ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சிறுகதை - நானும் தண்டம் தான்!

வணக்கம்,

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சிறுகதை ஒன்றை முயற்சித்து உள்ளேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லவும்.

சிறுகதை - நானும் தண்டம் தான்!
*****************************************

அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும் கூட்டமாக இருக்கிறது என்றால் இன்னும் கடுப்பு தான். தன் அம்மா வள்ளியை முன்னால் எற சொல்லிவிட்டு, அவள் உள்ளே முண்டியடித்து போகும் வரை பார்த்துவிட்டு, இவனும் பின்புற வழியாக ஏறி கொண்டான். உள்ளே போக இடமில்லை. நான்கு பேரோடு ஐந்தாவது ஆளாய் கடைசி படிக்கட்டில் தொத்தி கொண்டான்.

tamil-shortstory

"ரெண்டு வடபழனி.." என பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி கொண்டான். ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் இறங்கி ஏற சிரமமாய் இருந்ததால், கொஞ்சம் உள்ளே சென்று கண்டக்டருடன் நின்று கொண்டான். அவன் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கண்டக்டரிடம் நின்று கொண்டாள். விஜய் அம்மாவை முறைத்து கொண்டே, "இதுக்கு தான் சீக்கிரம் கிளம்பனும்ன்னு சொன்னேன்.. இப்போ பாரு..இவ்வளோ கூட்டம்.."என கடிந்து கொண்டான். அவளும், "ஏண்டா... நான் துணி துவச்சிட்டு, இட்லிக்கு மாவு போட்டுட்டு தானே வரணும்..இல்லனா திங்கட்கிழமை என்ன பண்ணுவே??" என ஆதங்க பட்டுக்கொண்டாள். "நேத்தியே போலாம்ன்னு பாத்தா உனக்கு வேலை வந்துடுச்சு. போயிட்டு ஒன்பது மணிக்கு தான் வந்தே.. அப்போ இப்போ தான் போணும்.." என்றாள் அவள்.

 "ஆமா இப்போ உன் தங்கச்சி வீட்டுக்கு போகனும்னு ரொம்ப அவசியம்.." என கூறி கொண்டு முணுமுணுத்தான்.. வண்டி டிராஃபிக் காரணமாக மெதுவாக போவதால் கொஞ்ச நேரம் போனை எடுத்து பாட்டு கேட்டு கொண்டிருந்தான் விஜய். சிறிது நேரம் போனது. கிண்டியை தாண்டியவுடன், விஜய்யின் அம்மா குரல் கேட்பது போல உணரவே, நிமிர்ந்து பார்த்தான். ஆம்! அவன் அம்மா யாரோ  ஒருவனை திட்டி சண்டையிட்டு கொண்டிருந்தாள். என்ன ஏது என அவசரமாக ஹெட்செட்டை கழட்டி அருகில் போனான்.. "பொறுக்கி கம்மினாட்டி! அந்த பொண்ணு ஓரமா தானடா நிக்குது.. மேல வந்து எறுறியே.. எருமை.. அப்படி தள்ளி போடா..." என பொறுமி கொண்டிருந்தாள். "இடம் இல்லல.. பஸ் வேற கூட்டமா இருக்கு.. எங்க போவ நானு.." என்று சொல்லியபடி  தலையை தொங்கப் போட்டன் அந்த இடி மன்னன். ஜீன்ஸ் பேண்டும், ஒரு டிசன் பனியனும் போட்டிருந்தான். காதில் ஹெட்போன். பார்க்க சிறு வயசு பையன் போல தான் இருந்தான்.

"நானும் அப்போலருந்து பார்கிறேன், இவனும், அந்த பொண்ண உரசுரதுலேயே குறியா இருக்கான், காவாளி பய.." அருகில் நின்ற பெரிசு ஒன்று சவுண்ட் விட்டது." "இதுக்குனே பஸ்ல வரா இவாலெல்லம்... " என்றார் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாமி.

பலரும் முனுமுனுக்கவே அவன் தள்ளிப்போய் படிக்கட்டு அருகே நின்று கொண்டான். எல்லோரும் சேர்ந்து தர்மஅடி போடுவதற்குள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொண்டான்.

இருப்பினும் வள்ளியின் வாய் சும்மா இல்லை. அவனை கரித்து கொண்டே வந்தாள்."இதெல்லாம் எங்க உருப்பட போகுது..தெரு தெருவாக போய் பிச்சை தான் எடுக்கும்..சனியன்..சனியன்.."

"சரி விடுமா.. போகட்டும் அவன்", என்றான் பக்கத்தில் உள்ள ஒரு நடுத்தர வயது ஆண்.. அவள் சடாரென திரும்பி அவரை பார்த்து, "அதெப்படி விட முடியும்.?? சின்ன விஷயமா அவன் பண்ணான்..? இத்தனை ஆம்பளைகள் இருகீங்கன்னு தான் பேரு.. எல்லாம் தண்டமா இருக்கீங்க.. ஒருத்தராவது  தட்டி கேட்கலாம்ல..??" என்று  கேட்டாள்.. டிக்கெட் கிழித்து கொண்டிருந்த கண்டக்டர், அவரை யாரோ கிழிப்பது போல நிமிர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

பஸ்சில் இருந்த அனைவரும் சில நொடிகள் மௌனமானார்கள். விஜயும் தான். பஸ் எரியவுடனயே அவன் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்து விட்டான். ஆனாலும், பார்க்காதது முகத்தை திருப்பி கொண்டு, பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டான். அவன் மட்டுமல்ல. பலரும் அந்த பெண்ணிற்கு நடந்ததை பார்த்திருப்பார்கள். தப்பு நடந்ததை பார்த்தும் பார்க்காதது போல இருப்பதாலும், வாய்பிருந்தும் தட்டி கேட்காமல் இருப்பதால் தான், இது போன்ற கொடுமைகள் நடந்து வருகிறது.  வள்ளி கூறியது உண்மை தான். வாய்ப்பிருந்தும் தப்பை தட்டி கேட்காத எல்லா ஆண்களும் தண்டம் தான். அந்த தண்டத்தின் தண்டமாக அவனும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

 நன்றி!!!
 பி.விமல் ராஜ்

சனி, 1 டிசம்பர், 2018

2.O - விமர்சனம்

வணக்கம்,

எந்திரன் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன போதிலும் இன்னும் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. 2.0 படம் மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்து ஒரு வருடமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் செய்து இப்போது தான் ரிலீசாகியுள்ளது.


