chennai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 


ஞாயிறு, 21 மே, 2017

இந்திக்காரனும் மதராசியும்!

வணக்கம்,

பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா?

பணி நிமித்தமாக அல்லது படிப்பிற்காக தமிழ் நாட்டிற்கு பலதரப்பட்ட வயதினரும் வருகிறார்கள். இதில் பலர் இங்கயே தங்கி விடுகிறார்கள். அப்படி புதிதாய் சென்னை அல்லது தமிழகம் வருவோரிடம், தமிழ்நாடும் தமிழர்களையும் பற்றி கேட்டதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட இந்தியர்களிடம் தமிழை பற்றியும், தமிழ்நாடு பற்றியும் கேட்டதற்கு:
  1. தமிழ் நாட்டில் வெயில் அதிகம். அதுவும் சென்னையில் ரொம்ப அதிகம்.
  2. உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. எல்லா ஓட்டல்களிலும் இட்லி, சாம்பார் வடை மட்டுமே பிரதானமாய் கிடைக்கும். வட இந்திய உணவு வகைகள் கிடைப்பது அரிது.
  3. தமிழர்கள் கருப்பாக, அழுக்காக தான் இருப்பார்கள்.   
  4. தமிழர்கள் எல்லோரும் மூன்று வேளையும் வாழையிலை போட்டு தான் சாப்பிடுவார்கள். 
  5. பெரும்பாலும் லுங்கி அல்லது வேஷ்டி தான் கட்டுவார்கள். 
  6. தமிழ் மக்கள் பெரும்பாலானோர் பிராமணர்கள். பலரும் நெற்றியில் (சிவலிங்கம் நெற்றியில் இருப்பது போல) திருநீறு வைத்திருப்பார்கள். 
  7. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி பேச தெரியாது. இந்தியை மொழியை எதிர்த்தவர்கள்; இன்றும் எதிர்ப்பவர்கள். எல்லோருமே தமிழ் மட்டும்தான் பேசுவார்கள்.
  8. தமிழ் மொழி பேச/கற்க மிகவும் கஷ்டமானது.
  9. அனைவரும் ரஜினிகாந்த், கமலஹாசன் ரசிகர்களாகவே இருப்பார்கள்.  
  10. தென் மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லோருமே மதராசிகள் தான்.
  11. மலையாளமும், தமிழும் கிட்டத்தட்ட ஒன்று.
  12. பிறமொழி பேசும் மக்களுக்கு தமிழர்கள் உதவ மாட்டார்கள். 
  13. ஆட்டோக்காரர்கள் வழிப்பறியாக பணம் வசூலிப்பார்கள்.
  14. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக  பிரச்சனை நடக்கிறது. அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள்.
  15. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம்.
அதே போல நாமும் வடநாட்டினரை பற்றி என்னன்ன நினைத்துள்ளோம் என்பதை ஒரு சிலரிடம் கேட்ட போது, இந்த பதில்களெல்லாம் வந்து விழுந்தது.
  1. வடஇந்தியாவில் எல்லா மாநிலத்தவரும் இந்தி மட்டுமே  பேசுவார்கள். இந்திக்காரர்கள் எல்லோருமே வட்டிக்கடை 'சேட்'.
  2. எல்லோருமே வெள்ளைவெள்ளேறென்று மைதாமாவு போல இருப்பார்கள். 
  3. இளைஞர்கள் பலர் மேற்கத்திய கலாச்சராத்தைதான் பின்பற்றுவார்கள். 
  4. மூன்று வேலையும் சப்பாத்தியையம், ரொட்டியையும்  மட்டுமே சாப்பிடுவார்கள். 
  5. அவர்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலப்படம் செய்து பேசுவார்கள். 
  6. திருமணத்திகாக பெரும் தொகையை செலவு செய்வார்கள்.
  7. எல்லோருமே பான் பீடா/ குட்கா போடுவார்கள்; பீடாவை வாயில் போட்டு குதப்பி, கண்ட இடங்களில் துப்பி கொள்வார்கள். 
  8. பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள்.
  9. பீஹார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர்   படிப்பில் பின்தங்கியவர்கள். 
south-indian-vs-north-indian

இது போல இன்னும் நிறைய இருக்கிறது. இதில் நாம் நினைப்பதும் சரி, மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பதும் சரி, அனைத்துமே உண்மை கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒத்து போகலாம்.

இது பொதுவாக எல்லா வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ் மக்களை பற்றி நினைக்கும் விஷயங்கள்தான். இவை எல்லாமே நம் சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுபவை. இன்னும் சில, மக்களின் மேம்போக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இவை.

தமிழ் படங்களில் மலையாளிகளை டீக்கடை சேட்டன்களாகவும், அவர்கள் வீட்டு பெண்களை இன்றும் முண்டு கட்டி, துண்டு போர்த்திய பெண்களாய் காட்டுவதும், தெலுங்கர்களை பின் குடுமி வைத்து நெற்றியில் பெரிய நாமம் போட்டவர்களாகவும், பெண் துப்புரவு தொழிலாளர்களளை தெலுங்கு பேசுபவர்களாகவே காட்டுவதும், படித்த இந்தி பேசுபவர்களை உயர் தட்டு மக்களாகவும், படிக்காத இந்தி மக்களை அடியாட்கள் போல காட்டுவதும் உண்டு. இன்னும் ஒரே மாதிரியாக (stereotypical) மற்ற மாநில மக்களை காட்டுவது மக்களின் ஒருவித தவறான கண்ணோட்டதையே குறிக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமானால், இப்போதுள்ள தலைமுறைக்கு தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டி மிகைப்படுத்தி வைத்துள்ளது போல, இவர்கள் (வேற்று மாநிலத்தவர்கள்) இப்படித்தான் என்று நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள்.

இந்தியில் பாலிவுட் பாதுஷாவின் படத்தில், தமிழ் மக்கள் எப்படியெல்லாம் இருக்கமாட்டார்களோ அப்படி தான் காட்டுவார். நூடுல்ஸில் தயிர் ஊற்றி சாப்பிடுவது, இளநீரில் லசி கலந்து சாப்பிடுவது, தமிழ்நாடு ஆண்கள் பட்டையான தங்க பர்டாரில் வெள்ளை வேட்டியணிந்து (கேரளா ஸ்டைலில்) அங்கவஸ்த்திரம் போட்டிருப்பார்கள், சிலோனுக்கு பெட்ரோல் கடத்துவதால் கடலில் சுட்டு கொள்ளப்படுகிறார்கள் என காட்டியுள்ளார். இன்னும் சில படங்களில் ஆங்கிலத்தை தப்பாகதான் பேசுவார்கள், யாருக்குமே இந்தியில் பேச/பதில் சொல்ல தெரியாது என பல செயற்கையான விஷயங்களை நம் செய்வது போல சொல்லியிருப்பார்கள். 

