religion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
religion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

கல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்

வணக்கம்,

இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே  இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா வாரம் போல இந்த சனியும் சாதாரணமாக தான் போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சென்றது.

போகவே வேண்டாம் என்று எண்ணியிருந்த 'அலுவலக தின' விழாவிற்கு போயே ஆக வேண்டும் என்ற நிலை. விழாவோ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. வர்த்தக மையம் போகும் வழியில் தான் போர் கல்லறைகளும், புகழ் பெற்ற புனித தோமையர் (பரங்கிமலை) தேவாலயமும் இருக்கிறது. விழாவை முடித்து விட்டு வரும் போது பார்க்கலாம் என்ற நினைத்து கொண்டேன். ஏற்கனவே இருமுறை கல்லூரி காலத்தில் போய் வந்த ஞாபகம். மீண்டும் ஒரு முறை போக எண்ணம். காலை பத்து மணிக்கு சென்று, விழாவின் பாதியிலிருந்து கலந்து கொண்டு வருகையை பதிவு செய்தேன். பதினொரு  மணிக்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் தப்பிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல், 2 மணி வரை இருந்து பார்த்துவிட்டு , ஓசியில் போடும் மதிய உணவை வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் நடையை  கட்டினேன்.

உடன் வேலை செய்யும் நண்பர் மதன் யேசுராஜயையும் தேவாலயம் போக (துணைக்கு) அழைத்து கொண்டேன். 'மதன்ஜி 'யுடன் எனக்கு சில நாட்களாக தான் பழக்கம். இருப்பினும், நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மதியம் மூன்று மணி வாக்கில், நாங்கள் இருவரும் போர்  கல்லறையை அடைந்தோம். உச்சி வேளையில் சுள்ளென வெயில் சுட்டு கொண்டிருந்தது. வெளியே ரோட்டிலிருந்து பார்த்தாலே கல்லறைகள் தெரியும். சுற்றியும் பச்சை பசேலென உள்ள புற்களுக்கு நடுவே கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலக போரின் போது, இந்தியா முழுவதும் உள்நாட்டு கலவரங்களிலும், இராணுவ முகாம்களிலும் இறந்த வீரர்களுக்காக இந்த போர் கல்லறை சின்னம் 1952-ல் எழுப்பப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு முன்னால் ஒரு பெரிய கல்வெட்டில் "THEIR NAME LIVETH FOR EVERMORE " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்தின் மூலையில், சில பூஞ்செடிகளும், மலர்கொடிகளும் கம்பதில் படர்ந்து ரம்மியமாக இருந்தது. அங்கு யாரோ இரண்டு ஜோடிகள் போட்டோ ஷூட்டில் இருந்ததால், அதனருகே செல்லாமல் விட்டுவிட்டோம்.

madras-war-cemmetry
சென்னை போர் கல்லறை
அடுத்து வண்டியை புனித தோமையர் தேவாலயத்துக்கு விட்டோம். டூ-வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, படிவழியாக மேலே ஏறினோம். 300 அடி உயரமுள்ள மலையில் 135 படிகள் இருக்கிறதாம். எண்ணிக்கை தெரிந்தவுடன் தான் கால் ரொம்ப வலிக்கிறது. வயிறு புடைக்க தின்றுவிட்டு, உச்சி வெயிலில் மலை படியேறி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. காலையில் மேகத்தில் இருந்த கருமை, மதியம் மலையேறும் போது எங்கள் முகத்திலும் வந்துவிட்டது (மதன்'ஸ் பன்ச்!).  படியேறும் வழியில் ஏசுநாதர் சிலுவை சுமந்து வருவது போலவும், காயங்களை குணமாக்குவது போலவும் சிலைகள் வடிக்க பட்டிருந்தன. பாதி மலையிலிருந்து பார்க்கும் போது, தென் சென்னையின் தோற்றத்தை கானல் நீரில் கண்டோம்.