போன வருடத்தில் திருட்டுத்தனமாக வந்த டீஸர் வீடியோவிலிருந்தே கதை ஓரளவுக்கு புரிந்தது. சமீபத்தில் வந்த டீஸர் மற்றும் டிரெய்லரும், படத்தின் கதையை கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்டம் மூலம் தெளிவுபடுத்தின. சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான கபாலியும், காலாவும் எதிர்பார்த்த அளவு (ஓட) இல்லை. 2.0 வாவது மற்ற நடுநிலைவாதிகளிடமிருந்து, என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை காப்பாற்றட்டும் என நினைத்து கொண்டிருந்தேன்.



2.0 movie review

டீசர் பார்த்ததிலிருந்து, படத்தில் சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமாருக்கு தான் வெயிட்டான வேடம் போல தெரிந்தது. அவருடைய வித்தியாசமான கெட்டப், செல்போன்கள் பறத்தல், செல்போனிலேயே உருவான பறவை பெரிய சைஸ் பறவை, சிட்டி 2.0 reloaded கெட்டப், போஸ்டர்கள், ரஜினியின் பல அவதாரங்கள், எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், 650 கோடி பட்ஜெட்... என காட்டியது எல்லாமே அசந்து போய் வியக்கும் வண்ணம் பிரமாண்டமான ஹைப்புகள் தான்.


படத்தில் கதை இதுதான். செல்போன்களால், செல்போன் டவர்களால் பல பறவை இனங்கள் அழிகின்றன. அதனால் பறவைகள் மீது அன்பு கொண்ட ஒரு முதியவர் (பட்சி ராஜன்) போராடுகிறார். டவர்களில் உள்ள high frequency-யையம், செல்போன் உபயோகிப்பதையும் குறைக்க சொல்கிறார். அரசு மூலம், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம், மக்கள் மூலமாகவும் முயற்சி செய்கிறார். பலனில்லை. இறந்துவிடுகிறார். இறந்து எப்படி செல்போன்கள் மூலமாகவே பழி வாங்குகிறார் /எதிர்க்கிறார், அதை நம் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவும் எப்படி அடக்குகின்றனர் என்பதே கதை. 

எந்திரன் படத்தில் Andro-humanoid Robo, Neural Schema, Zigbee protocol, Augmented reality, Magnetic mode, Human terminator, Red chip, Transformer type Giant Robot என காட்டியது தமிழ் இந்திய படங்களுக்கே புதுசு. ஆனால் 2.0 வில் எல்லாமே முதல் பார்ட்டில் பார்த்தது தான் பெரும்பாலும் இருக்கிறது. ஐந்தாம் விசை (Fifth Force), ஆரா (aura), Positive, Negative energy என புதிதாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். பாண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது மட்டும் வைத்து கொண்டு, படம் முழுக்க கிராபிக்ஸ் செய்து விளையாடிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலம் விசுவால்ஸ் மற்றும் கிராபிக்ஸ். செல்போன்கள் பறப்பது, எல்லாம் சேர்ந்து ராஜாளி பறவை போல மாறுவது, அக்ஷய் குமாரின் மேக்கப், தலைவரின் கெட்டப் எல்லாமே பக்கா தூள். ஆனால் அது மட்டுமே பலமாக இருப்பதுதான்  வருத்தம். சூப்பர் ஸ்டாருக்கு பில்டப், மாஸ் டயலாக், மாஸ் சீன் என ஒன்றுமே இல்லை. எந்திரனில் வருவது போல சிட்டி ரோபோவுக்கு சில நக்கல் வசனம் வைக்க நினைத்து சொதப்பி 
இருக்கிறார்கள். சஸ்பென்ஸ் எலிமெண்ட்டாக குட்டி ரோபோ 3.0 (microbots). அட ராமா! என நானே தலையை சொரிந்து கொண்டேன். 


2.0-tamil movie

எமி ஜாக்சன் அசிஸ்டென்ட் ரோபோவாக வந்து போயிருக்கிறார். அவ்வுளவுதான். மற்றபடி மயில்சாமி, ப்ரொபஸர் போராவின் மகனாக சுந்தன்சு பாண்டே, தொலைத்தொடர்பு அமைச்சர், ஐசரி கணேஷ் என எல்லோரும் வந்து போயிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அளவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் வில்லனாக இருக்க வேண்டும். பக்ஷி ராஜனாக, அக்ஷய் குமாருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. சில நேரமே வந்து நன்றாக நடித்துவிட்டு போயிருக்கிறார். ஆனால் பெரிதாக எதுவும் கிளிக் ஆகவில்லை.

கிராஃபிக்ஸ் மூலம் எல்லா சீனுமே தாறுமாறு பண்ணியிருகிறார்கள். அதை பாராட்டியே தீர வேண்டும். பல இடங்களில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் விஷுவல்சோடு, திரைகதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கதை எங்கடா இருக்குன்னு கேக்குறீங்களா?? சினிமா ரஜினி ரசிகனா படம் பாருங்க, புரியும்..

எந்திரனில் பாடல்கள் தீம் மியூசிக்காகவும், மெலடியாக கேட்கவும் நன்றாக இருக்கும். 2.O-வில் "ராஜாளி..." பாட்டு சண்டை நடக்கும் போது நடுவில் வந்து போகிறது. படம் முடியும் போது கடைசியில் 'எந்திர லோகத்து சுந்தரியே..' பாடல் வருகிறது. ஏன் வருகிறது என தெரியவில்லை. கிராபிக்ஸ்க்கு மட்டுமே அந்த பாடல். ஒரு வரி கூட புரியவில்லை; கேட்கவும் முடியவில்லை. 3டி ஓரளவுக்கு ஓகே என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங். எந்திரனில் அம்மா அப்பா செண்டிமெண்ட், காமெடி அசிஸ்டென்ட், பிரசவம் பார்த்தல், ட்ராபிக் போலீஸ் லஞ்சம், சேரி திருவிழாவில் சண்டை, எலக்ட்ரிக் ட்ரெயின் சண்டை, வசீகரன்- சனா திருமணம், கத்திப்பாரா போன்ற பிரிட்ஜில் சண்டை என கொஞ்சமாவது இந்தியன் நேட்டிவிட்டி இருக்கும். ஆனால் 2.0 வில் தேடியும் கிடைக்கவில்லை. வசீகரனின் லேப், லண்டன் ரோபோ நாயகி, செல்போன் கடைகள், மினிஸ்டர் கூட்டம் நடக்கும் கட்டிடம், புட்பால் மைதானம், பக்ஷி ராஜன் வீடு என எல்லாமே செட் மயம்.