சினிமாக்கள் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களையும், மற்ற கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கிறோம். அதை சொல்லும் போதும், காட்சிப்படுத்தும் போதும் எதார்த்தத்தை காட்டினாலே போதும். அதை தமிழ் சமூகமும், மற்ற சமூகமும் திரையில் சரியாக செய்தாலே, நமக்குள் வடக்கு தெற்கு என்ற கலாச்சார இடைவெளி இல்லமல் போகும். இதை தவிர உங்களுக்கு வேறு ஏதாவது கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதியலாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

பழைய மகாபலிபுரம் சாலையில்!

வணக்கம்,

ஓ.எம்.ஆர் சாலையில் தினசரி காணும் சில நிகழ்வுகளை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். 

சென்னை சாலைகளில் பயணிப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. மற்ற ஊரை சேர்ந்தவர்கள், "சென்னை ரோட்ல எப்படி வண்டி ஓட்டுறீங்க?" என பலரும் கேட்பதை பார்த்திருக்கலாம். இங்கு சாலைகளில் வண்டி ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான ஒன்று தான். அதிலும் நான் தினமும் பயணம் செய்யும் ஓ.எம்.ஆர் சாலையை பற்றி சொல்லவே வேண்டாம்.  ஓ.எம்.ஆரை பற்றி ஏதாவது பதியலாம் என எண்ணி, இப்பதிவை எழுதுகிறேன். இச்சாலை அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என பார்ப்பவர்கள், வியப்பில் உச்சிக்கு சென்று விடுவார்கள்.

சென்னை மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்று ஓ.எம்.ஆர் (Old Mahabalipuram Road). அடையாறு மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை அது ஓ.எம்.ஆர் சாலை தான். இதற்கு ஐ.டி காரிடார் (IT Corridor) என்ற பெயரும் உண்டு. சென்னையிலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக பாண்டிச்சேரி வரை போக, புறவழி சாலை, ஈ.சி.ஆர் சாலை, ஓ.எம்.ஆர் என இன்று பல சாலைகள் இருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த (பழைய) மகாபலிபுரம் சாலை மட்டும் தான்.


ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் செம்மண் சாலையாகத்தான் இருக்கும். இரு புறமும் சவுக்கு தோப்பும், பனைமரங்களும் தான் நிற்கும்; இரவில் தெருவிளக்கில்லாமல் அதுவும் பயமுறுத்தும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ் வசதி. அதுவும் வந்ததால் தான் உண்டு. சென்னை சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு சிறுசிறு குக்கிராமங்கள் தான் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் போன்றவையெல்லாம். இன்று பெரிய ஐ .டி கம்பெனிகளின் உறைவிடமாக இருக்கும் நாவலூர் மற்றும் சிறுசேரி, 20 ஆண்டுகளுக்கு முன் வெறும் சவுக்கு தோப்புகளாக தான் இருந்தனவாம். 1970-களில் அங்கே பிளாட் (வீடு) ஆயிரம் ரூபாய் என வாங்கியவர்கள், இன்று சில கோடிகளுக்கு அதிபதிகள். பழைய படங்களில் ஊருக்கு வெளியே பனங்காடு, செம்மண் ரோடு, மணல் மேடு, சவுக்கு தோப்பு என்று வருவதெல்லாம்  இந்த இடங்கள் தான் போலும்! கடல் அருகே இருப்பதால் விவாசாயம் நடந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி இருந்த இடம் எப்படி மாறிவிட்டது இப்போது?


கூவம் நதி போல வளைந்து நெளிந்த நீளமான டிராஃபிக், அதில் நீந்தி கொண்டு செல்லும் வாகனங்கள், அதை முந்தி கொண்டு வேகமாக செல்லும் கம்பெனி பேருந்துகள், சீறி கொண்டு போகும் ரேஸர் பைக்குகள், வேதாளத்தை முதுகில் சுமந்து கொண்டு போகும் விக்ரமாதித்யனை போல பைக்கில் போகும் இளம் ஜோடிகள், சைடு ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே போகும் ஓவர்லோடான அரசு பேருந்துகள், இஷ்டத்துக்கு நின்று நின்று செல்லும் ஷேர் ஆட்டோக்கள்/வேன்கள், 'என் பாட்டன் போட்ட ரோடு இது' என குறுக்கே கடக்கும் சில ஐந்து அறிவு/பல ஆறறிவு ஜந்துக்கள், இக்கால வழிப்பறி கொள்ளையான டோல் கேட்கள், அசம்பாவி்தமாய் சில பெரிய, சிறிய விபத்துக்கள், டிசைன் டிசைனாக கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள ஐ.டி கம்பெனிகள் என சொல்லி கொண்டே போகலாம்...

சில நேரங்களில் ஓ.எம்.ஆர் டிராஃபிக்கில் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும். அதுவும் வெள்ளிகிழமை மாலை என்றால் சொல்லவே தேவையில்லை. காலை நேரங்களில் அலுவலகம் செல்வோர் பலரும் அக்கம் பக்கம் பாராமல் வண்டியை விருட்டென ஓட்டி கொண்டு செல்வார்கள். சிக்னல் என ஒன்று இருந்தலும், போலீஸ் இல்லாவிடில் யாரும் அதை மதிப்பதில்லை. ரேஸர் பைக் வைத்திருக்கும் கனவான்கள் வீலிங் செய்து கொண்டே சீறி பாய்வதை பல நேரங்களில் பார்க்கலாம். சிக்னல் போட்டபின் கியர் போடுவதற்குள் நம்மை ஓவர்டேக் செய்து கண் இமைக்கும் நேரத்தில் கண் காணா தூரத்தில் போய்விடுவார்கள். இந்த அதி வேக பயணம் பல நேரங்களில் அவர்களுக்கோ அல்லது மற்ற ஓட்டுனர்களுக்கோ வினையாய் வந்து முடியும். இம்மாதிரி சீறி வரும் காளைகளை 'போறான் பாரு பொறம்போக்கு' என்று பலரும் பட்டம் கொடுத்துவிட்டு போவார்கள்.


இப்போதுள்ள லேட்டஸ்ட் மாடல் பைக்குகளில் பின் சீட் ஒய்யாரமாக தூக்கி கொண்டு இருக்கிறது. அதில் பின்னல் உட்கார்ந்து பயணம் செய்யும் பலரும் உப்புமூட்டை தூக்கி கொண்டு போவது போலத்தான் இருக்கும். சிலர் நவீன ஜோடிகள் இவ்வாறு பயணம் செய்யும் போது எல்லார் கண்ணும் அவர்கள் மேல்தான் விழும். சில சமயங்களில் சில பல 'ஃபிரீ ஷோ' க்களையும் நாம் பார்க்க முடியும்.

