வியாழன், 28 செப்டம்பர், 2017

ஸ்பைடர் - விமர்சனம்

வணக்கம்,

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக நடித்து, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் SPYDER. டீசரில் சும்மா ஹைப்புக்காக ஒரு எலக்ட்ரானிக் சிலந்தியை காட்டியுள்ளார்கள்; டிரைலரில் சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படம் போல காட்டினார்கள். மேலும் இப்படம்  ஒரு ஸ்பை திரில்லர் (SPY THRILLER) என சொல்லப்பட்டதால், இப்படத்தின் எதிப்பார்ப்பு கூடியது. அது மட்டுமல்லாமல், டெக்னாலஜி, ஆக்ஷன், ஸ்பை திரில்லர், மாஸ் ஹீரோ என இவற்றோடு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கம் என்பதால் படம் பார்க்க ஆவலுடன் கிளம்பினேன்.

spyder-movie-review

உளவுத்துறையில் பொது மக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் பணியில் இருக்கிறார் மகேஷ் பாபு. ஒட்டு கேட்டு, அவர்களுக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அப்படி ஒரு நாள் ஒட்டு கேட்கும் போன் காலில், ஒரு முகம் தெரியாத பெண்ணுக்கு உதவ போய், அந்த பெண்ணும், மகேஷ் பாபுவின் தோழியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி இந்த கொலை மட்டுமில்லாமல், பல தொடர் கொலைகளை செய்து வருகிறான் என விசாரணையில் தெரிகிறது.  நாயகன் அந்த சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்தாரா, அவன் ஏன் கொலை செய்கிறான், டெக்னாலஜி கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

டோலிவுட்  பிரின்சுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். மகேஷ் பாபு தெலுங்கில் பேசி நடித்தாலே அவர் முகத்தில் பெரியதாய் ரியாக்ஷன் எதுவும் இருக்காது. தமிழில் கேட்கவே வேண்டாம்... திரைக்கு வந்து வசனம் பேசி சென்றிருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார். பெரிதாய் நடிப்பு இல்லையென்றாலும் படம் முழுவதும் தெரிகிறார். நாயகி ரகுல் பிரீத் சிங், மற்ற கமர்ஷியல் படங்களில் ஹீரோயினி வருவது போல இரண்டு பாட்டு, நாலு சீனுக்கு வந்து சென்றுள்ளார். அவர் கதாபாத்திரம் பெரிதாய் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.

ஹீரோவின் அப்பா, அம்மா, நண்பனாக RJ  பாலாஜி, போலீஸ் மேலதிகாரி என பலர் படத்தில் பேருக்கு வந்து சென்றுள்ளனர். இன்னும் எத்தனை படத்தில் தான் போலீஸ் மேலதிகாரிகளை காமெடியாக காட்டுவார்களோ தெரியவில்லை. பிளாஷ்பாக்கில் வரும் சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்த சிறுவன்,  நடிப்பில் மிரட்டி இருக்கிறான். அவன் ஏன் அப்படி சைக்கோ கொலையாளியானான் என்று சொல்லப்படும் கதையையும் ஓரளவு ஒத்து கொள்வதாய் இருக்கிறது. பரத் சிறு வில்லன் பாத்திரதில் நடித்து சென்றிருக்கிறார்.

இந்த படத்துக்கு பாடல்களே தேவையில்லை. வரிகளில் தெலுங்கு வாடை வருவதால், பாடல்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்பைடர் தீம் மீசிக் மட்டும் த்ரில்லர் படத்திற்கு ஏற்றது போல நன்றாக இருக்கிறது.

படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். இறைவியில் நடித்ததை விட நன்றாகவே  நடித்துள்ளார். மகேஷ் பாபு இண்ட்ரோக்கு கிடைத்த கைத்தட்டலைகளை விட இவருக்கு கிடைத்தது அதிகம். ஒருவேளை நான் தமிழில் பார்த்ததானால் என்னவோ, எனக்கு அப்படி தோன்றியுள்ளது. அவ்வப்போது எஸ்.ஜே. சூரியாவின் நக்கல் பேச்சும், குரூர முகபாவனையும் நம்மை அசத்துகிறது. படத்தின் முழு பலமே இவர் நடிப்பு தான்.

