taj mahal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
taj mahal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 பிப்ரவரி, 2024

உலக அதிசயம் தாஜ் மஹால் !

வணக்கம்,

உலக அதிசயமான தாஜ் மஹால் காதல் சின்னமாகவும், இந்தியாவின் கலை மற்றும் புராதான சின்னமாகவும் விளங்குகிறது. அது உண்மையிலேயே அந்த அளவுக்கு மதிப்பானதா, இல்லை வெறும் கட்டமைக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எனக்குள் ரொம்ப நாளாய் இருந்தது.


அதை நிவர்த்தி செய்து கொள்ள இம்முறை விடுமுறைக்கு புது தில்லி - ஆக்ரா செல்ல கடந்த ஜனவரியில் திட்டமிட்டிருந்தோம். எனக்கு தில்லி ஏற்கனவே சென்றிருந்த அனுபவம் இருந்திருந்த போதிலும் ஆர்வம் என்னவோ குறையவில்லை. ஏற்கனவே டெல்லி போன கதை பற்றி பழைய பேப்பரில் எழுதியுள்ளேன். போனமுறை கனவான தாஜ் மஹால் பயணம், இம்முறை எனது மும்தாஜூடன் சேர்ந்து சென்று நினைவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்😁.


Taj Mahal Visit

தாஜ்மஹால் ஷாஜஹானின் ஆசை மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்டது; முழுக்க முழுக்க பளிங்கு கற்களால், ஆக்ராவில் யமுனை நதி கரையில் கட்டப்பட்டுள்ளது. 1632ல் ஆரம்பிக்கப்பட்டு முழுமையாய் 1658ல் கட்டி முடிக்கப்பட்டது என எல்லாமே நமக்கு தெரிந்த கதை தான். அதை பற்றியெல்லாம் இங்கு விவரிக்க போவதில்லை.

 

தில்லி/புது தில்லி முழுவதும் சுற்றி பார்க்க, மார்க்கெட் ஷாப்பிங் என மூன்று நாட்கள் போதுமானது. பொதுவாய் வட இந்திய பயணத்திற்கு நவம்பர் - மார்ச் காலங்களில் செல்வது சாலச்சிறந்தது. நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தின் பீக்; கடும் குளிர் கொண்டு எல்லாம் விரைத்து போகும். ஜனவரி முதல் பிப்ரவரி பாதிவரை குளிர் (08-20℃) இருக்கும்; பகல், இரவு என இரு வேளையிலும் குளிர் அள்ளும்; காலை பத்து மணிக்கு சூரியன் மேகத்திலிருந்து எட்டிப்பார்க்காவிட்டால் வெறும் பனிமூட்டமாக தான் இருக்கும். பிப்ரவரி - மார்ச் நேரங்களில் லேசாக வியர்வை பூக்கும்; பகல் நேரத்தில் ஃபேன் கண்டிப்பாக போட வேண்டி வரும். ஏப்ரல்-மே மாதமெல்லாம் வெயில் (45-50℃ வரை) மண்டையை பிளக்கும். நம்ம ஊரை விட இரு மடங்கு ஜாஸ்தி!


தாஜ் மஹாலை பார்க்க ஒரு வாரம் முன்னலேயே ஆன்-லைனில் டிக்கெட் போட்டுவிட முடியும். தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள எல்லா புராதான நினைவு சின்னங்களுக்கும் ஒரே இணையதளத்தில் (https://asi.payumoney.com/) டிக்கெட் எடுத்து விட முடியும். நாம் அங்கு போய் சேரும் நேரம் சரியாய் தெரியாலிருக்கும் பட்சத்தில், சில நேரத்தில் ஆன்-லைனில் டிக்கெட் எடுப்பதை விட நேரில் சென்று எடுப்பது உத்தமம்.


தில்லியிலிருந்து ஆக்ரா சாலை வழி பயணம் சுமார் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் தான். ஆனால் காலை வேளையில் பனி மூட்டத்தில் செல்ல நான்கரை முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகும். அதிகாலை ஆறரை மணிக்கு கிளம்பினாலும் 11/12 மணிக்கு தான் ஆக்ரா போய் சேர முடியும். யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயில் வண்டி 60-70 தாண்ட முடியாது. டிராபிக், பனி என பொறுமையாய் தான் போகமுடியும். ஹைவே எங்கும் பார்க்கிங் லைட்டில் கண் சிமிட்டியபடி எல்லா வண்டிகளும் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த எட்டு வழி சாலை வெண்ணெய் போல அருமையாக இருப்பதால் பயணத்தில் பெரிய கஷ்டம் தெரியவில்லை, ஆக்ராவினுள் நுழையும் வரை! ஆக்ரா நகருக்குள் சாலைகள் சற்று சுமாராகவும், கட்டிடங்கள் ஓரளவுக்கு தான் இருந்தது. Typical tier 3 வடஇந்திய நகரம் என பார்த்தவுடனே தெரிந்துவிடும்.    


