புதன், 29 நவம்பர், 2023

ச்சில் பண்ணலாம் வாங்க!

வணக்கம், 

சில (40, 50) ஆண்டுகளுக்கு முன்வரை சரக்கடிப்பவர்களை ஒழுக்கமில்லாதவர்கள் என்று குறிப்பிட்டது உண்டு. சமூகத்திலும் சினிமாவிலும் அப்படி தான் காட்டுவார்கள். ஆனால் இப்போது கதையே வேறு. சரக்கடித்தல் அல்லது social drinking என்பது normalise ஆன ஒன்றாக மாறிவிட்டது. அது காலப்போக்கில் மாறியதில் எனக்கு பெரிய கவலையோ/வருத்தமோ இல்லை. குடிப்பது உடலுக்கும், உயிருக்கும் தீங்கானது என எல்லோருக்கும் தெரியும். மகிழ்ச்சி, வருத்தம், போதை என குடித்து குடித்து மொடா குடிகாரனாகி நோய்வாய்ப்பட்டு இறப்பதெல்லாம் அவரவர் விதி. ஆண் பெண் இருவருக்கும் இது பொருந்தும்.

சில நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக பெங்களூரு செல்ல வேண்டி வந்தது. வேலை முடிந்து டீமுடன் பெங்களூருவை சுற்றி பார்க்கையில் அவர்கள் எல்லோருமே சொன்னது பெங்களூரு ஐ.டிக்கு மட்டுமல்ல; (Pub) பப்க்களுக்கும் hub என்பது தான். ஒரு வியாழன் இரவில் ஆறு பேர் கொண்ட குழுவாக கோரமங்களாவில் உள்ள உயர்தர பப் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மூவர் KF pint beer, Bira சிறிய பாட்டில் என ஆர்டர் செய்து கொள்ள, நானும் மற்ற இருவரும் sprite, lemonade, சிக்கன் side dish என ஒதுங்கி கொண்டோம். 

Bengaluru-pub-culture

அன்று தான் முதன் முதலில் பப் வாழ்க்கை எப்படி இருக்கிறது என பார்த்தேன். உடன் வந்த பெங்களூரு நண்பர் ஒருவர், தான் +2 படித்த காலம் முதல் பப்பும், பாரும் ஆரம்பித்து விட்டதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும் இந்தியாவில் பெங்களுரில் தான் அதிக pubs இருப்பதாக சொல்லிக் கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமாய் இருக்கிறதாம்! இங்கு pub and night culture மிகவும் famous & fashion. இதுதான் இங்குள்ள பெரும் பொழுதுபோக்கு, டைம்பாஸ், என சொல்லிக்கொண்டே போனார்கள். பெங்களூரு Pub Capital of India என்று அழைக்கப்படுகிறதாம். ஏன்? மற்ற மாநகரங்கள் போலவே பெங்களூரும் வளர்ந்து வந்த போதிலும், இங்கு மட்டுமே ஏன் இந்த pub and night culture மீது இவ்வ்ளவு மோகம் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. இணையத்திலும் நண்பர் ஒருவரிடமும் அறிந்து கொண்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்கிறேன்.

