Superstar rajnikanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Superstar rajnikanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் - விமர்சனம்

வணக்கம்,

படத்தின் பெயர் வெளியிட்ட நாள் முதல் எல்லோரையும் போலவே நானும் ஜெயிலர் படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். First look ப்ரோமோவில் தலைவரின் மாஸ் லுக்கை வெளியிட்டனர். நீல சட்டையும், காக்கி பேண்ட்டும், மூக்கு கண்ணாடியும் உண்மையிலேயே தலைவருக்கு நன்றாகதான் இருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்து வெளியே வந்து கத்தி, துப்பாக்கி எடுப்பதையெல்லாம் பார்க்கும் போது, இன்னொரு தர்பார் போல ஆகிவிட கூடாதுடா சாமி என வேண்டிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இம்முறை நெல்சன் பெரிய தரமான சம்பவம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஏற்கனேவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடியோ லாஞ்சில் தலைவர் சொன்ன 'காக்கா பருந்து' கதை வேறு மீடியாக்களுக்கு தூபம் போட்டது போல ஆகிவிட்டது. எங்கும் இந்த அலப்பறை தான்.

சூப்பர் ஸ்டாருக்கு முந்தைய இரு படமும் சரியாக போகவில்லை. இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் செமயாய் அடி வாங்கிட்டார். அதனால் இருவருக்குமே ஜெயிலர் ஒரு முக்கியமான படமாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் அவரது மாஸை, கெத்தை விட்டுக் கொடுக்காமலிருக்க, அவர் கொடி மீண்டும் பறக்க இந்த படம் ஜெயித்தே ஆக வேண்டும். அதேபோல வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ளவும், தன்னை மீண்டும் நிரூபிக்கவும் நெல்சனுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். எப்படியாவது ஓடி விடவேண்டும் என்பதற்காகவா இல்லை கதைக்காகவா என தெரியவில்லை. படம் முழுக்க மெகா நட்சத்திரங்கள் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதற்கு பதிலாய் கொஞ்சம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Jailer-movie-review

படத்தின் கதை இதுதான். போலீஸ் அதிகாரி அர்ஜுன் (வசந்த் ரவி) சிலை கடத்தல் கும்பலை தேடி போகையில் கொலை ஆவதாய் சொல்கிறார்கள். மகனை கொன்றவர்களை பழி வாங்கும் ரிடயர்ட் ஜெயிலர் அப்பாவான முத்துவேல் பாண்டியனின் கொலை மாஸான பழி வாங்கலே படத்தின் கதை. கடைசியில் மகன் சாகவில்லை; அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து மகனையே போட்டு தள்ளும் பாசமான 'தங்கப்ப தக்கம்' பார்முலா கிளைமேக்ஸ்.

சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்வது? தல முதல் அடிவரை தலைவரு அலப்பர தான்! அதே ஸ்டைல், மிடுக்கு, வேகம், பவர் டெலிவரி என நம்மை படம் முழுக்க கவர்கிறார்.🤩 வில்லன்களை கொலை செய்யும் போது, அந்த லேசான சிரிப்பு உண்மையிலேயே சைக்கோ போல தான் இருக்கிறது. ஆனால் தலைவரிடம் இது போன்ற வழக்கமான மாஸ் கமர்ஷியல் படமாய் இல்லாமல் வேற லெவலில் எதிர்பார்க்கிறோம் என யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...🙏

ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்களின் ஸ்டைல் மேனரிசம் காட்டி ரசிகர்களின் goosebumps momentகளை ஏற்றியுள்ளார். படத்தில் ஒரு சண்டை கூட இல்லை. எல்லோரையும் சதக்..சதக்... இல்லன்னா.. பட்.. பட்..பட்.. என ஸ்நைபர் ஷாட்டில் போட்டு தள்ளி விடுகின்றனர். ஒரு முன்னாள் போலீஸ் ஜெயிலர் ஆல் இந்தியா லெவல்ல தாதாகள் பிராண்டாக இருப்பது தான் எப்படி என தெரியவில்லை.

படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் மனைவியாக வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகனாக வசந்த் ரவி முகத்தில் ரியாக்ஷன் காட்டாமல் சும்மா வந்து போயுள்ளார். பேரனாக மாஸ்டர் ரித்து இருக்கிறார். யோகி பாபு காமெடி ஓரிரெண்டு இடத்தில தான் இருக்கிறது. அதுவும் சுமாராக தான் இருக்கிறது. மலையாள நடிகர் விநாயகனின் வில்லன் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ரத்த நிற கண்ணில் எதிரிகளை அடித்தே கொல்கிறார். ரஜினிக்காக சரியான வில்லன் தேர்வு!👍மற்ற எல்லா பெரிய நடிகர்களும் திரையில் வந்து போயுள்ளனர். பிளாக் காமெடி 'டாக்டர்' அளவு ஒர்கவுட் ஆகவில்லை. ஏன் வைத்தார்கள் என தெரியவில்லை. மலையாள தேசத்திலிருந்து மோகன்லால், கன்னட தேசத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என எல்லா வுட்டிலிலும் ஆட்கள் இறக்கியுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 10 நிமிஷத்துக்கு மேல் திரையில் வரவில்லை. இவர்கள் எல்லாரையும் வில்லனாக காட்டியிருந்தால் கூட இன்னும் அடிப்பொலியாக இருந்திருக்கும்.  

பாடல்கள் எல்லாமே எனோ எனக்கு சுமார் ரகம் போல தான் இருந்தது. அனிருத்தின் BGM மாஸு பீசு... தமன்னாக்கு ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து ஆடி செல்கிறார். 'காவலா' பாட்டு ரீல்ஸில் பட்டி தொட்டியெங்கும் பரபரக்க, ஏனோ பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை. வேணும்ன்னா தமன்னாக்காக ஒருமுறை பார்க்கலாம். 'ரத்தமாரே' பாட்டு எதுக்குனே தெரியவில்லை. 'டைகர் கா ஹுக்கும்' பாடலில் ஒரு சில வரிகள் மாஸாய் இருந்தது; பாட்டாய் கேட்டால் ஒரே இரைச்சல் தான். ஆனால் தலைவரையே தம்மை பற்றி சுய தம்பட்டம் அடிப்பது போல, வரிகள் வைப்பது என்பது எல்லா படத்திலும் (பேட்ட - மாஸு மரணம், தர்பார் - சும்மா கிழி...), எல்லா பாட்டிலும் ரசிக்க முடியவில்லை. 

நேற்று முதல் படம் பார்த்த எல்லாரும் இன்ஸ்டாவிலும் , வாட்ஸாப் ஸ்டேடசிலும் படம் தாறுமாறு, second half வேற லெவல்... அப்படி இப்படின்னு போட்டுருக்காங்க.. ஆனா எனக்கு என்னமோ அப்படி தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. தர்பார், அண்ணாத்தே-க்கு இது எவ்வளவோ தேவலை..

மொத்தத்தில் படம் ரஜினி ரகிகர்களுக்கானது. மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம் ! Tiger ka Hukum.. அவ்வளவு பெரிசா கம்பீரமான கட்டளை இல்லை. அர்த்தமாயிந்தா ராஜா !😉


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பேட்ட பராக் !

வணக்கம்,

ஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.

petta-movie-review

பல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும்  அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.

பாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. "மரண மாஸ் " மற்றும் "உல்லால.. உல்லால .." பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. "பேட்ட பராக்.." தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.

படம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும்,  விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் !

சினிமா ரசிகனின் பார்வை-

இன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள். 

இரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.

ஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .

ஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல,  வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !


நன்றி!!!
பி.விமல் ராஜ்.

சனி, 1 டிசம்பர், 2018

2.O - விமர்சனம்

வணக்கம்,

எந்திரன் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன போதிலும் இன்னும் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. 2.0 படம் மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்து ஒரு வருடமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் செய்து இப்போது தான் ரிலீசாகியுள்ளது.


