சனி, 31 அக்டோபர், 2020

தமிழக ஊர்களின் பெயர் காரணம்

வணக்கம்,

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. அதை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. நான் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.

name reason for tamil cities

சென்னை-    
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள். 

கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது என்றும்,  போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra)  என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது என்றும், மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டணம் என் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

(சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை வேறொரு பதிவில் பகிர்கிறேன்.)

செங்கல்பட்டு-
செங்கழுநீர் பட்டு என்ற பெயர் தான் இப்போது செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி- 
இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது.

தூத்துக்குடி - 
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளயது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் Tuticorin என்று ஆங்கிலத்தில் பதிவானது.
  
ஆற்காடு- 
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம்- 
மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 

கோயம்புத்தூர்-
சங்க காலத்தில் கோசர் இனத்தை சேர்ந்த சிற்றரசர்கள் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். அவர்கள் பெயராலேயே கோசர்புத்தூர் என்றும் கோசம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கோயம்புத்தூர் என்றானது.

கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது.

இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது.

உதகமண்டலம் -
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பல படுகர், இடும்பர், தோடா என மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மொழியில் ஒத்தை கல் மந்தை /ஒத்தை கல் மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயர் ஆங்கிலேயரின் வாயில் நுழையாததால் Ootacamund என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசு உதகமண்டலம் என்று மாற்றியது .

ஏற்காடு- 
ஏரியும் காடும் இருக்கும் பகுதி. ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்றானது.
    
திருச்சிராப்பள்ளி -
முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்பள்ளி என்று அழைக்கபட்டுள்ளதது.  சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையை குறிக்கிறது. திருசிராய்பள்ளி  என்ற பெயர் தான் திருச்சிராப்பள்ளி என மருவியுள்ளது.

மேலும் திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டு பயனடைந்ததாக  சொல்லப்படுகின்றது.அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.

சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனாலும் இது சிராப்பள்ளி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

தஞ்சாவூர்-
எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.
 
சிதம்பரம் -
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர். அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது. மேலும் இவ்விடத்தில் தில்லை மரங்கள் சிறந்த காடடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சிபுரம்-
மிக பழமையான நகரங்களில் ஒன்று. காஞ்சி மலர்கள் அதிகம் இருப்பதால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் தலைநகரமாகி பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு, இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

மதுரை-
குமரிக்கண்டம் காலம் தொட்டு, சங்க காலம், இடைக்காலம் என எல்லா காலங்களிலும் பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்துள்ளது. வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது.  
 
பெரு மதில்களும், அதற்குள்  குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை  என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் மதுரை என்றானது. 

ஈரோடு - 
பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

திருநெல்வேலி-
இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது. மூங்கில்/ நெல் நிறைந்த பகுதி நெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது.       
 
கன்னியாகுமரி-
முன்னபொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.

புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில்  சிவனை வழிபட்டு வந்தடைந்தாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னி பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர்அழைக்கப்பட்டுள்ளதது. 

கும்பகோணம்- 
சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளதது. புராண கதையின் படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மாறியுள்ளது.

தருமபுரி-
சங்ககாலத்தில் இவ்வூர் தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தகடு என்பதற்கு இரும்பு என்று பொருள். தாது பொருட்கள் இருக்கும் இடம் என்பதால் தகடூர் என்றானது. பின்னாளில் 15/16ஆம் நூற்றாண்டில் தருமபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது போல தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர்கள் மருவியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்  

புதன், 30 செப்டம்பர், 2020

சிவப்பு விளக்கு பகுதி

வணக்கம்,

காமாத்திபுரா - மும்பையில் விபச்சாரம் நடக்கும் ஒரு பகுதி. ஆம் திரைப்படங்களிலும், செய்திகளிலும் பார்க்கும் அதே சிவப்பு விளக்கு பகுதி தான். சோனாகாச்சி - இந்த பகுதியும் அதே வகையறா தான். கொல்கத்தாவில் இருக்கிறது.

நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள்/ கேள்விப்படாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா  மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ?  இதற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிக்கிறதா? இப்போதைக்கு ஆசியாவில் மிக பெரிய விபச்சார விடுதி /தொழில் நடக்கும் இடம் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தான் இருக்கிறது.


