politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜூன், 2024

மீண்டும் மோடி !

வணக்கம்,

தேர்தல் திருவிழா முடிந்து, முடிவுகளும் வந்தாகிவிட்டது. பெரும்பாலானோர் வீட்டில் நேற்று காலை 8 மணிமுதல் பல்வேறு சேனல்களிலும், இணையதளம் வாயிலாகவும் ரிசல்ட்டை பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்கள். முடிவு என்னவோ தேர்தலுக்கு முன்னமே தெரிந்து விட்ட போதிலும், ஏதாவது மாற்றம், ஏற்ற/இறக்கம் வருமா என பலரும் ஓட்டு எண்ணிக்கையை பார்த்துக்கொண்டே இருந்தனர். டி.வி சேனல்களும் அவரர் கட்சி விருப்பு, வெறுப்புக்கு ஏற்றது போல இஷ்டத்துக்கு ஒரு நம்பரை காட்டி முன்னிலை என சொல்லி கொண்டிருந்தனர். ஒரு சேனலில் NDA 220+ ; INDIA- 250+ என்றும் மற்றொரு சேனலில் NDA 275+ ; INDIA- 180+ என்றும் வாதிட்டு கொண்டிருந்தனர். இவர்கள் சொல்வதையெல்லாம் பார்ப்பவன் தான் மடையன் !

இம்முறையும் பா.ஜ.க.வே வென்று, மீண்டும் மோடியே பிரதமராக போகிறார். இவர்களது பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வென்றுள்ளது. இம்முறை எப்படியாவது தமிழ் நாட்டில் 10 இடமாவது வென்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த பா.ஜ.க, பல ராஜதந்திரங்கள் பயன்படுத்தியும், தமிழக சுற்று பயணம் வந்தும், ஸ்டார் வேட்பாளர்கள் நிறுத்தியும், திராவிட எதிர்ப்பு பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டது; குட்டி கரணம் அடிக்காத குறை ஒன்று தான். ஆனால் என்னதான் முட்டி மோதி(டி) யும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்!


ஏன் பா.ஜ.கவால், மோடியால் தமிழ் நாட்டில் ஜெயிக்க முடியவில்லை.? ஏன் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துத்வா தத்துவம் இங்கு எடுபடவில்லை.? என்ற கேள்விகளுக்கு இன்னும் புரியாமல் வடக்கில் பலர் சுற்றி கொண்டிருக்கின்றனர். 2019 தேர்தல் முடிவின் போதும் இதே போல ஒரு பதிவை பழைய பேப்பரில் எழுதி இருந்தேன். கிட்டத்தட்ட இதே content தான். 

தாமரை இங்கு மலராமல் போனதற்கு காரணம், தமிழ்நாட்டில் நாங்கள் ரொம்ப அறிவாளிகள், மெத்த படித்தவர்கள், இது பெரியார் மண் என்பதெல்லாம் இல்லை. அதற்கு காரணம் பா.ஜ.க. வே தான்!  

*) போன வாரம் வரையிலும் அவர்களின் பிரசாரத்தில் மத வெறுப்புணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. இந்துக்களின் நகைகளை பிடுங்கி இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்கள்; நம் பணத்தை/உடைமைகளை எடுத்து அதிகம் பிள்ளைகளை பெறும் சமூகத்துக்கு (முஸ்லீம்) கொடுத்து விடுவார்கள். கோவில்களை பராமரிக்காமல் விட்டு, மசூதிகளை கட்டுவார்கள் என நீட்டி கொண்டே போகிறார்கள். 

*) பத்து ஆண்டு கால சாதனையாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையே பெரிதாய் நினைக்கின்றனர். ஏதோ 30 வருடம் முன் இடித்து விட்டார்கள்; அசம்பாவிதம் நடந்து விட்டது; கலவரமும் நடந்து பலகாலம் ஆகி, வழக்கும் முடிந்துவிட்டது. ராமர் கோவில் கட்டி திறக்கும் முன், அங்கு நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் ஒரு மசூதியும் கட்டி திறந்திருந்தால், கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அதை தான் இவர்கள் செய்யவில்லையே! ராமர் கோவில் திறப்பதையே பெரிய வைபவம் போல நாடெங்கும் விமர்சையாக கொண்டாடி மற்றவர்களை கடுப்பேற்றினார்கள்.  

*) வாரணாசியில் ஞானவாபியில் உள்ள மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என பிரச்சனை கிளப்பி, இப்போது அங்கு மசூதி சுவற்றில் உள்ள இந்து சிலைகளுக்கு பூஜை செய்யலாம் என்று நீதிமன்றமும் சொல்லிவிட்டது. அடுத்து அவர்கள் கையில் எடுக்க போவது மதுரா ஷாஹி இடிகாஹ மசூதி (Shahi Idigah Masjid) என்று நினைக்கிறேன். போன மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வதற்க்கு பதிலாய் 'ஜெய் ராதே கிருஷ்ணா' என்று மேடையில் முழங்கியுள்ளார். அது எங்கே போய் முடியுமோ என தெரியவில்லை. 

*) குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியரின் வெறுப்பை மேலும் சம்பாதித்து கொண்டது பா.ஜ.க. இதனால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்ற போதிலும், அண்டை நாட்டிலிருந்து வரும் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் அனுமதி கிடையாது என்ற மனமே வெறுப்பின் அடையாளம் தான்.   

