corruption in india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
corruption in india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 நவம்பர், 2016

செல்லாத ரூபாய்கள்!

வணக்கம்,

நேற்று (08-11-2016) இரவு எட்டு மணி வாக்கில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு அளித்து கொண்டிருந்த உரையில், "இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..", என்றுஅறிவித்து கொண்டிருந்தார். மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திடீர் அறிவிப்பு என்று கூறியுள்ளார். இன்று ஒரு நாள் வங்கிகளும், இன்றும் நாளையும் (09/11 & 10/11) ATM மெஷின்கள் இயங்காது. இதனால் பொது மக்களின் சிரமத்திற்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார்.

ban-1000rs-500rs-currency

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்று மோடியை பாராட்டி வருகின்றனர்.

அரசின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்து கொண்டு வங்கிகளில் தானியங்கி மெஷின் மூலம் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் இரு நாட்களுக்கு ATM  மற்றும் வங்கிகள் செயல்படாததால் , எல்லோரும் பணத்தை ATM-லிருந்து 400 ரூபாய்களாக பல முறை போட்டு எடுத்தனர். எல்லா வங்கி வாசலிலும் கூட்டம்... ஒவ்வொன்றிலும் குறைந்தது 20 பேராவது நின்றனர். பல ATM-கள் செயலிழந்து போயின. மெஷினில் பணம் தீர்ந்து போனது... மக்கள் யாரை பார்த்தாலும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஊரே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது. முக்கியமாக இந்த மூன்று நாட்களில் திருமணம் அல்லது சுபகாரியம் வைத்தவர்கள், வெளியூர் சென்றவர்களின்  நிலை படு திண்டாட்டம் தான்.

இது பெரும் பணக்காரர்களையோ, அரசியல் புள்ளிகளையோ ஒன்றும் பாதிக்காது. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் credit அல்லது debit கார்டு வைத்து சமாளித்து கொள்வார்கள். அன்றாட தேவைகளுக்கு கடைக்கும், கூலிக்கும் அல்லல்படுகிறவர்கள் தான் பெரிதும் கஷ்டபடுவார்கள். இன்று வேலை செய்தால்தான் காசு, சாப்பாடு என்று பிழைப்பு நடத்துவோர்க்கு, மிகவும் கஷ்டம். ஆட்டோ/டாக்சி ஓட்டுபவர், சிறு வியாபாரம் செய்யும் முதலாளி, தினசரி கூலி தொழிலாளி என பாடுபடுவது இவர்கள் தான்.

new-currency-notes-details

எல்லா டி.வி சானல்களிலும் இரவு விவாத மேடை நிகழ்ச்சிக்காக "ஹிலாரி - டிரம்ப் "-ன் தலைப்பே இருந்திருக்கும். ஆனால் பிரதமரின் இந்த உத்தரவால், எல்லோரும் போட்டி போட்டு கொண்டு இதை பற்றியே பேசி பேசி மக்களை பெரிதும் பாடுபடுத்தினர். பொது ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரின் கேள்வி இதுதான். இந்த திடீர் உத்தரவால் பொது மக்களின் பாதிப்பு தவிர என்னென நன்மைகள் ??? இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் ?, என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

தீவிரவாதிகளும், சில சமூக விரோதிகளும் கள்ள நோட்டுக்களை நாட்டில் அவ்வப்போது பரப்பி விடுகின்றனர். பழைய 500/1000 ரூபாய் செல்லாது என அறிவித்தால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் எல்லாம் செல்லாமல் போய்விடும். மேலும் இந்த புது நோட்டுக்கள் கள்ளதனமாக அச்சடிக்க முடியாதவாறு தயாரிக்க பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதன் மூலம் அடுத்த வாரம்... ஏன்?? இன்று முதலே யாரிடமும்  500/1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருக்காது. மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முதல் மகுடம் இது.

சாதாரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்திர மக்கள் பலரும் வருமான வரி கட்டி விடுகின்றனர். அவரவர் அலுவலகங்களில் வருமான வரி பிடித்து செய்யபடுகிறது.  சிறு /பெரு கடை முதலாளிகள், சின்ன சின்ன தொழிலதிபர்கள், வட்டிக்குவிட்டு வாங்குபவர்கள், சினிமாகாரர்கள், அதிக லஞ்சம் வாங்கி பணம் சேர்ந்தவர்கள், ஊர் பணத்தில் காசு பார்த்தவர்கள் என கணக்கில் காட்டாமல்,  பணத்தை  மூட்டை மூட்டையாய் வைத்துள்ளவர்களுகெல்லாம் இந்த சேதி பெரிய இடியாக விழுந்து இருக்கும். இந்த பணத்தை இவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அரசிடம் கணக்கு காட்டி, பாதி போக மீதியை  வெள்ளையாக்கி எடுத்து செல்லலாம்; இல்லையெனில் ஒட்டு மொத்தமாக குப்பையிலோ, நெருப்பிலோ போட்டு விடலாம். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தின் புழக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

பெரும் பணம் படைத்த செல்வந்தர்கள், சீமான்கள், கோடிகளில் புரள்பவர்கள் எல்லாம் தங்கள் கணக்கில் வரா பணத்தை நகை, ஆபரணம், விலை மதிப்பில்லா கற்கள், பச்சை பாண்டு பேப்பர்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய மால்கள், பினாமி, விவசாய நிலம், ரியல் எஸ்டேட், கம்பெனி ஷேர்கள், வெளிநாட்டு பணம், வெளிநாட்டு வங்கியில் பணம், என சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை என்ன செய்ய போகிறது் என அரசும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவர்களிடமிருந்து கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர வேறு ஏதாவது புது தடாலடி சட்டம் போடுவார்கள் என நம்புவோமாக!!!! இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ! நாடு வளமாக இருப்பின் மகிழ்ச்சி! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது !

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இது எதை பற்றிய பதிவு என தெரிந்திருக்கும். ஆம்! இது ஒலிம்பிக் சீசன். அதான் இப்படி ஒரு பதிவு. 

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது; பளு தூக்குதலில் சதிஷ் சிவலிங்கம்; ஜிம்னாஸ்டிக்ஸில் 58 வருடங்களுக்கு பின் தேர்வான திபா கர்மாக்கர்; பாட்மிட்டனில் சாய்னா நெய்வால்; துப்பாக்கி சுடுதலில் முன்னாள் தங்கமகன் அபினவ் பிந்திரா; மொத்தத்தில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக 120 வீரர்கள், 15 போட்டிகளில் விளையாட உள்ளனர் என்ற செய்தியை கேட்ட இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள்.


இம்முறையாவது தங்கப் பதக்க பட்டியலில் நாம் வருவோமா? என பலரும் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கடந்த 2012 ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை  
( 2 வெள்ளி, 4 வெண்கலம் ) வென்றது இந்தியா. அதையே நாம் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை (அதிக போட்டிகளில்) கடந்த முறை தான் பெற்றிருப்போம் என நினைக்கிறேன்.

இம்முறையும் இப்படி நடக்க வாய்ப்புண்டா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, எல்லா போட்டிகளிலும் நம் வீரர்/வீராங்கனைகள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி நம்மை அடையும் போது மனம் சற்று ஏமாற்றமடைகிறது. அவர்கள் என்னதான் பயிற்சியும், விடா முயற்சியும் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேவை ஊக்கமும் ஆதரவும் தான். அதை அரசாங்கமும், இந்திய விளையாட்டு துறையும், இந்திய ஒலிம்பிக் தேர்வு துறையும் தான் தர வேண்டும்.

இப்போதைக்கு ஆரம்பித்த பன்னிரெண்டு நாட்களில், ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவின் பெயரை பதக்கப் பட்டியலில் சேர்த்துள்ளார். பாட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி, மேலும் ஒரு பதக்கத்துக்கு (குறைந்தது வெள்ளி) அடி போட்டுள்ளார்.