கடைசியில் உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான். நம் டெக்னாலஜி வளர்ச்சி, அவைகளை அழிக்க கூடாது என்ற சமூக கருத்தை சொருகியிருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் கண்கட்டி விதை மூலம் மக்களை மயக்கி விடலாம் என நம்பியிருக்க போகிறாரோ தெரியவில்லை. வெறும் கிராபிக்ஸ், சூப்பர் ஸ்டார்க்காக வேண்டுமாயின் ஒரு முறை பார்க்கலாம்! dot.



நன்றி!!!
பி. விமல் ராஜ்

ஞாயிறு, 18 நவம்பர், 2018

காசு,பணம் சேர்த்து வைக்கலாமா ?

வணக்கம், 

பொதுவாக யாருடைய பயோடேட்டாவிலோ அல்லது அவர்களை பற்றி சொல்லும் போதோ hobby (பொழுதுபோக்கு) என ஏதேனும் ஒன்றிரண்டை சொல்வார்கள். பெரும்பாலும் புத்தகம் படித்தல், பாட்டு கேட்டல், கிரிக்கெட், ஃபுட் பால், இணைய அலசல், சமூக வலைதளத்தில் அரட்டை, தபால்தலை சேகரித்தல் என பல சொல்வார்கள். அதுபோன்ற  பொழுதுபோக்கில் நாணவியல் என சொல்லப்படும் நாணயம்/ ரூபாய் நோட்டு சேகரித்தல் (Coin and Currency Collections - Numismatics) முக்கிய ஒன்றாகும். அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

indian currencies

நாணவியலில் வெறும் காகித நோட்டுகளையும் காசையும் சேர்த்து வைப்பது பெரிய விஷயமில்லை. அதன் சிறப்பு மற்றும் பிற தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். வெறும் உலோகங்களையும் காகித்தையும் சேர்ப்பது பயனற்றது. நோட்டை பற்றியும் நாணயங்களை பற்றியும் என்னன்ன விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

Coin and Currencies சேகரிக்கும் போது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்:

1) முதலில் அது எந்த காலத்தில் புழக்கத்தில் இருந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்.

2) எந்த ஆண்டு அச்சடிக்கபட்டது, எந்த அச்சகத்தில் அச்சடிக்கபட்டது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். எப்படி நாணயங்களை/நோட்டை  கையாள வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

3.) நோட்டை எந்த ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்திட்டு உள்ளார் என தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் பதவி காலம் எத்தனை வருடங்கள்/மாதங்கள்/நாட்கள் போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4) நாணயம் எந்த உலோகத்தால் ஆனது, அதன் அளவு மற்றும் இடை ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

5) சில நாணயங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு நிகழ்வை பற்றியோ அல்லது ஒரு பிரபலரின் (ஏதேனும் ஒரு துறை)  உருவமோ அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன் காரணமும் வரலாறும் அறிந்திருக்க வேண்டும்.

6) நோட்டின் பின்னால் என்னன்ன வரையப்பட்டுள்ளது, அந்த இடம் எங்கிருக்கிறது, அதன் சிறப்பு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும்.

7) புழக்கத்தில் இல்லாத சில நாணயங்கள், சில முக்கிய நிகழ்வை குறிக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதையும் அறிந்திருக்க வேண்டும்.

8) அந்த நாணயம்/ நோட்டு  இன்னும் புழக்கத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

மேற்கண்ட அனைத்துமே நாம் எளிதில் இணையத்திலேயே தெரிந்து கொள்ளலாம். புத்தகம் வாங்கி படித்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இணையத்தில் இன்னும் பல பதிவுகளும், குறிப்புகளும் இலவசமாக கிடைக்கும். தெளிவாக படம் போட்டு புரிய வைத்திருப்பார்கள். 

ஒரு சிலர் இதை பெரும் பணம் ஈட்டும் தொழிலாகவே எண்ணுகின்றனர். சில ஆயிரங்களுக்கு வாங்கி பல லட்சங்களுக்கு விற்கின்றனர். இந்தியாவில் நடக்கும் எல்லா நாணயவியல் கண்காட்சிக்கும் பல சேகரிப்பாளர்கள் வந்து அவர்களுடைய நாணயங்களையும், நோட்டுகளையும் காட்சிப்படுத்தி விற்று விடுகின்றனர். இதையே சிலர் தொழிலாக செய்கின்றனர். உள்நாட்டு பணம் மட்டுமில்லாமல், பல வெளிநாட்டு நாணயங்களையும், நோட்டுகளையும் சேர்த்து வைக்கின்றனர். 

மேலும் சில குறிப்புகள்: 

UNC- UnCirculated. அதாவது அதிகம் புழக்கத்தில் அல்லது புழக்கத்தில் இல்லாத நோட்டு/நாணயம்.

உங்களிடம் உள்ள ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் தனிப்பட்ட எண்கள்  இருக்கும். அதன் பின்னால் சற்று மங்கலாக ஒரு எழுத்து அச்சிடப்பட்டிருக்கும்.  அவை அந்த நோட்டு எந்த அச்சகத்தில்  அச்சிடப்பட்டது என்பதை குறிக்கும். 

Plain, A,B,C,D - மைசூர், கர்நாடகம்
E,F,G,H,K - திவாஸ், மத்திய பிரதேசம்  
L,M,N,P,Q -  சல்போனி, மேற்கு வங்காளம் 
R,S,T,U,V -  நாசிக், மகாராஷ்டிரம் 



சில நோட்டுக்களில் எழுத்து ஏதும் இல்லாமல் இருக்கும்.அதுவும் மைசூரில் அச்சிடப்பட்டுள்ளது. I, J, O, X, Y, Z ஆகிய எழுத்துக்கள் நோட்டில் அச்சிடப்பட்டு இருக்காது.