போன வருடத்தில் திருட்டுத்தனமாக வந்த டீஸர் வீடியோவிலிருந்தே கதை ஓரளவுக்கு புரிந்தது. சமீபத்தில் வந்த டீஸர் மற்றும் டிரெய்லரும், படத்தின் கதையை கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்டம் மூலம் தெளிவுபடுத்தின. சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான கபாலியும், காலாவும் எதிர்பார்த்த அளவு (ஓட) இல்லை. 2.0 வாவது மற்ற நடுநிலைவாதிகளிடமிருந்து, என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை காப்பாற்றட்டும் என நினைத்து கொண்டிருந்தேன்.



2.0 movie review

டீசர் பார்த்ததிலிருந்து, படத்தில் சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமாருக்கு தான் வெயிட்டான வேடம் போல தெரிந்தது. அவருடைய வித்தியாசமான கெட்டப், செல்போன்கள் பறத்தல், செல்போனிலேயே உருவான பறவை பெரிய சைஸ் பறவை, சிட்டி 2.0 reloaded கெட்டப், போஸ்டர்கள், ரஜினியின் பல அவதாரங்கள், எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், 650 கோடி பட்ஜெட்... என காட்டியது எல்லாமே அசந்து போய் வியக்கும் வண்ணம் பிரமாண்டமான ஹைப்புகள் தான்.


படத்தில் கதை இதுதான். செல்போன்களால், செல்போன் டவர்களால் பல பறவை இனங்கள் அழிகின்றன. அதனால் பறவைகள் மீது அன்பு கொண்ட ஒரு முதியவர் (பட்சி ராஜன்) போராடுகிறார். டவர்களில் உள்ள high frequency-யையம், செல்போன் உபயோகிப்பதையும் குறைக்க சொல்கிறார். அரசு மூலம், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம், மக்கள் மூலமாகவும் முயற்சி செய்கிறார். பலனில்லை. இறந்துவிடுகிறார். இறந்து எப்படி செல்போன்கள் மூலமாகவே பழி வாங்குகிறார் /எதிர்க்கிறார், அதை நம் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவும் எப்படி அடக்குகின்றனர் என்பதே கதை. 

எந்திரன் படத்தில் Andro-humanoid Robo, Neural Schema, Zigbee protocol, Augmented reality, Magnetic mode, Human terminator, Red chip, Transformer type Giant Robot என காட்டியது தமிழ் இந்திய படங்களுக்கே புதுசு. ஆனால் 2.0 வில் எல்லாமே முதல் பார்ட்டில் பார்த்தது தான் பெரும்பாலும் இருக்கிறது. ஐந்தாம் விசை (Fifth Force), ஆரா (aura), Positive, Negative energy என புதிதாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். பாண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது மட்டும் வைத்து கொண்டு, படம் முழுக்க கிராபிக்ஸ் செய்து விளையாடிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலம் விசுவால்ஸ் மற்றும் கிராபிக்ஸ். செல்போன்கள் பறப்பது, எல்லாம் சேர்ந்து ராஜாளி பறவை போல மாறுவது, அக்ஷய் குமாரின் மேக்கப், தலைவரின் கெட்டப் எல்லாமே பக்கா தூள். ஆனால் அது மட்டுமே பலமாக இருப்பதுதான்  வருத்தம். சூப்பர் ஸ்டாருக்கு பில்டப், மாஸ் டயலாக், மாஸ் சீன் என ஒன்றுமே இல்லை. எந்திரனில் வருவது போல சிட்டி ரோபோவுக்கு சில நக்கல் வசனம் வைக்க நினைத்து சொதப்பி 
இருக்கிறார்கள். சஸ்பென்ஸ் எலிமெண்ட்டாக குட்டி ரோபோ 3.0 (microbots). அட ராமா! என நானே தலையை சொரிந்து கொண்டேன். 


