சக நண்பர்களிடம் பெருமைபடுவதும் உண்டு. சம்பளம் குறைவாக இருந்தாலும், நல்ல சுற்றுவட்டாரமும், நண்பர்களும் இருந்தால் யாரும் வேலையை விட மாட்டார்கள். சூழ்நிலை காரணமாக, அந்த வேலையைவிட்டு விட்டு, தற்போதுள்ள வேலைக்கு தாவி விட்டேன். மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்றும் அந்த கால் சென்டர் வேலை, தவறவிட்ட தருணங்களாகவே என் மனதில் இருக்கின்றன.   



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 26 செப்டம்பர், 2013

ஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் ???

வணக்கம்,

நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை பற்றி தான் இருக்கும்.

ஒரு வார காலமாக தினசரி நாளிதழ் முதல், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வரை, அனைவராலும் விவாதிக்கப்படுவது , "ஏன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர்  ஆகவேண்டும் ?". சாதாரண பாமரன் முதல் மெத்த படித்தவன் வரை, டீக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை எல்லோராலும் பேசபடுவது இதைப் பற்றிதான். பத்திரிக்கைகளிலும், சமூக வலைமனைகளிலும் மோடியை பற்றி உயர்வாகவும், குஜராத்தில் அவர் நிகழ்த்திய 10 சாதனைகளும் பற்றி தான் விளம்பரம் செய்கின்றனர்.  

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மாபெரும் சாதனையை கண்டு இந்திய மக்கள் அனைவரும் புல்லரித்து, நொந்து நூலாய் போய் உள்ளனர். மேலும் நொந்து போக வேண்டாம் என்று தான், இப்போது மோடியை தலை மீது வைத்து கொண்டு ஆடுகின்றனர்.

முதலில் நரேந்திர மோடியை ஏன் பிரதமராக்க வேண்டும்? என்பதை பார்ப்போம்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ஆட்சி செய்து, மூன்றாம் முறை ஆண்டு மாநிலத்தை செம்மையாக ஆண்டு கொண்டிருக்கிறார்.


2001-ல் குஜராத் தொழில் முறையில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று சிறந்த தொழில்முனை நகரமாக மாறியுள்ளது. பல வெளிநாட்டு பெருநிறுவனங்களை குஜராத்தில் ஆரம்பிக்க வைத்தவர் மோடி. அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு, மாநிலத்தின் வணிக லாபம், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலியவற்றில் பெருமளவு முன்னேற்றம் காட்டினார். வறட்சியில் வாடி இருந்த குஜராத் மாநில விவசாயத்தையும் மக்களையும் முன்னேற்ற பாதையில் வழி நடக்க செய்தவர். நீர்/விவசாய மேலாண்மை, தோட்டக்கலை, மின்சார உற்பத்தி என அனைத்து துறையிலும் குஜராத்தை முன்னேற்றம் காண செய்தவர்.   

2011-ல் இந்தியாவின் முதன்மை வளர்ந்த மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. 1960 முதல் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் மிகை மாநிலம் என பெயர் பெற்றது.(கவனிக்க ! நாம் ஊரு தாத்தாவும், அம்மாவும் !!) இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.

2012-ல் 'குடியுரிமை பாதுகாப்புக்கான' சிறந்த மாநில விருது குஜராத்திற்கு ஐ.பி.என். 7 டைமெண்ட்ஸ்  வழங்கியது. மேலும் உலக வங்கியில் கடனாளியாக இருந்த அம்மாநிலம், இன்று 1 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது என ஓர் அறிக்கை சொல்கிறது (எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை ; உபயம் - ஃபேஸ் புக்).

இவை அனைத்தும் நரேந்திர மோடியின் கடந்த 10/12 ஆண்டு சாதனைகள் தான். ஆனால் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது தான் அவருடைய அரசியல் சாசனத்தில் உள்ள பெரும் கரும்புள்ளி. குஜராத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக 2002-ல் 2500 மேலானோர் இறந்தனர். இஸ்லாமியர்களை உயிருடன் எரித்தனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர். அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர், இதே சாதனை நாயகன் நரேந்திர மோடி தான். எல்லா தரப்பிலிருந்தும் மோடி தான் இந்த கலவரங்களை தூண்டி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.  மேலும், அதே ஆண்டில் 'பெஸ்ட் பேக்கரி' கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உட்பட, 14 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். (இதே பெஸ்ட் பேக்கரி சம்பவம், உன்னை போல் ஒருவன் படத்தில் தீவிரவாதி சொல்வது போல உலக நாயகன் காட்டியிருப்பார்.)  இந்த கலவரங்களுகெல்லாம் காரணம், அப்போதைய பா.ஜா.க. வும், ராஷ்திரிய ஸ்வயம்சேவக் சங்கமும்- RSS (இந்துத்துவம் பற்றி வெறிகொண்டு பேசும் ஒரு கட்சி சங்கம்).

1992-ல் பாபர் மசூதி இடித்ததை யாராலும் மறக்க முடியாது. பாரதத்தின் வரலாற்று சின்னமான பாபர் மசூதியை (ராமஜென்மபூமி ) ராமர் பிறந்த இடம் என்று சொல்லி இடித்த பெருமை, பா.ஜ.க தலைவர் அத்வானியையே சாரும். அதனால் இந்து முஸ்லிம்களுக்கிடையே பெரும் கலவரம் நடந்து, அதில் கிட்டதட்ட 2000 -திற்கும் மேலானோர் இறந்தனர். டிசம்பர் 6 , பாபர் மசூதி இடித்த தினம் என்று முஸ்லிம்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, அந்நாளை இந்திய முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி புகழை சேர்த்தது அன்றைய பா.ஜ.க. அரசு தான்.

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது, நாட்டையே கூறு போட்டு விற்பது, கொள்ளையடிப்பது, கொலைகள் செய்வது இவையெல்லாம் சர்வசாதரணமாக இந்தியாவில் நடப்பது தான் என்று வைத்து கொண்டாலும், வகுப்பு வாத கலவரமும், மத கலவரங்களும் அடிக்கடி நடக்கும் மாநிலங்களில் மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய பூமியும் ஒன்று தான். இவைகள் எல்லாவற்றையும் பூசி முழுகதான் ,தேர்தல் விளம்பரங்களில்  "குஜராத்தின் முன்னேற்றம்" பற்றிய ஆவண படங்கள், காணொளி காட்சிகள், சுவரொட்டிகள் என எல்லாமும்.

