education system லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
education system லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா??

வணக்கம்,

" இன்ஜினியரிங் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம். " இது கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக, பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய (மூட) நம்பிக்கை. பெண்ணோ/பையனோ பத்தாவது முடித்தது முதல், பிளஸ் 1 -ல் பஃர்ஸ்ட் அல்லது செகண்ட் குரூப் எடுத்து, பின்னர் பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மார்க் வாங்கி ஜெயித்து, Maths Physics Chemistry -ல் குறைந்தபட்சம் கட்டாப்ஃ 150 மேல் எடுத்து, முட்டி மோதி கவுன்சிலிங் மூலமாகவோ, கோட்டா மூலமாகவோ எப்படியாவது இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடித்து தம் பிள்ளைகளை வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவு...ஆசை... எல்லாம்.

அவர்கள் காலத்தில் இன்ஜினியர்களுக்கு நல்ல மதிப்பும், சம்பளமும் இருந்தது. இப்போது தெருவுக்கு 100 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். மேலும் 2000-த்தின் ஆரம்பத்தில் உலக மயமாக்கல், கணினி மயமாக்கல் என மென்பொருள் கம்பெனிகள் அடியெடுத்து வைத்த போது பி.எஸ்.சி /பி.ஈ. படித்தவர்கள் மற்ற துறையில் இருந்தவர்களை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இரண்டாண்டில் வெளிநாட்டு பயணம், கை  நிறைய சம்பளம் என எண்ணங்களும் ஆசைகளும் வானளவு உயர்ந்தன. இது போல கம்ப்யூட்டர் படித்து பொறியாளரான பெரியாளான பல ஜாவா சுந்தரேசன்களை பார்த்து, நம்ம புள்ளையும் இப்படி சம்பாதிக்கும் என எண்ணி எல்லா பெற்றோரும் தங்களது மனதிலும், தமது பிள்ளைகளின் மனதிலும் இன்ஜினியரிங் கனவை விதைத்தனர்.

engineering-graduates-unemployment

"நான் தான் சரியா படிக்கல.. குமாஸ்தாவாகவே இருந்திட்டேன்.. என் புள்ளையாவது நல்லா படிச்சு, இன்ஜினியரா வந்து, நல்ல சம்பாதிக்கட்டுமே",  என்ற எண்ணம் தான்.  மேலும் +2 படிக்கும் மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்புக்கு நல்ல ஸ்கோப்.. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒருத்தருக்கும் இன்ஜினியரிங் படித்து அறிவை பெருகி கொள்ள வேண்டும்; நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; புதிதாய் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அறிவுக்காக பொறியியல் படிப்பை எடுக்கும் பஞ்சவன் பாரிவேந்தனை போல மக்கள் மிக மிக குறைவே!

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும், மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது. ஏற்கனவே இதை பற்றி பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???  என்ற பதிவில் எழுதியுள்ளேன்.     

இப்போது பலரின் கேள்வியும் இதுதான்.. ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஏன் இன்ஜினியரிங் படித்த பலருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை? இன்றைய உண்மை நிலை என்ன என்பதை பல பேருக்கு தெரிவதில்லை.

ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?  காரணம் வேறென்ன??? அவர்கள் தேவைக்கு அதிக அளவில் இருப்பதால் தான்.

இந்தியாவில் கிட்டத்தட்ட  10 லட்சம் டாக்டர்களும், 12 லட்சம் வக்கீல்களும், 2 லட்சம் ஆடிட்டர்களும்  இருக்கின்றனர். இன்ஜினியர்கள் எண்ணிக்கை மட்டும் கோடிக்கும் மேல்! 120 கோடி ஜனத்தொகைக்கு மேல் இருக்கும் பாரத தேசத்தில் வெறும் 8 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அதனால் டாக்டர்கள் சொற்பமாய் இருந்து, வியாதிகளும், நோய்களும் அதிகமாகி போனதால் மருத்துவர்களுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது. இது போல பணம் உள்ளவர்கள், அதை என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யவேண்டும்? என சொல்ல சி.எ  (CA) படித்தவர்கள் தேவை. ஆகவே அவர்களுக்கும் அதிக சம்பளம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3345 பொறியியல் கல்லூரிகள்  (2015-16) இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இதன்படி கடந்த 15 ஆண்டில் எத்தனை பேர் படித்து முடித்திருப்பார்கள் என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் சுற்றுலாத்துறை, ஹோட்டல் நிர்வாகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, நிதி நிர்வாகம், வர்த்தகம் மற்றும் வணிகம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கல்வித்துறை (மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களை தவிர), நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என எதிலுமே இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைபடுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ??? வருடந்தோறும் பல வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் பல ரகுவரன் பி.டெக்-களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