காமாத்திபுரா வரலாறு-
1795 - பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் அப்போதைய பம்பாய் மாகாணத்தில் சில பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம். ஏழு தீவுகளை (இப்போது மும்பை) ஒருங்கிணைக்க பாலம் கட்ட பல தொழிலாளர்களை அழைத்து வந்தனர். ஆந்திரா பகுதியிலிருந்து சில தெலுங்கு பேசும் 'காமாத்திஸ்' என்னும் கூலி வேலை செய்யும் மக்களை அழைத்து வந்து லால் பஜாரில் குடிவைக்கபட்டனர். அந்த இடமே பின்னாளில் காமாத்திபுரம்/காமாத்திபுரா ஆனது. பாலம் கட்டும் வேலை முடிந்ததும், சரியான வருமானம் இல்லாததாழும், ஏழ்மை நிலையாலும் அந்த ஊரில் உள்ள சில பெண்கள் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் எண்ணிக்கை கம்மியாக தான் இருந்தது; பின்னர் மராட்டிய மண்ணில் பல ஊரிலிருந்து ஏழை பெண்கள்களும், குடும்ப பெண்களும் கடத்தி வரப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டனர். இக்காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளும், ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களுடைய இச்சைக்காக காமாத்திபுரம் வந்து போக, இது பாலியல் தொழிலுக்கான இடமாக மாறியது. ஆங்கிலேய அரசுக்கும் இதன் காப்பாளர்கள் மூலம் வரியும் வந்து கொண்டிருந்தது.

பின்னர் நேபாளம் , சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்களும், மற்ற வெளிநாட்டு பெண்களும் ஒவ்வொரு தெருக்களில் குடியமர்த்தப்பட்டு பல மன்னர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்கும் பெண்கள் விருந்தாக்கபட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவெங்கும் எல்லா வீடுகளிலும் தொழிலில் இருந்ததால், இதை முறைசெய்ய பாலியல் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து, உரிமம் வழங்கப்பட்டது. பெண்களை தேடி வருவோர்கள், எந்தெந்த வீடுகளில் உரிமம் எண்ணும், சிகப்பு விளக்கும் எரிகிறதோ, அது தான் வேசிகளின் வீடு/விடுதி. அந்த பகுதியில் பல வீடுகளில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதால், அப்பகுதி சிவப்பு விளக்கு பகுதி என பெயர் பெற்றது. இவர்களுடைய காம இச்சைக்காகவும், பேராசைக்காகவும் பல பெண்கள்  நாசமாக்கப்பட்டு, இக்கொடுமை இன்று வரை தெடர்ந்து வருகிறது. சிறு வயது பெண்கள் முதல் பருவ வயது பெண்கள் வரை பலர் இங்கு வலுக்கட்டாயமாகவும், தெரியாமல் கடத்தி கொண்டு இங்கு விடப்படுகிறார்கள். இங்கு பிறக்கும் (பெண்) குழந்தைகள் பருவமடைந்ததும் இதே தொழிலில் ஈடுபடுத்த பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும், ஆங்கிலேய அரசிடமிருந்து அங்குள்ள பாலியல்  தரகுகளிடமும், தாதாகளிடமும் இவ்விடம் கைமாறியது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாவிடில், தொழில் கனச்சிதமாக நடந்து கொண்டிருந்தது. ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பாலியல் நகரமாக இருந்த காமாத்திபுரா,  1990 களின் ஆரம்பத்தில்  சில சமூக நல ஆர்வலர்களின் முயற்சியுடன், வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள் சிலர் மீட்கப்பட்டு மறுவாழ்வு தரப்பட்டது. மேலும் அக்காலத்தில் எய்ட்ஸ் நோயால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கபட்டதால், ஆணுறை பற்றிய விழிப்புணர்வும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இந்த தொழிலிருந்து மீட்கப்பட்டனர்.    

சமீபத்திய கணக்கீட்டின்படி பல பெண்கள், பாலியல் தொழிலை விட்டு சாதாரண வாழ்க்கையில் வாழ ஆரம்பித்துவிட்டனர். இப்போது சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இன்றும் இது போன்ற ஜல்சா காரியங்களுக்கு இவ்விடம் பெயர் பெற்று தான் விளங்குகிறது.