டுட்டி சந்த் என்ற இந்திய தடகள வீராங்கனை, "போட்டி வீரர்களை 'எக்கனாமி கிளாசில்' பயணம் செய்யவிட்டு விட்டு, இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் மற்ற மேலாளர்களும் 'பிசினஸ் கிளாசில்' பயணம் செய்கிறார்கள். 36 மணி நேர பயணத்தில் ஓய்வில்லாமல், சரியான தூக்கமில்லாமல் இப்படி நடத்தினால், எப்படி வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் ??" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இணைப்பு - http://goo.gl/yXdqrN

இதை தவிர சில நாட்களாக கின்னஸ் சாதனை புரிந்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் இப்போது என்ன செய்கிறார் என்ற பதிவு சமூக தளங்களை சுற்றி வருகிறது. இணைப்பு - http://goo.gl/sdOA2Z

indian-olympics

நம் நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனரோ இல்லையோ, எல்லா ஆசிரியரும், பெற்றோரும் தம் பிள்ளைகளை இன்ஜினீயராக்க, டாக்டராக்க தான் விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எவ்வளவோ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு தர வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்கு பெரியது. இட ஒதுக்கீடு, லஞ்சம், ஊழல் இருக்கும் விளையாட்டு துறையில் எப்படி தரமான வீரர்கள் இருப்பார்கள்? எப்படி பதக்கம் வெல்வார்கள்?


இந்த வீடியோவில் 01:09 - 02:10 வரை பாருங்க... சினிமா வசனமானாலும் இது தான் உண்மை.

இதையெல்லாம் பார்க்கும் போதும், இப்படியெல்லாம் நடக்கும் போதும், இந்தியாவிற்கு எப்படி பதக்கம் கிடைக்கும் என்ற எண்ணமே எல்லார் மனதிலும் தோன்றுகிறது.


இந்தியாவிற்காக விளையாடிய / விளையாட போகும் எல்லா வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துக்களும் !!! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புல்லுக்கு இரைத்த நீர்!

வணக்கம் ,

இந்தியா ஏழை நாடு என சிலர் சொல்கிறார்கள். பண புழக்கம் கம்மியாய் இருக்கிறதாம். நம்முடைய பணம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா? கீழுள்ள சில செய்தி துணுக்குகளை பாருங்கள். இவ்வளவு பணம் புழங்குகிறது என உங்களுக்கே புரியும்...


14.5
லட்சம் கோடி ரூபாய் வரியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் வசூலிக்கப்படுள்ளது.

30
லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது என சி.பி.ஐ ஆய்வறிக்கை சொல்கிறது.

10
லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

9
கோடியே கோடி ரூபாய் (910,603,234,300,000 INR ) ஊழல் கடந்த 68 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்துள்ளது.

90
இந்தியாவிலுள்ள உலக மகா கோடீஸ்சுவரர்களின் எண்ணிக்கை.

61,000
இந்திய கோடீஸ்சுவரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

30,000
டன் அளவுள்ள தங்கம் ஒவ்வொரு ஆண்டும் கோவில்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

1.5
லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

5,000
கோடி. அரசியல் கட்சிகளுக்கு தானமாகவும், வருமானமாகவும் வருகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

1,400
கோடி. செய்திதாள்களில் கட்சி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை.

1,800
கோடி கட்சி விளம்பர பதாகைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

4,800
கோடி தொலைகாட்சியில் கட்சி விளம்பரதிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

29,000
ரூபாய் தண்டமாகிறது, ராஜ்ய சபாவில் வீணடிக்கடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்.

3
லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடனாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆய்வு சொல்கிறது.

35
கோடி வீண். ராஜ்ய சபாவில் கடந்த குளிர்கால கூட்ட தொடரை நடக்க விடாமல் செய்ததால்.

1000
கோடி மதிப்புள்ள தங்கம் கடந்த ஆண்டில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது.

71,000
கோடி வங்கி கடன் விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்ய பட்டுள்ளது.

1975
கோடி ஐ.பி.எல்-லில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்க பிரிவு சொல்கிறது.

2.27
லட்சம் கோடி இலவச திட்டங்களுக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? நம் நாட்டில்
எவ்வளவு பணம் வீணாகிறது பாருங்கள். இவ்வாறு புல்லுக்கும், கதிருக்கும் இரைக்கப்பட்ட நீரை தவிர்த்தாலே நாடு வளமும், வளர்ச்சியும் அடையும்.

குறிப்பு - ஆனந்த விகடனில் இது போன்ற புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அதை போல நாமும் எழுதலாம் என்று எண்ணி, இணையத்தில் பல தளங்களில் தேடி சேகரிக்கப்பட்டதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்