இவராவது நல்லது செய்வார் என்று மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, மோடிக்கு பதில் நேரு மாமாவின் பேரனே நாட்டை ஆளலாம் போல என்ற முடிவுக்கு வராமல் இருந்தால் போதும்!!! இப்போது சொல்லுங்கள், நாம் ஏன் மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் ??? 


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இந்திய சினிமா 100 !

வணக்கம்,

1913 ஆம் ஆண்டு , தாதா சாகேப் பால்கே என்பவரால் "ராஜா ஹரிச்சந்திரா" என்ற முதல் முழு நீள திரைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முதல் பல முன்னேற்றங்களுக்கு பிறகு இந்திய சினிமா இப்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது அரசாங்கமும் பல கலை நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. சில திரையரங்குகளில் மக்களின் மனம் கவர்ந்த, நீண்ட நாட்களுக்கு ஓடிய திரைப்படங்கள் திரையிட பட உள்ளன.

இந்திய திரைப்படங்களின் நூறாவது ஆண்டை கொண்டாடும் இந்நேரத்தில், நாம்  எல்லா மொழிகளிலும் உள்ள படங்களின்  சிறப்பையும், கதையையும்  ரசிக்க/ அனுபவிக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் "கூகிள்" தளத்திற்கு சென்று "Indian Cinema 100" என்று தேடி பாருங்கள். உங்களுக்கே புரியும். அந்த பட்டியலில் உள்ள இணையதளங்களில் உலக தரம் வாய்ந்த இந்திய படங்கள்/ எல்லா தரப்பிலும் பிடித்தமான இந்திய படங்கள் 100 என பட்டியலிட்டு கொடுத்திருப்பார்கள். அந்த பட்டியலில் முக்கால்வாசி படங்கள், ஹிந்தி படங்களே. ஏதோ இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நல்ல படங்களே வராத மாதிரி, சொல்லி வைத்தது போல எல்லா வட இந்திய தளத்திலும், இந்தி படங்களே முன் நிறுத்தபட்டு காட்டப்பட்டுள்ளன.

நான் பார்த்த பத்து இணையதளங்களிலும் ஹிந்தி படங்களே முன் நிறுத்தபட்டிருந்தன. சிறந்த 100 படங்களில் முக்காலாசி ஹிந்தி தான்,  மீதம் உள்ள மிச்ச சொச்சம் தான் மலையாளம், தமிழ், அசாம், பெங்காலி, மராத்தி, ஒரியா என மற்ற மொழி திரைப்படங்கள்.

ஹிந்தி இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழி தான். அதிகமாக பேசபடுவதும் ஹிந்தி தான். பாலிவூட்டில் பல உலக தரமான படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் போது எல்லா மொழி படங்களையும் தான் ஒன்றாக தான் நாம் ரசிக்க / எடை போட வேண்டும்.


இன்னும் சில இணையதளங்களில் இந்திய நூற்றாண்டு சினிமாவின் சிறந்த கதாநாயகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திலிப் குமார்,
ராஜ் கபூர், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, அமிதாப் பச்சன் ஆகியோரும், கதாநாயகிகளில் நர்கிஸ் டட், மது பாலா, வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி ஆகியோர் பெயரும் படமும் இருந்தது.

அந்த படங்களின் பட்டியலில் 'செவாலியே ' சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பெயர்கள் இல்லை. இந்தியாவில் முதன் முதலில் சர்வதேச அளவில் சிறந்த கதாநாயகன் விருதை "ஆப்ரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் "  வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக வாங்கியவர். இந்திய சினிமாவின் பெருமையை பற்றி பேசும் போது எப்படி நடிகர் திலகத்தின் பெயரை சொல்லாமல்  இருக்க முடியும்? சினிமாவை  உலக தர வரசையில் கொண்டு சென்றவர் நமது உலக நாயகன். அவரது  படங்கள் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த் - சொல்லவே வேண்டாம். அவர் நடித்த "முத்து " படம் ஜப்பானில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியுள்ளது. ஆசியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இரண்டாம்  நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் பெயரை விட்டு விட்டு எப்படி இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்?

மேலும் மலையாளத்தில் பிரேம் நசிர், செம்மீன் மது, முன்று முறை தேசிய விருது வாங்கிய மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, மோகன் லால்,  தெலுங்கில் என். டி. ராமாராவ், ரங்காராவ் , கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரை விட்டு எப்படி இவர்கள் பட்டியலிட்டார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் முதல் 3D படம்மான "மை டியர் குட்டி சாத்தான் "" (மலையாளம்) படத்தை எப்படி மறந்தனர் என புரியவில்லை. எனக்கு தான் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாது என்றால், வலைமனைகளில் பட்டியலிட்டவர்களுக்கும் ஹிந்தி தவிர வேற எந்த மொழியும் தெரியாது போல!

நூறு வருடங்களில் வெளி வந்த சிறந்த படங்களை மொழி வாரியாக வரிசை படுத்த முடியாது என்பது எனக்கும் தெரியும். அது கடினமும் கூட. ஆனால் படங்களை வரிசைபடுத்தும் போது மொழி வாரியிலான பாகுபாடின்றி தரம் பிரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இது என் விருப்பம் மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் எல்லாருடைய விருப்பமும் இதுவாக தான் இருக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழ்நாடு இரண்டாக பிரிந்தால் ?!?!

வணக்கம்,

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், தொலைகாட்சிகளிலும் தொடர்ந்து பேசபடுவது தனி தெலுங்கானாவைப்பற்றி தான். 1968-ல் மாநில மறுசீரமைப்பு சட்டம் காரணமாக ஐதராபாத் மாநிலத்தில் தெலுங்கு பேசும் பகுதிகள் ஆந்திர மாநிலமாக சேர்க்கப்பட்டது. அப்போது முதலே தனி தெலுங்கானா  கோரிக்கை எழுப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு, இப்போது தான் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க இந்திய பாராளுமன்றம் ஒப்புதல் (மட்டுமே !)அளித்துள்ளது. ஐதராபாத் நகரம் இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, கூர்காலாந்து (மேற்கு வங்காளம்), விதர்பா (மகாராஷ்டிரம்) பகுதிகளை பிரிக்க கோரி வருகின்றனர். இதை பார்த்து, படித்த பின், இதே போல் நமது தமிழ்நாடும் இரு மாநிலங்களாக பிரிந்தால் என்ன ஆகும் என எண்ணி பார்த்தேன். அதற்கு யாரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என எனக்கு தெரியும். அதனால் மக்கள் யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே, பல முறை தனி தமிழ்நாடு கோரிக்கைகள் எழுந்த போதிலும், அவ்வப்போதே அந்த சத்தம் அமுங்கி போய்விட்டது. அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒருவேளை பிரிந்துவிட்டால் ?!?! 