தாஜ் மஹால் அருகே தனியார் மற்றும் வாடகை கார்கள் (பெட்ரோல்/டீசல்) செல்ல தடை. குறிப்பிட்ட தூரத்திற்கு பின் பேட்டரி ஆட்டோவில் (1 கி .மீ) தான் செல்ல வேண்டும். பாறை கற்களினால் போடப்பட்ட சாலை; மேடுபள்ளத்தில் குலுங்கி குலுங்கி போக வேண்டி வரும். பக்கவாட்டில் உள்ள எலும்புக்கூடான செங்கல் கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், குடிசை வீடுகள், இடிந்த பழைய கட்டிடங்கள், தெருவோரம் ஓடும் சாக்கடைகள், புளிச்..புளிச்.. என துப்பிய பான் கரைகள், என போகும் பாதையே படாவதியாய் இருக்கும். ஆட்டோ டிரைவர் நம்மை நாம் தாஜ் மஹாலுக்கு தான் கூட்டி போகிறாரா?  இல்லை வேறு எங்காவதா போகிறாரா என சந்தேகம் வருமளவுக்கு இருந்தது. அடப்பாவிகளா!! எவ்வளவு பெரிய புராதன, பிரபலமான சுற்றுலா தளம் இது... ஊரையும், போகும் வழியையும் இப்படியா பராமரிப்பது..?? எதிர்கட்சிகாரன் வெள்ளைக்காரன் பார்த்தா நம்மை பத்தி என்ன நினைப்பான்.. ?? 🙄🙄 ஹம்மம்.. இப்பல்ல.. 40/50 வருஷமாகவே இப்படி தான் இருக்கிறது போலும்!


குலுங்கி, குலுக்கி கொண்டே போய் தாஜ் மஹால் நுழைவு வாசல் வரை கூடி கொண்டு போய் விட்டுவிட்டார் ஆட்டோவாலா. அங்குள்ள கடைகளில் (ஆன்-லைன்) டிக்கெட் எடுத்துக்கொண்டோ, அல்லது கவுண்டரில் வரிசையில் நின்று 50 ரூபாய்க்கு என்ட்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டோ கிழக்கு வாசல் (east gate) வழியாய் உள்ளே செல்லலாம். அதே போல மேற்கு வாசல் (west gate) வழியாகவும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைய முடியும். பெரும்பாலும் இரு வாசலிலும் பாட்டரி வண்டிகள், ஆட்டோக்கள், Golf cart வண்டிகள் என வரிசைகட்டி நிற்கும். இங்கு நாம் பார்க்கும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் தான். அனைவரிடமும் ஒரு DSLR காமிராவும், tripodம் கண்டிப்பாக இருக்கும். நம்மூர் மக்களும் கணிசமாக தான் இருந்தனர்.


பின்னர் அங்கிருந்து Darwaza என்று அழைக்கப்படும் மெயின் நுழைவு வாயிலை அடையலாம். செந்நிற சலவை கல்லை கொண்டு கட்டப்பட்டுள்ள வாயிலின் மேலே 22 சிறு சிறு குவிமாடங்கள் (dome) கொண்டுள்ளது அஃது தாஜ்மஹாலை கட்டிமுடிக்க 22 ஆண்டுகளை ஆனதை குறிக்கின்றனது என்று கைடு ஒருவர் சொன்னார்.   


மெயின் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக தாஜ் மஹாலின் அழகை பார்க்க முடிகிறது. வாயிலை அடுத்து உள்ளே வரும் போது முழு பளிங்கு மாளிகையின் பிரமாண்டமும் நம் கண்ணில் ஒளிர்விடுகிறது. வாயில் முதல் தாஜ் மஹால் வரை வானிற குளம் அமைக்கப்பட்டுள்ளது; அதில் பவுண்டைனும் (fountain) அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு புறமும், முன்பும் பின்பும் பெரிய புற்கள், மரங்கள் நடப்பட்டு, பெர்சிய முறைப்படி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார் பாக் (Char Bagh) என்று சொல்லுவார்கள்.


Click play for Taj Mahal photos

தாஜ் மஹாலின் ஒரு பக்கத்தில் மசூதியும், மறுபக்கம் கெஸ்ட் அவுஸ்ம் (assembly hall என்றும் சொல்கின்றனர்) கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியில் ஒவ்வொரு வெள்ளியும் உள்ளூர் பொதுமக்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்; அதனால் வெள்ளியன்று மட்டும் சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலுக்கு செல்ல அனுமதி இல்லை.