2.0-tamil movie

எமி ஜாக்சன் அசிஸ்டென்ட் ரோபோவாக வந்து போயிருக்கிறார். அவ்வுளவுதான். மற்றபடி மயில்சாமி, ப்ரொபஸர் போராவின் மகனாக சுந்தன்சு பாண்டே, தொலைத்தொடர்பு அமைச்சர், ஐசரி கணேஷ் என எல்லோரும் வந்து போயிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அளவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் வில்லனாக இருக்க வேண்டும். பக்ஷி ராஜனாக, அக்ஷய் குமாருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. சில நேரமே வந்து நன்றாக நடித்துவிட்டு போயிருக்கிறார். ஆனால் பெரிதாக எதுவும் கிளிக் ஆகவில்லை.

கிராஃபிக்ஸ் மூலம் எல்லா சீனுமே தாறுமாறு பண்ணியிருகிறார்கள். அதை பாராட்டியே தீர வேண்டும். பல இடங்களில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் விஷுவல்சோடு, திரைகதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கதை எங்கடா இருக்குன்னு கேக்குறீங்களா?? சினிமா ரஜினி ரசிகனா படம் பாருங்க, புரியும்..

எந்திரனில் பாடல்கள் தீம் மியூசிக்காகவும், மெலடியாக கேட்கவும் நன்றாக இருக்கும். 2.O-வில் "ராஜாளி..." பாட்டு சண்டை நடக்கும் போது நடுவில் வந்து போகிறது. படம் முடியும் போது கடைசியில் 'எந்திர லோகத்து சுந்தரியே..' பாடல் வருகிறது. ஏன் வருகிறது என தெரியவில்லை. கிராபிக்ஸ்க்கு மட்டுமே அந்த பாடல். ஒரு வரி கூட புரியவில்லை; கேட்கவும் முடியவில்லை. 3டி ஓரளவுக்கு ஓகே என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங். எந்திரனில் அம்மா அப்பா செண்டிமெண்ட், காமெடி அசிஸ்டென்ட், பிரசவம் பார்த்தல், ட்ராபிக் போலீஸ் லஞ்சம், சேரி திருவிழாவில் சண்டை, எலக்ட்ரிக் ட்ரெயின் சண்டை, வசீகரன்- சனா திருமணம், கத்திப்பாரா போன்ற பிரிட்ஜில் சண்டை என கொஞ்சமாவது இந்தியன் நேட்டிவிட்டி இருக்கும். ஆனால் 2.0 வில் தேடியும் கிடைக்கவில்லை. வசீகரனின் லேப், லண்டன் ரோபோ நாயகி, செல்போன் கடைகள், மினிஸ்டர் கூட்டம் நடக்கும் கட்டிடம், புட்பால் மைதானம், பக்ஷி ராஜன் வீடு என எல்லாமே செட் மயம்.

கடைசியில் உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான். நம் டெக்னாலஜி வளர்ச்சி, அவைகளை அழிக்க கூடாது என்ற சமூக கருத்தை சொருகியிருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் கண்கட்டி விதை மூலம் மக்களை மயக்கி விடலாம் என நம்பியிருக்க போகிறாரோ தெரியவில்லை. வெறும் கிராபிக்ஸ், சூப்பர் ஸ்டார்க்காக வேண்டுமாயின் ஒரு முறை பார்க்கலாம்! dot.



நன்றி!!!
பி. விமல் ராஜ்

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2017-ல் நடந்தவை !

வணக்கம்,

இந்த வருடம் அப்படி இப்படின்னு எப்படியோ பரபரப்பா போயிடிச்சு. எது நடக்கணுமோ அது நடக்கவே இல்லை. எது நடக்கவே கூடாது நினைச்சோமோ அது தான் நடக்குது. எப்பவுமே இப்படி தான் நடக்குது .. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான். கடந்த வருடத்தில் நம்ம நாட்டில என்னன்னே முக்கிய சம்பவங்கள் நடந்ததுன்னு ஒரு வாட்டி திரும்ப போய் பார்ப்போமா? சில முக்கிய நிகழ்வுகளையம், சமூக வலைத்தளங்களில் பெரிதும் அலசப்பட்ட விஷயங்களையும், அங்கும் இங்குமாய் தேடி பதிவு போட்டிருக்கிறேன். அப்படியே கொஞ்சம் பின் நோக்கி போங்க...

