tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூன், 2023

குமரிக்கண்டமும் லெமூரியாவும்!

வணக்கம்,

இந்த உலகமானது உருவான காலம் முதல் பல புவியியல் மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. நம் தொன்மையை விளக்கி சொல்ல இந்தியாவில் பெரும்பாலும் 2500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில இடங்களில் புராண சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் நமக்கு வரலாற்று ஆதாரமாய் கிடைத்துள்ளன. தமிழ் மொழியும் மற்றும் தமிழ் மக்களின் நிலமும் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. அதை சுற்றி பல கருத்து மோதல்கள், முரண்பாடுகள்,  வேறுபட்ட கோட்பாடுகள் என பல இருக்கின்றன. அதில் சில காலங்களாக பெரிதும் பேசப்படுவது குமரிக்கண்டம் பற்றி சர்ச்சைகளும் கருத்தாக்கங்களும் தான். அதனை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

லெமுரியா கண்டம்:
முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம். 1864-ல் ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டெர் (Philip Sclater) என்பவர்,  லெமுர் (lemur) என்னும் ஒருவகை குரங்கின விலங்கின் படிமங்கள் மடகாஸ்கர் தீவிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் இருப்பதை அறிந்தார். அது எப்படி கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இல்லாமல் நடுவில் பெரும் கடலால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா, மடகாஸ்கர் ஆகிய இரு நிலப்பரப்பில் ஒரே இனம் (species) இருக்க/இருந்திருக்க முடியும் என்பதை ஆராய்ந்தார். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கர், இந்தியாவின் தென் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா மூன்றும் இணைக்கப்பட்டு, ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும்; பின்னாளில் துருவ மாற்றம் (polar shift), டெக்டோனிக் தகடுகளின் மாற்றம் (tectonic plates shift), கண்டப் பெயர்ச்சி  (continental drift) ஆகிய புவியியல் காரணத்தினால் இங்குள்ள நிலப்பரப்பு கடலுக்குள் முழுகியிருக்கலாம் என அனுமானித்தார். அந்த தொலைந்த/ மூழ்கிய நிலப்பரப்பை "லெமுரியா கண்டம்" என பெயரிட்டு தன் கோட்பாட்டை முன் வைத்தார்.  இக்கருத்து சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்டாலும், பலர் இது வெறும் அனுமானம் மட்டுமே; உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவந்தனர். பின்வரும் நூற்றாண்டில்,  1912-ல் Alfred Wegener என்னும் ஜேர்மன் புவியியலாளர், பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டப் பெயர்ச்சியினால் pangea என்னும் எல்லா கண்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பிரிந்தது இப்போதுள்ள உலக வரைபடம் போல ஆனது என்பதை முன்வைத்தார். அதற்கு பிறகு லெமுரியா கண்டம் பற்றி பெரிதும் பேசப்படாமல் போனது. 

பின்னர் 1930-ல் சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமிழ் பேராசிரியர் குமரி நாடு என்றும், குமரிக்கண்டம் என்றும் தமிழர் நிலப்பரப்பை சொல்கிறார். லெமூரியாவை குமரிக்கண்டம் என்று முதன்முதலில் தம் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப் படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப் பட்டுள்ளது.

"பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது."

அடியாருக்குநல்லார் என்னும் புலவர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய சிலப்பதிகார உரையில், கடலில் தொலைந்து போனதக சொன்ன நிலப்பரப்பு தற்போதைய கன்னியாகுமரிலிருந்து தென்திசையில் 700 கவட்டம் (7500மைல்) தூரத்தில் குமரியாரும்,  பஃறுளியாறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சீன பழங்கதைகளில், தங்கத்தை வெட்டி எடுக்க பாண்டிய மன்னனால் சீன அடிமைகள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் குமரியாறு, பஃறுளியாறு என இரு ஆறுகளும், மேரு மலையும் இருந்ததற்கான சான்றுகளும் அதில் உள்ளது. 

தேவநேய பாவாணர் மற்றும் பிற தமிழ் அறிஞர்களும் தமிழர்கள் முதன் முதலில் இங்கு தான் தோன்றினர் என்று கூறியுள்ளார். ஆதிமனிதன் தோன்றிய இடமாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும், பின்னாளில் கடற்கோளால் அழிந்து கடலினுள் போயிருக்க கூடும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலப்பரப்பு பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதாகவும், கபாடபுரம், தென்மதுரை போன்ற நகரங்கள் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல இலக்கியங்கள் இங்குள்ள நகரங்களில் இயற்றப்பற்றிருக்க கூடும் என்றும் அதற்கான சான்று பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு என்று சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் 'நன்னீர் பஃறுளியாறும் குமரி நாடும் கொடும்கடல் கொண்டு போனதாக' பாடல் வரிகள் உண்டு. 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்துள்ளதாக குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில், தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (கி.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மற்றுமொரு ஆராய்ச்சியின்படி இந்துமா கடலுக்கடியில் மூழ்கிய நிலப்பரப்பு ஒன்று இருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆயினும் அஃது குறைந்தது 10,000 முதல் 15,000 ஆண்டுகள் முன் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது, இக்கருத்தின்படி அது குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில கூற்றுகள் உள்ளது. மேலும் குமரிக்கண்டம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில கடல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ளது. சில இடங்களில் 2000 மீட்டருக்கு மேல் கடல் ஆழம் இருக்கிறது. 