*) அங்கங்கே ஒன்றிரெண்டு நல்ல திட்டங்களும் செயல்படுத்தபட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். 

*) வீடு கட்டி தரும் அல்லது வீடு கட்ட மானியம் தரும் திட்டமும் பலருக்கு உதவியுள்ளது. அந்த வங்கி மூலம் வழங்கபடுவதால் சரியான ஆவணங்கள் வைத்திருப்போருக்கு உதவி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

*) வட மாநிலங்களில் நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே பல இடங்களில் அருமையாக போடப்பட்டுள்ளது. அது பெரிதாய் சொல்ல வேண்டிய விஷயம் தான். சில நகரங்களில் மேம்பாலங்கள், உட்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் செய்து கொடுத்துள்ளது.   

*) வடக்கில் இன்றும் சமையலுக்கு விறகு வெட்டி பயன்படுத்தும் மக்கள் பலர் இருக்கையில், இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தது பல ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்துள்ளது. ஆனால் கேஸ் விலை தான் ஏகிறிவிட்டது. மானியமாக 200/300 ரூபாய் பணம் வங்கி கணக்கில் வரும் என சொல்லி, இப்போது 25 ரூபாய் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது (எனக்கு!); மற்றவர்களுக்கு எப்படி என தெரியவில்லை. 

*) விலைவாசி விண்ணுலகை விர்ரென எட்டி, சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாய் இருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.  

*) நாடு முழுவதும் வந்தே பாரத், புல்லட் ரயில் என அமல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் காசு இருப்பவனுக்கு மகிழ்ச்சி ; நல்ல திட்டம்... மற்றவருக்கு?  

*) கருப்பு பணத்தை ஒழிக்க அமல் படுத்தப்பட்ட Demonetization-னால் பல நடுத்தர குடும்பங்கள்/மக்கள் ஓரிரு மாதங்கள் சில்லறைக்காக பெரிதும் கஷ்டப்பட்டனர். ஆனால் எந்த ஒரு பெரிய முதலைகளிடமும் கருப்பு பண புழுக்கம் ஒழிந்தது போல தெரியவில்லை. 

*) டிஜிட்டல் இந்தியாவால் பண வர்த்தகமெல்லாம் டிஜிட்டல் மயமாகி போனதால், எல்லாமே UPI transaction னாக மாறியுள்ளது. இஃது மற்ற நாடுகளில் இல்லாத நல்ல திட்டம் என்றே நினைத்து வந்த போதிலும், சில்லறை தட்டுப்பாடு யாருக்கும் தெரியாமல் நாடு முழுக்க பரவியிருப்பது மறுக்க முடியாத உண்மை. UPI transactionனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே பலருக்கு தெரிவதில்லை. இதன் மூலம் வங்கிகள் பெருமளவு சம்பாதிப்பது தான் பெரும் உண்மை.    

*) கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஹிந்தி/சமஸ்கிருதத்தை நுழைக்க முயற்சி செய்து செய்து.. செய்து கொண்டே இருக்கிறார்கள். 

*) NEET ரத்து பற்றி தமிழ் நாட்டில் மட்டுமே பேசி கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் பெரிதாய் எதிர்ப்பு கொடி காட்டியது போல தெரியவில்லை.

*) GST யால் பல சிறு வியாபாரிகள், வருடத்தில் சில லட்சங்கள் பணம் பண்ணும் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பல பெரு நிறுவனங்கள், பெரு வணிகர்கள் பெரிதாய் நட்டம் அடைவது போல தெரியவில்லை. Lower /middle class வியாபாரிகள் கறுப்புப்பணம் வைக்காமல்/சேர்க்காமல் இருக்கவே இந்த வரி. மற்றபடி பெரும் முதலாளிகள் சகஜமாய் ஏப்பம் விட்டு கொண்டு போகின்றனர். மேலும் நாம் கொடுக்கும் வரிக்கு ஏற்ற அளவு நற்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என சொல்கிறார்கள்; அது எந்த அளவு உண்மை என எனக்கு தெரியவில்லை.

இவர்கள் செய்யும் அக்கப்போரால் நம்மை போன்ற சாதாரண மக்களின் மனம் பெரிதும் மாசுபடுகிறது. டீ.வியிலோ/நேரிலோ யாரவது ஒருவரை காவி வேஷ்டி, சட்டை, பட்டை, ருத்திராட்ச கொட்டை என பார்த்தாலே, இவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை நமக்குள் வர வைக்கிறது. அதே போல ஏதாவது ஒரு ஐயர்/ஐயங்காரை பார்த்தால் கண்டிப்பாக பா.ஜ.க காரராக, ஆதரவாளராக தான் இருப்பார் என்ற judgemental thinking நம்மிடையே உருவாகிறது. உண்மையிலேயே அவர் பகுத்தறிவாளராக, நல்ல மனிதர்களாகவே இருந்தாலும், சமூக நீதிக்கு எதிராக இருப்பார், மற்றவர்களை மட்டம் தட்டிதான் பேசுவார் என்ற எண்ணமும் நமக்குள் வந்து தொலைகிறது. இப்படிபட்ட நினைப்பு நமக்குள் வருவதில்  நம் திராவிட கட்சிகளுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதை பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் ராமர் பற்றி பேசினாலோ, ராமரை வணங்கினாலோ, ரோட்டில் காரின் பின்னால் ஆஞ்சநேயர் படம் ஓட்டப்பட்டிருந்தாலோ.. ஒரு வேளை இருக்குமோ???🤔 என்ற மனக்கசப்பு/ எரிச்சல் வருவது எனோ தெரியவில்லை. அவ்வளவு ஏன்??!  கடவுள் (ராமர்) மேலேயே கோபம் வரும் அளவுக்கு செய்து விட்டார்கள் நம்ம அரசியல் வியா(வா)திகள். அது பொய்யான கோபமாக இருந்தாலும், அவ்வாறு வந்ததற்கு காரணம்  பா.ஜ.க.வின் நடத்தை தான்.