நோட்டில் உள்ள எண் வரிசைக்கு நடுவில் * ஒன்று இருக்கும். அது 2006க்கு  பிறகு தவறாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கு மாற்றாக வெளியிடப்படுகின்றது.



சில நோட்டில் உள்ள எண்கள் எல்லாமே ஒரே எண்ணாக இருக்கும்.  சிலது ஃபேன்ஸி எண்களாக இருக்கும். உதாரணத்திற்கு 12A 123456/ 98J 111111. அது போன்ற நோட்டுகள் rare /collectible items ஆக இருக்கும். சில நோட்டுகளின் எண்களில் 786 இருந்தால் அதுவும்  rare /collectible items தான்.
இன்னும் நிறைய இருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

நீங்களும் நாணவியலாளர் ஆக வேண்டுமெனில், கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1) முதலில் நாணயங்களையும் நோட்டுகளையும் சேர்க்க/ சேர்த்து வைக்க விருப்பம் இருக்க வேண்டும். அவன் செய்கிறான், இவன் வைத்திருக்கிறான் என நாமும் சேர்க்க ஆரம்பிக்க கூடாது.

2) மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். சேர்க்க ஆரம்பித்த ஒரே மாதத்திலேயே/வருடத்திலேயே எல்லாம் தெரிந்து, எல்லாம் கிடைத்து விடாது.

3) நாணயங்களையும், நோட்டுகளையும் (Coins and currencies) பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அதன் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும்.

4) மற்ற நாணவியலாளருடன் தொடர்பு கொண்டு நாணயங்களையும், அதனை பற்றிய அறிவையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். 

5) நாணயங்களையும், நோட்டுகளையும் எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான்! நீங்களும் நாணவியலாளர் ஆகிவிடீர்கள். நீங்களும் சேர்த்து வைத்து, வரலாற்றை அறிந்து கொண்டு இன்பமாகுங்கள்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

சனி, 20 அக்டோபர், 2018

ரயில் பயணங்களில்!

வணக்கம்,

எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் என்பது  இன்பமான, சுகமான ஒன்று தான். ஜன்னல் சீட், ரயில் போகும் வேகம், அதில் போகும் மக்கள், தின்பண்டம் விற்பவர்கள் என வேடிக்கை பார்த்து கொண்டே போகலாம். பெரும்பாலும் அந்த இன்பமும், சுகமும் ரயிலின் கூட்டத்தை பொறுத்து தான் இருக்கும். பீக் ஹவரில் பயணம் செய்பவர்களுக்கு அந்த பயணமொரு நரகமாக தான் அமையும்.

எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனின் ரயில் அனுபவங்களை தான் இங்கு படிக்க போகிறீர்கள். விஜய்க்கு எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் ஒன்றும் புதிதல்ல. தான் சேர்ந்திருந்த புது கம்பெனி சிட்டியை விட்டு கொஞ்சம் த...ள்ளி இருப்பதால், மீண்டும் சில நாட்களாக ரயிலில் போய் வரலானான்.

காலை டிபனை அவசரம் அவசரமாக முழுங்கி விட்டு, பைக்கை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள டூ-வீலர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு வேகமாக  நடந்தான். ஸ்டேஷனை நெருங்க நெருங்க அந்த ரயில்வே பெண்ணின் குரல் கேட்டதும் அவன் முகம் புன்னகை பூத்தது. 

'டிங்.. டாங்..டிங்... யாத்திரிய ருப்பியா ஜாந்தே..' என்ற கணீர் ஸ்பீக்கர் பெண்குரல், கல்லூரி காலங்களில் அவனுடன் ரயிலில் வந்த அருண், வம்சி, ஹுசேன், கார்த்திக், தியாகு  ஆகியோரின் பெயர்களையும், ஒரு ரூபாய் வாட்டர் பாக்கெட், மூன்று ரூபாய் காபி, ஏழு ரூபாய் போண்டா வடை,
புட்-போர்டு அடித்து கிழித்த ஷு என 11 ஆண்டுகள் முன் நடந்ததையெல்லாம்  நியாபகப்படுத்தியது.


electric-train-travel-tambaram-chengalpat

நடுவில் பல தடவை ரயிலில் பயணபட்டிருந்தாலும் என்னவோ தெரியவில்லை, இந்த நியாபகம் வந்து போனது. இதெல்லாம் இப்போ தேவையில்லை என நினைத்து கொண்டு வேகமாக படி ஏறினான். அங்கே புட்-ஒவர் ப்ரிட்ஜில் டிஜிட்டல் கடிகாரம் 0830 என காட்டிக்கொண்டிருந்தது. ரயில் பயணர்கள் பலரரும் எதிரெதிரே வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தார்கள். சிலர் ப்ரிட்ஜில் ஓரமாக நின்று போன் பேசி கொண்டும், செல்போனை நோண்டி கொண்டும் இருந்தனர். செங்கல்பட்டு வண்டிக்காக எல்லோரும் காத்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இவனும் ஒரு ஓரமாக நின்று ரயில் வருகிறதா என தண்டவாளத்தை பார்த்து கொண்டே இருந்தான். அந்த காலை நேரத்தில் கதிரவன் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான். காற்று நன்றாக அடித்து அவன் தலை முடியை கலைத்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் செங்கல்பட்டு வண்டி 4ஆம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என்ற ரயில் ஸ்பீக்கர் பெண்மணி சொன்னது தான் தாமதம். ரயிலுக்காக நின்ற அனைவரும் தடதடவென பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார்கள்.  வழக்கம் போல ரயில் கூட்டமாக தான் பிளாட்பாரமுக்கு வந்து சேர்ந்தது. ஓடிச்சென்று ஏறி ஓரமாக நின்று கொண்டான். ரயில் கிளம்ப சில நிமிடங்கள் ஆயின. அதுவரை மொபைலில் பேஸ்புக், வாட்ஸ்அப் போஸ்ட்களை பார்த்து ஸ்கிரால் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு முறை ரயிலில் பயணம் செய்பவர் கூட எண்ணற்ற மக்களையும், அவர்களின் பலவித செய்கைகளை பார்க்க முடியும். ரயில் கிளம்பியது. ஓடும் ரயிலில் பலதரப்பட்ட மக்களை பார்த்தான். உட்கார இடம் இல்லாததால் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ரயிலில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவ மாணவியர்களும், மகேந்திரா சிட்டியில் வேலை செய்பவர்களும் தான் என்று சொல்லியபடி அவர்களுடைய ஐடி கார்டு கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. ஆண், பெண் என பாராமல் கூட்டம் அலைமோதியது. ஒரு சிலர் சாதாரண சட்டை/ புடவையுடன் கட்டை பை, பேக்குடன் இருந்தனர். அவர்களெல்லாம் பரனூர் தாண்டி செங்கல்பட்டு வரை போவார்கள் என எண்ணி கொண்டான். ரயிலில் உட்கார இடமில்லததால் ஓரமாக நின்று கொண்டான். முதல் வகுப்பிலும் கூட்டமாக தான் இருந்தது. பர்ஸ்ட் கிளாஸ் போகில கூட்டம் அவ்வளவாக இருக்காது என சொன்னவரை மனதுக்குள் திட்டி கொண்டான். ஒரு சில நேரத்தில் பர்ஸ்ட் கிளாஸ் காலியாக இருக்கும், சில நேரத்தில் புல் பாட்டில் பீரின் நுரை போல ததும்பி நிற்கும். 

