செவ்வாய், 9 ஜூன், 2015

எங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...

வணக்கம்,

"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்துட்டாங்க. இப்பெல்லாம் ஆ..உ.. ன்னா எல்லாரும் சென்னையை பத்தி குறை சொல்ல கிளம்பிடுராங்க. வேற மாவட்டங்களிருந்து சென்னைக்கு வந்தவங்க பல பேரு, சென்னையிலே ஒண்ணும் இல்ல... எங்க ஊரு சொர்க்கம், அங்க அது இருக்கு, இது இருக்கு, புல்லுக்கட்டு, புண்ணாக்கு, வெளக்கமாறுன்னு, பிகிலேடுத்து ஊத ஆரம்பிச்சுடராங்க... கேக்கவே செம காண்டா இருக்கு.

எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.


தமிழ்நாட்டை பொறுத்தவரை பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர் என்ற நிலைமையில் தான் பலரும் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து படிப்பவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா ???

சென்னை வாழ்க்கை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, சென்னை வாழ்க்கை மெஷின் வாழ்க்கைன்னும் சொல்றாங்க. அடப்பாவிகளா! நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க? உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும்? ரொம்ப ஓவரா இருக்கே!

வெளியூர்களில் நல்ல வேலையாக  இருந்தாலும், கூலி வேலையாக இருந்தாலும், சென்னையில் கிடைப்பதை விட அங்கு ஊதியம் கம்மியாய்தான் கிடைக்கிறது. நல்ல படிப்பு, மருத்துவம், வேலை, கை நிறைய சம்பளம் என சகலமும் இங்கு உண்டு. அதுக்கு தானே எல்லாரும் பாடுபடுறோம்.

நம்ம நாட்ல எங்கிருந்தெல்லாமோ படிக்கவும், வேலை தேடியும் சென்னைக்கு வராங்க. வந்து படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இங்கயே செட்டில் ஆயிடுராங்க. அப்புறம் ஜனத்தொகை எப்படி அதிகமாகாமல் இருக்கும். இருபது வருஷத்திற்கு முன், 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மெட்ராசை, இப்போ 420 சதுர கி.மீ ஆக்கிடாங்க. இன்னும் 50 வருஷத்தில 1000 சதுர கி.மீ ஆனாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை. இப்போதைய சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 லட்சம்! அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் ? இவங்களே வருவாங்கலாம்; சென்னை ரொம்ப பேஜாருனு சொல்வாங்களாம். தோடா..யாருகிட்ட..

இங்க வந்து செட்டிலான மக்கள் எல்லோரும் டூ-வீலர், கார்ன்னு வாங்குறாங்க. அவங்களோட போக்குவரத்து எல்லாம் சேர்த்து இன்னும் சென்னையை தூசியும், புகையுமா மாறிடுச்சி. வெள்ளி, சனிகளில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் கூட்டத்தை பாருங்க. எவ்வளவு வண்டி, எவ்வளவு புகை.. அப்புறம் என் சென்னை போக்குவரத்து மிகுந்த, கலீஜான ஊராக மாறாது?


அப்புறம் விலைவாசி. கொஞ்சம் அதிகம் தான். ஒத்துகிறேன். அதுக்கு சென்னை என்ன செய்யும்? அரசு எல்லோருக்கும் ஒரே விலையை தான் நிர்ணயம் செய்கிறது. மற்ற மாவட்டங்களில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் 'சென்னை', 'சென்னைபட்டினமாக' இருந்த காலம் முதல் இங்கு பெரிதாக விவசாயம் செய்வதில்லை. காய்கறி/ பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து தான் விற்கபடுகிறது. அதனால் தான் இங்கு பண்டங்களின் விலை கொஞ்சம் அதிகம். வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். முக்கிய சாலையை விட்டு கொஞ்சம் தள்ளி வீடு பார்தீர்களேன்றால் குறைந்த வாடகையில் வீடு கிடைக்கும். சிட்டி சென்டரில் வீடு, பக்கத்திலேயே பள்ளி, கடைவீதி, பஸ் ஸ்டான்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்றால் வாடகை அதிகமாக தான் இருக்கும். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.

ரொம்ப வெயில், மழை-  ஹ்ம்ம்.. இதெல்லாம் சென்னையின் சீதோஷ்ண நிலை. அதையெல்லாம் யாராலும் மாத்தமுடியாது. வெயில் காலத்தில் வெயில் அடிப்பதும், மழை காலத்தில் மழை கொட்டுவதும், குளிர்காலத்தில் குளிருவதும் எல்லா ஊரிலும் நடப்பது தானே. இதையெல்லாம் ஒரு குறையாக சொல்லலாமா? ரொம்ப போங்கா இருக்கே!

உங்க ஊரில் என்னன்ன இருக்கிறதோ, அது எல்லாமே எங்க ஊரிலும் இருக்கிறது. என்ன இங்கே வயல்வெளி, சோலைகள் கிடையாது. எல்லாம் கான்கிரீட் மயம். கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னையின் மத்தியில் ஓடி கொண்டிருகிறது. மக்களின் அறியாமை, அரசின் மெத்தனத்தால் ஆறு சாக்ககடையாகி விட்டது. ஆனால் சென்னைக்கு தண்ணீர் தர ஏரிகளும், லாரிகளும் இருக்கிறது.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

சில நாட்களாக இணையத்தில் வலம் வரும், சென்னை பற்றிய ஒரு ஆடியோ செய்தி.  http://goo.gl/KE1MPh

இந்த பதிவின் மூலம் வெளியூர் மக்கள் யாரும் சென்னைக்கு வர கூடாது என்றோ, உங்களால் மட்டுமே சென்னை கெட்டுவிட்டது என்றோ சொல்லவில்லை. "மெட்ராஸ் ரொம்ப போர்பா.. சிம்ப்லி வேஸ்ட்! " ன்னு சொல்ற டூபாகூர் டகால்டிகளுக்கு தான் இது. சென்னை பலருக்கு வேலையும், நல்ல வாழ்க்கையும் கொடுத்து கொண்டிருக்கிறது. தேவையில்லாம சென்னையின் பெயரை கெடுக்காதிங்க. உங்க ஊரு உங்களுக்கு சொர்க்கம்னா, எங்க சென்னை எங்களுக்கு சொர்க்கம்தான். இங்கேயும் சில மனுச பசங்க இருக்கோம்ன்னு தயவு செஞ்சு தெரிஞ்சுகொங்கபா...