  1. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கியது. 
  2. சின்னம்மா சசிகலாவின் அரசியல் ஆசை. முதல்வராக முழு முயற்சி.
  3. அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு வீரர்கள் கைது. 
  4. சென்னை மெரினாவில் மாணவர்கள் தன்னிச்சையாக கூடி போராட்டம்.
  5.  தமிழகம்மெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் புரட்சியாய் மாறியது. மாபெரும் அறப்போராட்டமாக உருவெடுத்த மெரினா போராட்டம்; 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
  6. போராட்டத்தில் கலந்து கொண்ட பேர் தெரியாத பெண்ணின்  வீர முழக்க பாட்டு. பலர் கோஷ்டியாக பாட்டு பாடி/ ஆடி அமைதியான வழியில்  போராட்டம். 
  7. தமிழக முதல்வர்  ஓ.பன்னிர் செல்வத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் போராட்ட களத்தில் மக்கள் திட்டி தீர்ப்பு. OPS மிக்ஸர் சாப்பிடுகிறார் என கூறி கிண்டல்.
  8. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என செய்தி. போராட்டக் களத்தில்  மாணவர்கள் களைந்து செல்ல வேண்டி போலீஸ் எச்சரிக்கை.  ஆட்டோவுக்கு தீவைப்பு, தடியடி என கலவரத்தை  உண்டாக்கிய காவல்துறை.
  9. ஜல்லிக்கட்டு தடை நீக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக மற்றும் மத்திய அரசு சட்டசபையில் மாற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வந்தது.
  10. 45ஆவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு.
  11. H1B விசா முறைகளில் பல கட்டுபாடுகள் விதிவப்பு.
  12. இரான். இராக், லிபியா,சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு விசா மறுப்பு.
  13.  வெளிநாட்டில் உள்ள பல இந்தியர்கள் வேலை இழக்க வாய்ப்பு என செய்தி பரவியது.
  14. ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக பல ஊர்களில் பிரம்மாண்டமாய் நடந்தது.
  15. சென்னை எண்ணுர்  துறைமுகத்தில், இரு வெளிநாட்டு கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியது. கடல் நீரும், கடல் வாழ் உயிரினமும் சேதம்.
  16. கொட்டிய எண்ணெயை வாளி வைத்து எடுக்க வைத்தது மத்திய/மாநில அரசு. 
  17. OPS முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா. சின்னம்மாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு. கவர்னர் ராம் மோகன் ராவ் மற்ற வேலை காரணமாக மறுப்பு.
  18. OPS ஜெயலலிதா சமாதியில் தீடிரென 40 நிமிடம் தியானம். தியானத்திற்கு பின் ஜெ சாவில் மர்மம், மதுசூதன் பொது செயலாளராக ஏற்க சொல்லி ஜெ சொன்னார், சசிகலா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாய படுத்தினார் என பத்திரிக்கை கூட்டத்தில் கூறல். OPS மக்களிடையே திடீர் ஹீரோ ஆனார்.
  19. சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சொல்லி சசிகலா OPS -ஐ பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம். சின்னம்மா இரவு ஒரு மணிக்கு பத்திரிக்கைக்கு பேட்டி.
  20. இந்தியா 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை.
  21. அடுத்த ஓரிரு நாட்களில் பல எம்.எல்.ஏக்கள் OPS பக்கம் ஆதரவு.
  22. சசிகலா 129 எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூர் 'கோல்டன் பே' ரிஸார்டுக்கு அழைத்து சென்று அடைப்பு. 
  23. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா, சசிகலா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு. சசிகலாவிற்கு நான்கு ஆண்டு சிறை. பெங்களூர் பரப்பானா சிறையில் அடைப்பு.
  24. சிறை செல்வதற்கு முன் ஜெயா சமாதியில் வணங்கி, ஓங்கி அடித்து சபதம். 
  25. சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, அதிமுக பிரதிநிதிகள் ஒப்பு க்கொள்ள எடப்பாடி பழனிசாமி புதிய முதலமைச்சாராக தேர்வு. 
  26. செயல் தலைவர் ஸ்டாலின் சட்டை சட்டசபையில் கிழிந்தது.
  27. ஜெயா இறப்புக்கு பின் தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா அரசியல் நகர்வுக்கு ஆளும் பா.ஜ.கவும்,மோடியும் தான் காரணம் என பலரும் திட்டவட்டமாக எண்ணினார்கள்.
  28. அதிமுக - OPS -ன் அதிமுக (அம்மா) எனவும், EPS -ன் அதிமுக (சசிகலா அணி) எனவும் பிரிந்தது.
  29. ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெயாவின் அண்ணன் மகள் தீபா மாதவன் "எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை " என்ற கட்சியை தொடங்கினார்.
  30. கட்சி ஆரம்பித்த சில நாட்களில் தீபா கணவர் மாதவன் தனி கட்சி கட்சி ஆரம்பித்தார். அதிமுக அவரையும் அவர் மனைவியையும் பிரிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.