பயணத்தின் போது பலரும், அவர்களது செல்போனை நொண்டியபடி இருந்தனர். சிலர் பாட்டு கேட்டு கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் வந்தனர்.  லேடிஸ் சீட்டில் உட்கா்ந்து இருந்த ஓர் நடுத்திர வயது பெண்மணி இட்டிலியும் பூண்டு தொகையலும் வைத்து தின்று கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் சுடிதார் போட்ட கல்லூரி பெண் பருப்பு சாதமோ, சாம்பார் சாதமோ ஸ்பூனில் ஸ்டைலாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். விஜய்க்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரு ஆண்கள் (அநேகமாக ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள்) நாட்டு நடப்பு பற்றி சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக பேசிய போதிலும், என்ன பேசுகிறார்கள் என கவனித்தான். பெட்ரோல் விலை ஏற்றம், மோடி பாரினுக்கு போனது,  அமைச்சர்களின் அறிவாளிதனமான பேச்சு, குளோபல் வார்மிங், குளிர்கால மழை, 40 செ.மீ. மழை பற்றிய புரளி, பேங்க் லோன், ஆபிஸ் அக்கபோர், மேனேஜர் காண்டு, அப்ரைசல் என சகலமும் பற்றி பேசினார்கள். இது போன்ற மக்களின் பேச்சை கேட்டாலே கண்டிப்பாக ஏதாவது  தெரியாத ஒரு விஷயத்தை பேசி,  நமக்கு சொல்லாமல் சொல்லி விடுவார்கள்.  

அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மொபைல் போனில் முழுகி கிடந்ததை பார்த்தான். பலர் கழுத்தில் ஹெட்போன் தொங்கி கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை, பாட்டு, பேஸ்புக் மீமிஸ் என குனிந்த தலை நிமிராமல் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலர் படம் பார்த்து கொண்டும் இருந்தார்கள். ரயிலில் படம் பார்ப்பவர்கள், ஒரு படத்தை பிட்டு பிட்டாக ரெண்டு, மூன்று நாட்களில் பார்த்து விடுவார்களோ என நினைத்து கொண்டான்.

சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் பெண், போனில் பலமாக பேசி சண்டை போட்டு கொண்டிருந்தாள். கண்டிப்பாக கணவனுடன் தான் பேசி கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இன்னொரு பக்கம் சிலர் ஹெட் போனில் பேசி என கொண்டிருந்தார்கள்.  

கல்லூரி காளையார்கள் சிலர் (பெரும்பாலும் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு) புட்-போர்டில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு  ஸ்டேஷனைலும் இறங்கி இறங்கி ஏறி கொண்டிருந்தார்கள். அருகில் நின்று கொண்டிருந்த 60வயது மிக்க பெரியவர் ஒருவர், "ஏம்பா.. உள்ளே வந்து நில்லுங்களேன்.. கிழே விழுந்து அடி பட போகுது.. "என்று அதட்டும் தோரணையில் கூற, அதை ஒருவரும் பொருட்படுத்தியது போலவே தெரியவில்லை.  "போன வாரம் ஒரு ஆள் தவறி விழுந்து ஸ்பாட்லேயே காலி. அதனால அன்னைக்கு டிரெயின் 1 மணி நேரம் லேட் வெற.. இவனுங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது." என அருகில் நிற்பவரிடம் பொருமி கொண்டார். அவர் ஏதாவது ரிட்டயர்டு ரயில்வே காரராக இருப்பார் போல என்று நினைத்து கொண்டான் விஜய்.

டிப்-டாப் ஆசாமி ஒருவர் சீட்டில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து, ஏதோ ஆங்கில நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தனர். பொண்ணொறுதி சீட்டில் சப்பறை தட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளருகில் உட்கார்ந்து இருப்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு நுனி சீட்டில் ஒண்டி கொண்டிருந்தார்கள்.

புளி முட்டை மாதிரி இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் அடுத்த அடுத்த ஸ்டேஷனில் இன்னும் புளிகள் எறின. ஒவ்வொரு ஸ்டேஷனலிலும் மக்கள் ஏறும் போது, "அதான் இடமிருக்குல.. உள்ளே போங்களேன்.."என கூற, போக போக மேலும் கூட்டம் நசநசத்தது.