Core கம்பெனிகள் என்று சொல்லப்படும் தயாரிப்பு தொழில்துறை ( manufacturing companies ) நிறுவனங்கள் முன்னாளில் நிறைய இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் இத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) 17%  மட்டுமே! அதனால் அவர்கள் ஆட்சேர்ப்பையும் குறைத்து விட்டனர்.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் அமெரிக்காவை உதாரணமாக சொல்வார்கள். நானும் அதையே எடுத்து கொள்கிறேன். அமெரிக்காவில் அவர்களுடைய பதினெட்டு டிரில்லியன் டாலர்கள் ($ 18 trillion ) பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 1 லட்சம் இன்ஜினியர்கள் தான் உருவாக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் வெறும் இரண்டு டிரில்லியன் டாலர்கள் ($ 2 trillion ) மட்டுமே! 15 லட்சம் இன்ஜினியர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விளக்கை சுற்றும் புற்றீசல்களாக, மக்கள் இன்ஜினியரிங் சேர முக்கிய காரணம்: வாய்ப்பையும் பணத்தையும் அள்ளி கொட்டும் ஐ.டி கம்பெனிகள். நாட்டின் பொருளாதாரத்தில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ கம்பெனிகளின் பங்கு வெறும் 9% மட்டுமே! அதனால் தான் இங்கு இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் திரும்பும் பக்கமெல்லாம் கல்லூரிகளை திறந்து வைத்து, படித்தவுடன் வேலை, கை நிறைய சம்பளம் என கூவி கூவி அழைக்கின்றனர். பல கல்லூரிகளில் போதிய வசதிகளும், சரியான ஆசிரியர்களும் இல்லாததால் நல்லதொரு பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.  அடுத்து பாடத்திட்டம். நம் பொறியியல் பாடத்திட்டங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே இருக்கிறது. செய்முறை மூலம் படிப்பது/சொல்ல தருவது மிக குறைவு. இப்படி இருந்தால் பெயரளவில் தான் நாம் பொறியாளர் என்று சொல்லி கொள்ள முடியும். நம் மீதும் தவறு இருக்கிறது. ஒரு காலத்தில் யாரை பார்த்தாலும் பி.எ. படிக்கிறேன் என்று சொன்னார்கள்; பின்னர் டிப்ளோமோ (பெரும்பாலும் டி.எம்.இ ) படிப்பை எல்லோரும் படித்தார்கள்; பின்னர் பி.காம் பிடித்தார்கள்; அதன் பின் தான் இன்ஜினியரிங் வலையில் விழுந்தார்கள். அடுத்தவர்கள் படிக்கிறார்கள், நாமும் படிப்போம்/பிடிக்க வைப்போம் என்று எண்ணாமல் மாணவரின் திறன் பார்த்து, ஈடுபாடு அறிந்து கல்லூரி படிப்பில் சேர்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களும், இன்றைய போட்டியான உலகில் முறையாக முயற்சி செய்து, உழைத்து, இன்ஜினியரிங் படிக்கும் போதே அவர்களுடைய  திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பலர் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்த பின்னரும், சமூக திறன்களையும், மென் திறன்களையும் வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றனர். படித்து முடித்த இன்ஜினியர்கள் பலருக்கு வேலை கிடைக்காமல் போக இதுவும் ஒரு மிக பெரிய காரணம் என்று பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கின்றனர். சரியாய் படிக்காமல், திறன்களை வளர்த்து கொள்ளாமல் இன்ஜினியரிங் படித்த பலரும் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்மதம் இல்லாத இடத்தில வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ இன்ஜினியரிங் படித்து ஒருவருக்கு கூட சரியான வேலை கிடைக்கவில்லையா ? யாரும் வீடு வாசல் கார், ஃபாரின் என செட்டில் ஆகவில்லையா?? என கேட்பது புரிகிறது. செட்டில் ஆகிறார்கள்.. நூற்றில் 40 பேர்தான். படித்து முடித்த உடனேவோ, சில காலம் கழித்தோ நல்ல வேளையில் செட்டில் ஆகி விடுகின்றனர். மீதம் உள்ள 60% சரியான வேலை இல்லாமல், சம்பந்தமில்லாத வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர்.

தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை தடுத்தல்; பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்; மாணவரின் ஈடுபாடு அறிந்து கல்லூரியில் சேர்த்தால் போன்ற பிரச்சனைகள் சரி செய்தாலே போதும், நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை தவிர வேறு ஏதாவது உங்களுக்கு கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம்.

தகவல் - Quora, Google 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 1 அக்டோபர், 2015

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள் !