சரி... எது எப்படியோ.. மீண்டும் மோடியே நம் பிரதமர். இதிலிருந்து நாம் மீண்டு வர இன்னும் ஒரு ஐந்து வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

வெள்ளி, 24 மே, 2019

தாமரை ஏன் மலரவில்லை?

வணக்கம்,

நேற்று முதல் எல்லா இடங்களிலும் இது தான் பேச்சு. தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர எல்லா இடங்களிலும் காவிக்கொடி. கேரளாவை விட்டு விடுங்கள்; கம்யூனிசம், காங்கிரஸ் என வேறு வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏன் தாமரை வளர முளைக்க முடியவில்லை??
  • தாமரையை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.?
  • தமிழ் நாட்டில் ஏன் மோடியை பலருக்கு பிடிக்கவில்லை? 
  • ஏன் பாஜகவை/ஆர்.எஸ். எஸை பிடிக்கவில்லை.?
  • இந்துக்களே இந்துத்துவாவை எதிர்க்க காரணம் என்ன?
ஏன்? ஏன்?? ஏன்??? வாஜ்பாய் இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் காரணங்களா???
  • ஊழல் செய்கிறார்கள்.
  • மோடி உலகம் சுற்றுகிறார்.
  • ஜி.எஸ்.டி.
  • மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது.
  • தென் மாநிலங்களுக்கு வரிசலுகைகள் தரவில்லை.
  • பேரிடர்களுக்கு தக்க உதவி செய்யாமை. 
  • கார்ப்பரேட் அதிபர்களுக்கு சகாயம் செய்தல்.
இதெல்லாம் கூட எனக்கு பெரிய காரணமாக தெரியவில்லை. இதெல்லாம் காரணமாக  இருந்திருந்தால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்கவே முடியாது.

இவர்களை பிடிக்காமல் போக காரணம், இவர்கள் பேசும் இந்துத்துவம் என்னும் இந்து தீவிரவாதம். என்னதான் தமிழகம் முன்னாளில் இந்துகளின் பூமியாக இருந்தாலும், சைவ வைணவ மதங்களின் உறைவிடமாக இருந்த போதிலும், நம் மக்களின் மனதில் கருப்பு சட்டையின் தாக்கம் இன்னமும் ஆட்கொண்டிருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பெரியாரிச கொள்கைகள் தான் முக்கிய காரணம்.
பெரியாரின் பகுத்தறிவு பேச்சுகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விஷயங்கள் நம் மக்களின் மனதோடு ஒன்றாக ஒன்றி, இன்றும் அதை தாண்டி நம்மால் யோசிக்க முடியவில்லை. சாதி/மத பேதங்கள் முழுவதும் ஒழிந்து விட்டது, சாதியே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதும் நம்மிடம் சாதியின் பெயரை கேட்பவர்களை ஒரு அசிங்க பொருள் போல ஏற இறங்க பார்க்கும் மனநிலை தான் இருக்கிறது.


மற்ற மாநிலங்களில் இது போன்ற தலைவர் இருந்தாரா, அல்லது கொள்கைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது போன்ற உயரிய சமூக கொள்கைகளை கொண்ட தலைவர் இல்லை என்று தான் நாம் எண்ணி கொள்ள வேண்டும். இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் போல மற்ற மாநிலங்களும் இது போன்ற சாதிய மத சிந்தனைகளில் வேறுபட்டிருக்கும்.

தமிழ் நாட்டில் வந்து இங்கு இந்துத்வாதான் நம் கொள்கை, நம் லட்சியம், என்று கூறுவது, மற்ற மதத்தினரை ஏசுவது/பழிப்பது போன்ற செய்கையெல்லம் தான் நம்மை இன்னும் பாஜகவை எதிர்க்க செய்கிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு விதமான கொள்கையும், நம் மாநிலத்தில் வேறு விதமான கொள்கையும் கொண்டு ஒப்பேற்றி வருகின்றனர். அதே இவர்களும் தொடர்ந்தால், ஒரு வேளை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்  மலர வாய்ப்புண்டு.. ஆனால் அவர்கள் மாற போவதும் இல்லை.. இங்கே மலர போவதும் இல்லை.

மற்றபடி படித்தவர்கள் மோடிக்கு ஓட்டு போட வில்லை என்பதெல்லாம் அபத்தம். "அடேய்! நீங்க தாண்ட திமுக/அதிமுகவை மாறி மாறி அரியணை ஏத்துறீங்க.." 


மேலே இருப்பது பழைய பேப்பரில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன் எழுதியது. நம்பினோம்.ஆனால் ?!!?