விஜய்க்கு இடம் இல்லாததால் மேலே இருந்த கம்பியை பிடித்து தொங்கியபடி நின்று கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு (கொஞ்சம் கலையான) பச்சை சுடிதார் பெண், அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தாள். முதலில் இவனுக்கு காரணம் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, ரயில் ஓட்ட அசைவில் அந்த பெண் மீது இடித்து விட்டான் போலும். சூதானமாக தள்ளி நின்று கொண்டான்.. தள்ளி நின்றவன் சும்மா இல்லாமல், அந்த பெண் பார்க்க கொஞ்சம் நன்றாக  இருக்கிறாள் என்பதற்காக அவள் எந்த கம்பெனி என தெரிந்து கொள்ள மெல்ல முன்பக்கம் ஐடி கார்டை எட்டி பார்க்க, அதையும் அந்த பெண் பார்த்து விட்டாள். சடாரென அருந்ததி அனுஷ்கா போல அவள் கண்களை உருட்டி முறைக்க, விஜய் "ஆகா, இது என்னடா புது சோதனை என நினைத்து கொண்டு தள்ளி வந்து விட்டான்.. அப்போதும் அப்பெண்ணின் ஐடி கார்டு டாகில் காட்டான்குளத்தூர் என போட்டிருப்பதை பார்க்காமல் இல்லை.

பொத்தேரி வந்தவுடன் கல்லூரி மக்கள் அனைவரும் இறங்கி விட்டனர்.பச்சை சுடிதாரும் தான். கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்ட்டே காலியானது. ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். பரனூர் வந்தவுடன் முக்கால்வாசி டிரெயின்னும் காலியானது. வேகமாக இறங்கி ஆபிஸ் பஸ்சை நோக்கி போனான் விஜய்.
*****
மாலை நேரம்- அலுவலக வேலை முடிந்ததும் பரனூரில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தான். பலர் ஸ்டேஷனில் விற்று கொண்டிருந்த சிப்ஸ், கடலை, முறுக்கு ஆகிய வற்றை வாங்கி கொண்டு இருந்தனர். விஜய்யும் அவ்வபோது வாங்கி சாப்பிடுவான். ரயில் வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கும் போது ரயில் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் கூட்டம் இருந்த போதிலும், வண்டி காலியாய் வரவே, இவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.  இரண்டு ஸ்டேஷன் போயிருக்கும், விஜய் அருகே ஒரு பெண் வந்து "எக்ஸ்கியூஸ் மீ, இது லேடிஸ் சீட்" என்றாள். நிமிர்ந்து பார்த்தான். ஒரு நவ நாகரீக பெண் ஒருத்தி, முகம் முழுவதும் மூடி, முதுகில் பேக்பெக்கும், கையில் லஞ்ச்பெக்கும் வைத்திருந்தாள். வேறு சீட் இல்லாததால் விஜய்யை எழுந்திரிக்க சொன்னாள். இதை சற்றும் எதிர்பாராத விஜய், "partition க்கு அந்த பக்கம் தானே லேடிஸ் கம்பார்ட்மெண்ட். இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தானே!" என கேட்டான். "இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். நீங்க உட்கார்ந்து இருப்பது ஃபர்ஸ்ட் கிளாஸ்ல லேடிஸ் சீட்" என்றாள். அப்புறம் தான் தான் உட்கார்ந்து இருப்பது லேடிஸ் சீட் என அறிந்து எழுந்து கொண்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு சக பயணி, " நீங்க ஏன் அவ சொன்னதும் எந்திருசீங்க? என கேட்க " அட விடுங்க ஜி.. இப்போ சண்டை போட மூட் இல்லை.. அப்படியே சண்டை போட்டாலும் நமக்கு ஒருத்தரும் சப்போர்ட் பண்ண மாட்டங்க.. அதான்.." என்றான். "இதுல தான் சமஉரிமை பாப்பாங்க... இது மாறி ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களாள  எல்லோருக்கும் கெட்ட பேரு.." என்று அந்த பயணியும் கடிந்து கொண்டார்.

சிறிது நேரம் போனது. வாசலருகே நின்று கொண்டு போனை பார்த்துகொண்டு வந்திருந்தான் விஜய். திடீரென "ஏய்!!ஏய்!! என பலத்த குரல் ஒன்று கேட்க,  யாரோ என்னவோ தவறி விழுந்து விட்டார்கள் என பயந்து பலரும் வெளியே பார்த்தனர். யாரோ ஒரு திருடன் ஓரமாய் நின்று கொண்டிருந்த நபரிடம் செல்போனை பிடுங்கி கொண்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளான்.. போனை பறி கொடுத்தவர், சிறிதும் எதிர்பாராததால் அவரும் அலறி கொண்டே ஓடும் வண்டியிலிருந்து இறங்கி அவனை விரட்டினார்.  விரட்டி சென்றவர் திருடனிடமிருந்து போனை புடிங்கி கொண்டு மீண்டும் ரயிலேர முயற்சிக்க, ரயில்வே கார்டு வேண்டாம் அடுத்த ரயிலில் வாருங்கள் என கைகாட்டினார். ஸ்டேஷனிலிருந்து ரயில் நின்று கிளம்பிய நேரம் என்பதால் சற்று மெதுவாக போனது. இருவருக்கும் அடிபடவில்லை.

இதை பார்த்த விஜய் தன் போனை எடுத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். பின்னர் தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி வேகமாக வண்டியை எடுக்க போகலானான்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

புதன், 29 ஆகஸ்ட், 2018

டெல்லிக்கு போன கதை !

வணக்கம்,

பணிச்சுமை காரணமாக பழைய பேப்பருக்கு சற்றே நீண்ட லீவு விட்டிருந்தேன். மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என எண்ணி, எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் பல தடங்கல்கள், வேலைகள் என தள்ளிக்கொண்டே போனது. இன்று தான் மீண்டும் நேரம் கிடைத்துள்ளது. நேரம் கிடைத்துள்ளது என்பதை விட நேரம் ஒதுக்கியுள்ளேன் என்பதே சரி!

கடந்த ஜனவரியில் வேலை காரணமாக ஆன்சைட் (டெல்லி தாங்க) வரை போக வேண்டியிருந்தது. புது தில்லி போவது புதுசாக இருந்தாலும், ஏற்கானவே இருமுறை பிளைட்டில் போயிருப்பதால், பெரிதாய் ஒன்றும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. என் பயணத்தில் பார்த்த, பார்க்கும் போது தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் இங்கு பகிர்கிறேன்.