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 30 மே, 2015

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

வணக்கம்,

வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவின் 'அஞ்சானை' கண்டு மக்களே அஞ்சியதாலும் இந்த படம் மாஸாக வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்த பின், வரிவிலக்குக்காக பெயர் மாற்றி வந்துள்ளான் இந்த 'மாசு என்கிற மாசிலாமணி'.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிரெண்ட் தான் இப்போது டாப் வரிசையில் நிற்கிறது. இப்படம் 'சூப்பர் நேச்சுரல் காமெடி திரில்லர்' வகையறாவை சேர்ந்தது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டது, இதுவும் ஒரு மொக்கையான பேய் படமாக தான் இருக்கும் என்று. நான் நினைத்ததும் பொய்க்கவில்லை. இருந்தாலும் வெங்கட் பிரபு மீதுள்ள சிறு நம்பிக்கை, சூர்யாவின் நடிப்பு - இவை இரண்டிற்காகவாவது படத்தை பார்க்கலாம் என்று எண்ணி போன என்னை தமிழ்திரை ரசிகர்களுக்கு, வழக்கம் போல ப்பூ...பூ...பூச்சாண்டி காட்டியுள்ளான் இந்த மாசு.


கதையின் படி சூர்யாவுக்கு ஒரு விபத்தினால் ஆவிகளை, பேய்களை பார்க்கும் மற்றும் பேசும் சக்தி கிடைக்கிறது. முதலில் பயந்துவிட்டு, பின்னர் அவைகளுக்கு உதவுகிறார். உதவி கேட்டு வரும் பேய்களில் ஒரு பேய், இன்னொரு சூர்யா. அந்த பேய்க்கு இந்த சூர்யா உதவினாரா இல்லையா என்பது தான் மிச்ச சொச்ச கதை. கதையின் கரு புதிது என்று நினைக்கும் போது, அதே பழைய பழி வாங்கும் கதையை பேய் படம்  என்ற போர்வையில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியில் மொக்கை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மாஸ் காட்டியிருக்கிறார்கள். 

இரண்டு சூர்யாகளின் இன்ட்ரோ சீன்களை மட்டும் மாஸாக காட்டிவிட்டு, போக போக தூசாகி போகிறார். இருவரில் இரண்டாம் சூர்யா கொஞ்சம் மாஸ் காட்டுகிறார். அவருடைய வசன உச்சரிப்பை பார்த்தால், ஈழ தமிழில் கதைப்பது போல இல்லை. மேலும் இவரின் ஹேர் ஸ்டைல், ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி போட்டது போல இருக்கிறது. எந்த படமென்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.
 
படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக போட்டதே வீண். நாலு சீன்களுக்கு வந்து போய்விடுகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல, இப்படத்திலும் சில கதாபாத்திரங்களில் 'சென்னை-28 கேங்' ஒரு காட்சிக்கு வந்து போகின்றனர். அதில் எனக்கு பிடித்த சீன், ஜெய்க்கு வரும் ஃப்ளாஷ்பேக் தான். நன்றாக லிங்க் பண்ணியிருக்கிறார் வெங்கட். காமெடிக்கு வழக்கம் போல அவர் தம்பி பிரேம்ஜி தான். இதிலும் படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். சூர்யா - நயன்தாரா காட்சிகளை விட சூர்யா - பிரேம்ஜி காட்சிகள் தான் அதிகம். பார்த்திபன் போன்ற மிக சிறந்த நடிகரை ஏன் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என தெரியவில்லை.

பாடல்களும் கூட அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. ஹாலிவுட் படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) போன்ற நல்ல கதை கரு இருந்தும், இக்கதையில் திகிலோ, த்ரில்லோ ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், படம் தாறுமாறாக மாஸாக இருந்திருக்கும். இயக்குனர் சூர்யாவை வைத்து ஜனரஞ்சக படமும் இல்லாமல், பேய் படமும் இல்லாமல் ஒரு மாதிரி வீணடித்து விட்டார்.

வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்கிறேன் என்று சொல்லி, டொக் வைத்து டபுள்ஸ் எடுத்து இருக்கிறார். நல்ல வேலை தூக்கியடித்து அவுட்டாக வில்லை. மொத்தமாக படத்தில் கதை, திரைக்கதை, நாயகன், ஒலி, ஒளி என எதிலும் மாஸ் இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 21 மே, 2015

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !

வணக்கம்,

பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஏற்கனவே என் முந்தைய பதிவில் (பேய் பயம்) இதை பற்றி எழுதியுள்ளேன். இப்பதிவில் பேய் இருக்கும் இடங்கள் அல்லது பேய் இருப்பதாக நம்பபடும் இடங்களை பற்றி பார்க்கலாம்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல ஆள் அரவமில்லா இடத்திலோ, சுடுகாடு பக்கத்திலோ, பாழடைந்த வீட்டிலோ ஏதாவது ஒரு உருவத்தை எவனாவது ஒருவன் குருட்டாம் போக்கில் பார்த்து விட்டு பேய் இருக்கிறது என்று கதை கட்டி, புரளியை கிளப்பி விடும் சம்பவங்களும் உண்டு.

இணையத்தில் சென்னையில் உள்ள பேய் இருக்கும் இடங்கள் (haunted places) என்று தேடிய போது, எனக்கு கிடைத்த தகவல்கள் இதோ.

1. வால்மீகி நகர், திருமான்மியூர் :

சென்னையில் பேய் உலவும் இடம் என்று தேடினால் முதலில் வருவது இந்த இடம் தான். எண். F -2 ,#3, செர்வார்ட் சாலை,வால்மீகி நகர், திருவான்மியூர். இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் தான் பேய் இருக்கிறதாம். சுமார் 10 வருடங்களுக்குமுன், வீட்டு உரிமையாளரின் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும், அதிலிருந்து வீடு பூட்டியே இருக்கிறது என்றும், அந்த வீட்டில் அப்பெண்ணின் ஆவி உலாவுகிறது என்றும் சொல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவ்வபோது நடுநிசியில் பெண் அழுவது போலவும், அலறுவது போலவும் குரல் கேட்கிறதாம். அந்த வீட்டை கடந்து செல்லும் போது, இரும்பு கதவு தானாகவே திறந்து கொண்டு நம்மை வரவேற்கிறதாம். இதை எல்லாம் தெரிந்த பின்னும், 2008-ல் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டில் குடியேறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகளால், வீட்டை விட்டு வெளியேறி  விட்டார்கள். இன்றும் அந்த வீடும், அதிலுள்ள மர்மமும் பூட்டியே இருக்கிறது.