தாஜ் மஹால் இந்திய பொருட்களை மட்டுமல்லாமல் ஆசியாவில் பல்வேறு நாட்டிலிருந்து பொருட்களை கொண்டும் கட்டியுள்ளனர். ஆயிரம் யானைகள், 22,000 கட்டிட தொழிலாளர்கள், எம்பிராய்டரி வல்லுநர்கள், என பலர் வேலை செய்துள்ளனர். தாஜ் மஹால் கட்டடத்தின் வெளியே பெர்சிய மொழியில் குரான் எழுத்துக்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஒளி ஊடுருவக்கூடிய அந்த வெள்ளை பளிங்கு ராஜஸ்தானின் மக்ரானா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் பகுதியிலிருந்து (japser) ஜாஸ்பர், சீனாவிலிருந்து ஜேட் மற்றும் கிரிஸ்டல் (jade & crystal), டர்க்கைஸ் (turquoise) திபெத்திலிருந்தும், லேபிஸ் லாசுலி (labis lazulli) ஆப்கானிஸ்தானிலிருந்தும், நீலக்கல் (sapphire) இலங்கையிலிருந்தும், கார்னிலியன் அரேபியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் வெள்ளை பளிங்கு சுவற்றிலும் உள்பகுதியிலும் பதிக்கப்பட்டுள்ளன.🔷💎💠


வெளிப்புற சுவற்றில் பூச்செடிகள் போலவும், பல வண்ண நிறங்களில் அலங்கார மலர் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. 240 அடி உயரமுள்ள தாஜ் மஹாலின் உச்சியில் வெங்காய வடிய குவிமாடத்தில் மேல் முகலாயர்களின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிய மசூதிகளில் உள்ள மினார்கள் (தூண்கள்) போலவே இங்கும் தாஜ் மஹாலை சுற்றி நான்கு மினார்கள் (தூண்கள்) கட்டப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் 180 அடி அளவு உயரம் இருக்கும். இந்த 4 மினார்களும் சற்று சாய்வாகவே கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுமாயின், இந்த மினார்கள் தாஜ் மஹாலின் மேல் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


தாஜ் மஹாலின் mausoleum (அடக்கம் செய்யப்பட்டுள்ள மசூதி) உள்ளே செல்ல இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ள  செல்லலாம். முன்கூட்டியே ஆன்-லைனில் கூட எடுத்து கொண்டும் செல்லலாம். உள்ளே அழுக்காகாமல் 👣இருக்க, நம் செருப்பு/ஷூ மேல் கவர் அணிந்து கொண்டுதான் போக வேண்டும். அதுவும் அங்கேயே தரப்படுகிறது. முசோலியம் உள்ளேயும் முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுவரெங்கும் அழகிய வேலைப்பாடுகளும், உள் குவிமாடத்தில் பிரமாண்ட வண்ணமயமான பூ மற்றும் அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஷாஜகானின் சமாதி சற்று பெரியதாகவும் மற்றும் மும்தாஜின் சமாதி சிறியதாகவும் முசோலியம் நடுவே வீற்றிருக்கிறது. ஆனால் அது போலியான சமாதி என்றும், அவர்களின் உண்மையான சமாதி முசோலியம் கீழே பாதாளத்தில் புதைக்கபட்டுள்ளது. அதற்குள் செல்ல படிக்கட்டுகள் இருக்கிறது; பாதாள அறைக்கு செல்லும் பாதை இரும்பு கேட் போட்டு மறைக்கப்பட்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. 


அப்படியே இரு சமாதிகளை ஒரு முறை சுற்றி வந்து பின்பக்கமாக மசூதியின் பின்பக்கம் வந்து விடலாம். தாஜ் மஹாலின் இரு பக்கவாட்டிலும் சற்றே காலியாய் இருப்பதால் பலர் அங்கு இன்று போட்டோவும் செல்பியும் எடுத்து கொண்டிருந்தனர். தாஜ் மஹாலின் பின்பக்கத்திலிருந்து யமுனை நதியின் அழகை கண்டு ரசிக்கலாம்; ஆனால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. நதி அசுத்தமாகவும் சற்றே வறண்டுபோய் ஆங்காகே மணற்திட்டுகளாய் இருந்தது. நதிக்கரைக்கு அந்த பக்கம் மேதாப் பாக் Mehtab bagh என்னும் ஒரு முகலாய தோட்டம் இருக்கிறது. மேலும் அங்கு இடிந்த, தரைமட்டமான நிலையில் ஒரு கட்டிடதின் அடையளவும் இருக்கிறது. அது ஷாஜஹான் தனக்காக கட்டிக்கொண்ட சமாதி என்றும், அஃது கருமை நிற சலவை கற்களால் கட்ட திட்டமிட்டு, பின்னர் ஷாஜகானின் மகன் அவ்ரங்கசீப் அவர் தந்தையை கைது செய்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது என சொல்கின்றனர். 