சோனாகாச்சி வரலாறு-
சோனா-தங்கம் ; காச்சி- மரம். சோனாகாச்சி என்பதற்கு பொன்னாலான மரம் என்று பொருள். வங்காளத்தில் முன்பொரு காலத்தில் ஒரு தாய் தன்னுடைய மகன் இறக்கும் வேளையில் 'நான் இறந்தும் மரமாக இருப்பேன்' என்று கூறியதை கொண்டு ஒரு மரம் நட்டு, மசூதியும் கட்டினாள். பின்னர் அந்த இடம் தான் சோனாகாச்சி என்று அழைக்கப்பட்டது.

மும்பை காமாத்திபுரம் போல இவ்விடம் பாலியல் நகரமாக எப்படி மாறியது என்பதற்கு சரியான தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆசியாவில் மிக பெரிய பாலியல் நகரத்தில் சோனாகாச்சி முதல் இடத்தில் உள்ளது. 90-களின் ஆரம்பத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பின்னாளில் பலரின் உதவியுடன் பல பெண்கள் மீட்டெடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

ஏற்கனவே சொன்னது போல மும்பை, கொல்கத்தா மட்டுமல்லாமல், புதுடெல்லி, நாக்பூர், வாரணாசி,ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களில் பாலியல் நகரங்கள் இன்றும் இருக்கிறது. பாலியல் தொழில் (Prostitution) செய்வது இந்தியாவில் சட்டபூர்வமான தொழில் என்பது பலருக்கு தெரியாது. ஆனால், விடுதி அமைத்து தொழில் நடத்துவது, (பெண்) தரகு வேலை பார்ப்பது போன்றவை தான் சட்டத்துக்கு எதிரானவை.

இக்கொடுமைகளை எந்த அரசும் களையவோ, பாலியல் நகரங்களை தடை செய்யவோ முற்படவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
 

நன்றி!!!
பி.விமல் ராஜ்  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

செயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்

வணக்கம்,

இந்த உலகம் தோன்றிய காலம் முதல், பல கண்டுபிடிப்புகள், தத்துவ விதிகள், விஞ்ஞான வளர்ச்சிகள் என மாறி கொண்டே இருக்கிறது. புதுப்புது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நம் உலகமானது இயந்திரமயமாக்களிலும், கணினி துறையிலும், செயற்கை நுண்ணறிவிலும் (AI - 
Artificial Intelligence) நம் கற்பனைக்கடங்கா எல்லையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தொழில்நுட்பத்தை பற்றிய கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையான படிக்கவும்.

யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)இஸ்ரேலிய வரலாற்றாய்வாளர், தத்துவவாதி மற்றும் புத்தக எழுத்தாளர். அவர் எழுதிய 21 Lessons for 21st Century  என்னும் புத்தகத்தில் வருங்காலதில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல எல்லா தொழில்நுட்பங்களும் ஒரு நாள் மனிதனை மீறி செயல்பட ஆரம்பிக்கும் அதுவே நாம் வாழும் பூவுலகின் அழிவுகாலத்தின் ஆரம்பம் என சொல்லியிருப்பார்கள். அதை நாமும் கைகொட்டி ரசித்து விட்டு மறந்து விடுவோம். ஆனால் இது நூறு சதவிகிதம் உண்மையில்லை என்று வைத்து கொண்டாலும், 80% நடப்பதற்கு  வாய்ப்புண்டு என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த AI யினாலும், டெக்னாலஜியாலும் நம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பறிபோக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.



artificial-intelligence-future-jobs-lost-in-2050

அதெப்படி இருக்கிற வேலை போகும்? பின்னர் அந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு சில பதில்கள். 20 வருடங்களுக்கு முன் இருந்த உலகளவில் இருந்த பல தொழில்களும், வேலைகளும்/வேலைவாய்ப்புக்களும் இப்போது இல்லை. உதாரணமாக, 

1.) STD - PCO  கடைகள்
2.) இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்கள்.
3.) போட்டோ பிலிம்களை கழுவி, பிரிண்ட் போடும்  ஸ்டூடியோக்கள்.
4.) சுற்றுலா தளத்தில் போட்டோ எடுப்பவர்கள்.
5.) வீடியோ- ஆடியோ காஸட் / சி.டி -  டி.வி.டி கடைகள்.
6.) வாழ்த்து அட்டை துயாரிப்பவர்கள்.
7.) ரேடியோ/டேப் ரெக்கார்டர் ரிப்பர் செய்பவர்கள்.
8.) தட்டச்சு அலுவலர்கள் / தட்டச்சு மையங்கள்.