2. டி' மாண்டி காலனி, ஆழ்வார்பேட்டை :

ஜான் டி' மாண்டி என்ற 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்த்துகீசிய தொழிலதிபர் உருவாகிய காலனி  இது. அவரும் அங்கேயே தங்கி இருந்தாராம். இந்த காலனியில் இப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே இருக்கின்றனவாம். பல நிறுவனங்கள் அந்த வீடுகளை லீசுக்கு எடுத்து கொண்டதாகவும் சொல்கின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து யாராவது சென்றால், அவர்கள் பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், சிரிப்பு சத்தமும் கேட்கிறதாம். இரவில் சாலையை  ஜான் டி'மாண்டி கடந்து செல்வதை அப்பகுதிவாசிகள்  சிலர் பார்த்துள்ளார்கள்.  பூட்டிய வீட்டில் இவருடைய ஆவி கதவை திறக்காமலே உள்ளே சென்றதையும் சிலர் பார்த்திருகிறார்கள். ஆள் அரவமற்ற தெருவும், விளக்கில்லாத சாலையும் பார்க்கும் போதே திகிலூட்டுகிறது. இந்த பேரை கொண்டு தமிழில் ஒரு திரைப்படமும் வரப்போகிறது


3. கரிக்காட்டு குப்பம், முட்டுக்காடு  :

கிழக்கு கடற்கரை சாலையில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இந்த கரிக்காட்டு குப்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் வாழ்ந்த பலரும் இறந்து விட்டனர். மீதம் இருந்த சிலர், ஊரை விட்டே போய்விட்டனர். அந்த சம்பவத்தில் இறந்த ஒரு கிழவனும், இரண்டு குழந்தைகளும் இங்கு ஆவியாய் அலைகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அங்கு கோவில், பள்ளிக்கூடம், வீடுகள் என்று எல்லாம் இருந்தாலும் மக்கள் யாரும் இல்லாமல் ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது . அடிக்கடி கிழவனின் ஆவி நிழலாய் தெரிகிறது என அதை பார்த்த சிலர் சொல்கிறார்கள்.


4. பெசன்ட் அவன்யு சாலை, பெசன்ட் நகர் :

பெசன்ட் நகர் தியோசபிகல் அமைப்பு அமைந்துள்ள சாலையை ஒட்டி உள்ள தெரு தான் பெசன்ட் அவன்யு. பகலில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த சாலை, இரவில் பேய்கள் அலைகிறது என்று கூறுகிறார்கள். ஒரு கண்ணுக்கு தெரியாத உருவம், தனியாக வருபவர்களையெல்லாம் பளார் என்று அரைகிறதாம். இருட்டில் யாரும் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிகிறார்கள்.


5. உடைந்த பாலம், அடையார் :

அடையாரில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இந்த உடைந்த பாலத்தில் (ப்ரோக்கன் ப்ரிட்ஜ்) இரவு நேரங்களில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். பாலம் அருகே உள்ள ஆள்காட் குப்பத்தில் ஒரு பெண் அலறும் சத்தம் தினமும் கேட்பதாக சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், ஒரு பெண் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாகவும், அவள் தான் தினமும் அலறுவதாகவும் கூறுகின்றனர்,


 6. சென்னை கிறுஸ்தவ கல்லூரி, கிழக்கு தாம்பரம் :

மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (chemsitry lab) எதோ வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அந்த பாதை வழியாக போகும் போது பூட்டியிருக்கும் ஆய்வகத்தில் யாரோ பேசுவது போலவும், யாரோ புத்தகத்தை படித்து பாடம் நடத்துவது போலெல்லாம் சத்தம் வருகிறதாம். இது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் நம்பப்படும் ஒரு அமானுஷ்ய விஷயமாகும்.


7. சென்னை - புதுச்சேரி சாலை:

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான சில சம்பவங்கள் நடப்பதாக நம்பப்படுகிறது. காரிலோ, டூ-வீலரிலோ வந்து கொண்டிருக்கும் போதும், திடீரென ஒரு வெள்ளை உருவம் கடப்பதாகவும், வேகமாக எதிர்பக்கத்தில் வரும் வாகனம் திடீரென காணாமல் போவதும் மக்களை மேலும் திகிலூட்டுகிறது.


சென்னை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பிற இடங்களிலும் இது போன்ற பேய் உலவும் இடங்கள் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கொல்லிமலை, திருச்சி -  அடர் காட்டில் உள்ள அருவியும், மூலிகை வனமும் கொல்லிமலைக்கு பிரபலம். ஆனால் இந்த வனப்பகுதியில் பேய்கள் மற்றும் ரத்த காட்டேரிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறனர். காட்டில் நடைபயணம் செய்பவர்கள் , அமானுஷ்ய உருவங்களை பார்த்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி, சேலம் - புலிகள் மற்றும் யானைகளின் காப்பகமாக திகழ்கிறது சத்தியமங்கலம் வனப்பகுதி. 2004-ல் வீரப்பன் மறைவுக்கு பின், அந்த அந்த காட்டில் வித்தியாசமான அலறல் குரல்கள் கேட்கிறது என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் சொல்கிறார்கள். இரவில் இந்த அடர்ந்த காட்டில், ஆளில்லா லாந்தர் விளக்குகள் காற்றில் மிதந்து வருவதாகவும் சொல்கின்றனர்.