அடுத்து அரசு பேருந்து. சொல்லவே வேண்டாம். நடிகர் விவேக் படத்தில் சொல்லியது போல, பீக் ஹவரில் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், ஸ்டாப்பிலிருந்து பத்து அடி தள்ளி தான் நிற்கும். காலை மாலை இருவேளையும் நிரம்பி வழியும். நாலு ஸ்டாப் ஏறி இறக்குவதற்குள் கசக்கி பிழிந்து விடுவார்கள். நமக்கே கடுப்பாக இருக்கும் போது இதில் பெண்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான். காசுள்ளர்வர்களுக்கு ஏ.சி.பஸ் உண்டு. ஷேர் ஆட்டோவும், வேன்களும் இவர்களுக்கு ஓ .எம்.ஆர் பயணங்களை ஈசியாக்குகின்றன.

ரோட்டில் குறுக்கே வரும் கால்நடைகளை நாம் திட்ட முடியாது. திட்டியும் பயனில்லை. அதை அங்கே மேயவிட்டு எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருக்கும் அந்த மாட்டுக்காரர்களை தான் உதைக்க வேண்டும்.
இதையெல்லாம் விட சில மக்களும், மாக்களை போல ரோட்டை கடக்க அங்கும் இங்கும் ஓடுவார்கள். 60 கி.மீ. வேகத்தில் வரும் வண்டி, இவர்கள் குறுக்கே பாய்வதை பார்த்து, சடன் பிரேக் அடித்து தட்டு தடுமாறி சறுக்கி விபத்துக்குள்ளாகும் இடங்கள் பல. இது போன்ற பல விபத்துக்கான காரணங்களை நாம் தினமும் ஓ.எம்.ஆரில் பார்க்கலாம்.        

இதை தவிர வேறு சில விஷயங்களும் ஓ .எம்.ஆரில் இருக்கிறது. பல ஐ.டி. கம்பெனிகள் இருப்பதால் பலதரப்பட்ட மக்களை அங்கே நாம் தினமும் பார்க்க முடியும். சோழிங்கநல்லூர் தாண்டியது முதல் கேளம்பாக்கம் வரை பல ஹாஸ்டல்களும், பேயிங் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு. அவரர் வசதிக்கேற்ப பேச்சுலர் வீடுகளும், மேன்ஷன்கள் இருக்கிறது.  இவர்கள் எல்லாம் சாப்பிட ஓட்டல் இருக்கிறதா? என கேட்காதீர்கள். ஓ .எம்.ஆரில் தடுக்கி விழுந்தால் ஓட்டல், மெஸ், ரெஸ்ட்டாரண்ட் தான். தமிழ் நாடு, ஆந்திரா, வட இந்தியா, சைனீஸ் என பல வகையான உணவுகளும், உணவகங்களும் இங்கு உண்டு. அதை பற்றி விரிவாக வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

இதற்கு மேல் என்ன சொல்ல என்ன தெரியவில்லை. இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் பகிரலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 13 ஜூன், 2016

பனியும் பனி சார்ந்த இடமும் !

வணக்கம்,

கடந்த ஓரிரு மாதங்களாய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்!

விஜிபி ஸ்நோ கிங்டம்:
சென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.

vgp-snow-kingdom

ஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா !!!  -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ்! வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல்! பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.


உள்ளே பலரும் செல்ஃபி எடுத்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்!). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.

அவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.

சிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.

மேலும் தகவல்களுக்கு vgpsnowkingdom.com

3-டி ஆர்ட் மியுசியம் : 
ஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.

clickartmuseum

புகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும்,  ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.

click to enlarge
மேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.

மேலும் தகவல்களுக்கு http://www.clickartmuseum.com/


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னை மழை - இரண்டான இரண்டாற்று கரை !

வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக சென்னையில் அடித்து வாங்கி, மக்களை புரட்டி போட்டது மழை. ஒரே நாளில் 39 செ.மீ மழை;  ஒரு வாரத்தில் 108 செ.மீ மழை; ஊர் முழுவதும் வெள்ளம்; எங்கு காணினும் தண்ணீர் என அல்லோலபட்டது சென்னை மாநகரம். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழையை பார்த்துள்ளது சென்னை.

கடந்த செவ்வாய் (டிசம்பர் 2) அன்று அதிகாலை ஆரம்பித்த மழை, அன்று இரவு  12 மணி வரை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கடந்த வாரங்களில் (தீபாவளி முதல்), பெய்த மழையில் வெள்ள காடாகி போனது சென்னையும் இன்னும் சில மாவட்டங்களும். இதில் மிகவும் மோசமாகி போனது கடலூர், காஞ்சிபுரம் தான். இப்போது  மீண்டும் தொடர் மழையால் மக்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.

prayforchennai

சென்னையில் உள்ள பெரிய ஏரிகளான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, பள்ளிகரணை எரி, வேளச்சேரி ஏரி, மடிப்பாக்கம் ஏரி ஆகியவை உடைந்து உடைக்கப்பட்டு சென்னையை ஆக்கிரமித்து விட்டது.

ஆற்றங்கரையையும், ஏரியையும் வளைத்து போட்டு வீடு, கல்லூரி, வணிக வளாகம் என சிட்டியாக மாற்றிவிட்டால்.. அது என்ன செய்யும் ??? பிறகென்ன ??? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! 

சென்னைக்கு இரண்டாற்றுகரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அடையாறு, கூவம் என இரு ஆறுகள் ஓடுவதால் தான் இப்பெயர். பெருமழையால் இந்த இரு ஆறுகளும் நிரம்பி பெருக்கெடுத்து கரையோர இடங்களை கபளீகரம் செய்துவிட்டது.

மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், அசோக் நகர், கிண்டி, கோயம்பேடு, ஆவடி, தாம்பரம், ஊரப்பாக்கம், கோட்டூர்புரம், சைதாபேட்டை, மாம்பலம், எழும்பூர், பாரிஸ், போரூர், அடையாறு, பெசன்ட் நகர், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,  வட சென்னையின் பல பகுதிகள் என  கிட்ட தட்ட எல்லா இடங்களும் நீரில் முழுகி போயின. கரையோர ஏரியாக்கள் முழுவதும் முழுகி போய்விட்டது. முக்கிய சாலைகளும், சுரங்க பாதைகளும் நீரில் மூழுகி போய் சென்னை தீவாகவே மாறி போனது.

அத்தியாவசிய பொருட்களுக்கு  தட்டுப்பாடாகி போகவே, அதன் விலைகள் மலைபோல ஏறிபோனது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி, காய்கறி, உணவு என எதுவும் கிடைக்கவில்லை. பால் லிட்டருக்கு 140 ரூபாய்க்கும், காய்கறிகள்  கிலோ 100 ரூபாய்க்கு விற்கபட்டது.