9.) டெலிபோன் ஆப்ரேட்டர்கள்.
இதுபோல இன்னும் பல தொழில்கள் இருக்கிறது. 

உலகில் நடக்கவுள்ள அல்லது கண்டுபிடிக்க உள்ள தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பது மிக மிக கடினம். ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கணித்திருக்கவே மாட்டார்கள்.  

இன்னும் சொல்ல போனால் 2040-2050 ஆண்டுகளில் மக்கள் வேலை செய்யப்போகும் / உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பதே உண்மை.

இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுனர் ஜான் மேநார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்பவர் அவரது ஆராய்ச்சி பதிவு ஒன்றில் 2030-ல் மக்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 15-20 மணிநேரம் தான் உழைப்பார்கள். அவர்களுக்கு விரக்தியும், மனசோர்வும் தான் மேலோங்கி நிற்கும். அதிலிருந்து விடுபட கேளிக்கைகளிலும், அவர்களது கலாச்சரத்திலும்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது செய்யும் பல தனித்துவ வேலைகளை, எதிர்காலத்தில் இயந்திரங்களும், ரோபோக்களுமே செய்து விடும். இதனால் எதிர்காலத்தில்  
சமூக உறுதியற்ற தன்மையும்  (Social instability), படைப்பாற்றல் (Creativity) மிகுந்த வேலைகளும் அதிக அளவில் இருக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றங்களும், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். அகால மரங்களும், தற்கொலைகளும், சட்டவிரோத செயல்களான கொள்ளை, போதை போன்ற செயல்களும் பெருமளவில் அரங்கேறும்.ஜான் மட்டுமல்ல, பல ஆராய்ச்சியாளர்கள் இதைதான் கூறுகின்றனர். 

" ஒரு புத்தகம் மக்களுக்கு உணவையோ, உடையையோ கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு தெளிவான அறிவை கொடுக்கும். அது போல, இந்த புத்தகம்  மனிதத்தின் எதிர்காலம் பற்றி விவாதிக்க தெளிவான அறிவையும், அதிகாரத்தையும் கொடுக்குமேயானால், இஃது ஓர் சிறந்த படைப்பாகும்." 
யுவால் நோவா ஹராரி

வருங்காலத்தில் நடக்க கூடியவை என யுவால் என பல துறைகளையும் பற்றி கூறியுள்ளார். அவற்றுள் சில.

தகவல் - Data 
தகவல் (information / data) வருங்காலத்தில் உலகின் மிக பெரிய அதிகாரத்தின் ஆதாரமாக விளங்கப்போகிறது. யாரிடம் தகவல்கள் கொட்டி கிடைக்கிறதோ, அவரே சர்வ வல்லமை படைத்தவராகி உலகையே ஆளக்கூடிய வல்லரசாக இருப்பார். ஏனெனில் தகவல்கள் எதிர்காலத்தின் ஆகச்சிறந்த பலமுள்ள ஆயுதமாக உருவெடுக்கும் என கூறுகின்றனர். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை ' படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்துகிறேன். 'Information is Wealth' இந்த டேட்டாக்கள் என் கையில் இருந்தால் இந்த உலகையே ஆளும் டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னனாக இருப்பேன் என்று அர்ஜுன் சொல்வார். ஆதிகாலம் முதல் இப்போது வரை அதிக நிலங்கள் (land/real estate) வைத்திருப்போரை அதிகாரம் உள்ளவர் என்று சொல்வார்கள்.அரசாங்கங்கள் அவர்களை கட்டுபடுத்த முயற்சி செய்யும். ஆனால் வருக்காலத்தில் யாரிடம் நிறைய டேட்டாக்கள் இருக்கிறதோ அவரே அதிகாரம் உள்ளவர் ஆகப் போகிறார்கள்.