வேறு வழியில்லை. அவர்தான் பிரதமர். நாம் முடிவெடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டன. மீண்டும் வந்து என்னன்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

தாமரை சேற்றில் தான் மலரும். தமிழ்நாடு தெளிந்த அழகிய நீரோடை ஆகிவிட்டதோ? என எண்ணி நம்மை சமாதான படுத்தி கொள்ளலாம்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

செவ்வாய், 24 மே, 2016

அரசியல் மாற்றம் இது தானோ!

வணக்கம்,

என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!

கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.

2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.

அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!

*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)

*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.

*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.

*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.

*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!

healthy-politics-tamilnadu
click to enlarge
*) அதற்கு பதிலாக கலைஞர் தமது அறிக்கையில், "பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத் குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது", எனக் கூறியுள்ளார்.

*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி  சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.


கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ???

வணக்கம்,

நேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், படிப்பவர்களும், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவரை ஒருவர் போன் செய்து நிலைமையை விசாரித்து கொண்டனர். சிலர் வீட்டுக்கு கூட போகமுடியாமல், அருகில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்போது  நிலைமை மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இதே போல் முன்னொரு முறையும் நடந்துள்ளது. அப்போது இதை விட பயங்கரமான கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் நடந்துள்ளது. பல சமயங்களில் இவ்வாறு பொது சொத்துகள் எரிந்து எலும்பு கூடாய் ஆனதை,  நாமும் கண் கூடாய் பார்த்துள்ளோம். அரசியல் பெரும் புள்ளிகள் கைதின் போது, இம்மாதிரி கடையடைப்பு, பொது சொத்து சேதம் செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பது நமக்கு சாதாரணமான செய்தி தான்.


சில வருடங்களுக்கு முன், ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகளும், கிலோ கணக்கில் தங்க வைரமும்,  ஆயிரக்கணக்காண ஏக்கரில் நிலமும்  ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். மலைகளை வளைத்து போட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களில் குற்றமற்றவர் என்று வெளியே வந்தார். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாய்பளித்து  இருமுறை அவர்களையே ஆட்சியை பிடிக்க வைத்துள்ளோம்.

இன்னொரு பக்கம், லட்சம் கோடிகளில் ஊழலும், பல நூறு கோடி கணக்கில் நில கொள்ளையும், மொத்த குடும்பத்துக்கும் அரசியலில் பதவி, அதிகாரம், வன்முறை என பல விஷயங்களை ஊடகம் மூலம் கேள்விபட்டிருந்தாலும், அவர்களையும் நாம் ஐந்து முறை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே போல அரசியல் புள்ளிகள் பலரும் செய்யாத தப்புக்கு சிறை சென்று வந்து அரியணையில் ஏறியுள்ளனர்.

"ஒவ்வொரு முறையும் யாரும் நம்மை ஏமாற்றவில்லை; நாம் தான் ஏமாளியாக இருந்து வருகிறோம். இங்கு இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைக்கிறது " என சிலர் புரட்சியாக பேசுவதுண்டு. உண்மையை சொல்லுங்கள் இந்த இரண்டு கட்சிகளை விட்டால் நாம் என்ன தெலுங்கு தேசத்திற்கா ஓட்டை போட முடியும் ???

மற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. அரியணையில் ஏறாததால், அவர்களின் சாயம் இன்னும் வெளுக்கவில்லை. சாதி / மத போர்வையில் உள்ள கட்சிகளை பற்றி பேசவே தேவையில்லை.
 
தேர்தல் நேரத்தில் யார் நல்ல (நமக்கு தேவையானவற்றை ) வாக்குறுதிகளை தருகிறார்களோ, அவர்களை தான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோம். கண்டிப்பாக சொல்கிறேன். நேற்று நடந்த (அற) போராட்டங்கள் எல்லாவற்றையும் நாம் மறந்து போய்,  தீர்ப்புகள் திருத்தி  எழுதப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் இவர்களையே நாம் தேர்ந்தெடுப்போம். அது தான் நம் நாட்டின் விதி !

இந்த விதியினை மற்ற யாரவது வருவார்களா என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 21 ஏப்ரல், 2014

வாங்க ஓட்டு போடுவோம் !

வணக்கம்,

தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி தான். புதிதாய் ஓட்டு போட தயாராகும் கல்லூரி இளைஞன் /இளைஞிகள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட்  நிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் அரசியல் பேசும் நேரம் இது.

மத்தியில் இருபெரும் கட்சிகள் மோதுகின்றன. மாநிலத்தில் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரத்திலும், போட்டியிலும் அனல் பறக்கிறது. இரண்டு பெரும் கட்சிகள் இத்தேர்தலில் மோதும் போது, உடைபடுவது எதோ மக்களின்  மண்டையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு பிரச்சார விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர். நமக்கு தான் எதை கேட்பது என்று தெரியவில்லை.

இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மாநிலங்களவை தேர்தலா? என்றே புரியவில்லை. நடக்கிற கூத்தை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி நம்மை குழப்புகிறார்கள்.

vote for better India

"ஏமாந்தது போதும்! இம்முறை எங்களுக்கே வாக்களியுங்கள்  எங்ககளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், தடையில்லா மின்சாரம் தருவோம், விலைவாசியை குறைப்போம்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ! .....செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???? " என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். நாம் தானே சொன்னதை செய்வீர்களா? என்று கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.