தமிழ்நாடு இரண்டாக பிரிய வேண்டும் என்ற எண்ணம் நிச்சியமாக எனக்கு இல்லை. இருந்தாலும் இது முழுவதும் என்னுடைய சின்ன கற்பனைதான்.

கடந்த 50 ஆண்டுகளாக தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரி பல போராட்டங்களை தொடர்ந்து, இப்போது தான் அதை தனி மாநிலமாக பிரிக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் தமிழ்நாட்டை, இன்று குரலெழுப்பி நாளை இரண்டாக பிரித்திட முடியாது.

சரி, தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும். ஏன், எதற்கு ,எப்படி என்ற காரணமெல்லாம் எழும் அல்லவா?

தென் இந்தியா, வட  இந்தியா என இரண்டாக பிரித்து கூறுவது போல தமிழ் நாட்டில், வட தமிழகம், தென் தமிழகம் என பிரித்து சொல்வதுண்டு. வடக்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலைஆகிய மாவட்டங்களும், ஏனைய மாவட்டங்கள் தென்  தமிழகம் என்றும் அழைக்கபடுகின்றன.

இரண்டு தனி மாநிலமாக பிரிக்கும் போது சரிசமமாக பிரிக்க வேண்டும் என்பதால், கிழே உள்ள படத்தில் இருப்பது போல பிரிக்க வேண்டும் (இதுவும் என் கணிப்புதான் ). வடக்கு பகுதி,  'வட தமிழகம் '  என்று அழைக்கப்படலாம். எப்போதும் போல தலைநகரமாக சென்னை செயல்படும்.

தென்பகுதி 'பாண்டிய நாடு'  (மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம்,  தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளை  பாண்டியர்கள் ஆண்டுள்ளதால்!) என்று பெயரிடபடலாம்.

Tamil nadu-Seperation

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகை, ஆகிய பகுதிகள் சோழர்களால் ஆளப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு பாண்டிய நாடு என்று  பெயரிட ஒப்பு கொள்ள மாட்டார்கள். பல சண்டை சச்சரவுகளுக்கு பிறகு, தமிழகத்தின் தென் பகுதி 'தென்னகம்' என்று பெயரிடப்படலாம். தலைநகரம் திருச்சிராப்பள்ளியா அல்லது மதுரையா என கலந்துரையாடி, கடைசியில் மதுரை தென்னகத்தின்  தலைநகரமாக செயல்படும்.

பிறகு வட தமிழகத்தின் சின்னமாக சென்னை சென்ட்ரல்  நிலையமோ அல்லது செயின்ட் ஜார்ஜ் கோட்டையோ இருக்கும். தென்னகத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அரசு சின்னமாக இருக்கும்.

மாநிலத்தை இரண்டாக பிரித்தாகிவிட்டது. தனி மாநில கோரிக்கை எழுமானால், அதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கும் ?

ஏற்கனவே பல பிரச்சனைகள் தமிழ்நாட்டில் உள்ளது. வாரிசு அரசியல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து, ஊழல் குற்றசாட்டுகள், சாதி /சமய சண்டைகள், விலைவாசி ஏற்றம், குடிநீர் தட்டுப்பாடு, ஈழ பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, என பிரச்சனைகளின் பட்டியல்களுக்கு குறைவில்லை.

முதல் காரணம், நதிநீர் பிரச்சனைத்தான்.  ஒவ்வொரு முறையும், கோடைகாலத்திலும், பாசன காலத்திலும், காவிரியையும்,கிருஷ்ணா நதியும்  கர்நாடக மாநிலம் தர மறுப்பது, கோடையில் வெயில் அடித்து, ஐப்பசியில்  மழை பெய்வது போல வாடிக்கையான ஒன்று. பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் போது, அரசு ஊழியர்கள்,  நடிக /நடிகைகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் தனித்தனியே போராட்டம்  என்ற பேரில் ஒன்றை நடத்தி அவர்களுடைய எதிர்ப்பை காட்டுவார்கள். பெரும்பாலும், இதனால் எந்த ஒரு பயனும் இருக்காது. இதனேயே சாக்காக வைத்து தமிழ்நாட்டை தனியாக பிரிக்க சொல்வார்கள். 

தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் ஆதரவு வேண்டும். அப்படி இருந்தால் தான் மாநிலத்தில் ஆட்சி செம்மையாக இருக்கும். நடுவண் அரசு அனுமதி தர வேண்டிய புதிய ரயில்கள், மின் பாதை அமைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்/டீசல் , தொலைத்தொடர்ப்பு, என பல உள்ளது. இவை அனைத்திலும் மாநிலமும் மத்திய அரசும் ஒன்று சேராவிட்டால், பொதுமக்களுக்கு தான் பிரச்சனை. ஒரு சிலர், மத்திய அரசின் ஆதரவை பெறுவதற்காக கூட தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க சொல்வார்கள்.

அடுத்த காரணம், இருக்கவே இருக்கிறது சாதியம். சாதி போர்வையில் இருக்கும் சில அரசியல் கட்சிகள், என் இன மக்களுக்கு ஒரு திட்டமும் பயனளிக்கவில்லை, என் சாதிக்காரன் தான் நாட்டை ஆள வேண்டும், தென்பகுதியில் உள்ள என் மக்களுக்கு நீதியும் நியாயமும் வேண்டும். தனியாக பிரித்து கொண்டு நாங்களே எங்கள் மக்களை பார்த்து கொள்கிறோம். அதனால் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பலாம்.