ஏர்போர்ட் பரிதாபங்கள்- ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்தில், ஏரோபிளான் பயணத்தையும், நாம் வழக்கமாய் போகும் பயணத்தை பற்றியும் ஒப்பிட்டு யோசித்து கொண்டிருந்தேன்.

பஸ்ஸில் போகும் போது பெரிய லக்கேஜ்/ பெட்டிகளை பஸ் டாப்பில் வைத்து பயணம் செய்வது போல, ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் லக்கேஜை போட்டுவிட்டு, ஃபிளையிட்டில் பயணம் செய்கிறோம்.

போர்டிங் நேரத்தில், புனே 630 ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்.. டெல்லி 7ஓ கிளாக் ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்... என கூவி கூவி அந்தந்த அலுவலர்கள் அழைப்பது, கோயம்பேடு/தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் திருச்சி... திருச்சி.. திருச்சி.. மதுரை .. மதுரை...1030 மணி வண்டி எல்லாம் ஏறு..ஏறு.. உடனே ஏறு.. என கூவுவது போல தெரிவது எனக்கு மட்டும்தானா !?!?!?!?

"இஸ் திஸ் டில்லி 7 'ஓ' கிளாக் ஃபிளையிட் ??", என கேட்பது, "அண்ணே இது பத்தரை மணி பஸ்ஸாண்ணே??", என கேட்பது போல தான் எனக்கு தெரிகிறது.

அதே போல டே எக்ஸ்ப்ரஸில் ட்ரைனில் போதும் போது சூடாக இட்லி வடை, பிரியாணி, பிரட் ஆம்லெட் போன்றவற்றை விற்பது போல, இங்கும் பிளைட் எரியவுடன் டீ, காபி, டிபன், லஞ்ச், கூல் டிரிங்க்ஸ் எல்லாம் விற்கிறார்கள்... விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி!

அதே போல நாம் டவுன் பஸ்ஸில் பெண் கண்டக்டரை பார்த்தவுடன், 'அட லேடி கண்டக்டரா?" என ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, டிக்கெட் கேட்டு பின் நார்மலாவதை போல, ப்ளைட்டில் நம்முடன் பறந்து வரும் பேரழகிகளை பார்த்துவிட்டு (யாராயினும்) ஓரிரு நிமிடம் லயித்துவிட்டு பின் முகம் திருப்பி கொள்வது சாதாரணமாக நடப்பதே! என்னடா இது.. இந்த சிவப்பு சொக்கா பொண்ணு நம்மள பார்த்து சிரித்து "ஹாய் ! குட் மார்னிங்.. வெல்கம்..."ன்னு சொல்லுதேன்னு நானே சிலாகிச்சிட்டேன்னா பார்த்துகோங்களேன்!
என்னுடன் வந்தது இந்த அழகி இல்லை! ;-)
டெல்லி போக 3 மணி நேரம் ஆகும் சொன்னங்க.. சரி கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு , கொஞ்சம் நேரம் மேகங்களை வேடிக்கை பார்த்துவிட்டு தூங்கலாம்ன்னு நினைச்சா, அப்பப்போ டொய்ங்.. டொய்ங்..ன்னு மியூசிக் போட்டு பறக்கும் போதே ஷாப்பிங் பண்ணுங்க.. ஏதாவது ஸ்னாக்ஸ் ஐட்டம் சாப்பிடுங்க.. வேதர் ரிப்போர்ட்.. அது..இதுன்னு ஏதாவது சொல்லி எழுப்பி விட்டுடுரங்க...

நம்மவூரு மார்கழி மாச குளிருக்கே மூச்சுக்கு முன்னூறு வாட்டி மூச்சா வரும்.. டெல்லில இப்போ 8 டிகிரியாம்!! அம்மடியோவ்.. சரி விடுறா...எல்லாமே வெரச்சிக்கும்ன்னு நினைச்சிகிட்டேன் !!!

கடைசியா டெல்லி வந்ததும், ஸ்வெட்டர், ஜெர்கின், குரங்கு குல்லா சகிதமாக கீழே இறங்கினேன். ஆரம்பத்தில் குளிர்வதை போல தெரிந்தாலும்,போக போக அந்த குளிர் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. உடம்புக்கு இதமாகவே இருந்தது.

புது தில்லி வந்தாயிற்று. இங்கும் பீக் அவர் கடும் டிராபிக்காக தான் இருக்கிறது. ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மஞ்சள்-பச்சை கலர்களில் சீறி பாய்கிறது. சென்னையில் எப்படி TN registration போர்டு வண்டிகளையும் ஆங்காங்கே PY போர்டுகளையும் பார்க்க முடிகிறதோ, அது போல டெல்லியில் DL மட்டுமல்லாமல் RJ, HR, PB ஆகிய registration போர்டு வண்டிகளை எளிதில் பார்க்க முடிகிறது. ஒன்றிரண்டு UP registration வண்டிகளையும் பார்த்தேன். எங்கு காணினும் கார்கள் சாரை சாரையாய் விரைந்து கொண்டிருந்தது. வெகு சில டூ-வீலர்களை மட்டுமே பார்க்க முடிந்ததது. தில்லியில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ட்ரெயின் தான். நகரின் எல்லா மூலையிலும் மெட்ரோ பாய்கிறது. மேலும் புதுதில்லியில் பெரும்பாலான சாலைகளெல்லாம் அகலமாகவும், சுத்தமாகவும் இருப்பதை காண முடிந்தது. அங்கங்கே முக்கிய சாலைகளில் கட்டண கழிப்பிடமும் இருந்தது. சாலையெங்கிலும் மரங்களும், பல ரௌண்ட்டானாக்களும் (roundtana) , மேம்பாலங்களையும் பார்த்து, திட்டமிட்டு கட்டப்பட்டது புது தில்லி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சாலையெங்கிலும் ஆரஞ்சு கட்சியின் போஸ்டர்களும், அந்த ஊர் 'சந்தான பாரதியின்' படங்களும் பெரிதும் காணப்பட்டன.