தமிழ் தேசியவாதிகளும், தமிழ் இன ஆதரவாளர்களும் இலக்கியத்தின் ஆதாரங்களை கொண்டு, குமரிக்கண்டம் இருந்ததாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியின்படி குமரிக்கண்டம் நிரூபணம் ஆகாத ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்திய அரசாங்கம் இது போன்று கடலில் மூழ்கிய நகரங்களின் (பூம்புகார், கொற்கை..) பெருமையும், அதன் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகளிடைய நம் தொன்மையும் பெருமையும் பறைசாற்ற வேண்டும். நிலையான அதிகாரபூர்வ தொல்பொருள் ஆதாரம் வரும் வரையில், இது போன்ற சர்ச்சைகளும் கருத்துக்களும் குமரிக்கண்டத்தை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்

வியாழன், 20 ஏப்ரல், 2023

மாறிய பண்பாட்டு அசைவுகள் !

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் மிக முந்தையது. தமிழரின் இலக்கியம், கல்வெட்டுக்கள், தொல்பொருள் அகழ்வாராய்வுகள், அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வகைப் மட்பாண்டங்கள், செங்கல் கட்டமைப்புகள், பண்டைய எழுத்து முறை, அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள், குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்து வடிவங்கள், ஆற்றுப்படுகைகளில் கிடைத்த நாணயங்கள், அரசர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், ஆகியன சங்க கால மக்களின் வாழ்க்கை ஒழுக்கத்தினை அறிய உதவும் சான்றுகளாக இருந்தன. தமிழ் மொழிக்கு எவ்வளவு புகழ் உள்ளதோ அதுபோன்று தமிழரின் பண்பாடுகளு அத்தகைய சிறப்பும், புகழும் நிலைத்து இருக்கிறது.

தமிழர் பண்பாடு என்பது கலை, இலக்கியம், உணவு, உடை, பழக்கவழக்கம், வழிபாட்டு முறை என அனைத்தும் கலந்தது. தொன்ம குடிகளாய் இருந்த நாம், அன்று போல இன்றும் அதே பாரம்பரிய பண்பாட்டில் தான் வாழ்கின்றோமா என்றால் 'இல்லை' என்பதே அதற்கு உண்மையான பதிலாகும். காலத்திற்கு ஏற்றார் போல கொஞ்சம் கொஞ்சமாக நம் பண்பாடும், வழக்காற்றாலும் மாறிக்கொண்டே வந்துள்ளது. பன்முக கலாச்சாரங்கள் கலக்கும் போது இத்தகைய மாற்றங்களை தடுக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

tamilar-panpaattu-maatrangal

உணவு :
தமிழரின் உணவு என்பது மண் சார்ந்த வாழ்வியலோடும், பண்பாட்டோடு கலந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதைப்பற்றி ஏற்கனவே முந்தைய பதிவில் எழுதியுள்ளேன் (நீரும் சோறும் - தமிழர் பண்பாடு !).

உடை:
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று புறநானூற்றில் சொல்லப்படுவது போல பண்டைய தமிழர்கள் மேலாடை, கீழாடை என இரு வகையான ஆடைகளுடனிருந்தமையால் பெண்களும் அவ்வாறே இருந்திருப்பார்கள். பருவகால மாற்றத்தின் போது உடைகள் வேறுபட்டிருக்கலாம். அரச குலத்தவர் மட்டுமே கணுக்கால் அளவு துணி உடுத்தியிருப்பதும், மற்றவர்கள் முழங்கால் வரை கட்டப்பட்ட அரையாடையினையே உடுத்தியிருப்பதும் இயல்பாக ஒன்றாக இருந்துள்ளது. சிலப்பதிகாரத்திற்கு முந்தைய காலங்களில் பெண்கள் மேலாடை அணித்துள்ளதாக ஏதும் குறிப்பில்லை. 9ஆம் நூற்றாண்டு முன்னர் கோவில்களில் வடித்த பெண் சிற்பங்கள் பெரும்பாலும் மார்பு கச்சை இல்லாமல் இருப்பதாய் கொண்டு அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாகவும் சொல்கின்றனர்.