மனித எண்ணங்களை திருடுதல் - Human Hacking 
கணினியும், இயந்திரத்தையும் hacking செய்வதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்படி hack செய்து திருடுபவர்கள், வருங்காலத்தில் மனிதனின் மூளையை குறிவைத்து hack செய்ய போகிறார்கள். நம்பமுடியவில்லை தானே !?! நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்! நம்முடைய சிஸ்டம், மொபைல், வங்கி கணக்குகள், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமல்லாமல், நம் மூளையும், நம் எண்ணங்களையும் hack செய்வதற்கான ஆராய்ச்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்கள்.

நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, நம் அடையாள தொழில்நுட்பத்தையும் (biometric) hack செய்து மக்களையும் ஆட்கொள்ள முடிவு செய்து விட்டனர். அப்படி செய்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன நினைக்கிறோம், எதை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இது முழுமையாக  கொண்டுவர முடியாவிட்டாலும், 50% சதவிகிதம் வெற்றிபெற்று விட்டால் கூட மனித இனத்தின் அழிவு யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கல்வி - Education 
2040-50-ல் பல வேலைகள்/வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகும். இப்போதுள்ள பிள்ளைகளும் பள்ளி/கல்லூரிகளில் சொல்லி கொடுக்கும் பாடங்கள் /பாடத்திட்டங்கள் எல்லாம் பயனற்று போக வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுநாள் வரை மனிதனின் முதல் 25-30 ஆண்டுகள் கற்றலுக்காக செலவிட்டு, மீதம் உள்ள ஆண்டுகள் கற்றதை பயன்படுத்தி உலகில் வாழ தயார்படுத்தி கொள்வதே வழக்கமாய் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் படித்து முடித்து வேலைக்கு போகும் நேரத்தில், படித்தது பலவும் காலாவதியான தகவல்/படிப்பு/ விஷயங்களாக இருக்கும் என்று சொல்கின்றனர்.இவற்றிற்கு ஒரே வழி வாழ்நாளில் கடைசி வரை நம்மை சீர்படுத்தி கொள்ள இந்த போட்டிமயமான உலகில் வெல்ல தொடர்ந்து வாழ நாம் கற்றலை நிறுத்தவே கூடாது. 50 வயதிலும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இப்போதே இந்த நிலைதான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் போட்டிமயமானதாக இருக்கும்.

மக்களுடைய உணர்வுசார் நுண்ணறிவையும் (emotional intelligence), மனதையும் சமநிலை படுத்தி (mind balance) கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அரசியல் - Politics 
உலக வல்லரசு நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி இன்றளவிலும் பழமைவாதையும், தேசியத்தையும், மத கொள்கைகளையும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறது. எந்த ஒரு உலக அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, எப்படி மக்களை முன்னேற்றுவது என்றெல்லாம் பேசுவதோ இல்லை. உலகம் வெப்ப மயமாதல், வருங்காலத்தில் இயந்திரத்தாலும், தொழில்நுட்பத்தாலும் பறிபோகும் வேலைவாய்ப்புக்கள், எதிர்கால சந்ததிகளுக்கு கல்விமுறை என நீண்ட கால முடிவெடுத்தலை இதுவரை முன்வைக்க வரவில்லை.   

புதிய பிரிவு- Useless Class 
உலக மக்களில் upper class, upper middle class, middle class, lower class என்று பிரிப்பார்கள். அதில் புதிதாக Useless class என்னும் புதிய பிரிவு வருங்காலத்தில் வரும். தொழில்நுட்பத்தால் வேலைப்பறிபோன கூட்டம் பெருமளவில் நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்களை தான் useless class என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, மானியம் வழங்க வேண்டும்; அல்லது மக்களே அவர்களது துறையில் மேலும் கற்று, தொடர்ந்து முன்னேற வாழ பழகி கொள்ள வேண்டும். அல்லது பெரும்பாலானோர் சமூக கேடான விஷயங்களில் ஈடுபட்டு நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருப்பார்கள்.