பெர்ன் ஹில்ஸ் விடுதி (Fern Hills Hotel) , ஊட்டி - சில காலங்களுக்கு முன் அந்த ஓட்டலில், சில அறைகளில் அமானுஷ்ய விஷயங்கள் நடந்தாக சொல்கிறார்கள். இரவில் அறையின் கதவுகள் தானாகவே திறந்து, மீண்டும் படார் என சத்தத்துடன் மூடிக்கொள்கிறதாம். ஒருமுறை ஊட்டியில் இந்தி சினிமா ஷூட்டிங்க்கு வந்த கதாநாயகி (பிபாஷா பாசு) தங்கிய அறையின் மேல் யாரோ கட்டில், மற்றும் நாற்காலிகளை நகர்த்தி கொண்டே இருப்பது போல சத்தம் கேட்டது. விடிந்த பின் ரிசப்ஷனில் கேட்டபோது, அந்த அறையின் மேல் எந்த ஒரு அறையும் கிடையாது என்று பதில் வந்துள்ளது. அதன் பின்னர் அவர்களும் அறையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இப்போது அந்த ஓட்டல் மூடி கிடக்கிறது. 


இது போன்ற பல இடங்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இருக்கிறது. பேயை நம்புபவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள். பேய் கதைகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதை படிக்க படிக்க உங்களுக்கு பயம் ஏற்படுகிறதோ இல்லையோ, இரவு நேரத்தில் இணையத்தை தேடி படித்து எழுதும் போது எனக்கு திகில் ஏறிக் கொண்டே போகிறது.

தகவல்கள், படங்கள்  - கூகிள், கோரா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 12 மே, 2015

அப்புறம் எதை தான் தின்றது ?

வணக்கம்,

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலரும் மருந்தையே உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், நாம் தினமும் உண்ணும் உணவே !

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்/வார இதழ்களிலும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று பயமுறுத்துகின்றனர். அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா???

*) நாம் தினமும் உண்ணும் அரிசியில் அதிக விளைச்சலுக்காக பூச்சி மருந்து கலந்த ரசாயன உரம் போடப்படுகிறதாம். அதை நாம் சாப்பிடும் போது, கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது என்று கூறுகிறார்கள் வேளாண்  விஞ்ஞானிகள்.

*) நம் சாப்பாட்டில் சேர்க்கும் காய்கறிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. காய்கறிகள் பெரியதாக வளர ஆக்சிடாக்சின் (Oxytoxin) என்ற ஒரு வகையான வேதிபொருள் தெளிக்கபடுகிறது. விளைச்சலுக்கு பிறகு, சந்தையில் விற்கும் வரை ப்ரெஷான காய்கறியாக இருப்பதற்காகவும்,  தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் சுவை கூடவும், சீக்கிரம் பழுக்கவும் எத்திரோசின்- பி (Ethyrosin -B) என்ற ரசாயன வேதிபொருள் ஊசி மூலம் ஏற்றபடுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் பிரஷ்ஷாக இருக்க மெழுகு தடவி வைக்கப்படுகிறது. பெங்களூர் பி.டி. கத்திரிக்காய் பற்றி நீங்களே கேள்விபட்டிருப்பீர்கள். அதுவும் பூச்சி மருந்து கலந்த காய்கறிதான். இவை தான் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்கெட்களில் பெரும்பாலும் அடுக்கி வைக்கப்படுகிறது. இதை உண்பதாலும் கேன்சர், வயிற்று உபாதைகள் வரும் என்று சொல்கின்றனர்.


*) வடக்கில் பெரும்பாலும் உண்ணக்கூடிய கோதுமை வகை உணவிலும் வேதி பொருட்கள் அதிகமாக கலக்கப்படுகிறது. கோதுமையிலுள்ள ஆல்டிரின் (Aldrin) என்ற நச்சு வேதிபொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 21,890 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது. மேலும் இவற்றை உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

*) சரி, மேற்கத்திய உணவு வகைகளையாவது உண்ணலாம் என்று பார்த்தால், அது இதை விட மோசமாக இருக்கிறது. நாம் விருப்பி உண்ணும் பீட்சாவிலும், பர்கரிலும் E-361 என்னும்  கொழுப்பு சத்து சேர்க்கபடுகிறதாம். பீட்சாவின் அட்டை டப்பியில் polyfluoroalkyl/ perfluoroalkyl-  PFC என்னும் நச்சு பொருள் கொண்டு செய்யபடுவதால், அதனாலும், உடற்கேடு வர வாய்ப்புள்ளது. குழந்தைகள் அதிகம் உண்ணும் நூடுல்ஸ் வகையான உணவுகளில், சுவைக்காக மெழுகு சேர்க்கப்படுகிறது. அதை தின்பதால் அல்சர், கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது. நாம் சுவைத்து உண்ணும் KFC சிக்கனில், பல நச்சு பொருட்கள் கலக்கபடுவதால், குழந்தைகளுக்கு முளை காய்ச்சால் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவ நிறுவனம் கூறியுள்ளது.


*) குழந்தைகள் அடிக்கடி கொறிக்கும் சாக்லேட், பிஸ்கட்கள், சிப்ஸ் வகையறாக்களில் ஒரு வகையான போதை தரும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதால், அதனாலும், மன நோய் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் வேதி/நச்சு பொருட்கள் இருந்தால் நாம் எதை தான் தின்பது என்று தெரியவில்லை. இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் கொடுப்பதில்லை என்பதாலும், மக்கள் பல தர பட்ட உணவுகளை உண்கிறார்கள் என்பதாலும் இவ்வாறு கலப்படம் செய்யபடுகிறது. இது கிட்ட தட்ட விஷத்தை நாமே உட்கொள்வது போல தான் இருக்கிறது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 4 மே, 2015

உத்தம வில்லன் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனின் படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடிவிடும். படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ட்ரைலரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த, சில பல இன்னல்களுக்கு பிறகு படம் இப்போது வெளியாகியுள்ளது.

மிரட்டலான 'இரண்ய நாடகம் ' பாடல் ப்ரோமோவை பார்த்த பின் உலக நாயகனின் நடிப்பு தாகத்தை வெள்ளி தரையில் பார்த்தே தீர வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தேன். படத்தை "காமெடி-டிராமா" என்ற வகையறாவில் சேர்க்கப்பட்டதால் கமலின் முந்தய படங்களான பஞ்ச தந்திரம், காதலா! காதலா! போல இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை நம்மை சற்று ஏமாற்றி இருக்கிறார் இந்த வில்லன்.