'புடைவை' என்னும் சொல் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளும் நீண்ட துணியினையே குறிக்கும். திருநாவுக்கரசர் தமது பாடலில் 'வெண்புடைவை மெய் சூழ்ந்து' என சமண துறைகளில் உடையை சொல்கிறார். 15ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் விஜயநகர பேராசின் ஆட்சியில் தான் புடவை 14,16,18 முழ சேலைகள் கட்டும் வழக்கம் வந்தது. சாதிப்படி நிலைக்கு ஏற்றார் போல புடவை தலைப்பை இடது/வலது தோல் மாற்றி கட்டும் வழக்கமும் உருவானது. ஆண்கள் அணியும் மேல் சட்டையும், அரைக்கால் / முழுக்கால் சட்டையும் நவாப்புகளும், ஆங்கிலேயரும் வந்த பின்னரே இப்பழக்கம் வந்துள்ளது .

பண்டிகை:
தமிழர்களின் தனிபெரும் திருவிழாவாக இருப்பது தைப்பொங்கல் திருநாள் ஆகும். தை மாதத்தில் உழவர் மக்கள் அறுவடை காலத்தில் கொண்டாப்படும் ஓர் முக்கிய பண்டிகையாக இருக்கிறது. சமய எல்லையினை கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு விழாவாகவும் இருக்கிறது. பிறப்பு, இறப்பு போன்ற தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது. பொங்கல் திருவிழாவின் போது திருவிளக்கின் முன் படையலில் கரும்பும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை பார்க்கலாம். கிழங்கு வகைகளில் சேனை கிழங்கு, கருணை, சிறுக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவற்றை படைப்பார்கள்.

பொங்கல் போலவே பெரிதும் கொண்டாடப்படும் மற்றொரு பண்டிகை சிறுவீட்டு பொங்கலாகும். மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுதில் எழுந்து, வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டைகளில் பூ (பீர்க்கம், பூசணி, செம்பருத்தி) சொருகி வைக்கும் வழக்கம் இருந்த்துள்ளது. இவ்வாறு வாசலில் பூ வைக்கும் வீடுகள் பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும். மார்கழி மாதம் பெளர்ணமி அன்று தொடங்கி, தை மாதம் பெளர்ணமி அன்றுதான் ஆண்டாளின் நோன்பு முடிவடைகிறது. தைப்பூச தினதிற்கு முன்பே, அப்பெண் பிள்ளைகள் களிமண்ணில் சிறு வீடுகட்டி, பொங்கல் இட்டு , தனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய பெண் குழந்தைகள் இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இப்போன்ற சிறு வீட்டு பொங்கல் இந்திராவும் தென் மாவட்டங்களில் நடந்து வருகிறது. தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி என்னும் சிவராத்திரி , சித்திரை பிறப்பு, வைசாசி விசாகம், ஆடி பதினெட்டாம்பெருக்கு ஆகிய பண்டிகைகள் தமிழ்நாட்டில் சைவமும் சமணமும் தழைத்தோங்குவற்கு முன்பே தமிழர்களால் கொண்டாடப்பட்டவை ஆகும்.

இன்று பெரும் தமிழர் பண்டிகை போல கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தமிழரின் பாரம்பரிய பண்டிகை அல்ல. ஆரிய படையெடுப்பிற்கு பின்னர், புராண கதைகளில் வரும் கண்ணன் நரகாசுரனை அழித்த நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் இராமன் ராவணனை கொன்று அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் சமண மாதத்தில் 24ஆம் தீர்த்தங்கரர் இறந்த நாளில் விளக்கேற்றி கொண்டாடப்பட்டு வந்தது; அதை மழுங்கடித்து திசை திருப்பவே நரகாசுரன் இறந்த நாளில் பட்டாசு வெடித்து, விளக்கேற்றி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

தாலி கட்டுதல்:
இப்போதைய தமிழர் திருமண விழாவின் போது மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்வு ஓர் முக்கிய அம்சமாக விளங்குகிறது. தாலி கட்டுதலை மையமாய் வைத்து பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறன்றன. தொன்ம காலங்களிலும், சங்க இலக்கிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் தாலியை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. இதன் மூலம் பண்டைய காலத்தில் தாலி காட்டும் வழக்கம் இருந்ததில்லை என்பதாக அறியமுடிகிறது.