மதன் ஏற்கனவே பல முறை இங்கு வந்துள்ளதால் தேவாலய வழிபாட்டை பற்றி சொல்லி கொண்டு வந்தார். ஏசுநாதரின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையர் (Saint Thomas), கி.பி.52 -ல் கேரளம் வழியாக இந்தியா வந்து மத போதகம் செய்துள்ளார். வங்க கரையோரம் மூன்று இடங்களில் (சின்ன மலை, புனித தோமையர் மலை மற்றும் & மைலாப்பூர் ) தங்கி மத போதகம் செய்துள்ளார். கடைசியாக கி.பி.72-ல் இங்கு (இன்றைய பரங்கிமலை) உயிர் நீத்தாக சொல்லபடுகிறது. அவர் இறந்தவுடன் பூதவுடல்  மைலாப்பூருக்கு (சாந்தோம்) கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1547-ல் காஸ்பர் கோல்ஹோ என்ற பாதிரியார் பரங்கிமலையில் இப்போதுள்ள தேவாலயத்தை கட்டியுள்ளார்.


மலையில் உள்ள பெரிய சிலுவை
தென்-சென்னையின் தோற்றம்-சென்னை ஏர்போர்ட்

தோமையரின் ரத்த கரையுள்ள சிலுவை

தோமையரின் RELIC


கி.பி.50-ல் வரையபட்ட ஓவியம்
 இத்தேவாலயத்தின் சிறப்பம்சமாக மலை மீது பெரிய Calvary (ஆணி கொண்டு அறையப்பட்ட இயேசுவின் உருவம் நடுவிலும் திருடர்கள் உடல் பக்கவாட்டிலும் கொண்ட சிலுவை) அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மலையின் மேல் மேரி மாதாவின் தேவாலயம் உள்ளது. அதில் முக்கியமாக, புனிதர் தோமையரின் இரத்த கரையுள்ள சிலுவை இருக்கிறது. இச்சிலுவை  இறக்கும் முன் அவரே செய்ததாம். ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகவே இரத்தம் கசியும் என்று சொல்கிறார்கள். சிலுவை அருகே கி.பி. 50-ல் புனிதர் லூக் -ஆல் (Saint Luke ) வரையப்பட்ட குழந்தை ஏசு மற்றும் மேரி மாதாவின் படமும் உள்ளது. ஏசு கிறுஸ்துவின்  பழங்கால ஓவியங்கள் தேவாலய சுவர்களை அலங்கரிகின்றன. தேவாலயம் அருகே ஒரு சிறிய தியான மண்டபமும் இருக்கிறது. அதில் புனிதர் தோமையாரின் RELIC-ல் (எலும்பு துண்டின் ஒரு சிறு பகுதி ) செய்யப்பட்ட சிலுவையும் உள்ளது.

இந்த திருகோவிலின் விசேஷங்களை எனக்கு விவரித்து கொண்டே இருந்தார் மதன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், கூகிளாண்டவர் இருப்பதால் தலையை மட்டும் ஆட்டி கொண்டேன்.

எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். தேவாலயத்துக்கு சென்றதில் மன திருப்தி கிடைத்ததோ இல்லையோ, ஓரு  நல்ல வரலாற்று பொக்கிஷமான இடத்தை பற்றி தெரிந்து கொண்ட சந்தோஷம் எனக்குள் இருந்தது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 16 ஜனவரி, 2014

கந்தசஷ்டி கவசமும் சுவிசேஷ கூட்டமும் !

வணக்கம்,

இந்த பதிவில் பக்தியும், மதம் சார்ந்த என்னுடைய கருத்துகளையும், கடவுள் நம்பிக்கையையும், அவைகளை பற்றி என் மனதில் பட்டதை இங்கே பகிர்கிறேன்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்ததால், எனக்கு இந்து சமய மந்திரங்கள், சாமி பாட்டெல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. வீட்டில் எதோ ஒன்றிரண்டு  சொல்லி கொடுத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் சொல்வது போல, தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும் என சொல்லிதான் என் வீட்டிலும் வளர்த்தனர். பள்ளியிலும் தப்பு செய்தாலோ, வால்தனம்/ விஷமதனம் செய்தாலோ, எல்லாம் வல்ல பரமபிதா தண்டிப்பார் என்று தான் போதித்தனர்.  பெற்றோருடன் பிள்ளையார் கோவிலுக்கு போனால் கூட, 'பாலும் தெளிதேனும்' சொல்லிவிட்டு, சிலுவை குறிபோட்டு 'ஆஃப்  ஜீசஸ் க்ரைஸ்ட் ஆமென் ' என்று தான் முடிப்பேன். ப்ரெயர் முடிந்ததும் அப்படி தான் எங்க பள்ளியிலும் சொல்லுவார்கள்.