பலரின் வீட்டில் 2 ஆவது மாடி வரை வெள்ளநீர்  புகுந்து விட்டதால், மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். மின்சாரம், தொலைதொடர்பு என எதுவும் மூன்று நாள் வரை இல்லை. இது வரை 280 பேர் இறந்து விட்டதாக சொல்கின்றனர். தரை, வான் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

அரசின் மீட்பு பணி/  நிவாரண பணிகள் ஏற்கனவே மெதுவாய் நடக்கிறது என பொதுமக்கள் சொல்லி வருகின்றனர். மேலும் இவர்களது அட்ராசிட்டிகள் ஒரு படி மேலே போய், நிவாரண பொட்டலங்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி தீவிரமாக நடப்பதாக சொல்கின்றனர். இதை கண்டு பலரும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பொங்கி வருகின்றனர்.


டி.வியில் செய்திகளை உடனுக்கு உடன் தருகிறேன் என சொல்லி விட்டு, மணிக்கு ஒருமுறை போட்ட செய்திகளையே போட்டு காட்டி, சொன்னதையே திருப்பி சொல்லி மக்களை மேலும் பீதிக்கு ஆளாக்குகிறார்கள். தண்ணீர் எங்கு வடிந்துள்ளது, எந்த சாலையில் பயணிக்கலாம், அவசர உதவி எண்கள், பேருந்து வசதி பற்றிய செய்திகளை சொல்லாமல், ஒவ்வொறு ஏரியாவாக சென்று இடுப்பளவு தண்ணீரில் உள்ளவர்களை பேட்டி எடுத்து அவர்கள் துன்பத்தை காசாக்க பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியின் டி.வி யில்,  அம்மாவின் ஆணைக்கிணங்க, நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடப்பதாகவும், மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் சொல்லி துதி பாடுகின்றனர்.

chennai-rains

அரசியல்வாதிகள் பொதுமக்களை பார்க்கவரும் போது, மக்கள் அவர்கள் மீது கடும்கோபத்துடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவரும் பார்க்க வருவதில்லை... அப்படியே வந்தாலும் கடனுக்கு வந்து ஒரு விசிட் அடித்து சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் அவ்வபோது பரவி வரும் சில புரளிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த ஏரி உடைந்துவிட்டது, இந்த ஏரி உடைந்துவிட்டது, பாலம் இரண்டாகி போனது, முதலை பண்ணையிலிருந்து 20 முதலைகள் தப்பித்து விட்டது, இன்னும் இரு நாட்களில் 250 செ.மீ மழை என நாசா அறிவிப்பு (??!!) ... இன்னும் பல காமெடிகள் வலம் வருகிறது வாட்ஸ் அப்பில்.

இவ்வளவு கொடுமையிலும் ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. மதம், சாதி, இனம் என எதையும் பாராமல், அனைவரும் ஒருகிணைந்து மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருகின்றனர். தர்காவில் பல இந்து கிறுஸ்தவ மக்களும், இந்து கோவில்களில் பல இஸ்லாமிய மக்களும்  தங்கியுள்ளனர். மதம் பாராமல் மனித நேயத்துடன் உணவளித்து உதவி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பல தொண்டு நிறுவனங்களும், பல நல்ல உள்ளம் படைத்த மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்றனர்; இன்னும் செய்து கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலத்திலிருந்தும் அன்புக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. இச்செய்திகளை நாம் ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் சேர்ந்து சீரிய பணியை  ஆற்றியுள்ளது. மீண்டும் ராணுவம் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளது. ராணுவம் மட்டுமல்ல... வலிய வந்து உதவிய இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சில மீடியா பிரபலங்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் என இவர்களின் மனிதநேயமிக்க சேவை பணி மகத்தானது. இவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் !!!

எவ்வளவு தான் நாம் ஒருவரை ஒருவர் அடித்து/தூற்றி கொண்டாலும், ஒரு பிரச்சனை என்று வரும் போது நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம் என்ற நினைக்கும் போது மனம் சிலிர்த்து மகிழ்கிறது.

சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த காலம் போக, "எப்படா மழை நிக்கும்?? ", என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள். ஆளானப்பட்ட சென்னை மாநகருக்கே இந்த நிலை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலை???  "ஹ்ம்ம்.. உச்...பாவம்.." என்று சொல்ல தான் முடிகிறது நம்மால்.

"மழையே, போதும் நீ எங்களை சோதித்தது.
சென்று அடுத்த ஆண்டு வா..
நாங்களும் கொஞ்சம் மீண்டு வருகிறோம்... !
#சென்னைமக்கள்  


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 22 ஆகஸ்ட், 2015

நம்ம சென்னை 377 !

எல்லாத்துக்கும் வணக்கம்பா,

இன்னைக்கி 'மெட்ராஸ் டே' வாம். இன்னையோட நம்ம சென்னை சிட்டிக்கு 377 ஆவது வருசம் ஆரம்பிக்குதாம். எவரோ சென்னப்ப நாயக்கராண்ட 1639 வருசத்தில ஆகஸ்ட் மாசம்  22 ஆம் தேதி, மூணு மைல் இடத்த வெள்ளைக்கார இங்கிலிஸ் துரைங்க வாங்கி, சென்னைபட்டணம்-ன்னு  பேரு வெச்சானாம்மா.

அதுகோசம் எல்லாருமே பேஸ்புக்ல, டுவிட்டர்ல வாய்த்து செய்தி போட்டுன்னுகிறாங்க.. அதே மேரி நானும் என் பங்குக்கு சலாம் போட்டுகிறேன்..

சென்னையை பத்தி என்னோட பழைய பேப்பர்-ல நிறைய தபா கிறுக்கிட்டேன். அதோட ரிப்பீட்டு தாமே இது. படிச்சு குஜாலா இருங்க..

பதிவு 1:
நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...

கி.பி. 1-ஆம். நூற்றாண்டில் (52-70), ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார். கி.பி. 5-ஆம். நூற்றாண்டில், திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 16-ஆம். நூற்றாண்டில் சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

மேலும் சென்னையின் வரலாற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

madras-day-377
நானே டிசைன் பண்ண நம்ம சென்னையின் அடையாளங்கள் 

பதிவு 2: 
எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

மேலும் சென்னையின் சிறப்பை படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

பாத்தியா நைனா.. சென்னைக்கு எம்மாம் பெரிய ஹிஸ்டிரி, எவ்ளோ விசேஷம் கீதுன்னு. சோக்கா சொல்றியே சென்னை படா பேஜாருன்னு.. இங்க வந்து வாழ்ந்து பாத்தா தாமே தெரியும் எங்க ஊரு எப்படீன்னு... ஆட்டோ ஓட்டுறவன், மீன் புடிக்கிறவன், சாக்கடை அள்ளுறவன், பாங்க் வேலை பாக்கிரவன், கவர்மெண்ட் ஆபிசர், கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காரன், இப்படி எல்லாருமே இங்கே பொயப்புக்காக தான் இங்க அல்லாடுறான். சந்தோசமா புள்ள குட்டியோட கீறான். ஒன்னொரு தபா எவனாவது சென்னையில ஒண்ணும் இல்ல, கலீஜு, கப்பு தாங்கலன்னு பீலா வுட்டான் .. நான் செம காண்டா ஆயிடுவேன்..படவா..கீசிடுவேன் கீசி..  உஷாரா இருந்துக்கோ.. பி கேர்புல் !