வணக்கம்,

பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர்கள், நண்பிகள்  கிடைப்பார்கள், ஜாலியா சுதந்திரமா இருக்கலாம், நண்பர்களோட பேசலாம்ன்னு பல கனவுகளோட வருவாங்க. ஆனால் அவுங்க கனவையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது சில பொறியியல் கல்லூரிகள்.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி - நான் இந்த காலேஜுல தான் படிச்சேன். நாம படிச்ச கல்லூரியை எவனாவது தப்பா சொல்லிடான்னா பொதுவா எல்லோரும் சண்டைக்கு வருவாங்க. ஆனா, இங்க நிலைமையே வேற. காலேஜ பத்தி ஒரு தப்பான மெசேஜ் வந்ததும் 'என்ன ஒரு ஆனந்தம்' நம்ம மக்களுக்கு (Aluminis). கடந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் அடிப்படும் பெயராகவே இருக்கிறது எங்கள் கல்லூரி. கல்லூரியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என ஒரு பக்க நீள ரூல்ஸ் சர்குலரை சமூக தளங்களில் வெளியிட்டதே காரணம். அதை அங்கு படித்த மாணவர்கள் தான் கல்லூரியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக வெளியிட்டுனர் என்றாலும், அதிலுள்ள விதிகள் பெரும்பாலும் உண்மையாகவே அமலில் இருப்பது கசக்கும் உண்மை.


அதாகப்பட்டது, இவை தான் அந்த சட்டங்கள். காலேஜ பத்தி தெரியாதவங்க படிங்க..

1.) சாய்ராம் கல்லூரியில் படிக்கும் பெண்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் போன்ற வகை பேண்ட்டெல்லாம் போட கூடாது.

2.) பாட்டியாலா, ஜன்னல், கண்ணாடி  வைத்த டாப்ஸ், ஷார்ட் குர்தி போன்றவைகளுக்கும் தடை.

3.) பெரிய சைஸ் காது வளையம், ஜிமிக்கி வகையறாக்கள், ஃபான்சி மோதிரங்கள், ஹை-ஹீல்ஸ் செருப்புகள் , சிகை மற்றும் முக அலங்காரங்கள் போன்றவைக்கும் தடா தான்.

4.) துப்பட்டா கண்டிப்பாக மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். ( நானே லிஸ்டில் சேர்த்து கொண்டது. )

5.) கல்லூரியில் பிறந்த நாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது. சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொள்ள கூடாது.

6.) அனாவசியமாக காரிடாரில் நடக்க கூடாது. பக்கத்துக்கு கிளாசுக்கு சென்று லேப் கோட், நோட் புக்ஸ், கால்சி  போன்றவை வாங்க கூடாது.

7.) செல்போன், சிம் கார்ட், பெண் டிரைவ் போன்றவைகளை உள்ளே கொண்டு வர கூடாது.

8.) கல்லூரி பேருந்தில் தான் பணம் கட்டி வர வேண்டும் (எவ்வளவு கிட்ட இருந்தாலும்). டூ-வீலர், ஃபோர் வீலர்கள் கொண்டு வர கூடாது.

9.) பெண்களும், ஆண்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படிக்கட்டில் தான் ஏற/இறங்க வேண்டும்.

10.) மிக முக்கியமானது. இரு பாலரும் எதிர் பாலினத்தோடு எக்காரணத்துக் கொண்டும் பேச கூடாது.

11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.

12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

இந்த ஏட்டில்லா  விதிகளை பார்த்தாலே எவனுக்கும் படிக்கிற ஆசையே இருக்காது. என்ன தலை சுத்துதா???இது சும்மா டிரைலர் தான்மா. மெயின் பிச்சர் இனிமே தான்...

செமஸ்டரில் பெயிலானால், இரு அரியர்களுக்கு மேல் வைத்தால், பெற்றோரை அழைத்து வர வேண்டும். பையன் பெயிலானால் அம்மாவோ, அப்பாவோ தான் திட்டு வாங்க வேண்டும். "புள்ளைய காலேஜுல சேர்த்துவிட்டுட்டு, அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவியா??" என ஒருமையில் அவர்களை திட்டுவார்கள். பலரை பலவந்தமாக நான்காம் அல்லது ஐந்தாம் செமஸ்டரில் கல்லூரியை விட்டு (டி .சி கொடுத்து ) அனுப்பியிருகிறார்கள். 

மேலும் ஃப்ளோர் சூப்பர்வைசர்கள் (FS) என்ற பெயரில் சில வெட்டி ஆபிசர்களை  கல்லூரியில் நியமித்து கொண்டு, மாணவர்களை கண்காணிப்பார்கள். அவர்கள் முக்கிய பணியே பிள்ளை பிடிப்பதும், ஐ.டி கார்டு புடுங்குவதும் தான். அதாவது மேற்கண்ட தப்புகளை பண்ணும் மாணவ/மாணவியரை கையும் களவுமாக, ஆளும் ஐ.டியுமாக பிடித்து மேனேஜ்மென்ட்டில் கொடுப்பது  தான். 