மற்றொருவரோ, "அவர்கள் சொன்னதை இதுவரை செய்யவில்லை; நாங்கள் மறக்கவில்லை... அதை நீங்கள் மறப்பீர்களா??? மறப்பீர்களா??? " என்று அவர்களை நல்லவர்கள் போல காட்டி கொள்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை அறியாதவர் போலும்!

இன்னொருவர், "தெரிஞ்சிகோங்க மக்களே!!! இரண்டு கட்சிகளும் சரியில்லை; ஒரே ஊழல்; அராஜகம்; நம்மால நிம்மதியா இருக்க முடியல...ஏய் ! கொடியை கீழே இறக்குடா...  மறைக்குதுல்ல....எங்க விட்டேன்?... ஆங்...இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. புரிஞ்கோங்க மக்களே!!!" என்று அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் பேசுகிறார் உளறுகிறார்.

தேர்தல் விளம்பரத்தில் இவர்களின் சொத்து பட்டியலை மாறி மாறி காட்டி, போட்டு கொடுத்து கொள்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சி.பி.ஐக்கும், வருமான வரி துறையினருக்கும், முன்னமே தெரியவில்லை என்றுதான் நம் மக்களின் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். எங்களை வெற்றி பெற செய்தால், எங்கள் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்காக பாராளுமன்றத்தில் போய் பேசுவார் என்று சொல்லி ஓட்டு கேட்டால் சரி.  அதை விட்டுவிட்டு, மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் ! விலைவாசியை குறைப்போம்; மின்சாரம் தருவோம் என மாநிலங்களவை தேர்தல் போல பிரச்சாரம் செய்கிறார்கள். விதம் விதமாக நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?

அற வழியில் ஊழலை எதிர்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்; முதல் அடியை சரியாக எடுத்து வைத்து விட்டார். ஆனால், அதன் பின் சரியாக அடியேடுத்து வைப்பாரா என குழப்புகிறார். இரும்பெரும் கட்சிகளை தாக்கு பிடிப்பாரா என்றும் தெரியவில்லை.

மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

எந்த தேர்தலானாலும், சாதியையும் , மதத்தையும் மட்டுமே வைத்து ஓட்டு போடுபவர்களும், பணம் வாங்கி கொண்டு ஓட்டை விற்பவர்களும் இருக்கும் வரை நாம் தகுதியான அரசை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடாமல் இருக்கும் சில சோம்பேறிகளும் திருந்த வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 58% வாக்குகள் தான் பதிவாகி இருந்தது என புள்ளிவிவரம் கூறுகிறது (தவறாக இருப்பின் திருத்தலாம்). பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, ஆள் காட்டி விரலை கூட தூக்க முடியாத ஜென்மங்கள் அரசியலை பற்றியோ, நாட்டை பற்றியோ குறை கூற தகுதியிள்ளாதவர்கள்.

யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டு எந்திரத்தில் கடைசி பொத்தானை அழுத்தி யாருக்கும் என் வாக்கு இல்லை (NOTA - None Of The Above) என்று பதியலாம்.    

ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமை, தன்மானம், பொறுப்பு, எல்லாமே. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய இந்த நிலையெல்லாம் மாறி, எப்போது தகுதியான வேட்பாளரை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தேடுகின்றோமோ, அன்று தான் ஓரு சிறந்த தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்; புதிய பாரதமும் உருவாகும்.

வாருங்கள் ! தகுதியான வாக்காளர்களை தேர்ந்தெடுப்போம்; நம் கடமையை செவ்வனே செய்வோம் ! வாழ்க பாரதம் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதிய பாரதத்தின் ஆரம்பம் !

வணக்கம், 

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம். ஒரு வழியாக பழைய பேப்பர் ஆரம்பித்து 25-ஆவது பதிவை போட்டாகிவிட்டது. ஏதோ, எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வந்து, நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டுமென்பது என் ஆசை.

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம். எப்போதும் என் வலைப்பூவில் சமூகம் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என நொட்டாரம் சொல்லியே எழுதி வைப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் நல்ல படியாக பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம். இன்றைய முக்கிய செய்தியை படிக்க கொஞ்சம் சந்தோஷமாகதான்  இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் புதுதில்லியின் முதல்வராகிறார்!

திரைப்படங்களில் வருவது போல போன ஆண்டின் இறுதியில் 'அம் ஆத்மி' கட்சி ஆரம்பித்து, இந்த ஆண்டில் இறுதியில் முதல்வராகிவிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, மக்கள் மனதிலேயே போராட்டம் நடத்தி, அவர்களின் நன்மதிப்பையும் பெற்று விட்டார். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், தேர்தலில் நின்று ஜெயிப்பது புதிதல்ல; பெரிதுமல்ல.

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரும் ,பக்கத்து தெலுங்கு தேசத்தில் என்.டி.ஆரும் இப்படிதான் கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே ஆட்சியை பிடித்தனர். ஆனால், சினிமாவில் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேல் கொ(கோ)டி கட்டி பறந்துவிட்டு, அந்த செல்வாக்கை வைத்தே கோட்டையை கைப்பற்றினார்கள்.