தமிழ்நாட்டில் இரு பெரும் அரசியல் கட்சிகளின், இரு பெரும் தலை(வி)களின் காலத்துக்கு பின்,  அரியணையில் யார் அமர்வது  என்ற போராட்டத்தில்  பல பிரச்சனைகள் வரும்.  அந்த சண்டையில் தமிழ்நாட்டின் தென் மண்டலம் எனக்கு, வடக்கு மண்டலம்  உனக்கு என அடித்து கொண்டு கட்சி இரண்டாக பிரிப்பார்கள். இதனால் சில வன்முறைகளுக்கு பிறகு அவர்களின் ஆதாயத்துக்காக கூட தமிழ் நாடு தனியாக பிரிக்கபடலாம்.

எல்லாவற்றையும் விட பெரியது, ஈழ பிரச்சனை. தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லபடுவதைவும், இலங்கையில் போரில் பாதிக்க பட்டவர்களுக்கு மறுவாழ்வு  தரவும் எந்த அரசும் முயற்சி எடுக்க..... (நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் ). நிற்க. அதனால் சில தமிழ் அமைப்புகளுக்கும், சில அரசியல் கட்சிகளும் நாங்களே மத்திய அரசுடனும், இலங்கை அரசுடனும் பேசி தீர்த்து கொள்கிறோம் எனக் கூறி தமிழ் நாட்டை பிரிக்க சொல்வார்கள்.

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , பிரிவினைவாதிகளால் சொல்லப்படும் சில நன்மைகள்...
  1. தமிழகத்தில் 32 மாவட்டங்களை இரு மாநிலமாக பிரித்தால், மாநில அரசு, நிர்வாகம் (ஆட்சி) செய்ய ஏதுவாக இருக்கும்.
  2. சட்டமன்ற வரவு செலவு திட்டத்தின் போது ( Legislative Budget) நலத்திட்ட உதவிகள்,  மாவட்டங்களுக்கு எளிதில் போய் சேர வாய்ப்புண்டு (திட்டம் போட்டால், போய் சேரலாம் !? ).
  3. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போது எல்லா மாவட்டங்களுக்கும் நலத்திட்டங்கள் பயன்பட வாய்ப்புள்ளது.
  4. நீதிமன்றங்கள், காவல்துறையின் அமைப்பும், செயல்பாடும் எளிதாக இருக்கும். 
  5. மாநிலம் பிரிவதால் மேலும் ஒரு புதிய தலைநகரம் உருவாகும். தொழிற்முறையிலும், கல்வியிலும் மற்ற எல்லாவற்றிலும் சென்னைக்கு இணையாக முன்னேறி விடும். (ஒரு 50 ஆண்டுகளில்! ).
  6. புதிய தலைநகரத்திற்கு அருகே உள்ள மாவட்டங்கள், சிறிய நகராட்சிகள் வெகுவாய் முன்னேறும். அங்குள்ள மனையின் மதிப்பு 20 முதல் 80 சதவிகிதம் வரை ஏறிவிடும்.    
  7. புதிய மாநிலத்தில், புது தொழிற்சாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் பல நல்ல திட்டங்கள் ஆரம்பிக்கப்படலாம். 
  8. புதிய ரயில் முனையங்கள் தொடங்கப்படும்; மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்கப்படும்.
  9. அடுத்து மிக முக்கியமானது, சேது சமுத்தர திட்டம் மீண்டும் எழுச்சி பெற்று ஆரம்பிக்கப்படும். மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் போது, தென்னக அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து சேது சமுத்தர திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய சிறுசிறு துறைமுகங்கள் சர்வதேச துறைமுகங்களாக மாறும். இதனால் அந்த மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி அடையும்.
  10. தென்கோடியில் உள்ள மாவட்டங்கள், தலைநகரில் மனு கொடுக்கவோ அல்லது மாவட்ட பிரச்னையை பற்றி பேசவோ 600/ 700 கீ.மீ பயண பட வேண்டியதில்லை. 
பிரிவினை வேண்டாம் என்று சொல்லுபவர்களால் சொல்லப்படும் விஷயங்கள்...

தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதால், மேலும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாநிலங்களை பிரித்து தனி தலைநகரம், தனி அரசு அலுவலகங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் முதலில் கஜானாவில் பணம் வேண்டும். அதற்காக அதிக வரிவசூலிக்க வேண்டும்; விலைவாசியை கொஞ்ச நாட்களுக்கு ஏற்றி தான் வைக்க வேண்டும். மாநில எல்லை வரையருப்பு ; நதி நீர் பகிரபடுவது; போக்குவரத்து  என எல்லாவற்றிலும் மக்களுக்குதான் பிரச்சனை. இப்போது ஆந்திராவில் நடப்பது போல தொடர் பொது வேலைநிறுத்தங்களும், பல வன்முறைகளும் நடைபெறும்; பலர் பாதிக்கபடுவார்கள்.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போதும் தமிழ் நாட்டை பிரிக்க நினைத்தால், அது முழுக்க முழுக்க அரசியல் சுயநலம் மட்டுமே காரணமாக இருக்கும். முன்னரே சொன்னது போல சாமானியனுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. அதனால் தனி மாநிலம் /தனி  தமிழ்நாடு என்று கோஷம் போடும் அரசியல்/ அரசியல் சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு இது புரிய வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னையின் வயது 374 !

வணக்கம்,

ஆகஸ்ட் 22, 2013 - சென்னையின் வயது 374 (மெட்ராஸ் டே - Madras Day).

சிங்கார சென்னை - தமிழ் நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவில் வர்த்தக, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமான ஒரு பெருநகரம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை சேவைகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரம். இன்னும் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். நம் சிங்கார சென்னை நாளை (22 ஆகஸ்ட்) 375 ஆம் ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது. இப்பேர்பட்ட சென்னையின் சில வரலாற்று சம்பவங்களையும், காலச்சுவடுகளையும், நான் இணையத்தில் படித்து வியந்த சில வரலாற்று சரித்திர குறிப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.

நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...


கி.பி. 1-ஆம். நூற்றாண்டு (52-70) :
ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார்.

கி.பி. 2-ஆம். நூற்றாண்டு  :
தொண்டைமண்டலம் (இன்றைய சென்னை ), தொண்டைமான் இளம்திரையன் என்ற பல்லவ அரசனால் ஆளப்பட்டது.

கி.மு 5-ஆம். நூற்றாண்டு - :
திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். (~ கி.மு. 2 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.)