படத்தில் நாயகனின் நிஜ வாழ்க்கை கதையும், அதனுள்ளே இன்னொரு சினிமா கதையும் காண்பிக்கிறார்கள். உச்சபட்ச நட்சத்திர நடிகரின் கதையும், அவர் நடிக்கும் படத்தில் உள்ள உத்தமனின் கதையும் மாறி மாறி காட்டுகிறார்கள். 

அறுபத்தைந்து வயதிலும் கமல் முதல் பாடலுக்கு ஆடும் நடனம் நம்மை ரசிக்கதான் வைக்கிறது. உலக நாயகனின் நடிப்பு அருமை, அபாரம் என்று ஒற்றை வரியில் சொல்லி விட முடியாது. கமலின் நடிப்புக்கு நிகர் அவரே! ஜெயராம் கமலிடம் அவருடைய பெண்ணின் புகைப்படங்களை காட்டும் போது, வேதனையும் அழுகையும் கமல் வண்ண சாயம் பூசாமலேயே முகத்தில் காட்டியிருப்பார். 'பக்கும் பக பக ' பாடல் ஜிப்ரானின் இசை என்று கர்ஜித்து சொல்கிறது. 'என் உதிரத்தின் விதை' பாடல் மட்டும், அலங்காரம் மற்றும் காட்சியமைப்புக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

இந்த கதைக்கு இயக்குனர் இமயம் தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. வேறு யாராவது குணசித்திர நடிகரே நடித்திருக்கலாம். கே.பி யை இந்த படத்தில் நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார் கமல். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அண்ட்ரியா, பார்வதி போன்ற பாத்திரங்களில் அவ்வளவாக பலம் இல்லை. நாயகியாக பூஜா குமார் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

கதையில் வரும் உத்தமன் கமல், தெய்யம் கலைஞராக ஆரம்பிக்கும் போது ஏதோ பெருசாக சொல்ல போவதாக நினைக்க வைத்து, இடையில் சில மொக்கை காமெடிகளை சேர்த்து, கடைசியில் இரண்ய நாடகத்தில் சுபம் போட்டிருக்கிறார்கள். நாசர் மற்றும் அவரது மந்திரி கோஷ்ட்டிகளை வைத்து சிரிப்பே வாராத காமெடிகளை கோர்த்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.

மொத்தத்தில் கமலுக்காகவும் மற்றும் திரைக்கதைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். கடைசியில் வில்லனை காமெடியன் ஆக்கிவிட்டார்கள்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பெரியாரும் பார்ப்பனரும் !

வணக்கம்,

பெரியார் என்று சொல்லும் போதே பலர் மனதில் தோன்றுவது கடவுள் மறுப்பு கொள்கையும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் தான். ஆனால் அவர் செய்த பல சமூக மாற்றங்களை நாம் மறந்து விட்டோம். இப்போதெல்லாம் பெரியார் அரசியல் கூட்ட பேனரில் மட்டுமே தேவைப்படுகிறார். அவ்வபோது அவரது கொள்கைகளை சிலர் பேச்சளவில் மட்டும் உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

பெரியார் தோற்றுவித்தது கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்ல. தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் சுதந்திரம், சாதி வேற்றுமை ஒழிப்பு, சுயமரியாதை கொள்கை என பல சமூக தொண்றாற்றியுள்ளார். 1930-ல் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்து வந்தது. மேல் சாதியினர் என்று சொல்லப்படும் பார்ப்பன (ஐயர்/ஐயங்கார்) சமூகத்தினருக்கு மட்டுமே கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளிக்கபட்டன. சமூகத்தில் அவர்களுக்கு மட்டுமே மரியாதையும், கௌரவமும் தரப்பட்டது. கீழ் சாதியினர் என்று சொல்லப்படும் மக்களுக்கு எந்தவித முன்னுரிமையோ, வாய்போ தரபடவில்லை. இதை கண்டு பொங்கிய பெரியார், ஐயர்/ ஐயங்கார் இல்லாத தலீத் மற்றும் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கவும், சாதி வேற்றுமை ஒழியவும் போராடினார்.

இதன் காரணமாக பெரியார் பார்ப்பன சமூகத்தினரை எதிர்த்து குரல் கொடுக்கலானார். ஒவ்வொரு பொதுகூட்ட மேடையிலும் பார்ப்பனர்களை திட்டி தீர்த்தார். சுதந்திரத்திற்கு பிறகு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் ஏற்றப்பட்டது. இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கே முதலுரிமை வழங்கபடுகிறது.


ஆனால் இன்றும் மேடைக்கு மேடை தி.க. இயக்கத்தை சேர்ந்தவர்கள், பார்ப்பன சமூகத்தை கிழி கிழியென கிழிக்கிறார்கள். அதன் காரணம், பார்ப்பனர்கள் தான் சாதியை /மூட நம்பிக்கையை வளர்க்கிறார்களாம். அவர்களை ஒழித்து விட்டால், நாடு சுத்தமாகி வீடு விட்டு விளங்கிவிடுமாம்.

நீங்கள் ஏதாவது ஒரு சீர்திருத்த திருமணத்திற்கு சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும். நான் பார்த்த திருமணங்களில் நடந்தது இதுதான். திருமண விழாவிற்கு முன் மேடையில், தலைமை தாங்க வந்திருக்கும் ஒரு திராவிட கழக பிரமுகர், பிராமணர்களை பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ, அவ்வளவு தூரம் பேசுகிறார் தூற்றுகிறார். பின்னர் கடவுள் இல்லை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவன்றை பேசிவிட்டு, திருக்குறள் படித்து முடித்து , பிறகு தான் மணமக்களுக்கு நல்வார்த்தை கூறிவிட்டு (தாலியில்லாமல்) மாலை மாற்றி கொள்ள சொல்கிறார். கூட்டத்தில் யாராவது ஆத்திகரோ, பிராமணரோ இருந்தால் இதயம் எரிமலை போல கொப்பளித்து கொண்டிருக்கும். சீர்திருத்த திருமணம் என்றால் மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு "நல்ல இருங்கப்பா " என்று கூறி "மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! " என்று வாழ்த்திவிட்டு போகவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பிராமணரை பற்றி இழுத்து, ஏன் கேவலபடுத்த வேண்டும். எனக்கு புரியவில்லை. நான் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றாலும், என்னால் அதை ஒப்பு கொள்ள முடியவில்லை.