  31. கீழடியில் பல பண்டைய தமிழர்கள் உபயோகித்த புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு. தொல்பொருள் ஆராய்ச்சியை நிறுத்த மத்திய அரசு முடிவு. பலர் அதிருப்தி.
  32. ஜெயலலிதாவின் தொகுதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு. இரு அணிகளும் இரட்டை இலைக்கு அடித்து கொண்டன.
  33. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி  தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்தது.
  34. விஜய் மல்லையா லண்டனில் கைதாகி இரண்டு மணிநேரத்தில் விடுதலை.
  35. ஹச்.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியையும் பா.ஜ.காவை யம் எதிர்ப்பவர்கள் Anti Indian என கூறி காழ்ப்பு. 
  36. 'பாகுபலி 2' படம் ரிலீசாகி 1000 கோடியை (உலக அளவில்) எட்டியது. அதே போல ஹிந்தியில் 'டங்கல்' படம் (உலக அளவில் ) 2000 கோடியை எட்டி சாதனை படைத்தது. 
  37. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ஓத்திவைப்பு. 
  38. இரட்டை இலை சசிகலாவுக்கு கிடைக்க, தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறி புது தில்லி போலீஸ் தினகரனை கைது செய்தனர். இரு மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு.
  39. ஆளும் பா.ஜ .க உத்தரகாண்ட், உத்தர பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தல்களில் வெற்றி. பஞ்சாபில் காங்கரஸ் வெற்றி.
  40. சுச்சி லீக்ஸ் வீடியோ வெளியானது.
  41. பல அரசியல்வாதிகள் வீட்டிலும், நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை.
  42. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சொல்லியது வீண்; நாட்டிலுள்ள கருப்பு பணம் வெளிவரவே இல்லை என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து.
  43. விஜய் டி.வியின்  'நீயா நானா'-வில் ஒரு பெண் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்திறங்க வேண்டும் என ஆசை கேட்பு.
  44. வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூட அமைச்சர் செல்லூர் ராஜு முயற்சி. 
  45. ஜி.எஸ்.டி (GST) சட்டம் அமலுக்கு வந்தது. விலைவாசி கடும் ஏற்றம். நுகர்வோர் பலர் அதிருப்தி.
  46. கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் தில்லியில் போராட்டம். 
  47. 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
  48. ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசு தலைவராக தேர்வு. வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக தேர்வு.
  49. தமிழ் நாட்டின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்.
  50. OPS -EPS மனம்/பணம் ஓத்து போக, இரண்டு அணிகளுக்கு ஒன்றாகின. OPS துணை முதல்வரானார். 
  51. .ப்ளூ வேல்' (BLUE WHALE) என்ற இணைய விளையாட்டு காரணமாக உலகில் பல டீன் ஏஜ் மற்றும் சிறுவர்கள் பலி. இந்தியாவிலும் ஊடுருவியது இந்த விளையாட்டு.
  52. மத்திய அரசு ப்ளூ வேல் கேம்மிற்கு தடை விதித்தது. 
  53. ஆதார் எண்ணை பாண் கார்ட், EPF, பாங்க் கணக்கு என எல்லாவற்றிலும் இணைக்க சொல்லி மத்திய அரசு உத்தரவு.
  54. லண்டனில் நடந்த ஐ.சி.சி.போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 180 ரன்னில் வெற்றி.
  55. ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் 'காலா'; போஸ்டர் வெளியீடு.  
  56. கமலஹாசன் சில காலமாக டிவிட்டரில் அரசியல் பதிவுகளை போட்டு புரட்சி. ஏற்கனவே அரசியலில் தாம் இருப்பதாக சொல்லி, புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக நேரடி பதில்.   
  57. "மையம் விசில்" என்ற புது செயலி ஒன்றை சமூக விழிப்புணர்வுக்காக  ஆரம்பித்தார் கமலஹாசன். 
  58. ஜப்பான் கடல் பகுதியில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் பேப்பரும் சவாலாக வட கொரியா மாறியது.
  59.  ரஜினிகாந்த ரசிகர்களை சந்திப்பு. கட்சி பற்றி விரைவில் சொல்ல போவதாக கூறினார். சிஸ்டம் சரியில்லை; போருக்கு தாயாராகுங்கள் என ரசிகர்களிடம் கூறினார். பலர் இது படம் ஓட, அவர் செய்யும் வழக்கமான அரசியல் பூச்சாண்டி என்றும், அவர் வரவே மாட்டார் என்றும் கூறினார்.
  60. விஜய் டி.வியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 பிரபலங்களுடன் ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டு ஜூலி, ஓவியா, ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோருக்கு பலர் ஓட்டு போட்டனர். 4 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஜூலியையும் பலர் திட்டி தீர்த்தனர். ஓவியாவுக்கு தானாய் சேர்ந்த ரசிகர் கூட்டம். பெரும்படையான ஓவியா ஆர்மி மாறியது. கடைசியில் ஆரவ் பிக் பாஸாக தேர்வு. 