கி.பி. 7-ஆம். நூற்றாண்டு  :
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
 
கி.பி. 8-ஆம். நூற்றாண்டு  :
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் பல்லவ மன்னன் நரசிமவர்மனால் முதலில் கட்டப்பட்டது.

கி.பி. 16-ஆம். நூற்றாண்டு  :
சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

1522-ல் போர்த்துகீசியர்கள் (Portuguese) இந்தியாவிற்கு வந்து சென்னை மயிலாப்பூர் அருகே சாந்தோம் (São Tomé) என்ற துறைமுகத்தை கட்டினர்.

1523-ல் சாந்தோம் சர்ச் (San Thome Church) கட்டப்பட்டது. 

கி.பி. 17-ஆம். நூற்றாண்டு  :
1612-ல் டச்சுகாரர்கள் (Dutch) இந்தியாவிற்கு வந்து முதலில் பழவேற்காடு (Pulicat) பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, (British East India Company) 1626-ல் பழவேற்காட்டில் இருந்து 35 மைல் தூரமுள்ள துர்காபுரம் என்ற கிராமத்தில் தொழிற்சாலை கட்ட எண்ணினர்.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

23 ஏப்ரல், 1640-ல்  புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.


நாட்டின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில்
16 நவம்பர் தொடங்கப்பட்டது ; பின்னர் அது அரசு பொது மருத்துவமனை ஆக்கப்பட்டது.

1668-ல்  திருவல்லிக்கேணி கிராமம் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1672-ல் கிண்டி லாட்ஜ் (Guindy Lodge) கவர்னர் வில்லியம் லங்க்ஹோர்னே -ஆல் (Governor William Langhorne ) கட்டப்பட்டது.

1678-ல் காளிகாம்பாள் கோவில் கட்டி முடிக்கபட்டது.

1688-ல்  சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation) தொடங்கப்பட்டது.

1693-ல் எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் தண்டையார்பேட்டை  ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

கி.பி. 18-ஆம். நூற்றாண்டு:

1701-ல்  பேரரசர் அவுரங்கசீப்பின் ஜெனரல் தாவுத் கான் (General Duad Khan) புனித ஜார்ஜ் கோட்டையை தாக்கினான். எனினும், ஆங்கிலேய அரசு கோட்டையை தக்க வைத்து கொண்டது.

திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தன்காடு   ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1735-ல் சின்னதறிபேட்டை (சிந்தாதரிபேட்டை) உருவாக்கபட்டது.

வேப்பேரி, பெரியமேடு , பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள்  சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1746-ல்  பிரஞ்சு  தளபதி லா போர்டோநாய்ஸ்  (La Bourdonnais) புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினான்.

1749-ல் சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1759-ல் பிரஞ்சு முற்றுகை முடிந்தது.

1767: ஹைதர் அலி முதல் முறையாக சென்னை நகரத்தை நோக்கி படையேடுத்தான்.

1768 ஆம் ஆண்டு சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது.

1772-ல் புனித ஜார்ஜ் கோட்டையில்  உள்ள பொது மருத்துவமனை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

1777-ல்  வீரப்பிள்ளை முதல் கொத்தவாலாக நியமிக்கபட்டார். அவர் பெயரை ஒட்டி 'கொத்தவால் சாவடி' பெயர் வந்தது.

1784-ல் முதல் செய்தித்தாள், மெட்ராஸ் கூரியர் (Madras Courier),  நிறுவப்பட்டது.

1785-ல்  சென்னையில் முதல் தபால் அலுவலக செயல்பாட்டை தொடங்கப்பட்டது.

1788-ல் தாமஸ் பாரி (Thomas Parry) என்ற ஆங்கிலேய வியாபாரி, சென்னையில் தொழிற்முறை வணிகம் ஆரம்பித்தார். அவர் பெயராலேயே இன்றைய பாரிஸ் (Parrys) உருவானது.

1794-ல் ஐரோப்பா வெளியே செயல்பட்டும் பழமையான அரசு சர்வே பள்ளி
(Government Survey School ) புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்டது (தற்போதைய அண்ணா பல்கலைகழகம் ).

நவம்பர் 24, 1794-ல் அமெரிக்க தூதரகம் சென்னையில் திறக்கப்பட்டது.

1798-ல் ராயபேட்டையில் அமீர் மஹால் ஆற்காடு நாவப்-ஆல் கட்டப்பட்டது. 

1795-ல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது.

கி.பி. 19-ஆம். நூற்றாண்டு:

1817-ல் சென்னை இலக்கிய சங்கம் (Madras Literature Society) நிறுவப்பட்டது.

1820-ல் ஆளுநர் தாமஸ் மன்ரோ (Thomas Munro) கிண்டி லாட்ஜ் கட்டடத்தை
ராஜ் பவனாக (Raj Bhavan)  ஆளுநர் மாளிகையாக மாற்றினார்.

1831-ல் முதல் வணிக வங்கி, மெட்ராஸ் பேங்க் (Madras Bank) நிறுவப்பட்டது.

1837-ல் சென்னை கிறிஸ்துவ கல்லூரி (Madras Christian College) தொடங்கப்பட்டது.

1841-ல்  ஐஸ் ஹவுஸ் (Ice House) கட்டப்பட்டது. ஐஸ் (Ice) கப்பல்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து  இருந்து கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டது.
பின்னர் விவேகானந்தர் இல்லம் என பெயர் மாற்றம் பெற்றது.

1842-ல் முதல் கலங்கரை விளக்கம்  கட்டப்பட்டது.

1846-ல்  பச்சையப்பன் பள்ளி நிறுவப்பட்டது; பின்னர் பச்சையப்பன் கல்லூரியாக மாறியது.

1851-ல்  சென்னை அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

1853-ல் பார்க் டவுனில் (Park Town) உயிரியல் பூங்கா கட்டப்பட்டது.

1856-ல்  ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில்வே லைன்  (Railway line) கட்டப்பட்டது. முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது.

1857-ல்  சென்னை பல்கலைக்கழகம் (Madras University) நிறுவப்பட்டது.

1862-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court)  கட்ட ஆணை பிறப்பிக்கபட்டது.

1863-1864 ல் ஸ்பென்சர் பிளாசா  (Spencer Plaza) மதராஸ் மாகாணத்தில், மவுண்ட் ரோடு  சார்லஸ் டூரன்ட் ( Charles Durant ) மற்றும் ஜே ஸ்பென்சர் (J. W. Spencer), ஆகியோர்களால் நிறுவப்பட்டது.