பிறகு ஐயர்/ஐயங்கார் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளியில் படித்தேன்.  கொஞ்சம் மந்திரமும், ஸ்லோகமும் சொல்லி கொடுத்தனர். அவ்வபோது  பக்தி கதைகளும் சொல்லிக் கொடுத்தனர். என்னுடன் படித்த கிறுஸ்துவ, இஸ்லாமிய பிள்ளைகளுக்கும் அதுவே போதிக்கப்பட்டது. அப்போதும் எனக்கு பக்தியிலும், ஆன்மீகத்திலும் அதிகம் நாட்டம் இல்லை.


எனக்கென்னவோ இதுவும் ஒரு வகையில் கட்டாய மதபோதகம் போலதான் தெரிந்தது. சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கே தெரியாமல் இந்த கடவுள் தான் சிறந்தவர்; இந்த கடவுள் வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று மனதில் பதியவைத்து விடுகின்றனர். பள்ளிகூடத்தில் மாற்று மதத்தின்  நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் கற்று கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் கடவுள் பக்தியும், மதநம்பிக்கையும் பதிய வைப்பதை விட, நற்பண்புகளையும், தேசபக்தியையும் வளர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

பின்னர் கல்லூரி காலங்களில் பகுத்தறிவு பேசும் நாத்திகன் போல என்னை காட்டிக் கொண்டேன். கோவிலுக்கு போவதில்லை. போகவும் இஷ்டமில்லை. யாரவது கேட்டால், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி கொண்டேன். "கோவிலுக்கு போய் சாமியை நல்லா கும்பிடு.. அப்பதான் பரீட்சையில் பாஸ் ஆவாய்..",  என்று கூறினார்கள். "கடவுளா வந்து பரீட்சை பேப்பரை திருத்த போறார்?"  என நக்கலாக கூறிவிட்டு போய்விடுவேன். ஆயினும், செமஸ்டர் ரிசல்ட் வரும் போது ரிஜிஸ்டர் நம்பரை டைப்பிவிட்டு, ரிசல்ட் விண்டோஸ் ஸ்க்ரீனில் தெரியும் வரை (30 நொடி முதல் 2 நிமிடதிற்குள்) குறைந்தது 200 முறையாவது முருகனையும், அவர் அண்ணனையும் கூப்பிட்டு விடுவேன்.

பிற்காலக்தில், வேலை தேடும் போதும், இண்டர்வ்யூ போகும் போதும்,  இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வேன். அவ்வளவுதான் என் பக்தி மார்க்கம். மொத்தத்தில் எல்லோரையும் போல, கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கும் சாதாரணன் நான்.

**********

சில மாதங்களுக்கு முன் தொலைக்கட்சியில் ஒவ்வொரு சேனல்களாக மாற்றி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சேனலில் பிரதர் (பொதுவாக கிறுத்துவ மதத்தில்  நன்னெறிகளை போதிப்பவர், பிரதர் (Brother) என்று தான் சொல்கின்றனர் ) ஒருவர் சுவிசேஷ கூட்டம்  ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். சரி ! என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் அவர் கூறிய 'ஞான உரையை' கேட்டேன். பதினைந்து நிமிடம் கேட்டிருப்பேன் . தாங்க முடியல! இதுவரை  நீங்கள் (கிறுஸ்துவர்  அல்லாத) எந்த ஒரு சுவிசேஷ கூட்ட உரையை கேட்கவில்லை என்றால் ஒரு முறை கேட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்!