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு. படிச்சிட்டு சும்மா போவாம, இத்த உன்னோட பேஸ்புக், டுவிட்டர்-ல ஷேர் பண்ணிட்டு, அப்டியே ஷேர் ஆட்டோல அப்பீட் ஆயிடு.. சர்தானா..வரேன்ப்பா ..


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 9 ஜூன், 2015

எங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...

வணக்கம்,

"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்துட்டாங்க. இப்பெல்லாம் ஆ..உ.. ன்னா எல்லாரும் சென்னையை பத்தி குறை சொல்ல கிளம்பிடுராங்க. வேற மாவட்டங்களிருந்து சென்னைக்கு வந்தவங்க பல பேரு, சென்னையிலே ஒண்ணும் இல்ல... எங்க ஊரு சொர்க்கம், அங்க அது இருக்கு, இது இருக்கு, புல்லுக்கட்டு, புண்ணாக்கு, வெளக்கமாறுன்னு, பிகிலேடுத்து ஊத ஆரம்பிச்சுடராங்க... கேக்கவே செம காண்டா இருக்கு.

எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.


தமிழ்நாட்டை பொறுத்தவரை பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர் என்ற நிலைமையில் தான் பலரும் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து படிப்பவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா ???

சென்னை வாழ்க்கை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, சென்னை வாழ்க்கை மெஷின் வாழ்க்கைன்னும் சொல்றாங்க. அடப்பாவிகளா! நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க? உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும்? ரொம்ப ஓவரா இருக்கே!

வெளியூர்களில் நல்ல வேலையாக  இருந்தாலும், கூலி வேலையாக இருந்தாலும், சென்னையில் கிடைப்பதை விட அங்கு ஊதியம் கம்மியாய்தான் கிடைக்கிறது. நல்ல படிப்பு, மருத்துவம், வேலை, கை நிறைய சம்பளம் என சகலமும் இங்கு உண்டு. அதுக்கு தானே எல்லாரும் பாடுபடுறோம்.

நம்ம நாட்ல எங்கிருந்தெல்லாமோ படிக்கவும், வேலை தேடியும் சென்னைக்கு வராங்க. வந்து படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இங்கயே செட்டில் ஆயிடுராங்க. அப்புறம் ஜனத்தொகை எப்படி அதிகமாகாமல் இருக்கும். இருபது வருஷத்திற்கு முன், 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மெட்ராசை, இப்போ 420 சதுர கி.மீ ஆக்கிடாங்க. இன்னும் 50 வருஷத்தில 1000 சதுர கி.மீ ஆனாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை. இப்போதைய சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 லட்சம்! அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் ? இவங்களே வருவாங்கலாம்; சென்னை ரொம்ப பேஜாருனு சொல்வாங்களாம். தோடா..யாருகிட்ட..

இங்க வந்து செட்டிலான மக்கள் எல்லோரும் டூ-வீலர், கார்ன்னு வாங்குறாங்க. அவங்களோட போக்குவரத்து எல்லாம் சேர்த்து இன்னும் சென்னையை தூசியும், புகையுமா மாறிடுச்சி. வெள்ளி, சனிகளில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் கூட்டத்தை பாருங்க. எவ்வளவு வண்டி, எவ்வளவு புகை.. அப்புறம் என் சென்னை போக்குவரத்து மிகுந்த, கலீஜான ஊராக மாறாது?


அப்புறம் விலைவாசி. கொஞ்சம் அதிகம் தான். ஒத்துகிறேன். அதுக்கு சென்னை என்ன செய்யும்? அரசு எல்லோருக்கும் ஒரே விலையை தான் நிர்ணயம் செய்கிறது. மற்ற மாவட்டங்களில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் 'சென்னை', 'சென்னைபட்டினமாக' இருந்த காலம் முதல் இங்கு பெரிதாக விவசாயம் செய்வதில்லை. காய்கறி/ பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து தான் விற்கபடுகிறது. அதனால் தான் இங்கு பண்டங்களின் விலை கொஞ்சம் அதிகம். வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். முக்கிய சாலையை விட்டு கொஞ்சம் தள்ளி வீடு பார்தீர்களேன்றால் குறைந்த வாடகையில் வீடு கிடைக்கும். சிட்டி சென்டரில் வீடு, பக்கத்திலேயே பள்ளி, கடைவீதி, பஸ் ஸ்டான்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்றால் வாடகை அதிகமாக தான் இருக்கும். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.

ரொம்ப வெயில், மழை-  ஹ்ம்ம்.. இதெல்லாம் சென்னையின் சீதோஷ்ண நிலை. அதையெல்லாம் யாராலும் மாத்தமுடியாது. வெயில் காலத்தில் வெயில் அடிப்பதும், மழை காலத்தில் மழை கொட்டுவதும், குளிர்காலத்தில் குளிருவதும் எல்லா ஊரிலும் நடப்பது தானே. இதையெல்லாம் ஒரு குறையாக சொல்லலாமா? ரொம்ப போங்கா இருக்கே!

உங்க ஊரில் என்னன்ன இருக்கிறதோ, அது எல்லாமே எங்க ஊரிலும் இருக்கிறது. என்ன இங்கே வயல்வெளி, சோலைகள் கிடையாது. எல்லாம் கான்கிரீட் மயம். கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னையின் மத்தியில் ஓடி கொண்டிருகிறது. மக்களின் அறியாமை, அரசின் மெத்தனத்தால் ஆறு சாக்ககடையாகி விட்டது. ஆனால் சென்னைக்கு தண்ணீர் தர ஏரிகளும், லாரிகளும் இருக்கிறது.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

சில நாட்களாக இணையத்தில் வலம் வரும், சென்னை பற்றிய ஒரு ஆடியோ செய்தி.  http://goo.gl/KE1MPh

இந்த பதிவின் மூலம் வெளியூர் மக்கள் யாரும் சென்னைக்கு வர கூடாது என்றோ, உங்களால் மட்டுமே சென்னை கெட்டுவிட்டது என்றோ சொல்லவில்லை. "மெட்ராஸ் ரொம்ப போர்பா.. சிம்ப்லி வேஸ்ட்! " ன்னு சொல்ற டூபாகூர் டகால்டிகளுக்கு தான் இது. சென்னை பலருக்கு வேலையும், நல்ல வாழ்க்கையும் கொடுத்து கொண்டிருக்கிறது. தேவையில்லாம சென்னையின் பெயரை கெடுக்காதிங்க. உங்க ஊரு உங்களுக்கு சொர்க்கம்னா, எங்க சென்னை எங்களுக்கு சொர்க்கம்தான். இங்கேயும் சில மனுச பசங்க இருக்கோம்ன்னு தயவு செஞ்சு தெரிஞ்சுகொங்கபா...