கேஜ்ரிவால் அப்படியல்ல. ஐ.ஐ.டி- யில் பொறியியல் படித்துவிட்டு, இந்திய வருவாய் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் நாட்டின் உயரிய விருதில் ஒன்றான "ராமன் மகசேசே" விருது,  ஏழை மக்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கொண்டு போய் சேர்த்தர்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியை துறந்த பின், விருதையும், பரிசு பணத்தையும் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்திற்கு கொடுத்துதவியவர். ஜன் லோக்பால் சட்டத்தின் அமலுக்காக போராட்டம் நடத்தியவரில் ஒருவர். 2011 அன்னா ஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். முதல்வர் பதவிக்கு இதை விட என்ன தகுதி தேவை ?

ஆனால் இன்றைய நாட்டு நடப்பில், பண பலம், அரசியல் பலம், சினிமா பலம் என எதுவும் இல்லாமல், மக்களின் மக்களாக இருந்த வேட்பாளர்களையே தேர்ந்தேடுத்து, தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டார். நேற்று (28-12-2013) தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவி பிரமாணம் ஏற்க வரும் போது மெட்ரோ ரயிலில் வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். "கவுன்சிலரே 'கான்டசா'-வில் பறக்கும் போது, சி.எம். ஆட்டோவில் வர்றார்.. இந்தியா முன்னேறிடிச்சு போலருக்கே..!!! "  - என்ற முதல்வன் வசனம்  நினைவில் வருகிறது.


முதல்வரான பிறகு பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணையே, அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்; மீறினால் வேலை பறிக்கப்படும் என்பதுதான். பாராட்டுதலுக்குரிய ஆணை தான். மேலும் இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பு போன்ற ஆணைகள் விரைவில் பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார். ஆணை போடப்பட்ட வேகத்தில் செயல்படுத்தினால் தேவலை என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ, இது ஒரு புதிய பாரதத்தின் விடியலுக்கான ஆரம்பமாகதான் தெரிகிறது!

ஒரு சின்ன வருத்தம், இது போன்ற நல்லதொரு  மாற்றம் நம்ம தமிழகத்தில் வரவில்லையே என்று தான். புது தில்லி மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சி நடத்திய விதத்தை கண்டு தாங்காமல் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். கேஜ்ரிவாலாவது கடைசி வரை மற்றவர்களை போல மாறாமல் இருந்தால் சரி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 26 செப்டம்பர், 2013

ஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் ???

வணக்கம்,

நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை பற்றி தான் இருக்கும்.

ஒரு வார காலமாக தினசரி நாளிதழ் முதல், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வரை, அனைவராலும் விவாதிக்கப்படுவது , "ஏன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர்  ஆகவேண்டும் ?". சாதாரண பாமரன் முதல் மெத்த படித்தவன் வரை, டீக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை எல்லோராலும் பேசபடுவது இதைப் பற்றிதான். பத்திரிக்கைகளிலும், சமூக வலைமனைகளிலும் மோடியை பற்றி உயர்வாகவும், குஜராத்தில் அவர் நிகழ்த்திய 10 சாதனைகளும் பற்றி தான் விளம்பரம் செய்கின்றனர்.  

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மாபெரும் சாதனையை கண்டு இந்திய மக்கள் அனைவரும் புல்லரித்து, நொந்து நூலாய் போய் உள்ளனர். மேலும் நொந்து போக வேண்டாம் என்று தான், இப்போது மோடியை தலை மீது வைத்து கொண்டு ஆடுகின்றனர்.

முதலில் நரேந்திர மோடியை ஏன் பிரதமராக்க வேண்டும்? என்பதை பார்ப்போம்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ஆட்சி செய்து, மூன்றாம் முறை ஆண்டு மாநிலத்தை செம்மையாக ஆண்டு கொண்டிருக்கிறார்.


2001-ல் குஜராத் தொழில் முறையில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று சிறந்த தொழில்முனை நகரமாக மாறியுள்ளது. பல வெளிநாட்டு பெருநிறுவனங்களை குஜராத்தில் ஆரம்பிக்க வைத்தவர் மோடி. அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு, மாநிலத்தின் வணிக லாபம், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலியவற்றில் பெருமளவு முன்னேற்றம் காட்டினார். வறட்சியில் வாடி இருந்த குஜராத் மாநில விவசாயத்தையும் மக்களையும் முன்னேற்ற பாதையில் வழி நடக்க செய்தவர். நீர்/விவசாய மேலாண்மை, தோட்டக்கலை, மின்சார உற்பத்தி என அனைத்து துறையிலும் குஜராத்தை முன்னேற்றம் காண செய்தவர்.   

2011-ல் இந்தியாவின் முதன்மை வளர்ந்த மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. 1960 முதல் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் மிகை மாநிலம் என பெயர் பெற்றது.(கவனிக்க ! நாம் ஊரு தாத்தாவும், அம்மாவும் !!) இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.

2012-ல் 'குடியுரிமை பாதுகாப்புக்கான' சிறந்த மாநில விருது குஜராத்திற்கு ஐ.பி.என். 7 டைமெண்ட்ஸ்  வழங்கியது. மேலும் உலக வங்கியில் கடனாளியாக இருந்த அம்மாநிலம், இன்று 1 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது என ஓர் அறிக்கை சொல்கிறது (எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை ; உபயம் - ஃபேஸ் புக்).