தாலி என்பது காதணி, மூக்கணி, விரலணி போல கழுத்தில் அணியும் ஒரு அணிகலன்களாக அணிந்துள்ளனர். மேலும் தீயவை அண்டாமலிருக்க இடுப்பில் அரைஞாண் கயிறு, தாயத்து, நாய் காசு, அரசிலை, மணி போன்றவற்றை கட்டியுள்ளதாக குறிப்புள்ளது. மேலும் வீரத்தின் அடையாளமாக ஆண்கள் புலிப்பல்லை கயரிலோ/சங்கிலியிலோ கோர்த்து போட்டுக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது.

தாலி என்னும் சொல்லின் வேர் அறியபடவில்லை. ஆயினும் ஒரு சிலரின் கருத்துக்கள் படி, தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்ததுள்ளதாக சொல்கின்றனர். தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருளாகும். பனை ஓலைத் தாலி, அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து தாலியாய் ஆக்கினர். பொன்னாலான தாலியில் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்றாப்போல உருவத்தில் மாறுபடும். அது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறிக்கும் விதமாகவும் இருக்கிறது. உணவு சேகரிக்கும் வழக்கம் உடைய சிலர் கழுத்தில் தாலிக்கு பதிலாக காரை கயிறை காட்டுவார்கள். கழுத்தில் இருக்கும் காரை எலும்புடன் ஒட்டி இருப்பதால் அது 'காரை கயிறு' என்ற பெயர்பெற்றது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் திருமண சேவையை பற்றி பாடும் போதும் எல்லா அணிகலன் பற்றியும் சடங்குகள் பற்றியும் பாடியுள்ளார். ஆனால் அதிலும் தாலியை பற்றி பாடலோ/குறிப்போ ஏதுமில்லை. கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றில் தாலி கட்டுதலோ, தாலி என்ற சொல்லோ வழக்கில் இல்லை. இதை பல தமிழ் ஆய்வாளர்களும் புலவர்களும் உறுதியாக சொல்லியுள்ளனர். அதன் பின் தான் திருமணங்களில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதனை புனிதமான மங்கள பொருளாக மாற்றியுள்ளனர்.

கோவில் வழிபாடு:
பெரு தெய்வ வழிபாடு என்பது சைவ வைணவ முறையில் வழிபடப்படும் தெய்வங்களான சிவன், பார்வதி, திருமால், லட்சமி, கண்ணன், நவகிரகங்கள் ஆகியன ஆகும். பண்டைய தமிழர்கள் சிறுதெய்வ வழிபாட்டு முறையே பெரிதும் பின்பற்றினார்கள். சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. ஐயனார், கருப்பு சாமி, சுடலைமாடன், மதுரை வீரன், மாரியம்மன், பேச்சியம்மன் போன்ற சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் நடக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டின் போது கண்டிப்பாக படையல் (பலி) கொடுக்கும் வழக்கம் இருக்கும். சில சிறுதெய்வங்களுக்கு படையலில் பொங்கலும், உளுந்து சுண்டலும், பானகமும் படைக்கப்படுகிறது. வேறு சில தெய்வங்களுக்கு ஆடு, கோழி, கிடாய், பன்றி என படையலாக வைக்கப்படுகிறது. சில காவல் தெய்வங்களுக்கு சுருட்டு, கள் என படைக்கப்படுவதையும் காண முடிகிறது.

பண்டைய காலத்தில் இப்போது உள்ளது போல கோவில் பூசைக்கு பார்ப்பனர்கள் உபயோகப்படுத்த படவில்லை. குருமார்கள் என்று சொல்லப்படுபவர்களே கோவிலில் பூசாரிகளாகவும், பூசை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த குருமார்கள் சாதி அடுக்கில் உயர்ந்தவர்களாக இருக்கவில்லை. மாறாக சடங்கு செய்யும் அந்தந்த சாதியினருக்கு தங்கள் சமூக படிநிலையில் கீழ்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். பறையர், மருத்துவர் (நாவிதர், குடிமகன்) ,வண்ணார் , வள்ளுவர், வேளார் (மண்பாண்டம் செய்வோர்), பண்டாரம் (நந்தவனம் வைத்து பூத்தொடுப்பவர்) ஆகிய சாதிகளை சேர்ந்தோர் குருமார்களாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை பழனி, இராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் பண்டாரம் என்போர் குருமார்களாக இருந்து கோவிலுக்கு சேவகம் செய்துள்ளனர். ஆனால் நாயாக்கர் காலத்தில் இவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு அவை பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள நமது பண்பாடு எவ்வளவு மாறுதலுக்கு பின்னர் நாம் பின்பற்றிவருகிறோம் என்பதை இதன் மூலம் அறியலாம். இதைத்தவிர நாமறியா பண்பாட்டு தொன்மங்கள் பல இருக்கிறது. முன்பே சொன்னது போல சில நூற்றாண்டுகளில் படையெடுப்புகள், இனக்குழுக்களின் வருகை, சாதி/மதங்களின் குறுக்கீடுகள் என வரும் பொழுது, இது போல பல பண்பாட்டு மடை மாற்றங்களும், மாற்று கலாசாரமும் கலப்பது இயல்பான ஒன்றே ஆகும். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு என்னன்ன மாற்றங்கள் வரும் மிகவும் என்பதை காலமே முடிவு செய்யும்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்