மூட நம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை, தீண்டாமை போன்றவற்றிக்காக எதிராக குரல் கொடுக்கும் தி.க விற்க்காக நானும் குடைபிடிபவன் தான்.  பெரியார் பிராமணர்களை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களும் ஏசுவது என்ன நியாயம் என தெரியவில்லை.

"கீழ் சாதி என்று சொல்லப்படும் பிற்படுத்தபட்டோர்/தலீத் இன மக்கள் தான் இப்போது கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூக எல்லா உரிமைகளையும் முதன்மையாக பெற்று முன்னேறி வருகின்றனரே! இன்னுமும் ஏன் பார்ப்பனரை எதிர்கிறீர்கள்? " என ஓர் தீவிர தி.க. நண்பரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில். "இப்போது அவர்கள் பெற்றுருப்பது பொருளாதார முன்னேற்றம் தான்; ஆனால் இன்னும் அவர்கள் சமூக முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். பிராமணர்கள் இருக்கும் வரை அது நடக்காது. சமூக அந்தஸ்து கிடைக்கும் வரை இப்படி தான் எதிர்ப்பு இருக்கும்" என்று கூறினார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 28 மார்ச், 2015

அறியப்படாத உரிமைகள் !

வணக்கம்,

நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங்களை புகட்டியிருக்க வேண்டும். ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 

இரு நாட்களுக்கு சமூக வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய செய்தியை படிக்க நேரிட்டது. எல்.பி.ஜி (L.P.G) என்று சொல்லப்படும் சமையல் எரிவாயுவை உபயோகபடுத்தும் நுகர்வோர் அனைவருக்கும் 40 லட்சம் வரை காப்பீடு இருப்பதாக அந்த பதிவில் உள்ளது. இது சமூக தளங்களில் வருவது போல எதாவது ஒரு வதந்தியாக இருக்குமோ என்று முதலில் நினைத்து, கூகிளை துணைக்கு அழைத்தேன். அட! அந்த செய்தி உண்மைதான்!

தீர ஆராய்ந்ததில், நாம் எல்.பி.ஜி இணைப்பு வாங்கும் போதே அந்தந்த கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள், நுகர்வோர் கணக்கில் 40 லட்சம் வரை காப்பீடு செய்வதாக சொல்கின்றனர்.


சமையல் எரிவாயுவின் செயற்பிழையால் கேஸ் வெடிப்பது, உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டால், உடனடியாக கேஸ் ஏஜன்சியிடம் தெரிவிக்க வேண்டும். உடனே அவர்கள் ஒரு குழுவை அனுப்பி, சரிபார்த்து விட்டு அதற்கான காப்பீட்டு தொகையை நுகர்வோரிடம் கொடுபார்கள். அக்குழு நுகர்வோர் பயன்படுத்தும் எரிவாயு சாதனங்களான, கேஸ் ட்யூப், லைட்டர், கேஸ் கட் போன்றவை ஐ.எஸ்.ஐ. (ISI) சான்றிதழ் பெற்ற பொருள்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

lpg-gas-insurance

சில போலி விபத்து முறைகேட்டை தடுக்கவும் குழுக்கள் உள்ளதாம். கடந்த 25 ஆண்டுகளில் யாருமே இந்த காப்பீட்டு உரிமையை கோரவில்லை என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

எல்லோருமே கேஸ் வெடித்தவுடன், பதறி போய் மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். யார் ஏஜன்சியிடம் போவார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது. காப்பீடு தொகை வேண்டுமென்றால் அவர்கள் தொடர்பு கொண்டு தான் ஆக வேண்டும்.  

நம் நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் வருடத்திற்கு நூற்றுகணக்கான கேஸ் வெடிப்புக்கள் நடந்தேறி வருகிறது. இந்த சட்டத்தை/உரிமையை  பற்றி மக்களுக்கு தெரியபடுத்தி அறிவுறுத்த வேண்டிய மத்திய/மாநிலஅரசுகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் முன் வருவதில்லை.

சுதந்திர இந்தியாவில் இது போல ஒரு அடிப்படை காப்பீட்டு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்னும் எத்தனை உரிமைகள், சட்டங்கள்  நமக்கு தெரியாமல் இருக்கிறதோ எனத் தெரியவில்லை.

தகவல்: businesstoday 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 19 மார்ச், 2015

அர்த்தமில்லாத வார்த்தைகள் !

வணக்கம்,

இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் கிடையாது. ஆனாலும் அவை நம் பேச்சு வழக்கில் இருக்கிறது. அந்த அர்த்தமில்லா வார்த்தைகள் எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது? யார் அதை முதலில் பேச ஆரம்பித்தது? என்றெல்லாம் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அர்த்தமில்லாத வார்த்தைகள் பல இருக்கிறது. அவற்றுள் சில:

'கடகட' வென தேர்வு எழுதினான்.
'பளார்' என்று அரை விட்டான்.
'வீல்' என்று அலறினாள்.
'கமகம' வென வாசம் வந்தது.
'கொல்' என்று சிரித்தனர்.
'டர்' என்று துணி கிழிந்தது.
'டமால்' என்று போட்டு உடைத்தான்.
'டுமீல்' என்று சுட்டான்.
'டக்' என்று காணாமல் போனான்.
'கலகல' என்று சிரித்தான்.
'தொம்' என்று விழுந்தான்.
'பளீச்' என்று தரை இருந்தது.
'பளீர்' என்று வெளிச்சம் அடித்தது.
'துருதுரு' வென இருந்தான் பையன்.
'கும்' இருட்டாக இருந்தது அந்த அறை.
'விறுவிறு' என்று மலை மேல் நடந்தான்.
'படபட' வென இதயம் துடித்தது.
'ஓ' வென அழுதது குழந்தை.
'குறுகுறு' வென்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
'ஜம்' மென்று இருந்தார் மாப்பிள்ளை.


இந்த ஒலி சார்ந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? எனக்கு யாரவது புரிய வையுங்கள்.

உங்களுக்கு தெரிந்த வேறு சில 'ஒலி' மயமான வார்த்தைகள் இருந்தால், அதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஃபேஸ்புக் அபத்தங்கள் !