பறிபோகும் வேலைகள் - Job Lost
அசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியினால், எதிர்காலத்தில் பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இன்று உலகெங்கும் லட்சக்கணக்கானோர் வாடகை வண்டிகளை (Taxi) ஓட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் தானியங்கி டாக்ஸிகளும்,கார்களும் நம் சாலையெங்கும் ஓடி கொண்டிருக்கும். அதற்கான ஆயுத்த வேலைகளில் Tesla, Google போன்ற தொழில்நுட்ப முதலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டனர், 

மேலும் டெலிகாலர்கள், கஸ்டமர் சேவை அதிகாரிகள், வங்கி கேஷியர்கள், பேங்க் லோன் அதிகாரிகள், ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவர்கள், போஸ்டல்/கூரியர் வேலைகள், வீடு மற்றும் அலுவலகம் தூய்மை  செய்பவர்கள் என பல வேலைவாய்ப்புக்கள் உலகளவில் பறிபோக இருக்கிறது.

புதிய வேலைகள் - Future Jobs 
நோயாளிகளுக்கு தானாகவே ஆபரேஷன் செய்யும் மெஷின்கள், மருந்து கடைக்காரர் பதிலாக தானாய் மருந்து, மாத்திரையை எடுத்து கொடுக்கும் தானியங்கி  மெஷின்கள் என பலவும் மாறி வர போகிறது.

வயதானவர்களை பார்த்து கொள்ளும் caretaker -கள், உளவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மையங்கள்,  நியூட்ரிஷன் /டயட்டிங் நிபுணர்கள், பல்வேறு துறையிலுள்ள creative designerக்கள், ரோபோடிக்/பாட்  என்ஜினீயர்கள், Virtual Currency Organizer, தானியங்கி வாகனங்களை பாதுகாக்கும்/ மேற்பார்வை பார்க்கும் ஆய்வாளர்கள், AR/ VR  என்ஜினீயர்கள் என வருங்காலத்தில் இந்த வேலைகலெல்லாம் கொட்டி கிடக்க போகிறது.

கண்டிப்பாக இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலா பயணம் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படும். விண்வெளியி துறையில் பயிற்சி பெற்றவர்கள் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள். 

The Matrix படத்தில் வருவது போல ஒரு செயற்கையான உலகத்தை உருவாக்கி அதில் நம்மை உலவ விட போகிறார்கள். ஏற்கனவே அது போல Virtual Reality விளையாட்டுகள் வந்து விட்டாலும், அதை விட பலமடங்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து virtual உலகத்தில் நம்மை மூழ்கடிக்க செய்ய போகிறார்கள். Virtual Tour என்ற கனவுலகத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடுவார்கள் .

இதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. இதெல்லாம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லவில்லை. முன்பே சொன்னது  போல, எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் 100% நேர்த்தியாக கணிப்பது சாத்தியமல்ல. மேலே சொன்னதில் 60% சதவிகிதம் நடந்தாலே போதும். வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார ஏற்ற இறக்கமும் வந்து சேரும். இதில் தப்பிக்க ஒரே வழி, தொடர்ந்து கற்றல் தான். அப்படி இல்லாவிடில் useless class என்னும் தொழில்நுட்பத்தால் வேலை பறிபோன கூட்டம் பெருமளவு நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்த விஞ்ஞான மற்றும் அறிவியல் மாற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கற்றலே ஆகும். தொடர்ந்து கற்று, மற்றவர்க்கும் கற்பித்து அவரவர் தம் வாழ்வியலை சிறப்பிப்போம்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்   

வெள்ளி, 31 ஜூலை, 2020

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் - பகுதி 2

வணக்கம், 

வலைப்பதிவில் சில நாட்களுக்கு இடைவெளி விட்டு, மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். கொரோனா பொது முடக்க காலத்தில் நிறைய பதிவுகள் வேண்டும் என நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஒருவருடைய செய்கையோ, செயலையோ, குறிக்க பழமொழிகளை சொல்லுவது நம்மூரில் வழக்கம். தமிழில் பல பழமொழிகளும் அதற்கு பல அர்த்தங்களும் சொல்லப்படுவதுண்டு. ஏற்கனவே பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் என்ற தலைப்பில் எழுதிய பதிவு நல்ல வரவேற்பை பெற்று, பெரும்பாலானோர் அப்பதிவை பார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகத்திலும் எனக்கு தெரிந்த, கேட்ட பழமொழிகளையும் அதன் அர்த்தங்களும் இணையத்தில் தேடி இங்கு பகிர்கிறேன்.