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

கல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்

வணக்கம்,

இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே  இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா வாரம் போல இந்த சனியும் சாதாரணமாக தான் போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சென்றது.

போகவே வேண்டாம் என்று எண்ணியிருந்த 'அலுவலக தின' விழாவிற்கு போயே ஆக வேண்டும் என்ற நிலை. விழாவோ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. வர்த்தக மையம் போகும் வழியில் தான் போர் கல்லறைகளும், புகழ் பெற்ற புனித தோமையர் (பரங்கிமலை) தேவாலயமும் இருக்கிறது. விழாவை முடித்து விட்டு வரும் போது பார்க்கலாம் என்ற நினைத்து கொண்டேன். ஏற்கனவே இருமுறை கல்லூரி காலத்தில் போய் வந்த ஞாபகம். மீண்டும் ஒரு முறை போக எண்ணம். காலை பத்து மணிக்கு சென்று, விழாவின் பாதியிலிருந்து கலந்து கொண்டு வருகையை பதிவு செய்தேன். பதினொரு  மணிக்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் தப்பிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல், 2 மணி வரை இருந்து பார்த்துவிட்டு , ஓசியில் போடும் மதிய உணவை வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் நடையை  கட்டினேன்.

உடன் வேலை செய்யும் நண்பர் மதன் யேசுராஜயையும் தேவாலயம் போக (துணைக்கு) அழைத்து கொண்டேன். 'மதன்ஜி 'யுடன் எனக்கு சில நாட்களாக தான் பழக்கம். இருப்பினும், நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மதியம் மூன்று மணி வாக்கில், நாங்கள் இருவரும் போர்  கல்லறையை அடைந்தோம். உச்சி வேளையில் சுள்ளென வெயில் சுட்டு கொண்டிருந்தது. வெளியே ரோட்டிலிருந்து பார்த்தாலே கல்லறைகள் தெரியும். சுற்றியும் பச்சை பசேலென உள்ள புற்களுக்கு நடுவே கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலக போரின் போது, இந்தியா முழுவதும் உள்நாட்டு கலவரங்களிலும், இராணுவ முகாம்களிலும் இறந்த வீரர்களுக்காக இந்த போர் கல்லறை சின்னம் 1952-ல் எழுப்பப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு முன்னால் ஒரு பெரிய கல்வெட்டில் "THEIR NAME LIVETH FOR EVERMORE " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்தின் மூலையில், சில பூஞ்செடிகளும், மலர்கொடிகளும் கம்பதில் படர்ந்து ரம்மியமாக இருந்தது. அங்கு யாரோ இரண்டு ஜோடிகள் போட்டோ ஷூட்டில் இருந்ததால், அதனருகே செல்லாமல் விட்டுவிட்டோம்.

madras-war-cemmetry
சென்னை போர் கல்லறை
அடுத்து வண்டியை புனித தோமையர் தேவாலயத்துக்கு விட்டோம். டூ-வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, படிவழியாக மேலே ஏறினோம். 300 அடி உயரமுள்ள மலையில் 135 படிகள் இருக்கிறதாம். எண்ணிக்கை தெரிந்தவுடன் தான் கால் ரொம்ப வலிக்கிறது. வயிறு புடைக்க தின்றுவிட்டு, உச்சி வெயிலில் மலை படியேறி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. காலையில் மேகத்தில் இருந்த கருமை, மதியம் மலையேறும் போது எங்கள் முகத்திலும் வந்துவிட்டது (மதன்'ஸ் பன்ச்!).  படியேறும் வழியில் ஏசுநாதர் சிலுவை சுமந்து வருவது போலவும், காயங்களை குணமாக்குவது போலவும் சிலைகள் வடிக்க பட்டிருந்தன. பாதி மலையிலிருந்து பார்க்கும் போது, தென் சென்னையின் தோற்றத்தை கானல் நீரில் கண்டோம்.

மதன் ஏற்கனவே பல முறை இங்கு வந்துள்ளதால் தேவாலய வழிபாட்டை பற்றி சொல்லி கொண்டு வந்தார். ஏசுநாதரின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையர் (Saint Thomas), கி.பி.52 -ல் கேரளம் வழியாக இந்தியா வந்து மத போதகம் செய்துள்ளார். வங்க கரையோரம் மூன்று இடங்களில் (சின்ன மலை, புனித தோமையர் மலை மற்றும் & மைலாப்பூர் ) தங்கி மத போதகம் செய்துள்ளார். கடைசியாக கி.பி.72-ல் இங்கு (இன்றைய பரங்கிமலை) உயிர் நீத்தாக சொல்லபடுகிறது. அவர் இறந்தவுடன் பூதவுடல்  மைலாப்பூருக்கு (சாந்தோம்) கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1547-ல் காஸ்பர் கோல்ஹோ என்ற பாதிரியார் பரங்கிமலையில் இப்போதுள்ள தேவாலயத்தை கட்டியுள்ளார்.


மலையில் உள்ள பெரிய சிலுவை
தென்-சென்னையின் தோற்றம்-சென்னை ஏர்போர்ட்

தோமையரின் ரத்த கரையுள்ள சிலுவை

தோமையரின் RELIC


கி.பி.50-ல் வரையபட்ட ஓவியம்
 இத்தேவாலயத்தின் சிறப்பம்சமாக மலை மீது பெரிய Calvary (ஆணி கொண்டு அறையப்பட்ட இயேசுவின் உருவம் நடுவிலும் திருடர்கள் உடல் பக்கவாட்டிலும் கொண்ட சிலுவை) அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மலையின் மேல் மேரி மாதாவின் தேவாலயம் உள்ளது. அதில் முக்கியமாக, புனிதர் தோமையரின் இரத்த கரையுள்ள சிலுவை இருக்கிறது. இச்சிலுவை  இறக்கும் முன் அவரே செய்ததாம். ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகவே இரத்தம் கசியும் என்று சொல்கிறார்கள். சிலுவை அருகே கி.பி. 50-ல் புனிதர் லூக் -ஆல் (Saint Luke ) வரையப்பட்ட குழந்தை ஏசு மற்றும் மேரி மாதாவின் படமும் உள்ளது. ஏசு கிறுஸ்துவின்  பழங்கால ஓவியங்கள் தேவாலய சுவர்களை அலங்கரிகின்றன. தேவாலயம் அருகே ஒரு சிறிய தியான மண்டபமும் இருக்கிறது. அதில் புனிதர் தோமையாரின் RELIC-ல் (எலும்பு துண்டின் ஒரு சிறு பகுதி ) செய்யப்பட்ட சிலுவையும் உள்ளது.