இவை அனைத்தும் நரேந்திர மோடியின் கடந்த 10/12 ஆண்டு சாதனைகள் தான். ஆனால் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது தான் அவருடைய அரசியல் சாசனத்தில் உள்ள பெரும் கரும்புள்ளி. குஜராத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக 2002-ல் 2500 மேலானோர் இறந்தனர். இஸ்லாமியர்களை உயிருடன் எரித்தனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர். அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர், இதே சாதனை நாயகன் நரேந்திர மோடி தான். எல்லா தரப்பிலிருந்தும் மோடி தான் இந்த கலவரங்களை தூண்டி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.  மேலும், அதே ஆண்டில் 'பெஸ்ட் பேக்கரி' கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உட்பட, 14 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். (இதே பெஸ்ட் பேக்கரி சம்பவம், உன்னை போல் ஒருவன் படத்தில் தீவிரவாதி சொல்வது போல உலக நாயகன் காட்டியிருப்பார்.)  இந்த கலவரங்களுகெல்லாம் காரணம், அப்போதைய பா.ஜா.க. வும், ராஷ்திரிய ஸ்வயம்சேவக் சங்கமும்- RSS (இந்துத்துவம் பற்றி வெறிகொண்டு பேசும் ஒரு கட்சி சங்கம்).

1992-ல் பாபர் மசூதி இடித்ததை யாராலும் மறக்க முடியாது. பாரதத்தின் வரலாற்று சின்னமான பாபர் மசூதியை (ராமஜென்மபூமி ) ராமர் பிறந்த இடம் என்று சொல்லி இடித்த பெருமை, பா.ஜ.க தலைவர் அத்வானியையே சாரும். அதனால் இந்து முஸ்லிம்களுக்கிடையே பெரும் கலவரம் நடந்து, அதில் கிட்டதட்ட 2000 -திற்கும் மேலானோர் இறந்தனர். டிசம்பர் 6 , பாபர் மசூதி இடித்த தினம் என்று முஸ்லிம்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, அந்நாளை இந்திய முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி புகழை சேர்த்தது அன்றைய பா.ஜ.க. அரசு தான்.

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது, நாட்டையே கூறு போட்டு விற்பது, கொள்ளையடிப்பது, கொலைகள் செய்வது இவையெல்லாம் சர்வசாதரணமாக இந்தியாவில் நடப்பது தான் என்று வைத்து கொண்டாலும், வகுப்பு வாத கலவரமும், மத கலவரங்களும் அடிக்கடி நடக்கும் மாநிலங்களில் மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய பூமியும் ஒன்று தான். இவைகள் எல்லாவற்றையும் பூசி முழுகதான் ,தேர்தல் விளம்பரங்களில்  "குஜராத்தின் முன்னேற்றம்" பற்றிய ஆவண படங்கள், காணொளி காட்சிகள், சுவரொட்டிகள் என எல்லாமும்.

இவராவது நல்லது செய்வார் என்று மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, மோடிக்கு பதில் நேரு மாமாவின் பேரனே நாட்டை ஆளலாம் போல என்ற முடிவுக்கு வராமல் இருந்தால் போதும்!!! இப்போது சொல்லுங்கள், நாம் ஏன் மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் ??? 


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இதுதாங்க நம்ம ஊரு அரசியல் !!!

வணக்கம்,

ஒரு நாட்டின் அரசியல் வரலாறு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நம் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதை பற்றி இணையத்தில் தேடி படித்து, உங்களிடம் பகிர்கிறேன்.(தகவல்: விக்கிபீடியா )

இன்றைய தமிழ்நாடு, சென்னை மாகாணம் (Madras Presidency) மற்றும் சென்னை மாநிலம் (Madras State) என அதன் வரலாற்றில் வெவ்வேறு பிராந்திய கட்டமைப்புகளில் இருந்தது.

1799 முதல் 1852 வரை கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாணத்தில் (சென்னை மட்டுமல்ல, பாரதம் முழுவதும்), ஜமீன்தார்ககளை குறுநில மன்னர்களை போல வரிவசூலிக்கவும், மக்களை ஆளவும் நியமித்திருந்தது.

பின்னர் 1920-ல் சென்னை மாகாணம் நிறுவிய பிறகு, சென்னை சட்டசபை தேர்தல் (Madras Legislative Assembly) மூலம் முதல்வர்களை தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் சென்னை சட்டசபை தேர்தலில் முதல்வர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டும் தான். 1920 முதல் தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

சென்னை மாகாண முதல்வர்கள் (1920-1950)
சென்னை மாநில முதல்வர்கள்  (1950-1969)
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் (1969 முதல்)