1864-65-ல்  பிரெசிடென்சி கல்லூரி (Presidency College) நிறுவப்பட்டது.

1869-ல் நேபியர் பாலம் (Napier Bridge), அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பிரான்சிஸ் நேபியர் (Napier Francis) என்பவரால் கட்டப்பட்டது.

1873-ல் சென்னை சென்ட்ரல்(Chennai Central) ரயில் நிலையம் பார்க் டவுன்
(Park Town) நகரில் கட்டப்பட்டது.


1876-1878-ல் பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) தோண்டப்பட்டது.

1876-78 -ல் சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது.

1878-ல்  'தி இந்து' (The Hindu) செய்தித்தாள் நிறுவப்பட்டது.

1881-ல்  சென்னை துறைமுகம்  உருவாகியது.

1884-ல் அப்போதைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்  (Mountstuart Elphinstone Grant Duff) என்பவர்  சீர்ப்படுத்தி மெரினா (Marina) என்று பெயரிட்டார்.

1886-ல் கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) நிறுவப்பட்டது.

1889-ல்  உயர் நீதிமன்ற கட்டிட அடித்தளம் போடப்பட்டது.

1892-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court) நிறுவப்பட்டது.

1895-ல்  முதல் டிராம் வண்டி (Tram Service) சேவை தொடங்கி உள்ளது.

1899-ல் முதல் தமிழ் நாளிதழ் சுதேசிமித்திரன்  நிறுவப்பட்டது.

கி.பி. 20-ஆம். நூற்றாண்டு:
 
1906-ல்  இந்தியன் வங்கி (Indian Bank) நிறுவப்பட்டது.

1908-ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் (Chennai Egmore) கட்டப்பட்டது.

1914, செப்டம்பர் 22-ல் எம்டன் (Emden), ஜெர்மானிய போர்க்கப்பல் சென்னை துறைமுகத்தை தாக்கியது.

1916-ல் சென்னை கிரிக்கெட் கிளப் மைதானம் (Madras Cricket Club Ground) நிறுவப்பட்டது.( தற்போதைய M.A .Chidamdram Stadium )

1917-ல்  முதல் விமானம் சேவை ஆரம்பம்.

1925-ல்  லயோலா கல்லூரி (Loyala College) நிறுவப்பட்டது.
சென்னையில் முதல் பேருந்து சேவை தொடக்கம்.

1930-ல் கடலில் முழ்கி கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய டச்சு (Dutch) கப்பலோட்டிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் மெமோரியல் (Karl Schmidt Memorial)  கட்டப்பட்டது.

1931-ல்  புறநகர் மின்சார ரயில் சேவைகள் (சென்னை கடற்கரை- தாம்பரம்) தொடங்கியது.

1934-ல்  ராஜா சர் முத்தையா செட்டியார்  முதல் நகர மேயராக  (Mayor) நியமிக்கப்பட்டார்.

1938-ல்  ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) நிறுவப்பட்டது.

1946-ல் மாம்பலம், சைதாப்பேட்டை, அரசு பண்ணை, புலியூர் , கோடம்பாக்கம், சாலிக்கிராமம் , அடையார்,ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை சென்னை நகருடன் இணைக்கப்பட்டது.

செம்பியம், சிறுவல்லூர், பெருவல்லூர், செம்பரம்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, மடுவங்கரை, வேளச்சேரி ஆகியவை   சென்னையுடன் சேர்க்கபட்டது.

1947-ல் இந்திய தேசிய கொடி புனித ஜார்ஜ் கோட்டை மீது பறக்க விடப்பட்டது.
சென்னை நகரம், சென்னை மாநில தலைநகராக தேர்வு செய்யப்பட்டது.

1952-ல்  நேரு உள் விளையாட்டரங்கம் (Nehru Indoor Stadium) கட்டப்பட்டது.

1955-ல் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தொடங்கப்பட்டது.

1959-ல்  எல்.ஐ.சி (LIC) கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி தொடங்கப்பட்டது.

1969-ல் சென்னை (Madras City),  தமிழ்நாட்டின் தலைநகரானது.

1974-ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது.

1975-ல் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

1976-ல் தற்போதுள்ள புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

1977-ல் கிண்டி தேசிய பூங்கா திறக்கப்பட்டது.

1983-ல்  உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.

1988-ல்  பிர்லா அறிவியல் கோளரங்கம் கட்டப்பட்டது.

1996-ல்  மதராஸ், சென்னை (Chennai) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி. 21-ஆம். நூற்றாண்டு:

2000-ல் சென்னையில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் கால் பத்திக்க தொடங்கின.
தரமணியில் டைடல் பார்க் (Tidel Park) திறக்கப்பட்டது.

2002-ல் சென்னை கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) திறக்கப்பட்டது.

2004, டிசம்பர் 26-ல் சுனாமி பேரலையால் சென்னை மற்றும் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது.

2010, ஜனவரி 11-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் (அ ) தமிழ் நாடு தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றம் வளாகம் திறக்கப்பட்டது.

2011, ஆகஸ்ட் 19-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் பல்சேவை  மருத்துவமணையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

(தகவல்: விக்கிபீடியா / கூகுள் )
மேலும் பழைய சென்னை படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கொஞ்சம் சினிமாவைப் பற்றி ...

வணக்கம்,

என் வலைப்பூவில் (சினிமா ) திரைப்படம்  பற்றிய முதல் பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இதையே பற்றியே பதிவு செய்திருப்பதாலும் , திரை விமர்சனகளையோ, திரைக்கு பின்னால் நடப்பதையோ, வெள்ளித்திரை பற்றியோ பதிவு போடக்கூடாது என நினைத்திருந்தேன். அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை அக்குவேறாக, ஆணிவேறாக  பிரித்து மேயும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர்  இல்லை. ஆனாலும் எனக்கு சினிமா பார்ப்பது தான் பொழுதுபோக்கு, ஆர்வம், பலம், பலவீனம், எல்லாமே...

சமூக வலைத்தளமான யூ-ட்யுபில் (YouTube ) இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சில காணொளிகளை பார்க்க நேரிட்டது. அதை பற்றி எதோ எனக்கு தெரிந்ததை பதியலாம் என ஆரம்பிக்கிறேன்.