நாங்கள் தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் போகும் வழியில் தான் இந்தியா கேட்டும் (India Gate), ஜனாதிபதி மாளிகையும் (Rastrapathi Bhavan) இருந்தது. தினமும் வேடிக்கை பார்த்து கொண்டே போவோம். கிடைத்த கேப்பில் ஒரு நாள் காலைவேளையில் போய் ராஜ் காட்டில் (Raj Ghat) உள்ள இரண்டையும் பார்த்தாயிற்று. இந்தியா கேட் - முதலாம் உலக போரில் இறந்த ஆங்கிலேய-இந்திய போர் வீரர்களின் நினைவு சின்னம். மொத்தம் 70,000 வீரர்களின் பெயர்கள் அங்கு பொறிக்கபட்டுள்ளன. மேலும் அங்கு போர் வீரரின் தொப்பி மற்றும் துப்பாக்கியுடன், அமர் ஜவான் ஜோதி (AmarJawan Jothi ) ஒன்று ஓயாமல் எரிந்து கொண்டிருக்கிறது.



ஜனாதிபதி மாளிகையை உள்ளே சென்று சுற்றி பார்க்க முன்அனுமதி பெற வேண்டுமாம். நாங்கள் வெளியிருந்தபடியே கட்டடங்களை பார்த்துவிட்டு செல்பி எடுத்து கொண்டு திரும்பிவிட்டோம். ஜனாதிபதி மாளிகை அருகே தான் பார்லிமென்ட் வளாகமும் இருக்கிறது. நேரமின்மையால் அதை விட்டுவிட்டோம்.

வேறொரு நாள் செங்கோட்டைக்கு (Red fort ) சென்றோம். செங்கோட்டை இருப்பதோ பழைய தில்லியில். பாரீஸ் கார்னர், மண்ணடி போல குறுகிய சாலைகள், சிறு பெரு வண்டிகள் என கூட்ட/கட்டட நெரிசல். செங்கோட்டை 1639ஆம் ஆண்டு ஐந்தாம் முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டியுள்ளான். அதன் பின் 200 ஆண்டுகள் வரை முகலாயர்களின் வாரிசுகள் வசிக்கும் வீடாகவே இருந்துள்ளது. செங்கோட்டை Indo-Islamic architecture -ல் கட்டப்பட்டுள்ளது. 2007-ல் UNESCO உலகின் பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது.

கோட்டைக்குள் போக நபருக்கு 35 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டும். கோட்டை வாசலை கடக்கும் போது உள்ளே பலவிதமான கடைகள், கைவினைப்பொருட்கள் என பல இருந்தது. கோட்டைக்குள் மிக பெரிய தர்பார் அறை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய மேடை, புகழ் பெற்ற ஷா ஜஹானின் மயில் சிம்மாசனம் என எல்லாமே சிறப்பாய், பிரம்மாண்டமாய் இருந்தது.



தில்லி முழுவதும் கோட்டைகளும், மசூதிகளும், நினைவு சின்னங்களும் தான் அதிகம் இருக்கிறது. பலவும் முகலாய சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நம்மவூர் பர்மா பஜார், திநகர் ரெங்கநாதன் தெரு போல, இங்கு பல இடங்கள் இருக்கிறது. சரோஜினி நகர் மார்க்கெட், அமர் காலனி மார்க்கெட், கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் சர்கிள், பாலிகா பஜார், சோர் மார்க்கெட், சாந்தினி சவுக் மார்க்கெட் என நிறைமாதமான நம் பர்சின் டெலிவரிக்காக பல மார்க்கெட்க்கள் இருக்கிறது. அமர் காலனி, சாந்தினி சவுக், சரோஜினி நகர் போன்ற மார்க்கெட்களில் பெண்களுக்கான துணிமணிகள், அவர்களுடைய அணிகலன்கள் என பல பொருட்கள் மலிவாக கிடைக்கின்றன. கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகிய இடங்களில் லெதர் பொருட்கள், ஆண்/பெண்களுக்கான உடைகள் என மலிந்து கிடைக்கிறது. ஆனால் பேரம் பேசி மலிவாக வாங்குவது அவரர் திறமை. பஜாரில் உஷாராக ஹிந்தியில் பேசாவிட்டால், நிஜாரை உருவி விட்டுவிடுவார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்க!



ஜன்பத் ரோடு (Janpath Road) மற்றும் கன்னாட் சர்கிள் (Connaught Circle) ஆகிய இடங்களில் நாம் எல்லா வித பிராண்டட் கடைகளும்/ பொருட்களையும், எல்லா விலையிலும் வாங்க முடியும். உணவகங்களை பொறுத்தவரை சற்று காஸ்டலி போலதான் எனக்கு தெரிந்தது. ரொட்டி வகைகள் பல வெரைட்டியில் கிடைக்கிறது. இரு மாதங்களாக ரொட்டியும் சப்பாத்தியும், ராஜ்மா ரைஸ்சும் சாப்பிட்டு நாக்கு செத்தது தான் எங்களுக்கு மிச்சம். ஆயினும் அவ்வப்போது ஆந்திரா பவன், கேரளா ஹவுஸ் போன்ற இடங்களில் தென்னக சாப்பாட்டை ருசிபார்த்து பசியாறி கொண்டோம். ஜன்பத் ரோட்டிலும், கன்னாட் சர்கிளிலும் நம்ம ஓட்டல் சரவண பவன் இருக்கிறது. இங்கு போல அங்கும் பீக் ஹவரில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு நாள் மதிய உணவிற்கு அங்கு சென்று ஒரு ஃபுல் கட்டு கட்டிவிட்டு வந்தோம்.

வேலைப்பளு காரணமாக வேறு எங்கும் பெரிதாய் சுற்றி பார்க்க முடியவில்லை. புது தில்லி சுற்றி பார்க்க வேண்டுமாயின் நவம்பர்-பிப்ரவரியில் போகலாம். பிப்ரவரி-ஜூன் -ல் உச்சி வெயில் மண்டையை பிளக்கும். மற்ற நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வரும். மூன்று நாட்கள் வைத்தால் தில்லி பூராவும் பொறுமையாய் சுற்றி பார்த்து விடலாம். நான்காம் நாள் ஆக்ராவுக்கு பயணப்படுங்கள். அங்கு தாஜ் மகாலையும், ஆக்ரா கோட்டையையும் பார்த்துவிட்டு திருப்தியாக ஊர் திரும்பலாம்.


நன்றி!!!
-பி.விமல் ராஜ்