பெயர் வருடம் கட்சி
A.சுப்பராயலு ரெட்டியார்  1920-1921 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1921-1923 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1923-1926 நீதிக்கட்சி
P.சுப்பராயன் 1926-1930 நீதிக்கட்சி
B.முனுசாமி நாயுடு  1930-1930 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ்  1932-1934 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1934-1936 நீதிக்கட்சி
P.T.ராஜன்  1936
(4 மாதம்)
நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1936-1937
(8 மாதம்)
நீதிக்கட்சி
குர்மா வெங்கடரெட்டி நாயுடு 1937
(3 மாதம்)
நீதிக்கட்சி
C.ராஜகோபலாச்சாரி 1937-1939 இந்திய தேசிய காங்கிரஸ்
கவர்னர் ஆட்சி 1939-1946 ---
தங்குட்ரி பிரகாசம் 1946-1947 இந்திய தேசிய காங்கிரஸ்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ்
P.S.குமாரசுவாமி ராஜா 1949-1950 இந்திய தேசிய காங்கிரஸ்
C.ராஜகோபலாச்சாரி 1950-1952 இந்திய தேசிய காங்கிரஸ்
K.காமராஜ் 1954-1963 இந்திய தேசிய காங்கிரஸ்
M.பக்தவத்சலம் 1963-1967 இந்திய தேசிய காங்கிரஸ்
C.N.அண்ணாதுரை 1967-1969  திமுக
C.N.அண்ணாதுரை 1969
(1 மாதம்)
 திமுக
V.R.நெடுஞ்செழியன் 1969
(10 நாள் )
 திமுக
M.K.கருணாநிதி 1969-1971  திமுக
M.K.கருணாநிதி 1971-1976 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1976-1977
(5 மாதம்)
---
M.G.ராமசந்திரன்  1977-1980 அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1980
(4 மாதம்)
---
M.G.ராமசந்திரன் 1980-1984 அஇதிமுக
M.G.ராமசந்திரன் 1984-1987 அஇதிமுக
V.R.நெடுஞ்செழியன் 1987-1988
(14 நாள்)
அஇதிமுக
ஜானகி ராமசந்திரன் 1988
(23 நாள்)
அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1988-1989 ---
M.K.கருணாநிதி 1989-1991 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1991
(5 மாதம்)
---
J.ஜெயலலிதா 1991-1996 அஇதிமுக
M.K.கருணாநிதி 1996-2001 திமுக
J.ஜெயலலிதா 2001
(4 மாதம்)
அஇதிமுக
O.பன்னீர்செல்வம்   2001-2002
(6 மாதம்)
அஇதிமுக
J.ஜெயலலிதா 2002-2006 அஇதிமுக
M.K.கருணாநிதி 2006-2011 திமுக
J.ஜெயலலிதா 2011 முதல்  அஇதிமுக

இந்திய சுதந்திரதிற்கு முன்பும் பின்பும் சென்னை மாகணத்தில் மேல் குடியினாராம் உயர்ந்த சாதி மக்களே அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரலாக பொறுப்பாற்றியவர், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. இவர் எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.


கல்வியில் பின்தங்கியிருந்த தமிழ்நாட்டில்,1960-ல் காமராஜர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்விக்கு கண் கொடுத்தார். இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். பிரதமர் பதவியே கிடைத்த போதிலும் வேண்டாம் என உதறிவிட்டு, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட காமராஜரையே தோற்கடிக்க வைத்த பெருமை நம் தமிழ் மக்களுக்கு உண்டு. (அவர்கள் மட்டுமே காரணமல்ல)

தந்தை பெரியார் ஈ.வெ .ராமசாமி அவர்கள், திராவிடர் கழகம் ஆரம்பித்து அதன் மூலம் சுய மரியாதை இயக்கம், தீண்டாம்மை ஒழிப்பு, தமிழ் தேசியவாதம், என்று இன்றைய தமிழ் திராவிடம் உருவாக காரணமாக இருந்தவர். இவர் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் தந்தையாக இருப்பவர்.

அறிஞர் C.N.அண்ணாதுரை ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து, பின்னர்  பெரியாருடன் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளே அவர் முதலமைச்சராக இருந்த போதிலும், தமிழ் பேச்சாற்றலாலும், மக்களுக்கு செய்த நல்ல பணிக்காகவும், அவர் இன்னும் மக்களால் பேசப்படும் ஒரு உன்னத தலைவர். 
  
தமிழ் சினிமாவின் மூலமாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர், M.G.ராமசந்திரன். ஆரம்பத்தில் அண்ணாவின் பேச்சாற்றலாலும், கொள்கையினாலும் ஈர்க்கப்பட்டு,  திராவிட முன்னேற்ற கழகதில் இருந்தவர், கலைஞர் M.கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுப்பாடு' காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சாகும் வரை முதலமைச்சராய் இருந்தவர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின், அவரை தொடர்ந்து  பல சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், கட்சியில் சேர்ந்தும் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். ஒரு சிலரை தவிர யாராலும் அவரைப் போல வெற்றி பெற முடியவில்லை. 

இப்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டு கொண்டும், 'திராவிட' மற்றும் 'கழகம்' என்ற வார்த்தையை கட்சி பெயரில் சேர்த்து கொண்டும் தான் கட்சி ஆரம்பிகின்றனர்.

இன்னும் அச்சில் ஏறாத அரசியல் பதிவுகள் நிறைய உள்ளது. அதை எல்லோராலும் வெளிப்படையாய் சொல்லிவிட முடியாது. மக்களாட்சி நடக்கிறதோ இல்லையோ, 1967- க்கு பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சித்தான் மாறி மாறி தமிழகத்தில் நடக்கிறது. இதுதாங்க நம்ம ஊரு அரசியல் வரலாறு. இவ்வளவு தூரம் அலசிவிட்டு, முக்கிய விஷயங்களை பதிவு செய்யவில்லையே என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு பிறகு நடந்த, நடக்கின்ற கதை கூத்து  தான் எல்லோருக்கும் தெரியுமே!! அதை நான் வேற தனியாக சொல்ல வேண்டுமா???



நன்றி !!!

-பி .விமல் ராஜ்