தமிழ் தவிர வேறு எந்த பிராந்திய மொழியும் தெரியாததால், மற்ற மொழி படங்களை பார்க்க ஆசையிருந்தும், வேற்றுமொழி படங்களையும், அந்த கதாநாயக(கி) களையும், கதை-வசனங்களையும் ரசிக்க முடிவதில்லை. தமிழில் பழசு முதல் புதுசு வரை எல்லா படங்களையும் பார்த்து ரசிப்பேன். (எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே !)

காணொளி 1:


முதலில் யூ-ட்யுபில் கண்டது, வெள்ளி திரையில் வெகு விரைவில் வரவிருக்கும் ஹிந்தி படமான "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தின் "லுங்கி டான்ஸ் ப்ரோமோ" பாடல் தான். அந்த பாடல் சூப்பர் ஸ்டார்
ரஜினி காந்த்-க்காக காணிக்கை (TRIBUTE TO THALAIVA) என கூறி விட்டு, தலைவரை வெறும் ஒப்புக்கு சப்பாக உபயோகபடுத்தியுள்ளார், பாலிவூட் பாட்ஷா. படத்தில் சென்னை என்ற பெயர் வருவதாலும், காட்சிகளில் தமிழ் மக்களை லுங்கி அணிந்து அரிவாளோடு காட்டுவதாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்காக தான் ரஜினிக்கு இந்த ச்சிங் ..ச்சாக்...



ஷாருக்கானுக்கு உண்மையிலேயே தலைவர் மீது மரியாதை என்றால் மும்பையிலேயே  எடுக்கப்படும் ஒரு படத்தில் இந்த பாட்டு வைத்து இருக்காலம். இதே காரணத்திற்காக தான் ஷாருக்கானின் முந்தைய படமான ரா.ஒன்  படத்திலும் ரஜினியை ஒரு காட்சியில் சும்மாச்சிக்கும் காட்டி படத்தை தென்னிந்தியாவில் விளம்பரபடுத்தினர். தலைவரும் பெருந்தன்மையோடு ஒத்து கொண்டு நடித்தார். பொதுவாக படத்திற்காக தான் ட்ரெயிலர் போடுவார்கள்..ஆனால் கான்,  ட்ரெயிலருகே  ட்ரெயிலர் போடுவார் போலிருக்கே!!!

நான் பிறமொழி படத்திற்கோ, அல்லது பிறமொழி நாயகர்களுகோ எதிரானவன் இல்லை. தலைவரின் பெருமையை வெறும் விளம்பரத்திற்க்காக உபயோகிகிறார்களே என்ற கடுப்புதான்.

காணொளி 2:


அடுத்து இன்று வெளிவந்த செல்வ ராகவானின் "இரண்டாம் உலகம்" படத்தின்  ட்ரெயிலர் . இந்தா, அந்தா என போக்கு காட்டி, இன்று இசையும்  ட்ரெயிலரையும் வெளியிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு. ஆயிரத்தில் ஒருவன் போலவே இதிலும் ஒரு பெரிய தொகை கிராபிக்ஸ் தொழில்நுட்பதிற்க்காக போடப்பட்டுள்ளது தெரியவருகிது. இதில் காதலுக்காக ஒருவன் (நாயகன் தான்) எவ்வளவு தூரம் தான் போவான் என்று ஆரம்பிக்கிறார்கள். தற்காலத்தில் நடப்பது போலவும், கனவுலகத்தில் நடப்பது போலவும் போலவும் காட்டப்படுகிறது. கனவுலகத்தில்,வித்தியாசமான ஜந்துகளும், வித்தியாசமான நிலப்பரப்பையும் காட்டியுள்ளனர். ஆக,ஆயிரத்தில் ஒருவன் போல கண்களுக்கு விருந்து நிச்சயம் உண்டு என நினைக்கிறேன்.  

காணொளி 3:


சில நாட்களுக்கு முன் வெளிவந்த விஜய் & விஜய் -ன்  "தலைவா"  படத்தின்
ட்ரெயிலர். ஏற்கனவே எல்லோரும் பார்த்து, கருத்து வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்ட போதிலும், படம் இந்த வாரகடைசியில் வெளிவருவதால், படம் எப்படி இருக்குமோ என எதிர்பார்ப்புதான் எனக்கு. 
 
முதலில் இது அரசியல் பற்றிய படம் என்று சொன்னார்கள், பிறகு, எல்லா தாதாயிச படங்களிலும் வருவது போல ஒரு சாதாரண மனிதன்  (common man) எப்படி மக்களின் தாதாவாக மாறி வில்லன்களுக்கு சுளுக்கு எடுக்கிறான் என்பதே கதை போல. (என் கணிப்பு தான்!) ஊறுகாயாக சந்தானமும், பேருக்காக அமலா பாலும் இருப்பதாக தெரிகிறது. அதனால் படம் நன்றாக இருக்காது  என சொல்லவில்லை; இருந்தால் தேவலை என்று தான் சொல்லுகிறேன்.

மீண்டும் வேறு சினிமா பதிவில் பார்க்கலாம்...

பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!

நன்றி !!!    

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இதுதாங்க நம்ம ஊரு அரசியல் !!!

வணக்கம்,

ஒரு நாட்டின் அரசியல் வரலாறு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நம் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதை பற்றி இணையத்தில் தேடி படித்து, உங்களிடம் பகிர்கிறேன்.(தகவல்: விக்கிபீடியா )

இன்றைய தமிழ்நாடு, சென்னை மாகாணம் (Madras Presidency) மற்றும் சென்னை மாநிலம் (Madras State) என அதன் வரலாற்றில் வெவ்வேறு பிராந்திய கட்டமைப்புகளில் இருந்தது.

1799 முதல் 1852 வரை கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாணத்தில் (சென்னை மட்டுமல்ல, பாரதம் முழுவதும்), ஜமீன்தார்ககளை குறுநில மன்னர்களை போல வரிவசூலிக்கவும், மக்களை ஆளவும் நியமித்திருந்தது.