"என்னடா,  இவன் ஒரு மத கலவரத்தை உண்டாக்காமல் இருக்க மாட்டான் போலயே !!!" என்று நீங்கள் எண்ணினால், அதற்கு நான் பொறுப்பல்ல. மிச்சத்தையும் படித்து விட்டு என்னை திட்டவா, வேண்டாமா என்று முடிவு எடுக்கவும்.

சேனலில் நடந்து கொண்டிருந்த சுவிசேஷ கூட்டத்தில், அவர் ஒன்னும் தப்பாகவோ அல்லது மாற்று மதத்தினரையோ அவமதித்தோ பேசவில்லை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பைபிள் வசனங்களையும், மேற்கோள்களையும், கிறுஸ்துவின் மதம் சார்ந்த சிறு சிறு நீதி கதைகளையும், நல்ல அறிவுரைகளையும் தான் சொல்கிறார். கூட்டத்தில் கிட்ட தட்ட 1000 பேராவது இருப்பார்கள். உட்கார்ந்து கேட்கும் மக்களுக்கு இதெல்லாம் அவர்களுக்கே தெரியாதா ? அல்லது புரியாதா ? எனக்கு புரியவே இல்லை. சமீபத்தில் ஒரு  திரைபடத்தில் கூட கதாநாயகன், திருமண மேடையில் நின்று சுவிசேஷ கூட்டத்தில் பேசும் தோரணையில் எதோ இங்கிலிபீசில் பினாத்துவார். (பினாத்தியது ஹீரோ மட்டுமே...)

இத்தனை பேர் கேட்கும் போது, நமக்கு ஏன் புரியவில்லை / பிடிக்கவில்லை என யோசித்தேன். எனக்கு மட்டுமல்ல. மக்கள் பலரும், மாற்று மதத்தினரின் வழிபடுதலை, வழிபாட்டு முறையை கேட்க  அல்லது அறிய விரும்புவதில்லை. நம்மவர்களுக்கு கந்த சஷ்டிகவசத்தையோ, சுப்ரபாதமோ கேட்டால் பக்தி மார்க்கத்தில் உருகி விடுவார்கள். பலருக்கு பாட்டின் அர்த்தமே புரியாத போதும், வெறும் சாமி படத்தை காட்டினாலே பக்தியில் முழ்கி கன்னத்தில் தப்பு போட்டு கொள்வார்கள். இதே பாடல்களை வேற்று மதத்தினர் கேட்டால், எப்படி ஒன்றுமே புரியாதோ, அது போல தான் நமக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்தின் அருமை பெருமை தெரியவில்லை என நினைத்து கொண்டேன்.

இந்துகளுக்கு சுப்ரபாதம்,சஷ்டிகவசம், திருப்பாவை, சிவ புராணம், கீதை என முப்பது முக்கோடி தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் துதிபாடல்கள், கிளை கதைகள் என்று பலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றி வரப்படுகிறது. கிறுஸ்துவ மதம் செயின்ட் தாமஸ் என்பவரால் கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கிறுஸ்துவை போற்றி பாடப்பட்ட துதி பாடல்களும், இது போன்ற கூட்டு பிரார்த்தனைகளும் தான் அவர்களுக்கு தேவாரமும், திருப்பாவையும்.

என்னை பொறுத்தவரையில் எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா மதங்களும், "நன்மையே செய்; நன்னெறி கொண்டு ஒழுக்கமாய் இரு" என்று தான் போதிக்கிறது. இதில் உயர்ந்த மதமென்றும், தாழ்ந்ததென்றும் என ஒன்றும் இல்லை. வழிபாட்டு முறையும், வழிப்பாடும் தான் வித்தியாசமே தவிர, எல்லா கடவுளும் ஒன்று தான். இது ஏன் பலருக்கு புரியவில்லை என்றுதான் எனக்கு தெரியவில்லை.

இவ்வளவும் படித்துவிட்டு, இவன் நம் மதத்திற்கு எதிராக பேசுகிறான், கேலி செய்கிறான் என்று நீங்கள் யோசித்தால், தயவு செய்து மீண்டும் இப்பதிவை முதலிருந்து படிக்கவும் !



நன்றி !!!

-பி .விமல் ராஜ்