இன்னும் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, பசங்க பொண்ணுங்க கூடவும், பொண்ணுங்க பசங்க கூடவும் பேசவே கூடாது. அது மகா மகா தெய்வ குத்தம். மீறினால் ஐ.டி கார்டு அவுட். தர்ம அடிதான். லன்ச்சில் மற்றவரிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலோ,  சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்தாலோ  ஐ.டி கார்டு பறிக்கப்படும். அவ்வபோது வகுப்புகளில் ரைட் (RAID ) நடக்கும். பேக்குகளை சோதனை செய்வார்கள். அதில் ஏதாவது (செல்போன், சி.டி.. ) சிக்கினால் ஐ.டி கார்டு பிடுங்கப்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம். 

பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர வேண்டும். அங்கேயும் FS-க்கள் இருப்பார்கள். கான்டீனிலும் அதே கதை தான். கல்லூரியில் மதிய சாப்பாடு ரொம்ப சுமாராக தான் இருக்கும். அதைதான் முதலாம் ஆண்டு மாணவ மணிகள் பணம் கட்டி சாப்பிட்டு தொலைக்க வேண்டும். ஹாஸ்டல் பசங்க தான் ரொம்ப பாவம். நாலு வருடமும் அங்கே தான் சாப்பாடு.  சில வேளைகளில் கரப்பான் பூச்சிகள், பல்லி விழுந்ததையும் போட்டிருக்கிறார்கள். "இவ்வளவு பெரிய அண்டாவுல நாலு இன்ச் பல்லி விழுந்தா யாரும் செத்துட மாட்டங்க.." அந்நியன் பட வசனம் இது.  படம் வருவதற்கு முன்பே எங்க காலேஜுல இதை பாலு சொல்லிடாரு...

ஆங்!!! பாலு யாருன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல.. அவரு தாங்க எங்க காலேஜ் ஆல் இன் ஆல். இவரை பார்க்க கிட்டத்தட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன் போல இருப்பார். கருத்த கட்டுடல், நெற்றியில் லேசான செந்தூரம், மொட்டை தலையில் தொப்பி, கொஞ்சம் மிடுக்கான ஆள்தான். பிரின்சிபாலை கண்டு கூட பலர் பயபடமாட்டங்க. ஆனா இவர் பேர சொன்னா, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் முதல்  ஃபைனல் இயர் ஸ்டுடன்ட் வரை எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். எல்லா FSக்கும், எல்லா டிபார்ட்மெண்ட் HOD க்கும் இவர் தான் DON. காலேஜ்/ மேனேஜ்மென்ட் /ஹாஸ்டல் அட்மின். சுருக்கமாக மேனேஜ்மென்ட்டின் அடியாள்.


ஐ.டி கார்டு பறிகொடுப்பவர்கள் எல்லாருமே இவரிடம் தான் விசாரணைக்கு வருவார்கள். முடி கொஞ்சம் அதிகமாக வளர்த்திருந்தால், தலை மயிரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நாளை முடி வெட்டவில்லை என்றால், நானே கன்னா பின்னான்னு வெட்டி விடுவேன் என்று எச்சரிக்கை செய்வார். பல ஆபாச வார்த்தைகளை மாணவரிடம் உபயோகபடுத்துவார். பலருக்கு ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்களும் நடந்தள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதும், சில காதல் புறாக்களும், சில பல டேட்டிங் சமாச்சாரங்களும் கல்லூரிக்குள் இருக்கத்தான் செய்தன. சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது வெளியே தெரியாமல் இருபாலரும் பேசி கொண்டு தான் இருகிறார்கள்.  கண்ணால் பேசிக்கொண்டும், வகுப்பில் பிட்டு பேப்பரில் தகவல் பரிமாறிகொண்டும் இருந்தனர்; இருகின்றார்கள். மாட்டிகிட்டா மவனே(ளே) காலி தான்.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டிகிடக்கு! 

இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. தமிழ்நாட்டில் இந்த ஒரு கல்லூரி மட்டுமல்ல. இன்னும் பல கல்லூரிகள் (பத்தில் ஐந்து) இப்படி தான் சத்தமில்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளிலும் இது போன்ற பட்டாசு பாலுக்களும், செயின் ஜெயபால்களும், பிச்சுவா பீட்டரும் இருக்க தான் செய்கின்றனர். 

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று யோசித்து பார்த்தால், நமக்கு இவர்கள் செய்வது சரி என்று ஒரு விதத்தில் படும். (சேம் சைடு கோல் அல்ல..முழுசா படிங்க..) ஏன்னா நம்ம பசங்கள கொஞ்சம் ஃபிரியா விட்டா, அப்புறம் கையில பிடிக்க முடியாது. அதான் இந்த கெடுபிடி. இப்படி காலம்காலமாக ஆண்-பெண் பேசாமை என சட்டம் போட்டு அடிமை படுத்துகிறார்களே, ஏன் எந்த பெற்றோரும் கேள்வி கேட்பதில்லை என யோசித்தால் புரியும். காரணம் என்ன.? கல்லூரிகளில் இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த விதிகள் யாவும் இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. 