  61. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில்  ஹைட்ரொ கார்பன், மீத்தேன் எடுக்க   மத்திய அரசு முடிவு. பல இடங்களில் மக்கள் போராட்டம்.
  62. சினிமா தியேட்டர் டிக்கெட் விலை ஏற்றம். மக்கள் பலரும் அதிருப்தி. தமிழ் ராக்கர்ஸ் காட்டில் அடைமழை. 
  63. மாட்டுக்கறிக்கு மத்திய அரசு தடை. பசுக்களை காக்க வேண்டி சட்டம் கொண்டு வர முடிவு. பலர் எதிர்ப்பு. 
  64. விவேகம் படம் ரிலீசானது. யூ டியுப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தையும் அஜித்தையும் கழுவி கழுவி ஊற்ற, பலர் அதற்கு எதிர்ப்பும் இணைய சண்டைகளும் நடந்தது.
  65. வண்டி ஓட்டும் போது கண்டிப்பாக ஒரிஜினல்டி ரைவிங் லைசன்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம். 
  66. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புத்த பிட்சுக்களால் கொன்று குவிப்பு.
  67. தமிழ் நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு. பல இடங்களில் மாணவர்கள் போராட்டம்.
  68. நீட் தேர்வை தடை செய்ய கோரி மேல்முறையீடு செய்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை. 
  69. 'ஜிம்மிக்கி கம்மல்' மலையாள பாட்டு பிரபலமானது. 
  70. டெங்கு காய்ச்சலால் தமிழ் நாட்டில் பலர் பலி.
  71. கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 325 குழந்தைகள் இறப்பு.
  72. மெர்சல் படம் ரிலீசானது. படத்தில் GST பற்றிய தவறான கருது இருப்பதாக சொல்லி பா.ஜ .க எதிர்ப்பு. விஜய்யை மத ரீதியாய் விமர்சித்த பா.ஜ.காவின்  ஹச்.ராஜா. மக்கள் பலரும் கோபம்.
  73. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இயக்குனர் ஷங்கரின் '2.0 ' பட ஷூட்டிங் முடிவடைந்து, ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரம்மாண்டமாய் நடந்தது. 
  74. 'லட்சுமி' குறும்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கூட்டியது.
  75. நிர்மலா சீதாராமன் புதிய ராணுவ அமைச்சராக பதவியேற்பு.
  76. ஆளும் பா.ஜ .க குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தலில் வெற்றி.
  77. பிட்காயின் (BITCOIN) என்ற டிஜிட்டல் கரன்சி பற்றிய செய்திகள் பெரிதும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தன. பிட்காயினின் மதிப்பு திடீரென ஏறி இறங்கியது. 
  78. பல மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.  ஒரு முறை இந்திய கடற்படையினரே மீனவர்களை சுட்டு கொன்றுள்ளனர். 
  79. புது தில்லியில் காற்றின் மாசு அதிகமாகி ஊரே புகைமண்டலமாய் மாறியது.
  80. சென்னையில் ஒரிரு நாள் பெய்த மழைக்கே சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மிதந்தன.
  81. பஞ்சாபை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாய் தேர்வு.
  82. மீண்டும் ஆர்.கே.நகரில் இடைதேர்தல். தினகரன் சுயேட்சையாக நிற்க முடிவு; குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது. நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிட முடிவு. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தீபா மாதவனும் போட்டியிட விண்ணப்பித்தும், மனு நிராகரிக்கப்பட்டது
  83. ஓகி புயல் கன்னியாகுமரியை தாக்கியது. தமிழக அரசு சரியான எச்சரிக்கை தராததால் பல மீனவர்கள் கடலுக்கு சென்று இறந்தனர். 300க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. சில மீனவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து கரை திரும்பினர்கள். சிலர் கடலில் இறந்து மிதந்தனர்.
  84. இம்முறையும் ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம்   தரப்பட்டது.
  85. இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், தினகரன் அணி ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அது போலி/அனிமேஷன் மார்பிங் என பல சந்தேகங்கள் மக்களுக்கு வந்தது.
  86. ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் டி .டி .வி . தினகரன் மாபெரும் வெற்றி.
  87. பா.ஜ .க பெரும் தோல்வி. நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி.
  88. மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பு. 31 டிசம்பரில் புதிய கட்சி பற்றி சொல்ல உள்ளதாக கூறினார்.
  89. உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான முத்தலாக் சட்டத்தை தடை செய்தது.
  90. சூப்பர் ஸ்டார் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவதாக பேட்டி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க முடிவு. ரசிகர்கள் கொண்டாட்டம்.