ஒரு தொழில்துறை ஆய்வின்படி, இந்தியாவில் பப் மற்றும் இரவு வாழ்க்கை கலாச்சாரத்தை அமைத்த/ஆரம்பித்த முதல் நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகும். மற்ற மாநிலங்களை போல கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் பெங்களூரில் இருந்து வந்தது. 1989-ல் முதன் முதலில் Pecos என்னும் பப் ஆரம்பிக்கப்பட்டது. அஃது வேகமாக மாறிக்கொண்டிருந்த நகரத்திற்கு மேலும் ஒரு புதிய உற்சாகத்தையும் vibe-யும் சேர்த்தது. வேலைக்குப் பின் மாலையிலும் இரவிலும் பப், டான்ஸ், ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என இரவு நேர கலாச்சாரத்தை அனுபவிக்க ஆரம்பித்து இன்று பெரிய அளவில் போய் கொண்டிருக்கிறது. பெங்களூரில் இரவு ஒரு மணிவரை பெரும்பாலும் எல்லா பப்களும், டிஸ்கோத்தேக்களும், (longue) லாஞ்களும், பார்களும், திறந்தே இருக்கும். இரவு நேர ரெஸ்டாரண்ட்கள், பெட்டிக்கடைகள் என பெங்களூரில் சில ஏரியாக்கள் விடியற்காலை வரை ஜகஜகவென ஜொலித்து கொண்டிருக்கும். அக்காலங்களில் மால்கள் (Malls) பெரிதாய் இருக்கவில்லை; பீச் கிடையாது; மற்ற பொழுதுபோக்கு சமாசாரங்கள் இருந்த போதிலும், பப்பும் மப்பும் பெங்களூரில் முக்கியமான பொழுதுபோக்கு ஒன்றாகி போனது. பெங்களூரு மக்கள் வாரம் தோறும் பகல் முழுக்க உழைத்து மாலையில் stress இல்லாமல் பொழுதை கழிக்க ஆரம்பிக்கப்பட்டது என சொல்கின்றனர். முதலில் weekendகளில் களைகட்டிய பப்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தினசரி நாட்களில் இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அரசுக்கும் வருமானம் பலமாய் வருவதால் பல சலுகைகளை பப்களுக்கு வழங்க ஆரம்பித்தது. 90களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள்,  ஸ்டார்ட் அப் கம்பெனிகள் என தொழில்முறையிலும் நகர கட்டமைப்பிலும் வளர்ந்து கொண்டே இருக்க, பப்புகளும் வளர்ந்து கொண்டே போயின. வாடிக்கையாளர்களை கவர karoke, open nights, dating nights, cusine evenings, conventional bar games, bartender shows, happy feet, happy hours என புது புது விஷயங்களை கூட்டி கொண்டே சென்று அவர்களது வியாபாரத்தை பெருக்கி கொண்டது. 

2010-களில் The Biere Club என்னும் பப் நிறுவனம், Microbreweries -ஐ (தாமாகவே மதுபானத்தை தயாரித்து விற்க) ஆரம்பித்தது. பெரும்பாலும் பீர் வகையறாக்கள் தான். அதுவரை பப்கள், பீர் பாட்டில்களை வாங்கி விற்று வந்தவர்கள்; அவர்களே தயாரித்து  அரசின் உத்தரவுடன் லைசென்ஸ் பெற்று) தமது பார், பப் களில் விற்க ஆரம்பிக்க விற்பனை படுஜோரானது. அல்கொஹோலின் அளவு என்று சொல்லப்படும் ABV - Alcohol By Volume 4-8% மட்டுமே தான் இருக்க வேண்டும்.  Microbreweries-ல் பெரும்பாலும் 4 முதல் 4.5 வரை தான் அல்கொஹோல் அளவு சேர்க்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில இடங்களில் 5- 6.5% வரை சேர்க்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். 

இந்த பப் மற்றும் இரவு நேர கலாச்சாரங்களால், சில பல இடங்களில் பெண்களிடம் சீண்டல்கள், பாலியல் முயற்சி, குடித்துவிட்டு அடிதடி,  குடித்துவிட்டு வண்டியோட்டுதல், சில சமயங்களில் கொலை போன்ற விஷயங்களும் நடந்தேறியுள்ளன. 

பெங்களூருவை போலவே மற்ற நகரங்களிலும் இது போன்ற பப் கலாச்சாரங்கள் பெருகி வருகிறது. புனே, மும்பை, ஹைதராபாத், புது தில்லி, என நாட்டின் பல நகரங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் பின்னால் போக ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் பல பப்கள் இருக்கிறது. ஆனால் பெரும் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே போவார்கள் என்ற எண்ணம்தான் மோலோங்கி இருக்கிறது. அதுவே ஓரளவு உண்மையும் கூட. மற்றவர்கள் சரக்கடிக்க தெருவுக்கு தெரு இருக்கும் பாருக்கு சென்றுவிடுகின்றனர். நம்ம ஊரில் சரக்கடிக்க போகலாம் என்று சொன்னாலே பாண்டிச்சேரி தான் நினைவுக்கு வரும். புதுவை 'மது'வை நகரமாக மாறிய கதையே வேறு. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து இந்தியாவுடன் சேர்ந்த பின்பும், பல வெளிநாட்டவர்கள் இன்றளவும் பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; அவர்களுக்காக மதுபானங்கள் விற்பனையில் இருந்தது. மேலும் பாண்டிச்சேரி சிறிய யூனியன் பிரதேசமாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சிக்காக அங்கு பல பொருட்களுக்கு சேவை வரி (Service tax/VAT/GST) மிகவும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளது (கார், பெட்ரோல், விவசாய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மதுபானங்கள், முதலியன..)