இவையாவும் மாணவ சமுதாயத்தின் உரிமை பறிக்கும் செயல் மட்டுமல்ல. அவர்களின்  சமூக திறன்களை குறைத்து கொண்டு வருகின்றது என்பதே உண்மை. இன்றைய கார்ப்பரேட் உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும் எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும் போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை பற்றி ஏற்கனவே என் பதிவில்  எழுதியிருக்கிறேன்.

கல்லூரியில் ஒழுக்கத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்று கொள்ள வேண்டியது தான். கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டியதுதான். ஆனால் இத்தகைய சர்வாதிகார கண்டிப்புக்கள், அராஜகங்கள் தேவையில்லாதது. இது போன்ற கட்டாய சட்டத்தினால் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். இதை எப்போது எல்லா கல்லூரிகளும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. அதுவரை லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலும், எத்தனை முறை ஸ்ட்ரைக் பண்ணாலும் ஒன்றுமே நடக்காது, எதுவும் மாறாது.

இதை பதிவு செய்வதன் மூலம் எங்கள் கல்லூரிக்கு வந்து உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்றோ, இது ஒரு மட்டமான கல்லூரி என்றோ சொல்லவில்லை. நல்ல கல்லூரி தான். நன்றாக படித்தால் நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் தான்.  நாங்க படிச்ச காலேஜ எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லல. ரொம்ப பிடிக்கும், ஆனா உங்க காலேஜ் ருல்லஸ் தான் பிடிக்கல. நாங்கள் பட்ட சில பல கஷ்டங்களை  உங்கள் பிள்ளைகளோ, இனி வரும் மாணாக்கரோ பட கூடாது என்பது தான் எங்களது (Aluminis) நோக்கம். யாரவது ஒருவர் இந்த சட்டங்களை தகர்க்க வழி செய்வார் என நம்புகிறோம். வளரும் இளைய சமுதாயத்தை சுதந்திரமாக வாழ விடுங்கள்!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்


ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஏட்டில்லாத விதிகள் !!!

வணக்கம்,

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், முகநூலில் (பேஸ்புக்கில்) தற்போது கல்லூரிகளால் கட்டாயமாக்கப்படும் ஒரு புதிய வழக்கத்தை பற்றி பகிர்ந்திருந்தார். கல்லூரிகளில் மாணவ/மாணவியர் எதிர் பாலினத்தவரோடு பேச / பழக கூடாது என்பதுதான். இதைப்பற்றியே பதிவு போடலாமே என எண்ணி இங்கு பகிர்கிறேன்.

ஒரு மாணவனோ /மாணவியோ ஒரு கல்லூரியில் சேரும் போது, அவர்களுக்கு போடப்படும் முதல் விதி, ஆண்/ பெண் இருவரும் எக்காரணதிற் கொண்டும் பேசி கொள்ள கூடாது. பள்ளி, கல்லூரிகளில் தான் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தையும், ஆண்/ பெண் நட்பையும், கருத்துரையாடல் திறமையும் வளர்த்து கொள்ள முடியும். ஆனால் இப்போது கல்லூரிகள் மாணவியர் எந்த ஒரு சக மாணவரோடும், மாணவர் சக மாணவியோடும் பேச கூடாது என்ற 'உயர்ந்த சமூக கொள்கையை' (?!?!?) கடைப்பிடித்து வருகிறது . இதை பற்றி பல சமூக ஆர்வலர்களும், மனிதவள மேம்பாட்டு துறையினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், கல்லூரிகள் அவர்கள் நினைத்ததை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் தொழில்முறை கல்லூரிகளில் தான், இந்த ஏட்டில்லா சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளிலும் இது அமலில் இருப்பது  வருந்ததக்கது.


ஒரு சில கல்லூரிகளில், இவ்விதியை உணவகங்களிலும் (Canteen) மற்றும் பேருந்துகளிலும் செயல்படுத்துகின்றனர்.  சில கல்லூரி பேருந்துகளில் வலது மற்றும் இடது  (முன்/பின்) என தனியாக கயிறுகள் அல்லது க்ரில்கள் மூலம் பிரித்து மாணவ / மாணவிகளை உட்கார செய்வர். சில நேரங்களில் ஓட்டுனர்கள் ஒற்றர்களாகவும் இருப்பர். ஆண்/பெண் பேசுவதை பழகுவதை கண்டுபிடித்து தண்டிக்கவே ஒரு தனிப்படையே (அவர்கள் தான் SQUAD !)  செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது  என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் "ஆபிஸ் -ரூம்  ட்ரீட்மென்ட்களும்" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் !!!)
 