பிறகு இன்னொரு விஷயம். தாஜ் மஹால் பார்க்கிங்கில் இறங்கியது முதல் முசோலியம் உள்ளே செல்லும் வரை கைடுகளும் போட்டோஃகிராப்பர்களும் நம்மை மொய்த்து கொண்டே இருப்பார்கள். கைடுகள் சொல்வதில் எது உண்மை, எது சும்மாச்சிக்கும் அடித்து விடுகிறார்கள் என தெரியாமல் நம்மையே தலை சொரிய வைக்கிறார்கள். வெளிநாட்டினருக்கும், விவரம் தெரியாத சில நம்மூர் மக்களுக்கும் கைடுகள் சொல்வது தான் வரலாறு. எங்களுக்கும் ஒரு கைடு வந்து ஆத்து ஆத்து என ஆற்றிகொண்டிருந்தார். நாமே தனியே சென்று தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. போட்டோஃகிராபர்கள் வகைதொகை இல்லாமல் நிமிடம் பேரம் பேசி கொண்டடே பின் தொடர்வார்கள். ஒருவரிடம் வேண்டாம் என்று சொன்னாலும், அடுத்து இன்னொருவர், அதற்கடுத்து இன்னொருவர் என ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் நமக்கு சற்று நச்சரிப்பாக இருந்தது. மேலும் இவ்விடத்தில் அவர்களுக்கு மட்டுமே சில இடங்கள் (viewpointகள்) தெரியும். அங்கிருந்து போட்டோ எடுத்தால் (அவ்வளவாக) கூட்டம் இல்லாமல் நம்மை மட்டுமே வைத்து போட்டோ எடுத்து கொடுப்பார்கள். தாஜ் மஹாலின் முன் புறத்தில் நீச்சல் குளத்துக்கு முன் சிறு மார்பில் பலகை போடப்பட்டிருக்கும் (போட்டோக்காக தான் !) அதற்கென பெரும் போட்டியும் வரிசையும் இருக்கும். அவையெல்லாம் வேண்டாம் என எங்களை நாங்களே எடுத்து கொள்கிறோம் என எடுத்து கொண்டாலும் சரி. (ஸ்மைல் ப்ளீஸ் 📸)

  

தாஜ் மஹாலை முழுக்க சுற்றி பார்த்து, ரசித்து, சிலாகித்து, போட்டோ எடுத்து முடித்து திரும்ப கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாவது தேவைப்படும். அதுவும் கூட்டத்தை பொறுத்தது. கூட்டத்தை தவிர்க்க காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் சென்றுவிடுவது நல்லது என அரசு தொல்லியல் துறை இணையதளத்திலும் மற்றவர்களும் சொல்கின்றனர். ஆனால் 8 மணிக்கு போக வேண்டுமாயின், அதிகாலை நான்கு/ஐந்து மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பியாக வேண்டும். உங்கள் பயணத்தையும் சௌரியதையும் கொண்டு முடிவு செய்யுங்கள்.


தாஜ் மஹாலுக்கு பின் ஆக்ரா கோட்டை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் mehtab bagh சென்று அங்கிருந்து தாஜ் மஹாலின் அழகை panoramic viewவில் கண்டு ரசிக்கலாம். அது மேலே சொன்னதை விட பேரழகான ரம்மியமான காட்சியாக இருக்கும். தோட்டத்தில் பூக்கள் பூத்துள்ள காலத்தில் சென்றிருந்தால், நம் கண்ணுக்குத் மனதுகும் இன்னும் போனஸாக இருக்கும். இரவு அறைக்கு வந்த பின்னும் தாஜ் மஹால் என் கண்களை விட்டு மறையவே இல்லை.  உண்மையிலேயே தாஜ் மஹால் நம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையெனும் பார்த்துவிட வேண்டிய ஒரு இடம் தான். காதல் மாளிகை, காதல் அடையாளம், காதலின் புனிதம் என்பதற்காகெல்லம் இல்லை; அப்படி ஒரு அற்புதமான கலைநய பேரழகை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்பதற்காக தான். நீங்களும் ஒரு உங்கள் மும்தாஜுடன் தாஜ் மஹாலுக்கு சென்று மகிழுங்கள்! 😉🤩



நன்றி!!!

பி. விமல் ராஜ்

செவ்வாய், 24 மே, 2022

கோவிலா? மசூதியா??

வணக்கம், 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது இந்தியாவில் உள்ள முகலாய காலத்து மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டதா? என்ற பெரும் சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1992ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி (Babar Masjid) ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மத கலவரங்கள் நடந்து பலரின் உயிரும், உடமைகளும் பறிபோனது. இந்த வழக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ல் தீர்ப்பானது. இங்கு இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே எந்த இந்து கோவில்களுக்கான கட்டிட அமைப்பும் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில ராமர் கோவிலும், அதனருகே சற்று தள்ளி 5 ஏக்கர் இடத்தில் மசூதியும் கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளது. 