முதல் பாதி படு வேகமாய் முடிகிறது. இரண்டாம் பாதி இன்னும் மாஸாக இருக்கும் என நினைத்து கொண்டிருந்தால் ஓவர் மசாலா, லேடிஸ் சென்டிமன்ட் என  தலையை சொரிய வைக்கிறார்கள். வில்லனை சாதாரண வீட்டு பெண்களை கொண்டு பிடிப்பது என்பது அவ்வளவு ஈஸியாக எடுத்து கொள்ள முடியவில்லை. இந்த சீன் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்க்கும் போது "அட அக்கருமமே!" என சிரிக்க தான் தோன்றுகிறது. அதே போல டெக்னாலஜி கொண்டு வில்லனை கண்டுபிடிப்பது  எல்லாம் நன்றாக தான் இருக்கிறது... ஆனால் கொஞ்சமாவது லாஜிக் பார்த்திருக்கலாம். ஹ்ம்ம்.. சரி விடுங்க.. எதோ ஒண்ணு .. படத்தின் ஓட்டத்தில் டெக்னாலஜி ஓட்டைகளை மறந்திடலாம். கிளைமாக்சில் பேருக்கு ஒரு சமூக கருத்தை வலுக்கட்டாயமாய் திணித்துத்துள்ளார்கள். முருகதாஸ் தமிழ் படங்களுக்கு ஒரு மாறியும், தெலுங்கு படத்துக்கு ஒரு மாறியும் கதை பண்ணுவார் என நினைக்கிறேன். இயக்குனர் திரைக்கதையை என்னும் வலையை மட்டும் இன்னும் கொஞ்சம் சீராக பின்னியிருந்தால் SPYDER உண்மையிலேயே செம மாஸ் கமர்ஷியல் த்ரில்லராக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை... ஒரு முறை பார்க்கலாம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

∴பேஸ்புக்கில் ஏன் பகிர்கிறார்கள்?

வணக்கம்,

நம் பெற்றோர்கள் நமது சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் நெருக்கமான நபர்களிடம் பகிர்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றையும் ∴பேஸ்புக்கில் கட்டாயம் பகிர்ந்து விடுகிறோம் .

இந்த பழக்கம் பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் உண்டு,  என்னையும் சேர்த்து தான்... பொதுவாக எந்த மாதிரியான ஆட்களெல்லாம் ∴பேஸ்புக்கில் இருக்கிறார்கள் ? அவர்கள் எதையெல்லாம் பகிர்கிறார்கள் ? ∴பேஸ்புக்கில் ஷேர் செய்வோரில் பல டைப் மக்கள் உண்டு.

facebook-likes-and-shares

Type1: தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நாட்டுநடப்பு, உலக நடப்பு, அரசியல் நடப்பு, வீட்டு நடப்பு, அவர் சொந்த கடுப்பு, வெறுப்பு, மலரும் நினைவுகள் என போட்டு கொண்டே இருப்பார்கள். சிலர் ஓரிரு வரிகளில் போடுவார்கள்; சிலர் பத்தி பத்தியாய் போடுவார்கள். இவர்கள் போஸ்ட் போட்டவுடன் லைக்ஸ் போட நண்பர்கள் கியூவில் நிற்பார்கள்.

Type2: ஒரு சிலர் நாட்டின்/மக்களின் பிரச்னைகளை புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்.  இவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை.? ஏன் அப்படி செய்தார்கள்? ஒருவேளை இப்படி இருந்தால்... என போஸ்ட் போட்டு பகிர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Type3: அடுத்தது பொதுவான மக்கள். ஜோக்ஸ், விடியோக்கள், மீம்ஸ், சினிமா செய்திகள், பொன்மொழிகள், கிச்சன் டிப்ஸ், விழிப்புணர்வு, ஓட்டலில் சாப்பிட போனது, ஊருக்கு போனது, ஊர் சுற்றியது என பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை பேஸ்புக் வந்து லைக்களையும், ஷேர்களையும் போட்டு தள்ளி விடுவார்கள். நம் ∴பேஸ்புக் பேஜை திறந்தால், அதில் இருக்கும் 25 notification-ல் 23 அவர்களுடையதாய் இருக்கும்.

Type4: சிலர் தங்களுக்கு பிடித்தமான போட்டோ, விடீயோக்கள் என சிலவற்றை மட்டும் ஷேர் செய்வார்கள்.

Type5: இவர்களில் சிலர் எப்போது எங்கு சென்றாலும் உடனே ∴பேஸ்புக்கில் location checkin பண்ணிவிடுவார்கள். Feeling happy, Feeling sad, Feeling exited, Feeling கடுப்பு என அவர்களின் மூட்-ஐ ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள்.


Type6: இன்னும் சிலர் வெறும் போட்டோக்களையும், விடீயோக்களையும் பார்த்து ஸ்ரோல் செய்து கொண்டே செல்வார்கள். மற்றபடி, லைக், ஷேர் எதுவும் செய்யமாட்டார்கள்.

Type7: இன்னொரு சாரார் எப்போதாவது ஏதாவது பொன்மொழியோ, போட்டோவோ, சாமி படமோ ஷேர் பண்ணுவார்கள்.