படிக்கிற வயதில் மாணவர்கள் தவறான வழியில் போக கூடாது  என்பதற்காக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பு மாணவர்களில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றைய நவீன உலகில், பல பழமைவாத விஷயங்களை தகர்த்து வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனாலும் சில பொறியியல் கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற பெயரில் (மாணவ/மாணவியர்) பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் பேச கூடாது என்ற விதியை போட்டுள்ளனர். காரணம் என்னவென்று கேட்டால், இதனால் தனி மனித ஒழுக்கம் மேம்படும் என்றும், கல்லூரி காதல் போன்ற கசமுசாக்களுக்கு முடிவு கட்டும் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றனர்.

இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இவை இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இளைய சமூகத்தினரிடம், சமூக திறன்கள் குறைந்து வருகின்றது என்பதே நிதர்சன உண்மை. 

இன்றைய 'கார்ப்பரேட்' உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும்  எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில்  நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும்  போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.

இன்னும் சிலரோ,மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும் எதிர் பாலினத்தவரோடு பேசாமல் இருந்து விட்டு, அலுவலகங்களில் சேரும் போது இரு பாலினத்தவரும் 'காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல'  பேசி, பழகி, இணைந்து காதலா அல்லது வெறும் ஈர்ப்பா எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். பெண்கள் பள்ளியில்/கல்லூரியில் படித்த பெரும்பாலான (எல்லோரும் அல்ல !) பெண்களுக்கு ஆண் நண்பர்கள் (பாய் பிரண்டு ) இருப்பதற்கும் காரணம் இதுதான்.

எதிர் பாலினத்தவரோடு நல்ல ஆரோக்கியமான உறவு இல்லாத போது, அவர்களிடம் பேசும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம் இல்லை என பலரும் தெரிவிக்கின்றனர். இது எப்போது கல்வியாளர்களுக்கு புரியுமோ என்பது தான் தெரியவில்லை.  

நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

புதன், 15 மே, 2013

தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை !

வணக்கம்,

எல்லா வருடமும் மே மாதத்தில் வரும் முக்கியமான செய்திகளில் ஒன்று, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான். கடந்த வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த வருடமும், மாணவிகளே அதிகமாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். ஆனாலும் இம்முறை ஜெய சூர்யா என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அதே போல தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மறு நாள் செய்திதாள்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சிப்பட்டியலைப் பற்றி  போட்டிருந்தனர். அதை படித்து கொண்டிருக்கும் போதே என் கண்ணில் பட்ட ஒரு செய்தித் தலைப்பு, "மாணவி தற்கொலை!"

செய்தியை  விரிவாக வாசித்தப் பின் எனக்கு பகீரென்றது. அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பொதுத் தேர்வில் 1200 -க்கு 1000 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியுள்ளாள். மருத்துவ படிப்புக்கு அந்த மதிப்பெண் போதாது என்பதால் அவளது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதே போல இன்னொரு மாணவனும் 900 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியும், பொறியியல் படிப்பில் சேர மதிப்பெண் போதாது என்பதால் தற்கொலை செய்துள்ளான்.

தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் என்று சொல்லும் போது,  இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்  என எனக்கு தெரியவில்லை.


இந்த தவறுகளுக்கு எல்லாம் காரணம்  என்ன என்று யோசித்து பார்க்கும் பார்க்கும் போது, ஆள்க்காட்டி விரல் சமூகத்தையே காட்டுகிறது. படிப்பும் , மதிப்பெண்ணும் தான் வாழ்க்கை என்று இன்றைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவருக்கு காட்டியுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை  நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து, படிப்பை (அதிக மதிப்பெண்) பெறுவது மட்டுமே, குறிக்கோளாக எண்ணுகின்றனர். +2 பொது தேர்வில் 90%  மேல் வாங்கி விட்டால், நல்ல  பொறியியல் கல்லூரியிலோ, மருத்துவ கல்லூரியிலோ இடம் கிடைத்து விடும். இதனால் இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை என்றாலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மாணவர்களை பிழிந்து, வாட்டி எடுத்து, பரீட்சை முடிவதற்குள் ஒரு வழியாக ஆக்கிவிடுகிறனர்.
இதில் பள்ளிக்கூடங்களும் சேர்ந்து கொண்டு, மாலை நேர வகுப்பு, இரவு நேர வகுப்பு, என பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பெண்டு நிமிர்த்தி விடுகின்றனர். இவர்கள் இப்படி மன அழுத்ததுடன் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், அவர்கள் தவறான முடிவுக்கு தான் போவார்கள்.  

இந்த பிரச்சனைகள் தீர, மாணவருக்கு சரியான கலந்தாய்வு உரையாடல் தேவை. கலந்தாய்வில், "பரீட்சை முடியும் வரை தொலைக்காட்சி பார்க்காதே!,  ஒரு நிமிடம்  கூட வீணாக்காதே! காலை முதல் மாலை வரை படிப்பு ! படிப்பு ! படிப்பு ! என வழக்கப்படுத்திக் கொள்." அது மட்டுமல்லாமல் எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற பழைய  பாட்டையே அவர்களுக்கு சொல்லாமல், அவர்களுக்கு பரீட்சைக்கு பயமில்லாமல் எழுதுவது பற்றியும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்.

பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்பல்ல. அதை தவிர வேறு என்னஎன்ன படிப்புகள் இருக்கிறது என்று சொல்லித்தர வேண்டும்.
ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ, மனம் தளராமல், தைரியத்துடனும், மனோபலத்துடனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.

வெறும் படிப்பையும் மதிப்பெண்ணையும் மட்டுமே குறிவைத்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது. இவ்வாறு செய்யாமல், அவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் போதித்தால், எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்களின் தேவையில்லா உயிர்பலிகள் குறையும்.      


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???

வணக்கம்,

நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனியார் பண்பலை வரிசையில் (FM) ஒரு முக்கிய தலைப்பை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டேன். தலைப்பு என்னவென்று பார்த்தால், நாட்டில் பல தரமில்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றி தான். அட ! இதை கேட்டவுடன் இதை பற்றியே ஒரு பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றியது. பாதி தூக்கத்தில், தொகுப்பாளர் ' அஜய் விக்னேஷ்' பேசியதையும், என்னுடைய சில கருத்துகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 231 சுயநிதி கல்லூரிகள் தான் இருந்தது. ஆனால் இன்றோ, 570 சுயநிதி கல்லூரிகளும் 37 பல்கலைகழங்களும் இருக்கின்றது. இந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூறுக்கும்  மேற்பட்ட கல்லூரிகள் அனுமதி கோரிக் காத்துள்ளன. பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல் புதிதாய் முளைக்கும் சில கலைக்கல்லூரிகளும் இதே நிலைமையில் தான் உள்ளது.

இதில் பெரும்பாலான கல்லூரிகள் தரமானதாக இருப்பதில்லை. போதிய வசதிகள் கிடையாது. திறமையான விரியுரையாளர்கள் கிடையாது. வசதியுள்ள ஆய்வகங்கள் இருப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகின்றனர். சிலர் பல்கலைகழக ஆலோசனைப்படி வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பெயரளவில் மட்டும் பொறியியல் படித்தவர்களாக இருகின்றனர். 15/ 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர் என்றாலோ, அல்லது அரசு/தனியார் நிறுவனத்தில் பொறியியலாளர்  என்றாலோ தனி மதிப்பு தான். என் மகள்/மகன் பி.ஈ (B.E)  படிக்கிறாள்(ன்) என பெற்றோர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.

ஆனால் இப்போது ஊருக்கு 10 சுயநிதி கல்லூரிகளை திறந்து வைத்து, அதுவும் ஓர் கலைகல்லூரி படிப்பை போல ஆக்கிவிட்டனர். இந்த கல்லூரிகளில் படித்து விட்டு வருடந்தோறும் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று தப்பிவிடுகின்றனர். முக்கால்வாசி பேர் தரமான பொறியியல் கல்வி  இல்லாததாலும், சரியான உரையாடல் திறன் இல்லதாதலும் (BPO) பி.பி.ஒ-விலும் மற்ற சிறிய நிறுவனங்களிலும் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் போய் சேர்கின்றனர். ( ஹ்ம்ம்! ஒரு சிலர் நல்ல கல்லூரியில் சேர்ந்தும், சரியாக படிக்கத்தால் சரியான வேலையின்றி இருக்கின்றனர் !!!)

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் எந்த கல்வித்தகுதியும் (பட்டப்படிப்பும்) பரவாயில்லை என்ற  நிலை வந்துவிட்டது.


எனக்கு தெரிந்த வரை மருத்துவ மாணவர்கள் மட்டும் தான் படிப்புக்கு பிறகு, அவர்தம் துறையில் போய் வேலை செய்கின்றனர். பொறியியல் படித்த மாணவரும், கலைகல்லூரி மாணவரும் சேர்ந்தே எல்லா வேலைவாய்ப்புக்கும் வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே  அளவு சம்பளமும் சிலர் வாங்குகின்றனர். அதில் பெரிதாக  தப்பு ஏதும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் . ஒரு வளமான சமுதாயம் வளர இந்த நிலை தேவைதான். எல்லா பொறியியல் மாணவருக்குமுள்ள வாதம் என்னவென்றால், எல்லா வித பட்டதாரிகளும்  ஒன்றாக வேலை செய்து சம்பளமும் வாங்க, நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி,  நான்கு வருடம் படிக்க வேண்டும்? நாம் மட்டும் ஏன் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்? பேசாமல், நாமும் இளங்கலையோ (B.A), அறிவியல் இளங்கலையோ(B.Sc)  படித்து விட்டு தபால் முலமாக ஒரு முதுகலை படிப்பை படித்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. என் வீட்டில் "நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம் ??? " என்று திட்டுவது ஞாபகம் வருகிறது.