நன்றி!!!
பி. விமல் ராஜ்

வியாழன், 30 மார்ச், 2023

நீரும் சோறும் - தமிழர் பண்பாடு

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் முந்தையது. மனித வாழ்வியலில் அதுவும் குறிப்பாக தமிழர் வாழ்வியலில் நீருக்கும் சோறுக்கும் முக்கிய இடம் உண்டு. அதனை பற்றிய சற்றே பெரிய பதிவு இது.

நீர்:
இப்போது போலவே பன்நெடுங்காலம் முதல் தமிழ்நாடு வெப்ப மண்டலத்தை சேர்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. எனவே நீரின் தேவையும், நீர் குறித்த நம்பிக்கையும், அதனை ஒட்டிய பண்பாடும் தமிழர் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

"இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என 10ஆம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழி இனிமையானது என்றும், (நீர்மை) தன்மையானது, இயல்பானது என்றும் பொருள் தரும். தமிழை நீருடன் ஒப்பிட்டு உயர்வாக சொல்கின்றனர். குளிர்ச்சியுடையது, தன்மையுடையது என்பதால் நீரை 'தண்ணீர்' என தமிழர்கள் சொல்கிறார்கள். நீரினால் உடலை குளிர்விப்பதால் குளி(ர்)த்தல் என சொல்கிறார்கள்.

திருக்குறளில் வானத்திலிருந்து நீர் (மழையாய்) வருவதால் அதனை அமிழ்தம் என்றும், நீரின்றி இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு"


சங்ககாலம் முதல் தமிழர்கள் நீர்நிலைகளை பல பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று ஆகிய நீர்நிலைகள் தானே நிலத்திலும் மலையிலும் ஊறி வரும் தன்மை உடையது. மழை நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் 'குட்டை' என அழைக்கப்படும். குளிப்பதற்கு பயன்படும் நீர் என்பதால் 'குளம்' என்றும், ஆற்றிலிருந்த்து பிரிந்து ஓடிக்கொண்டே இருப்பது 'ஓடை' என்றும், உண்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுவதால் 'ஊருணி' என்றும், ஏர் (உழவு) தொழிலுக்கு பயன்படும் நீர் 'ஏரி' என்றும், மற்ற நீரை சேர்த்து ஏந்தி வைக்கும் இடம் 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்து வந்தனர். இப்படி தமிழ் மொழியில் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களாகவே இருப்பது வியப்பு!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை.1800 ஆண்டுகளுக்கு முன் காவேரி கரையில் கட்டிய கல்லணை அதற்கு மிக சிறந்த சான்றாகும். மேலும் 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மிகப்பெரிய வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி), மதுராந்தகம் ஏரி என பல நீர்நிலைகளை கட்டி வீணாய் கடலில் கலக்கும் நீரை உழவுக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு செய்துள்ளனர்.

ஆற்று நீர் எப்படி ஒரு இடத்திலிருந்து மறுஇடம் போகிறதோ, அது போல தெய்வங்களும் இடம் பெயர்ந்து போகும் என்பது தமிழர் நம்பிக்கை. தெய்வ வழிபாட்டின் போது கரகம் குடங்களில் மஞ்சள் நீரை ஏந்தி வருவார்கள். மஞ்சள் நீர் கலந்த குடத்தை சாமியாடிகளின் தலையில் ஊற்றி குளிர்விப்பார்கள். அப்படி செய்தால் தெய்வம் குளிர்விக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

தமிழகம் வறண்ட பகுதி என்பதால், நெடுஞ்சாலைகளில் கோடைகாலத்தில் நீர்ப்பந்தல் வைப்பது அக்காலம் முதல் அறமாக பார்க்கப்பட்டது. வீடுகளிலும் செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி பூசை வேளையில் வைப்பார்கள். செம்பு குவளையிலும் நீரில் பூவையும், பூ இதழ்களையும் போட்டு வைப்பார்கள். இன்றளவும் (மஞ்சள்) நீராடுவதை ஒரு சடங்காகவே வைத்திருப்பவர்கள் நம் தமிழர்கள்.

நீரடித்து நீர் விலகாது.
தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
தாயையும் தண்ணீரயும் பழிக்கலாமா?

இது போன்ற பல பழமொழிகளும், மரபு தொடர்களும் நீரை வைத்து இயன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நம் வாழ்விலும், பண்பாட்டிலும் நீர் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறியலாம்.