இந்த திருகோவிலின் விசேஷங்களை எனக்கு விவரித்து கொண்டே இருந்தார் மதன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், கூகிளாண்டவர் இருப்பதால் தலையை மட்டும் ஆட்டி கொண்டேன்.

எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். தேவாலயத்துக்கு சென்றதில் மன திருப்தி கிடைத்ததோ இல்லையோ, ஓரு  நல்ல வரலாற்று பொக்கிஷமான இடத்தை பற்றி தெரிந்து கொண்ட சந்தோஷம் எனக்குள் இருந்தது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னையின் வயது 374 !

வணக்கம்,

ஆகஸ்ட் 22, 2013 - சென்னையின் வயது 374 (மெட்ராஸ் டே - Madras Day).

சிங்கார சென்னை - தமிழ் நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவில் வர்த்தக, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமான ஒரு பெருநகரம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை சேவைகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரம். இன்னும் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். நம் சிங்கார சென்னை நாளை (22 ஆகஸ்ட்) 375 ஆம் ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது. இப்பேர்பட்ட சென்னையின் சில வரலாற்று சம்பவங்களையும், காலச்சுவடுகளையும், நான் இணையத்தில் படித்து வியந்த சில வரலாற்று சரித்திர குறிப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.

நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...


கி.பி. 1-ஆம். நூற்றாண்டு (52-70) :
ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார்.

கி.பி. 2-ஆம். நூற்றாண்டு  :
தொண்டைமண்டலம் (இன்றைய சென்னை ), தொண்டைமான் இளம்திரையன் என்ற பல்லவ அரசனால் ஆளப்பட்டது.

கி.மு 5-ஆம். நூற்றாண்டு - :
திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். (~ கி.மு. 2 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.)

கி.பி. 7-ஆம். நூற்றாண்டு  :
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
 
கி.பி. 8-ஆம். நூற்றாண்டு  :
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் பல்லவ மன்னன் நரசிமவர்மனால் முதலில் கட்டப்பட்டது.

கி.பி. 16-ஆம். நூற்றாண்டு  :
சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

1522-ல் போர்த்துகீசியர்கள் (Portuguese) இந்தியாவிற்கு வந்து சென்னை மயிலாப்பூர் அருகே சாந்தோம் (São Tomé) என்ற துறைமுகத்தை கட்டினர்.

1523-ல் சாந்தோம் சர்ச் (San Thome Church) கட்டப்பட்டது. 

கி.பி. 17-ஆம். நூற்றாண்டு  :
1612-ல் டச்சுகாரர்கள் (Dutch) இந்தியாவிற்கு வந்து முதலில் பழவேற்காடு (Pulicat) பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, (British East India Company) 1626-ல் பழவேற்காட்டில் இருந்து 35 மைல் தூரமுள்ள துர்காபுரம் என்ற கிராமத்தில் தொழிற்சாலை கட்ட எண்ணினர்.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

23 ஏப்ரல், 1640-ல்  புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.


நாட்டின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில்
16 நவம்பர் தொடங்கப்பட்டது ; பின்னர் அது அரசு பொது மருத்துவமனை ஆக்கப்பட்டது.

1668-ல்  திருவல்லிக்கேணி கிராமம் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1672-ல் கிண்டி லாட்ஜ் (Guindy Lodge) கவர்னர் வில்லியம் லங்க்ஹோர்னே -ஆல் (Governor William Langhorne ) கட்டப்பட்டது.

1678-ல் காளிகாம்பாள் கோவில் கட்டி முடிக்கபட்டது.

1688-ல்  சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation) தொடங்கப்பட்டது.

1693-ல் எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் தண்டையார்பேட்டை  ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

கி.பி. 18-ஆம். நூற்றாண்டு:

1701-ல்  பேரரசர் அவுரங்கசீப்பின் ஜெனரல் தாவுத் கான் (General Duad Khan) புனித ஜார்ஜ் கோட்டையை தாக்கினான். எனினும், ஆங்கிலேய அரசு கோட்டையை தக்க வைத்து கொண்டது.

திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தன்காடு   ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1735-ல் சின்னதறிபேட்டை (சிந்தாதரிபேட்டை) உருவாக்கபட்டது.

வேப்பேரி, பெரியமேடு , பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள்  சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1746-ல்  பிரஞ்சு  தளபதி லா போர்டோநாய்ஸ்  (La Bourdonnais) புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினான்.

1749-ல் சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1759-ல் பிரஞ்சு முற்றுகை முடிந்தது.

1767: ஹைதர் அலி முதல் முறையாக சென்னை நகரத்தை நோக்கி படையேடுத்தான்.

1768 ஆம் ஆண்டு சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது.

1772-ல் புனித ஜார்ஜ் கோட்டையில்  உள்ள பொது மருத்துவமனை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

1777-ல்  வீரப்பிள்ளை முதல் கொத்தவாலாக நியமிக்கபட்டார். அவர் பெயரை ஒட்டி 'கொத்தவால் சாவடி' பெயர் வந்தது.

1784-ல் முதல் செய்தித்தாள், மெட்ராஸ் கூரியர் (Madras Courier),  நிறுவப்பட்டது.

1785-ல்  சென்னையில் முதல் தபால் அலுவலக செயல்பாட்டை தொடங்கப்பட்டது.

1788-ல் தாமஸ் பாரி (Thomas Parry) என்ற ஆங்கிலேய வியாபாரி, சென்னையில் தொழிற்முறை வணிகம் ஆரம்பித்தார். அவர் பெயராலேயே இன்றைய பாரிஸ் (Parrys) உருவானது.

1794-ல் ஐரோப்பா வெளியே செயல்பட்டும் பழமையான அரசு சர்வே பள்ளி
(Government Survey School ) புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்டது (தற்போதைய அண்ணா பல்கலைகழகம் ).

நவம்பர் 24, 1794-ல் அமெரிக்க தூதரகம் சென்னையில் திறக்கப்பட்டது.

1798-ல் ராயபேட்டையில் அமீர் மஹால் ஆற்காடு நாவப்-ஆல் கட்டப்பட்டது. 

1795-ல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது.

கி.பி. 19-ஆம். நூற்றாண்டு:

1817-ல் சென்னை இலக்கிய சங்கம் (Madras Literature Society) நிறுவப்பட்டது.

1820-ல் ஆளுநர் தாமஸ் மன்ரோ (Thomas Munro) கிண்டி லாட்ஜ் கட்டடத்தை
ராஜ் பவனாக (Raj Bhavan)  ஆளுநர் மாளிகையாக மாற்றினார்.