இப்போது அடுத்ததாக சில மசூதிகளையம்/முகலாய கட்டிடங்களையும் சிலர் குறி வைத்துள்ளனர். 

Dispute on Mosques in India

வாரணாசியில் உள்ள ஞானவாபி (Gyanvapi Mosque) மசூதி காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டது என்றும், மசூதியில் உள்ள சுவற்றில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மசூதியிலுமுள்ள கிணற்றில் சிவலிங்கம் ஒன்று உள்ளதாக சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களும் உலா வருகிறன்றன. அவை போலியா? உண்மையா என தெரியவில்லை. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விரைவில் தீர்ப்பாக உள்ளது.

மதுராவில் உள்ள ஷாஹி இடிகா மசூதி ( Shahi Idigah Mosque) அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இது கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளதக சொல்கிறார்கள். கிருஷ்ணரின் கொள்ளு பேரன் வஜ்ரநாப் என்பவர் கிருஷ்ணருக்கு இங்கு கேசவ் தேவ் கோவிலை கட்டியுள்ளார். பின்னர் குப்த மன்னரிகளின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் இக்கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இடிகா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பலரின் உதவியால், கேசவ் தேவ் கோவில் புதுப்பித்து மசூதியருகே கட்டப்பட்டு உள்ளது. புராண கதைகளின்படி கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சிறைச்சாலை, சிறுவயதில் வாழ்ந்து விளையாடிய கோகுலம், பிருந்தாவனம் ஆகிய இடங்ககள் என 13.7 ஏக்கர் இடம் சர்ச்சையில் உள்ளது. வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ளது.

மத்தியபிரதேசத்தில் தர் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா - கமால் மௌலா மசூதி (Bhojsala -Kamal Maula Mosque). 2003 வரை இந்துக்கள், வசந்த் பஞ்சமியன்று இசுலாமியர்கள் நமாஸ் படித்த பின்னர் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க பட்டுள்ளனர். இப்போது இரு தரப்பினரும் இந்த இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். 10ஆம் நூற்றாண்டில் பாராமரா வம்சத்தை சேர்ந்த போஜ் மகாராஜா கட்டிய வாகதேவி (சரஸ்வதி கோவில்) என்றும், இது பாடசாலையாக இருந்துள்ளது என்றும் சொல்கின்றனர். பின்னர் டேளவார் கான் கோரி  என்னும் முகலாய அரசன் மசூதியாக மாற்றி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கும் மத்திய பிரதேச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதோடு இல்லை, தில்லியில் உள்ள குதுப் மினார் (Qutub Minar) பல ஜெயின் மற்றும் இந்து கோவில்களை இடித்து முகலாய மன்னர் குதுப்புதின் ஐபக் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று (மே 24, 2022) தில்லி நீதிமன்றம் குதுப் மினார் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடமே என்றும், வழிபாடும் இடம் அல்ல என்றும், மீண்டும் இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலக அதிசயமான தாஜ் மகாலையும் (Taj Mahal) விட்டு வைக்கவில்லை. அது தேஜோ மஹாளயா  என்னும் சிவன் கோவில் என்றும், அதனை மாற்றி தான் மும்தாஜ் சமாதியை ஷாஜஹான் காட்டியுள்ளார் என்றும், தாஜ்மாகாலுக்கு அடியில் சிவன் கோவில் உள்ளது என்றும் சொல்கின்றனர். அடித்தளத்தில் உள்ள 22 அறைகள் இருப்பதாகவும், அதில் இந்து கோவிலுக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என சொல்லி வருகின்றனர். அதுபோக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுகளின் ஒருவரான தியாகுமாரி, தங்களின் அரச குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ஷாஜஹான் அபகரித்து தாஜ் மகால் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்

இன்னும் நிறைய இருக்கிறது, சென்னை மயிலையில் கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடத்தில் இருந்து இடிக்கபட்டு இப்போதுள்ள சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். பிற்காலத்தில் இப்போதுள்ள இடத்தில கோவில் மாற்றி கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் இதே போல பல தேவாலயங்களும், பல மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இடங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அனைவருக்கும் தெரிந்தது போலவே முகலாய/ஐரோப்பிய படையெடுப்புகள் மூலம் பல செல்வங்கள், வளங்கள், புராதன கோவில்கள், கட்டிடங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட/கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள் என எல்லாமே சரித்திர நிகழ்வு (பிழை) தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தினால் மாறிய விஷயங்கள் பல இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடுவதே சால சிறந்தது. அதை மனதில் கொண்டு, இப்போதுள்ள மக்கள் வழிபடும் இடத்தில் உரிமை கோருவது சிலரின் அறிவிலிதண்மையை காட்டுகின்றது. இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லாமல் தெரிகிறது.   