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும் ,மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது.

நாம் எவ்வளவோ பொருமினாலும் சில பொறியியல் படித்த மாணவர்கள், உயர்ந்த நிறுவனத்தில் லகரங்களில் சம்பளம் வாங்குவதை யாராலும் ஓப்பு கொள்ளாமல் இருக்க முடியாது. 

இதையெல்லாம் பண்பலையில் கேட்டு கொண்திருந்த நண்பர் ,
"போதும் பா!, -(FM) எஃப். எம் - ஐ  நிறுத்த சொல்லுங்க. காலங்காத்தாலேயே வெறுப்பபேத்துறது போல இருக்கு .. " என்று நொந்து கொண்டார் .

தலைப்பு முழுசாக முடியும் முன், அலுவலகம் வந்ததால், பேருந்தில் உள்ள அனைவருக்கும் நமூட்டு சிரிப்புடன் இறங்கி சென்றோம். 
      

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 


வியாழன், 14 மார்ச், 2013

சமமான கல்வியால் உயரும் சமுதாயம்


வணக்கம் !!!

ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்படி கிடைத்தால் தான் நாட்டிற்கு நல்ல வருங்காலத்தை உருவாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறைப்படி அனைவருக்கும் சமமான கல்வியறிவு கிடைக்கிறதா ??????? அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.

பண்டைய காலம் முதல் 200 ஆண்டுகள் முன்னால் வரை நம் முன்னோர்கள், கல்வி பயில குருகுலத்திற்கு சென்றார்கள். குருகுலம் என்பது ஆசிரியர் வீடாகவோ, கோவிலாகவோ, பொது மண்டபமாகவோ, குளக்கரையிலோ இருந்தது. குருகுலத்திலும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், ஏழை பிள்ளைகளும் தனித்தனியே கல்வி பயின்றனர். குருகுலத்தில் பாடம் மட்டும் இல்லாமல் வீரம், சரித்திரம்,கலாச்சாரம் ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்பிள்ளைக்களுக்கே குருகுலத்தில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது.


பிறகு, ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் 1830-ல் நவீன கல்வி முறையில் தான் ஆங்கில வழி கல்வி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன.  இதில் தான் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறை வந்தது. முதலில் இந்த முறை நன்றாக இருந்த போதிலும், காலப்போக்கில் கல்வி பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது தான் வருத்தமான விஷயம்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் கல்வியறிவு 80.33 சதவிகிதத்ததில் உள்ளது. எல்லா ஆட்சியிலும் உள்ள நலத்திட்டங்களில் இலவச கல்வியும், அனைவருக்கும் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போதே
மாநிலம் முழுவதும் சமமான கல்வி கிடைப்பதில்லை.

இப்போதுள்ள கல்விமுறைப்படி, அதாவது மும்முறை தேர்வு முறையின் படியோ  அல்லது சமச்சீர் கல்வியின்படியோ (கடந்த ஆட்சியில்) அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் என்றால் அது சரியல்ல. தமிழகத்தில் மட்டும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு), தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியம் (மெட்ரிக்குலேசன் ), ஆங்கிலோ இந்தியன்  கல்வி வாரியம்  என  வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி திட்டங்களின் முலம் கல்வி கற்கும் மாணாக்கருக்கு சமமான கல்வி கிடைப்பதி. எப்படி என கேட்டல், உதாரணத்திற்கு ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் பாடத்திட்டமும், தனியார் பள்ளியில் (மெட்ரிக்குலேசன் மாணவனின் பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலும் அரசு/ அரசு உதவி பெரும் பள்ளியில், மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டங்களை விட உள்ளடக்கம் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டத்தில் இருப்பதை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ளடக்கம்அதிகமாக இருக்கிறது. இதுதான்  சமமான பாடத்திட்டமா ??? இதில் படித்த/ படிக்கும் மாணவருக்கு எப்படி  சமமான  கல்வியறிவு கிடைக்கும் ???

என் கருத்துப்படி இதற்கெல்லாம் ஒரு வழி என்ன என்று கேட்டால், அரசே எல்லா கல்வி நிறுவனங்ககளையும் எடுத்து நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள எல்லா   பள்ளிகளிலும் சமமான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக நடைமுறைக்கு  வராது என்று அறிந்த போதும்,வந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. ஏனென்றால் முக்கால்வாசி கல்வி நிலையங்கள் சிலஅரசியல்வாதிகளிடமும், பண முதலைகளிடமும் தான் உள்ளது.  நடைமுறைக்கு வந்தால் பலருக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பள்ளிநிறுவனங்களை நடத்துபவரும்,அதில் பணிபுரியும் ஆசிரியருக்கும் மாற்று வழியை அரசு  செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என்றாலும், சமமான கல்விக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்