1831-ல் முதல் வணிக வங்கி, மெட்ராஸ் பேங்க் (Madras Bank) நிறுவப்பட்டது.

1837-ல் சென்னை கிறிஸ்துவ கல்லூரி (Madras Christian College) தொடங்கப்பட்டது.

1841-ல்  ஐஸ் ஹவுஸ் (Ice House) கட்டப்பட்டது. ஐஸ் (Ice) கப்பல்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து  இருந்து கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டது.
பின்னர் விவேகானந்தர் இல்லம் என பெயர் மாற்றம் பெற்றது.

1842-ல் முதல் கலங்கரை விளக்கம்  கட்டப்பட்டது.

1846-ல்  பச்சையப்பன் பள்ளி நிறுவப்பட்டது; பின்னர் பச்சையப்பன் கல்லூரியாக மாறியது.

1851-ல்  சென்னை அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

1853-ல் பார்க் டவுனில் (Park Town) உயிரியல் பூங்கா கட்டப்பட்டது.

1856-ல்  ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில்வே லைன்  (Railway line) கட்டப்பட்டது. முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது.

1857-ல்  சென்னை பல்கலைக்கழகம் (Madras University) நிறுவப்பட்டது.

1862-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court)  கட்ட ஆணை பிறப்பிக்கபட்டது.

1863-1864 ல் ஸ்பென்சர் பிளாசா  (Spencer Plaza) மதராஸ் மாகாணத்தில், மவுண்ட் ரோடு  சார்லஸ் டூரன்ட் ( Charles Durant ) மற்றும் ஜே ஸ்பென்சர் (J. W. Spencer), ஆகியோர்களால் நிறுவப்பட்டது.

1864-65-ல்  பிரெசிடென்சி கல்லூரி (Presidency College) நிறுவப்பட்டது.

1869-ல் நேபியர் பாலம் (Napier Bridge), அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பிரான்சிஸ் நேபியர் (Napier Francis) என்பவரால் கட்டப்பட்டது.

1873-ல் சென்னை சென்ட்ரல்(Chennai Central) ரயில் நிலையம் பார்க் டவுன்
(Park Town) நகரில் கட்டப்பட்டது.


1876-1878-ல் பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) தோண்டப்பட்டது.

1876-78 -ல் சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது.

1878-ல்  'தி இந்து' (The Hindu) செய்தித்தாள் நிறுவப்பட்டது.

1881-ல்  சென்னை துறைமுகம்  உருவாகியது.

1884-ல் அப்போதைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்  (Mountstuart Elphinstone Grant Duff) என்பவர்  சீர்ப்படுத்தி மெரினா (Marina) என்று பெயரிட்டார்.

1886-ல் கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) நிறுவப்பட்டது.

1889-ல்  உயர் நீதிமன்ற கட்டிட அடித்தளம் போடப்பட்டது.

1892-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court) நிறுவப்பட்டது.

1895-ல்  முதல் டிராம் வண்டி (Tram Service) சேவை தொடங்கி உள்ளது.

1899-ல் முதல் தமிழ் நாளிதழ் சுதேசிமித்திரன்  நிறுவப்பட்டது.

கி.பி. 20-ஆம். நூற்றாண்டு:
 
1906-ல்  இந்தியன் வங்கி (Indian Bank) நிறுவப்பட்டது.

1908-ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் (Chennai Egmore) கட்டப்பட்டது.

1914, செப்டம்பர் 22-ல் எம்டன் (Emden), ஜெர்மானிய போர்க்கப்பல் சென்னை துறைமுகத்தை தாக்கியது.

1916-ல் சென்னை கிரிக்கெட் கிளப் மைதானம் (Madras Cricket Club Ground) நிறுவப்பட்டது.( தற்போதைய M.A .Chidamdram Stadium )

1917-ல்  முதல் விமானம் சேவை ஆரம்பம்.

1925-ல்  லயோலா கல்லூரி (Loyala College) நிறுவப்பட்டது.
சென்னையில் முதல் பேருந்து சேவை தொடக்கம்.

1930-ல் கடலில் முழ்கி கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய டச்சு (Dutch) கப்பலோட்டிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் மெமோரியல் (Karl Schmidt Memorial)  கட்டப்பட்டது.

1931-ல்  புறநகர் மின்சார ரயில் சேவைகள் (சென்னை கடற்கரை- தாம்பரம்) தொடங்கியது.

1934-ல்  ராஜா சர் முத்தையா செட்டியார்  முதல் நகர மேயராக  (Mayor) நியமிக்கப்பட்டார்.

1938-ல்  ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) நிறுவப்பட்டது.

1946-ல் மாம்பலம், சைதாப்பேட்டை, அரசு பண்ணை, புலியூர் , கோடம்பாக்கம், சாலிக்கிராமம் , அடையார்,ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை சென்னை நகருடன் இணைக்கப்பட்டது.

செம்பியம், சிறுவல்லூர், பெருவல்லூர், செம்பரம்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, மடுவங்கரை, வேளச்சேரி ஆகியவை   சென்னையுடன் சேர்க்கபட்டது.

1947-ல் இந்திய தேசிய கொடி புனித ஜார்ஜ் கோட்டை மீது பறக்க விடப்பட்டது.
சென்னை நகரம், சென்னை மாநில தலைநகராக தேர்வு செய்யப்பட்டது.

1952-ல்  நேரு உள் விளையாட்டரங்கம் (Nehru Indoor Stadium) கட்டப்பட்டது.

1955-ல் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தொடங்கப்பட்டது.

1959-ல்  எல்.ஐ.சி (LIC) கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி தொடங்கப்பட்டது.

1969-ல் சென்னை (Madras City),  தமிழ்நாட்டின் தலைநகரானது.

1974-ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது.

1975-ல் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

1976-ல் தற்போதுள்ள புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

1977-ல் கிண்டி தேசிய பூங்கா திறக்கப்பட்டது.

1983-ல்  உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.

1988-ல்  பிர்லா அறிவியல் கோளரங்கம் கட்டப்பட்டது.

1996-ல்  மதராஸ், சென்னை (Chennai) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி. 21-ஆம். நூற்றாண்டு:

2000-ல் சென்னையில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் கால் பத்திக்க தொடங்கின.
தரமணியில் டைடல் பார்க் (Tidel Park) திறக்கப்பட்டது.

2002-ல் சென்னை கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) திறக்கப்பட்டது.

2004, டிசம்பர் 26-ல் சுனாமி பேரலையால் சென்னை மற்றும் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது.

2010, ஜனவரி 11-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் (அ ) தமிழ் நாடு தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றம் வளாகம் திறக்கப்பட்டது.

2011, ஆகஸ்ட் 19-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் பல்சேவை  மருத்துவமணையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

(தகவல்: விக்கிபீடியா / கூகுள் )
மேலும் பழைய சென்னை படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்