1991 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின்படி Places of Worship Act, 1991 (வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991) பாபர் மசூதி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறுகிறது. 

ஏற்கனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என கூறி 450 ஆண்டு கால வரலாற்றை சிறப்பு மிக்க பாபர் மசூதியை இடித்தன் மூலம் இன்றும் மத கலவரங்களும் சர்ச்சைகளும் ஓடி கொண்டே இருக்கின்றது. மீண்டும் இதை தொடர்வோமாயின் இந்தியாவின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறி ஆகிவிடும். 


நன்றி!!!

பி. விமல் ராஜ் 


புதன், 29 ஆகஸ்ட், 2018

டெல்லிக்கு போன கதை !

வணக்கம்,

பணிச்சுமை காரணமாக பழைய பேப்பருக்கு சற்றே நீண்ட லீவு விட்டிருந்தேன். மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என எண்ணி, எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் பல தடங்கல்கள், வேலைகள் என தள்ளிக்கொண்டே போனது. இன்று தான் மீண்டும் நேரம் கிடைத்துள்ளது. நேரம் கிடைத்துள்ளது என்பதை விட நேரம் ஒதுக்கியுள்ளேன் என்பதே சரி!

கடந்த ஜனவரியில் வேலை காரணமாக ஆன்சைட் (டெல்லி தாங்க) வரை போக வேண்டியிருந்தது. புது தில்லி போவது புதுசாக இருந்தாலும், ஏற்கானவே இருமுறை பிளைட்டில் போயிருப்பதால், பெரிதாய் ஒன்றும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. என் பயணத்தில் பார்த்த, பார்க்கும் போது தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் இங்கு பகிர்கிறேன்.

ஏர்போர்ட் பரிதாபங்கள்- ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்தில், ஏரோபிளான் பயணத்தையும், நாம் வழக்கமாய் போகும் பயணத்தை பற்றியும் ஒப்பிட்டு யோசித்து கொண்டிருந்தேன்.

பஸ்ஸில் போகும் போது பெரிய லக்கேஜ்/ பெட்டிகளை பஸ் டாப்பில் வைத்து பயணம் செய்வது போல, ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் லக்கேஜை போட்டுவிட்டு, ஃபிளையிட்டில் பயணம் செய்கிறோம்.

போர்டிங் நேரத்தில், புனே 630 ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்.. டெல்லி 7ஓ கிளாக் ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்... என கூவி கூவி அந்தந்த அலுவலர்கள் அழைப்பது, கோயம்பேடு/தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் திருச்சி... திருச்சி.. திருச்சி.. மதுரை .. மதுரை...1030 மணி வண்டி எல்லாம் ஏறு..ஏறு.. உடனே ஏறு.. என கூவுவது போல தெரிவது எனக்கு மட்டும்தானா !?!?!?!?

"இஸ் திஸ் டில்லி 7 'ஓ' கிளாக் ஃபிளையிட் ??", என கேட்பது, "அண்ணே இது பத்தரை மணி பஸ்ஸாண்ணே??", என கேட்பது போல தான் எனக்கு தெரிகிறது.

அதே போல டே எக்ஸ்ப்ரஸில் ட்ரைனில் போதும் போது சூடாக இட்லி வடை, பிரியாணி, பிரட் ஆம்லெட் போன்றவற்றை விற்பது போல, இங்கும் பிளைட் எரியவுடன் டீ, காபி, டிபன், லஞ்ச், கூல் டிரிங்க்ஸ் எல்லாம் விற்கிறார்கள்... விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி!

அதே போல நாம் டவுன் பஸ்ஸில் பெண் கண்டக்டரை பார்த்தவுடன், 'அட லேடி கண்டக்டரா?" என ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, டிக்கெட் கேட்டு பின் நார்மலாவதை போல, ப்ளைட்டில் நம்முடன் பறந்து வரும் பேரழகிகளை பார்த்துவிட்டு (யாராயினும்) ஓரிரு நிமிடம் லயித்துவிட்டு பின் முகம் திருப்பி கொள்வது சாதாரணமாக நடப்பதே! என்னடா இது.. இந்த சிவப்பு சொக்கா பொண்ணு நம்மள பார்த்து சிரித்து "ஹாய் ! குட் மார்னிங்.. வெல்கம்..."ன்னு சொல்லுதேன்னு நானே சிலாகிச்சிட்டேன்னா பார்த்துகோங்களேன்!
என்னுடன் வந்தது இந்த அழகி இல்லை! ;-)
டெல்லி போக 3 மணி நேரம் ஆகும் சொன்னங்க.. சரி கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு , கொஞ்சம் நேரம் மேகங்களை வேடிக்கை பார்த்துவிட்டு தூங்கலாம்ன்னு நினைச்சா, அப்பப்போ டொய்ங்.. டொய்ங்..ன்னு மியூசிக் போட்டு பறக்கும் போதே ஷாப்பிங் பண்ணுங்க.. ஏதாவது ஸ்னாக்ஸ் ஐட்டம் சாப்பிடுங்க.. வேதர் ரிப்போர்ட்.. அது..இதுன்னு ஏதாவது சொல்லி எழுப்பி விட்டுடுரங்க...