பாண்டிச்சேரி அரசு, எல்லா வகையான மதுபானங்களுக்கும் 40% மட்டுமே கலால் வரி விதிக்கிறது. மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மற்ற மாநிலங்கள் முறையே 65% மற்றும் 300% வரை வரியை  விதிக்கின்றன. எனவே, மதுபானம் பாண்டியில் ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானது. இதனால் புதுச்சேரிக்கு பிற மாநில மக்கள் மலிவு விலையில் மதுபானம் அருந்த வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் 1970-80 களில் மதுவிலக்கு அமலில் வந்து, பின்னர் ரத்தாகி, பின்னர் மீண்டும் மதுவிலக்கு அமல் என தொடர் சட்ட மாற்றங்களால் குழப்பங்களால் கடலூர்/விழுப்புரம் மக்கள் அருகே உள்ள பாண்டிசேரிக்கு படையெடுத்து தங்கள் தாகத்தை தீர்த்து கொண்டனர். சில பல பாட்டில்களை வாங்கி வந்து தமிழ் நாட்டிற்குள் குடிக்கவும், விற்கவும் செய்தனர். மேலும் பாண்டிசேரி கடற்கரை நகரமாகவும் இருப்பதால் சுற்றுலா துறைக்கு பெரும் உதவியானது. பெரும்பாலும் தமிழ் சினிமாகளில் பாண்டிச்சேரியை 'போதை நகரம்' என்று சித்தரிப்பது அந்த இடத்தின் மதுபானத் தொழிலை இன்னும் பிரபலப்படுத்தியது. அதனால்தான் பாண்டிச்சேரி தென்னிந்தியாவின் 'மது தலைநகரம்'  (Alcohol Capital of South India) என்று அழைக்கப்படுகிறது.    

இப்படி எல்லா ஊரிலும் சரக்கு ஆறாய் போனாலும், தமிழ் நாட்டை மட்டும் குடிகார மாநிலமாக மாற்றிவிட்டார்கள் என சிலர் ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை. குடிப்பது தவறு (????!!!!) தான்... ஆனால் மக்களை குடிக்க வைக்கதான் எல்லா அரசும் முயற்சி செய்கிறது. இன்னும் சில நாட்களில் சென்னையிலும் இந்த இரவு நேர பப்கள் பெருகி, மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என மார்க்கெட் நிலவரம் சொல்லுகிறது. என்ன நடக்கிறது என்று நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்! அதுவரை Cheers !!!  

நன்றி!!!
பி. விமல் ராஜ் 

புதன், 15 நவம்பர், 2023

கடல் சூழ் உலகு!

வணக்கம்,

உலகம் தோன்றி கிட்டத்தட்ட 120 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் இருந்த வாயுமண்டலங்கள் நீராக மாறியும், மழை பெய்தும் பெரும் நீர் படுகைகளாக தோன்ற ஆரம்பித்தன. இதுவே இன்றைய கடல்களாகும். இன்றைய பூமியானது 71% கடலால் சூழப்பட்டுள்ளது. இவைதான் உலகின் பெருங்கடல்கள் (World Oceans) என்று அழைக்கப்படுகிறது. 

பள்ளிக்கூடத்தில் social studies பாடத்தில் map குறிக்கும் போது சில கடல் பகுதிகளை sea என்றும், சில கடல் பகுதிகளை ocean என்றும் குறிப்போம். கடல் நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருக்கும் அல்லது கரையோரம் உள்ள நிலப்பரப்பிலிருந்து விரிந்து இருக்கும்; பல கடல்கள் சங்கமிக்கும்/ஒன்று சேரும் இடம் பெருங்கடலாகும்.

அதே போல சின்ன வயதில் நாம் கேட்கும் கதைகளில் "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி..." என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்திலும் "Across Seven Seas.." என்று வரும். இந்த ஏழு கடல்கள் எதை குறிக்கின்றன என தெரியுமா? 