Neerum soorum

சோறு:
நீரை போலவே தமிழர் பண்பாட்டோடு சோறு (உணவு) எப்படி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை படித்து ருசிகர புசிக்கலாம்.

ஆதி மனிதன் முதல் இன்று வரை அனைவரும் ஓடி திரிந்து வேலை செய்தது உணவுக்காக தான். காற்றையும் வெளிச்சத்தையும் உண்டு உயிர்வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தமிழர்கள் நிலங்களை ஐவகை திணையாய் பிரித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் விளைப்பொருட்கள், உற்பத்தி முறை, சமுக பொருளாதார படிநிலைகள் ஆகியவற்றை கொண்டு உணவு பழக்கவழக்கங்கள் அமையும். அத்தகைய சிறந்த வழக்கத்தையே தமிழர்கள் கொண்டிருந்தனர்.

குறிஞ்சித் திணை -  மலைநெல், மூங்கில் அரிசி, தினை

முல்லைத் திணை -  தினை, சாமை, நெய், பால்
மருதத் திணை -  செந்நெல், வெண்நெல், அரிசி
நெய்தல் திணை - மீன், உப்பு விற்று வரும் உணவுப் பொருள்
பாலைத் திணை - வழிப்பறியினால் வரும் பொருள்

இன்று போலவே அன்றும் தமிழர்கள் புலால் உணவான மீன், ஆடு, கோழி, மாடு, பன்றி ஆகிய  இறைச்சி வகைகளை சமைத்து உண்டு கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'சமைத்தல்' என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். அடுப்பில் வைத்து சமைப்பதால் அடுதல் என்றும் பொருள் தரும். சமையல் செய்யும் இடம் காட்டில் அல்லது அடுக்களை என்று அழைக்கப்பட்டது. வீட்டுக்கு கடைசியில் இருப்பதால் அடுப்பாங்கிடை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி அடுப்பங்கரை என ஆனது.  நீரிட்டு அவித்தல், வேக வைத்தால், வறுத்து வைத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிட்டு பொரித்தல், ஊறவிட்டு வேகவைத்தல் ஆகியவை சமையலின் முறைகளாகும். 

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர். கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள். 

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.

உப்பு
உணவில் சுவைக்காக சேர்த்து கொள்ளப்படுவது உப்பு. அந்த உப்பு நம் உணவிலும் வாழ்விலும் மனித குல வரலாற்றிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல் உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிதான். 

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள்.  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்கு பயன்படுத்தப்படும். உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர் பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும். 

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்கு மொழி. 'உப்பிட்டவரை உள்ளவும் நினை'; 'உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்',  போன்ற பழமொழிகள் மக்களின் வாழ்க்கை முறை உப்போடு கலந்துள்ளதை அறியலாம்.

பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர்’ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழிக் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

சோறு விற்றல் 
பண்டை காலத்தில் சோறு நீரும் என்றுமே விற்பனைக்கு இருந்ததில்லை. ஏனெனில் பசிக்கும் தாகத்துக்கும் வந்தவரிடம் காசு வாங்குவது பாவம் என்று என்னும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள். நெடுந்தூரம் பயணிப்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என பொதுமக்கள் தங்கவும் இளைப்பாறவும் சத்திரங்களும், சாவடிகளும் இருந்துள்ளன. போன நூற்றாண்டின் இடைப்பகுதி வரை பல உணவு/ அன்னதான சத்திரங்கள் நடைமுறையில் இருந்துள்ளதை அறியலாம். கோவில்களில் வழங்கப்படும் உணவு அடியார்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் மடப்பள்ளியில் சமைத்து கொடுக்கப்பட்டது. இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின. ஆங்கிலேயர் காலத்தில் தான் சாவடிகளும், சத்திரங்களும் உணவு விற்கும் சிறு கடைகளாக, ஓட்டல்களாக ஆரம்பிக்கப்பட்டன.

இது போல தமிழ் சமூகம் மற்றும் பண்பாடு சேர்ந்த பல விஷயங்களை நம் பண்டைய உணவு வழக்கங்கள் சொல்கின்றன. இன்று நாம் உணவில் உட்கொள்ளும் பல பதார்த்தங்களும் இத்யாதிகளும் கடந்த சில நூற்றாணடுகளில் சேர்க்கப்பட்டதாகும்.   

மானுடவியல் ஆராய்ச்சியாளர் தொ.ப. அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' மற்றும் தயாளன், ஏ.சண்முகநாதன் அவர்களின் 'மானுட வாசிப்பு-தொ.ப வின் தெறிப்புகள்' ஆகிய நூல்களை படித்து, அதன் மூலம் நான் தெரிந்து கொண்ட தமிழரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு தொன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதை போலவே பண்பாட்டில் மாறிய/மாற்றப்பட்ட மாற்றங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்


நன்றி!!!
பி. விமல் ராஜ்

புதன், 25 ஜனவரி, 2023

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை !

வணக்கம்,

சங்ககால இலக்கிய பாடல்களில் காதல், வீரம், பாசம், அன்பு, கோபம், கருணை என பல சுவைகள் உள்ளது. அதில் நகைச்சுவை என்பது இன்றியமையாதது ஆகும். நமது தமிழ் இலக்கியங்களில் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி என நகைச்சுவை கலந்து ஒரு செய்தியையோ, கருத்தையோ சொல்வது சர்வசாதாரண ஓன்று. அவற்றுள் சிலவற்றை படித்து ரசிக்கலாம்.


nagaichivai-tamil-illakiyam

நந்திக்கலம்பகம் என்னும் இலக்கியத்தில், தலைவன் (ஆண் - பொதுவாக கணவன்) ஒருவன் பரத்தையர் (வேசி) வீட்டுக்கு செல்கிறான். கூடவே பாணன் (அரசவையில் பாட்டு/இலக்கியம் பாடுபவர்) ஒருவனையும் அழைத்து செல்கிறான். தலைவன் பரத்தையுடன் மகிழ்வுற்று இருக்கும் போது, பாணன் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே நின்று பாடிக்கொண்டிருக்கிறான். மறுநாள் காலையில் தலைவியிடம் (பெண் - மனைவி) சேதி சொல்ல தலைவன் வீட்டுக்கு வரும் பாணன், தலைவிடம் நான் பாடியதை கேட்டீரா என கேட்கிறான். அதற்கு தலைவியும் மனதில் கோபமும் எரிச்சலும் கொண்டு, கிண்டலும் நையாண்டியுடனும் இப்பாடலை சொல்கிறாள்.


" ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர் தம்
வீட்டிலிருந்து பாட விடிவளவும்கேட்டிருந்தோம்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீ என்றேன் நான்
".


பொருள் - புகழ் ஈட்டிய நந்திவர்மன் அரசவையில் பாடும் பாணனே! நீ என் தங்கையர் (பரத்தை ஆனாலும், கணவனுடன் இருப்பதால் தங்கை என சொல்கிறாள்) வீட்டில் இரவு முழுவதும் பாடியதை விடியும்வரை கேட்டோம். பேய் அலறுகிறது என்றால் என் அன்னை, மற்றவர்கள் நரி என்றார்கள், என் தோழி அது நாய் என்று சொல்ல; நான் நீ என்று சொன்னேன்! பாணன் பேசுவது பிடிக்காவிடிலும் அதை பாடலில் நயமாக கிண்டலும் கேலியுடனும் பாடியது இதன் சிறப்பாகும்.


திருக்குறள் நூலில் வள்ளுவர் கயவர் (தீயவர்), பேதையர் (முட்டாள்) ஆகியோரின் நட்பு, எண்ணம் பற்றி நயமாக சொல்லியுள்ளார்.


"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்
: 1073)


பொருள் - தேவர்களும் கயவர்களும் ஒப்பானவர்கள். ஏனெனில் இருவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியதை செய்வார்கள்கயவர்கள் எதையும் யோசிக்காமல், தாம் நினைத்த தீயதை செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார்.


"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)


பொருள் - பேதையர்கள் (முட்டாள்கள்) நட்பு கொள்வது இனிமையானது தான். ஏனெனில் அவர்களை பிரிந்து செல்லும் போது பெரும் வருத்தமோ கஷ்டமோ இருக்காது என முட்டாள்களை கிண்டல் செய்து பாடியுள்ளார்.


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (குறள்: 403)


கல்லாதவரும் நல்லவர்களே! எப்போது வரை என கேட்டல் அவர்கள் கற்றறிந்தவர்கள் முன் ஏதும் பேசதவரை என்று அவர்களில் கல்லாமையை பற்றி கூறி நகைத்துள்ளார்.


சிலேடை என்னும் இலக்கிய பாடல்களில், கவி காளமேகபுலவர் தம்மை மதிக்காத திருமலைராயன் அரசவையில் உள்ள 64 புலவர்களை நகைத்து கவி
ப்பாடியுள்ளார். அந்த 64 புலவர்களும் தங்களை கவிராஜன் என சொல்லி கொண்டனர். 


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால். 