நம்மவூரு மார்கழி மாச குளிருக்கே மூச்சுக்கு முன்னூறு வாட்டி மூச்சா வரும்.. டெல்லில இப்போ 8 டிகிரியாம்!! அம்மடியோவ்.. சரி விடுறா...எல்லாமே வெரச்சிக்கும்ன்னு நினைச்சிகிட்டேன் !!!

கடைசியா டெல்லி வந்ததும், ஸ்வெட்டர், ஜெர்கின், குரங்கு குல்லா சகிதமாக கீழே இறங்கினேன். ஆரம்பத்தில் குளிர்வதை போல தெரிந்தாலும்,போக போக அந்த குளிர் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. உடம்புக்கு இதமாகவே இருந்தது.

புது தில்லி வந்தாயிற்று. இங்கும் பீக் அவர் கடும் டிராபிக்காக தான் இருக்கிறது. ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மஞ்சள்-பச்சை கலர்களில் சீறி பாய்கிறது. சென்னையில் எப்படி TN registration போர்டு வண்டிகளையும் ஆங்காங்கே PY போர்டுகளையும் பார்க்க முடிகிறதோ, அது போல டெல்லியில் DL மட்டுமல்லாமல் RJ, HR, PB ஆகிய registration போர்டு வண்டிகளை எளிதில் பார்க்க முடிகிறது. ஒன்றிரண்டு UP registration வண்டிகளையும் பார்த்தேன். எங்கு காணினும் கார்கள் சாரை சாரையாய் விரைந்து கொண்டிருந்தது. வெகு சில டூ-வீலர்களை மட்டுமே பார்க்க முடிந்ததது. தில்லியில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ட்ரெயின் தான். நகரின் எல்லா மூலையிலும் மெட்ரோ பாய்கிறது. மேலும் புதுதில்லியில் பெரும்பாலான சாலைகளெல்லாம் அகலமாகவும், சுத்தமாகவும் இருப்பதை காண முடிந்தது. அங்கங்கே முக்கிய சாலைகளில் கட்டண கழிப்பிடமும் இருந்தது. சாலையெங்கிலும் மரங்களும், பல ரௌண்ட்டானாக்களும் (roundtana) , மேம்பாலங்களையும் பார்த்து, திட்டமிட்டு கட்டப்பட்டது புது தில்லி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சாலையெங்கிலும் ஆரஞ்சு கட்சியின் போஸ்டர்களும், அந்த ஊர் 'சந்தான பாரதியின்' படங்களும் பெரிதும் காணப்பட்டன.

நாங்கள் தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் போகும் வழியில் தான் இந்தியா கேட்டும் (India Gate), ஜனாதிபதி மாளிகையும் (Rastrapathi Bhavan) இருந்தது. தினமும் வேடிக்கை பார்த்து கொண்டே போவோம். கிடைத்த கேப்பில் ஒரு நாள் காலைவேளையில் போய் ராஜ் காட்டில் (Raj Ghat) உள்ள இரண்டையும் பார்த்தாயிற்று. இந்தியா கேட் - முதலாம் உலக போரில் இறந்த ஆங்கிலேய-இந்திய போர் வீரர்களின் நினைவு சின்னம். மொத்தம் 70,000 வீரர்களின் பெயர்கள் அங்கு பொறிக்கபட்டுள்ளன. மேலும் அங்கு போர் வீரரின் தொப்பி மற்றும் துப்பாக்கியுடன், அமர் ஜவான் ஜோதி (AmarJawan Jothi ) ஒன்று ஓயாமல் எரிந்து கொண்டிருக்கிறது.



ஜனாதிபதி மாளிகையை உள்ளே சென்று சுற்றி பார்க்க முன்அனுமதி பெற வேண்டுமாம். நாங்கள் வெளியிருந்தபடியே கட்டடங்களை பார்த்துவிட்டு செல்பி எடுத்து கொண்டு திரும்பிவிட்டோம். ஜனாதிபதி மாளிகை அருகே தான் பார்லிமென்ட் வளாகமும் இருக்கிறது. நேரமின்மையால் அதை விட்டுவிட்டோம்.