வணக்கம், 

நம்மை சிறு வயது முதல், நல்ல விஷயங்களை, சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் மனதார பகிர்கிரோமோ இல்லையோ, சமூக வலைதளங்களில் தான் நிறையவே பகிர்கிறோம்.

சமூக வலைதளங்கள் (ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ) எல்லாமே ஒரு பொழுது போக்குக்காகவும், நமக்கு தெரிந்ததை பகிரவும் தான் உபயோகப்படுத்தபடுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கால்வாசி செய்திகள், போலியான அல்லது தேவையில்லாத அபத்த செய்திகளாக தான் இருக்கிறது.

சில ஆர்வகோளாறு மக்கள், தங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்-ல் அவர்களுக்கு என்ன போஸ்ட் வந்தாலும் அதை அப்படியே forward செய்து விடுகிறார்கள். அது உண்மையா ? பொய்யா? என்று விசாரிக்க வேண்டாம். சரி, யோசிக்கவாவது வேண்டாம். நல்லது செய்கிறேன் பேர்வழி என கண்டதை பகிர்கிறார்கள். ஏற்கனவே பதிவர் ராம்குமார் இதை பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதி விட்டார். நானும் பேஸ்புக்கில் பார்த்து வெறுப்பான சிலவற்றை பற்றி இங்கே உங்களுக்கு பகிர்கிறேன்.

1.)  ஏழு நிமிடத்தில் லைக்/ ஷேர் செய்தால் நல்லது நடக்கும்.

இது அடிக்கடி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக்  பதிவு. மத வேறுபாடில்லாமல் விநாயகர், சாய்பாபா, திருப்பதி பாலாஜி, ஏசு கிறிஸ்து, மேரி மாதா, நபிகள் நாயகம் என பலரும் பகிர்ந்து பக்தியை வெளிப்படுத்துவர். ஃபேஸ்புக்கில் லைக் செய்து ஷேர் செய்தால், எப்படி கடவுள் அருள் பாலிப்பார்? எப்படி நமக்கு நல்லது நடக்கும்? மதம்/கடவுள் என எல்லாமே நம் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்றாலும், இது போன்ற மூட பழக்கத்திற்கு துணை போக யார் சொல்லி கொடுத்தது? இப்பதிவையும் ஆயிரம் முட்டாள்கள் லைக் செய்வார்கள், நூற்று கணக்காணோர் ஷேர் செய்திருப்பார்கள்.


2.)  லைக் / ஷேர் செய்தால் பணம் நன்கொடையாக கிடைக்கும்.

சின்ன பையனுக்கு அல்லது பொண்ணுக்கு உடல் நலமில்லை, தாய் தந்தையருக்கு உயிர்கொல்லி நோய். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் -அப்பும் கலந்து பேசி, ஒரு லைக், ஷேருக்கு 50 பைசா தருவதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே இதை ஷேர் செய்து லைக் செய்யுங்கள் என்று மன்றாடி பதிவை போடுவார்கள். எந்த ஒரு காலத்திலும், இது போன்ற செயல்களுக்கு எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியோ அல்லது தொண்டு நிறுவனமோ பணம் நன்கொடையாக  தருவதில்லை,         

3.) குழந்தையை காணவில்லை-கண்டுபிடிக்க உதவுங்கள் !

குழந்தையை காணவில்லை- கண்டுபிடிக்க உதவுங்கள். பெயர்: ரஹீம். வயது:8. ஊர்: பெங்களூரு, மசூதி தெரு, தகப்பனார் பெயர்: அப்துல்லா. இச்சிறுவன் சென்னை சென்ட்ரல் C 2 காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கிறான். தயவு செய்து அதிக ஷேர் செய்து அவன் தாய் தந்தையரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுங்கள்.  இது போன்ற அபத்தமான  பதிவை பலரும் பார்த்திருக்ககூடும். சிறுவனே காவல் நிலையத்தில் தான் இருக்கிறான். அவர்களே 15 நிமிடத்தில் பெங்களூரு போலீசிடம் பேசி அனுப்பி வைத்து விடுவார்கள். அதை ஏன் நாம் ஷேர் செய்ய வேண்டும்? அதாவது அவர்கள் கூற்று படி ஐநூறு/ஆயிரம் பேர் ஷேர் செய்வதன் மூலம், ஃபேஸ்புக் வழியாக அப்பதிவு அச்சிறுவனின் தாய் தந்தையரிடம் போய் சேரலாம் என்று எண்ணுகின்றனர். #வாட் எ டிசைன்

4.) ஷேர் செய்து அரிய பரிசை பெறுங்கள்.

பெரும்பாலும் பெரிய வணிக நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை கொடுப்பதில்லை. சீல் சரியாக வைக்கபடாத 200 ஐ-பேட் களை, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு இலவசமாக தருகிறது ஆப்பிள் நிறுவனம் என்று புரளி பரப்புகின்றனர். நிஜத்தில் அப்படி சீல் வைக்க படாத பெட்டிகளுக்கு மீண்டும் சீல் வைத்து மார்கெட்டுக்கு அனுப்பு வைத்து விடுவார்களே தவிர, இப்படி இலவச சலுகைகளை தர மாட்டார்கள்.

5.) UNESCO விருதை வென்ற "ஜன ஜன மன .."

நம் தேசிய கீதமான "ஜன ஜன மன" UNESCO வின்  உலகில் சிறந்த தேசிய கீதம்  விருதை பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதனால் பெருமை படுவோம் என்று ஷேர் செய்திருப்பார்கள். நாமும் நம் நாட்டு பற்றை விட்டுகொடுக்காமல் லைக் போட்டு போயிருப்போம் (நானும் பண்ணி தொலைச்சேன்). ஆனால் அதுவும் பெரும் பொய்யே! நாங்கள் எந்த ஒரு விருதையும் யாருக்கும் அறிவிக்கவில்லை என்று சொல்கிறது UNESCO.


6.) பெண்களே உஷார் - எச்சரிக்கை !