பழமொழிகள்:

1.) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான். 

சொல்லப்படும் பொருள்:
 சில மணி நேர மழையில் முளைக்கும் காளான்களை சொல்வது. ஒரே நாளில் முளைத்து இறக்கும் காளானை போல, திடீரென பணக்காரனாகும் நபரை பார்த்து ஏளனமாய் சொல்வது. 

உண்மையான விளக்கம்:
இதற்கு இரண்டு வித அர்த்தகங்களை சொல்வார்கள். ஒன்று, அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். ஒருவன் தர்மத்தை அர்ப்பணித்து வாழ்பவன், எந்நேரமாயினும் மற்றவருக்கு தானம் அளிப்பான் என்பதே சரியான அர்த்தம். மற்றொன்று, சிறு பிள்ளைகளுக்கு போடப்படும் விடுகதை. மழையில் பெய்த காளான் குடை போல விரிந்து நிற்கும். அதைத்தான் விடுகதை போல அப்படி சொல்வார்கள்.

2.) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது

சொல்லப்படும் பொருள்:
கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.

உண்மையான விளக்கம்:
கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

3.) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

சொல்லப்படும் பொருள்
யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை தான் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் தானம் தருமம் செய்ய கூடாது.

உண்மையான விளக்கம்:
கிட்டத்தட்ட சரியான அர்த்தம் தான். ஆனால் இது மன்னர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழி. 'கோத்திரம் ' என்பது கோவின் திறம். அதாவது அரசனின் திறம் அறிந்து பெண் கொடுக்க வேண்டும். 'பாத்திரம்' என்பது புலவர்களின் பாட்டு திறமை அறிந்து பரிசளிக்க வேண்டும் என்பதே சரியான பொருள்.

4.) தை பிறந்தால் வழி பிறக்கும்.

சொல்லப்படும் பொருள்:
தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .

உண்மையான விளக்கம்:
தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.
இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

5.) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.

சொல்லப்படும் பொருள்:
தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.
கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது.

6.) பெண் புத்தி பின் புத்தி.

சொல்லப்படும் பொருள்:
பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.

உண்மையான விளக்கம்:
உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

7.) கோல் ஆட குரங்கு ஆடும்.

சொல்லப்படும் பொருள்:
குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.

உண்மையான விளக்கம்
என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

8.) யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.

சொல்லப்படும் பொருள்:
நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
'ஆ நெய்' - பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும். 

9.) ஆமை புகுந்த வீடு விளங்காது

சொல்லப்படும் பொருள்:
வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.

உண்மையான விளக்கம்:
கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.

10.) குறைக்கிற நாய் கடிக்காது 

சொல்லப்படும் பொருள்:
தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.

உண்மையான விளக்கம்:
குழைகிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.

11.) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு. 

சொல்லப்படும் பொருள்:
நாம்  தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க/ செய்ய  வேண்டும். 

உண்மையான விளக்கம்:
அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.
அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழு கிடைக்கும் என்பது இதன் அர்த்தம்.

12.) கழுதை கெட்டால் குட்டி சுவர்/ கழுதைக்கு பரதேசம் குட்டிச்சுவர். 

சொல்லப்படும் பொருள்:
கழுதை எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குட்டி சுவத்திற்கு அருகே போய் நின்று கொண்டிருக்கும். அதுபோல ஒரு சிலர் அடிக்கடி ஒரே இடத்துக்கு போகும் போது இந்த பழமொழியை சொல்வார்கள். 

உண்மையான விளக்கம்:
ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல், சாதாரண விஷயம் கூட பரதேசம் போவது போல நினைத்து திருப்திப்பட்டு கொல்வபவர்களுக்காக சொன்ன பழமொழி இது.

இன்னும் நிறைய இருக்கிறது. அதை பின்வரும் பதிவுகளில் பகிர்கிறேன். 

முதல் பகுதிக்க்கான சுட்டி - பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்