Type8: வெறும் க்யூட்டான குழந்தைகள் போட்டோ, பூக்களின் போட்டோ மட்டும் இருந்தால் அது பெண்களின் ப்ரோஃபைலாக தான் இருக்கும். பல சமயங்களில் அது ∴பேக் ஐ.டி யாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Type9: சிலர் தொழிலுக்காகவும், அரசியல் பரப்புரைக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களது வெற்றியே எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட் வருகிறது என்பதை கொண்டே தெரியும். ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார மார்க்கெட்டிங் நோக்கிற்காக செய்யப்படுபவை.

இவர்களெல்லாம் ஷேர் பண்ணுவது ஏதற்கு? எல்லாம் ஒரு லைக்குக்கு தான். Like, Love, Ha Ha, Wow, Sad, Angry என அதாவது ஒன்றை யாரவது அவர்கள் போட்டோவுக்கோ, போஸ்டுக்கோ ரியாக்ட் செய்திருக்க வேண்டும்; கமெண்ட் செய்திருக்க வேண்டும். இதற்காகவே பலர் தவம் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு சின்ன லைக் மற்றும் கமெண்ட்டுக்காக தான் இப்படி அலைகிறார்கள்.

ஒரு போட்டோவோ, போஸ்ட்டோ ∴பேஸ்புக்கில் போட்டுவிட்டு எத்தனையோ பேர் லைக்ஸ், கமண்ட் வருகிறது என ∴போனையே பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100 லைக்ஸ்க்கு மேல் வந்து விட்டால் மகிழ்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ∴போனில் "மச்சி என் போட்டோவுக்கு லைக் போடுடா... இன்னும் 3 லைக்ஸ் இருந்தா செஞ்சூரி போட்டுருவேன்" என சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தார். 100 லைக்ஸ் வாங்கிய பின் என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. லைக்குகள் வாங்கி குவிப்பது ஏன்? ஒரு சிறு உதாரணம்: ஒரு நாய் தெருவில் போகும் வண்டிகளையெல்லாம் பார்த்து குரைத்து கொண்டே பின்னால் ஓடும். விரட்டி பிடித்து வண்டி நின்ற பின் என்ன செய்ய வேண்டும் என அதுக்கு தெரியாது. வண்டி நின்றபின் மீண்டும் இருமுறை குரைத்து விட்டு போய்விடும். அது போல தான் லைக்ஸ் வாங்கி குவிப்பவரின் நிலையும். 100, 500 அல்லது 1000 லைக்ஸ்க்கு பின் என்ன செய்வார்கள் என அவர்களுக்கும் தெரியாது. இதேல்லாம் ஒரு சின்ன அல்ப சந்தோஷதிற்கு தான்.

பலரும் அவர்களது சொந்த விஷயங்களை கூட ∴பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கு போகிறோம்? எப்போது வருவோம்?.. உடம்பு சரியில்லை.. நாய் செத்து போச்சு.. பாட்டி மண்டைய போட்டுட்டாங்க.. என எல்லா கருமத்தையும் பகிர்ந்து விடுகிறார்கள். ஏதற்காக இப்படி எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? எதற்கு இப்படி லைக் வாங்க துடிக்கிறார்கள் என யோசிக்கும் போது, இதற்கெல்லாம் ஒரு வித மனவியாதியே காரணம் என்கின்றனர் மனநல ஆர்வலர்கள். அவர்களுடைய மூளையில் ஒரு விதமான செரோடினின் (Serotinin) என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதை Happy Serotinin என்றே மருத்துவ உலகில் சொல்லுகின்றனர். அது சுரக்க சுரக்க மகிழ்ச்சி பெருகும். சாப்பாடு, தூக்கம், சினிமா, பணம், சரக்கு, விளையாட்டு, உடலுறவு, ஊர் சுற்றுதல், சமூக தொண்டு, பாராட்டு என எதை செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து இருக்குமோ, அதுபோல சிலருக்கு இது போன்ற ∴பேஸ்புக் லைக் மற்றும் பகிர்தல் மூலம் அவ்வகை ஹார்மோன்கள் சுரக்கிறது. அவை ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், ஒரு வித போதை உணர்வையும் தரக்கூடியவை என உளவியல் ஆர்வலர்கள் சிலர் சொல்கின்றனர்.

அதனால் தான் சிலர் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அடிக்கடி செல்பி எடுப்பதும், இந்த வியாதியினால் தான். இதற்கு தீர்வு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாம் மனக்கட்டுப்பாட்டோடு இருக்க பழகி கொள்ள வேண்டும். அது தான் முடியலையே என்கிறீர்களா?  முயற்சி செய்து பாருங்களேன்! நானும் முயற்சி செய்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்