சில பெண்கள் நலம் விரும்பிகள், பெண்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்று கண்டதையும் ஷேர் செய்வார்கள். உங்கள் பேஸ்புக் ப்ரோபைல் போட்டோ சில சமூக காமுகர்களால் காப்பி செய்யப்பட்டு அதை தவறான இணையதளங்களிலும், போலி பேஸ்புக் அக்கௌன்ட்களிலும் உபயோகப்படுத்துகின்றனர். உஷார் ! ஆகவே உங்கள் படங்களை யாரும் சமூக இணைய தளங்களில் போடாதீர்கள் என்று எச்சரிக்கை
செய்து மிரட்டுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இணையத்தில் ஒன்றிரண்டு நடந்திருப்பதை மறுக்க முடியாது என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன். பெண்களை உன் பேஸ்புக் பக்கத்தில்/ டைம் லைனில் கண்டவர்களின் friends request-ஐ ஏற்று கொள்ள கூடாது; தாங்கள் பகிர்வதை இன்னார் மட்டுமே பார்க்க வேண்டும் என்று settings-ஐ  மாற்றி கொள்ள வேண்டும என்று சொல்வதை  விட்டுவிட்டு அவர்கள் சுதந்திரத்திற்கு இடையில் நிற்பது அபத்தமே.

7.) மகாத்மாவின் நடவடிக்கை

இது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு தேசபிதாவை அந்த நாட்டினரே அவமதிப்பது மகா கேவலம். மகாத்மா காந்தி எப்பொதும் பெண்களுடன்தான் இருப்பார். அதுவும் சிறு வயது பெண்களுடன். உதவிக்கு ஆண்களை வைத்து கொள்ளாமல்; சிறு பெண்களை வைத்து கொண்டு கூத்தடித்தார் என்று புகைப்படத்துடன் போடுவர்கள். இதை எந்த மூடன் ஆரம்பித்தான் என்று தெரியாவிட்டாலும், இது போன்ற ஆதாரமில்லா செய்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பி கொண்டு தான் இருக்கிறது.

8.) டூத் பேஸ்டில் உள்ள கலர் சதுர குறியீடு

நான் சொல்ல வேண்டாம். படத்தை பார்த்தாலே உங்களுக்கே புரிந்திருக்கும். டூத் பேஸ்ட் ட்யுபில்  உள்ள கலர் சதுர குறியீடு அதன் செயல் கலவை  தன்மையை குறிக்கும் என்று பரப்பினார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அது வெறும் கம்பெனியின் பேக்கிங் வசதிக்காக வைக்கப்பட்ட சீல் என்று விளக்கம் வந்துள்ளது.


9.) ஷாப்பிங் மாலில் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா

ஷாப்பிங் மாலில் பெண்கள் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை அவர்கள் இணையதளங்களில் விற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பினார்கள். மேலும் அந்த கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால், நீங்கள் நிற்பது மறுபக்கத்தில் தெரியும் என்றும் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்ளே நீங்கள் நிற்கும் போது உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து போகவில்லை என்றால், அங்கு ஓர் ரகசிய காமிரா உள்ளது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்... உண்மையில் காமிரா இருந்தால், கால் போகாது என்பது ஒரு அறிவியல் பூர்வமான பொய்யான தகவல். மேலும் இரு பக்க கண்ணாடியை கண்டுபிடிக்க உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து சோதிக்க சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு கேவலமான பொய்யே !


10.) வாட்ஸ்-அப் ஃபார்வோர்ட்கள் -

சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி, கூடவே ஒரு ஆடியோ பைலையும் சேர்த்து பரப்பியுள்ளனர். அதில் அந்த பெண் ஒரு ஜெகஜால திருடி என்றும், ஆண்கள் இல்லாத நேரத்தில், வீடு வீடாக சென்று கேஸ் கனெக்ஷன் சரி பார்க்க வந்துள்ளதாக சொல்லி நகை மற்றும் பணத்தை திருடி விடுவாள், உஷாராக இருக்கவும் மக்களே என்று ஒரு மேதாவி பேசியுள்ளார். அந்த பெண்ணின் போட்டாவில்  அழகாக ஐ.டி. கார்டு டேக் போட்டு கொண்டு சோபாவில் உட்கார்ந்து போஸ் கொடுக்க பட்டிருக்கும். திருடி என்றால் இப்படியா போஸ் கொடுத்து போயிருப்பாள். அதை கூட யோசிக்காமல், பல ஆர்வ கோளாறுகள் ஷேர்/ forward  செய்துவிட்டனர். இதை ஒரு தினசரி நாளிதழ், உண்மையா? பொய்யா? என்று கூட விசாரிக்காமல் தங்கள் பத்திரிகையில் போட்டு விட்டனர். பின்னர் அது பொய் என்று ஒரிரு வாரம் கழித்து தான் தெரிந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு forward மெசேஜ். சென்னையின் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் மாரியா, பெண்களின் பாதுகாப்புகாக ஒரு புது திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது  பெண்கள் டாக்ஸி/ஆட்டோ ஏறும் முன் அந்த வண்டியின் என்னை 9969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அதை அவர்கள் ஜி.பி.எஸ் மூலம் டிராக் செய்து கொள்வார்களாம். உங்கள் அக்கா/தங்கை/நண்பிகளுக்காக ஷேர் செய்யுங்கள் என்று வந்தது. அடப்பாவிகளா !!! ராஜேஷ் மாரியா மும்பையின் போலீஸ் கமிஷனர். இந்த திட்டமும் மும்பையில்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இப்போது சென்னையின் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிலர் பகிர்கின்றனர்.



ஏ.டி.எம்-ல் பின்-நம்பரை தலைகீழாய் போடுவது, டெலிகிராம் ஆப் ஓர் இந்திய தயாரிப்பு நிறுவனம், ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்,  இவை எல்லாம் போலியான செய்திகளே! இன்னும் இது போன்ற அபத்தங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. கூகுளில் சென்று social media hoax என்று தேடி பாருங்கள். இன்னும் பல கதைகளை காணலாம். நான் இங்கே பகிர்வதும்  இணையத்தில் தேடி படித்தது தான். இணையத்திலும், சமூக வலைமனைகளிலும் பகிரப்படுவது பெரும்பாலும் போலியான அல்லது அபத்தமான செய்தி பதிவுகளே ! இதனால் பெரும் பாதிப்புகள் வராது என்று வைத்து கொண்டாலும், முடிந்த வரை சரியான தகவல்களை பகிருவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நன்றி !!!

-பி .விமல் ராஜ்