இதுக்கு அப்புறம் அடுத்த வருடம் இன்னும் என்னென்னெ நடக்குமோ என தெரியவில்லை. வரும் 2018 ஆம் வருடமாவது எல்லோருக்கும்  நல்ல முன்னேற்றத்தையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 25 ஜூலை, 2016

கபாலி - விமர்சனம்

வணக்கம்,

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.

kabali-movie-first-lookposter

பின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ்,  24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று  உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்!' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம்  பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி

படத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி! விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.

kabali-review

மலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.

உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.

படத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ! கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா?…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.

நாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.

மேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல்,  தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி  இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி!

படத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும்,  #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்!

சூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

கபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 12 டிசம்பர், 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வணக்கம்,

டிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

இது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)

ஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.


இங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக  உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.

கூகிள் இமேஜ் தளத்தில் சென்று "Thalaivar" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

ஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை   பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...

"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்???
 தமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்???
 தமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்??? "

இது அந்த பில்லியன் டாலர் கேள்வி!

தமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.

மேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே!

* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள்  கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.

* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும்??? அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என  எதிர்ப்பார்கிறார்கள் ? தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... ??? படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா??? புரியவில்லை.

* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன? அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?? அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே?


ஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு  ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா? இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா?? இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.

* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார்? என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ??? ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள்? இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள்??? பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.

* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

* தேசிய  நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே? ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ? முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே? ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.

* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.

* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்!

* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். "தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல..." என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது ??????

மொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்???

யார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்