வேறொரு நாள் செங்கோட்டைக்கு (Red fort ) சென்றோம். செங்கோட்டை இருப்பதோ பழைய தில்லியில். பாரீஸ் கார்னர், மண்ணடி போல குறுகிய சாலைகள், சிறு பெரு வண்டிகள் என கூட்ட/கட்டட நெரிசல். செங்கோட்டை 1639ஆம் ஆண்டு ஐந்தாம் முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டியுள்ளான். அதன் பின் 200 ஆண்டுகள் வரை முகலாயர்களின் வாரிசுகள் வசிக்கும் வீடாகவே இருந்துள்ளது. செங்கோட்டை Indo-Islamic architecture -ல் கட்டப்பட்டுள்ளது. 2007-ல் UNESCO உலகின் பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது.

கோட்டைக்குள் போக நபருக்கு 35 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டும். கோட்டை வாசலை கடக்கும் போது உள்ளே பலவிதமான கடைகள், கைவினைப்பொருட்கள் என பல இருந்தது. கோட்டைக்குள் மிக பெரிய தர்பார் அறை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய மேடை, புகழ் பெற்ற ஷா ஜஹானின் மயில் சிம்மாசனம் என எல்லாமே சிறப்பாய், பிரம்மாண்டமாய் இருந்தது.



தில்லி முழுவதும் கோட்டைகளும், மசூதிகளும், நினைவு சின்னங்களும் தான் அதிகம் இருக்கிறது. பலவும் முகலாய சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நம்மவூர் பர்மா பஜார், திநகர் ரெங்கநாதன் தெரு போல, இங்கு பல இடங்கள் இருக்கிறது. சரோஜினி நகர் மார்க்கெட், அமர் காலனி மார்க்கெட், கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் சர்கிள், பாலிகா பஜார், சோர் மார்க்கெட், சாந்தினி சவுக் மார்க்கெட் என நிறைமாதமான நம் பர்சின் டெலிவரிக்காக பல மார்க்கெட்க்கள் இருக்கிறது. அமர் காலனி, சாந்தினி சவுக், சரோஜினி நகர் போன்ற மார்க்கெட்களில் பெண்களுக்கான துணிமணிகள், அவர்களுடைய அணிகலன்கள் என பல பொருட்கள் மலிவாக கிடைக்கின்றன. கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகிய இடங்களில் லெதர் பொருட்கள், ஆண்/பெண்களுக்கான உடைகள் என மலிந்து கிடைக்கிறது. ஆனால் பேரம் பேசி மலிவாக வாங்குவது அவரர் திறமை. பஜாரில் உஷாராக ஹிந்தியில் பேசாவிட்டால், நிஜாரை உருவி விட்டுவிடுவார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்க!



ஜன்பத் ரோடு (Janpath Road) மற்றும் கன்னாட் சர்கிள் (Connaught Circle) ஆகிய இடங்களில் நாம் எல்லா வித பிராண்டட் கடைகளும்/ பொருட்களையும், எல்லா விலையிலும் வாங்க முடியும். உணவகங்களை பொறுத்தவரை சற்று காஸ்டலி போலதான் எனக்கு தெரிந்தது. ரொட்டி வகைகள் பல வெரைட்டியில் கிடைக்கிறது. இரு மாதங்களாக ரொட்டியும் சப்பாத்தியும், ராஜ்மா ரைஸ்சும் சாப்பிட்டு நாக்கு செத்தது தான் எங்களுக்கு மிச்சம். ஆயினும் அவ்வப்போது ஆந்திரா பவன், கேரளா ஹவுஸ் போன்ற இடங்களில் தென்னக சாப்பாட்டை ருசிபார்த்து பசியாறி கொண்டோம். ஜன்பத் ரோட்டிலும், கன்னாட் சர்கிளிலும் நம்ம ஓட்டல் சரவண பவன் இருக்கிறது. இங்கு போல அங்கும் பீக் ஹவரில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு நாள் மதிய உணவிற்கு அங்கு சென்று ஒரு ஃபுல் கட்டு கட்டிவிட்டு வந்தோம்.

வேலைப்பளு காரணமாக வேறு எங்கும் பெரிதாய் சுற்றி பார்க்க முடியவில்லை. புது தில்லி சுற்றி பார்க்க வேண்டுமாயின் நவம்பர்-பிப்ரவரியில் போகலாம். பிப்ரவரி-ஜூன் -ல் உச்சி வெயில் மண்டையை பிளக்கும். மற்ற நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வரும். மூன்று நாட்கள் வைத்தால் தில்லி பூராவும் பொறுமையாய் சுற்றி பார்த்து விடலாம். நான்காம் நாள் ஆக்ராவுக்கு பயணப்படுங்கள். அங்கு தாஜ் மகாலையும், ஆக்ரா கோட்டையையும் பார்த்துவிட்டு திருப்தியாக ஊர் திரும்பலாம்.


நன்றி!!!
-பி.விமல் ராஜ்