நம் உலகில் ஐந்து பெருங்கடல்கள் இருக்கிறது. அவை,

  • பசிபிக் பெருங்கடல் (North Pacific Ocean & South Pacific Ocean)
  • அட்லாண்டிக் பெருங்கடல் (North Atlantic Ocean & South Atlantic Ocean)
  • இந்திய பெருங்கடல் (Indian Ocean)
  • ஆர்டிக் பெருங்கடல் (Artic Ocean)
  • அண்டார்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)
five-world-oceans

பசிபிக் பெருங்கடல் : 

  • பசிபிக் பெருங்கடல் உலகின் மிக பெரிய பெருங்கடல் ஆகும். வட ஆர்டிக் பெருங்கடல் முதல் தெற்கு அண்டார்டிக் பெருங்கடல் வரை பரவியுள்ள உலகின் மிகப்பெரிய பெருங்கடல் ஆகும். கிட்டத்தட்ட பூமியின் 30% பரப்பளவை கொண்டுள்ளது. இதன் கிழக்கில் தென் அமெரிக்கா வட அமெரிக்காவும், மேற்கில் ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளின் நிலப்பரப்பும் உள்ளன. இது பூமத்திய ரேகையால் (Equator) வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1519 -ல் Ferdinand Magellan என்னும் போர்த்துகீச மாலுமி தான் முதல் முதலில் உலகை கப்பலில் சுற்றி வந்தவர். அவர் பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மகலன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது. 25000 மேற்பட்ட தீவுக்கூட்டங்கள், பவள பாறைகளை கொண்டுள்ளது. பெரும்பாலானவை தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இருப்பதாக சொல்கின்றனர். 
  • UNESCO அங்கீகாரம் பெற்ற Eastern Island Monument Statues, சிலி நாட்டின் கடற்கரை பகுதியில் தான் அமைந்துள்ளது.
  • உலகின் மிக பெரிய பவளப்பாறை திட்டுகள் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றன. 
  • உலக பெருங்கடகளில் உள்ள மிக ஆழமான இடம் (11,034 m ஆழம்) என்று சொல்லப்படும் மரியானா ட்ரென்ச் (Mariana Trench) பசிபிக் பெருங்கடலில், பிலிப்பைன்ஸ் கடல்பகுதியருகே இருக்கிறது. இப்பகுதியில் இதுவரை யாரும் காணாத அதிசிய கடல்வாழ் உயிரினங்களும், ஆபத்தான உயிரினங்களும் இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்கின்றனர்.
  • Point Nemo என்று அழைக்கப்படும் இடமான கடற்பகுதியும் பசிபிக் பெருங்கடலில் தான் இருக்கிறது. தென் அமெரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில தான் பழுதடைந்த/ சுற்றுப்பாதையிலிருந்து தவறிய விண்கலங்கள் அழியும்படி/விழும்படி செய்யப்படுகின்றன. இப்பகுதியை விண்வெளி கல்லறை (Space Cemetry) எனவும் சொல்கின்றனர். 2600 கி.மீ  தூரத்திற்கு எந்த நிலப்பரப்பும்  அருகே இல்லாத தனிமையான, ஒதுக்கப்பட்ட இடமாக இது சொல்லப்படுகிறது.
  • மேலும் Ring of Fire என்று சொல்லப்படும் இயற்கை பேரிடர்கள் (பூகம்பம், ஏரிமலை) அதிகம் ஏற்படக்கூடிய இடமும் இப்பகுதியில் இருக்கிறது. 
  • 1521-ல் தான் பசிபிக் கடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இது கி.மு. 3000-16000 ஆண்டுகளில் பல மக்கள் இடம் சிறு படகுகள் மூலம் இடம் பெயரவும், வாணிபத்துக்காகவும் இக்கடலை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் பெருங்கடல்:

  • அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளும், மேற்கே வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. உலகின் பரப்பளவில் 20% கொண்டுள்ளது அட்லாண்டிக் பெருங்கடல். சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் pangea கண்டம் பல கண்டங்களாய் பிரியும் போது உருவானது அட்லாண்டிக் பெருங்கடல்.
  • மார்ட்டின் வால்டுசிமுல்லர் (Martin Waldseemüller) என்னும் ஜெர்மனிய வரைபடவியலாளர், கிரேக்க கடவுளான அட்லாஸ்-ன் (Atlas) பெயரால் இக்கடலுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் என பெயர் சூட்டினார். மேற்கத்திய மற்றும் கிரேக்க கதைகளில் வரும் அட்லாண்டிஸ் (Atlantis) நாடு /கண்டம் இக்கடலில் தான் இருந்ததாகவும், 5000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் அழிந்து போனதாகவும் சொல்கின்றனர். இதன் பெயராலேயே அட்லாண்டிக் பெருங்கடல் பெயர் பெற்றது என்றும் சொல்கின்றனர். 
  • உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்க செல்லும் வழியில் அட்லாண்டி பெருங்கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இரண்டாம் உலக போரின் போது பல போர்கள் இங்கு நடந்தேறியுள்ளது. 
  • வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). இங்கு கடலின் அதீத புவியிசை காரணமாக ஏராளமான கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
  • உலகின் பெரிய முகத்துவாரங்கள் (estuaries) அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது. புகழ் பெற்ற பிரேசில் நாட்டு அமேசான் நதியும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது.
  • வட அட்லாண்டிக் பெருங்கடலில் மிக பெரிய எரிமலை தீவுகளும் இருக்கிறது.
  • அட்லாண்டிக் பெருங்கடல் ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலங்கள் (3.8 சென்டிமீட்டர்) விரிவடைகிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  
  • நீல திமிங்கிலம், சுறாமீன்கள், டால்பின்கள், ஜெல்லி மீன்கள் என பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கும் உறைவிடமாக அட்லாண்டிக் பெருங்கடல் விளங்குகிறது.

இந்திய பெருங்கடல்:

  • இந்திய பெருங்கடல் உலகின் மிக மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆஸ்திரேலியாவும், மேற்கே ஆப்ரிக்க நிலப்பரப்பும், வடக்கே இந்திய நிலப்பரப்பும் இருக்கிறது. பூமி பரப்பளவில் 20% கொண்டுள்ளது இந்திய பெருங்கடல். சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடைசியாக உருவான கடல் என்று சொல்கின்றனர்.  
  • ஐரோப்பியர்கள் இக்கடலை Eastern ocean (அன்றைய பசிபிக் - Western ocean க்கு எதிர்பக்கம் இருந்ததால்) என்று அழைத்து வந்தனர். சீன கடல் மாலுமிகள், இதனை Western Oceans என்றும் அழைத்து வந்தனர். பழங்கால கிரேக்க புவியலில், இக்கடலை Erythraean Sea என்று அழைத்தனர். 14ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் Indian Ocean என பெயரிடப்பட்டது. இக்கடற்பகுதியில் இந்திய நிலப்பரப்பில் தான் அதிக கடற்கரையை கொண்டுள்ளது; அதனாலேயே இப்பெயர் பெற்றது.  
  • பூமத்திய ரேகை அருகே இருப்பதால் இஃது உலகின் வெப்பமான கடல் என சொல்லப்படுகிறது. வெப்பம் காரணமாக கடல் உயிரிக்கள் வாழ தேவையான உணவு (phytoplanktons) கிடைக்காமல் போகும் என்பதால் மற்ற பெருங்கடலை காட்டிலும் கடல் வாழ் உயிரினங்கள் சற்று குறைவாகவே இருக்கும்.
  • குறைவான கடல்வாழ் உயிரினங்கள் இருந்தபோதிலும், இது குறிப்பாக ஹம்ப்பேக் திமிங்கலத்திற்கு (Humpback Whale) இனப்பெருக்கதிற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
  • இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்டிகா பிரதேசத்திற்கு அருகில் கேர்கைலன் பீட பூமி (Kerguelen Plateau) என்னும் பகுதி இந்தியாவையும் அண்டார்டிகாவையும் இணைத்த பாலம் போன்ற பெரிய நிலப்பரப்பு, கடலில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூழ்கி போனதாக சொல்கிறார்கள்.
  • அதே போல லெமுரியா என்னும் கடலில் மூழ்கி போன நிலப்பரப்பு (ஆஸ்திரேலியா, தென் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி ) இந்திய பெருங்கடலில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனை தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டம் என்றும் சொல்கின்றனர்; அதற்கு ஆதாரமாக சில மேற்கோள்களையும் காட்டுகின்றனர். இதை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை பற்றி படிக்க லெமூரியாவும் குமரி கண்டமும்
  • இந்தோனேஷியா கடல்பகுதிக்கு அருகே Java Trench என்னும் இடம் தான் இந்திய பெருங்கடலில் ஆழமான இடம் (7258 மீ) என சொல்கிறார்கள்.
  • இந்தியாவின் தென்முனையிலிருந்து (குமரி) 1200 கி.மீ தொலைவில் மிக பெரிய ஈர்ப்பு துளை Gravity hole ஒன்று உருவாக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் 100 மீ வரை கடலின் ஆழம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
  • மசாலா பொருட்கள் (மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலியன) வாங்கவும், பட்டு துணிகள், தந்தங்கள், விலையுயர்ந்த கற்கள், கைவினை பொருட்கள், குதிரைகள் என பல்வேறு பொருட்கள் வாங்கவும் spice route, silk route ஆக இருந்த இக்கடற்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு பொருட்களை எடுத்து செல்லவும், வாணிபத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுளது. சங்ககால பாண்டிய /சேர மன்னர்கள் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இந்திய பெருங்கடல் வழி வர்த்தகம் செய்து வந்தற்கான ஆதாரங்கள் உண்டு. அதே போல பல (தெற்காசிய) நாடுகளை போரிட்டு வென்றெடுத்த இராஜேந்திர சோழன் பெரும் கடற்படையோடு, இந்திய பெருங்கடலை தம் கடற்படை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாற்று பெருமையும் உண்டு. 
  • உலக வர்த்தகத்தில் இந்தியப் பெருங்கடல் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. பல்வேறு கடல் வர்த்தகத்தின் பாதை மட்டுமல்லாமல் மற்றும் கனிமங்களின் இருப்புகளையும் கொண்டுள்ளது. இந்த பெருங்கடலில் பல எண்ணெய் வைப்புகளும்(oil deposits) உள்ளன. மொத்த உலக எண்ணெய் உற்பத்தியில் 40 % இந்திய பெருங்கடலிலும், கடல் மூலமாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
ஆர்டிக் பெருங்கடல்:

  • பூமி பந்தின் மேல் பகுதியில் கனடா, க்ரீன் லாந்து மற்றும் ரஷ்யாவின் வட பகுதியில் அமைந்துள்ளது ஆர்டிக் பெருங்கடல். உலக பெருங்கடலில் மிக சிறியதும், ஆழமில்லாத கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும்.
  • Artikos என்னும் கிரேக்க சொல்லுக்கு 'near the bear' என்று பொருள். மேலும் வட துருவத்தை சுற்றி இருப்பதால் இது ஆர்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது.
  • பல காலங்களுக்கு வெயிலோ வெளிச்சமோ படாத காரணத்தால், கடல் வாழ் உயிரினத்துக்கு தேவையான phytoplanktons & zooplanktons என ஏதும் பெரிதளவில் கிடைக்க வாய்ப்பில்லை. 
  • பணிகரடிகள், சீல் என்னும் கடல் சிங்கங்கள் , திமிங்கிலங்கள் என கடல்வாழ் பாலூட்டிகள் அதிகம் இருக்கின்றன.
  • கடலில் மேற்பகுதி பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஆர்க்டிக் பெருங்கடலின் பெரும்பகுதி வட துருவத்தைச் சுற்றி அமைந்திருப்பதாலும், உறைந்த நிலையில் உள்ள நீரினால் இருப்பதாலும், கடலில் முழுமையாக பயணம் செல்ல இயலாது.

அண்டார்டிக் பெருங்கடல்:
  • இதனை Southern Ocean என்றும் அழைப்பார்கள். அண்டார்டிக் கண்டதை சுற்றி இருப்பதால் இது அண்டார்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது. 
  • எல்லோருக்கும் தெரிந்தது போல முழுக்க முழுக்க பனிப்பாறைகளால் நிரம்பியுள்ளது அண்டார்டிக் பெருங்கடல்.
  • மனிதர்களால் உருவாக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் (Carbon Emmisions) 15% இந்த தெற்கு பெருங்கடல் இழுத்து கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இது போன்ற எண்ணற்ற அதிசயங்களையும், ரகசியங்களையும், பல ஆபத்துகளையும் கொண்டுள்ளது நம் உலக பெருங்கடல்கள். உங்களுக்கு வேறு ஏதாவது செய்திகள் தெரியுமாயின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம். 

நன்றி !!!
பி. விமல் ராஜ்