பொருள் -  கவிகளின் அரசர் என்று சொல்லும் புலவர்களே! உங்களுடைய வால்  எங்கே ? நீண்ட வயிறு எங்கே? முன்னங்கால்கள் எங்கே? உள்ளோடிய கண்கள் எங்கே?  என கிண்டலும் கேலியுடனும் பாடியுள்ளார். கவிராஜன் என்னும் சொல்லுக்கு 'கவிகளின் அரசன்' மற்றும் 'குரங்கு' என இரு பொருள்படும். இவ்வாறு புலவர்களை குரங்குக்கு ஒப்பாக கேலி செய்துள்ளார்.


இன்னோரு சந்தர்ப்பத்தில், காளமேக புலவர் தாகத்திற்காக ஒரு பெண்மணியிடம் மோர் வாங்கி குடித்துள்ளார். மோரை குடித்துவிட்டு பின்வரும் பாடலை பாடியுள்ளார்.


கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.


பொருள் - ஆகாயத்தில் இருக்கும் போது மேகம் என்னும் பெயர் பெற்றாய்; தரையில் மழையாய் வரும் போது நீர் என்று அழைக்கப்பட்டாய்; கச்சை யணிந்த இந்த ஆயர்குல ஆச்சியிடம் இருக்கும் போது மோர் என்று அழைக்கப்படுகிறாய் ; ஆகவே மூன்று பேர்களையும் நீ பெருகிறாய் என்ன கிண்டலுடன் பாடியுள்ளார். இதன் பொருள் வேறொன்றும் இல்லை. மோர் தண்ணீரை போல இருக்கிறதாம். அதைத்தான் இப்படி சொல்கிறார்.


புறநானூறு பாடல்களில் அதியமானின் போர் தூதாக வந்த அவ்வையாரை தொண்டைமான் மன்னன் அவருடைய படைக்கெட்டிலுக்கு அழைத்து சென்று காண்பித்தான். அவனுடைய ஆயுதசாலையில் உள்ள படைக்கலன்கள் எல்லாம் புத்தம் புதிதாக பளபளவென இருந்தது. நீண்ட கூரான வேலும், ஈட்டியும், வளைந்த வில்லும்கூரான அம்பும் குவிந்து வைக்கப்பட்டிருந்தன. தொண்டைமான் தன் ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் ஒழுங்காக அடுக்கி வைத்துள்ளதை பெருமைகளாய் சொல்லி வந்தான். அதை கண்டா அவ்வையார் கீழே வரும் பாடலை பாடினார்.     


இவ்வே , பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி செய் அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே , அவ்வே
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் !


பொருள் - இங்கே (தொண்டைமான் ஆயுத கிடங்கில்) உன் ஆயுதங்கள் மயில்தோகையால் அலங்கரிக்கப்பட்டு , பீலி மலர்கள் பூண்டு பளபளப்புடன் இருக்கின்றன. உன் ஆயுதசாலையை சுற்றி காவல் இருக்கிறது; உன் படைக்கலன்கள் ஒருமுறையேனும் போரை கண்டதாய் தெரியவில்லை.  மினுமினுப்புடன் அப்படியே இருக்கிறது. ஆனால் அங்கு (அதியமான் ஆயுத கிடங்கில்) ஆயுதங்கள் முனை மழுங்கி, கூரில்லாமல், உடைந்து செப்பமிட வேண்டியதாய் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்களை உபயோகிக்கவே தெரியும், அழகு பார்க்க தெரியாது என்று கூறினார்.  
அதாவது நீ பளபளப்புடன் பத்திரமாய் வைத்துள்ளாய்; ஆனால் அவன் பல போர்களை கலந்து கொண்டு, வென்று ஆயுதங்கள் முனைமழுங்கி எப்போதும் போரிட தயாராய் இருக்கிறான் என அவ்வையார் சாமர்த்தியமாக பேசி போர் நடக்காமல் தடுக்கிறார். 


பாரதிதாசன் தம்முடைய இருண்ட வீடு என்னும் படைப்பில் வரும் ஒரு பாடல்:


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே

திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்

பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்

பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்

ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்

நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது

வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்

வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது

கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.

மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்

வில்லம்பு போல மிக விரை வாக

நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்

படபட வென்று பானையைத் தள்ளிக்

கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று

நின்ற பசுவின் நெற்றியில் மோதி

இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்

புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!


பொருள் - வடைக்கும் பிட்டுக்கும் ஆசைப்பட்ட ஒருவன், அதை தின்று வயறு கோளாறாகி கொல்லைக்கு ஓடிய செய்தியை நகைச்சுவையாய் கூறியுள்ளார்.


இது போல இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. ஒருவருக்கு பாடம் புகட்டவோ அல்லது கிண்டலுடன் தம் கருத்தை சொல்லவோ நம் தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும். வேறு ஏதேனும் நகைச்சுவை கலந்த பாடல் இலக்கியங்கள் உங்களுக்கு தெரியுமாயின், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்