பின்னர் 1920-ல் சென்னை மாகாணம் நிறுவிய பிறகு, சென்னை சட்டசபை தேர்தல் (Madras Legislative Assembly) மூலம் முதல்வர்களை தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் சென்னை சட்டசபை தேர்தலில் முதல்வர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டும் தான். 1920 முதல் தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

சென்னை மாகாண முதல்வர்கள் (1920-1950)
சென்னை மாநில முதல்வர்கள்  (1950-1969)
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் (1969 முதல்)

பெயர் வருடம் கட்சி
A.சுப்பராயலு ரெட்டியார்  1920-1921 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1921-1923 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1923-1926 நீதிக்கட்சி
P.சுப்பராயன் 1926-1930 நீதிக்கட்சி
B.முனுசாமி நாயுடு  1930-1930 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ்  1932-1934 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1934-1936 நீதிக்கட்சி
P.T.ராஜன்  1936
(4 மாதம்)
நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1936-1937
(8 மாதம்)
நீதிக்கட்சி
குர்மா வெங்கடரெட்டி நாயுடு 1937
(3 மாதம்)
நீதிக்கட்சி
C.ராஜகோபலாச்சாரி 1937-1939 இந்திய தேசிய காங்கிரஸ்
கவர்னர் ஆட்சி 1939-1946 ---
தங்குட்ரி பிரகாசம் 1946-1947 இந்திய தேசிய காங்கிரஸ்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ்
P.S.குமாரசுவாமி ராஜா 1949-1950 இந்திய தேசிய காங்கிரஸ்
C.ராஜகோபலாச்சாரி 1950-1952 இந்திய தேசிய காங்கிரஸ்
K.காமராஜ் 1954-1963 இந்திய தேசிய காங்கிரஸ்
M.பக்தவத்சலம் 1963-1967 இந்திய தேசிய காங்கிரஸ்
C.N.அண்ணாதுரை 1967-1969  திமுக
C.N.அண்ணாதுரை 1969
(1 மாதம்)
 திமுக
V.R.நெடுஞ்செழியன் 1969
(10 நாள் )
 திமுக
M.K.கருணாநிதி 1969-1971  திமுக
M.K.கருணாநிதி 1971-1976 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1976-1977
(5 மாதம்)
---
M.G.ராமசந்திரன்  1977-1980 அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1980
(4 மாதம்)
---
M.G.ராமசந்திரன் 1980-1984 அஇதிமுக
M.G.ராமசந்திரன் 1984-1987 அஇதிமுக
V.R.நெடுஞ்செழியன் 1987-1988
(14 நாள்)
அஇதிமுக
ஜானகி ராமசந்திரன் 1988
(23 நாள்)
அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1988-1989 ---
M.K.கருணாநிதி 1989-1991 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1991
(5 மாதம்)
---
J.ஜெயலலிதா 1991-1996 அஇதிமுக
M.K.கருணாநிதி 1996-2001 திமுக
J.ஜெயலலிதா 2001
(4 மாதம்)
அஇதிமுக
O.பன்னீர்செல்வம்   2001-2002
(6 மாதம்)
அஇதிமுக
J.ஜெயலலிதா 2002-2006 அஇதிமுக
M.K.கருணாநிதி 2006-2011 திமுக
J.ஜெயலலிதா 2011 முதல்  அஇதிமுக

இந்திய சுதந்திரதிற்கு முன்பும் பின்பும் சென்னை மாகணத்தில் மேல் குடியினாராம் உயர்ந்த சாதி மக்களே அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரலாக பொறுப்பாற்றியவர், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. இவர் எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.


கல்வியில் பின்தங்கியிருந்த தமிழ்நாட்டில்,1960-ல் காமராஜர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்விக்கு கண் கொடுத்தார். இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். பிரதமர் பதவியே கிடைத்த போதிலும் வேண்டாம் என உதறிவிட்டு, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட காமராஜரையே தோற்கடிக்க வைத்த பெருமை நம் தமிழ் மக்களுக்கு உண்டு. (அவர்கள் மட்டுமே காரணமல்ல)

தந்தை பெரியார் ஈ.வெ .ராமசாமி அவர்கள், திராவிடர் கழகம் ஆரம்பித்து அதன் மூலம் சுய மரியாதை இயக்கம், தீண்டாம்மை ஒழிப்பு, தமிழ் தேசியவாதம், என்று இன்றைய தமிழ் திராவிடம் உருவாக காரணமாக இருந்தவர். இவர் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் தந்தையாக இருப்பவர்.

அறிஞர் C.N.அண்ணாதுரை ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து, பின்னர்  பெரியாருடன் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளே அவர் முதலமைச்சராக இருந்த போதிலும், தமிழ் பேச்சாற்றலாலும், மக்களுக்கு செய்த நல்ல பணிக்காகவும், அவர் இன்னும் மக்களால் பேசப்படும் ஒரு உன்னத தலைவர். 
  
தமிழ் சினிமாவின் மூலமாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர், M.G.ராமசந்திரன். ஆரம்பத்தில் அண்ணாவின் பேச்சாற்றலாலும், கொள்கையினாலும் ஈர்க்கப்பட்டு,  திராவிட முன்னேற்ற கழகதில் இருந்தவர், கலைஞர் M.கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுப்பாடு' காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சாகும் வரை முதலமைச்சராய் இருந்தவர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின், அவரை தொடர்ந்து  பல சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், கட்சியில் சேர்ந்தும் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். ஒரு சிலரை தவிர யாராலும் அவரைப் போல வெற்றி பெற முடியவில்லை. 

இப்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டு கொண்டும், 'திராவிட' மற்றும் 'கழகம்' என்ற வார்த்தையை கட்சி பெயரில் சேர்த்து கொண்டும் தான் கட்சி ஆரம்பிகின்றனர்.

இன்னும் அச்சில் ஏறாத அரசியல் பதிவுகள் நிறைய உள்ளது. அதை எல்லோராலும் வெளிப்படையாய் சொல்லிவிட முடியாது. மக்களாட்சி நடக்கிறதோ இல்லையோ, 1967- க்கு பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சித்தான் மாறி மாறி தமிழகத்தில் நடக்கிறது. இதுதாங்க நம்ம ஊரு அரசியல் வரலாறு. இவ்வளவு தூரம் அலசிவிட்டு, முக்கிய விஷயங்களை பதிவு செய்யவில்லையே என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு பிறகு நடந்த, நடக்கின்ற கதை கூத்து  தான் எல்லோருக்கும் தெரியுமே!! அதை நான் வேற தனியாக சொல்ல வேண்டுமா???



நன்றி !!!

-பி .விமல் ராஜ்